Friday, August 25, 2017

குர்மீத் ராம் ரஹீம் சிங் ‘மனிதக் கடவுள்’ ஆனது எப்படி?

சிறப்புக் கட்டுரை: குர்மீத் ராம் ரஹீம் சிங் ‘மனிதக் கடவுள்’ ஆனது எப்படி? - டி.எஸ்.எஸ்.மணி

சிறப்புக் கட்டுரை: குர்மீத் ராம் ரஹீம் சிங் ‘மனிதக் கடவுள்’ ஆனது எப்படி? - டி.எஸ்.எஸ்.மணி
ஒரு மதத் தலைவருக்குப் பின்னால் எப்படி இவ்வளவு மக்கள் கூட்டம் திரண்டது? ஏன் பஞ்சாப் மாநிலமும், அரியானா மாநிலமும், சண்டிகர் யூனியன் பகுதியும் அலறுகின்றன? மத்திய ஆட்சி ஏன் மிரள்கிறது?
பஞ்சகுல்லாவில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இந்த குர்மீத் ராம் ரஹீம் சிங் மீது 2002ஆம் ஆண்டு போடப்பட்ட பாலியல் குற்ற வழக்கை அநாமதேயக் கடிதங்களுக்குப் பிறகு நீதிமன்றம் தானாகவே முன்னெடுத்து சி.பி.ஐ. வசம் ஒப்படைத்து விசாரிக்கப்பட்டு இரண்டு பெண் சிஷ்யர்களைப் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாகிய வழக்காகப் பதிவு செய்யப்பட்டது. அந்த இரண்டு பெண் சிஷ்யர்களில் ஒருவர் வயதுக்கு வராத சிறுமி. இன்று அறிவிக்கப்பட்ட தீர்ப்பில், குர்மீத் ராம் ரஹீம் சிங் ‘குற்றவாளி’ எனக் கூறப்பட்டு, எத்தகைய தண்டனை என்பது வருகிற 28 அன்று அறிவிக்கப்படும் என நீதிமன்றம் கூறியுள்ள நேரத்தில், குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் எனக் கூறுகிறார்கள். சிறுமி பாதிக்கப்பட்டதால், தண்டனை கூடும் என்ற கருத்தும் உள்ளது.
வெள்ளிக்கிழமை தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்பே, விசாரணை, விவாதங்கள் ஆகியவை அரசு தரப்பிலும் குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பிலும் முடிந்துவிட்டன. வெள்ளிக்கிழமை தீர்ப்பை எதிர்பார்த்து லட்சக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் இரண்டு மாநிலங்களிலும் ஒரு யூனியன் பகுதியிலும் திரண்டிருந்தனர். பல தொண்டர்கள் கைகளில் ஐந்தடி நீளக் கம்புகளை வைத்திருந்தனர். இவர் தனது ஆசிரமமான ‘சிரசி’யிலிருந்து பஞ்சகுலா நீதிமன்றத்துக்குப் புறப்பட்டு வரும்போதும் 200 கார்களுடன் பவனி வந்தார். இதை எதிர்பார்த்து 150 பட்டாலியன் துணை ராணுவமும் ராணுவமும்கூட வரவழைக்கப்பட்டிருந்தனர். அதற்கு முன்பே கைபேசிகளையும் இணையத் தொடர்புகளையும், அரசு தற்காலிகமாக ரத்து செய்து வைத்திருந்தது. செய்தி பரவக் கூடாது என்ற அரசின் கவனம் அது. 230 தொடர் வண்டிகளும் பேருந்துகளும் ஆகஸ்ட் 24 முதல் 27 வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டிருந்தன.
மதியம் 2.30-க்கு என்று கூறி, 2.50-க்கு அவர் ‘குற்றவாளி’ என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது. எந்த ஒரு தொடர்பு சாதனங்களும் இல்லாததால், ஆதரவாளர்கள் பல்லாயிரக்கணக்கில் நீதினமன்றம் முன்பு கூடியிருந்தவர்கள், விடுதலை என்ற தவறான செய்தியைக் கேள்விப்பட்டு ஆரவாரத்தில் கொண்டாடினர். இதேபோல, ஒரு தலைவர் ‘பிணையில் விடுதலை’ என்ற தவறான செய்தியால், தமிழகத்தில் குறிப்பாக காளையர்கோவிலில் வெடி போட்டு, கோபுரத்தில் போட்ட சரம் தீப்பற்றி எரிந்தது தமிழகத்தில்கூட நடந்துள்ளது. பிறகு உண்மைத் தீர்ப்பு கேள்விப்பட்டு வன்முறைகளில் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் ஆதரவாளர்கள் ஈடுபட்டனர்.
இரண்டு மாநிலத்திலும் ரயில்வே நிலையங்களும் நீதிமன்றம் அருகே பெட்ரோல் பங்குகளும் தீக்கிரையாகின. பிரபல தொலைக்காட்சி ஊடக வாகனம் தீக்கிரையானது. 17 பேர் பலியானதாகவும் 200 பேர் காயம்பட்டதாகவும் முதலில் தெரிந்தது. வன்முறையும் தொடர்கிறது. ராணுவமும் துணை ராணுவமும் இறங்கி அடிக்கின்றனர்; சுடுகின்றனர். பலிகள் கூடிக்கொண்டே போகும்.
இதை பற்றிய செய்தியை நமது மாநிலத்தில், ‘கற்பழிப்பு சாமியார்’ எனப் போடுகிறார்கள். இவர் வெறும் கற்பழிப்புக் குற்றவாளியாக மட்டுமே பார்க்கப்பட்டாரா? அப்படியானால் எப்படி இந்த அளவுக்கு மக்கள் லட்சக்கணக்கில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட இவருக்குப் பின்னால் மட்டுமல்ல, இவருக்கு ஆதரவாகத் தெருவுக்கு வந்து போராட முடியும்? தமிழ்நாட்டிலும் ஒரு சாமியார் வன்புணர்ச்சிக்காக இரண்டு ஆயுள் தண்டனை வாங்கிய வரலாறு உண்டு. எத்தனை பேர் அவருக்காகப் போராட வந்தார்கள்?
இந்த குர்மீத் ராம் ரஹீம் சிங் உதவியை நாடி 2012ஆம் ஆண்டு அதாவது இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, காங்கிரஸ் கட்சி தேர்தலில் ஆதரவு கேட்டு வந்தது. இவரும் அப்போது காங்கிரஸை ஆதரித்தார். அடுத்து 2014ஆம் ஆண்டு, பாரதிய ஜனதா இவரது ஆதரவைக் கேட்டார்கள். இவரும், பாஜக-வுக்கு ஆதரவு கொடுத்தார். ஏன் இப்படிப் பெரிய கட்சிகள் எல்லோரும் இவருக்கு பின்னால் சென்றார்கள்? அப்படியானால் அந்தப் பெரிய கட்சிகளை விட இவர் அந்த வட்டாரத்தில் பெரியவர் என்றுதானே பொருள்? ஏன் இவருக்கு இந்த அளவுக்கு ஆதரவு?
சீக்கிய மதத்தில் சாதிகள் கிடையாது என்பதுதானே பொதுவான புரிதலாக இங்கே இருக்கிறது? உண்மை நிலை அப்படி இல்லை. சீக்கிய மதத்திலிருந்து வெளியே வந்த ஒடுக்கப்பட்ட மக்களது தலைவரான இவர், இந்து மதத்தின் சாதிக் கட்டமைப்பையும் ஏற்றுக்கொள்ளாமல், தனித்த அடையாளத்தைக் காட்டி உருவாக்கியதுதான் ‘தேரா சச்சா சவுதா’. இவரது ஆதரவாளர்களில், பெண்கள் அதிகம். குர்மீத் ராம் ரஹீம் சிங் தலைமை தாங்கும் ‘தேரா சச்சா சவுதா’ என்ற மதப் பிரிவு, ‘சாதிகள் கூடாது’ என்ற சமூக நீதியைப் பரப்புரை செய்து நடைமுறைப்படுத்துகிறது. அதற்கே உரித்தான ஆதரவு இருக்கத்தானே செய்யும்? சாதிகளை எதிர்த்த தலைவர்களைப் புரிந்துகொண்டுள்ள தமிழ் மண், அவர்கள் பின்னால் திரண்ட மக்கள் கூட்டத்தையும் உணர்ந்துள்ள தமிழ் மண் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அடுத்து 104 நல்வாழ்வுத் திட்டங்களை இவர் அமல்படுத்திவருகிறார். அதில், குறைந்த விலைக்கு உணவுப் பொருள்கள் வழங்குகிறார். இங்கே அதுபோல செய்பவர்களை, ஏழை மக்கள் அணிதிரண்டு அரசியல் தலைமையில் ஏற்றுக்கொள்கிறார்களே அதுபோல. அடுத்து, இலவசமாக மருந்துகளை வழங்குகிறார். இங்கும்கூட, அரசியல் தலைமைகள், இலவச மருத்துவமனைகளையும் குறைந்த விலைக்கு மருந்துகளையும் வழங்கி எளிய மக்களைக் கவர்வதில்லையா? அதுபோல. நல்வாழ்வுத் திட்டங்களை வழங்கும் பணியை அரசு செய்யாதபோது, அதைச் செய்கின்ற மதத் தலைவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்களா?
ஆகவே, பின்தங்கியுள்ள மக்களை, கோடிக்கணக்கில் பின்தங்கியவர்களாகவே தக்கவைத்துக்கொள்ளும் ஒரு மோசமான சமூக, பொருளாதார, அரசியல் சூழ்நிலையை ஆளவந்தோர் தக்கவைத்துக்கொள்ளும் வரை சாதி, மத, வேறுபாடுகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டுள்ள ஒரு சமூகத்தை நாம் வைத்துக்கொண்டிருந்தால், அங்கே சமத்துவம் பேசுபவர்கள், நல்வாழ்வுத் திட்டம் தருபவர்கள் பின்னால்தான் கோடிக்கணக்கில் மக்கள் அணி திரள்வார்கள். அந்த உண்மையைத்தான் நாம் பஞ்சாப், அரியானா மாநிலங்களில் சந்திக்கிறோம்.
அதற்காகப் பாலியல் வன்முறையைச் செய்தவரை எப்படி ஆதரிக்க முடியும் என்பது நியாயமான கேள்வி. ஆனால், இவ்வாறு அணி திரண்டுள்ள மக்கள், இன்றைய ஆள்வோர்மீது நம்பிக்கை இல்லாத சூழ்நிலையில், சாதாரணப் பொதுமக்கள் இது போன்ற சாமியார்களை நம்புவதும் அரசு வேண்டுமென்றே பொய் வழக்குகளைப் போட்டுள்ளதாகக் கருதுவதும் நடக்கத்தான் செய்யும். அதையும் தாண்டி, இந்த குர்மீத் ராம் ரஹீம் சிங் ஒரு திரைப்பட நடிகராகவும் ஆகிவிட்டார். கேட்கவா வேண்டும்? சில படங்களில் இவர் பெரிய கதாநாயகனாக நடித்துள்ளார். ஆளும் பொலிவுடன் உயரமாக, தாடி வைத்து ஆக்ரோஷத்துடன் தோற்றமளிப்பார். இவையெல்லாம் இருப்பதால்தான் இவருக்குப் பின்னால் மக்கள் கூட்டமும் அரசியல் கட்சிகளும் செல்கின்றன என்பதே இன்றைய நிலை.
எளிய மக்கள் மத்தியில்தான் பிரபலம் என்று நினைத்தால் அது தவறு. படித்த, பணக்கார, மேல்நிலை வாழ்க்கையில் உள்ளோரும் இவரை அதிகமாக நேசிக்கிறார்கள், அணி திரள்கிறார்கள் என்கின்றன ஊடகங்கள். அது மட்டுமின்றி, நீதிமன்றம் முன்னால் திரண்ட 300 ஊடகங்களில், வெளியூர் ஊடகத்தார் இவரை பாலியல் குற்றவாளி எனப் புரிந்துகொண்டு செய்தி எடுக்கும்போது, உள்ளூர் ஊடகவியலாளர் ஒருவரிடம், ஆங்கிலக் காட்சி ஊடகம் கேட்கிறது: “ஏன் இவருக்குப் பின்னால் இவ்வளவு கூட்டம்?” அதற்கு அவர் பதில் கூறுகிறார்: “ஒரு பேரிடர் வருமானால், இவரது ஆதரவாளர்கள்தான் அங்கே களத்தில் இறங்கி உதவிகள் அனைத்தும் செய்வார்கள். பாலியல் தொழிலுக்குச் செல்லும் பெண்கள் பல நூறு பேரை இவரது ஆதரவாளர்கள் மீட்டு, திருமணம் செய்து வைத்துள்ளனர்.”
அதாவது சமூக அர்ப்பணிப்புள்ள, சமூக நீதியைப் பரப்புகின்ற, நல்வாழ்வுத் திட்டங்களைச் செயல்படுத்துகிற ஒரு கூட்டத்தையும், அதன் தலைவரான குர்மீத் ராம் ரஹீம் சிங்கையும், மக்கள் மனிதக் கடவுளாகப் பார்க்கிறார்கள் என்று புரிந்துகொள்ள முடிகிறது. அப்படியானால், இந்த நற்பணிகளைச் செய்ய வேண்டிய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்வி தானே எழுகிறது.
கட்டுரையாளர்: டி.எஸ்.எஸ்.மணி
தமிழின் முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவர். இந்திய அளவில் கவனிக்கத்தக்க பல முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் தொடர்ச்சியாக கலந்துகொண்டு அரசியல் நிகழ்வுகளை விவாதித்து வருபவர்.
கட்டுரையாளர் தொடர்புக்கு: manitss.mani@gmail.com

Wednesday, August 9, 2017

வெடிமருந்து பற்றாக்குறையும் பாஜக அரசின் தோல்வியும் -

சிறப்புக் கட்டுரை: வெடிமருந்து பற்றாக்குறையும் பாஜக அரசின் தோல்வியும் - Azhageswaran, Trade union leader, Ordinance Factory, Tiruchi.

சிறப்புக் கட்டுரை: வெடிமருந்து பற்றாக்குறையும் பாஜக அரசின் தோல்வியும் - டி.எஸ்.எஸ்.மணி
கடந்த 21.07.2017 அன்று தலைமை தணிக்கை (சி.ஏ.ஜி) அதிகாரியின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் ராணுவத்தின் போர் ஆயத்தநிலை குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. குறிப்பாகப் போர் ஏற்பட்டால் 10 நாள்களுக்குத் தாக்குப்பிடிக்கும் அளவில் மட்டுமே இந்திய ராணுவத்திடம் ஆயுத வெடிபொருள்கள் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் சி.ஏ.ஜி. அறிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பினர். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜெட்லி, “சி.ஏ.ஜி. அறிக்கையில் ஆயுத வெடிபொருள்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திலிருந்த பற்றாக்குறை பற்றியே குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அதில் குறிப்பிட்டிருந்த காலகட்டத்துக்குப் பிறகு ஏராளமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆயுதங்கள், வெடிபொருள்கள் கொள்முதல் செய்வதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்பட்டுள்ளன. ஆயுதங்கள், வெடிபொருள்களை வாங்குவதற்கான அதிகாரம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. எனவே நாட்டைப் பாதுகாக்க போதுமான அளவு ஆயுதங்களும், வெடிபொருள்களும் இந்தியப் படைகளிடம் உள்ளது” என்று விளக்கம் அளித்தார்.
இவ்வாண்டு மட்டுமல்ல, கடந்த நான்கு ஆண்டுகளாக சி.ஏ.ஜி. ஆயுத வெடிபொருள்களில் நிலவிவரும் பற்றாக்குறை குறித்து தனது அறிக்கையில் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறது. ஆனால், டோக்லாம் பிரச்னையின் காரணமாக இந்தியாவுக்கும், சீனாவுக்குமிடையில் ஒரு போர்ச்சூழல் உருவாகியுள்ள நிலையில் இம்முறை சி.ஏ.ஜி. அறிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் கடும் விவாதங்கள் எழுந்தன.
சி.ஏ.ஜி. அறிக்கையில் வெடிபொருள் பற்றாக்குறை குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ள விவரங்களை மறுத்து ‘நாட்டைப் பாதுகாக்க போதுமான அளவு ஆயுதங்களும், வெடிபொருள்களும் இந்தியப் படைகளிடம் உள்ளது’ என்று பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்த கருத்துகள் உண்மைதானா? இதை தெளிவுபடுத்திக்கொள்ள பாஜக அரசு பதவியேற்ற பின்னர், வெடிபொருள்கள் பற்றாக்குறை பிரச்னைக்குத் தீர்வு காணுவதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும்.
முதலாவதாக, கடந்த செப்டம்பர் 18இல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் உரி ராணுவ முகாம்மீது தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து ஆலோசிப்பதற்காகப் பாதுகாப்புக்கான அமைச்சரவைக்குழு கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பாகிஸ்தான் மீது போர் தொடுப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அக்கூட்டத்தில் கலந்துகொண்ட முப்படைத் தளபதிகள், ஆயுதப்படைகளிடம் போதுமான வெடிபொருள்கள் இல்லை என்பதை சுட்டிக்காட்டினார்கள். அதன் பின்னரே அரசு இப்பிரச்னைமீது கவனம் செலுத்தத் தொடங்கியது.
அக்கூட்டத்தில் வெடிபொருள்கள் பற்றாக்குறைக்குத் தீர்வு காணுவதற்கான முடிவும் எடுக்கப்பட்டது. அதாவது அவசரத்தேவை கருதி தரைப்படை மற்றும் விமானப்படையின் துணைத்தளபதிகள், பற்றாக்குறை நிலவும் வெடிபொருள்களைத் துரித வழியில் கொள்முதல் செய்து கொள்வதற்கான அதிகாரங்களை வழங்குவதென முடிவு செய்யப்பட்டது. இதற்காக உயரதிகாரிகள், ஆயுதப்படைகளின் பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் நிதிப்பிரிவு பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுக்கள் அமைக்கப்பட்டன. இக்குழுக்கள் செப்டம்பர் மாத இறுதியில் ரஷ்யா மற்றும் இஸ்ரேல் நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டு வெடிபொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.
இக்குழுக்களுக்கு டிசம்பர் மாதம் வரையிலான மூன்று மாதங்களுக்கு மட்டுமே கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டது. பின்னர் அது மேலும் மூன்று மாதங்களுக்கு அதாவது மார்ச் 2017 வரை நீட்டிக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் ரூ.12,000 கோடி மதிப்பீட்டில் 11 வகையான வெடிபொருள்களைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பின்னர் அக்குழுக்களுக்கு அதிகாரங்கள் விரிவுபடுத்தப்படவில்லை. ஒப்பந்தங்கள் அதே நிலையில் இருந்தது.
இரண்டாவதாக, கடந்த 2016 நவம்பர் மாதம் இந்தியத் தனியார் நிறுவனங்களிடமிருந்து வெடிபொருள்களைக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை ராணுவம் மேற்கொண்டது. இதையொட்டி எட்டு வகையான வெடிபொருள்களின் தேவைக் குறித்த அறிவிப்பை ராணுவம் வெளியிட்டது. இந்த வெடிபொருள்களை ராணுவத்துக்கு விநியோகிக்கத் தயாராக உள்ள நிறுவனங்களின் விருப்பங்கள் கோரப்பட்டது. ஆனால், இந்த நடைமுறைகளில் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களும், படைக்கலத் தொழிற்சாலைகளும் பங்கேற்கக் கூடாது என்று கட்டுப்பாடுகளை விதித்தது.
அத்துடன் ரூ.100 கோடி சொத்து மதிப்பும், கடந்த மூன்றாண்டுகளாக ரூ.200 கோடிகளுக்கு மேல் வர்த்தகம் செய்துள்ள நிறுவனங்கள் மட்டுமே இந்த நடைமுறைகளில் பங்கேற்க வேண்டும் என்று அவ்வறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மேற்கண்ட நிதி வரம்புக்குள் வரமுடியாத சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ராணுவத்தின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நிதி வரம்புகளைத் தளர்த்தும்படி கோரிக்கை விடுத்தன.
இதேவேளையில், 2017 மார்ச் மாதத்தில் படைக்கல சர்வீஸ் துறை தனியார் நிறுவனங்களிடமிருந்து வெடிபொருள்களைக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. ராணுவம் அறிவித்ததுபோல், எட்டு வகை வெடிபொருள் தேவை குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த நடைமுறைகளிலும் பாதுகாப்பு, பொதுத்துறை நிறுவனங்களும், படைக்கலத் தொழிற்சாலைகளும் பங்கேற்க முதலில் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், திடீரென கடந்த ஜூன் மாதம் பொதுத்துறை நிறுவனங்களும், படைக்கலத் தொழிற்சாலைகளும் இந்த நடைமுறைகளில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு தனியார் நிறுவனங்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியது. ஏற்கெனவே வெடிபொருள்கள் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பையும், வெளிநாடுகளிடமிருந்து வெடிபொருள்களைத் தயாரிப்பதற்கான தொழில்நுட்ப பரிமாற்ற உரிமங்களையும் பெற்றிருக்கும் படைக்கலத் தொழிற்சாலைகளை இந்த நடைமுறைகளில் பங்கேற்க அனுமதித்தால் அந்நிறுவனங்கள் குறைந்த விலைக்கு வெடிபொருள்களை விநியோகம் செய்ய முன்வரும். இது தங்களைப் பாதிக்கும் என்று தனியார் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தற்போது இதுகுறித்து இறுதி முடிவு எடுப்பதற்காகப் பிரதமர் அலுவலகத்துக்குப் பிரச்னை கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில்தான் தற்போது சி.ஏ.ஜி. அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை வெளியாகவிருந்த நேரத்தில்தான், கடந்த மார்ச்சுடன் நிறைவுற்ற துணைத்தளபதிகள் வெடிபொருள்களைக் கொள்முதல் செய்வதற்கான கூடுதல் அதிகாரம் தற்போது மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வெடிபொருள்கள், உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்துகொள்வதற்காக தனிநிதி ரூ.20,000 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது.
வெடிமருந்து கொள்முதல் நடைமுறைகள் இவ்வாறாக இருக்க. நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் பேசும்போது, “படைக்கலத் தொழிற்சாலைகள் வெடிபொருள்கள் தயாரிப்பில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறினார். ஆனால், வெடிபொருள்கள் தயாரிப்பதற்காக தொடங்கப்பட்ட நாளந்தா படைக்கலத் தொழிற்சாலையைச் செயல்பட வைப்பதற்கான நடவடிக்கைகளை இவ்வரசு மேற்கொள்ளவில்லை.
இந்த நிகழ்வுகள் அனைத்தும், வெடிபொருள்கள் பற்றாக்குறை குறித்து சி.ஏ.ஜி-யின் அறிக்கையில் சொல்லப்பட்ட கருத்துகள் சரியானவையே என்பதை உறுதி செய்கிறது. மேலும் கடந்த மூன்றாண்டுகளாக பாஜக ஆட்சியில் இப்பிரச்னையைத் தீர்ப்பதற்குச் சரியான, முழுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.

Sunday, August 6, 2017

வாஜ்பாய் - மோடி: காஷ்மீர் பத்திரிகையாளரின் ஒப்பீடு!

சிறப்புக் கட்டுரை: வாஜ்பாய் - மோடி: காஷ்மீர் பத்திரிகையாளரின் ஒப்பீடு! - டி.எஸ்.எஸ்.மணி

சிறப்புக் கட்டுரை: வாஜ்பாய் - மோடி: காஷ்மீர் பத்திரிகையாளரின் ஒப்பீடு! - டி.எஸ்.எஸ்.மணி
ஆகஸ்ட் 1இல், சென்னை வந்திருந்த காஷ்மீர் ஊடகவியலாளர் டாக்டர் ராஜா முசாபர் பட் அவர்களைச் சந்தித்து அவரது உரையாடலைக் கேட்கவும் கேள்விகளை எழுப்பவும் சென்றேன்.
வழமையாக காஷ்மீர் பற்றி நமது மக்களிடம் எடுத்துச்சொல்லும் ஊடகங்கள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், பாகிஸ்தான் ஊடுருவல்காரர்கள், கல் எறியும் இளைஞர்கள் ஆகியோர்தான் காஷ்மீர் வன்முறைகளுக்குக் காரணம் என்பதாகத் தொடர்ந்து கூறிவருகின்றன. இடையிடையே, இந்திய ராணுவமும், தனது மனித உரிமை மீறல்களால் அங்குள்ள நிலைமையை அசாதாரணமாக ஆக்கி வருகிறது என்ற செய்திகளும் நமது ஊடகங்களில் வருவதுண்டு. எப்படியோ பாகிஸ்தான்தான், காஷ்மீர் பிரச்னைக்கெல்லாம் முக்கியக் காரணம் என்பதுதான் நமக்கு ஆள்வோரால் மாறிமாறி சொல்லிக் கொடுக்கப்படுகிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி, வேறொரு செய்தியையும் கூறிவருகிறது. அதுதான் ஜம்மு காஷ்மீருக்குக் கொடுக்கப்பட்டுள்ள 370 என்ற சிறப்பு சட்டப்பிரிவு. அந்தச் சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என்ற குரலும் அவ்வப்போது எழுப்பப்படுகிறது. அதென்ன அவர்களுக்கு மட்டும் தனிச் சலுகை என்பது பல்வேறு இந்திய மக்கள் மத்தியில் எழுப்பப்படும் கேள்வி. எல்லா இந்தியரும் ஒன்றுதானே என்பதன் நியாய அடிப்படையில் சாதாரண மக்களுக்கு வரும் சந்தேகம் அது.
ஊடகவியலாளர் டாக்டர் ராஜா முசாபர் பட் பேசத் தொடங்கினார்.
“இந்தியச் சுதந்திரத்துக்கு முன்னால் ஆங்கிலேயர் இந்தியாவை ஆளும் காலத்தில், காஷ்மீர் தனி நாடாக இருந்தது. அங்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும், இந்துக்கள் [பண்டிட்கள்] சிறுபான்மையினராகவும் வசித்து வந்தார்கள். 1820 முதலே, காஷ்மீர் மன்னர்களால் ஆளப்பட்டது. அம்ரிஸ்டர் ஒப்பந்தம் என்ற பெயரில், ஜம்முவை ஆண்ட, டோக்ரா மன்னருக்குக் காஷ்மீர் விற்கப்பட்டது. 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றபோது, காஷ்மீர் இந்தியாவுடன் இல்லை. அப்போது காஷ்மீர் ஹரிசிங் என்ற இந்து மன்னனால் ஆளப்பட்டுக்கொண்டு இருந்தது. (நமக்கு ஒரு சந்தேகம். காஷ்மீர் இந்தியாவின் தலை, அதை விட்டுக்கொடுக்கக் கூடாது என்று சில தேச பக்தர்கள் இப்போது கூறுகிறார்களே? அப்படியானால் சுதந்திர இந்தியக் குழந்தை தலையில்லாமலா பிறந்தது? சரி. போகட்டும்)
அப்போது தனி நாடாக காஷ்மீர் இருப்பதை பொறுக்க முடியாத, பாகிஸ்தான், காஷ்மீர்மீது தனது ராணுவத்தை ஏவி, ஆக்ரமிக்க முனைந்தது. (நாங்க நாட்டை இரண்டா பிரிக்கிறோம். முஸ்லிம் எல்லோரும் அந்தப்பக்கம் போங்க... இந்துக்கள் எல்லோரும் இந்தப்பக்கம் வாங்க என்று கூப்பிட்டதை வைத்து, பாகிஸ்தான் முஸ்லிம்களுக்காக ஒதுக்கப்பட்டதனால், முஸ்லிம் அதிகம் வகிக்கும் காஷ்மீர் தங்களுக்கு என்று பாகிஸ்தான்காரன் நினைத்து விட்டான் போலிருக்கு) 1947 அக்டோபர் 22இல் பழங்குடி படையினரை ஏவி பாகிஸ்தான், ஜம்முமீது படையெடுத்து, ஏழே நாள்களில் ஆறு லட்சம் மக்களைக் கொன்று குவித்தது. இதை ஏற்றுக்கொள்ள முடியாத காஷ்மீரின் அரசர் மஹாராஜா ஹரிசிங், இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உதவியை நாடினார்.
காஷ்மீருக்குள் பிரபலமாக இருந்த ஷேக் அப்துல்லா மஹாராஜ் ஹரிசிங்குடன் சண்டை போட்டதால், மஹாராஜா ஹரிசிங் இந்தியாவுடன் ஒப்பந்தம் போட நிர்ப்பந்திக்கப்பட்டார். அதையொட்டி, 1947இல், அக்டோபர் 26ஆம் நாள் அன்று காஷ்மீர் மஹாராஜா ஹரிசிங், இந்திய அரசுடன் சில நிபந்தனைகளுடன் கூடிய ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 1947 ஆம் ஆண்டே, அக்டோபர் 27ஆம் நாள், அதாவது மறுநாளே, இந்தியாவில் அன்று பொது ஆளுநராக (கவர்னர் ஜெனரல்) இருந்த மவுன்ட் பாட்டன், காஷ்மீர் மஹாராஜா ஹரிசிங்குக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அதில், ‘காஷ்மீரில் சட்ட - ஒழுங்கு சரியாகி, அதன் மண்ணிலிருந்து ஆக்கிரமிப்பாளர்கள் (பாகிஸ்தான் படையினர்) அகற்றப்பட்ட பிறகு, காஷ்மீர் மக்களிடம் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தி அவர்களது கருத்துகளைக் கேட்டு பிறகு இந்திய அரசுடன் காஷ்மீரை இணைக்கலாம் என்று இந்திய அரசு விரும்புகிறது’ என்று எழுதியுள்ளார். இப்படித்தான், நிபந்தனையுடன் காஷ்மீர், இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
இத்தகைய இணைப்பை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் அன்று நேரு தலைமையிலான இந்திய அரசு, இந்தப் பிரச்னையை, ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சலுக்கு எடுத்துச் சென்றது. (இன்றைய இந்திய ஆட்சியாளர்கள் உலக அரங்குக்கு காஷ்மீர் பிரச்னையை எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று கூறி வருகிறார்கள்) அதையொட்டி, ஐ.நா. பாதுகாப்பு சபை போர் நிறுத்தத்தை அறிவித்து, எல்.ஓ.சி. என்ற ‘கட்டுப்பாட்டுக்குள் உள்ள எல்லை’ என்பதாக அறிவித்தது. அதுவே, பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள காஷ்மீரை, ஆசாத் காஷ்மீர் அல்லது பாக் ஆக்ரமிப்பு காஷ்மீர் என்றும் இந்தியப் பகுதிக்குள் உள்ள காஷ்மீரை, ஜம்மு காஷ்மீர் என்றும் அழைக்கத் தொடங்கினோம். ஆனால், பாகிஸ்தான் பகுதிக்குள் காஷ்மீரின் இன்னொரு பகுதி, ‘கில்ஜித் பலடிஸ்தான்’ என்று இருக்கிறது. (சமீபத்தில் காஷ்மீரில் இந்திய அரச படையால் சுட்டுக்கொல்லப்பட்ட லஷ்கர் ஈ தொய்பாவின் காஷ்மீர் தளபதி அபு துஜானா கில்ஜித் இந்தப் பகுதிக்காரர்).
காஷ்மீர் பகுதி தனி அந்தஸ்துடன் கூடிய பகுதியாக அறிவிக்கப்பட்டது. 1949 அக்டோபர் 17இல் தான். ஆர்டிகிள் 370 வந்தது. அதன்படி, இந்திய நடுவண் அரசு, பாதுகாப்பு, வெளி விவகாரம், தகவல் தொடர்பு ஆகிய மூன்றை மட்டுமே தீர்மானிக்கும். மற்றவற்றை காஷ்மீர் பகுதி ஆட்சியே தீர்மானிக்கும். அதன்படி, காஷ்மீர் பகுதிக்கு தனி தலைமை அமைச்சர் (பிரதமர்) உண்டு. காஷ்மீரின் இடைக்கால அரசாங்கத்தில், முதல் பிரதமராக ஷேக் அப்துல்லா நியமிக்கப்பட்டார். அப்போது இந்தியப் பிரதமராக இருந்தவர் ஜவஹர்லால் நேரு. இந்தியாவில் அப்போது இரண்டு பிரதமர்கள் இருந்தனர்.
அண்ணா இதைச் சுட்டிக்காட்டி கூட்டங்களில், ‘மாநில சுயாட்சி’ பற்றி பேசியதை நான் கேட்டிருக்கிறேன்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், வெளியார் யாரும் சொத்துகளை வாங்க முடியாது என்ற உரிமை சட்டப்பிரிவு 370இல் கொண்டு வரப்பட்டதாக எண்ணிக்கொண்டு சிலர் இப்போது, அந்த சட்டப்பிரிவை எதிர்த்து பேசி வருகிறார்கள். ஆனால், 1946ஆம் ஆண்டே, பஞ்சாபைத் சேர்ந்த பணக்கார முஸ்லிம்கள், ஜம்மு காஷ்மிரில் சொத்துகளை வாங்க முயன்றபோது, காஷ்மீரில் வாழ்ந்துவந்த பண்டிதர்களின் நிர்பந்தத்தால், மஹாராஜா ஹரிசிங் கொண்டுவந்த சட்டம்தான் காஷ்மீருக்குள் வெளி வட்டாரத்தார்கள் சொத்துகளை வாங்கக் கூடாது என்ற சட்டம். ஆனால் 370ஆவது சட்டப்பிரிவு, 1949இல்தான் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு விவரம் புரியாமலே ‘வெறுப்பு’ பரப்பப்படுகிறது.
திடீரென ஷேக் அப்துல்லா 1953ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி இந்திய அரசால் கைது செய்யப்படுகிறார். தமிழ்நாட்டில் உள்ள கொடைக்கானலில், பிறகு டெல்லியில், பிறகு மீண்டும் தமிழ்நாட்டில் உள்ள நீலகிரியில் சிறை வைக்கப்படுகிறார். ஷேக் அப்துல்லாவுக்குப் பதிலாக, நேருவுக்கு வேண்டிய பக்ஷி குலாம் முஹம்மது காஷ்மீர் பிரதமராக அறிவிக்கப்படுகிறார். மேற்கண்ட ஒப்பந்தங்களுக்கெல்லாம் மாறுபட்டு, 1957 ஆம் ஆண்டு இந்தியா, ‘காஷ்மீர் முழுமையுமே, இந்திய அரசுக்குச் சொந்தமானது’ என்று அறிவித்தது.
1965இல் பாகிஸ்தான் சட்டவிரோதமாக காஷ்மீருக்குள் ஊடுருவல் செய்ததால் இரண்டாவது இந்தியா - பாகிஸ்தான் போர் உருவானது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் மூன்று பகுதிகளாக ஜம்மு, லடாக், காஷ்மீர் என்று பிரிக்கப்படுகிறது. தனி மாநிலமாக தனது சட்டங்களை அமலாக்கி வந்த காஷ்மீரில் இப்போது இந்தியாவின் 300 சட்டங்கள் அமலாக்கப்பட்டு வருகின்றன.
இந்திய அரசின் ஆள் தூக்கி சட்டங்களான, ஆயுதப் படைகளின் சிறப்பு அதிகாரச் சட்டம், பொது பாதுகாப்புச் சட்டம், பயங்கரவாத தடுப்பு சட்டம் (போடோ) மற்றும் தடா ஆகியவை மனித உரிமைகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. 1990இல் ஆயுதப் படைகளின் சிறப்பு அதிகாரச் சட்டம் ஜம்மு காஷ்மீருக்குள் நுழைந்தது. பதினேழு ஆண்டுகளில், பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், 16,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2002இல் ‘பயங்கரவாத தடைச் சட்டம்’ கொண்டுவரப்பட்டது. ‘திட்டமிட்டுக் காணாமல் ஆக்கப்பட்டோர்’ எண்ணிக்கை அதிகமானது. அதன் விளைவாக, பெண்கள் ‘அரை விதவை’ ஆக்கப்பட்டனர். 208 இடங்களில் கொன்று புதைக்கப்பட்டவர்கள் இடுகாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 2,500 இடங்களில் மொத்தமாக பிணங்கள் புதைக்கப்பட்டுள்ளன. சித்ரவதை செய்து விசாரிக்க ஒரு மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஷேக் அப்துல்லா 1953இல் இருந்து, 1964 வரை சிறையில் வைக்கப்பட்டார். பிறகு விடுதலையாகி, பாகிஸ்தான் ராவல்பிண்டியில் இருந்தார். அவர் பாகிஸ்தானுடன் ஓர் ஒப்பந்தம் கையெழுத்துப் போட இருந்தநேரத்தில் நேரு மறைந்தார். 1975இல் ஷேக் அப்துல்லா இந்தியாவிடம் சரணடைந்து, காஷ்மீரின் முதல்வராக ஆனார். ஜம்மு காஷ்மீரில் இருக்கும் 50 லட்சம் மக்களைக் கவனிக்க, இந்திய ராணுவத்தின் ஏழு லட்சம் அங்கே நின்று கொண்டிருக்கின்றனர். ஷேக் அப்துல்லாவின் தேசிய முன்னணி கட்சி 85 தொகுதிகளில், 67இல் வெற்றி பெற்றது. அதனால் அவர்கள், ‘சுயாட்சி’ என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.
1999 முதல் 2004 வரை வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி இந்தியாவை ஆண்டது. வாஜ்பாயின் அணுகுமுறை காஷ்மீர் மக்களுக்கு ‘இதமாக’ இருந்தது. அவர் மனிதாபிமானத்தோடு நடந்துகொண்டார். வாஜ்பாய் பேச்சுவார்த்தை வழியை நாடினார். காஷ்மீருக்குள்ளும் பேச்சுவார்த்தை, பாகிஸ்தானுடனும் பேச்சுவார்த்தை என்ற வழியைக் கடைப்பிடித்தார். அவருக்கு அதற்கான ‘அரசியல் திடம்’ இருந்தது. இப்போது முப்தி முஹம்மது செய்யது தலைமையிலான ‘மக்கள் ஜனநாயகக் கட்சி’ (பி.டி.பி), பாஜக-வை நம்பியது. ஆறு மாதங்களில், எந்த மாற்றமும் இல்லை. காஷ்மீர் இளைஞர்கள் மிகவும் ஆக்ரோஷத்தோடு இருக்கிறார்கள். மோடி, வாஜ்பாய் போல இல்லை.” இவ்வாறு அந்த ஊடகவியலாளர் கூறினார்.
அவரது உரை முடிந்து, கேள்வி நேரத்தில், “காங்கிரஸ் தலைமையிலான ‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி’ ஆட்சிக்கும், பாஜக தலைமையிலான ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி’ ஆட்சிக்கும், காஷ்மீரைக் கையாள்வதில் மாறுபாடு இருக்கிறதா” என்றால், “இல்லை” என்கிறார்.
“காஷ்மீரில் ஹுரியத் மாநாடு கூட்டணிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறதா?” என்ற கேள்விக்கும் “இல்லை” என்கிறார்.
“அமெரிக்கா சமீபத்தில், ஜம்மு காஷ்மீரைக் குறிப்பிடும்போது, இந்திய அரசால், ‘நிர்வகிக்கப்படும் பகுதி’ என்று கூறியதன் மர்மம் என்ன” என்று வினவினோம்.
“சீனாவை எதிர்ப்பதற்காக, அமெரிக்கா காஷ்மீரை ஒரு சுயாட்சி பகுதியாக ஆக்கத் துடிக்கிறதோ என்பது தெரியவில்லை. தனக்கு காஷ்மீரில் அதன்மூலம் ஒரு விமானத்தளத்தை ஏற்படுத்திக் கொண்டு, சீனாவை எதிர்க்க எண்ணுகிறதோ, என்னவோ” என்கிறார்.
அடுத்து, “பிரதமர் நரேந்திர தாமோதர மோடி அவர்கள், நாகாலாந்தில் நாற்பது ஆண்டுகளுக்கு மேல், ஆயுதம் தாங்கிய விடுதலைப் போரை நடத்தி வரும் என்.எஸ்.சி.என். (ஐ.எம்) என்ற நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சில் (ஐசக்-முய்வா) உடன் ஓர் ஒப்பந்தம் கையெழுத்துப் போட்டுள்ளார். அதன்படி, நாகாலாந்துக்கு ‘இறையாண்மை’ கொடுக்க இருப்பதாக செய்திகள் கசிகிறதே. அதுபோல காஷ்மீருக்குச் சாத்தியமில்லையா?” என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.
அதற்கு டாக்டர் ராஜா முசாபர் பட் பதிலளிக்கையில், “மோடி இன்று மக்களவையில் பெரும்பான்மை பெற்றுள்ளார். மாநிலங்களவையில் கணிசமாக வந்துவிட்டார். அவருக்கு ‘அரசியல் திடம்’ இருக்குமானால் அவர் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணலாம். அவர் வாஜ்பாய் போல இல்லையே?”. இவ்வாறு அந்த ஊடகவியலாளர் வருந்தினார்.
கலந்துரையாடலை ஏற்பாடு செய்த, மனிதநேய மக்கள் கட்சியின் வழக்கறிஞர் அணிக்கும் நன்றியைக் கூறிக்கொண்டு வெளியேறினோம்.