Friday, March 9, 2018

திரிபுரா தேர்தல் முடிவு இயற்கையானதா? செயற்கையானதா?

மின்னம்பலம் மின்னம்பலம் 

  சிறப்புக் கட்டுரை: திரிபுரா தேர்தல் முடிவு இயற்கையானதா? செயற்கையானதா?

சிறப்புக் கட்டுரை: திரிபுரா தேர்தல் முடிவு இயற்கையானதா? செயற்கையானதா?

டி.எஸ்.எஸ்.மணி

திரிபுரா மாநிலத்தில் 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கட்சியின் ஆட்சி நடந்துவந்தது. இப்போது 2018ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், நிலைமை முழுமையாகக் கவிழ்ந்து, பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. மொத்தம் இருக்கும் 60 இடங்களில், 59 இடங்களுக்குத் தேர்தல் நடந்தது. ஒரு தொகுதியில், ஒரு வேட்பாளர் மரணத்தை ஒட்டி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. 59 தொகுதிகளிலும், காங்கிரஸ் நின்று எந்தத் தொகுதியையும் வெல்லாமல் தோற்றுள்ளது. பாஜக 50 தொகுதிகளில் நின்று 35 தொகுதிகளை வென்றுள்ளது. பாஜக கூட்டணியாக, ஐபிபிதி 9 தொகுதிகளில் நின்று 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. சிபிஎம் 56 தொகுதிகளில் நின்று 16 இல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணிகளான சிபிஐ, ஆர்பிஐ, பார்வாடு பிளாக் ஆகியவை ஆளுக்கு ஒரு தொகுதியில் நின்று தோல்வி அடைந்துள்ளனர். மம்தாவின் திருணமூல் காங்கிரஸ் 24 தொகுதிகளில் நின்று அனைத்திலும் தோல்வியடைந்துள்ளது. இந்தக் கணக்கு எதைக் காட்டுகிறது?
முழுமையான மாற்றத்திற்கான காரணங்களாகப் பல செய்திகளை வட இந்திய ஊடகங்கள் எடுத்துவைக்கின்றன. 35 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக பெற்ற வாக்கு விழுக்காடு 43 % . வெறும் 16 இடங்களில் வெற்றி பெற்ற சிபிஎம் பெற்ற வாக்கு விழுக்காடு அதே 43 % . ஏற்கனவே 2013 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், திரிபுராவில் பாஜக பெற்ற வாக்குகள் 1 .54 %. சிபிஎம் பெற்ற வாக்குகள் 48 %. இப்போது அதுவே பாஜகவிற்கு 43 % ஆக மாறியுள்ளது. ஆட்சியை இழந்த சிபிஎம் தனது வாக்குகளில் ஐந்தே விழுக்காட்டை இழந்துள்ளது. அப்படியானால், கீழே இருந்த பாஜக மேலே வர, யாருடைய வாக்குகளை வாங்கியுள்ளது? காங்கிரஸ் கட்சி 2013 ஆம் ஆண்டில் பத்து இடங்களில் வெற்றி பெற்றது. அப்போது காங்கிரஸ் 35 % வாக்குகளைப் பெற்றிருந்தது. இப்போது காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. அது மட்டுமின்றி, இப்போது காங்கிரஸ் கட்சி இரண்டு விழுக்காடு வாக்குகளைக்கூட வாங்கவில்லை. அதாவது, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் பாஜக இருந்த இடத்திற்கு இப்போது காங்கிரஸ் சென்றுள்ளது. சிபிஎம் தனது வாக்கு வங்கியில் பெரிய அளவு சரிவை சந்திக்காதபோது, பாஜக ஆட்சியைப் பிடிக்க, காங்கிரசின் முழுமையான வாக்கு வங்கியைக் கையில் எடுத்துள்ளது.
இது தவிர திரிபுராவில் மொத்தம் உள்ள அறுபது தொகுதிகளில், 20 தொகுதிகள், "பழங்குடி மக்களுக்கு ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகள்". அவற்றில் 2013 ஆம் ஆண்டு, சிபிஎம் பெரும் அளவு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது. அதாவது சிபிஎம் 18 பழங்குடி தனித் தொகுதிகளிலும், சிபிஐ ஒன்றிலும், காங்கிரஸ் ஒன்றிலும் மொத்தம் 20 தொகுதிகளில் ஐந்தாண்டுகளுக்கு முன்பு கட்சிகள் வெற்றி பெற்றிருந்தன. இப்போது அந்த 20 தொகுதிகளில் எட்டு தொகுதிகளில் "சுதேசி திரிபுரா மக்கள் முன்னணி" என்ற பழங்குடி மக்களுக்குத் தனி மாநிலம் கோரும் பழங்குடிகளின் கட்சியும், அதைக் கூட்டணியில் சேர்த்துள்ள பாஜக 7 தொகுதிகளிலும், சிபிஎம் மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்தத் தேர்தலில், பாஜக பழங்குடிகளின் கட்சியான "சுதேசி திரிபுரா மக்கள் முன்னணி"யுடன் கூட்டணியில் நின்றதால், அந்த வாய்ப்பு உருவாகியுள்ளது. அதற்கான காரணங்களாக, பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில், 25 ஆண்டுகளாக ஆண்ட சிபிஎம் ஆட்சியில், "அடிப்படை வசதிகள் இல்லை. இன்னமும் பழங்குடி மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். பழங்குடி மக்களின் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல வாய்ப்புகள் முழுமையாக வழங்கப்படவில்லை. குடி நீர் தட்டுப்பாடு தீர்க்கப்படவில்லை. அரசாங்கத் திட்டங்களை வட்டார சிபிஎம் ஊழியர்கள் தங்களின் நெருக்கமானவர்களுக்கே வாங்கித் தருகின்றனர்" போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
எளிமை மட்டுமே போதுமா?
இது தவிர, சிபிஎம் கட்சி, திரிபுராவில் பெரும்பான்மையாக வசிக்கும், வங்காள இனத்தவரில் உள்ள பின்தங்கிய மக்களது வாக்குகளை முக்கியமாக இதுவரை பெற்றுவந்தது. அவர்களும், பஞ்சாயத்து அளவில் பெருகிவிட்ட ஊழலைச் சுட்டிக்காட்டிக்கொண்டிருந்தனர். மாநில அளவில், முதலமைச்சர் மாணிக் சர்க்கார் எளிய வாழ்க்கை வாழ்வதையே அந்தக் கட்சியும் பரப்புதலில் பெரும்பாலும் பயன்படுத்தியது. மாணிக் சர்க்காருக்கு முன்னால் இருந்த முதலமைச்சர் நிருபன் சக்கரவர்த்தியின் எளிய வாழ்க்கையையும், சிபிஎம் கட்சி பெரிதும் பரப்புதலுக்குப் பயன்படுத்திவந்தது. காந்திய முறையிலான தலைவர்களது எளிமையான வாழக்கை என்பது, மக்களது ஏழ்மையான வாழ்க்கையை விரட்டப் போதுமானதல்ல என்று வாக்காளர்கள் உணர்ந்துவிட்ட காலம் இது. ஆகவே அவர்களது மாற்றத்தை விரும்பும் மனப்போக்கு தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மீது பொதுவாக இருக்கும் நம்பிக்கையின்மையும், சிபிஎம் காங்கிரசுடன் ரகசிய உடன்பாடு கொண்டுள்ளதாக ஒரு புரிதலும் மக்களை மாற்றம் கொண்டுவருகிறோம் எனக் கூறும் பாஜக பக்கம் ஈர்த்துள்ளது. அது தவிர, வேலையில்லாத் திண்டாட்டம் தனது பங்கைச் செலுத்தியுள்ளது. ஏழு லட்சம் இளைஞர்கள் அங்கே வேலையில்லாமல் தவிக்கின்றனர். இந்தத் தேர்தலில் பல இளைஞர்கள் வேட்பாளர்களாக வெற்றி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திரிபுராவில், மேற்கு வங்கம் போலவே, "இடதுசாரி ஆதரவு வாக்காளர்கள் என்றும், இடதுசாரி எதிர்ப்பு வாக்காளர்கள் என்றும்" பிரிந்து நிற்கிறார்கள். இதுவரை இடதுசாரி எதிர்ப்பு வாக்காளர்களுக்கு ஒரே வாய்ப்பு காங்கிரஸ் கட்சியாக இருந்தது. இந்த முறை காங்கிரஸ்+ சிபிஎம் என்று அவர்கள் எண்ணியதால், பாஜகவைத் தேர்வு செய்துவிட்டார்கள்.
காங்கிரஸ் கட்சியின் பல முக்கியஸ்தர்கள், குறிப்பாக எம்எல்ஏக்கள் திருணமூல் காங்கிரசுக்குத் தாவி, பிறகு பாஜகவிற்குத் தாவியிருக்கிறார்கள். அப்படித் தாவியவர்கள் எல்லோருமே, பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். உதாரணமாக, அகர்தலாவிலிருந்து இப்போது ஐந்தாம் முறையாக வெற்றி பெற்றுள்ள, சுதீப் ராய் பர்மன், 2016ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து பலரைத் தலைமை தாங்கி பாஜகவிற்கு அழைத்துவந்தார். அவர் இப்போது 7382 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவில் வெற்றி பெற்றுள்ளார். பதற்காட் தொகுதியில் திபிப் சர்க்கார் 2013 தேர்தலில், காங்கிரஸ் சார்பாக நின்று, 643 வாக்கு வித்தியாசத்தில் வென்றவர், இப்போது பாஜகவில் 5448 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். மோகன்பூர் தொகுதியில், ரத்தன்லால் நாத், 2013 இல் காங்கிரஸ் சார்பாக 775 வாக்கு வித்தியாசத்தில் வென்றவர், இப்போது பாஜக சார்பாக நின்று, 5186 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். போர்டோவாலி நகரத்தில் அஷிஸ் சாகா 4000 வாக்குகள் வித்தியாசத்தில், தர்ம நகர் தொகுதியில் பிஸ்வபந்து சென் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவிற்குத் தாவிய பிறகு வென்றுள்ளனர். ராம் நகர் தொகுதியில் முன்பு காங்கிரசில் நின்று 65 வாக்குகளில் தோற்ற சுராஜ் தத்தா, இப்போது பாஜக சார்பில் 4855 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஹிரங்காவி 6000 வித்தியாசத்திலும், சிங்காராய் 4000 வித்தியாசத்திலும் பாஜகவுக்கு வந்த பிறகு வெற்றி பெற்றுள்ளனர். தோற்ற காங்கிரஸ் தலைவர்கள் மூன்றாவது இடத்திற்குச் சென்றுள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியைப் பிடிப்பதில் பெரிய அக்கறை இல்லை என காங்கிரசுக்காரர்களே கூறுகின்றனர்.
பாஜகவின் வெற்றிக்கு, சுதேசி திரிபுரா மக்கள் முன்னணியுடன் கூட்டணி சேர்ந்தது முக்கியக் காரணம் என்கிறார்கள். வட கிழக்கு மாநிலங்களின் பாஜக முக்கியஸ்தர்களான அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹிமந்த பிஸ்வ சர்மாவும், ராம் மாதவும், பாஜக தலைவர் அமித் ஷாவிடம், சுதேசி திரிபுரா மக்கள் முன்னணியைச் சேர்ப்பது சிக்கலானதுதான் என்றாலும், அவர்களைச் சேர்த்தால் மட்டும்தான் சிபிஎம் கட்சியை வெல்ல முடியும் என்று கூறினார்கள். அதை அமித் ஷாவும் ஏற்றுக்கொண்டதன் விளைவாகவே வெற்றி சாத்தியமானது என்கிறார்கள். ஏனென்றால், அது வங்காளிகள் வாக்குகளில் எதிர்த்து அடிக்கலாம் என எண்ணினார்கள். ஏனென்றால் வங்காள தேசத்திலிருந்து வந்தவர்களை வெளியேற்றுவது என்ற பழங்குடி கட்சி மற்றும் பாஜகவின் கொள்கைகளை வங்காளிகள் கிராமப்புறங்களில் ஏற்பதில்லை. தவிர, சுதேசி திரிபுரா மக்கள் முன்னணி தலைவர் ஏன்.சி.தேவர்மா இப்போதும், தனி பழங்குடி மாநிலம் கோரிக்கையை விடவில்லை. பாஜகவோ தேர்தல் பரப்புரையில் ஒரே திரிபுரா என முழங்கியது.
வடகிழக்கு மநில மக்களின் உணர்வுகள்
திரிபுரா மாநிலத்தின் 2011ஆம் ஆண்டு கணக்குப்படி, மொத்த மக்கள் தொகை, 3673017 அதில் பழங்குடி மக்களின் எண்ணிக்கை 853920 அதாவது மொத்த மக்கள் தொகையில் 30 -95 % அதாவது முப்பத்தொரு விழுக்காடு மக்கள்தொகையில் பழங்குடி மக்கள் இருக்கிறார்கள். திரிபுராவின் பழங்குடிகள் மத்தியில் ஆழமாக ஊறிப்போயிருக்கும் வங்காள இனத்தின் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு என்ற உணர்வை எப்போதுமே சிபிஎம் கட்சி கண்டுகொள்வதில்லை. அதாவது, வட கிழக்கு மாநிலங்களை இந்திய தேசிய கீதத்தில் இணைக்கவில்லை என்ற உண்மை விவாதிக்கப்படுவதில்லை. வங்காளக் கவி ரவீந்திரநாத் தாகூர் நமக்கெல்லாம் எப்படி மரியாதைக்குரியவரோ, அது போல வட கிழக்கு பழங்குடி மக்களுக்கு இருக்க முடியுமா? இந்தியாவிலிருந்து, வட கிழக்கு மாநிலங்களுக்குச் செல்பவர்களை, அவர்கள், " நீங்கள் இந்தியாவிலிருந்து வருகிறீர்களா?" எனக் கேட்கிறார்களே, ஏன்? அந்த அளவுக்கு தூரம் தள்ளி" நிற்கும் வட கிழக்கு பழங்குடி மக்களிடம், வங்காள தேசிய இனம் உள்ளே இணைந்து சென்று வாழ்ந்துகொண்டிருப்பதை அவர்கள், ஆக்கிரமிப்பாக பார்க்கிறார்களா என்று தெரிய வேண்டாமா?
1980ஆம் ஆண்டுக்கு முன்பே அஸ்ஸாம் மாநிலத்தில், மாணவர்களின் அமைப்பான, அனைத்து அஸ்ஸாம் மாணவர் அமைப்பு எழுச்சியை உருவாக்கவில்லையா? தங்களது கல்வியையும், வேலைவாய்ப்பையும் வங்காளிகள் பறித்துக்கொண்டதாக அஸ்ஸாமியர்கள் கருதவில்லையா? அதனாலேயே, வங்காளிகளை அதிகமாகக் கொண்ட சிபிஎம் கட்சி, அந்த எழுச்சியை எதிர்க்க நிலைப்பாடு எடுக்கவில்லையா? அதனாலேயே, அஸ்ஸாமியர்கள் சிபிஎம் கட்சி அலுவலகங்களைக் கூடத் தாக்கி, அவர்களை மாநிலத்தை விட்டு வெளியேற்றவில்லையா? அதேபோல நக்சல்பாரி கட்சியின் ஒரு பிரிவான, சத்யநாராயண சிங் தலைமையிலான பிரிவு, அஸ்ஸாம் மாணவர்களின் எழுச்சிக்கு எதிரான நிலைப்பாடு எடுத்தபோது, அவர்களையும், ஆசு மாணவர் அமைப்பு விரட்டியடித்ததை நினைவில் கொள்ள வேண்டாமா? அதே நேரத்தில், வினோத் மிஸ்ரா தலைமையிலான நக்சல்பாரி கட்சி, சிபிஐ (எம்எல்) அஸ்ஸாம் மாணவர்கள் தலைமையிலான மக்கள் எழுச்சி ஒரு தேசிய இனத்தின் எழுச்சி. ஆகவே அதை எதிர்க்காமல், அன்று தேசிய இன உரிமைப் போர்தான் பிரதானமானது என்று நிலைப்பாடு எடுத்த காரணத்தால், அந்த மாநிலத்திலேயே தொடர்ந்து பணியாற்ற முடிந்தது என்ற உண்மைகளை எண்ணிப் பார்க்க வேண்டாமா? அதன் பிறகு, அந்த மாணவர் அமைப்பே, அஸ்ஸாம் கண பரிஷத் என்ற கட்சியாக மாறிய பிறகு, வெகுமக்களது கோரிக்கையைவிட, முதலாளிகளின் நலன்களை உயர்த்திப் பிடித்ததால், வீழ்ந்தது என்பது வேறு கதை.
அதேபோல, குடியரசுத் தலைவர் தேர்தலில், சென்ற முறை, பிரணாப் முகர்ஜி நின்றபோது, பழங்குடி சமூகத்தின் சங்மா வை எதிர்த்து, வங்காளப் பற்றுடன் பிரணாப் முகர்ஜியை சிபிஎம் கட்சித் தலைமை ஆதரித்ததால், டெல்லியிலுள்ள சிபிஎம் கட்சிக் கிளையில், பெரும் சச்சரவு எழுந்ததும், டெல்லியிலுள்ள, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சிபிஎம் கிளை கலைக்கப்பட்டதும், நினைவில் கொள்ள வேண்டும் அல்லவா? அதேபோல, திரிபுரா ஆதிவாசிகள் எந்த அளவுக்கு "அந்நியர்களின் அக்கிரமிப்பாக வங்காள இனத்தவரைக் கருதி, தங்கள் மாநிலத்தின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகள் பறிபோவதாகக் கருதுகிறார்கள்" என்பது, ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கு விவாதப் பொருளாக ஆக வேண்டாமா? அதுதானே, பழங்குடிகளுக்குத் தனி மாநிலம் என்ற கோரிக்கையை, சுதேசி திரிபுரா மக்கள் முன்னணி முன்வைக்கக் காரணமாக இருக்கிறது? ஏற்கனவே, பிகார், மத்தியப் பிரதேசம் மாநிலங்களின் பழங்குடி வாழ் பகுதிகள்தானே, ஜார்க்கண்டாகவும் சத்தீஸ்கராகவும் உருவாகியிருக்கிறது?
இதுபோலப் பல அருமையான, அனுபவங்களை" திரிபுரா தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள மார்க்சிஸ்ட் கட்சி தயாரா என்ற கேள்வியே நமக்கு எழுகிறது.
(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: டி.எஸ்.எஸ்.மணி தமிழின் முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவர். இந்திய அளவில் கவனிக்கத்தக்க பல முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டு அரசியல் நிகழ்வுகளை விவாதித்து வருபவர். தொடர்புக்கு: manitss.mani@gmail.com)