Friday, November 9, 2018

மாவோயிஸ்ட் தலைமை மாற்றப்பட்டதா?

சிறப்புக் கட்டுரை: மாவோயிஸ்ட் தலைமை மாற்றப்பட்டதா?

சிறப்புக் கட்டுரை: மாவோயிஸ்ட்  தலைமை மாற்றப்பட்டதா?

டி.எஸ்.எஸ்.மணி

சமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) தலைமை மாற்றப்பட்டது என்பதாகப் பல ஊடகங்கள் தங்களுக்குக் கிடைத்த தகவல்களை வைத்து யூகமாகச் செய்தி வெளியிட்டு வருகின்றன. மாவோயிஸ்ட் கட்சி இன்று இந்தியாவின் இதயப் பகுதியான, மத்திய இந்தியாவில், அரசுக்கும் துணை ராணுவப் படைக்கும் சவாலாக இருக்கிறது. சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பிகார், ஒடிசா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவை ஒட்டிய ஆந்திர மாநிலத்திலும் இன்று மாவோயிஸ்ட்டுகளுடைய நடவடிக்கைகள் ஊடகங்களால் கணிக்கப்படுகின்றன.
மாவோயிஸ்ட் கட்சியின் பின்னணி
இந்த மாவோயிஸ்ட் கட்சி 2004ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் நாள் தோழர் கணபதி என்று அழைக்கப்படும் முப்பளா லக்ஷ்மண ராவ் மூலம் தோற்றுவிக்கப்பட்டது. உடனடியாக அக்டோபர் 14இல் அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே ஒன்றுபட்ட ஆந்திரா, ஒடிசா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் பணியாற்றிக்கொண்டிருந்த மக்கள் யுத்தம் குழுவினரும், ஒன்றுபட்ட பிகாரில் பணியாற்றிவந்த எம்சிசி என்ற மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்டர் கட்சியும், பிகாரில் பணியாற்றிவந்த பார்ட்டி யூனிட்டி குழுவும் இணைந்து இந்த மாவோயிஸ்ட் கட்சியைத் தோழர் கணபதியின் முன்முயற்சியில் ஏற்படுத்தினார்.
தோழர் கணபதி என்ற முப்பளா லக்ஷ்மண ராவ், இன்றைய தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஜாகிட்டியால் மாவட்டத்திலிருக்கும் பீர்பூம் கிராமத்தைச் சேர்ந்தவர். ஆசிரியராகப் பணியாற்றியவர். இவர், கொண்டப்பள்ளி சீதாராமையா தலைமையிலான மக்கள் யுத்தம் குழுவில் பணியாற்றி வந்தார்.கொண்டப்பள்ளி சீதாராமையா, 1967இல் மேற்கு வங்கத்தில், டார்ஜிலிங் மாவட்டத்தில், நக்சல்பாரி கிராமத்தில் உருவான நக்சல்பாரி ஆயுத எழுச்சியின் மூலம் 1969இல் ஏப்ரல் 22ஆம் நாளான லெனின் பிறந்த நாளில் பிறந்த, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) என்ற தோழர் சாரு மஜூம்தார் தலைமையிலான கட்சியிலிருந்து கருத்து வேறுபாடுகளால் பிரிந்து, மக்கள் யுத்தம் என்ற குழுவை ஆந்திராவில் முதலில் உருவாக்கினார். அதுவே அன்று, தமிழ்நாடு, கர்நாடகா, ஒடிசா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம் எனப் பல்வேறு மாநிலங்களில் உள்ள புரட்சிகரக் குழுக்களையும் இணைத்துக்கொண்டது.
மக்கள் யுத்தம் குழு என்ற மார்க்சிய லெனினிய அமைப்பில்தான், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏ.எம்.கோதண்டராமன், மறைந்த தோழர் பெண்ணாடம் கலியபெருமாள், மறைந்த தோழர் தமிழரசன் மற்றும் தோழர்கள் தமிழ்வாணன், சிவலிங்கம், ஏலகிரி ராமர் போன்றோர் பணியாற்றிவந்தனர். அப்போது தமிழ்நாட்டில் அந்தக் குழுவினருக்கு, கூட்டகக் குழு என்று பெயர். அதேநேரம், தமிழ்நாட்டில், தோழர் சாரு மஜூம்தார் வழியை ஏற்றுக்கொண்ட குழுவினரும் மறைந்த தோழர்கள் காரைக்குடி பழனியப்பன், தாத்தா என்ற பாண்டியன், மச்சக்காளை, ராயப்பன் போன்றோர் தலைமையில் செயலாற்றி வந்தனர். அது தவிர, கூட்டகக் குழு அமைப்பிலிருந்து பிரிந்து, மறைந்த தோழர்கள் கண்ணாமணி, ஜெயபால், தனபால் போன்றோரும் தனி அமைப்பாகச் செயல்பட்டு வந்தனர்.
கொண்டப்பள்ளி சீதாராமையாவுடன் கருத்து வேறுபாடு வந்த பிறகு, தோழர் கணபதி என்ற முப்பளா லக்ஷ்மண ராவ், தனது தலைமையில் இருந்த மக்கள் யுத்தம் குழுவை, எம்சிசி, பார்ட்டி யூனிட்டி ஆகிய குழுக்களுடன் இணைத்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என்ற கட்சியைத் தொடங்கினார். அந்தக் கட்சி கடந்த பதினான்கு ஆண்டுகளில் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பிகார், ஒடிசா, மஹாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் உத்தரப் பிரதேசம், டெல்லி எனத் தனது செல்வாக்கு மண்டலத்தை விரிவுபடுத்தியது. அப்போது தமிழ்நாட்டில் ஏற்கனவே கொண்டப்பள்ளி சீதாராமையாவுடன் செயல்பட்டுவந்த மேலே குறிப்பிட்ட தோழர்கள், புதிய மாவோயிஸ்ட் கட்சியில் சேராமல் தனித்தனியாகப் பிரிந்து செயல்படத் தொடங்கினர்.
போர்க் குணம் மிக்க படையினர்
ஆனாலும், தோழர் கணபதி தலைமையிலான மாவோயிஸ்ட் கட்சி, இந்தியாவின் இதயப் பகுதியில், ஆயுதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறது. மாவோவின் ராணுவக் கோட்பாடுகளின், சிந்தனை வழியில், கெரில்லா போராட்டம், நிலையான படை, சீரான ராணுவம் ஆகியவற்றை உருவாக்கிச் செயல்பட்டுவருகிறது. கட்சியின் தலைமையில் சிஎம்சி என்ற மத்திய ராணுவ ஆணையம் ஒன்றையும் உருவாக்கி வைத்துள்ளது. மக்கள் விடுதலை கெரில்லா படை என்ற பெயரில், பிஎல்ஜிஏ என்று அடிப்படை உழைக்கும் மக்களான, பழங்குடிகளையம், வனவாசிகளையும் இணைத்துக்கொண்டு இந்திய அரசுக்கு எதிராகப் போரில் ஈடுபடுகிறது.
அத்தகைய போர்க் குணம் மிக்க, மக்கள் விடுதலை கெரில்லா படை, மாவோயிஸ்ட் கட்சியின் மத்திய ராணுவக் கமிஷன் தலைமையில் செயல்படுகிறது. அந்த மத்திய ராணுவக் கமிஷன் தலைவராக இருப்பவர்தான் 63 வயதுள்ள பசவராஜ் என அழைக்கப்படும் தோழர் நம்பள்ள கேசவராவ். இவர் இன்றைய ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஜியான்னபேட் கிராமத்தைச் சேர்ந்தவர்.
தோழர் பசவராஜ், மாவோயிஸ்ட் கட்சியின் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலான ராணுவ நடவடிக்கைகளில், இந்தியத் துணை ராணுவப் படையின் மீதான, ஆம்புஷ் என்ற நகர்ந்து செல்லும் படையின் மேலான தாக்குதல்களில், கடும் சேதங்களை ஏற்படுத்தும் வண்ணம் திட்டமிட்டுத் தாக்குதல்களை நடத்தியவர் என்ற பெயர் பெற்றவர். அத்தகைய தோழர் பசவராஜ், இப்போது, மாவோயிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளராகப் பொறுப்பு எடுத்துள்ளதாக ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. 71 வயதான தோழர் கணபதி, வயது மூப்பின் காரணமாக பொதுச் செயலாளர் பொறுப்பைத் தோழர் பசவராஜ் வசம் கொடுத்துவிட்டதாகவும் அவை சித்திரிக்கின்றன.
யார் தந்த செய்தி?
இச்செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு, இந்தச் செய்திகளைக் கொடுத்தவர் என்று சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் சரணடைந்த ஒரு மாவோயிஸ்ட் அடையாளம் காட்டப்படுகிறார். அவரும் தன்னிடம் ஒரு தலைமறைவுத் தோழர் கூறினார் என்றுதான் சொல்லியுள்ளார். ஆகவே இது உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்திதான். அதிகாரபூர்வமாக மாவோயிஸ்ட் கட்சியிலிருந்து,அறிவிக்கப்பட்ட ஒரு செய்தி அல்ல. மாவோயிஸ்ட் கட்சி தங்களது அதிகாரபூர்வமான செய்திகளை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தும் பழக்கம் கொண்டவர்கள். அவ்வாறு அவர்களிடமிருந்து எந்தச் செய்தியும் இதுவரை வரவில்லை.
ஆனாலும், 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், மாவோயிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கூடியபோது இவ்வாறு முக்கியப் பொறுப்பை மாற்றிக் கொடுப்பது சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது என்று தெரிகிறது. ஆனாலும் முடிவு எடுக்கப்படவில்லை என்றே தெரிகிறது. மாவோயிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவில் இருக்கும் 33 உறுப்பினர்களில் 17 தோழர்கள், தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள். நான்கு பெண் தோழர்களும் மத்தியக் குழுவில் இருக்கிறார்கள். அது தவிர, ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலத்தின் பழங்குடிச் சமூகத்தின் தோழர்களும் மத்தியக் குழுவில் பங்கு கொண்டுள்ளனர்.ஆகவே, அவர்கள் கூடி எடுக்கின்ற முடிவுதான் கட்சியின் முடிவாக இருக்க முடியும்.
பசவராஜின் உறுதியான தலைமை
தோழர் பசவராஜ், 1980ஆம் ஆண்டு, ஆர்எஸ்யு என்ற, மக்கள் யுத்தக் குழுவின் மாணவர் அமைப்பான முற்போக்கு மாணவர் சங்கம் பொறுப்பாளராக இருக்கும்போது, ஆர்எஸ்எஸ் உடன் நடந்த மோதலில், தலைமறைவானவர் என்கிறது அந்தச் செய்தி. தோழர் பசவராஜ், வாரங்கல் நகரில் ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜ் எனச் சொல்லப்படும் பிராந்தியப் பொறியியல் கல்லூரியில் பயின்றவர். எழுபதின் பத்தாண்டுகளில் ஆந்திர மாநில, வாரங்கல் ஆர்ஈசி (ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜ்) உட்பட இந்தியாவின் எல்லா ஆர்ஈசிக்களும் மாவோயிஸ்ட் கருத்துகளின் கோட்டைகளாக இருந்தன.பொறியியல் படிப்பு படித்த மாணவர்கள், தங்களது படிப்பின் அடிப்படையில்,இந்தியாவில் தொழில்மயப்படுத்தல் நடக்கவில்லையே என ஏங்கித் தவித்தபோது, அதற்குத் தடையாக இருக்கும் நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற புரட்சிகரக் கருத்தை உள்வாங்கித் தோழர் சாரு மஜூம்தாரின் கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கிய காலமாக அது இருந்தது.அப்படித் தனது இளமைக் காலத்திலேயே ஆழமான கருத்தியல் தளத்தில் கருக்கொண்ட புரட்சிகரக் கொள்கைகள்தான் தோழர் பசவராஜை இன்று வரை உறுதிப்படுத்தி வைத்துள்ளது.
இதற்கிடையே, அரக்கு சட்டமன்ற உறுப்பினரான தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வான கிடாரி சர்வேஸ்வர் ராவ் செப்டம்பர் மாதம் 23ஆம் நாள் கொல்லப்பட்டதையும், பசவராஜ் தலைமை எடுத்ததையும் ஊடகங்கள் முடிச்சு போடுகின்றன. பல்வேறு வகையான ராணுவத் தந்திரங்களை பசவராஜ் கைக்கொள்கிறார் என அவை விவரிக்கின்றன. ஆந்திரா - ஒடிசா எல்லைப் பகுதிகளில், பசவராஜ் என்ற தோழர் கேசவராவ் கடுமையாகப் பணியாற்றியுள்ளார் எனவும் அவை சித்திரிக்கின்றன. அதேசமயம் வடக்கு தெலங்கானா பிராந்தியக் குழு பொறுப்பாளர் தோழர் பிரசாத், தந்திரமான பின்வாங்கல் என்ற யுத்த தந்திரத்தைக் கடைப்பிடித்துவருகிறார். அதனாலேயே, தற்போதைக்கு அந்தப் பகுதிகளில், தாக்குதல்கள் இல்லை. இத்தகைய நிலைப்பாட்டை தோழர் பசவராஜ் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் ஊடகங்கள் வர்ணிக்கின்றன.
மொத்தத்தில் ஊடகங்களின் பார்வையில், தோழர் கணபதி அதிகமாகக் கருத்தியல் சார்ந்து இருந்தவர் என்றும், தோழர் பசவராஜ் அதிகமாக ராணுவத் தந்திரம் சார்ந்து இருப்பவர் என்றும் ஒரு விளக்கத்தைப் பகிர்ந்துகொள்கிறார்கள். ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியில் எப்போதுமே, மத்தியக் குழுவும், அதற்கு மேலே உள்ள பொலிட் பீரோ என்ற அரசியாக தலைமைக்கு குழுவும், அனைத்திற்கும் மேலே உள்ள கட்சிக் காங்கிரஸ் என்ற பொதுக் குழுவும்தான் கொள்கை முடிவுகளை எடுக்கும் என்பதை ஏனோ இவர்கள் அறிந்திருக்கவில்லை.
இப்போது சத்தீஸ்கரிலும் தெலங்கானாவிலும் நடைபெற இருக்கும் சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் இந்த மாவோயிஸ்ட் கட்சியின் செயல் தந்திரங்கள் எத்தகைய தாக்கங்களைச் செலுத்தும் என்றும் பேசிவருகிறார்கள். கணிசமானவர்கள் வெளியே வந்து தேர்தலில் நடுவண் அரசை ஆளும் மதவாதக் கட்சிக்கு எதிராக வேலை செய்வார்களா என்ற எதிர்பார்ப்பும் சில அவதானிகளிடம் இருக்கிறது. சமீபத்தில், சத்தீஸ்கரில், மாயாவதி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால், மாவோயிஸ்ட்டுகள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு விடுவார்கள் என்று கூறியது இவர்களை இப்படிச் சிந்திக்க வைக்கிறது. ஆனாலும், மாவோயிஸ்ட்டுகள் மத்தியில், தற்போது செயல்தந்திரமாக, நடுவண் மதவாத ஆட்சிக்கு எதிராகப் பரந்த ஐக்கிய முன்னணியை ஜனநாயக ரீதியாகக் கட்டமைக்க வேண்டும் என்ற கருத்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

Sunday, October 21, 2018

பக்தியா? சக்தியா? தீர்மானிப்பது காவல்துறையும், அமைச்சருமா?----சிறப்புக் கட்டுரை--டி.எஸ்.எஸ்.மணி

சபரிமலை:- பக்தியா? சக்தியா? தீர்மானிப்பது காவல்துறையும், அமைச்சருமா?----சிறப்புக் கட்டுரை--டி.எஸ்.எஸ்.மணி 

Friday, September 28, 2018

சபரிமலையில் பெண்கள்: தீர்ப்பை எப்படிப் புரிந்துகொள்வது?

சபரிமலையில் பெண்கள்: தீர்ப்பை எப்படிப் புரிந்துகொள்வது?

சபரிமலையில் பெண்கள்: தீர்ப்பை எப்படிப் புரிந்துகொள்வது?
டி.எஸ்.எஸ். மணி
சபரிமலையில், பெண்களுக்கும் அனுமதி என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணி என்ன?
உலகமெங்கும்,ஒவ்வொரு நாட்டிலும், ஆளவந்த சிறுபான்மை சக்திகள், பரந்துபட்ட மக்களை மயக்க நிலையில் வைத்திருக்க, ஆள்வோரை எதிர்த்த நீதிக்கான எழுச்யில் ஒன்றுபட்டுத் திரள்வதைத் தடுக்க சமூக, பொருளாதார, அரசியல், கட்டமைப்பை இருப்பது போலவே பாதுகாக்க, ஆன்மிகத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதையே, காரல் மார்க்ஸ், மதம் மனிதருக்கு அபின் என்றார்.
அந்த ஆன்மிகத்தின் அம்புறாத் தூணியில் உள்ள அம்புகள் பல்வேறு நம்பிக்கை நீரோட்டங்களாக (Sects) மதங்களாக (Religions) பவனி வருகின்றன. அதில் ஒரு நீரோட்டமே, சபரிமலை ஐயப்பன்.
அத்தகய ஆன்மிக ஆயுதத்தில், ஆண், பெண் வேறுபாடு வேண்டாம் என்ற இன்றைய காலத்துக்கு ஏற்ற தீர்ப்புதான் இது. நம்பிக்கை நீரோட்டத்தை விட்டு ஒரு சரி பாதி பாலினத்தை விலகி நிற்கச் செய்யாமல் தடுக்கிறது. பெரும்பான்மை மத்த்தின் நம்பிக்கையைக் கட்டிக்காக்க, அதைப் பாலின வேறுபாடு இன்றிப் பின்பற்றச் செய்ய வேண்டும் என்ற அறிவார்ந்த உணர்தல்களை, நீதியரசர்கள் கொள்கையாகக் கொண்டுள்ளதால், பழைய பழக்கங்களை மாற்றி அனைவரையும் தங்கள் நம்பிக்கை வலைக்குள் வீழ்த்த எடுத்த தந்திரமான தீர்ப்புதான், அனைத்துப் பாலினதிற்கும், ஆன்மிகச் சமத்துவம் என்ற கருத்துக் கோப்பு.
உலகமெங்கும் இணைய தலைமுறை, இளம் பெண்கள் உட்பட, பழைய பழக்கங்களுக்கு உட்பட்டு, பாலின சமத்துவமுன்றித் தொடர்ந்து பயணிக்க விரும்பவில்லை என்ற உண்மையை உணர்ந்த நீதியரசர்களின் காலத்திற்கேற்ற கருத்துத்தான் இந்தத் தீர்ப்பு.
அரசியல் சட்டப் பிரிவு 377ஐ ( தன்பாலின உறவைக் குற்றமாகக் கருதும் பிரிவு) நீக்கியதும், சட்டப் பிரிவு 497ஐ (மண உறவுக்கு வெளியே நடக்கும் உடலுறவைக் குற்றமாகக் கருதும் பிரிவு) நீக்கியதும், மேற்கண்ட உணர்தல்களின் வெளிப்பாடே. அந்த வரிசையில்தான், இந்தத் தீர்ப்பும் வெளிவந்துள்ளது.
காலம் தமது கையை விட்டு விலகிச் செல்வதையும், மக்கள் தங்களது பிடியிலிருந்து நழுவிச் செல்வதையும் தடுத்து நிறுத்தச் சில பழைய பழக்க வழக்கங்களிலிருந்து வெளியே வர விரும்பும் அறிவார்ந்த செயல்தான், உச்ச நீதிமன்ற நீதியரசர்களின் இந்தத் தீர்ப்பு. அழுகிக்கொண்டு இருக்கும் சமூகத்தைத் தொடர்ந்து கட்டிக்காக்க இத்தகய தீர்ப்புகள் தேவைப்படுகின்றன.
ஒரேயொரு பெண் நீதியரசரின் அதிருப்திப் பதிவு மட்டும் தனித்து நிற்கிறது. எல்லோரும் மாற்றத்தை நோக்கிச் சென்றாலும், ஆள்வோரெனும் சிறுபான்மையினருக்குப் பெரும்பான்மையைக் கட்டிப்போட, நம்பிக்கை நீரோட்டப் பயணத்தில் பாலினச் சமத்துவம் கட்டாயத் தேவை என்பதை, எச்சரிக்கை மணியாகச் சூழல் கோரினாலும், அதைவிட வலுவான ஆணாதிக்க நம்பிக்கைகளின் பிரதிபலிப்பா அவருடைய கருத்து எனச் சமூகம் ஆய்வு செய்யத்தானே செய்யும்?

Tuesday, August 7, 2018

கலைஞர் Passed away

தலைவர் கலைஞர் என்றுதான் நான் உச்சரித்து வந்துள்ளேன். அவர் விரும்பும் விதத்திலேயே அவரை அழைப்பதுதான் பொருத்தம் என்றுதான் எனது மனம் சொன்னது. எனது இளமைக் காலத்தில், அவரது பேச்சும், எழுத்துமே என்னை ஈர்த்தது என்பதை விட, எனது தமிழைத் செதுக்கியது என்றே கூற வேண்டும். "உள்ளபடியே" என்ற சொல்லாடலை நான் அதிகமாகப் பயன்படுத்துகிறேன் என நண்பர்கள் கூறுவார்கள். அது தலைவர் கலைஞரிடமிருந்து "கடன்" வாங்கிய சொல். அண்ணா தனது பேச்சாலும், எழுத்தாலும் என்னை இளமைக் காலத்தில் ஈர்த்தார் என்பது உண்மைதான் என்றாலும், அதிகமாக நான் ரசித்து, பேசுவது கலைஞரின் பேச்சும், எழுத்துமே. நான் சிறு வயதிலிருந்தே சிவாஜி கணேசன் ரசிகர். நெல்லை சிவாஜி ரசிகர் மன்றத்தில் மாவட்ட தலைமையில் பணியாற்றியவன்.அந்தக் காலம் "சிவாஜியா?, எம்.ஜீ.ஆரா?".என்ற சர்ச்சையை இளைஞர்களிடம் விவாதிக்கப்பட்ட காலம். அப்போது, சிவாஜி கணேசனின் நண்பராக தலைவர் கலைஞர் இருந்தார். சிவாஜிக்கு திரைப்படத்திற்கு மட்டுமல்ல பொது வெளிக்கும் கலைஞரின் எழுத்துக்கள் பயன்பட்டன. அதனால் இயல்பாகவே எங்களுக்கு{ சிவாஜி ரசிகர்களுக்கு} ,கலைஞர் மீது ஒரு பாசம் உண்டு.
          திமுக 1967  இல் ஆட்சிக்கு வந்த பின், ஒரு பொதுவுடைமைவாதியான எனக்கு,  சிம்சன்  தொழிலாளர் போராட்டம், விவசாயிகள் போராட்டம் மீதான தஞ்சை துப்பாக்கி சூடு, நக்சல்பாரி புரட்சியாளர்களுக்கு எதிராக "கியூபிரிவை" உருவாக்கியது, பின்னாளில்  மாஞ்சோலை தொழிலாளர் மீதான காவல்துறைத் தாக்குதலில் தாமிரபரணி படுகொலை, ஈழத் தமிழர் படுகொலையில் எடுத்திருந்த நிலைப்பாடு, நிறைவுக் காலத்தில் நடுவண் அதிகாரத்துடன் இணைந்து சென்றது , "ஏக இந்தியா" என்ற சொல்லாடலைப் பயன்படுத்தியது  ஆகியவை அவருடன் மாறுபாடுகளையம், நெருக்கடி நிலையை எதிர்த்து சட்டமன்றத் தீர்மானம் கொண்டுவந்தது,முரசொலியில் நெருக்கடி நிலை எதிர்ப்பை வெளிக்காட்டியது, எனது தலைமறைவுக் கால புரட்சிகர வாழகையிலும்,நெருக்கடி நிலை எதிரிப்பில் அவரது நிலைப்பாட்டை அங்கீகரித்தது,1983 காலத்தில் ஈழத் தமிழர்களுக்காக குரல் எழுப்பியது, 1989  இல் திமுக நடத்திய நடுவண் அரசு எதிர்ப்பு பேரணியில், இந்திய மக்கள் முன்னை சார்பாக கலந்து கொண்டது,தமிழுக்காகவும், தமிழின உரிமைக்காகவும்,கலை, இலக்கியத்திற்க்காகவும், தனது எழுத்தில் உருவான நாடகத்திற்காகவும்,குரல் எழுப்பியது,,மரண தண்டனை எதிர்ப்பில் நிலை எடுத்தது,திருநங்கைகளுக்காகவும், குரல் எழுப்பியதால் அவருடன் ஒன்றுபட்டு இருந்த பகுதிகளையும் கண்ட அரசியல் பயணம் என்னுடையது. அவரது ஐம்பது ஆண்டு அரசியல் தலைமை ஏற்ற வாழ்க்கை காலம் தான், எனது புரட்சிகர அரசியல் வாழ்க்கையையும் வகுத்தது என்பதாலேயே, இந்த மாறுபாடுகளும், ஒற்றுமைகளும் நடைபெற்றுள்ளது. நேரெதிரெதிர் அரசியல் முகாம்களில் பயணம் செய்தது கூட, ரசனையானதுதான். தோழர் ஞானி "கலைஞர் பற்றி ரசிக்க முடியாத எழுத்துக்களை" எழுதிய போது, அதை கண்டிக்க கூட்டப்பட்ட கூட்டத்தில்  உரையாற்ற { அவரது தேர்வுகள் மூலம்} என்னையும் அழைத்திருந்தார்கள். அதுவே "மாற்றுக்கருத்துளளவர்களிடமும், இருக்கும் கருத்துக்களை அங்கீகரிக்கும் பாங்கு" என காண முடிந்தது.
               மறக்க முடியாத, ஒதுக்க முடியாத, மாற்றுக்கருத்துக்களும் கூட, வேறுபட்டு நிற்க முடியாத ஒரு " ஆளுமை" மறைந்தது என்பதே வருந்தத்தக்கது..     ,     

Monday, July 23, 2018

அதிருப்தியாளர்கள் மீது நக்சல் முத்திரையா?



சிறப்புக் கட்டுரை: அதிருப்தியாளர்கள் மீது நக்சல் முத்திரையா?

சிறப்புக் கட்டுரை: அதிருப்தியாளர்கள் மீது நக்சல் முத்திரையா?
டி.எஸ்.எஸ். மணி
ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வோர் ஆட்சியிலும், அந்த ஆட்சியாளர்களை எதிர்த்தோ, ஆட்சியாளர்களின் திட்டங்களை எதிர்த்தோ, மக்கள் மத்தியிலிருந்தும் அறிவுஜீவிகள், ஊடகங்கள், செயற்பாட்டாளர்கள் மத்தியிலிருந்தும் கேள்விகள் எழுவது இயற்கையே. அப்படிக் கேள்விகள் எழாவிட்டால், ஆட்சியாளர்களுக்குத் தாங்கள் கொண்டுவந்த திட்டங்களை பற்றிய நிறை குறைகள் தெரியாமல் போய்விடும். அப்படிக் கேள்விகள் எழும்போதுதான், ஆட்சியாளர்கள், தங்களது செயல்பாடுகளில் திருத்தங்களைக் கொண்டுவர முடியும். அவ்வாறு கேள்விகள் எழுவதை அனுமதிக்கும்போதுதான், ஆட்சியாளர்கள், மக்களுக்குத் தங்களது திட்டங்களில் உள்ள பலமான அம்சங்களைப் புரியவைக்க முயல முடியும். ஆகவே எப்படியும், மக்கள் மத்தியிலிருந்து அதிருப்திக் குரல்கள் எழுவது என்பது எப்போதுமே ஆரோக்கியமானதுதான்.
அதேநேரம், அத்தகைய அதிருப்தியின் குரல்களை அடக்கவும், ஒடுக்கவும் ஆட்சியாளர்கள் நினைத்தால் அவர்கள் கற்றுக்கொள்வதற்கு எதுவுமே இல்லாமல் போய்விடும். அவர்களால், மக்களை தங்கள் திட்டங்கள்பால் ஈர்க்க முடியாமல் போகும். எந்த வகையிலும், அடக்குமுறைகளும் ஒடுக்குமுறைகளும் மக்களை அணுகுவதற்கு, ஆட்சியாளர்களின் கைகளை பலவீனப்படுத்தவே செய்யும். இதுவே ஜனநாயகத்தின் ஆணி வேராகக் காணப்பட வேண்டும். இதையே திருவள்ளுவர் கூறுகிறார். இதையே உலகமெங்கும் ஜனநாயகத்திற்காகக் குரல் கொடுத்த பெரும் மேதைகள் பலரும் கூறக் கேட்டிருக்கிறோம்.
ஆங்கிலேயன் இந்த நாட்டை ஆண்டுவரும்போது நடந்த அடக்குமுறைகளைப் பற்றி பாரதியார், “இம் என்றால் சிறைவாசம். ஏன் என்றால் வனவாசம்” என்று கூறினார். இன்றைய நமது ஆள்வோர், ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் ஆட்சிக்கு வந்தவர்கள். ஆனால், இவர்களும் தற்போது மாறிவருகிறார்கள். மாற்றுக் கருத்தைப் பேசினாலோ, மாறுபட்ட கருத்துகளைக் கேட்டாலோ, கைது என்ற அணுகுமுறையைக் கையாளுகிறார்கள்.
ஏன் இப்படி நடக்கிறது? ஒன்று, அவர்கள் அச்சத்தின் காரணமாக, என்ன செய்வதென்றே தெரியாமல் திக்குமுக்காடுகிறார்கள். அல்லது அவர்களுக்கு ஆலோசனை கூறும் அதிகாரிகள், அடக்குமுறைகள் மூலம் அனைத்தையும் வென்றுவிடலாம் என துர்போதனை சொல்பவர்களாக இருக்க வேண்டும். எது எப்படி என்பதை அவர்களுக்கே விட்டு விடுவோம்.
அரண்டவன் கண்ணுக்கு…
அடுத்து, ஒரு புதுக் கரடியை ஆள்வோர் இறக்கி விடுகிறார்கள். அதுதான், நக்சல் எனும் சொல்லாடல். பயங்கரவாதம் எனும் பய பீதிக் கூற்று. இந்தப் பீதியை அவிழ்த்து விடுபவர்களுக்கு, அவர்களுக்கே உரித்தான தேவைகள் இருக்கலாம். ஆனால், நக்சல் என்றால் என்ன? 1967ஆம் ஆண்டு அன்றைக்கு இருந்த ஆட்சியில் சமூக, அரசியல் பிரச்சினைகள் தலைவிரித்து ஆடின. மக்கள் மத்தியில் நிலம் இல்லை, வேலை இல்லை, ஊதியம் இல்லை, விலைவாசி குறையவில்லை, உழைப்பவனுக்கு வாழ வழியில்லை என்ற சூழல் இந்திய நாடெங்கும் பரவிக் கிடந்தது. பொதுவுடைமைவாதிகளும் தேர்தல் பாதையில் ஒட்டிக்கொண்டு, மக்களுக்காக எதையுமே நல்லது செய்ய முடியாத நிலை வந்தது. அப்போது, புரட்சிகரப் பொதுவுடைமைவாதிகள் கல்லூரிப் பேராசிரியர் சாரு மஜும்தார் தலைமையில் திரண்டு தங்களது உழைப்பால் வந்த நிலத்தை, பொருள்களை, தாங்களே எடுத்துக்கொள்வது எனக் கிளர்ந்து எழுந்த இடம்தான், நக்சல்பாரி என்னும் கிராமம்.
மேற்கு வங்க மாநிலத்தில், டார்ஜிலிங் மாவட்டத்தில், சிலிகுரி வட்டத்தில், நக்சல்பாரி என்ற கிராமத்தில், நிலமற்ற உழவர்கள் கிளர்ந்து எழுந்தார்கள். அந்தக் கிளர்ச்சியின் தாக்கத்தினால், பின்னால் வந்தவர்களும், ஆள்வோரும் மக்களின் கிளர்ந்தெழுதல்களை, நக்சல் வழி என அழைக்கத் தொடங்கினர். அத்தகைய நக்சல்பாரிப் புரட்சியாளர்களை நாம் நக்சல் என்றே அழைத்தாலும், அவர்கள் சொல்வது என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும்.
நக்சல்கள் கூறுவது என்ன?
அந்த நக்சல்கள் இந்திய நாடு, அந்நிய ஏகாதிபத்தியங்களுக்கு, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அடகு வைக்கப்படக் கூடாது என்றும், அந்நிய நாட்டின் சரக்குகளை இந்தியாவில் சந்தையாக்கக் கூடாது என்றும் கூறுகிறார்கள். இதைத்தானே இன்று நம்மை ஆளும் பாஜகவோ, அத்துடன் இயங்கும் ஆர்எஸ்எஸ் அமைப்போ கூறிவருகிறது? சுதேசி, விதேசி என்ற முழக்கங்களைக் காவிவாதிகளும் கூறவில்லையா? பிறகு ஏன் நக்சல் என ஒரு பிரிவினரை மட்டுமே முத்திரை குத்துகின்றனர்?
நக்சல் என்பவர்கள், நிலமற்ற உழவர்கள் உழைக்கும் நிலங்களை, நிலப்பிரபுக்கள் பலாத்காரமாகக் கைக்கொள்ளக் கூடாது என்கிறார்கள். நக்சல் என்பவர்கள், சாதிய வெறியுடன், ஆதிக்கவாதிகள், தாழ்த்தப்பட்டோரை அடக்கி ஆளக் கூடாது என்கிறார்கள். இத்தகைய கூற்றுகளை நமது அரசியல் சட்டமும் சொல்கிறதே? அப்படியானால் எதற்காக இந்த நக்சல்களைப் பிரித்துப் பார்க்கிறீர்கள் என்ற கேள்வி அறிவுஜீவிகளிடமிருந்து வருமல்லவா?
அதற்கும் நம்மை ஆள்வோரிடம் நல்ல பதில் இருக்கிறது. வன்முறை நன்முறையல்ல; அதில் ஈடுபடுபவர்களை நக்சல் என்கிறோம் என்று ஆள்வோர் பதில் கூறலாம். உண்மைதான். வன்முறை நன்முறையல்லதான். அந்த வன்முறையை, புரட்சியாளர்களோ, பண்ணையார்களோ, ஆதிக்கச் சாதிவாதிகளோ, மத வெறியர்களோ, காவல் துறையினரோ, ராணுவத்தினரோ, யார் கையில் எடுத்தாலும் அது நன்முறையல்ல. சரி. தமிழ்நாட்டுச் சூழலுக்கு வருவோம்.
போராட்டமும் ஆர்ப்பாட்டமும்
இங்கே இன்று எதற்கெடுத்தாலும் போராட்டம் நடக்கிறதே என ஆள்வோர் கேட்கிறார்கள். போராட்டம் என்றால், நகர்ப்புறங்களில், காவல் துறை அனுமதி பெற்றோ, அனுமதி பெறாமலோ, காவல் துறையின் கைது நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் போராட்டம் என்ற பெயரில் செய்யப்படும் ஆர்ப்பாட்டங்களை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். உண்மையில் அவையெல்லாம் போராட்டங்கள் அல்ல. அவற்றிற்கு உண்மையான பெயர் ஆர்ப்பாட்டம் தான். அதாவது, புரட்சியாளர் லெனின் வார்த்தைகளில், அவை வெறும் கிளர்ச்சிகள்தான். இந்தக் கிளர்ச்சிகளால், அடையாளபூர்வமாக எதிர்ப்பைக் காட்டலாம். அவ்வளவே. அது ஆள்வோருக்கு, ஒரு செய்தியை அறிவுறுத்துவதாக இருக்கும்.
2017 ஜனவரிக்குப் பிறகு, அதாவது, ஜல்லிக்கட்டு எழுச்சிக்குப் பிறகு, தமிழ்நாட்டில் அமைதி வழியில் அறப் போராட்டம் என்ற புரிதலில், மக்கள் எல்லோருமே, ஒரே இடத்தில் திரண்டு அமைதியாக அமர்வது என்று புதிய வடிவத்தைக் கண்டுபிடித்துவிட்டார்கள். அதுவே, தங்களது கோரிக்கையை வலியுறுத்த, வன்முறையற்ற நன்முறையில், அமைதி வழியில் மக்கள் அணிதிரள்வது என்ற வடிவம். நெடுவாசலிலும், கதிராமங்கலத்திலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பிலும் பொதுமக்கள் இப்படி அணி திரண்டதைக் கண்டோம். அத்தகைய எதிர்ப்புகளை, ஆள்வோர் பகிரங்கமாக எதிர்க்கத் தயாராயில்லை. ஏனென்றால், அவை ஊர் அறிந்த, அமைதி வழியிலான அணி திரளல். எனவே, இதை எதிர்கொள்வது கடினமானது.
அரசு கண்டுபிடித்த வழி
இத்தகைய அணி திரளலைச் சமாளிக்க ஆள்வோர் ஒரு தந்திரத்தைப் பிரயோகிக்க முயல்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட குழுவையோ, சில குழுக்களையோ, தீவிரவாதிகள், நக்சல்கள் என்று முத்திரை குத்தி, அவர்களைச் சாக்காகக்கொண்டு, ஒட்டுமொத்த மக்களது எழுச்சியையும் அடக்கி ஆள்வது என்பதே அது. அத்தகைய தந்திரத்தை ஆள்வோர், ஜல்லிக்கட்டு எழுச்சிக்குப் பிறகு கண்டுபிடித்திருக்கிறார்கள். அதைப் பயன்படுத்தி, கைது, தடை, துப்பாக்கிச் சூடு என்று அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள்.
இந்த இடத்தில் யார் அப்படி முத்திரை குத்தப்படுவோர் என ஆராய வேண்டிய கட்டாயத்திற்கு நாம் ஆளாகியுள்ளோம். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் அத்தகைய முத்திரை குத்தல் தொடங்கியது. மக்கள் அதிகாரம் என்னும் அமைப்பினர் தீவிரவாதிகள் எனக் குறிப்பிடப்பட்டார்கள். அரசு அவர்களை மக்கள், கலை இலக்கியக்காரர்கள் என்று கூறுகிறது.
அமைதிவழி நக்சல்கள்!
சரி, இருக்கட்டும். அவர்கள் கடந்த முப்பது ஆண்டுகளாகத் தமிழகத்தில் செயல்படுகிறார்கள். எப்போதாவது, அந்த அமைப்பு வன்முறையில் ஈடுபட்ட வரலாறு உண்டா? இல்லையே. அந்த அமைப்பினர் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், பேரணி, மாநாடு என்று நடத்தினாலும், காவல் துறையின் அனுமதியைப் பெற்றுத்தான் தங்கள் கிளர்ச்சிகளை நடத்துகிறார்கள். அனுமதி மறுக்கப்படும்போது, நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று நடத்துகிறார்கள். இது நாட்டு மக்களுக்குத் தெரியாவிட்டாலும், காவல் துறைக்கு நன்றாகவே தெரியும் அப்படித் தெரிந்திருந்தும்கூட, அதிருப்தியின் குரல்வளையை நெரிக்க அவர்களை நக்சல்கள் என்ற தவறான சித்திரிப்பைச் செய்ய வேண்டிய நிர்பந்தம் காவல் துறைக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பிட்ட அமைப்பினர், நக்சல்பாரிப் பாதை என்று எழுதுகிறார்களே, பேசுகிறார்களே, பாடுகிறார்களே என்று காவல் துறையினர் கேட்கலாம். ஆனால், குறிப்பிட்ட அமைப்பினரின் , செயல்கள் அமைதி வழியிலும், சட்ட ரீதியான வடிவிலும்தானே இருக்கின்றன? அப்படி இருக்கையில் அவர்களை நீங்கள் நக்சல்கள் என்று எப்படி முத்திரை குத்துவீர்கள்? அமைதிவழி நக்சல்கள் என்று வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போங்கள்.
உதாரணமாக, நக்சல்பாரிப் பாதை என்பது, ஆயுதம் தாங்கிப் புரட்சி செய்யும் பாதை. அந்தப் பாதையில், ஜார்கண்டில், சத்தீஸ்கரில், பிகாரில், ஒடிசாவில் மாவோயிஸ்டுகள் ஆயுதம் தாங்கிப் புரட்சிகர வேலைகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் சட்ட ரீதியாக, கலை, இலக்கியத் தளங்களில் இயங்கிவருவோரை, அதே முத்திரை குத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது?
உண்மை வரலாற்றை நாம் கவனிப்போமானால், சாரு மஜும்தார் முன்வைத்த வர்க்க எதிரிகளை அழித்தொழிக்கும் வழி என்ற பாதையை மறுத்து, வெகுமக்களைத் திரட்டப் போகிறோம் என்று கூறி, 1971இலேயே வெளியே வந்த அமைப்புகள்தான் தமிழ்நாட்டில் இயங்கிவருகின்றன. அவை நக்சல் என்ற சொல்லாடலைப் பயன்படுத்தலாம். ஆனால், செயல் என்ன என்று பார்த்து அணுகுமுறையைக் கையாள்வதுதானே அரசின் கடமை? பேனைப் பிசாசு ஆக்குவது சரியான நடைமுறையா?
அற வழியில் அணி திரள்வோரை நக்சல் முத்திரை குத்துவதும், தீவிரவாதிகள் முத்திரை குத்துவதும் ஆட்சியாளர்களின் செயல்பாடுகளுக்கு எதிராக மக்கள் அணி திரளவே உதவும். தேர்தல் பாதையில் செல்லும் கட்சிகளின் தலைவர்களையும், கருத்துக் கேட்டாலே, தீவிரவாதம் என்று முத்திரை குத்திக் கைது செய்யும் போக்கு எந்த வகையிலும், ஆரோக்கியமான முறையுமல்ல. ஆக்கத்தை அது தரப்போவதுமில்லை. இதுபோன்ற செயல்கள் மக்கள் மத்தியில் அரசின் மீது வெறுப்பையே வளர்க்கும் என்பதை ஆள்வோர் எப்போது உணரப் போகிறார்கள்? உணர்ந்தால் அவர்களுக்கு நல்லது.
(கட்டுரையாளர் குறிப்பு: டி.எஸ்.எஸ். மணி தமிழின் முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவர். இந்திய அளவில் கவனிக்கத்தக்க பல முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டு அரசியல் நிகழ்வுகளை விவாதித்து வருபவர். தொடர்புக்கு: manitss.mani@gmail.com)

Monday, July 2, 2018

பசுமை வழிச் சாலையா? குழம்பாதீர்கள்!

பசுமை வழிச் சாலையா? குழம்பாதீர்கள்!

பசுமை வழிச் சாலையா? குழம்பாதீர்கள்!
சென்னையிலிருந்து சேலம் செல்லும் சாலை ஒன்றை எட்டு வழியுடன் போடுவதற்காக, இந்திய நடுவண் அரசின் சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரியின் அரவணைப்பில், தமிழ்நாடு முதல்வர் எடப்பாடியார் அறிவிக்கும்போது அதை ஆங்கிலத்தில் கிரீன் காரிடார் (Green Corridor) என்றார். தமிழில் அப்படியே அதை நேரடியாக மொழிபெயர்த்து (Literal Translation) 'பசுமை வழிச் சாலை' என்றும் அறிவித்துள்ளார். அதையே ஊடகங்களும் ஏற்றுக்கொண்டு அப்படியே குறிப்பிடுகின்றன. எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் அனைவரும் தமிழில், 'பசுமை வழிச் சாலை' என்றே விளித்து அறிக்கைகள் பறக்கின்றன.
பலருக்கும் "இது எப்படி பசுமை வழிச் சாலை?" என்ற குழப்பம் இருந்துகொண்டே இருந்தது. அதன் விளைவாக, காடுகளுக்கு மேலே கட்டப்பட்டுள்ள ஒரு மேம்பாலத்தின் படத்தைக் காட்டி, "இதுதானே உண்மையான பசுமை வழிச் சாலை?" என்பதாகவெல்லாம், சமூக வலைதளங்களில் எழுதித் தள்ளுகிறார்கள். இந்தப் புதிய வழித்தடத்திற்கு இது பொருத்தமான பெயர்தானா?
ஆங்கிலத்தில், வணிக மொழியில் ஓர் இடத்தில் உள்ள சாலையை விரிவுபடுத்தப் போகிறார்கள் என்றால், அதை, பிரவுன் ஃபீல்டு புராஜக்ட் (Brown Field Project) என்று அழைக்கிறார்கள். அதேநேரம், ஒரு இடத்தில் புதிதாக ஒரு சாலையை (New Road) போடப் போகிறார்கள் என்றால், அதை, வணிக மொழியில், கிரீன் ஃபீல்டு புராஜக்ட் (Green Field Project) என்று அழைக்கிறார்கள்.
ஆகவே, இங்கே சேலத்திற்குப் போட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு துடிக்கும் சாலை, இதுவரை வயல்களாகவும், மலை ஓரங்களாகவும் இருக்கின்ற, அதாவது, பாதையே இல்லாத தடத்தில் போடப்படும் சாலை என்பதால் இந்தப் புதிய பாதையை, கிரீன் ஃபீல்டு புராஜக்ட் (Green Field Project) என்று அழைக்க வேண்டும். அதன் அர்த்தம் அது, கிரீன் காரிடார் அல்ல (Green Corridor). எனவே, அதன் பொருள், பசுமை வழிச் சாலையும் அல்ல. பச்சைத் தமிழன் என்பதை Green Tamilan என மொழிபெயர்ப்பது அபத்தம் அல்லவா? அதுபோலத்தான் இதுவும்!
இங்கே ஆங்கிலத்திற்கு ஆங்கிலமும், ஆங்கிலத்திற்குத் தமிழும் என இரண்டுமே தவறாகக் கையாளப்படுகின்றன. ஓர் உதாரணத்தின் மூலம் இதைத் தெளிவாக விளங்கிக்கொள்ளலாம். Assault என்னும் ஆங்கிலச் சொல்லின் பொருள் தாக்குதல். ஆனால், தமிழ்நாடெங்கும், அசால்ட் (Assault) என்ற சொல் கேர்லெஸ் (Careless), கேஷுவல் (Casual) போன்ற சொற்களுக்கு இணையாகப் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது அல்லவா? அதுபோலத்தான் இதுவும்.
அசால்ட் என்பது எப்படியோ மாறுபட்ட பொருளில் புழங்கத் தொடங்கிவிட்டது. ஆனால், ஆங்கிலம் அறிந்தவர்களுக்கு இதன் பொருள் தெரியும். ஆனால், Green Corridor என்பது அது உணர்த்தும் பொருளில் மொழிபெயர்க்கப்படாமல் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. எனவே, பசுமையைக் குறைக்கும் இந்தச் சாலைக்குப் பசுமை வழிச் சாலை என்ற பொருத்தமில்லாதப் பெயர் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து பயன்படுத்தினால் அசால்ட் என்பது கேஷுவல் என ஆனதுபோல இதுவும் நிலைபெற்றுவிடும். எனவே, ஊடகங்களில் தொடங்கி, அரசியல்வாதிகள், எதிர்க்கட்சித் தலைவர், முதல்வர் உட்பட அனைவருமே இந்த எட்டு வழிச் சாலையை, ‘புதிய சாலை’ என்பதாகக் குறிப்பிடுவார்களா?
(மூத்த ஊடகவியலாளர் பாபு ஜெயகுமார், சென்னைப் பல்கலைக்கழக ஊடகத் துறை அரங்கு கூட்டத்தில் பேசியதன் அடிப்படையில் எழுதப்பட்டது இது.)
- டி.எஸ்.எஸ்.மணி

Wednesday, June 20, 2018

கந்தக அமிலம் மட்டுமா கசியும்?

சிறப்புக் கட்டுரை: கந்தக அமிலம் மட்டுமா கசியும்?

சிறப்புக் கட்டுரை: கந்தக அமிலம் மட்டுமா கசியும்?

டி.எஸ்.எஸ்.மணி

ஜூன் 16ஆம் நாள், சனிக்கிழமை. மூடிக் கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கந்தக அமிலம் கசிவதாகத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவருக்குத் தகவல் வருகிறது. அவர் 17ஆம் தேதி ஞாயிறு அன்று அதிகாரிகள் குழு ஒன்றை ஆலைக்குள் அனுப்புகிறார். அந்தக் குழுவில், மாசுக் கட்டுப்பாட்டு அலுவலக இணைத் தலைமை சுற்றுச்சூழல் பொறியியலாளர் மனோகரன், மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியியலாளர் லிவிங்ஸ்டன், தொழிற்சாலைகள் இணை இயக்குநர் சரவணன், துணை இயக்குநர் ரவிக்குமார் ஆகியோருடன் வருவாய்த் துறை அதிகாரிகளும், ஆலைக்குள் மாலை நான்கு மணிக்குச் சென்று, இரண்டு மணி நேரம் ஆய்வு செய்துவிட்டு வந்து, ‘கந்தக அமிலம் அது தேக்கி வைக்கப்பட்டிருக்கும் பகுதியிலிருந்து கசிகிறது’ என்பதாகக் கூறியுள்ளனர் என மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி கூறினார். நாம் கேட்பது, இந்தத் தாமிர உருக்கு ஆலையில் என்னவெல்லாம் ரசாயனக் கழிவுகள் இருக்கிறது என்பது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், அரசுக்கும் தெரியாதா? இதுவரை ஆலை நிர்வாகம் அளித்துள்ள புள்ளிவிவரங்களிலிருந்தே அவை தெளிவாகத் தெரிகின்றனவே?
தூத்துக்குடியில் கட்சி சார்பற்ற அரசியலைக் கையிலெடுத்த பொதுமக்கள், ஒரு லட்சத்திற்கும் மேல், மார்ச் 24ஆம் நாள் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அணி திரண்டனர். அதன் பிறகு ஸ்டெர்லைட் ஆலையின் துணைத் தலைவர் சுமதி, ஒரு பிரபல தொலைக்காட்சியில் வெளியான தனது நேர்காணலில், ‘யார் வேண்டுமானாலும் ஆலைக்குள் வந்து பார்க்கலாம். நான் 23 ஆண்டுகளாக இந்த ஆலையில் வேலை செய்கிறேன். எனக்குப் புற்றுநோய் வரவில்லை’ என்று அறிவித்தார். அந்த அறிவிப்பால் தூண்டப்பட்டு, தூத்துக்குடி லயன்ஸ் கிளப் ஒரு உண்மையறியும் குழாமை ஸ்டெர்லைட் ஆலைக்குள், மார்ச் 30ஆம் நாள் அனுப்பியது. குழுவினர் மதியத்திற்கு மேல் ஸ்டெர்லைட் ஆலைக்குள் சென்று விசாரணை நடத்திவிட்டு, இரண்டு மணி நேரத்தில் திரும்பி வந்தனர். அந்தக் குழுவினர் கேட்ட கேள்விகளுக்கு, ஆலை நிர்வாகத்தார் கொடுத்த புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டே இந்தக் கட்டுரையின் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
தாமிரக் கனிமத்தின் கதிர் வீச்சு
ஆஸ்திரேலியாவில் உள்ள தாமிரக் கனிம வளச் சுரங்கங்களிலிருந்து மண்ணுடனும், கற்களுடனும் கலந்த தாமிரக் கனிமம் எடுக்கப்பட்டு, அது முதல்கட்டச் செறிவூட்டல் செய்யப்பட்டு கப்பலில் தூத்துக்குடி துறைமுகத்திற்குக் கொண்டு வரப்படுகிறது. அதாவது, வரும் முன்பே செறிவூட்டப்பட்டதால், கதிர் வீச்சுக்கள் கொண்டதாகவே அது தூத்துக்குடிக்குக் கொண்டு வரப்படுகிறது. ஆஸ்திரேலியாவில், சுரங்கத்திலிருந்து எடுக்கப்படும் தாமிரக் கனிமத்தில் தாமிரத்தின் அளவு, மூன்று முதல் ஆறு விழுக்காடு மட்டுமே இருக்கிறது. ஆஸ்திரேலியாவிலேயே செறிவூட்டப்பட்ட பிறகு, அதே கனிமத்தில், தாமிரத்தின் அளவு, முப்பது விழுக்காடாக மாறுகிறது. கப்பலில் அதிக செலவு செய்யாமல் இருப்பதற்காகவே அப்படி மாற்றிக் கொண்டு வரப்படுகிறது.
இவ்வாறாகக் கதிர்வீச்சு கொண்ட அந்தக் கனிமம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகிறது. துறைமுகத்தில் குவிக்கப்பட்ட அந்தப் பச்சை நிறத் தாது மணல், ஒருமுறை எனக்கு வாந்தி எடுக்கும் உணர்வை ஏற்படுத்தியுள்ளது. கப்பலிலிருந்து இறக்கப்பட்ட அந்தப் பச்சை மணல், ஸ்டெர்லைட் ஆலைக்கு எடுத்து வரப்படுகிறது. அப்படி எடுத்துவரப்படும் தாமிரக் கனிமம் இந்த ஸ்டெர்லைட் ஆலையில் உருக்கப்படும்போது, முப்பது விழுக்காடு மட்டுமே தாமிரம் கிடைக்கிறது. மீதியில் முப்பது விழுக்காடு, இரும்பு உபரிப் பொருளாகக் கிடைக்கிறது. மீதி முப்பது விழுக்காடு கந்தக அமிலம் உபரிப் பொருளாகக் கிடைக்கிறது அல்லது எடுக்கப்படுகிறது. அந்தக் கந்தக அமிலம்தான் இப்போது தேக்கி வைக்கப்பட்ட இடத்திலிருந்து கசிந்துள்ளது. மீதி இருக்கும் பத்து விழுக்காடு, ஆபத்தான பொருள்கள் என்று அழைக்கப்படும் ஆர்சனிக், சிங்க் முதலான மிக ஆபத்தான பொருள்களாகக் கிடைக்கிறது. அதை ஆலை நிர்வாகம் ஆபத்தான பொருள்கள், கழிவுகள் என மதிப்பீடு செய்து அழைக்கிறது.
அந்தக் கழிவுகள், ஸ்டெர்லைட் ஆலை அருகே மலை போலக் குவிக்கப்பட்டுக் கிடக்கின்றன. இருபத்து மூன்று ஆண்டுகளாக இந்தக் கழிவுகள் அங்கேயே கொட்டப்பட்டுக் கிடப்பதை யார் வேண்டுமானாலும் ஆலை அருகே சென்று நேரில் பார்க்கலாம். ஒருமுறை பெரு மழை பொழிந்தபோது இந்தக் கழிவுகளிலிருந்து வெளியேறிய மழைத் தண்ணீர் தெருக்களில் போனதால், அருகே இருக்கும் வீடுகள் ஒவ்வொன்றின் சுவர்களிலும், காவி வண்ணத்தில் தண்ணீர் தேங்கிய அடையாளத்தை இப்போதும் நீங்கள் காணலாம். அந்த அளவுக்கு இந்தக் கழிவுகள் அழிக்க முடியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளன.
கழிவுகளை என்ன செய்வது?
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் கூறுகின்ற கணக்குப்படி, ஓர் ஆண்டில் அது நான்கு லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்கிறது. அதாவது, தாமிரக் கனிமத்தில் முப்பது விழுக்காடு என்பதே அந்த நான்கு லட்சம் டன். அப்படியானால் ஒவ்வோர் ஆண்டும், இன்னொரு முப்பது விழுக்காடாக உள்ள கந்தக அமிலமும் அதே நான்கு லட்சம் டன் உபரிப் பொருளாக உற்பத்தியாகிறது. போதாக்குறைக்கு இரும்பு வேறு நான்கு லட்சம் டன் உபரியாக உற்பத்தியாகிறது. உபரி உற்பத்திப் பொருளான ஆர்சனிக், சிங்க், போன்றவை பத்து விழுக்காடு என்பது நான்கு லட்சத்தில் மூன்றில் ஒரு பங்கு. அதாவது, ஒரு லட்சத்து முப்பதாயிரம் டன் ஒவ்வோர் ஆண்டும் உற்பத்தியாகிறது.
அந்த ஆபத்தான கழிவுகளை இருபத்து மூன்று ஆண்டுகளாகச் சேர்த்துக் குவித்து வைத்துள்ளது ஆலை நிர்வாகம். அப்படியானால், இருபத்து ஒன்பது லட்சத்து தொண்ணூறாயிரம் டன் அளவுக்கு ஆபத்தான கழிவுகள் இருக்க வேண்டும். ஆனால், முதல் ஆண்டுகளில், ஆண்டுக்கு நான்கு லட்சம் டன் ஆண்டு உற்பத்தி நடக்கவில்லை என்பதால் கழிவுகளும் குறைந்திருக்கும். எனவே, கழிவுகள் மொத்தத்தில் இருபத்து நான்கு லட்சம் டன் இருக்கும் என்று உண்மையறியும் குழு மதிப்பீடு செய்கிறது. அந்தக் கழிவுகளை, ஆலை நிர்வாகம், வெளிப்படையாகக் குவித்து வைத்துள்ளது. இது, மாவட்ட ஆட்சித் தலைவர், ஊடகங்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் தெரியும். இது பகிரங்கமாகவே மக்கள் நடமாடும் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளது.
அப்பாவிப் பொதுமக்கள் தவிர வேறு எல்லோருமே ஏதோ ஒரு வகையில் ஆலை நிர்வாகத்துடன் இருபத்து மூன்று ஆண்டுகளாகத் தொடர்பில் இருக்கும் காரணத்தால் இதுவரை இந்தக் கழிவுகளைப் பற்றி யாரும் பெரிதுபடுத்தவில்லை. இப்போதாவது கழிவுகளையும் கசிவுகளையும் பற்றிப் பேசும் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் இந்தக் கழிவுகளை வெளியேற்ற என்ன செய்யப் போகிறார்கள்?
நிலம் திரும்பக் கிடைக்குமா?
இரண்டு நாட்கள் முன்பு மாவட்ட அமைச்சர் கடம்பூர் ராஜு ஓர் அறிவிப்பு வெளியிட்டார். அரசு, விவசாயிகளிடமிருந்து வாங்கி ஆலை விரிவாக்கத்திற்காகக் கொடுக்கப்பட்ட நிலத்தை அரசு திரும்பப் பெற்றுள்ள நிலையில், அந்த நிலம் மீண்டும் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கே கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார். அந்த நிலம் ஏற்கெனவே, ஆலையின் கழிவுகளால், பாதிக்கப்பட்டு, நிலத்தடி நீரும் பாழ் செய்யப்பட நிலையில் அரசே அந்த நிலத்தைப் பண்படுத்தி விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. அப்படிப் பண்படுத்த, ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தால், ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட நூறு கோடி அபராதத் தொகை மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பில் உள்ளதே, அதிலிருந்து எடுத்துச் செலவு செய்யலாம் என்ற ஆலோசனையும் பொதுமக்கள் மத்தியிலிருந்து வந்தது.
இந்த நேரத்தில் நாம் இன்னொரு விவரத்தையும் காண வேண்டும். ஆண்டுக்கு நான்கு லட்சம் டன் உபரி உற்பத்தியாகும் கந்தக அமிலம், இருபத்து மூன்று ஆண்டுகளில், தொண்ணூற்றி இரண்டு லட்சம் டன் என்பதாகச் சேர்ந்துள்ளது. அந்தக் கந்தக அமிலத்தை எங்கே கொண்டு போய்க் கொட்டப் போகிறீர்கள் என்று அரசும் ஆலை நிர்வாகமும் விளக்கம் சொல்ல வேண்டும். இது தவிர, இந்தத் தாமிரக் கனிமத்தை உருக்கும்போது உருவாகும் கழிவுகளைத் தாங்கள் சுத்திகரிப்பு செய்துவைத்திருப்பதாக ஆலை நிர்வாகம் கூறிவருகிறது. அந்தச் சுத்திகரிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட தண்ணீர் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கொண்டுவரப்பட்டது. அது வெளியே வரும்போது நச்சு கலந்த தண்ணீர்தானே. அந்த நச்சுத் தண்ணீரை எங்கே கொட்டினீர்கள்?
அதைக் கடலில் கொட்டவில்லை என்றும் கடலில் கழிவு எதுவும் வெளியேற்றப்படவில்லை என்றும் ஆலை நிர்வாகம் கூறிவருகிறது. அப்படியானால் அதை நிலத்தடி நீரில் கலக்கவிட்டீர்களா? அது அந்த வட்டாரத்திற்கே ஆபத்து இல்லையா? இதற்கும் அரசு தரப்பும், ஆலை நிர்வாகமும் பதில் சொல்ல வேண்டும். குறிப்பாக, அத்தகைய கழிவுநீரில் டி.டி.எஸ். என்ற கரையும் திடப் பொருள் ஒரு லிட்டருக்கு இருநூறு வரை இருக்கலாம். ஆனால், இந்தக் கழுவிய கழிவு கலந்த நீரில் இருபத்தி மூவாயிரம் டி.டி.எஸ். இருக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது. அத்தகைய நச்சுத்தனமான தண்ணீரை இருபத்து மூன்று ஆண்டுகளாக எங்கே கொட்டினீர்கள் என்று கேட்க வேண்டுமா, இல்லையா?
மொத்தத்தில், இத்தனை ஆண்டுகள் ஆண்ட ஆட்சியாளர்கள் எல்லோருமே சேர்ந்து தூத்துக்குடியைப் பாழ்படுத்தியாகிவிட்டது. இப்போது சுத்தம் செய்ய வேண்டும் என்றால், மேற்கண்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில் கூறியே ஆக வேண்டும்.
(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: டி.எஸ்.எஸ்.மணி தமிழின் முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவர். இந்திய அளவில் கவனிக்கத்தக்க பல முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டு அரசியல் நிகழ்வுகளை விவாதித்து வருபவர். தொடர்புக்கு: manitss.mani@gmail.com)

Wednesday, May 16, 2018

இந்திய படைத் தளபதி இலங்கை சென்றது ஏன்?

சிறப்புக் கட்டுரை: இந்திய படைத் தளபதி இலங்கை இலங்கை சென்றது ஏன்?

சிறப்புக் கட்டுரை: இந்திய படைத் தளபதி இலங்கை இலங்கை சென்றது ஏன்?

டி.எஸ்.எஸ்.மணி

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி பிபின் ராவத் முதன்முறையாக மே 13 ஞாயிறன்று மதியம் இலங்கை சென்றார். அவருடன் அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் மேஜர் ஜெனரல் ப்ரீத்தி சிங், பிரிகேடியர் மகேஷ் அகர்வால் ஆகியோர் சென்றனர். கொழும்பில் உள்ள கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இவர்கள் மதியம் சென்று இறங்கினர். மேஜர் அன்ஷுல் அஹலவ, மேஜர் ஜெனரல் அனுரா சுத்தசிங்கே, இந்திய ஹை கமிஷனைச் சேர்ந்த பாதுகாப்பு ஆலோசகர் அசோக் ராவ் ஆகியோர் வரவேற்றனர்.
இலங்கையில் நான்கு நாள்கள் பயணம் செய்ய இருப்பதாக இந்திய ஊடகங்களும், ஏழு நாள்கள் பயணம் செய்ய இருப்பதாக இலங்கை ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயகே கூறியதாக இலங்கை ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாக இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே நல்ல புரிதலையும் ஒத்துழைப்பையும் ஏற்படுத்திக்கொள்வது என்றும், இலங்கை பகுதியில் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ளவே இந்தப் பயணம் என்றும் இந்திய ஊடகங்கள் எழுதியுள்ளன. இந்திய ராணுவக் குழுவினருக்கு விமான நிலையத்திலேயே, சிவப்புக் கம்பள வரவேற்பும் பாரம்பரிய வெஸ் நடன வரவேற்பும் அளிக்கப்பட்டன. ஒரு நாட்டின் அரசியல் தலைமை வரும்போது செய்யப்படுவதுபோல ஏன் இப்படி வரவேற்பு என ஆச்சர்யப்படலாம். பயணத்தின் அரசியல் முக்கியத்துவம்தான் அதற்குக் காரணம்.
என்ன செய்யப் போகிறது இந்தியா?
திங்கட்கிழமை காலையிலேயே, இந்திய ராணுவக் குழுவினர், "இந்திய அமைதிப் படை வீரர்கள், பயங்கரவாதத்தை எதிர்த்து வடக்கு, கிழக்கு மாகாணங்களான தமிழர் பகுதிகளில் போரிட்ட போது இறந்து போனவர்களின் சமாதிகளுக்குச் சென்று மலர் வளையம் வைத்தனர். இறந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு ராணுவ வணக்கம் செலுத்தினர். இந்திய ராணுவக் குழுவினரை, இலங்கை ராணுவத்தின் துணை தளபதி அஜிது கன்யகாரவன வரவேற்றார். பயணத்தில் இலங்கை அதிபரையும் பாதுகாப்பு அமைச்சரையும் பாதுகாப்புச் செயலாளரையும் மூன்று படைகளின் தளபதிகளையும் சந்திப்பார்கள்; அரசியல் மற்றும் ராணுவத் தலைமைகளைச் சந்திப்பார்கள் என்று கூறப்பட்டது. மகேஷ் சேனநாயக்காவுடன் ராணுவச் சேவை வனிதா குழுவின் சந்திரிகா சேனநாயக்காவையும் சந்திப்பார்கள். இலங்கை ராணுவத்தின் சிக்னல் வீரர்களுக்குப் பயிற்சி கொடுக்க கண்டியில் சிக்னல் பள்ளியில் தொடர்பு சோதனைச் சாலையைத் திறந்துவைப்பார்கள். கிழக்கு மாகாணத்தின் திரிகோணமையில் தியதளவாவில் உள்ள ராணுவ அகாடமிக்கும் தென்னிலங்கையின் காலேயில் உள்ள இலங்கை ராணுவ அகாடமிக்கும் அவர்கள் வருகை புரிவர்.
1987இல் ராஜீவ் காந்தியால் அனுப்பப்பட்ட இந்திய அமைதி காக்கும் படை உலக அரங்கில், குறிப்பாகத் தமிழர்கள் மத்தியில், ‘அமைதி கொன்ற படை’ என்று பெயர் வாங்கியது. ஈழ விடுதலைக்காகப் போராடிவந்த தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போரிட்டது. அதில் இறந்துபோன இந்தியப் படை வீரர்களுக்கு இந்திய ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைக்கும் நிகழ்ச்சியையும் இலங்கை அரசு ஏற்பாடு செய்திருந்தது. அதாவது, முப்பதாண்டுகளுக்கு முன்பு நடந்த சண்டையை, வருகிற இந்திய ராணுவ தலைவர்களுக்கு நினைவுபடுத்தியது தமிழர்களுக்கு எதிராக அவர்களது மனப்பான்மையைச் செதுக்கவா என்ற கேள்வியையும் உலகத் தமிழர்கள் கேட்கிறார்கள்.
ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை நடந்து முடிந்த இனவாதப் போரில் கடுமையான இழப்பைச் சந்தித்திருந்தாலும் சிங்களம் நடத்திய போருக்கு இந்திய அரசு சார்பாக, அன்றைய காங்கிரஸ் அரசு பல்வேறு உதவிகளைச் செய்திருந்தாலும், இன்றைய இந்திய அரசிடம் தங்களுக்கு அரசியல் தீர்வு பெற்றுத் தர வேண்டி நிற்கும் நிலையிலேயே அவர்கள் உள்ளனர். அத்தகைய ஓர் எதிர்பார்ப்பை இந்தப் பயணம் கலைத்து விடுமோ என்ற அச்சமே ஈழத் தமிழர்களிடம் இருக்கிறது.
மாறும் கள நிலவரம்
இந்த நேரத்தில், இலங்கைத் தீவில் நடந்துவரும் அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மஹிந்த ராஜபக்சே தலைமையிலான ஆட்சி, சீன ஆதரவு என்ற நிலையை அப்போது எடுத்திருந்தது. அதனாலேயே அமெரிக்க அரசு, ஐநா மனித உரிமைக் கழகத்தில் மஹிந்தா அரசுக்கு எதிராகப் போர்க் குற்ற விசாரணை என்ற தீர்மானத்தை, மூன்றாண்டுகள் கொண்டுவந்தது. அமெரிக்காவின் ஆதரவு பெற்ற ரணில் விக்ரமசிங்கே என்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் மைத்திரி பாலா சிறிசேனா என்ற இலங்கை சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவின் தலைவரும் அமெரிக்கச் சார்பு, மேற்குலகச் சார்பு என்ற நிலையை எடுத்திருந்தனர். ஆனாலும், அவர்களுக்கும் இந்திய அரசின் ஆதரவு தேவைப்பட்டது. அமெரிக்காவும் இலங்கைத் தீவுக்குள் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ள இந்திய அரசின் ஆதரவை வேண்டி நின்றது. ஆட்சி மற்றம் ஏற்பட்டது. மைத்திரிபால சிறிசேனா அதிபராகவும் ரணில் பிரதமராகவும் வந்துவிட்டனர். அதனால் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, ஐநா மனித உரிமைக் கழகத்தில் இலங்கை அரசுக்குச் சார்பாகப் பேச தொடங்கியது.
இந்தச் சூழலில், இலங்கையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், தென்னிலங்கையில் சிங்களர் மத்தியில் மஹிந்த ராஜபக்சே அணியினர் அதிகமாக வெற்றி பெற்றனர். அதனால் அங்குள்ள இலங்கை சுதந்திரக் கட்சியில் சிறிசேனாவுடன் வந்தவர்களில் பலர் மீண்டும் மஹிந்தா பக்கம் சாய தொடங்கினர். பிரதமர் ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மஹிந்தா குழுவினர் கொண்டுவந்தனர். அப்போது, அமைச்சரவையில் இருந்த சிறிசேனா ஆதரவாளர்களான அமைச்சர்கள் சிலர் உட்பட, சிங்களர்கள் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவு அளித்தனர். அந்நேரம், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஈபிஆர்எல்எஃப் ஆகியவை ரணிலுக்கு ஆதரவாக வாக்களித்து ஆட்சியைக் காப்பாற்றினார்கள். எதிர்த்து வாக்களித்த அமைச்சர்கள், ராஜினாமா செய்தனர்.
இப்போது சிறிசேனவுடன் வெளியேறி வந்த இலங்கை சுதந்திரக் கட்சியின் 16 எம்.பிக்கள் மஹிந்தா ஆதரவு நிலைக்குச் சென்றுவிட்டனர். ஆகவே, ரணிலின் ஆட்சி சிக்கலான சூழலைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது.
இந்த நேரம் பார்த்து, இலங்கைத் தீவில் செல்வாக்குப் பெற்றிருக்கும், சீன ஆதரவு நிலையை ரணில் எடுத்துவிட்டதாகக் கேள்விப்படுகிறோம். அதாவது அமெரிக்க ஆதரவு, இந்திய ஆதரவு நிலையிலிருந்து பிரதமர் ரணில் சீன ஆதரவு நிலைக்குத் தாவியிருப்பதாக அறிகிறோம். அது உண்மையோ, பொய்யோ தெரியவில்லை. ஆனாலும், மஹிந்த ராஜபக்சே பக்கத்தில் மாற்றம் வந்துள்ளது உண்மையே. அதாவது, மஹிந்தவின் தம்பியான கோத்தபாய ராஜபக்சே வருகிற தேர்தலுக்கு முன்னிறுத்தப்படுவார் என்றும் அவர் இந்திய அரசு ஆதரவைக் கோருகிறார் என்றும் கேள்விப்படுகிறோம்.
அதே சமயம் கோத்தபாய ராஜபக்சேவுக்கும் அவரது இன்னொரு சகோதரர் பசில் ராஜபக்சேவுக்கும் யார் தலைமை எடுப்பது என்ற போட்டி இருக்கவே செய்கிறது. அவர்கள் இருவருமே இந்திய அரசின் ஆதரவை நாடுவதில் வெற்றி பெற்று வருவதாகவும் தெரிகிறது. இலங்கை ராணுவத்தைப் பொறுத்தவரை, அது அரசியல் சார்பான ராணுவம். இன உணர்வின் மூலம் வளர்க்கப்பட்ட ராணுவம். மஹிந்த ராஜபக்சேவாலும், கோத்தபாய ராஜபக்சேவாலும் வளர்க்கப்பட்ட ராணுவம். இன்னமும் இலங்கை ராணுவத்தில் ராஜபக்சே குடும்பத்தினரின் செல்வாக்கே மிகுந்து நிற்கிறது.
இத்தகைய சூழலில், இந்திய ராணுவத்தின் தலைமை அங்கே சென்று இலங்கை ராணுவத்துடன் இணைந்து பயணிக்க எண்ணுவது, தமிழர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், இன்னமும் உலகத் தமிழர்கள், ஈழத் தமிழர்களது முன்னேற்றத்துக்கு இந்திய அரசையே முக்கியமாக நம்பி நிற்கின்றனர்.
(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: டி.எஸ்.எஸ்.மணி தமிழின் முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவர். இந்திய அளவில் கவனிக்கத்தக்க பல முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டு அரசியல் நிகழ்வுகளை விவாதித்து வருபவர். தொடர்புக்கு: manitss.mani@gmail.com)

Monday, April 30, 2018

இலங்கையில் இன்று மே தினம் இல்லை!

சிறப்புப் பார்வை: இலங்கையில் இன்று மே தினம் இல்லை!

சிறப்புப் பார்வை: இலங்கையில் இன்று மே தினம் இல்லை!

டி.எஸ்.எஸ்.மணி

இலங்கையில், இந்த ஆண்டு மே தினத்தைத் தொழிலாளர்கள் கொண்டாட முடியாதாம். அதை மே ஏழாம் நாளுக்குத் தள்ளி வைத்துக்கொள்ளுங்கள் என்று மைத்ரிபால அரசு அறிவித்துள்ளது. இதுபோல ஏற்கனவே 1980ஆம் ஆண்டும் 1990ஆம் ஆண்டும் மே தினக் கொண்டாட்டத்தை இலங்கை அரசு தடுத்தது. அதை எதிர்த்து, அரசின் தடையை உடைத்து, தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் மே முதல் நாளே மே தினத்தை ஊர்வலங்களுடன் கொண்டாடினார்கள். அதேபோல இந்த ஆண்டு, மைத்ரிபால சிறிசேனா தலைமையிலான கட்சியான இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைமையில் இருந்த தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. அந்தத் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளரான தேவேந்திரா, மைத்ரிபால தலைமையிலான கட்சியிடமிருந்து தனது தொழிற்சங்கத்தை விலக்கிக்கொண்டார். தங்கள் தொழிற்சங்கத்தில் மொத்தம் தொண்ணூறாயிரம் தொழிலாளர்கள் உறுப்பினர்கள் என அறிவித்துள்ளார். அது மட்டுமில்லாமல், "எங்கள் தொழிற்சங்க உறுப்பினர்கள் 90,000 பேரின் குடும்பத்தில் மொத்தம் மூன்று லட்சம் வாக்குகள் இருக்கின்றன” என்றும் மிரட்டியுள்ளார். கண்டிப்பாக தடையை உடைத்து மே தினத்தைக் கொண்டாடுவோம் என்கிறார்.
இலங்கை அரசு எதற்காக மே தினத்தைத் தள்ளிப்போட வேண்டும்?
வெசாக் என்ற பவுத்த பண்டிகை மே முதல் நாள் வருகிறது. அதற்காகவே சர்வதேச தொழிலாளர் தினத்தை மே 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கும் முடிவு. கண்டியில் உள்ள பவுத்த மகா சங்கத்தினரின் கோரிக்கையின் பேரிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மார்ச் 27 அன்று ஜனாதிபதி மைத்ரிபால அறிவித்திருந்தார். வெசாக் தினத்தைக் கொண்டாடும் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா, தாய்லாந்து, திபெத், மியான்மார், கம்போடியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் பவுத்தர்கள் அனைவருமே இம்முறை வெசாக் தினத்தை மே 29இல்தான் கடைப்பிடிக்கின்றன. வெசாக் பண்டிகை பற்றி ஐக்கிய நாடுகள் சபை 50 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டுள்ள பட்டியலிலும்கூட இவ்வருடம் மே 29ஆம் தேதிதான் அப்பண்டிகை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையின் மகா சங்கத்தினருக்கு மாத்திரம் இப்படி விபரீத, விசித்திர எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன என்கிற கேள்வி எழுகின்றது. இதை இலங்கையிலிருந்து வரும் ‘நமது மலையகம்’ ஏடு படம்பிடித்துக் காட்டுகிறது.
அதே சமயம், மே முதல் நாள், முன்னாள் பிரதமர் பிரேமதாசா சுட்டுக் கொல்லப்பட்ட நாள். ஆகவே அந்த நாளில், மே தினம் கொண்டாடப்படுவதை இன்றைய தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கே விரும்பவில்லை என்றும் சொல்லப்படுகிறது. பிரேமதாசாவும் ரணில் விக்ரமசிங்கேயும் ஐக்கிய தேசியக் கட்சியைச் (யுஎன்பி) சேர்ந்தவர்கள். அதனால்தான் அந்தப் பாசம் இருக்குமோ தெரியவில்லை.
இந்த நேரத்தில் சிங்கள மதத்திற்குள் இருக்கும் சாதி வேறுபாடுகள் வெறுப்புகளாக மாறிச் செயல்படுவது, அந்த ஏட்டின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வடமாகாண சபையின் ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடக்கிலிருந்து மாற்றப்பட்டு மத்திய மாகாணத்துக்கான ஆளுநராகத் தேர்வு செய்யப்பட்டு 24 மணி நேரத்திற்குள் மீண்டும் வடகிழக்கு மாகாணத்துக்கு ஆளுநராக குடியரசுத் தலைவர் மைத்ரிபால சிறிசேனாவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் முதல் தடவையாக 24 மணிநேரத்திற்குள் இரண்டு தடவை ஆளுநராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட நபர் ரெஜினோல்ட் குரேவாகத்தான் இருப்பார். இப்படி அவசர அவசரமாக மாற்றப்பட்டதன் பின்புலத்தில் சாதியக் காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
சாதி, பாலினப் பாகுபாடுகள்
ரெஜினோல்ட் குரே இனத்தால் சிங்களவர்தான். ஆனால் மதத்தால் கத்தோலிக்கர், சாதியால் கராவ சாதியைச் சேர்ந்தவர். கராவ என்ற சாதி, சிங்கள மதத்திற்குள் உள்ள, கடற்கரையோரம் வசிக்கும் மீனவர்களைக் குறிக்கும். அதுபோலவே, கரையர் என்ற சாதியாக, வடக்கு மாகாணத்தில் வாழும் கரையோர மீனவர்கள் அழைக்கப்படுகிறார்கள் (அந்தப் பிரிவிலிருந்துதான் ஈழத்து தமிழ்ப் போராளிகள் பலர் வந்துள்ளார்கள்). தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில்கூட, மீனவர்களிடையே அத்தகைய பிரிவு உண்டு.
ரெஜினோல்ட் குரே பவுத்தராக இல்லாமல் கத்தோலிக்கராக இருப்பதுகூட பிரச்சினை இல்லை. அவர் உயர் சாதியான கொவிகம சாதியில்லை என்பதே பிரச்சினை.
இதேபோல, பாலினப் பாகுபாடும் அங்கே பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மத்திய மாகாண முதல்வராக 17.03.2016 அன்று நிலூகா ஏக்கநாயக நியமிக்கப்பட்டபோதும் கண்டி மகா சங்கத்தின் அஸ்கிரிய தரப்பு தமது கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது. அதற்கான காரணம் அவர் ஒரு திருநங்கை என்பதுதான் (இலங்கையில் ஒரு திருநங்கை முதற்தடவையாக அரசியல் அதிகாரத்துக்குத் தேர்வான சந்தர்ப்பம் அதுதான்). நிலூகா ஏக்கநாயக கலந்துகொள்ளும் முக்கிய அரச நிகழ்வுகளில் தாமும் கலந்துகொள்ள முடியாது என்றும் வேறொருவரை அந்த இடத்துக்கு மாற்றும்படியும் அதிபர் மைத்ரியிடம் தெரிவிக்கும்படி அமைச்சர்களான எஸ்.பீ.திசநாயக, மகிந்த அமரவீர ஆகியோர் ஆசி வாங்க வந்த வேளையில் மகா சங்கத்தினர் கோரியிருந்தார்கள். ஆனாலும் அந்த சர்ச்சை நீடித்துக்கொண்டிருந்தது.
இந்த இரண்டு வருடங்களுக்குப் பின்னர் அவருக்கு பதிலாகத் தேர்வானவர்தான் ரெஜினோல்ட் குரே. ஆனால் அதே மகா சங்கத்தினர் இப்போது ரெஜினோல்ட் குரே சிங்களவராக இருக்கலாம்; ஆனால் அவர் பவுத்தரும் இல்லை, கொவிகம சாதியைச் சேர்ந்தவராகவும் இல்லை என்கின்றனர் இந்த மகாநாயகவினர்.
வரலாற்றுப் பின்னணி
இலங்கையின் மத்திய மாகாணமானது கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது. மத்திய மாகாணத்தின் தலைநகராகக் கொள்ளப்படுவது கண்டி மாவட்டம். கண்டி மாவட்டம் இலங்கையின் சிங்கள பவுத்த மரபின் முக்கிய அடையாளமாகக் கருதப்படுகிறது. சிங்களச் சாதியமைப்பின் வீரியமாக இன்னமும் எச்சம் கொண்டுள்ள மாவட்டம் அது. மூன்று நூற்றாண்டுகளாக காலனித்துவத்திடம் பிடிகொடுக்காமல் தாக்குப்பிடித்து இறுதியாக வீழ்ந்த பிரதேசம் அது. ஆகவே அந்த மூன்று நூற்றாண்டுகளும் இலங்கையின் பாரம்பரிய மரபை இழக்காமல் தற்காத்த பின்னணி அதற்குண்டு. இலங்கையின் சுதேசியக் கொடி கடைசியாக காலனித்துவத்தால் இறக்கப்பட்ட இடம் கண்டி. அந்தப் பெருமையை அவர்கள் பேசிப் பேசி, தங்களது மக்கள் மத்தியில் இன்னமும் சாதியத்தை உயர்த்திப் பிடித்துவருகிறார்கள்.
இலங்கையின் பாரம்பரிய மரபு எனும்போது அது சாதியத்தையும் உள்ளடக்கியதுதான். சிங்களச் சாதியமைப்பில் கண்டிய கொவிகம சாதியத்துக்கு இருக்கின்ற பலமும் பெருமிதமும் அதுதான். அது மட்டுமன்றி புத்தரின் புனிதப் பல்லைத் தற்காத்துவைத்திருக்கும் தலதா மாளிகையும், பவுத்த மத மகா சங்க தலைமைப் பீடங்களையும் கொண்டுள்ள மாவட்டமும் கண்டிதான். ஆக, கண்டியை புனித நகராக அங்கீகரிக்கும்படி 1988ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் முன்வைத்த கோரிக்கையை 1989ஆம் ஆண்டு அங்கீகரித்த யுனெஸ்கோ நிறுவனம் பாரீசில் நடந்த மாநாட்டில் கண்டியைப் புனித நகராக ஏற்றுக்கொண்டது. இந்தப் பின்னணி கண்டியின் மரபுரிமைக்கு மேலும் பலம் சேர்த்தது.
திரைமறைவு அதிகாரிகள்
இலங்கையின் மறைமுக சிங்கள பவுத்த ஆட்சியமைப்பு முறையைப் பேணிக் காப்பதை உறுதிபடுத்தும் பலமான அங்கமாக கண்டி திகழ்ந்துவருகிறது. சிங்கள ஆட்சியாளர்கள் பதவியேற்பதற்கு அங்கே செல்வதை மரபாகக் கொண்டுள்ளனர். கண்டிய அரசர்கள் மக்கள் முன் தோன்றிப் பேசும் தலதா மாளிகையின் பத்திருப்பு பகுதியில் இன்றைய நவீன ஆட்சியாளர்களும் பதவியேற்பு செய்வதை சிங்கள பவுத்தப் பெருமிதமாகக் கொண்டுள்ளனர். இங்கே இந்தியாவில், யார் குடியரசுத் தலைவராக வந்தாலும், யார் தலைமை அமைச்சராக வந்தாலும், கட்சி வேறுபாடு இல்லாமல் காஞ்சி மடத்திற்குச் சென்று ஆசி வாங்கி வந்தார்கள் அல்லவா, அதுபோல அங்கும் நடந்துவருகிறது.
பதவிகளை ஏற்கும்போதும், முக்கிய அரசியல் நிகழ்வுகளின்போதும் கண்டியிலுள்ள பவுத்த மகா பீடத்தினரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெறுவதையும், ஆலோசனைகளைப் பெறுவதையும் மரபாக இப்போது ஆக்கியுள்ளனர். அது மட்டுமன்றி முக்கிய அரசியல் சிக்கல்களின்போது ஆளுங்கட்சியும் எதிர்கட்சிகளும் ஆதரவு தேடுவதற்கு அங்கே செல்லுமளவுக்கு இலங்கையின் பலம் பொருந்திய திரைமறைவு அதிகாரிகளாக கண்டி மகா சங்கத்தவர்கள் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அரசியல் நிலைமைகள் குறித்து கருத்து கூறுவதையும் கட்டளையிடுவதையும் எச்சரிக்கையிடுவதையும் நாம் கண்டுவருகிறோம்.
1957ஆம் ஆண்டு பண்டா - செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து ஜே.ஆர். தலைமையில் திரண்ட கண்டி பாதயாத்திரை வரலாறு மறக்காது. அதேபாணியில் நல்லாட்சி அரசாங்கம் என்று தங்களைத் தாங்களே அழைத்துக்கொள்ளும், மைத்ரிபால சிறிசேனா அரசாங்கத்தை எதிர்த்து 2016இல் மேற்கொண்ட பாதயாத்திரையும் கண்டி பாதயாத்திரைதான். பொதுபல சேனா, இராவணா பலய, சிங்களே அமைப்பு போன்றவையும் அவ்வப்போது நடத்தும் ஊர்வலம், பாதயாத்திரை என்பன கண்டிக்குச் செல்லும் அல்லது கண்டியிலிருந்து ஆரம்பிக்கும். மேற்கண்ட அமைப்புகள் இந்தியாவில் உள்ள பஜ்ரங் தள், ராமர் சேனா போன்ற வன்முறைகளைப் பயன்படுத்தும் அமைப்புகள்.
இனவாத சக்திகள் தமது கடும்போக்கு நடவடிக்கைகளையும் ஆர்ப்பாட்டங்களையும் வன்முறைகளையும் பிரயோகிப்பதற்கு பவுத்த சீருடை தரித்தவர்களை முன்னிறுத்தித்தான் காரியம் சாதித்துவருகின்றன. அப்படியான சந்தர்ப்பங்களில் நீதியை நிலைநாட்ட வேண்டிய போலீசாரும் அடிபணிந்து பின்வாங்குவதும், கெஞ்சி சமரசம் பேசுவதும் தினமும் நடந்துவரும் நிகழ்வுகள்.
இலங்கையின் நிழல் அரசு
அது மட்டுமன்றி இலங்கையில் சமாதான முயற்சியின்போது நார்வே தூதுவர்களும் ஏனைய இணை அனுசரணை நாட்டுப் பிரதிநிதிகளும் பல தடவை உத்தேச சமாதான யோசனைகளை எடுத்துக்கொண்டுபோய் கண்டி மகா சங்கத்தினரைச் சந்தித்து அவர்களிடம் அரசியல் விளக்கம் அளித்தனர். அவர்களின் ஆதரவைக் கோரி பகீரதப் பிரயத்தனம் கொண்டனர். ஏறத்தாழ இலங்கையின் நிழல் அரசாகவே இந்த மகா சங்கத்தினர் இருந்துவருவதை இப்படி தொகுத்துப் பார்த்தால்தான் விளங்கிக்கொள்ள முடியும்.
பவுத்த சங்கங்களின் ஆசீர்வாதமும் அனுமதியுமின்றி எதையும் நிறைவேற்ற முடியாத அளவுக்கு அரச அமைப்புமுறை கட்டமைக்கப்பட்டிருக்கிறது. கண்டியிலுள்ள ராமக்ஞ நிக்காய, அமரபுர நிக்காய ஆகியவை சாதிய ரீதியில் பிளவுண்டிருந்தாலும் அங்கே வெளிப்படையான நடைமுறை கிடையாது. அனால் இன்னொரு பிரிவான சீயம் நிக்காய வெளிப்படையாக சாதியத்தைக் கைகொள்கிறது. பவுத்த பிக்குவாக மாற விரும்புபவர்கள் அல்லது மாற்றப்படும் சிறுவர்கள் உயர் சாதி கொவிகம குலத்தைச் சேராதவருக்கு பவுத்த தீட்சை வழங்குவதில்லை. அதாவது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு பவுத்த பிக்குவாக தமது நிக்காயவுக்குள் உள்வாங்குவதில்லை. ஆனால் சீயம் நிக்காய போன்றவை உயர்சாதியற்ற பெரும் பணக்காரர்கள் வழங்கும் உதவிகளையும் வசதிகளையும் அனுபவிக்கவே செய்கின்றன.
இன்னமும் இலங்கையின் அச்சு ஊடகங்களில் பவுத்த பிக்குவாக ஆவதற்கு கொவிகம சாதியைச் சேர்ந்தவர்கள் தேவை என்கிற விளம்பரங்கள் வெளிவரவே செய்கின்றன.
கண்டிக்கு ஒரு சிங்கள – பவுத்த – கொவிகம – ஆண்/ பெண் (மூன்றாம் பாலினம் அல்லாத) பின்னணியைக் கொண்ட ஒருவர்தான் ஆளுநராக ஆக வேண்டும் என்கிற கோரிக்கையை நிறைவேற்றுபவர்களால் ஏன் இன்னமும் வடக்குக்கு அல்லது கிழக்குக்கு ஆளுநராக ஒரு தமிழரைத் தேர்வு செய்ய முடியாது இருக்கிறது என்ற கேள்வியையும் அந்த ’நமது மலையகம்’ எனும் ஊடகம் கேட்கிறது.
(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: டி.எஸ்.எஸ்.மணி தமிழின் முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவர். இந்திய அளவில் கவனிக்கத்தக்க பல முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டு அரசியல் நிகழ்வுகளை விவாதித்து வருபவர். தொடர்புக்கு: manitss.mani@gmail.com)

Friday, April 13, 2018

ஒரே கல்லில் ஐந்து மாங்காய்கள் அடித்தாரா எடப்பாடி?

ஒரே கல்லில் ஐந்து மாங்காய்கள் அடித்தாரா எடப்பாடி?
--------------------------------------------------------------------------------------------
       காவேரி ஆணையம் அமைக்க என்னதான் நடுவண் அரசு , மழுப்பி வந்தாலும், தள்ளிப் போட்டாலும், எடப்பாடி அரசுக்கு அது ஒரு பெரிய நெருக்கடிதான். நடுவண் அரசை  " பகைக்காமலே, எதிர்க்கும்" புதிய அரசியலை "திட்டமிட்டோ, திட்டமிடாமலோ" நடத்தி  வருகிறது  எடப்பாடி அரசு.  அவ்வப்போது, துணை சபா மட்டும், நடுவனை எதிர்த்து பேசுவார்.
 எல்லாவற்றிக்கும் மேலாக, தமிழக அரசு, நடுவண் அரசை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் போட்ட " நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்" சேர்க்கப்பட்ட வார்த்தைகளை, "பொருள் புரிந்து சேர்ந்தார்களா?" என்ற கேள்வி வேறு இருக்கிறது. { Willfully Disobeyed } "திட்டமிட்டு நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை", என்பதாக எழுதியிருந்தார்கள். அதை யாரும் பெரிதாக விவாதிக்க வில்லை. ஆனால், இப்போது, உச்சநீதிமன்ற "கெடுவை" ஏற்றுக் கொண்டார்கள். 

                தமிழ்நாட்டு அரசியலில், ரஜினி காந்தின் பிரபல அரசியல் எதிர்ப்பு, கமலின் விமர்சனம், தி.மு.க.வின் தோழமைக்கு கட்சிகளுடன் நடைப் பயணம் செய்யும்  எதிர்ப்பு அரசியல், தினகரனின் ஊர், ஊராக செல்லும் ஆர்ப்பாட்டம், இந்த நான்கு வகைகளையும் எடப்பாடி அரசு எதிர்த்து வெல்ல வேண்டும். என்ன செய்ய? ஐ.பி.எல். மட்டைப் பந்து ஆட்டம் இந்த நேரத்தில் எதற்காக, என்ற கேள்வி தமிழ்நாட்டு மக்களிடையே, பிரபலமானது. இந்த நேரத்தில், திமுக தலைமையிலான, "மீட்பு பயணம்" தினசரி ஊடகங்களில் வரும் அளவுக்கு, தோழமைக் கட்சித் தலைவர்களுடன், திமுக செயல் தலைவர் நடக்கிறார். இந்த நேரத்தில், " தென்னிந்திய நடிகர் சங்கம்" ஏற்பாடு செய்த " மௌன ஆர்ப்பாட்டம்"  ஊடகங்களில், "முதலிடத்தை" பிடித்தது. அதிலும், ரஜினியும், கமலும் அமர்ந்து கொண்டு "விளம்பரம்" கிடைக்கப் பெற்றார்கள். யார்,யார்  காவேரி ஆணையத்திற்காக, "உரத்து" கத்துகிறோம் என்ற "போட்டியில்" ஒவ்வொருவரும், ஒவ்வொரு வகையான வடிவத்தை எடுக்கிறார்கள். 

                   ரஜினியையோ, கமலையோ, தென்னிநிதிய  நடிகர் சங்கத்தையோ, " ஏற்றுக் கொள்ளாத"  இயக்குனர் திலகம் பாரதிராஜா,, வி.சேகர், தங்கர் பச்சன், அமீர், வெற்றி மாறன், கௌதமன், ஆகியோர், தங்கள் பங்குக்கு, " தமிழர் காலை, இலக்கிய, பண்பாட்டு பேரவை" எனது தொடக்கி  இறங்கி விட்டனர்.  அதே  கருத்துக்கள் கொண்ட சீமானும்  இணைந்து கொண்டார். மேற்கணட யாருமே, திமுக தலைமையையோ, தினகரன் தலைமையையோ, ஏற்றுக் கொள்ளாதவர்கள். இதே  "நிலைப்பாட்டில் " தான் எடப்பாடி அரசும் இருக்கிறது. இந்த நேரத்தில்தான், முதல்வர் எடப்பாடியை, "பாரதிராஜா, சேகர், தங்கர் பச்சன், அமீர்" ஆகியோர் சந்தித்து, பொன்னாடை போர்த்திய படம் வெளிவந்தது. ஐ.பி.எல்.மட்டைப் பந்து ஆட்டத்தை, நிறுத்துங்கள் என்பதே அவர்கள், முதல்வரிடம் வைத்த கோரிக்கை. 

                    அதன்படியே, பாரதிராஜா தலைமையிலான, ஊடகவியலாளர் கூட்டம், பிரபலமானதால், ஊடக முதன்மை பெற்று விட்டது. அதுவே, " திமுகவின் நடைப் பயணம், தினகரனின் ஆர்ப்பாட்டம், ரஜினி, கமல் ஆகியோரின் அறிவிப்புகள்" ஆகியவற்றை விட, "ஊடக முதன்மை" பெற்று விட்டது. அதேபோல, ஏப்ரல் 10  இன்  "சேப்பாக்கம் ஐ.பி.எல். ஆட்டத்திற்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திலும், பாரதிராஜா தலைமையிலான செயல்பாடுகளே" ஊடக முதன்மை பெற்றது. ஏற்கனவே, நடுவண் அரசுக்கும், பி.சி.சி.ஐ. க்கும், எடப்பாடி அரசின் , அமைச்சர் ஜெயக்குமார் மூலம், ஊடக நேர்காணல்களில், " ஐ.பி.எல். போட்டியை சென்னையில் நடத்தாமல்  இருங்கள். நடத்தினால், நாங்கள் பாதுகாப்பு கொடுப்போம்" என்றே கூறிவந்தனர். அவ்வாறு கூறிக் கொண்டே,, பாரதிராஜா தலைமையிலான எதிர்ப்பிற்கு, "காவல் அனுமதியும்" கொடுத்தனர். அதை ஊடகங்களிடம், பாரதிராஜாவே கூறினார். " நாங்கள் அனுமதி பெற்றுத் தான் அறவழியில் போராடுகிறோம்" என்கிறார். அதேபோல, "ஐந்து மணிக்கு தொடக்கி,  ஆறரை மணிவரை ஆர்ப்பாட்டத்தை அனுமதித்து, ஊடக விளம்பரத்திற்கு " உதவுவதாகவே, அரசின் செயல்பாடும் இருந்தது. ஆறரை மணிக்கு ஆர்ப்பாட்டம் செய்தவர்களைக் கைது செய்து விட்டு, " ரசிகர்களை உள்ளே விட்டு ஆட்டத்தை நடத்திக் காட்டியது" காவல்துறை. அத்பவது. எடப்பாடி அரசு, " தொட்டிலையும் ஆட்டிவிட்டு, பிள்ளையையும் கிள்ளி விட்டதா" எனக் கேட்காதீர்கள். இப்போது, ஆர்ப்பாட்டத்தைக் கரணம் காட்டி, தமிழக அரசு, " இனி பாதுகாப்பு கொடுக்க முடியாது" என்று கூறிவிட்டதால், "ஐ.பி.எல். ஆட்டம்" மாற்றப்பட்டது என்ற செய்தி வருகிறது. இது, ஒருபுறம், "தமிழர்களின் எதிர்ப்புக்கு கிடைத்த வெற்றி" என்பது உண்மைதான். ஆனால், இதில், இதனை "அரசியல் விளையாட்டு" மறைந்து கிடக்கிறது எனபதும் உண்மைதானே.  

              எது எப்படியோ, " ஒரே கல்லில், ஐந்து மாங்காய்களை, எடப்பாடி பறித்து விட்டாரோ".                

Monday, March 26, 2018

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டமும் படிப்பினைகளும்!

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டமும் படிப்பினைகளும்!

ஸ்டெர்லைட்  எதிர்ப்புப் போராட்டமும் படிப்பினைகளும்!

டி.எஸ்.எஸ்.மணி

24 -03 -2018 சனிக்கிழமை தூத்துக்குடி நகரமே இதுவரை கண்டிராத மக்கள் எழுச்சியைச் சந்தித்தது. தூத்துக்குடி நகரம், ஸ்ரீவைகுண்டம் நகரம், புதியமுத்தூர் நகரம், தருவைகுளம் என எல்லா இடத்திலேயும் கடைகள் அடைக்கப்பட்டன. கடையடைப்பு என்றே அறிவிக்கப்பட்டது. ‘ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடு’ என்ற முழக்கத்துடன் கடையடைப்பு செய்யப்பட்டது.
பந்த் என்று முதலில் பேசினார்கள். கேரள உயர் நீதிமன்றம் ஒரு முறையும், உச்ச நீதிமன்றம் ஒரு முறையும், "பந்த் என்றால் சட்டவிரோதம்" என அறிவித்துள்ளன. ஆகவே கடையடைப்பு என்ற சொல்லையே பயன்படுத்தலாம் என்று போராட்டக் கமிட்டி தீர்மானித்தது. போராட்டக் கமிட்டி கேட்ட நாளில் காவல் துறை பேரணிக்கு அனுமதி தர மறுத்துவிட்டது. நீதிமன்றம் சென்ற போராட்டக் கமிட்டி மார்ச் 24இல் பேரணி, பொதுக்கூட்டம் என்ற அனுமதியைத் தருமாறு, உத்தரவைப் பெற்றுவந்தது. ஆனாலும் மாவட்டக் காவல் துறை பேரணிக்கு அனுமதி தரவில்லை. "ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக் கூட்டமைப்பு" என்ற பெயரில், ஒருங்கிணைப்புப் பணிகளை எல்லாச் சமூக அமைப்பினரும் செய்தனர்.
இந்த முறை, வணிகர் சங்கம் முன்கை எடுத்து வேலைகளைச் செய்தது. முதலில், 1994இல் ஸ்டெர்லைட் எதிர்ப்பு நடந்தபோதும், 1996ஆம் ஆண்டிலும் வணிகர் சங்கம் இந்த அளவுக்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பில் ஈடுபடவில்லையே, இப்போது எப்படி என்று வணிகர் சங்கத்தினரிடம் கேட்கப்பட்டது.
“ஆமாம், நாங்கள் அப்போது இறங்கவில்லை. அதன் ஆபத்தை உணர்ந்திருக்கவில்லை. இப்போது போதும் போதும் என்ற அளவுக்கு ஸ்டெர்லைட் புகையாலும் அதன் மாசுகளாலும், தண்ணீரைக் கெடுத்த நிலையைப் பார்த்துவிட்டு, இனியும் ஸ்டெர்லைட் வேண்டாம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம். அதனால்தான், ஒவ்வொரு கடையிலும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மனுக்களில் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கினோம். ஒவ்வொரு கடையிலும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு வாசகங்கள் கொண்ட அட்டைகளை வைத்திருந்தோம். கீழே இறங்கி மக்களை சந்தித்தோம். கடைசியாக, கடையடைப்பையும் வெற்றிகரமாகச் செய்து முடித்தோம்" என்கிறார் வணிகர் சங்க ராஜா.
குமாரரெட்டியாபுரத்தில் மக்கள் போராட்டம் தொடங்கியபோது, எதிரே எம்ஜிஆர் பூங்காவில் மக்கள் அமர்ந்து அற வழியில் போராடும்போது. எட்டுப் பேரைக் கைதுசெய்தார்கள். ஆனாலும் அந்தக் கிராம மக்கள், தங்கள் நிலத்தில் சிப்காட் நுழைந்து, நாசகார ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு நிலம் கொடுப்பதா எனப் பொங்கி எழுந்து போராட்டத்தை இன்றும் தொடர்கிறார்கள். பெண்கள் ஒவ்வொரு இடமாகச் சென்று, போராட்ட நாளான மார்ச் 24 அன்று வாருங்கள் என அணிதிரட்டியபடி இருந்தனர். காவல் துறை கைதுகள் நடத்தும் பாணியைப் பார்த்த சிலர், இனியும் நாம் அரசியல் கட்சிகள் இல்லாமல் போராட முடியாது என்று கருத்து தெரிவித்தனர். ஆனால் அரசியல் கட்சிகள் இல்லாமல்தான், 2017 தொடக்கத்தில், ஜல்லிக்கட்டு அறப் போருக்கு மாநிலம் தழுவிய அளவில் இளைஞர்களும் மாணவர்களும் பொதுமக்களும் தாய்மார்களும் திரண்டார்கள் என்ற செய்தி நினைவுபடுத்தப்பட்டது.
ஏற்கனவே 1996இல் அரசியல் கட்சிகள் இறங்கின. ஆனால் அதில் நிறைய சச்சரவுகள் பேசப்பட்டன. பிறகு கட்சிகள் தொடர்ந்து போராட முடியவில்லை. ஆகவே போராட்டம் வெற்றிகரமாக நடக்கவில்லை. அதை உணர்ந்தாவது, இனி கட்சிகளை இழுக்காமல், கட்சி சார்பற்ற மக்களை அணிதிரட்டிப் போராட்டத்தைத் தொடரலாம் என முடிவு செய்தார்கள். அதையொட்டியே வணிகர் சங்கத்தின் முன்முயற்சியையும் அங்கீகரித்து வணிகர் சங்கத் தலைவரையும் கட்சி சார்பற்ற அரசியல் என்ற பார்வையில் அழைத்தனர். அதுவே போராட்டத்தின் வெற்றிக்கும் காரணமாக அமைந்தது.
போராட்டத்தின் மலைக்கவைக்கும் வலிமை
சாதாரணமாக, ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் அணிதிரண்டதாக கட்சிகளின் வட்டாரங்களே கூறின. குடும்பம் குடும்பமாக மக்கள் பங்கெடுத்தனர். மாணவ, மாணவிகள் தாங்களாகவே பதாகைகளை எடுத்து வந்தனர். “குச்சி மிட்டாயும் கிலுகிலுப்பையும் இல்லாத திருவிழா போல” இருந்தது என்கிறார் ஒரு செயற்பாட்டாளர். பொதுமக்கள் ஆங்காங்கே தண்ணீர் கொடுத்தனர். அரசியல் கட்சித் தலைவர்கள் யாருமே மேடையில் ஏறவில்லை. பல கட்சிகளின் தொண்டர்கள் தாங்களாகவே, கொடியும் கட்சிப் பெயரும் இல்லாமலேயே கலந்துகொண்டனர். நாட்டுப் படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. சர்வ மதத் திருவிழா என அழைக்கலாம் போல இருந்தது என்றார் ஒரு செயற்பாட்டாளர். பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் பலரும் கருப்பு உடையில் காட்சியளித்தனர். சிறு குழந்தைகள்கூட முழக்கம் போட்டனர். போராட்டத்தைத் துவக்கிய கிராம மக்கள் மேடையில் அமர வைக்கப்பட்டனர்.
இந்த எழுச்சி, வரலாற்றுச் சாதனை. இதுவரை தூத்துக்குடி காணாத அணிதிரளல். ஒட்டுமொத்த தூத்துக்குடியும் சுற்றுப்புறமும் இயல்பாகவே ஒற்றைக் கோரிக்கைக்கு அணிதிரண்ட சாதனை. கட்சி சார்பற்ற மக்கள் எழுச்சி என்றால் இதுதான். அரசியல் கட்சிகள் பின்னால் மக்கள் இருப்பதைவிட, கட்சி சார்பற்ற அரசியலுக்குப் பின்னால்தான் மக்கள் நிற்கிறார்கள் என்பதற்கான அங்கீகாரம். இதுதான் வெற்றிக்கான அரசியல். இதுதான் மக்கள் விரும்பும் அரசியல். இதற்குப் பெயர்தான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அரசியல். ஆள்வோர் முயற்சி எடுத்தது, சுற்றுச்சூழலை அழிக்கும் அரசியல். இரண்டு வித அரசியலுக்கு மத்தியில் உள்ள போராட்டமே மக்கள் போர். அதில் கட்சி அரசியலுக்கு இடமில்லை. அதன் தொடக்க அறுதியிடலே, 2017 ஜனவரியின் ஜல்லிக்கட்டு எழுச்சி. அதன் தொடர்ச்சியே நெடுவாசல், கதிராமங்கலம். அதன் தொடர்ச்சியே ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் எழுச்சி.
இது, தேர்தல் அரசியலில் உள்ள ஊழல், மதவாதம், மதச்சார்பு, சாதிவாதம் எல்லாவற்றையும் தாண்டி, தூத்துக்குடியைப் பாதுகாக்க ஒட்டுமொத்த மக்களையும் ஒன்றுசேர்த்த நிகழ்ச்சி. நிகழ்ச்சிக்குச் சம்பந்தமில்லாமல், தங்கள் சொந்தக் கொள்கைகளை மேடையில் திணிக்க முயற்சி எடுத்தால், மக்கள் மத்தியிலிருந்து எதிர்ப்பு வரும் என்பதற்கான முன்னுதாரண நிகழ்வும் நடந்தது. ஒருவர் தனது கருத்தியல் பார்வையை மதவெறி எதிர்ப்பு என்ற பெயரில் பேச, அதற்கு எதிர்ப்பு வர, பிறகு சம்பந்தப்பட்டவர் உட்பட அது தவறு என்று உணர்ந்து திருத்திக்கொள்ள என ஒரு பாடமாகவே நிகழ்வு நகர்ந்தது. இது கருத்தியல் பரப்புரைக்கான களம் அல்ல.வாழ்வாதாரப் பிரச்சினைக்காக அனைத்துக் கருதியல்காரர்களும் ஒன்றுசேர்ந்து வந்திருக்கும் இடம் எனபதை உணர முடிந்தது. நாம் என்ன கொள்கையை விரும்புகிறோம் என்பதைத் தாண்டி, வேறுபட்ட கொள்கை உள்ளவர்களும் அணிதிரளும் மானுட எழுச்சியின் அடையாளம் இந்தப் பொதுக்கூட்டம். கட்சி சார்பற்ற, மதம், சாதி, கருத்தியல் சார்பற்ற மக்கள் விரும்பும் உடனடி, ஒற்றைக் கோரிக்கைகளைக் கையில் எடுப்பதே வெற்றிக்கு வழி வகுக்கும் என்பது உண்மையாகியுள்ளது. மாற்று உலகம் சாத்தியமே என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

Tuesday, March 20, 2018

சேது கால்வாய் - எங்கே தோண்டினாலும் ஆபத்தா?

சிறப்புக் கட்டுரை: சேது கால்வாய் - எங்கே தோண்டினாலும் ஆபத்தா?

சிறப்புக் கட்டுரை: சேது கால்வாய் - எங்கே தோண்டினாலும் ஆபத்தா?

டி.எஸ்.எஸ்.மணி

சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் ராமர் பாலத்தை உடைக்காமல் கட்டப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் நடுவண் அரசு எழுத்துபூர்வமாகத் தெரிவித்த காரணத்தால், சுப்பிரமணிய சுவாமி, சேது கால்வாய் திட்டத்தை எதிர்க்கும் தனது வழக்கைத் திரும்பப் பெற்றுள்ளார். அதாவது, சேது கால்வாய் திட்டத்தை, நமது சுற்றுச்சூழல்வாதிகளும், மீனவ இயக்கங்களும் கூறுவதுபோல, மீனவர் வாழ்நிலையை அழித்துவிடும் என்பதற்காகவோ, சுற்றுச்சூழலைக் கெடுத்துவிடும் என்பதற்காகவோ, பாஜகவோ சு.சுவாமியோ எதிர்க்கவில்லை. மாறாக, ராமர் பாலம் என்று அவர்கள் அழைக்கின்ற ஆதம் பாலம் வழியாக அந்தத் திட்டம் தோண்டப்படும் என்பதற்காகவே எதிர்க்கிறார்கள். ராமர் பாலம் என்பது புராணச் சின்னம். ஆகவே, அதை உடைக்க அனுமதிக்க மாட்டோம். ஆகவே, வேறு பாதை மூலம் அதே சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்பதுதான் இன்றுள்ள நடுவண் அரசில் ஆட்சி நடத்தும் பாஜக சொல்கிறது.
இன்று மட்டுமல்ல; என்றுமே அது இப்படித்தான் வாதம் செய்துவருகிறது. ஆனால், சேது கால்வாய்த் திட்டம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் போடப்பட்டபோதிலிருந்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துச் சூழல்வாதிகளும் மனித உரிமையாளர்களும் மீனவர் சங்கங்களும் அந்தத் திட்டத்தை முழுமையாக எதிர்த்துவருகின்றனர். அந்தத் திட்டம் மன்னார் வளைகுடாவின் சுற்றுச்சூழலை உடைத்துவிடும் என்றும் ஐந்து லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கெடுத்துவிடும் என்றும் அவர்கள் பல்வேறு ஆவணங்களுடன் எதிர்த்துப் போராடிவருகின்றனர்.
சேது கால்வாய்த் திட்டம் தமிழ்நாட்டைப் பொன் விளையும் பூமியாக்கிவிடும் என்ற நம்பிக்கையில் அண்ணா காலத்திலிருந்து திமுகவும், எம்ஜிஆர் காலத்தில் அதிமுக, மதிமுக மற்றும் பல்வேறு தமிழர் அமைப்புகளும் கூறிவந்தன. ஆங்கிலேயன் அக்காலத்திலிருந்து பலமுறை சேது கால்வாய் திட்டம் பற்றிய ஆய்வுகளை, இந்திய ரயில்வேயும் மற்றும் சில நடுவண் அரசின் நிறுவனங்களும் கணித்துப் பார்த்தன. ஆனால், அவற்றில் எல்லாம் அது சாத்தியப்படும் என்ற விடை கிடைக்கவில்லை. ஆகவே, அது தொடங்கப்படவில்லை. ஆனால், திமுக நடுவண் அரசில் காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூவில் இருக்கும்போது, அமைச்சர் டி.ஆர்.பாலு கைகளில் கப்பல் துறை இருக்கும்போது, அவரால் வலியுறுத்தப்பட்டு அந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது ஆ.ராஜா நடுவண் அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தார். நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி இல்லாமல் திட்டம் தொடங்கப்பட முடியாது.
மன்னார் வளைகுடாவின் முக்கியத்துவம்
அன்றைய நிலையில், அனைத்து நாட்டு பசுமை அமைதி இயக்க அறிவியலாளர்களின் ஆவணங்களையும் சென்னைப் பல்கலைக்கழக மானுடவியல் துறைத் தலைவர் பேராசிரியர் சுதர்ஷன், பேராசிரியர் சுமதி ஆகியோரின் ஆய்வு ஆவணத்தையும் அடிப்படையாகக் கொண்டு, சுற்றுச்சூழல்வாதிகள் அந்தத் திட்டத்தை எதிர்த்தனர். அந்த ஆவணங்களில், மன்னார் வளைகுடா ஒரு பயோ ஸ்பியர் ரிசர்வ் பகுதி என்று ஐநாவின் யுனெஸ்கோ மூலம் அங்கீகரிக்கப்பட்டு, அதைப் பாதுகாக்க யுஎன்டிபி என்ற ஐநா வளர்ச்சித் திட்டம் பல கோடிகளைச் செலவழிக்கிறது. சேது கால்வாய் திட்டம் வந்தால் அந்த பயோ ஸ்பியர் ரிசர்வ் அழிந்துவிடும் என்றார்கள். அதுபோலவே, அரிதான விலங்குகளான கடல் குதிரைகள் ஆறு மாதங்கள் ஆதம் பாலத்திற்கு ஒருபுறமும் அடுத்த ஆறு மாதங்கள் வெப்பம் காரணமாக மறுபுறமும் சென்று உயிர் வாழும். அவை அழிந்துவிடும் என்றார்கள். அதுமட்டுமல்ல, தூத்துக்குடிக்கும் ராமேஸ்வரத்துக்கும் மத்தியில் உள்ள 21 தீவுகளில் பவளப் பாறைகள் உள்ளன என்றும் அவை சேது கால்வாயைத் தோண்டினால் அழிந்துவிடும் என்றும் கூறினார்கள்.
உள்ளபடியே, இந்த 21 பவளப் பாறைகளைக் கொண்ட, தீவுகள்தான் 2004ஆம் ஆண்டு கடைசியில், சுனாமி வந்தபோது, சுனாமியின் வேகத்தைத் தடுத்து நிறுத்தி, சிறு பாதிப்புகூட இல்லாமல் தூத்துக்குடி நகரையும் ராமேஸ்வரம் நகரையும் காப்பாற்றின என்ற உண்மையைச் சுற்றுச்சூழல்வாதிகள் முன்வைத்தார்கள். அது மட்டுமின்றி, சென்னை பல்கலைக்கழகப் பேராசிரியரின் ஆவணத்தின்படி, ஐந்து லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரம் கெட்டுவிடும் என்பதையும் மீனவர் சங்கங்கள் முன்வைத்தன.
இத்தகைய எதிர்ப்புகளைக் கேள்விப்பட்ட அன்றைய முதல்வர் ஜெயலலிதா, அதிகாரிகள் மூலம் செயற்பாட்டாளர்களின் ஆவணங்களைப் பெற்று தனது நிலைப்பாடான சேது சமுத்திரத் திட்ட ஆதரவு நிலையை மாற்றிக்கொண்டார். திமுக கொண்டுவந்ததால் மாற்றிக்கொண்டார் என்று கூறுவோரும் உண்டு. ஆனாலும், அதிகாரபூர்வமான நிலைப்பாட்டின்படி, சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் நிலைப்பாட்டில் நின்று அந்தத் திட்டத்தை எதிர்த்தார். அதன் பிறகு அதே நோக்கில் உச்ச நீதிமன்றம் சென்றார்.
இப்போது அவர் மறைந்துவிட்ட நிலையில், அவரது வழக்கை எடுத்துக்கொள்ளாமல், அவரது வாதங்களையும் எடுத்துக்கொள்ளாமல் நீதிமன்றம் நிற்கிறது. உள்ளபடியே, ஜெயலலிதாவின் நிலைப்பாடும் மீனவர் சங்கங்களின் நிலைப்பாடும் சுற்றுச்சூழல்வாதிகளின் நிலைப்பாடும் ஒன்றுதான். எந்த வழியில் சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் வந்தாலும் அது அழிவு. ஆகவே, அது தமிழர்களுக்குப் பெருமை அல்ல; மாறாக வெறுமையே என்ற நிலைப்பாட்டை எடுத்தார்கள். இன்னமும் அவர்கள் அதே நிலையில் உள்ளனர்.
இதற்கிடையே, மதுரையில் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோருடன் முதல்வர் கருணாநிதியும் சேர்ந்து விழா ஒன்றின் மூலம் திட்டத்தைத் தொடங்கினர். இடையில் ஆக்சிஸ் வங்கியிடம் நடுவண் அரசு, திட்டத்துக்கான கடனைப் பெறச் சொல்லியிருந்தது. ஆனால், உலக வங்கிகள் இத்திட்டம் லாபம் தராது என்பதால் கடன் தர முடியாது என்று கூறிவிட்டன.
எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லியில் பெங்களூரைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ஜான் ஜேக்கப், இந்தத் திட்டம் எவ்வகையிலும் லாபம் தராது என்று கட்டுரை எழுதினார். அதில், ஆப்பிரிக்க கண்டம் தொடங்கி, இங்கே வரும் பெரிய கப்பல்கள் இந்தத் திட்டப் பகுதிக்குள் நுழைய முடியாது என்றும் அவை வந்தாலும் கடலில் செல்லும் வேகத்தைக் குறைக்க எரிபொருள் மாற்றுவதற்குப் பணம், பைலட் கப்பல் வாடகை, சேது கால்வாயில் நிற்க வாடகை ஆகியவற்றைக் கட்ட வேண்டும் என்றும் ஆகவே அவர்கள் திகைத்துவிட்டார்கள் என்றும் எழுதினார். அவர்களுக்கு லாபமில்லை என்பதால் வர இயலாது என முடிவு செய்ததையும் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் கருங்கடலில் கப்பல்களின் எண்ணெய்ச் சிதறல்களால் கடல் வாழ் உயிரினங்களை அழிந்துவிட்டனவோ... அதுபோல இங்கும் செழிப்பாக உள்ள கடல் வாழ் உயிரினங்கள் அழிந்துவிடும் என்பதையும் சுற்றுச்சூழல்வாதிகள் எடுத்துவைத்தனர். அப்போது நடுவண் அரசோ, இந்தத் திட்டம் இந்திய ராணுவப் பாதுகாப்புக்கு வேண்டும் என்றனர். அதாவது தமிழர் கடலை அழித்து, மீனவர் வாழ்வைக் கெடுத்து, இந்திய - அமெரிக்கக் கட்டுப்பாட்டில் இந்தியப் பெருங்கடலைக் கொண்டுவருவது என்ற அவர்களது திட்டத்தை அறிவித்தனர். ஆகவே திட்ட எதிர்ப்பாளர்களது வாதங்கள் மேலும் வலுப்பெற்றன.
இப்போது இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல நடுவண் அரசின் நிர்பந்தம் வருமானால் அதுவே மீண்டும் ஒரு போராட்டச் சூழலை உருவாக்கும்.