Tuesday, July 11, 2017

My second article in minnambalam on China-India border issue.

சீனா - இந்தியா பிரச்னை : ராகுல்மீது தேசவிரோத முத்திரை!

சீனா - இந்தியா பிரச்னை : ராகுல்மீது தேசவிரோத முத்திரை!
நடந்து வரும் பிரச்னை மாறி,மாறி, மாறிவரும் செய்திகளாக வெளியிடப்படும் நேரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டில்லியிலுள்ள சீன தூதுவரைப் போய் சந்தித்து விட்டு வந்திருக்கிறார். அதைச் சீன ஊடகம் வெளியிட்ட பிறகு, காங்கிரஸ் பேச்சாளர் மறுத்த பிற்பாடு, சீன ஊடகம் தனது வெளியீட்டை இணையத்திலிருந்து எடுத்த பிறகு, கடைசியாக "ராகுல் சீன தூதரைச் சந்தித்தார்" என்பதை காங்கிரஸ் வெளிப்படையாக அறிவித்துள்ளது. இத்தனைக் குழப்பங்கள் ஏன்? , இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள பிரச்னை, எதிர்க் கட்சியின் "உள் நுழைவில்" வந்து விட்டது ஏன்? சீனப் பிரச்னை இப்போது " இந்தியாவிற்குள் உள் விவாதமாக" மாறி இருக்கிறது. 1962-இல் சீன-இந்திய பிரச்னை என்பது, கொள்கை ரீதியாக சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு அல்லது ஆதரவு கொண்ட பல கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் "தேச விரோதிகள்" என்று முத்திரைக் குத்தப்பட்ட சூழலைச் சந்தித்தது.. அதையொட்டி, அவர்கள் "கைதும்" செய்யப்பட்டார்கள். ஆனால் இப்போது அப்படிச் சூழல் இல்லை. ஏனென்றால், ஆளும் கட்சியாக நேற்று வரை இருந்த காங்கிரஸ் கட்சித் தலைமைமீது இப்போது அதே "முத்திரை" குத்தப்படுகிறது.
இரண்டு "வட இந்திய ஊடகங்கள்" ராகுல் காந்தியின் "சீன தூதர் சந்திப்பை" காலையிலேயே "தேச விரோத செயல்" என்று பாட ஆரம்பித்து விட்டார்கள். இப்போதெல்லாம் "அரசியல் செய்வதில் கட்சிகளை விட, ஊடகங்கள்தான் முதன்மைப் பணியைச்" செய்கின்றன. அதனால்தான் காங்கிரஸ் பேச்சாளர் முதலில் திணறினார். அந்த அளவுக்கு "ஊடகப் பரப்புரை" பெரிய அரசியல் கட்சிகளையே தாக்குகிறது. காட்சி ஊடக விவாதங்களில், டில்லியின் மூத்த ஊடகவியலாளர் ஒருவர் ராகுல் நடவடிக்கையை," அரசனைவிட, அதிகமான அரச விசுவாசம்". என்று வர்ணித்திருப்பது, "அதீதமாக" இருக்கிறது. இப்போது முன்னாள் அமைச்சரும், சோனியா அணியைச் சேர்ந்தவருமான மணிசங்கர் அய்யர், ராகுல் காந்தியின் நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ளார். அதற்கு ,"நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில், எதிர்க் கட்சித் தலைவர் "அடல் பிகாரி வாஜ்பாயியை" அனுப்பி உலக அரங்கில் பேச வைத்தார் என்பதை இன்று மணி சங்கர் அய்யர் சுட்டிக் காட்டுகிறார். அதேபோல, எதிர்க்கட்சியையும் ஆளும்கட்சி நாட்டின் வெளிவிவகாரக் கொள்கைகளில் ஈடுபடுத்த வேண்டும் என்பதே அவரது வாதம். பதட்டம் இருக்கும்போதே, மோடி அரசாங்கத்தின் மூன்று அமைச்சர்கள் ஏன் சீனாவுடன் பேசிக் கொண்டிருந்தார்கள் என்று ராகுல் காந்தி இப்போது திருப்பிக் கேட்கிறார். இப்படி இந்த இரண்டு அகில இந்தியக் கட்சிகள் மத்தியில், ஒரு "லாவணி" விவாதமாக அது மாறியிருக்கிறது.
ஆனால், நாம் இந்தப் பிரச்னையில், பாஜக அணுகுமுறையும், காங்கிரஸ் அணுகுமுறையும் எப்படி, எப்படி மாறி வருகிறது என்பதைக் காண வேண்டியிருக்கிறது. உதாரணமாக, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், அதாவது மன்மோகன் சிங் ஆட்சியில், வெளிவிவகாரத் துறையின் கொள்கைகள் எப்படி இருந்தன என்று பார்க்க வேண்டும். இப்போது விவாதமாகும் பிரச்னையே உண்மையில் செல்வாக்கு செலுத்துவதிலோ, அதிகார போட்டியிலோ, அடிப்படையில் மோதிக் கொண்டும், குலாவிக் கொண்டும் இருப்பவர்கள், அமெரிக்காவும், சீனாவும்தான். இந்தியா தனது வெளிவிவகாரக் கொள்கைகளில், "தன்னைப் பாதுகாக்க" என்று மட்டும் நிலையை எடுத்தால் இது அவ்வளவு சிக்கலைத் தராது. இந்திய அரசு, அமெரிக்க வல்லரசை ஒட்டிச் சிந்திக்கும்போதோ, அல்லது அமெரிக்காவின் "தேவைகளை" வலுப்படுத்த, சில "ஆதரவுப் பணிகளை" செய்யும்போதோ, இந்தச் சிக்கல் அதிகமாக ஆகிறது. இதை நாம் இரண்டு நாள் முன்பு ஒரு கட்டுரையில் கண்டோம். மீண்டும் அதே இடத்தையும் சேர்த்தே அணுக வேண்டியிருக்கிறது.
மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில், இதே சீனா, மற்றும் அமெரிக்க விஷயங்களில், "பல பல்டிகளை" வெளிவிவகார கொள்கைகளில் இந்தியா அடித்தது. அவை என்ன? உதாரணமாக "ஈரான்" நாட்டிடம், " எரிவாயு " வாங்க, அதை பாகிஸ்தான் வழியாக, "குழாய்" மூலம் கொண்டு வர, இந்திய வெளிவிவகாரத் துறை முடிவு செய்தபோது, அமெரிக்கா பகிரங்கமாக அதை எதிர்த்து இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுக்கவில்லையா? அதையொட்டி, அன்றைய அமைச்சர் நட்வர் சிங், பதவி இழக்கவில்லையா? அதற்குப் பிறகு அதே நிலையை, பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்த மணி சங்கர் அய்யர் எடுத்தபோது, அவரும் தூக்கி அடிக்கப்படவில்லையா? இந்த இரு அமைச்சர்களும், "சோனியா காந்தி விசுவாசி" என்பதும் தெரியாத செய்தியா? மன்மோகன் சிங் தனது "உலக வங்கி விசுவாசத்தை, அமெரிக்காவிடம் உள்ள விசுவாசமாகக் " காட்டினார் என்று விமர்சிக்கப் படவில்லையா? அதேபோல, அமெரிக்காவின் 123 என்ற அணு உலைகள் ஒப்பந்தம், கையெழுத்தான போதும், செயல்படுத்த முடியாத சூழலில், "பிரான்ஸ், ரஷியா" என்று இந்திய ஆளும் வர்க்கம் அணு உலைகளை வாங்க அலையும் நேரத்தில், "அமெரிக்காவைச் சார்ந்து இருக்கும் ஜப்பான் சென்று அணு உலை வாங்க" மன்மோகன் சிங் முயல வில்லையா? உடனே மறுநாளே, பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி, சீனா சென்று, அதே அணு உலை விஷயமாகப் பேச வில்லையா ? அமைச்சர் அந்தோணி "சோனியா விசுவாசி" என்பது ஊரறிந்த செய்திதானே?
அதாவது காங்கிரஸ் ஆட்சியின் கடைசி கட்டத்திலேயே, "அமெரிக்க- சீன" நெருக்கங்களில், மாறி,மாறி, மன்மோகனின் காய் நகர்த்தல்களுக்கும், சோனியாவின் காய் நகர்த்தல்களுக்கும், "பெரும் மோதல்களாக " இருந்தன. அதாவது, இந்திய ஆட்சியாளர்கள், ஒரே "வெளிவிவகாரக் கொள்கைகளில்" நிலையாக நிற்க முடியவில்லை. இது காங்கிரஸா, அல்லது பாரதிய ஜனதாவா என்பது அல்ல. இந்தியா ஆட்சியாளர்களோ, அல்லது ஆளும் வர்க்கமோ, இரண்டு விதமான "உலக ஒழுங்குகளுக்குள்" உள்ள முரண்பாட்டில், தவிக்கிறார்கள். ஒன்று பழைய, அமெரிக்கா தலைமையிலான, "உலக ஒழுங்கு". இன்னொன்று இன்று, மாறிவரும் உலகச் சூழலில், சீனா வளர்ந்து வந்த பிறகு," டாலருக்கும், ஈரோவுக்கும்" போட்டியாக, "பிரிக்ஸ்" ஏற்படுத்த முயலும், "புதிய உலக ஒழுங்கு".
மன்மோகன், சோனியா இடையே உருவான மோதல்கள்தான், சோனியாவுக்கு, அவரது அமெரிக்கப் பயணத்தின்போது, " வழக்கு ஒன்றைப் போட்டு சமன் கொடுக்க " முயற்சி எடுத்த அமெரிக்கச் செயல் என்று பார்க்காமல் இருந்துவிட முடியுமா? ஆகவே அதன் தொடர்ச்சியாகத்தான், இன்று ராகுல் சீனாவுடன் "பேசித் தீர்க்க" முயலும் நடவடிக்கைக்கு சென்றுள்ளார் என்பதாகப் புரிந்து கொள்வோமா? அல்லது இது சாதாரண இரு பெரிய கட்சிகளுக்கும் இடையில் உள்ள "லாவணி" என உதறித் தள்ளப் போகிறோமா? எப்படியோ, இந்திய ஆட்சியாளர்கள், ஒரு " சரியான வெளிவிவகாரக் கொள்கையை" உருவாக்குவதில் இன்னும் வெற்றிபெறவில்லை என்றே கருத வேண்டியுள்ளது. அதைத்தான் சுப்பிரமணிய சாமியும், "என் கையில் கொடுத்தால் நான் சீனாவுடன் உடனடியாக பேசித் தீர்த்துவிடுவேன்" என்றும், "நான் பெரிய ஆள் ஆகிவிடக் கூடாது" எனச் சிலர் நினைக்கிறார்கள் என்று அவர் சமீபத்தில் கூறியதும் நினைவுக்கு வருகிறது.

No comments:

Post a Comment