Tuesday, November 14, 2017

E.P.S and O.P.S. -Are they fighting?

சிறப்புக் கட்டுரை: ஈ.பி.எஸ்ஸைக் கவிழ்க்கப் பார்க்கிறாரா ஓ.பி.எஸ்?

சிறப்புக் கட்டுரை: ஈ.பி.எஸ்ஸைக்  கவிழ்க்கப் பார்க்கிறாரா ஓ.பி.எஸ்?
தினகரனை எதிர்த்துதான் எடப்பாடி பழனிசாமியும் (ஈ.பி.எஸ்) ஓ.பன்னீர்செல்வமும் (ஓ.பி.எஸ்) சேர்ந்தார்கள் என்று நினைத்தால், இரண்டு அணிகளும் சேர்ந்த பின்னாலும், இவர்கள் தனித்தனியாக இயங்கிவருவதைப் பார்க்கிறோம். ஓ.பி.எஸ்ஸுக்கு உரிய பதவி கிடைக்கவில்லை என்ற பொருள்பட அவரது அணியைச் சேந்த அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் கூறினார். இப்போது இரண்டு பேரும் சேர்ந்தே உள்ளோம் என்று காட்ட, ஈ.பி.எஸ். தலைமையிலான அரசு எவ்வளவோ முயன்றாலும், ஓ.பி.எஸ். அணியினர் வேறு யாருக்கோ விசுவாசம் செலுத்த இடையூறு செய்கிறார்கள் என்று தெரிகிறது.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி சமீபத்தில் நடந்த இரண்டு விழாக்களிலும் அது பளிச்சென்று தெரிந்தது. தேனியில் நடந்த விழாவில் ஓ.பி.எஸ். பேசி முடித்ததும் ஈ.பி.எஸ். பேச எழுந்திருக்கும்போது, வந்திருந்த கூட்டத்தில் பலர் எழுந்து சென்றுவிட்டனர். தேனி மாவட்டம், ஓ.பி.எஸ்ஸின் சொந்த மாவட்டமாக இருப்பதால், அவரது அரசியல் வாழ்க்கை அங்கு மையம் கொண்டிருப்பதால், அத்தகைய செயலை அவரால் நிகழ்த்திக்காட்ட முடியும்.
ஓ.பி.எஸ். பதிலடி
இது திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பது ஈ.பி.எஸ். அணியினருக்குத் தெரிந்துவிட்டது. ஓ.பி.எஸ்ஸை நிதியமைச்சராக ஆக்கிய பின்னும் பழைய நிதியமைச்சர் ஜெயக்குமாரே ஜி.எஸ்.டி. ஆலோசனைக்காக டெல்லி போவதும், எந்த எந்தப் பொருளுக்கு வரி குறைப்பு வாங்கியுள்ளேன் எனப் பட்டியலைப் படிப்பதும் நடந்துவருகிறது. அவர் ஈ.பி.எஸ். அணிக்காரர். அப்படியானால், பதிலுக்கு ஓ.பி.எஸ்ஸும் செய்வாரில்லையா?
அடுத்து 12-11-2017 அன்று, திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டையில், அதே விழா நடத்தப்பட்டது. அங்கு குறிப்பாக, ஓ.பி.எஸ்ஸுக்கு வேண்டியவரும், ஓ.பி.எஸ்ஸின் பங்கு இருப்பதாகப் பலராலும் நம்பப்படுபவரும், தாது மணல் புகழ் என அறியப்பட்டவருமான ஒருவர், பல வாகனங்களையும் ஆட்களையும் அனுப்பினார் என்கிறது ஒரு செய்தி. அப்படி வரவழைக்கப்பட்டவர்கள், “வருங்கால முதல்வர் ஓ.பி.எஸ். வாழ்க” என்று இன்றைய முதல்வர் ஈ.பி.எஸ். முன்னிலையிலேயே முழக்கமிட்டதாகக் கூறுகிறார்கள். அது தவிர தேனியில் செய்யப்பட்டது போலவே, பாளையிலும், ஓ.பி.எஸ். பேசி அமர்ந்ததும், வந்திருந்த அந்த கூட்டம், முதல்வர் ஈ.பி.எஸ். பேச எழும்போது, கூட்டத்தை விட்டு வெளியேறி விட்டார்களாம். இதுவும் திட்டமிட்ட செயல் என்கிறது ஈ.பி.எஸ் குரூப்.
எம்.ஜி.ஆர். திமுகவில் இருக்கும்போது, மதுரையில் முத்துப்பிள்ளையை (மதுரை முத்து) வைத்து கலைஞர் திமுக மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தார். மதுரை முத்து, கலைஞரின் மகனான மு.க.முத்துவை, மாநாட்டைத் தொடங்குவதற்கு முன்பு நடத்தப்பட்ட கழகப் பேரணியைத் தொடங்கிவைக்க ஏற்பாடு செய்தார். முத்து ஒரு வெள்ளைக் குதிரையில், கழகக் கொடி ஏந்தி பேரணிக்கு முன்னே வந்தார். அந்தக் காலகட்டத்தில் முத்து தன் படங்களில், எம்.ஜி.ஆர். போலவே நடித்திருப்பார். சொந்தக் குரலில் பாடுவார். அவரை எம்.ஜி.ஆருக்குப் போட்டியாகக் கருணாநிதி முன்னிறுத்துவதாகக் கருதப்பட்டது.
பேரணியில் எம்.ஜி.ஆர். பேசி முடித்ததும், மேடையை விட்டுக் கீழே இறங்கினார். உடனே கூட்டத்தில் பெரும்பான்மையினரும் பந்தலை விட்டு வெளியேறிவிட்டார்கள். அப்போது இயக்குநர் ஸ்ரீதரால் நடத்தப்பட்டுவந்த ‘சித்ராலயா’ என்ற வார ஏடு, இது பற்றி கட்டம் போட்ட செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்தச் செய்தியில், ‘மக்கள் யார் பக்கம்?’ என்று தலைப்பிட்டு, ‘மதுரை திமுக மாநாட்டில், எம்.ஜி.ஆர். பேசி முடித்து மேடையை விட்டுக் கீழே இறங்கி வெளியே சென்றதும் பெரும் கூட்டமும் வெளியேறியது’ எனப் போட்டிருந்தார்கள். அதை அப்படியே ஓ.பி.எஸ். பின்பற்றுகிறாரோ?
தாது மணல் விவகாரமும் அரசியலும்
தாது மணல் அள்ளும் விஷயத்தில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் கடற்கரைகளில், ஜெயலலிதா ஆட்சியில் அதிகாரிகள் மூலம் நேரடியாக ஆய்வுகளையும், சோதனைகளையும் மேற்கொண்டார். தாது மணல் கொள்ளை என்பதாகச் சிக்கிக்கொண்ட தனியார் பிரமுகரைப் பகைத்துக்கொண்டார். ஜெயலலிதா இருந்தவரை ககன்சிங் பேடியை வைத்து ஆய்வுசெய்து, ‘அணுசக்தி மணல் எடுக்கத் தடை’ விதித்தார்.
ஆனால், இன்று தாது மணலில் கார்னட் கனிம வளம் தோண்ட அரசு கொடுத்த அனுமதி, தவறாக எங்கோ கொண்டு போய் நிறுத்திவிட்டது என்கிறார்கள்.
அதிகமாக அள்ளியதாக முதலில் குற்றம் கூறப்பட்டது. பிறகு அதிலேயே இலுமனய்ட் கனிம வளம் கிடைத்தது தெரிந்தது. இப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்த வழக்கின் விசாரணை நடக்கிறது. இப்போது அதில் அடர்த்தியாக மோனோசைட் கனிமம் கிடைக்கிறது என்றும் அது உலக ஆயுத வணிகர்களுக்கு மிகவும் தேவை என்பதும் வெளிவந்துள்ளன. அப்படிப் பலப் பல கோடிகளுக்கு எடுக்கப்பட்டது என்பதாகவும் கூறுகிறார்கள். அமெரிக்காவில் உள்ள பெரிய பன்னாட்டு மூலதனக்காரர்கள் அனுபவிக்கிறார்கள் என்றும் பேச்சு. இது எங்கே கொண்டுவிடும்?
சமீபத்தில், இந்த வழக்கில் அணுசக்தித் துறை, அணுசக்தி ஒழுங்குபடுத்தல் வாரியம் போன்ற அதிக அதிகாரம் படைத்த, இந்தியாவின் ‘பாதுகாப்பையும் இறையாண்மையையும்’ காப்பாற்றிவரும் துறைகளும் பங்குகொள்ளத் தொடங்கிவிட்டனர் என்கிறது செய்தி. கேள்வி கேட்கும் நிலையில் இந்திய அணுசக்தித் துறையும், மாட்டிக்கொண்ட நிலையில் அரசியல்வாதிகளும், அந்நிய சக்திகளும் நிற்கின்ற ஓர் இக்கட்டான நிலை எழுந்துள்ளது. அதில் தமிழ்நாட்டின் ஆளும்கட்சி விவகாரமும் சிக்கிக்கொண்டிருப்பது தெரிகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த ஜல்லிக்கட்டு எழுச்சியில், அன்றைய முதல்வர் கரத்தைப் பலப்படுத்த, மெரினா எழுச்சிக்கு ஆறு நாளும் உணவுப் பொட்டலங்கள் அளித்த கரங்கள் எவை? தூத்துக்குடியில் அதே நேரம் நடந்த எழுச்சிக்கு ஆரம்ப நிதி எங்கிருந்து வந்தது? இப்போது பாளை கூட்டத்துக்கு வாகனம் அனுப்பிய ‘தர்மக்கரம்’தான் இதையெல்லாம் செய்தது என்பது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.
ஒருமாதிரி இந்த உலக அரசியல் புரிகிறதா..?E.P.S.