Sunday, August 6, 2017

வாஜ்பாய் - மோடி: காஷ்மீர் பத்திரிகையாளரின் ஒப்பீடு!

சிறப்புக் கட்டுரை: வாஜ்பாய் - மோடி: காஷ்மீர் பத்திரிகையாளரின் ஒப்பீடு! - டி.எஸ்.எஸ்.மணி

சிறப்புக் கட்டுரை: வாஜ்பாய் - மோடி: காஷ்மீர் பத்திரிகையாளரின் ஒப்பீடு! - டி.எஸ்.எஸ்.மணி
ஆகஸ்ட் 1இல், சென்னை வந்திருந்த காஷ்மீர் ஊடகவியலாளர் டாக்டர் ராஜா முசாபர் பட் அவர்களைச் சந்தித்து அவரது உரையாடலைக் கேட்கவும் கேள்விகளை எழுப்பவும் சென்றேன்.
வழமையாக காஷ்மீர் பற்றி நமது மக்களிடம் எடுத்துச்சொல்லும் ஊடகங்கள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், பாகிஸ்தான் ஊடுருவல்காரர்கள், கல் எறியும் இளைஞர்கள் ஆகியோர்தான் காஷ்மீர் வன்முறைகளுக்குக் காரணம் என்பதாகத் தொடர்ந்து கூறிவருகின்றன. இடையிடையே, இந்திய ராணுவமும், தனது மனித உரிமை மீறல்களால் அங்குள்ள நிலைமையை அசாதாரணமாக ஆக்கி வருகிறது என்ற செய்திகளும் நமது ஊடகங்களில் வருவதுண்டு. எப்படியோ பாகிஸ்தான்தான், காஷ்மீர் பிரச்னைக்கெல்லாம் முக்கியக் காரணம் என்பதுதான் நமக்கு ஆள்வோரால் மாறிமாறி சொல்லிக் கொடுக்கப்படுகிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி, வேறொரு செய்தியையும் கூறிவருகிறது. அதுதான் ஜம்மு காஷ்மீருக்குக் கொடுக்கப்பட்டுள்ள 370 என்ற சிறப்பு சட்டப்பிரிவு. அந்தச் சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என்ற குரலும் அவ்வப்போது எழுப்பப்படுகிறது. அதென்ன அவர்களுக்கு மட்டும் தனிச் சலுகை என்பது பல்வேறு இந்திய மக்கள் மத்தியில் எழுப்பப்படும் கேள்வி. எல்லா இந்தியரும் ஒன்றுதானே என்பதன் நியாய அடிப்படையில் சாதாரண மக்களுக்கு வரும் சந்தேகம் அது.
ஊடகவியலாளர் டாக்டர் ராஜா முசாபர் பட் பேசத் தொடங்கினார்.
“இந்தியச் சுதந்திரத்துக்கு முன்னால் ஆங்கிலேயர் இந்தியாவை ஆளும் காலத்தில், காஷ்மீர் தனி நாடாக இருந்தது. அங்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும், இந்துக்கள் [பண்டிட்கள்] சிறுபான்மையினராகவும் வசித்து வந்தார்கள். 1820 முதலே, காஷ்மீர் மன்னர்களால் ஆளப்பட்டது. அம்ரிஸ்டர் ஒப்பந்தம் என்ற பெயரில், ஜம்முவை ஆண்ட, டோக்ரா மன்னருக்குக் காஷ்மீர் விற்கப்பட்டது. 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றபோது, காஷ்மீர் இந்தியாவுடன் இல்லை. அப்போது காஷ்மீர் ஹரிசிங் என்ற இந்து மன்னனால் ஆளப்பட்டுக்கொண்டு இருந்தது. (நமக்கு ஒரு சந்தேகம். காஷ்மீர் இந்தியாவின் தலை, அதை விட்டுக்கொடுக்கக் கூடாது என்று சில தேச பக்தர்கள் இப்போது கூறுகிறார்களே? அப்படியானால் சுதந்திர இந்தியக் குழந்தை தலையில்லாமலா பிறந்தது? சரி. போகட்டும்)
அப்போது தனி நாடாக காஷ்மீர் இருப்பதை பொறுக்க முடியாத, பாகிஸ்தான், காஷ்மீர்மீது தனது ராணுவத்தை ஏவி, ஆக்ரமிக்க முனைந்தது. (நாங்க நாட்டை இரண்டா பிரிக்கிறோம். முஸ்லிம் எல்லோரும் அந்தப்பக்கம் போங்க... இந்துக்கள் எல்லோரும் இந்தப்பக்கம் வாங்க என்று கூப்பிட்டதை வைத்து, பாகிஸ்தான் முஸ்லிம்களுக்காக ஒதுக்கப்பட்டதனால், முஸ்லிம் அதிகம் வகிக்கும் காஷ்மீர் தங்களுக்கு என்று பாகிஸ்தான்காரன் நினைத்து விட்டான் போலிருக்கு) 1947 அக்டோபர் 22இல் பழங்குடி படையினரை ஏவி பாகிஸ்தான், ஜம்முமீது படையெடுத்து, ஏழே நாள்களில் ஆறு லட்சம் மக்களைக் கொன்று குவித்தது. இதை ஏற்றுக்கொள்ள முடியாத காஷ்மீரின் அரசர் மஹாராஜா ஹரிசிங், இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உதவியை நாடினார்.
காஷ்மீருக்குள் பிரபலமாக இருந்த ஷேக் அப்துல்லா மஹாராஜ் ஹரிசிங்குடன் சண்டை போட்டதால், மஹாராஜா ஹரிசிங் இந்தியாவுடன் ஒப்பந்தம் போட நிர்ப்பந்திக்கப்பட்டார். அதையொட்டி, 1947இல், அக்டோபர் 26ஆம் நாள் அன்று காஷ்மீர் மஹாராஜா ஹரிசிங், இந்திய அரசுடன் சில நிபந்தனைகளுடன் கூடிய ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 1947 ஆம் ஆண்டே, அக்டோபர் 27ஆம் நாள், அதாவது மறுநாளே, இந்தியாவில் அன்று பொது ஆளுநராக (கவர்னர் ஜெனரல்) இருந்த மவுன்ட் பாட்டன், காஷ்மீர் மஹாராஜா ஹரிசிங்குக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அதில், ‘காஷ்மீரில் சட்ட - ஒழுங்கு சரியாகி, அதன் மண்ணிலிருந்து ஆக்கிரமிப்பாளர்கள் (பாகிஸ்தான் படையினர்) அகற்றப்பட்ட பிறகு, காஷ்மீர் மக்களிடம் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தி அவர்களது கருத்துகளைக் கேட்டு பிறகு இந்திய அரசுடன் காஷ்மீரை இணைக்கலாம் என்று இந்திய அரசு விரும்புகிறது’ என்று எழுதியுள்ளார். இப்படித்தான், நிபந்தனையுடன் காஷ்மீர், இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
இத்தகைய இணைப்பை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் அன்று நேரு தலைமையிலான இந்திய அரசு, இந்தப் பிரச்னையை, ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சலுக்கு எடுத்துச் சென்றது. (இன்றைய இந்திய ஆட்சியாளர்கள் உலக அரங்குக்கு காஷ்மீர் பிரச்னையை எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று கூறி வருகிறார்கள்) அதையொட்டி, ஐ.நா. பாதுகாப்பு சபை போர் நிறுத்தத்தை அறிவித்து, எல்.ஓ.சி. என்ற ‘கட்டுப்பாட்டுக்குள் உள்ள எல்லை’ என்பதாக அறிவித்தது. அதுவே, பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள காஷ்மீரை, ஆசாத் காஷ்மீர் அல்லது பாக் ஆக்ரமிப்பு காஷ்மீர் என்றும் இந்தியப் பகுதிக்குள் உள்ள காஷ்மீரை, ஜம்மு காஷ்மீர் என்றும் அழைக்கத் தொடங்கினோம். ஆனால், பாகிஸ்தான் பகுதிக்குள் காஷ்மீரின் இன்னொரு பகுதி, ‘கில்ஜித் பலடிஸ்தான்’ என்று இருக்கிறது. (சமீபத்தில் காஷ்மீரில் இந்திய அரச படையால் சுட்டுக்கொல்லப்பட்ட லஷ்கர் ஈ தொய்பாவின் காஷ்மீர் தளபதி அபு துஜானா கில்ஜித் இந்தப் பகுதிக்காரர்).
காஷ்மீர் பகுதி தனி அந்தஸ்துடன் கூடிய பகுதியாக அறிவிக்கப்பட்டது. 1949 அக்டோபர் 17இல் தான். ஆர்டிகிள் 370 வந்தது. அதன்படி, இந்திய நடுவண் அரசு, பாதுகாப்பு, வெளி விவகாரம், தகவல் தொடர்பு ஆகிய மூன்றை மட்டுமே தீர்மானிக்கும். மற்றவற்றை காஷ்மீர் பகுதி ஆட்சியே தீர்மானிக்கும். அதன்படி, காஷ்மீர் பகுதிக்கு தனி தலைமை அமைச்சர் (பிரதமர்) உண்டு. காஷ்மீரின் இடைக்கால அரசாங்கத்தில், முதல் பிரதமராக ஷேக் அப்துல்லா நியமிக்கப்பட்டார். அப்போது இந்தியப் பிரதமராக இருந்தவர் ஜவஹர்லால் நேரு. இந்தியாவில் அப்போது இரண்டு பிரதமர்கள் இருந்தனர்.
அண்ணா இதைச் சுட்டிக்காட்டி கூட்டங்களில், ‘மாநில சுயாட்சி’ பற்றி பேசியதை நான் கேட்டிருக்கிறேன்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், வெளியார் யாரும் சொத்துகளை வாங்க முடியாது என்ற உரிமை சட்டப்பிரிவு 370இல் கொண்டு வரப்பட்டதாக எண்ணிக்கொண்டு சிலர் இப்போது, அந்த சட்டப்பிரிவை எதிர்த்து பேசி வருகிறார்கள். ஆனால், 1946ஆம் ஆண்டே, பஞ்சாபைத் சேர்ந்த பணக்கார முஸ்லிம்கள், ஜம்மு காஷ்மிரில் சொத்துகளை வாங்க முயன்றபோது, காஷ்மீரில் வாழ்ந்துவந்த பண்டிதர்களின் நிர்பந்தத்தால், மஹாராஜா ஹரிசிங் கொண்டுவந்த சட்டம்தான் காஷ்மீருக்குள் வெளி வட்டாரத்தார்கள் சொத்துகளை வாங்கக் கூடாது என்ற சட்டம். ஆனால் 370ஆவது சட்டப்பிரிவு, 1949இல்தான் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு விவரம் புரியாமலே ‘வெறுப்பு’ பரப்பப்படுகிறது.
திடீரென ஷேக் அப்துல்லா 1953ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி இந்திய அரசால் கைது செய்யப்படுகிறார். தமிழ்நாட்டில் உள்ள கொடைக்கானலில், பிறகு டெல்லியில், பிறகு மீண்டும் தமிழ்நாட்டில் உள்ள நீலகிரியில் சிறை வைக்கப்படுகிறார். ஷேக் அப்துல்லாவுக்குப் பதிலாக, நேருவுக்கு வேண்டிய பக்ஷி குலாம் முஹம்மது காஷ்மீர் பிரதமராக அறிவிக்கப்படுகிறார். மேற்கண்ட ஒப்பந்தங்களுக்கெல்லாம் மாறுபட்டு, 1957 ஆம் ஆண்டு இந்தியா, ‘காஷ்மீர் முழுமையுமே, இந்திய அரசுக்குச் சொந்தமானது’ என்று அறிவித்தது.
1965இல் பாகிஸ்தான் சட்டவிரோதமாக காஷ்மீருக்குள் ஊடுருவல் செய்ததால் இரண்டாவது இந்தியா - பாகிஸ்தான் போர் உருவானது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் மூன்று பகுதிகளாக ஜம்மு, லடாக், காஷ்மீர் என்று பிரிக்கப்படுகிறது. தனி மாநிலமாக தனது சட்டங்களை அமலாக்கி வந்த காஷ்மீரில் இப்போது இந்தியாவின் 300 சட்டங்கள் அமலாக்கப்பட்டு வருகின்றன.
இந்திய அரசின் ஆள் தூக்கி சட்டங்களான, ஆயுதப் படைகளின் சிறப்பு அதிகாரச் சட்டம், பொது பாதுகாப்புச் சட்டம், பயங்கரவாத தடுப்பு சட்டம் (போடோ) மற்றும் தடா ஆகியவை மனித உரிமைகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. 1990இல் ஆயுதப் படைகளின் சிறப்பு அதிகாரச் சட்டம் ஜம்மு காஷ்மீருக்குள் நுழைந்தது. பதினேழு ஆண்டுகளில், பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், 16,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2002இல் ‘பயங்கரவாத தடைச் சட்டம்’ கொண்டுவரப்பட்டது. ‘திட்டமிட்டுக் காணாமல் ஆக்கப்பட்டோர்’ எண்ணிக்கை அதிகமானது. அதன் விளைவாக, பெண்கள் ‘அரை விதவை’ ஆக்கப்பட்டனர். 208 இடங்களில் கொன்று புதைக்கப்பட்டவர்கள் இடுகாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 2,500 இடங்களில் மொத்தமாக பிணங்கள் புதைக்கப்பட்டுள்ளன. சித்ரவதை செய்து விசாரிக்க ஒரு மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஷேக் அப்துல்லா 1953இல் இருந்து, 1964 வரை சிறையில் வைக்கப்பட்டார். பிறகு விடுதலையாகி, பாகிஸ்தான் ராவல்பிண்டியில் இருந்தார். அவர் பாகிஸ்தானுடன் ஓர் ஒப்பந்தம் கையெழுத்துப் போட இருந்தநேரத்தில் நேரு மறைந்தார். 1975இல் ஷேக் அப்துல்லா இந்தியாவிடம் சரணடைந்து, காஷ்மீரின் முதல்வராக ஆனார். ஜம்மு காஷ்மீரில் இருக்கும் 50 லட்சம் மக்களைக் கவனிக்க, இந்திய ராணுவத்தின் ஏழு லட்சம் அங்கே நின்று கொண்டிருக்கின்றனர். ஷேக் அப்துல்லாவின் தேசிய முன்னணி கட்சி 85 தொகுதிகளில், 67இல் வெற்றி பெற்றது. அதனால் அவர்கள், ‘சுயாட்சி’ என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.
1999 முதல் 2004 வரை வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி இந்தியாவை ஆண்டது. வாஜ்பாயின் அணுகுமுறை காஷ்மீர் மக்களுக்கு ‘இதமாக’ இருந்தது. அவர் மனிதாபிமானத்தோடு நடந்துகொண்டார். வாஜ்பாய் பேச்சுவார்த்தை வழியை நாடினார். காஷ்மீருக்குள்ளும் பேச்சுவார்த்தை, பாகிஸ்தானுடனும் பேச்சுவார்த்தை என்ற வழியைக் கடைப்பிடித்தார். அவருக்கு அதற்கான ‘அரசியல் திடம்’ இருந்தது. இப்போது முப்தி முஹம்மது செய்யது தலைமையிலான ‘மக்கள் ஜனநாயகக் கட்சி’ (பி.டி.பி), பாஜக-வை நம்பியது. ஆறு மாதங்களில், எந்த மாற்றமும் இல்லை. காஷ்மீர் இளைஞர்கள் மிகவும் ஆக்ரோஷத்தோடு இருக்கிறார்கள். மோடி, வாஜ்பாய் போல இல்லை.” இவ்வாறு அந்த ஊடகவியலாளர் கூறினார்.
அவரது உரை முடிந்து, கேள்வி நேரத்தில், “காங்கிரஸ் தலைமையிலான ‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி’ ஆட்சிக்கும், பாஜக தலைமையிலான ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி’ ஆட்சிக்கும், காஷ்மீரைக் கையாள்வதில் மாறுபாடு இருக்கிறதா” என்றால், “இல்லை” என்கிறார்.
“காஷ்மீரில் ஹுரியத் மாநாடு கூட்டணிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறதா?” என்ற கேள்விக்கும் “இல்லை” என்கிறார்.
“அமெரிக்கா சமீபத்தில், ஜம்மு காஷ்மீரைக் குறிப்பிடும்போது, இந்திய அரசால், ‘நிர்வகிக்கப்படும் பகுதி’ என்று கூறியதன் மர்மம் என்ன” என்று வினவினோம்.
“சீனாவை எதிர்ப்பதற்காக, அமெரிக்கா காஷ்மீரை ஒரு சுயாட்சி பகுதியாக ஆக்கத் துடிக்கிறதோ என்பது தெரியவில்லை. தனக்கு காஷ்மீரில் அதன்மூலம் ஒரு விமானத்தளத்தை ஏற்படுத்திக் கொண்டு, சீனாவை எதிர்க்க எண்ணுகிறதோ, என்னவோ” என்கிறார்.
அடுத்து, “பிரதமர் நரேந்திர தாமோதர மோடி அவர்கள், நாகாலாந்தில் நாற்பது ஆண்டுகளுக்கு மேல், ஆயுதம் தாங்கிய விடுதலைப் போரை நடத்தி வரும் என்.எஸ்.சி.என். (ஐ.எம்) என்ற நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சில் (ஐசக்-முய்வா) உடன் ஓர் ஒப்பந்தம் கையெழுத்துப் போட்டுள்ளார். அதன்படி, நாகாலாந்துக்கு ‘இறையாண்மை’ கொடுக்க இருப்பதாக செய்திகள் கசிகிறதே. அதுபோல காஷ்மீருக்குச் சாத்தியமில்லையா?” என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.
அதற்கு டாக்டர் ராஜா முசாபர் பட் பதிலளிக்கையில், “மோடி இன்று மக்களவையில் பெரும்பான்மை பெற்றுள்ளார். மாநிலங்களவையில் கணிசமாக வந்துவிட்டார். அவருக்கு ‘அரசியல் திடம்’ இருக்குமானால் அவர் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணலாம். அவர் வாஜ்பாய் போல இல்லையே?”. இவ்வாறு அந்த ஊடகவியலாளர் வருந்தினார்.
கலந்துரையாடலை ஏற்பாடு செய்த, மனிதநேய மக்கள் கட்சியின் வழக்கறிஞர் அணிக்கும் நன்றியைக் கூறிக்கொண்டு வெளியேறினோம்.

No comments:

Post a Comment