Saturday, September 30, 2017

குஜராத் வளம்பெற, தமிழ்நாடு நட்டமடையலாமா?

குஜராத் வளம்பெற, தமிழ்நாடு நட்டமடையலாமா?

குஜராத் வளம்பெற, தமிழ்நாடு நட்டமடையலாமா?
டி.எஸ்.எஸ். மணி
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செப்டம்பர் 27ஆம் நாள் தமிழ்நாட்டுக்குச் சூரிய ஒளி மின்சாரம் வாங்குவதற்காக, 1500 மெகா வாட் மின்சாரத்தைக் குறைந்த விலைக்கு அதாவது யூனிட் ரூ.3.47 முதல் ரூ.3.97 விலைக்கு வாங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குஜராத்தில் உள்ள நான்கு ஆலைகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். அந்த நான்கு ஆலைகளில், குறைவான டெண்டர் அளித்த ராசி கிரீன் ஒரு யூனிட்டுக்கு, ரூ.3.47 எனக் கொடுத்திருந்ததையே எல்லா ஆலைகளுக்கும் அடிப்படை விலையாக நிர்ணயித்து இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ்நாடு மின் வாரியத் தலைவர் சாய் குமார் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. குஜராத்தில் சூரிய ஒளி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 16 ஆலைகள் இந்த ஏலத்தில் பங்குகொண்டன.
ஒரு மெகா வாட்டுக்கு ஆறு கோடி என்ற அளவில் 9,000 கோடிக்கு இந்தப் பதினாறு ஆலைகளும் இந்த ஆண்டில் குஜராத்தில் சூரிய ஒளி மின்சார உற்பத்திக்காக முதலீடு செய்கின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில், ராசி கிரீன் ஆலையின் தலைமையில் இந்த 16 அலைகளும், 100 மெகா வாட் உற்பத்தி செய்ய இருக்கின்றன. நெய்வேலி லிக்னைட் ஆலை 709 மெகா வாட் தரும். ஆறு நிறுவனங்கள் ஆளுக்கு 100 மெகா வாட் தர உள்ளன. மற்ற நிறுவனங்கள் 54 மெகா வாட் வரை தர உள்ளன. ராசி கிரீன் ஆலை அதிபர் கிருஷ்ணகிரி தொகுதி முன்னாள் எம்.பி. நரசிம்மன், தங்களது சூரிய ஒளி மின் உற்பத்தி ஆலை நிறுவ 400 ஏக்கர் தேவைப்படுவதால், அவர் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தங்கள் நிலத்தில் ஆலை வரும் என்கிறார்.
இன்று நிலக்கரி மூலம் அனல்மின் நிலையங்களின் உருவாக்கல் செலவைவிட, மிகக் குறைந்த செலவில் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது நூற்றுக்கு நூறு உண்மை. இந்தியா உலக அளவில் சூரிய ஒளி மின் உற்பத்தியில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது எனபதும் உண்மை. அதிலும், சூரிய ஒளி மின்சாரம் என்ற மின் உற்பத்தி, அனல்மின் நிலையங்கள் போலவோ, அணு உலைகள் போலவோ சுற்றுச்சூழல் ஆபத்தை ஏற்படுத்தப் போவது இல்லை என்பதும் உண்மை. ஆனால், இந்தத் திட்டங்கள் தமிழகத்துக்கு லாபகரமானவையா என்பதுதான் இப்போது கேள்வி.
அங்கே என்ன விலை?
தமிழ்நாட்டில் கையெழுத்திடப்பட்ட அதேநேரத்தில், அதே நாளில், குஜராத்தில் நடந்த ஓர் ஏலத்தில் இதே 16 ஆலைகள் குஜராத் அரசாங்கத்துக்கு ரூ.2.65 விலைக்கு ஒரு யூனிட் எனக் கொடுத்துள்ளார்கள். அதுதான் அங்குள்ள சந்தை விலை. அப்படியானால், தமிழ்நாட்டுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.3.47 என்றாலும் ஒப்பிடும்போது ரூ.150 கோடி நட்டமாகாதா?
அனல்மின் நிலையங்களின் சரிவும், சூரிய ஒளி மின் உற்பத்திக்கு வந்துள்ள போட்டியும் சேர்ந்து அடுத்த சில ஆண்டுகளில் இன்னமும் இந்த விலையை யூனிட்டுக்கு ரூ.1.50 அளவுக்குக் குறையும் என்றும் தொழிற்சாலை வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். ஒரு மெகா வாட் என்பது பத்து லட்சம் யூனிட் மின்சாரம். அப்படியானால் மேற்கண்ட ஒப்பந்தத்தில் உள்ள வேறுபாடு சுமாராக ஒரு யூனிட்டுக்கு, 1 ரூபாய் கூடுதலாகக் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கணக்கு பார்த்தோமானால், தமிழ்நாடு ஏன் மொத்தம் ரூ.150 கோடி பணம் அதிகமாகக் கொடுக்க வேண்டும்? யாருக்கு அந்தப் பணம் போய்ச் சேர்கிறது? ஆலைகளுக்கே போயிருந்தாலும் தமிழ்நாட்டுக்கு நட்டம்தானே? இவ்வாறு கேள்விகள் எழுகின்றன.
குஜராத்துக்கான மீட்சித் திட்டமா?
புதுப்பிக்கப்படக்கூடிய எரிசக்தி உற்பத்தி செய்வதற்கு உகந்த சூழல் குஜராத்தில் இருக்கிறது என்று கூறி தலைமை அமைச்சரும், முன்னாள் குஜராத் முதலமைச்சருமான நரேந்திர மோடி குஜராத்தில் சூரிய ஒளி உற்பத்திக்கான மூலதனத்தை அதிகமாகக் கொட்டிவருகிறார். அதற்காக, குஜராத் அரசு பல்வேறு சலுகைகளையும் கொடுத்து வருகிறது. சமீபத்தில் மத்திய அரசும் சூரிய ஒளி மின்சாரம் தயார் செய்வதற்காக 7 விழுக்காடு வரை மானியம் தருவதாகக் கூறியுள்ளது. அதனால், இந்தியாவிலேயே, குஜராத்தான் சூரிய ஒளி மின் உற்பத்தியில் முதல் மாநிலமாக நிற்கிறது. ஏ.பி.பி. போன்ற பன்னாட்டு மூலதன நிறுவனங்களை மோடியின் முயற்சியால் குஜராத்துக்குள் நுழைய சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்து அழைத்துள்ளார்கள்.
ஆனாலும், அதிகமான மூலதனம் போட வேண்டியிருப்பதாலும் விலை நிர்ணயத்திலும் உடனடியாக விற்க இன்னமும் சந்தை விரிவாகாதனாலேயும் அவை நெருக்கடியைச் சந்திக்கின்றன. அதை ஈடுகட்ட சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி ‘எல்லோருக்கும் மின்சாரம்’ என்று அறிவித்தார். அதற்காக, 28,000 மெகா வாட் அந்த குஜராத் ஆலைகளிலிருந்து வாங்குவதற்கும் உத்தரவிட்டுள்ளார். இது குஜராத்தில் நெருக்கடியைச் சந்திக்கும் ஆலைகளுக்குப் புனர்வாழ்வு கொடுக்க என்பது தெரிகிறது.
அதுபோலவே, இன்றைய தமிழ்நாடு அரசும் அதே காரணங்களுக்காக இந்த அவசர ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளதா என்பதே கேள்வி. ஏனென்றால், 2016ஆம் ஆண்டு கடைசியில் டிசம்பர் மாதம், இந்தியாவில் சூரிய ஒளி மின்சாரம் நடுவண் அரசின் என்.டி.பி.சி. மூலம் மிகக் குறைந்த விலை என்பதாக யூனிட்டுக்கு ரூ.3 என்றும், 2017ஆம் ஆண்டு பிப்ரவரியில், மத்தியப்பிரதேச மாநிலத்தில் ரேவா சூரிய ஒளி மின்சாரத் திட்டம் மூலம், ரூ.2.97க்கும், 2017ஆம் ஆண்டு மே மாதம் ராஜஸ்தானில் தார் பாலைவனத்தின் எல்லையில் உள்ள 10,000 ஏக்கர் நிலத்தில் உருவாக்கப்பட்டுள்ள பத்லா சூரிய ஒளி மின்சாரப் பூங்கா மூலம் சோலார் எலெக்ட்ரிக் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா 2016ஆம் ஆண்டு, மே 16இல் ரூ. 2.62க்கும், மே 18இல் ரூ.2.44க்கும் ஒரு யூனிட் மின்சாரத்தைக் கொடுத்தது என்பது நமது அமைச்சரவைக்குத் தெரியுமா, தெரியாதா என்பது நமக்குத் தெரியாது. அப்படியிருக்கையில், ஏன் குஜராத்தின் ஆலைகளையே இந்த அரசு சார்ந்திருக்க வேண்டும் என்பதும் அதுவும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும் என்பதும் நாம் சிந்திக்க வேண்டியது.
தமிழகத்துக்கு வேறு வழி இல்லையா?
இப்படிக் கேட்டோமென்றால், தமிழ்நாடு அரசு வேறொரு காரணத்தைச் சாக்காகக் கூறலாம். அது என்னவென்றால், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சூரிய ஒளி மின்சாரம் வாங்குவதற்கான விலையாக யூனிட்டுக்கு நாலு ரூபாய்க்கு மேல்தான் ஆலோசனை கூறியது என்றும், நாங்கள் அதற்கும் குறைவாகத்தான் வாங்கியிருக்கிறோம் என்றும் கூறலாம். ஆனால், மேலே கொடுத்திருக்கும் புள்ளிவிவரங்களிலிருந்து சில விஷயங்கள் தெளிவாகின்றன. குஜராத் அரசாங்கத்துக்குக் குறைந்த விலையில் அதே நாளில் கொடுத்ததையும் மத்தியப்பிரதேச மாநிலத்திலும், ராஜஸ்தான் மாநிலத்திலும் மேலும் குறைந்த விலைக்கு சூரிய ஒளி மின்சாரம் கிடைப்பதையும் ஒப்பிட்டோமானால், எதற்காக குஜாரத்தையே சார்ந்து தமிழ்நாட்டின் தேவைகள் நிரப்பப்பட வேண்டும் என்று கேட்கலாம்.
நாம் மேற்கோள்காட்டும் மத்தியப்பிரதேச மாநிலமும், ராஜஸ்தான் மாநிலமும்கூட பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியின் கீழ்த்தான் உள்ளன. ஆகவே, இது மத்தியில் ஆளும்கட்சியின் நன்மைக்கு என்றுகூட நாம் கூறவில்லை. இது குஜராத் வீழ்ந்துவிடாமல் காப்பதற்காகவா என்றே சந்தேகப்பட வேண்டியிருக்கிறது. மோடி கட்சிக்குள் தனது போட்டியாளர்களுக்கு எதிராகத் தனது சாதனையைக் காட்டும் நோக்கமாகவும் இருக்கலாம்.
ஏற்கெனவே பக்கத்து மாநிலமான கேரளாவில் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி இதுபோலவே சூரிய ஒளி மின்சாரம் வாங்கிய ஊழலில் சிக்கிக்கொண்டிருக்கிறார் என்பது இப்போது நினைவுக்கு வருகிறது.