Thursday, April 27, 2017

மன்னார்குடி மகுடிக்கு மன்னார்குடியே சிக்கியதா? -

சிறப்புக் கட்டுரை: மன்னார்குடி மகுடிக்கு மன்னார்குடியே சிக்கியதா? - T.S.S.மணி

சிறப்புக் கட்டுரை: மன்னார்குடி மகுடிக்கு மன்னார்குடியே சிக்கியதா? - T.S.S.மணி
டி.டி.வி.தினகரனின் கைது பல அரசியல் கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒருவர் இந்தியாவின் ‘புனிதமான’ தேர்தல் ஆணையத்தையே ‘லஞ்சம்’ கொடுத்து லாபம் பெறப் பார்த்தால், கண்டிப்பாக அவரைக் கைது செய்ய வேண்டும். வழக்கு போட வேண்டும். விசாரிக்க வேண்டும். தண்டனை வழங்க வேண்டும். இதுதான் நாம் எல்லோரும் எதிர்பார்க்கும் ஒன்று. அவ்வாறுதான் டி.டி.வி.தினகரன் கைதும் நடந்தது என்றால் பிரச்னை இல்லை. ஆனால், விடுதலைச் சிறுத்தை தலைவர் தொல்.திருமாவளவன் சொல்வது போலவும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன் சொல்வது போலவும், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கருதுவது போலவும் இந்தக் கைது ‘ஒரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை’ என்றால், இது மிகவும் ‘கேவலமான’ ஒன்று. அதை நடுவண் அரசை நடத்தும் பாஜக செய்தது என்று நிரூபணமானால் அது நாட்டின் மரியாதையைக் கெடுக்கக் கூடியது.
சுகேஷ் சந்திரசேகர் என்பவர் குறைந்தபட்சம் 16 வழக்குகளில் கைது செய்யப்பட்டவர். அவர் எப்போதுமே ‘மோசடி’ வழக்குகளில் அதிகமாகச் சிக்குபவர். அப்படிப்பட்டவர் ரூ.1.50 கோடி பணத்துடன் பிடிபடுகிறார். எப்படி இந்தப் பணம் வந்தது என்றால், அதிமுக-வுக்கு இரட்டை இல்லை சின்னத்தை வாங்கித் தர ரூ.50 கோடி பேசி, ரூ.10 கோடி வாங்கி, அதில் இது மீதி பணம் என்று டெல்லி காவல்துறை கண்டுபிடித்தார்களாம். டெல்லி காவல்துறை, டெல்லியை ஆள்வதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் கட்டுப்பாட்டில் இல்லை. நடுவண் அரசின், ‘உள்துறை’யின் கீழ்தான் உள்ளது என்ற உண்மை, டெல்லியில் கெஜ்ரிவால் ஆட்சிக்கு வந்தபின், அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் நாட்டுக்குத் தெரிந்த செய்தி. இதுவரை டெல்லியை ஆண்டுவந்த காங்கிரஸ் கட்சியிலும், நடுவண் அரசிலும் அவர்களே ஆண்டதால் இந்த ரகசியம் நமக்கு கசியவில்லை.
நமது நாட்டு காவல்துறையைப் பொறுத்தமட்டில், ‘ஒரு முன்னாள் குற்றவாளி’யைப் பயன்படுத்தி, தாங்கள் விரும்பும் வழக்குகளை ‘புனைந்து’ கொள்வார்கள் என்பது தெரிந்த செய்தி. அதிலும் பிரபல ‘மோசடி’ வழக்குப் பேர்வழியைப் பயன்படுத்தியே, அடுத்த மோசடி வழக்கையும் புனைவது அவர்களது ‘அவசரத்துக்கு எளிதான செயல்’. அவ்வாறுதான் டெல்லி காவல்துறை என்ற ‘உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கையாளுதலில் உள்ள இலாகா செய்துள்ளதா?’ என்பது போகப்போகத்தான் தெரியும். அப்படியே தினகரன் லஞ்சம் கொடுக்க ‘முயன்றார்’ என்று நிரூபணமானாலும், அது லஞ்சம் கொடுத்த வழக்காக ஆகாது. மாறாக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்காகத்தான் இருக்கும். அதேபோல, டெல்லி காவல்துறையினர் தினகரனை நான்கு நாள்களாக, மாலை முதல் நள்ளிரவு வரை கேள்விகள் கேட்டுத் துளைத்து விசாரித்தார்களாம். அதுவே ஒரு மனிதனைச் சோர்வடைய வைத்து, ‘உளவியல் ரீதியாகச் சித்ரவதை மூலம் பெறவேண்டிய சொற்களை பெரும்முறை’. அதேசமயம், ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு, அஇஅதிமுக கட்சியை நெருங்க முடியாமல் இருந்த நடுவண் அரசுக்கு, டெல்லி காவல்துறை மூலமே நெருங்கி அதன் துணைப் பொதுச்செயலாளரையே கைது செய்து, ‘அவமானப்படுத்தி விட்டோம்’ என்ற திருப்தியைப் பெற்றுக் கொள்ளலாம்..
அதுமட்டுமல்ல... எந்த அதிமுக, ஜெயலலிதா தலைமையில் இருந்தபோது நடுவண் அரசு தனது ‘புதிய சட்டத் திருத்தங்கள்’ மூலம் ரயில்வே பாதுகாப்பு காவல்துறைக்கும், எல்லை பாதுகாப்பு படைக்கும், ‘மாநிலங்களுக்குள் நுழைந்து, மாநில அரசின் உதவியின்றியே கைது விசாரணை செய்யும் உரிமை’யைக் கொண்டுவர முயற்சி செய்தபோது, ஜெயலலிதாவால் தடுத்து நிறுத்தப்பட்டதோ, அதே அதிமுக கட்சியின் துணைப் பொதுச்செயலாளரை நடுவண் அரசின் கைகளில் உள்ள அதிகாரமான ‘டெல்லி காவல்துறை’ மூலம், ஒரு வழக்கை டெல்லியிலேயே புனைந்து, கைது செய்து சென்னைக்கே கொண்டுவர முடிகிறது என்ற ‘இறுமாப்பை’ காட்டும் ‘ஒற்றையாட்சி அதிகாரவர்க்க மனப்போக்கு’ என்றும் பார்க்க வேண்டியிருக்குமோ?
அதாவது ‘ஒற்றையாட்சி மனப்போக்கு’ என்பது இந்தியத் துணைக் கண்டம் முழுமையையும், ‘தானே தனது சித்தப்படியே’ ஆளும் ஒரு ‘வெறி’. அத்தகைய ஒற்றையாட்சியை எதிர்த்து, ஒரு காலத்தில், ‘மாநில சுயாட்சி’ என்றும், ‘மாநில உரிமைகள்’ என்றும் பேசப்பட்டது. ஆனால், அதன் பரிணாம வளர்ச்சியாக ஜெயலலிதா காலத்தில், அவராலேயே முன்மொழியப்பட்டு, 2014 நடாளுமன்றத் தேர்தல் களத்தில், ‘கூட்டுறவுடன் கூடிய கூட்டமைப்பு’ என்ற சொல்லாடல் இந்திய அரசியல் வானில், அறிமுகப்படுத்தப்பட்டது. அவ்வாறு ஒரு ‘கூட்டமைப்பு’ என்பது நிலவுகின்ற ‘ஒற்றையாட்சி’ கட்டமைப்பை அகற்றி, அதன் இடத்தில் நிறுவப்பட வேண்டிய ஒன்று. அதாவது, நடுவண் அரசுக்கு, ‘அனைத்து அதிகாரங்களும்’ என்ற சொல்லாடலை அகற்றிவிடக் கூடிய வீரியமுள்ளது. அதை ‘ஆண்டு, அனுபவித்த, அதிலேயே ரசித்து, சுவைத்த அதிகார வர்க்கம்’ எப்படி விட்டுக் கொடுக்கும்? எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்?
அதனால்தான், நடுவண் அரசில் ‘ஐக்கிய முற்போக்கு அரசு’ இருக்கும் காலத்தில், அதன் அங்கமாக இருந்த திமுக கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளரைக் கூட, திமுக கட்சியின் தலைவர் மகளைக் கூட, நடுவண் அரசின் அதிகாரம், குறிப்பிட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட காங்கிரஸ் அமைச்சர்களைத் தொடாமல், கைதுசெய்து, வழக்கு நடத்த முடிகிறது. ‘உள் துறை’ என்பதும், ‘பிரதமர் அலுவலகம்’ என்பதும், அத்தகைய ஒற்றையாட்சி அதிகார மையமாகச் செயல்படுகின்றன. இந்த ஒற்றையாட்சி மாற்றப்பட்டு, ‘உண்மையான கூட்டமைப்பு’ ஒரு கட்டமைப்பாக உருவாகி வருமானால், இத்தகைய நடுவண் அதிகாரம் செயல்பட முடியாது.
இத்தகைய ‘ஒற்றையாட்சி மனோபாவம்’ இந்த டி.டி.வி. வழக்கிலும் செயல்படுகிறதோ என்ற சந்தேகம் நமக்கு எழுகிறது. ஏனென்றால், நடுவண் அரசு அதிகாரத்துக்குட்பட்டு, தேர்தல் ஆணையம், அதிக எண்ணிக்கை உள்ள ஒரு கட்சியின் சின்னத்தை, கொடியை, கட்சிப் பெயரை முடக்குகிறது. அத்தகைய செயல், நீதிமன்றம் செல்லும்போது, சில மாதங்கள் கழித்து தோல்வி அடையலாம். இந்த ‘சின்னம் பெற லஞ்சம்’ கொடுக்க முயன்ற வழக்கும், நீதிமன்றம் செல்லும்போது, சில மாதங்கள் கழித்து தோல்வி அடையலாம். ஆனால் வருகிற ஜூலை, ஆகஸ்ட் மாதத் தேவைகளுக்காகவே மோடி அரசு இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. அது என்ன தேவை?
அதுதான் வர இருக்கின்ற ஜூலை மாத குடியரசு தலைவர் தேர்தலும், ஆகஸ்ட் மாத துணைக் குடியரசு தலைவர் தேர்தலும். அந்தத் தேர்தல்களில், பிரதமர் நரேந்திர மோடி ஒரு பெரும் சவாலை எதிர்கொள்கிறார். அந்தச் சவால், எதிர்க்கட்சியான காங்கிரஸ் மூலமோ, அல்லது ஏதாவது மாநிலக் கட்சி மூலமோ அல்ல. அது தன்னை உருவாக்கி வளர்த்த ஆர்.எஸ்.எஸ். சக்திகளிடமிருந்து. ஆர்.எஸ்.எஸ். சக்திகள் ஏற்கெனவே, மோடி அரசு கொண்டுவந்த, கார்ப்பரேட் நலனுக்கான நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தன. ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டலில், பாரதிய கிசான் சபா, வனாஞ்சல் சமிதி, பாரதிய மஸ்துர் சபா ஆகியவை லட்சக்கணக்கான விவசாயிகளையும், ஆதிவாசிகளையும், தொழிலாளர்களையும் திரட்டி எதிர்த்தது. அதுவே மோடியின் முதலாளிகளான கார்ப்பரேட்கள், அந்நிய ஏகாதிபத்தியங்களுக்குத் தலைவலியாகப் போய் விட்டது. அதேபோல அமெரிக்காவுடனான ஒப்பந்தங்களோ, இஸ்ரேலுடனான ஒப்பந்தங்களோ, பாகிஸ்தானுடனான ஒப்பந்தங்களோ அவர்களது எதிர்ப்பைச் சந்திக்கலாம். அதுவே சிவசேனா மூலம் அவ்வப்போது வெளிப்படுகிறது. அத்தகைய நேரங்களில், பிரதமருக்கு ‘இசைவாக செல்லக்கூடிய’ ஒருவரே குடியரசு தலைவராக கொண்டு வரப்பட வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ். சக்திகள் ‘முழுமையான மதவாதம்’ என்றால், மோடியினுடையது, ‘கார்ப்பரேட் மதவாதம்’ என்று அழைக்கலாம். இப்போது கார்ப்பரேட் மதவாதத்துக்கும், முழுமையான பழமை மதவாதத்துக்கும் உள்ள போட்டியே நாம் காணுகின்ற குடியரசு தலைவர் தேர்தல். கார்ப்பரேட் மதவாதம், தனது நேரடி மதவாதச் சக்திகளாக, ‘கார்ப்பரேட் ஆசிரமங்களை’ நிறுத்துகிறது. அதுவே மோடியால் ஆதரிக்கப்படும், யமுனை நதியைக் கெடுத்த ஸ்ரீ,ஸ்ரீ.ரவிசங்கரும், கோவை மேற்குத் தொடர்ச்சி மலையைக் கெடுத்த ஜக்கு வாசுதேவரும்.
கார்ப்பரேட் தலைமை தாங்க வேண்டுமா? அல்லது மதவாதம் தலைமை தாங்க வேண்டுமா? என்ற போட்டியே அவர்களது கூட்டணிக்குள் உள்ள குத்து, வெட்டு. அதாவது வருகிற குடியரசுத தலைவர் தேர்தலோ, துணைக் குடியரசு தலைவர் தேர்தலோ மக்களுடைய தேவைகளுக்காக அல்ல. மாறாக, ஆளுவோருக்குள், ஆளும் வர்க்கத்துக்கும், ஆளும் கூட்டத்துக்குள், ஆளும் கும்பலுக்கும் உள்ள போட்டியின் விளைவே.
அந்தப் போட்டியில், ‘அமைதிப்படை அமாவாசை’யாக மோடி வருகிறார். அதனால் தன்னை வளர்த்த முதியவர்களான அத்வானியோ, முரளி மனோகர் ஜோஷியோ குடியரசு தலைவர் பதவிக்கு நிறுத்தப்பட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். அதன் விளைவே, தங்கள் கைகளில் உள்ள சக்கராயுதத்தை (ஒற்றையாட்சி அதிகாரத்தை) விஷ்ணு போல சுழட்டி, சி.பி.ஐ. மூலம்,, பழைய வழக்கு கோப்புகளைத் தூசு தட்டி எடுத்து, பாபர் மசூதி இடிப்பில் அத்வானி, ஜோஷி, உமா பாரதி பங்குகளை மறு ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் மூலம் ஏற்பாடு செய்து விட்டார். அத்தகைய மோடி, எப்படி இந்தத் தேர்தலில், அஇஅதிமுக வாக்குகளைப் பெறுவது என்று சிந்திக்க மாட்டாரா? 50 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளும், 135 சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளும், மொத்தமாகக் கிடைப்பது என்றால் சாமான்யமான விஷயமா?
அதுமட்டுமல்ல. நான்கு மாநிலத் தேர்தல்களில், பாஜக வெற்றி பெற்றிருக்கும் சூழலில், எதிர்க்கட்சிகளை குடியரசு தலைவர் தேர்தலில் தோற்கடிக்க இன்னமும் 24,௦௦௦ வாக்குகள் தேவைப்படுகிறது. ஆகவேதான், மோடியின் அக்கறை அதிமுக பக்கம் திரும்புகிறது. முதலில் ஒன்றுபட்ட அதிமுக-வின் மொத்த வாக்குகளையும் அள்ளிவிடலாம் என எண்ணியவர், தங்களது நடுவண் அதிகாரத்தை, சசிகலா அணியினர் ‘ஏற்கவில்லை’ என்றவுடன், ‘உடையட்டும்’ என முயற்சித்து, பிறகு, ‘பெரும்பான்மை’ சசிகலா அணியிடம் இருப்பதைப் பார்த்து மிரண்டுபோய், ‘இணையட்டும்’ என முடிவெடுத்து, அதற்கான முயற்சிகளை முன்னெடுக்க உதவுவதும், ஆனால், சசிகலா அணியினரோ, குறிப்பாகத் தினகரனோ வந்துவிடக் கூடாதென, தேர்தலை ரத்து செய்வதும், தினகரனைக் கைது செய்வதும், அதன்மூலம் அசிங்கப்படுத்தி அவர்களை விலக்கி வைத்து, அதிமுக இணைப்பைச் சாதிப்பதும், எல்லாமே, குடியரசு தலைவர் தேர்தலுக்காக மட்டுமே. ஆகவேதான் இந்த வழக்குகளை ‘தற்காலிகமானவை’ என நாம் அழைக்கிறோம்.
இன்னொரு அச்சமும் பிரதமர் மோடிக்கு இருக்கிறது. இப்போது சோனியா களத்தில் இறங்கி, 16 கட்சிகளை குடியரசு தலைவர் தேர்தலுக்காக இணைக்கிறார். காங்கிரஸ் முயற்சியை ஆர்.எஸ்.எஸ். சக்திகள் ஆதரிக்குமோ என்ற அச்சமும் மோடிக்கு உண்டு. ஏனென்றால் ஏற்கெனவே 1984ஆம் ஆண்டு, டெல்லியில் நடந்த சீக்கியருக்கு எதிரான கலவரத்தில், காங்கிரஸின் சேவாதளத்துடன் ஆர்.எஸ்.எஸ். சக்திகளும் இறங்கினர் என்ற பழைய செய்தி நினைவுக்கு வருகிறது. கேரளாவின் தேர்தலில், சி.பி.எம். கட்சியைத் தோற்கடிக்க காங்கிரஸ் கட்சிக்கு ஆர்.எஸ்.எஸ். சக்திகள் ஆதரவு கொடுத்த செய்திகளும் நிறையவே உள்ளன. ஆகவே சோனியாவின் வேட்பாளரை, மோடிக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். ஆதரித்துவிட்டால் என்ன செய்வது? இருக்கும் பாஜக வாக்குகளே உடையுமே? ஆகவே ‘கையில் உள்ள அதிமுக வாக்குகளை விடக் கூடாது’ என எண்ணுகிறார். அதன் விளைவே இந்த ‘அவசர’ செயல்பாடுகள்.
இதில் ஓ.பி.எஸ். அணியினர், ‘மன்னார்குடி குடும்பம்’ விலக்கப்பட வேண்டும் என்று கூறுவது இன்னொரு கேலிக்கூத்து. ஏனென்றால் ம.நடராசனோ, திவாகரனோ, தொடக்கத்திலிருந்தே தினகரனுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள். அதனால் தினகரன் ஒரு காட்சி ஊடக நேர்காணலில் பெயர் சொல்லி, ‘நடராசனோ, திவாகரனோ கட்சிக்குள் நிரந்தரமாக வர மாட்டார்கள்’ என்று கூறினார். அவரது பகிரங்க அறிவிப்புக்குப் பிறகு, தீபா தம்பி தீபக் என்ற அரசியலில் இல்லாத இளைஞனை அறிக்கை கொடுக்க வைத்து, அதில், ‘தினகரனை நீக்க வேண்டும்... ஓ.பி.எஸ். பொதுச்செயலாளர் ஆக வேண்டும்’ என்று சம்பந்தப்பட்டவர்கள் எழுதிக் கொடுத்ததும் நாடறிந்த ரகசியம். அதேபோல நடராஜனுக்கு வேண்டிய கவிஞர் சினேகன் நேரடியாக ஓ.பி.எஸ். அணியில் வந்து சேர்ந்ததும், யாருடைய வேலை என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.
திவாகரன், தினகரனை கருத்தில்வைத்து, ‘எங்கள் குடும்பத்தினர் கட்சிக்குள்ளும், ஆட்சிக்குள்ளும் தலையிட மாட்டோம்’ எனக் கடிதம் எழுதி, அதை, முதல்வர் எடப்பாடிக்கும், சசிகலாவுக்கும் அனுப்பியதும் அனைவரும் அறிந்ததே. அதேபோல மகாதேவனின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட மூத்த அமைச்சர்கள் தங்கமணி அணியினரிடம் தினகரனுக்கு எதிராகக் காய் நகர்த்தச் செய்ததும் திவாகரன் என்பது ஊடகங்களில் வெளிவந்தது. இவ்வாறு, ஓ.பி.எஸ். அணியிலும் மன்னார்குடி குடும்பம், எடப்பாடி அணியிலும் மன்னார்குடி குடும்பம் இருப்பதால் ‘தினகரனே மன்னார்குடி குடும்பம்’ என்ற உண்மை புரியப்பட வேண்டும். ஆகவே, தினகரனின் கைதுக்குப் பின்னால் குடும்பத்தின் சதி இருக்குமானால், அது, மன்னார்குடி மகுடிக்கு, மன்னார்குடி சிக்கியதாகவே பொருள்படும்.