Monday, March 26, 2018

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டமும் படிப்பினைகளும்!

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டமும் படிப்பினைகளும்!

ஸ்டெர்லைட்  எதிர்ப்புப் போராட்டமும் படிப்பினைகளும்!

டி.எஸ்.எஸ்.மணி

24 -03 -2018 சனிக்கிழமை தூத்துக்குடி நகரமே இதுவரை கண்டிராத மக்கள் எழுச்சியைச் சந்தித்தது. தூத்துக்குடி நகரம், ஸ்ரீவைகுண்டம் நகரம், புதியமுத்தூர் நகரம், தருவைகுளம் என எல்லா இடத்திலேயும் கடைகள் அடைக்கப்பட்டன. கடையடைப்பு என்றே அறிவிக்கப்பட்டது. ‘ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடு’ என்ற முழக்கத்துடன் கடையடைப்பு செய்யப்பட்டது.
பந்த் என்று முதலில் பேசினார்கள். கேரள உயர் நீதிமன்றம் ஒரு முறையும், உச்ச நீதிமன்றம் ஒரு முறையும், "பந்த் என்றால் சட்டவிரோதம்" என அறிவித்துள்ளன. ஆகவே கடையடைப்பு என்ற சொல்லையே பயன்படுத்தலாம் என்று போராட்டக் கமிட்டி தீர்மானித்தது. போராட்டக் கமிட்டி கேட்ட நாளில் காவல் துறை பேரணிக்கு அனுமதி தர மறுத்துவிட்டது. நீதிமன்றம் சென்ற போராட்டக் கமிட்டி மார்ச் 24இல் பேரணி, பொதுக்கூட்டம் என்ற அனுமதியைத் தருமாறு, உத்தரவைப் பெற்றுவந்தது. ஆனாலும் மாவட்டக் காவல் துறை பேரணிக்கு அனுமதி தரவில்லை. "ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக் கூட்டமைப்பு" என்ற பெயரில், ஒருங்கிணைப்புப் பணிகளை எல்லாச் சமூக அமைப்பினரும் செய்தனர்.
இந்த முறை, வணிகர் சங்கம் முன்கை எடுத்து வேலைகளைச் செய்தது. முதலில், 1994இல் ஸ்டெர்லைட் எதிர்ப்பு நடந்தபோதும், 1996ஆம் ஆண்டிலும் வணிகர் சங்கம் இந்த அளவுக்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பில் ஈடுபடவில்லையே, இப்போது எப்படி என்று வணிகர் சங்கத்தினரிடம் கேட்கப்பட்டது.
“ஆமாம், நாங்கள் அப்போது இறங்கவில்லை. அதன் ஆபத்தை உணர்ந்திருக்கவில்லை. இப்போது போதும் போதும் என்ற அளவுக்கு ஸ்டெர்லைட் புகையாலும் அதன் மாசுகளாலும், தண்ணீரைக் கெடுத்த நிலையைப் பார்த்துவிட்டு, இனியும் ஸ்டெர்லைட் வேண்டாம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம். அதனால்தான், ஒவ்வொரு கடையிலும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மனுக்களில் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கினோம். ஒவ்வொரு கடையிலும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு வாசகங்கள் கொண்ட அட்டைகளை வைத்திருந்தோம். கீழே இறங்கி மக்களை சந்தித்தோம். கடைசியாக, கடையடைப்பையும் வெற்றிகரமாகச் செய்து முடித்தோம்" என்கிறார் வணிகர் சங்க ராஜா.
குமாரரெட்டியாபுரத்தில் மக்கள் போராட்டம் தொடங்கியபோது, எதிரே எம்ஜிஆர் பூங்காவில் மக்கள் அமர்ந்து அற வழியில் போராடும்போது. எட்டுப் பேரைக் கைதுசெய்தார்கள். ஆனாலும் அந்தக் கிராம மக்கள், தங்கள் நிலத்தில் சிப்காட் நுழைந்து, நாசகார ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு நிலம் கொடுப்பதா எனப் பொங்கி எழுந்து போராட்டத்தை இன்றும் தொடர்கிறார்கள். பெண்கள் ஒவ்வொரு இடமாகச் சென்று, போராட்ட நாளான மார்ச் 24 அன்று வாருங்கள் என அணிதிரட்டியபடி இருந்தனர். காவல் துறை கைதுகள் நடத்தும் பாணியைப் பார்த்த சிலர், இனியும் நாம் அரசியல் கட்சிகள் இல்லாமல் போராட முடியாது என்று கருத்து தெரிவித்தனர். ஆனால் அரசியல் கட்சிகள் இல்லாமல்தான், 2017 தொடக்கத்தில், ஜல்லிக்கட்டு அறப் போருக்கு மாநிலம் தழுவிய அளவில் இளைஞர்களும் மாணவர்களும் பொதுமக்களும் தாய்மார்களும் திரண்டார்கள் என்ற செய்தி நினைவுபடுத்தப்பட்டது.
ஏற்கனவே 1996இல் அரசியல் கட்சிகள் இறங்கின. ஆனால் அதில் நிறைய சச்சரவுகள் பேசப்பட்டன. பிறகு கட்சிகள் தொடர்ந்து போராட முடியவில்லை. ஆகவே போராட்டம் வெற்றிகரமாக நடக்கவில்லை. அதை உணர்ந்தாவது, இனி கட்சிகளை இழுக்காமல், கட்சி சார்பற்ற மக்களை அணிதிரட்டிப் போராட்டத்தைத் தொடரலாம் என முடிவு செய்தார்கள். அதையொட்டியே வணிகர் சங்கத்தின் முன்முயற்சியையும் அங்கீகரித்து வணிகர் சங்கத் தலைவரையும் கட்சி சார்பற்ற அரசியல் என்ற பார்வையில் அழைத்தனர். அதுவே போராட்டத்தின் வெற்றிக்கும் காரணமாக அமைந்தது.
போராட்டத்தின் மலைக்கவைக்கும் வலிமை
சாதாரணமாக, ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் அணிதிரண்டதாக கட்சிகளின் வட்டாரங்களே கூறின. குடும்பம் குடும்பமாக மக்கள் பங்கெடுத்தனர். மாணவ, மாணவிகள் தாங்களாகவே பதாகைகளை எடுத்து வந்தனர். “குச்சி மிட்டாயும் கிலுகிலுப்பையும் இல்லாத திருவிழா போல” இருந்தது என்கிறார் ஒரு செயற்பாட்டாளர். பொதுமக்கள் ஆங்காங்கே தண்ணீர் கொடுத்தனர். அரசியல் கட்சித் தலைவர்கள் யாருமே மேடையில் ஏறவில்லை. பல கட்சிகளின் தொண்டர்கள் தாங்களாகவே, கொடியும் கட்சிப் பெயரும் இல்லாமலேயே கலந்துகொண்டனர். நாட்டுப் படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. சர்வ மதத் திருவிழா என அழைக்கலாம் போல இருந்தது என்றார் ஒரு செயற்பாட்டாளர். பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் பலரும் கருப்பு உடையில் காட்சியளித்தனர். சிறு குழந்தைகள்கூட முழக்கம் போட்டனர். போராட்டத்தைத் துவக்கிய கிராம மக்கள் மேடையில் அமர வைக்கப்பட்டனர்.
இந்த எழுச்சி, வரலாற்றுச் சாதனை. இதுவரை தூத்துக்குடி காணாத அணிதிரளல். ஒட்டுமொத்த தூத்துக்குடியும் சுற்றுப்புறமும் இயல்பாகவே ஒற்றைக் கோரிக்கைக்கு அணிதிரண்ட சாதனை. கட்சி சார்பற்ற மக்கள் எழுச்சி என்றால் இதுதான். அரசியல் கட்சிகள் பின்னால் மக்கள் இருப்பதைவிட, கட்சி சார்பற்ற அரசியலுக்குப் பின்னால்தான் மக்கள் நிற்கிறார்கள் என்பதற்கான அங்கீகாரம். இதுதான் வெற்றிக்கான அரசியல். இதுதான் மக்கள் விரும்பும் அரசியல். இதற்குப் பெயர்தான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அரசியல். ஆள்வோர் முயற்சி எடுத்தது, சுற்றுச்சூழலை அழிக்கும் அரசியல். இரண்டு வித அரசியலுக்கு மத்தியில் உள்ள போராட்டமே மக்கள் போர். அதில் கட்சி அரசியலுக்கு இடமில்லை. அதன் தொடக்க அறுதியிடலே, 2017 ஜனவரியின் ஜல்லிக்கட்டு எழுச்சி. அதன் தொடர்ச்சியே நெடுவாசல், கதிராமங்கலம். அதன் தொடர்ச்சியே ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் எழுச்சி.
இது, தேர்தல் அரசியலில் உள்ள ஊழல், மதவாதம், மதச்சார்பு, சாதிவாதம் எல்லாவற்றையும் தாண்டி, தூத்துக்குடியைப் பாதுகாக்க ஒட்டுமொத்த மக்களையும் ஒன்றுசேர்த்த நிகழ்ச்சி. நிகழ்ச்சிக்குச் சம்பந்தமில்லாமல், தங்கள் சொந்தக் கொள்கைகளை மேடையில் திணிக்க முயற்சி எடுத்தால், மக்கள் மத்தியிலிருந்து எதிர்ப்பு வரும் என்பதற்கான முன்னுதாரண நிகழ்வும் நடந்தது. ஒருவர் தனது கருத்தியல் பார்வையை மதவெறி எதிர்ப்பு என்ற பெயரில் பேச, அதற்கு எதிர்ப்பு வர, பிறகு சம்பந்தப்பட்டவர் உட்பட அது தவறு என்று உணர்ந்து திருத்திக்கொள்ள என ஒரு பாடமாகவே நிகழ்வு நகர்ந்தது. இது கருத்தியல் பரப்புரைக்கான களம் அல்ல.வாழ்வாதாரப் பிரச்சினைக்காக அனைத்துக் கருதியல்காரர்களும் ஒன்றுசேர்ந்து வந்திருக்கும் இடம் எனபதை உணர முடிந்தது. நாம் என்ன கொள்கையை விரும்புகிறோம் என்பதைத் தாண்டி, வேறுபட்ட கொள்கை உள்ளவர்களும் அணிதிரளும் மானுட எழுச்சியின் அடையாளம் இந்தப் பொதுக்கூட்டம். கட்சி சார்பற்ற, மதம், சாதி, கருத்தியல் சார்பற்ற மக்கள் விரும்பும் உடனடி, ஒற்றைக் கோரிக்கைகளைக் கையில் எடுப்பதே வெற்றிக்கு வழி வகுக்கும் என்பது உண்மையாகியுள்ளது. மாற்று உலகம் சாத்தியமே என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment