Saturday, July 22, 2017

இந்திய - சீன மோதலில் இலங்கையின் பங்கு! - டி.எஸ்.எஸ்.மணி

சிறப்புக் கட்டுரை: இந்திய - சீன மோதலில் இலங்கையின் பங்கு! - டி.எஸ்.எஸ்.மணி

சிறப்புக் கட்டுரை: இந்திய - சீன மோதலில் இலங்கையின் பங்கு! - டி.எஸ்.எஸ்.மணி
சீனா, இந்தியா எல்லை பிரச்னை என்பதை இந்திய ஊடகங்கள் போர் வரை கொண்டு நிறுத்திய பிறகு, இப்போது இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் முதன்முறையாக வாய் திறந்து, “இரு நாடுகளும் தங்கள் ராணுவத்தைத் திரும்பப் பெறும்" எனப் பேசியிருக்கிறார்.
இது நமது ஆங்கில ஏட்டின் செய்தி. அதுவும் அமெரிக்கா, ‘இரு நாடுகளும் பேசித் தீருங்கள்’ என்று கூறிய பிறகுதான் நடக்க வேண்டுமா? சரி. இருக்கட்டும். நல்லது நடந்தால் சரி. இப்போதாவது இந்திய அரசு, ‘தாங்களும் எல்லை மீறிச் சென்றிருப்பதை இவ்வாறு ஒப்புக்கொள்கிறார்களா?’ என்ற கேள்விக்குக்கூட நாம் போக வேண்டாம். ஆனால், சீனாவிலிருந்து வரும் ‘க்ளோபல் டைம்ஸ்’ என்ற ஏடு, தனது தலையங்கத்தில், ‘இந்து தேசியவாதத்தால் சீன விரோத உணர்வு வளர்ந்து வருகிறது. மோடி பதவியேற்ற பிறகு, இந்து தேசியவாத உணர்வு மேலோங்கி வருகிறது. இந்து தேசியவாதத்தால் இரு நாடுகளிடையே போர் மூளும் அபாயம் உருவாகி உள்ளது’ என்று கூறியுள்ளது.
இது நமது தமிழ் ஏட்டின் செய்தி. இந்தச் செய்திகூட, உண்மையில் சீனா அப்படிக் கண்டுபிடித்துள்ளதா அல்லது இந்திய அரசியலுக்குள் புகுந்து, ஆளும் பாஜக-வுக்கு எதிராக உள்ள காங்கிரஸ் மற்றும் இடசாரி கட்சிகளை வளைத்துப்போட இப்படி எழுதுகிறார்களா என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று. இது ஒருபுறம் இருக்க, மீண்டும் ஈழத் தமிழர்கள் விஷயத்தில் ‘புதிய’ அணுகுமுறை உற்சாகப்படுத்தப்படுகிறது.
அதாவது, மஹிந்த ராஜபக்சே ஆட்சியில், ‘தமிழின அழிப்பு போர்’ நடத்தப்பட்டு, தமிழின விடுதலை தற்காலிகமாக தள்ளிப்போடப்பட்டது. அத்தகைய சிங்களப் பேரினவாதப் போரின் வெற்றிக்கு யார், யார் ஒத்துழைப்புக் கொடுத்தார்கள் என்பது, உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்குத் தெரிந்த செய்தி. ஆனால் போர் முடிந்த பிறகு அமெரிக்கா வேறொரு நிலையை எடுத்தது. மஹிந்தா அரசுக்கு எதிராக அமெரிக்கா, ஐக்கிய நாட்டு மனித உரிமை கழகத்தில் போர்க் குற்றங்களுக்கு எதிராக கொண்டுவந்த தீர்மானத்தைக்கூட, இந்திய அரசு நீர்த்துப்போகச் செய்தது. அத்தகைய செயலையும் அமெரிக்கா அங்கீகரித்தது.
சீனா முழுமையாக ‘மஹிந்தா ஆதரவு நிலையையே’ எடுத்தது.
தீர்மானத்தைக் கொண்டுவந்தவர்கள், மஹிந்த ராஜபக்சே அரசுக்கு எதிராகவும், சீனா போன்ற நாடுகள் ஆதரவாகவும் இருந்தார்கள். ஆனால், யாருமே தமிழர்களுக்கு ஆதரவாக இருந்ததாகத் தெரியவில்லை. இந்த அரசியல் விளையாட்டு அடுத்து இலங்கையில் நடந்த தேர்தலில் அம்பலமானது.
தேர்தல்வரும் நேரத்தில் இலங்கை அதிபர் மஹிந்தா, “இந்திய அரசின் வெளிவிவகாரத்துறையின் உளவு நிறுவனமான ரா அதிகாரி தனது கட்சிக்கு எதிராக சதி செய்கிறார்” என பகிரங்கமாக அறிவித்தார். உடனே ஓர் அதிகாரியை இந்திய அரசு மாற்றியது.
அதேநேரம், மஹிந்தாவுக்கு எதிராக அதிபருக்கு நின்ற மைத்திரிபால சிறிசேனா, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பெற்றிருந்தார். அவருடன் கூட்டுச்சேர்ந்திருந்த ரணில் விக்ரமசிங்கே அமெரிக்கா மற்றும் இந்திய அரசின் ஆதரவைப் பெற்றிருந்தார். இந்திய அரசுக்கோ, அமெரிக்க அரசுக்கோ, ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்கு அரசியல் தீர்வு வர வேண்டும் என்பதை விட, இலங்கைத் தீவில் ஓர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே முக்கியக் குறிக்கோளாக இருந்தது. அதுவே நடந்தேறியது.
அதனால், அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் இந்த ஆண்டு மீண்டும் ஐக்கியநாட்டு மனித உரிமைக் கழகத்தில் இலங்கை பற்றிய தீர்மானம் விவாதத்துக்கு வந்தபோது, ‘தாங்கள் விரும்பிய ஆட்சி இலங்கையில் நிறுவப்பட்டு விட்டதே’ என்ற நிலைப்பாட்டில், இலங்கை அரசு போர்க்குற்ற விசாரணைக்காகக் கேட்ட கால அவகாசத்தை ஏற்றுக்கொண்டனர்.
ஆனாலும், அவர்கள் ஆதரவு பெற்ற மைத்திரி-ரணில் அரசும், சீனசார்பு நிலையை எடுத்து, ஹம்பந்தோட்டா துறைமுகம், நாடு தழுவிய நெடுஞ்சாலை போன்ற ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை சீன அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொடுத்து விடும் ஒப்பந்தங்களை போட்டுவிட்டனர்.
இது அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் பெருத்த அடியைக் கொடுத்துள்ளது.
ஆகவே, இன்றைய இலங்கை அரசுக்கும் நெருக்கடியைக் கொடுக்க அமெரிக்காவும் இந்திய அரசும் திட்டமிடுகிறார்கள். ஏற்கெனவே, இந்த தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில், சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்த அல்லது மட்டுப்படுத்த, அமெரிக்க சந்தையை உற்சாகப்படுத்த அல்லது அமெரிக்க மேலாதிக்கத்தை விரிவுபடுத்த அமெரிக்க அரசு, இந்திய அரசை மட்டுமே நம்பி இருக்கிறது.
ஆகவேதான், இந்தியப் பெருங்கடலில் ஏற்கெனவே அமெரிக்காவின் பிடியில் உள்ள ‘டியாகோ கார்சியா’ என்ற ஆங்கிலேயர்களின் தீவு, ‘அமெரிக்கா ராணுவத் தளமாக’ இயங்கிவரும் வேளையில், அதனால் இந்தியாவுக்கு ஆபத்து உண்டு என்ற உண்மை ஊரறிந்தது என்றாலும்கூட, ஆறு மாதங்களுக்கு முன்பு அதன் அருகே மீன் பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மீனவர்கள், ‘டியாகோ கார்சியா’ தீவில் உள்ள அமெரிக்கப் படையால் பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு, கைதாகி, தண்டம் கட்டிய செயலைக்கூட இந்திய அரசோ, ஊடகங்களோ பெரிதுபடுத்தவில்லை. மாறாக, இலங்கையில் வந்து இறங்கியுள்ள சீனாவின் சக்திதான், இந்தியாவுக்குப் பெரும் ஆபத்தை உருவாக்கும் என்ற செய்தியை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் சுஷ்மா ஸ்வராஜ் கூறும்போது, ‘கடல் வழியாக சீனா இந்தியாவை சுற்றி வளைக்கும் ஆபத்து இல்லை’ எனக் கூறியுள்ளார். ஏன் என்றால், ‘சீனா நேரு காலத்திய பஞ்சசீலக் கொள்கைப்படியான அமைதிவழி சக வாழ்வு என கூறும்போது, நாங்களும் அதையே விரும்புகிறோம். தூதரக உறவுகள் நடைபெறுகின்றன. தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம், செப்டம்பரில் சீனாவில் நடக்க இருக்கின்ற பிரிக்ஸ் மாநாட்டுக்கு முன்னால் நடக்கும்’ என்றெல்லாம் இப்போது சுஷ்மா கூறுகிறார்.
அமெரிக்காவின் தேவைக்காகவோ, இந்திய ஆட்சியாளர்கள் இரண்டு ஆண்டுகளில் வரவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலுக்காகவோ, ‘சீனாவுடன் ஒரு மோதல் போக்கை’க் காட்டி காட்டி, மக்கள் மத்தியில் ஒருவிதமான, ‘இந்திய தேசிய வெறியை’ ஏற்படுத்த முயன்றுவந்தாலும், அதை ‘தமிழ்நாட்டில் விற்க’ ஈழத் தமிழர் பிரச்னைதான் கிடைத்ததா என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது. ஆகவே, இந்திய அரசின் பாதுகாப்புக்கு இடையூறாக சீனா இருந்தாலும், அமெரிக்கா இருந்தாலும் அதை புரிந்துகொள்வதில் இந்திய மக்கள் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. அதே சமயம், ‘ஈழத் தமிழர் பிரச்னை’யைப் பயன்படுத்தி, அமெரிக்கா இந்திய அரசுகளின் மேலாதிக்கத்தை ஈழத் தமிழர்களின் மேல் திணிக்க எண்ணாதே என்றும் கூற வேண்டியிருக்கிறது.

Tuesday, July 11, 2017

My second article in minnambalam on China-India border issue.

சீனா - இந்தியா பிரச்னை : ராகுல்மீது தேசவிரோத முத்திரை!

சீனா - இந்தியா பிரச்னை : ராகுல்மீது தேசவிரோத முத்திரை!
நடந்து வரும் பிரச்னை மாறி,மாறி, மாறிவரும் செய்திகளாக வெளியிடப்படும் நேரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டில்லியிலுள்ள சீன தூதுவரைப் போய் சந்தித்து விட்டு வந்திருக்கிறார். அதைச் சீன ஊடகம் வெளியிட்ட பிறகு, காங்கிரஸ் பேச்சாளர் மறுத்த பிற்பாடு, சீன ஊடகம் தனது வெளியீட்டை இணையத்திலிருந்து எடுத்த பிறகு, கடைசியாக "ராகுல் சீன தூதரைச் சந்தித்தார்" என்பதை காங்கிரஸ் வெளிப்படையாக அறிவித்துள்ளது. இத்தனைக் குழப்பங்கள் ஏன்? , இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள பிரச்னை, எதிர்க் கட்சியின் "உள் நுழைவில்" வந்து விட்டது ஏன்? சீனப் பிரச்னை இப்போது " இந்தியாவிற்குள் உள் விவாதமாக" மாறி இருக்கிறது. 1962-இல் சீன-இந்திய பிரச்னை என்பது, கொள்கை ரீதியாக சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு அல்லது ஆதரவு கொண்ட பல கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் "தேச விரோதிகள்" என்று முத்திரைக் குத்தப்பட்ட சூழலைச் சந்தித்தது.. அதையொட்டி, அவர்கள் "கைதும்" செய்யப்பட்டார்கள். ஆனால் இப்போது அப்படிச் சூழல் இல்லை. ஏனென்றால், ஆளும் கட்சியாக நேற்று வரை இருந்த காங்கிரஸ் கட்சித் தலைமைமீது இப்போது அதே "முத்திரை" குத்தப்படுகிறது.
இரண்டு "வட இந்திய ஊடகங்கள்" ராகுல் காந்தியின் "சீன தூதர் சந்திப்பை" காலையிலேயே "தேச விரோத செயல்" என்று பாட ஆரம்பித்து விட்டார்கள். இப்போதெல்லாம் "அரசியல் செய்வதில் கட்சிகளை விட, ஊடகங்கள்தான் முதன்மைப் பணியைச்" செய்கின்றன. அதனால்தான் காங்கிரஸ் பேச்சாளர் முதலில் திணறினார். அந்த அளவுக்கு "ஊடகப் பரப்புரை" பெரிய அரசியல் கட்சிகளையே தாக்குகிறது. காட்சி ஊடக விவாதங்களில், டில்லியின் மூத்த ஊடகவியலாளர் ஒருவர் ராகுல் நடவடிக்கையை," அரசனைவிட, அதிகமான அரச விசுவாசம்". என்று வர்ணித்திருப்பது, "அதீதமாக" இருக்கிறது. இப்போது முன்னாள் அமைச்சரும், சோனியா அணியைச் சேர்ந்தவருமான மணிசங்கர் அய்யர், ராகுல் காந்தியின் நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ளார். அதற்கு ,"நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில், எதிர்க் கட்சித் தலைவர் "அடல் பிகாரி வாஜ்பாயியை" அனுப்பி உலக அரங்கில் பேச வைத்தார் என்பதை இன்று மணி சங்கர் அய்யர் சுட்டிக் காட்டுகிறார். அதேபோல, எதிர்க்கட்சியையும் ஆளும்கட்சி நாட்டின் வெளிவிவகாரக் கொள்கைகளில் ஈடுபடுத்த வேண்டும் என்பதே அவரது வாதம். பதட்டம் இருக்கும்போதே, மோடி அரசாங்கத்தின் மூன்று அமைச்சர்கள் ஏன் சீனாவுடன் பேசிக் கொண்டிருந்தார்கள் என்று ராகுல் காந்தி இப்போது திருப்பிக் கேட்கிறார். இப்படி இந்த இரண்டு அகில இந்தியக் கட்சிகள் மத்தியில், ஒரு "லாவணி" விவாதமாக அது மாறியிருக்கிறது.
ஆனால், நாம் இந்தப் பிரச்னையில், பாஜக அணுகுமுறையும், காங்கிரஸ் அணுகுமுறையும் எப்படி, எப்படி மாறி வருகிறது என்பதைக் காண வேண்டியிருக்கிறது. உதாரணமாக, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், அதாவது மன்மோகன் சிங் ஆட்சியில், வெளிவிவகாரத் துறையின் கொள்கைகள் எப்படி இருந்தன என்று பார்க்க வேண்டும். இப்போது விவாதமாகும் பிரச்னையே உண்மையில் செல்வாக்கு செலுத்துவதிலோ, அதிகார போட்டியிலோ, அடிப்படையில் மோதிக் கொண்டும், குலாவிக் கொண்டும் இருப்பவர்கள், அமெரிக்காவும், சீனாவும்தான். இந்தியா தனது வெளிவிவகாரக் கொள்கைகளில், "தன்னைப் பாதுகாக்க" என்று மட்டும் நிலையை எடுத்தால் இது அவ்வளவு சிக்கலைத் தராது. இந்திய அரசு, அமெரிக்க வல்லரசை ஒட்டிச் சிந்திக்கும்போதோ, அல்லது அமெரிக்காவின் "தேவைகளை" வலுப்படுத்த, சில "ஆதரவுப் பணிகளை" செய்யும்போதோ, இந்தச் சிக்கல் அதிகமாக ஆகிறது. இதை நாம் இரண்டு நாள் முன்பு ஒரு கட்டுரையில் கண்டோம். மீண்டும் அதே இடத்தையும் சேர்த்தே அணுக வேண்டியிருக்கிறது.
மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில், இதே சீனா, மற்றும் அமெரிக்க விஷயங்களில், "பல பல்டிகளை" வெளிவிவகார கொள்கைகளில் இந்தியா அடித்தது. அவை என்ன? உதாரணமாக "ஈரான்" நாட்டிடம், " எரிவாயு " வாங்க, அதை பாகிஸ்தான் வழியாக, "குழாய்" மூலம் கொண்டு வர, இந்திய வெளிவிவகாரத் துறை முடிவு செய்தபோது, அமெரிக்கா பகிரங்கமாக அதை எதிர்த்து இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுக்கவில்லையா? அதையொட்டி, அன்றைய அமைச்சர் நட்வர் சிங், பதவி இழக்கவில்லையா? அதற்குப் பிறகு அதே நிலையை, பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்த மணி சங்கர் அய்யர் எடுத்தபோது, அவரும் தூக்கி அடிக்கப்படவில்லையா? இந்த இரு அமைச்சர்களும், "சோனியா காந்தி விசுவாசி" என்பதும் தெரியாத செய்தியா? மன்மோகன் சிங் தனது "உலக வங்கி விசுவாசத்தை, அமெரிக்காவிடம் உள்ள விசுவாசமாகக் " காட்டினார் என்று விமர்சிக்கப் படவில்லையா? அதேபோல, அமெரிக்காவின் 123 என்ற அணு உலைகள் ஒப்பந்தம், கையெழுத்தான போதும், செயல்படுத்த முடியாத சூழலில், "பிரான்ஸ், ரஷியா" என்று இந்திய ஆளும் வர்க்கம் அணு உலைகளை வாங்க அலையும் நேரத்தில், "அமெரிக்காவைச் சார்ந்து இருக்கும் ஜப்பான் சென்று அணு உலை வாங்க" மன்மோகன் சிங் முயல வில்லையா? உடனே மறுநாளே, பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி, சீனா சென்று, அதே அணு உலை விஷயமாகப் பேச வில்லையா ? அமைச்சர் அந்தோணி "சோனியா விசுவாசி" என்பது ஊரறிந்த செய்திதானே?
அதாவது காங்கிரஸ் ஆட்சியின் கடைசி கட்டத்திலேயே, "அமெரிக்க- சீன" நெருக்கங்களில், மாறி,மாறி, மன்மோகனின் காய் நகர்த்தல்களுக்கும், சோனியாவின் காய் நகர்த்தல்களுக்கும், "பெரும் மோதல்களாக " இருந்தன. அதாவது, இந்திய ஆட்சியாளர்கள், ஒரே "வெளிவிவகாரக் கொள்கைகளில்" நிலையாக நிற்க முடியவில்லை. இது காங்கிரஸா, அல்லது பாரதிய ஜனதாவா என்பது அல்ல. இந்தியா ஆட்சியாளர்களோ, அல்லது ஆளும் வர்க்கமோ, இரண்டு விதமான "உலக ஒழுங்குகளுக்குள்" உள்ள முரண்பாட்டில், தவிக்கிறார்கள். ஒன்று பழைய, அமெரிக்கா தலைமையிலான, "உலக ஒழுங்கு". இன்னொன்று இன்று, மாறிவரும் உலகச் சூழலில், சீனா வளர்ந்து வந்த பிறகு," டாலருக்கும், ஈரோவுக்கும்" போட்டியாக, "பிரிக்ஸ்" ஏற்படுத்த முயலும், "புதிய உலக ஒழுங்கு".
மன்மோகன், சோனியா இடையே உருவான மோதல்கள்தான், சோனியாவுக்கு, அவரது அமெரிக்கப் பயணத்தின்போது, " வழக்கு ஒன்றைப் போட்டு சமன் கொடுக்க " முயற்சி எடுத்த அமெரிக்கச் செயல் என்று பார்க்காமல் இருந்துவிட முடியுமா? ஆகவே அதன் தொடர்ச்சியாகத்தான், இன்று ராகுல் சீனாவுடன் "பேசித் தீர்க்க" முயலும் நடவடிக்கைக்கு சென்றுள்ளார் என்பதாகப் புரிந்து கொள்வோமா? அல்லது இது சாதாரண இரு பெரிய கட்சிகளுக்கும் இடையில் உள்ள "லாவணி" என உதறித் தள்ளப் போகிறோமா? எப்படியோ, இந்திய ஆட்சியாளர்கள், ஒரு " சரியான வெளிவிவகாரக் கொள்கையை" உருவாக்குவதில் இன்னும் வெற்றிபெறவில்லை என்றே கருத வேண்டியுள்ளது. அதைத்தான் சுப்பிரமணிய சாமியும், "என் கையில் கொடுத்தால் நான் சீனாவுடன் உடனடியாக பேசித் தீர்த்துவிடுவேன்" என்றும், "நான் பெரிய ஆள் ஆகிவிடக் கூடாது" எனச் சிலர் நினைக்கிறார்கள் என்று அவர் சமீபத்தில் கூறியதும் நினைவுக்கு வருகிறது.

Saturday, July 8, 2017

Spl Story-China-India border isuue- by T.S.S.Mani

சிறப்புக் கட்டுரை: சீனா - இந்தியா சர்ச்சை... எல்லைத் தகராறா? இயலாத தகராறா? - T.S.S.மணி

சிறப்புக் கட்டுரை: சீனா - இந்தியா சர்ச்சை... எல்லைத் தகராறா? இயலாத தகராறா? - T.S.S.மணி
ஒரு வாரமாக ஊடகங்களில், சீனா - இந்தியா போரையே நடத்தி விட்டனர். கெட்டிக்காரத்தனமாக சிக்கிம் எல்லையில், சீனா தனது ராணுவத்தை நிறுத்தியுள்ளது. எல்லை ஓரத்தில் ஒரு சாலை அமைக்கிறார்கள். அதன்மூலம் அவர்களது பெரும் ராணுவ வாகனங்கள் நடமாடும். எந்த நேரத்திலும் இந்தியா மீது தாக்கலாம். அதனால்தான் இந்தியா தனது ராணுவத்தைப் பலமாக அந்த எல்லையில் குவிக்கிறது. எந்த நேரத்திலும் போர் மூளலாம். ஜி-20 மாநாட்டில்கூட இந்தியப் பிரதமரும், சீனப் பிரதமரும் பேச மாட்டார்கள். ‘பிரிக்ஸ்’ கூட்டத்தில்கூட இருவரும் தனியாகப் பேசிக்கொள்ள மாட்டார்கள். 1962இல் நடந்த இந்திய - சீனப் போர் போல இருக்குமா? ‘நாங்கள் 1962 போல பலவீனமாக இல்லை, இப்போது பலம் வாய்ந்தவர்கள்’ என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜெட்லி பேசினார். அதற்கு, ‘இருக்கலாம். நாங்களும் முன்னைப் போல இல்லை. மேலும், பல மடங்கு உங்களை விட பலம் வாய்ந்தவர்களாக ஆகியிருக்கிறோம்’ என்று சீன தூதர் கூறினார். இப்படியெல்லாம் நம்மூர் ‘பாமரனை’ப் பாதிக்கும் அளவுக்குச் செய்திகள். கடைசியில், ஜி-20 வந்தது. மோடியும், ஸீ ஜின்பிங்கும் கைகொடுத்துக் கொண்டனர். நன்றாகப் பேசினர். ஒருவரை ஒருவர் புகழ்ந்தனர். இப்படியாகச் செய்திகள் வருகின்றன.
ஒரு காட்சி ஊடக விவாதத்தில் ஒரு மூத்த ஊடகவியலாளர் கூறினார். “இந்தியா அருகே அமெரிக்கா தானே அதிக ராணுவ பலத்தை வைத்துக்கொண்டு மிரட்டுகிறது? ‘டியாகோ கார்சியா’ தீவில் தனது ராணுவத்தளத்தை வைத்துக்கொண்டுள்ளது. அதில் போர் கப்பல்களையும், போர் விமானங்களையும் வைத்துக் கொண்டிருக்கிறது. அந்தத் தீவிலிருந்து, அரை மணி நேரத்தில், கேரளா மீதும், கன்னியாகுமரி மீதும் குண்டு போட முடியுமே? அமெரிக்காவிடம், போர் விமானங்கள் தாங்கிய 18 போர்க் கப்பல்கள் இருந்தால், சீனாவிடம் ஒன்றுதானே இருக்கிறது? பங்களா தேஷ் போர் நேரத்தில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்கா தானே வந்தது? சீனா வரவில்லையே? அமெரிக்காவின் ஏழாவது போர்க் கப்பல்தானே வங்காள விரிகுடா கடலுக்கு வந்து இந்தியாவை மிரட்டியது? (1962-க்குப் பிறகுதான், 1971 வந்தது என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள்) எதற்காக இந்தச் சிறிய எல்லை பிரச்னையை வைத்து, போர், போர் என்கிறார்கள்?” எனக் கேட்டார். இன்னொரு மூத்த ஊடகவியலாளரான, பதிப்பகத்தார், “இந்த எல்லை பிரச்னை ஒர் இரவில் தீரக்கூடியதா? சீனாவுடன் இந்தியா இன்னமும் வணிகத்தை அதிகப்படுத்தி, நல்லுறவைக் கூட்ட வேண்டும். அதன்பிறகு தானாகவே இந்த எல்லைப் பிரச்னையைப் பேசித் தீர்த்துக் கொள்ள முடியும்” என்கிறார். ஆனால், இங்கே பொது வெளியில், ஒரு கவிஞர், தனது கவிதை மூலம், “சீன எதிர்ப்புதான்” அவரது “இந்திய தேசப்பற்று” என்பதை நிரூபிக்க முயன்று வருகிறார். இவையெல்லாம் அதிகமாக நமது வட்டார ஊடகங்களில், விவாதமாக ஆக்கப்படுவதில்லை. மாறாக, அடுத்த நாட்டுடன் பிரச்சனையா? உடனடியாக எது நியாயம் என்றுகூட பார்க்காமல், ‘இந்திய தேசப்பற்றை’ உயர்த்திப் பிடித்து, பக்கத்து நாட்டைப் பற்றி தாக்கி எழுதிவிட வேண்டும் என்பதே இங்கு ‘பொதுப் புத்தி’யாக இருக்கிறது. ஆனால், இதற்கு இடையில் வேறு சில அறிவார்ந்த கருத்துகளும், வருகின்றன. ஒரு கவிஞர் சொன்னார். சமீபத்தில் ஒரு கூட்டத்தில், ஒரு பிரபல ஊடக ஆசிரியர், “பாகிஸ்தானை நாம் ஐரோப்பா அருகே அனுப்பிவிட முடியுமா? சீனாவை நாம் ஆப்பிரிக்க கண்டத்துக்கு அனுப்பி விட முடியுமா? இந்தியாவாகிய நாம்தான் கண்டம் விட்டு கண்டம் தாண்டி நகர்ந்து செல்ல முடியுமா? ஆகவே இருக்கும், அண்டை நாடுகளுடன் எப்படி சமாதானமாக வாழ்வது என்று சிந்திக்க வேண்டும்” என்றாராம். இவ்வாறு நல்ல ஆரோக்கியமான சிந்தனைகள் வரும் நேரத்தில், ‘தேசப்பற்று’ என்ற பெயரில், ‘தேசிய வெறி’யைத் தூண்டாதே என்ற எச்சரிக்கையுடன் இந்த விவகாரத்தை அணுக வேண்டும்.
மேலும் அலசலுக்காக, நான் இரண்டு மூத்த ஊடகவியலாளர்களிடம் பேசினேன். இன்று காலை சிலர் “மக்மோஹன் எல்லைக்கோடு, இரண்டு நாடுகளுக்கும் இடையில் உள்ளதை முன்பு ஒப்புக்கொண்ட சீனா, இப்போது ஒப்புக்கொள்ள மறுக்கிறதே” என்று கூறினார்கள். “அது அப்படி இல்லையே. ஆங்கிலேயர்கள், இந்தியாவை விட்டுச் செல்லும்போது, ஆங்கிலேயரான மக்மோஹன், இப்படி ஒரு கோட்டைப் போட்டு அதுதான் எல்லை என்று இந்தியாவிடம் கூறிவிட்டுச் சென்றான். அதை அப்போதே சீனா ஒப்புக் கொள்ளவில்லையே” என்று கேட்டேன். அவர்களும் எனது வாதத்தை ஒப்புக்கொண்டார்கள். உண்மையில், மக்மோஹன் எல்லைக்கோடு, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில், ஓடும் பிரம்மபுத்திரா நதியை ஒரு ‘எல்லை’யாகக் காட்டி வரையப்பட்டது. அந்த பிரம்மபுத்திரா நதி, ஆறு மாதங்கள், ஒரு புறமும், முழுமையாக மாறுபட்ட பாதையில் ஆறு மாதங்களும், ஓடக்கூடிய நதி. அதாவது அதை எல்லையாகப் போட்டால், இரு நாடுகளுக்கும், ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் இடையில் சண்டையும் சச்சரவும் வந்துகொண்டே இருக்கும். வரட்டுமே சண்டை என்று எண்ணி, வெளியே சென்ற ஆங்கிலேயர்கள், ‘பிளவுபடுத்தி, ஆட்சி செய்’ என்ற நோக்கில் விட்டுச் சென்றார்களா என்பது ஆராயப்பட வேண்டும். அந்த இடைப்பட்ட பகுதிக்குப் பெயர்தான் ‘ஆக்சை சின்’. இந்தப் பகுதிதான் 1962இல் சர்ச்சைக்குள்ளான பகுதி. நான் மேற்கூறிய இரண்டு மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவர் கூறினார், “நான் அஸ்ஸாம் சென்றிருந்தேன். அங்கே உள்ள நதிநீர் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றிடம் விவாதித்தேன். அவர்கள் பிரம்மபுத்திரா நதி பற்றிய தங்கள் ஆராய்ச்சியைக் கூறினார்கள். அவள் கடலைப் போன்ற நதி. அந்த நதியை, அவளது பாதையை நாம் கணிக்கவே முடியாது. பிரம்மபுத்திரா நதியின் பாதையை நம்பி நாங்கள் பயிர்களை விதைத்திடுவோம். பிறகு அவள் அந்தப் பாதைக்கும் வந்து விடுவாள். ஆகவே, நாங்கள் பயிர் செய்வதற்கு ஒதுங்கி, அவளுக்கு நிறைய இடத்தை விட்டுவிட்டுத்தான் பயிர் செய்வோம். இவ்வாறு கூறினார்கள். அவர்கள் அந்த நதியை ‘அவள்’ என்றே பெண் பாலுடன் மிக மரியாதையாக அழைத்தார்கள். ஆகவே அந்த பிரம்மபுத்திராவை எல்லையாக ஓர் ஆங்கிலேயர் போட்டுக் கொடுத்தால், அதிலேயே வில்லங்கம்" இருக்கிறது” என்கிறார்.
இவ்வாறு இந்த விவாதம் சென்றது. நாம் 1962 இல் நடந்தது என்ன என்று சிறிது திரும்பிப் பார்க்க வேண்டும் அல்லவா? அன்று ‘இந்திய- சீன எல்லையில் போர் நடந்தது. போரில் சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் அதிக தூரம் வந்துவிட்டு திரும்பிச் சென்று விட்டது. செல்லும்போது, பல இந்திய ராணுவ வீரர்களை போர்க் கைதிகளாகப் பிடித்துச் சென்று விட்டது. பிறகு அவர்களை விடுதலை செய்து எச்சரிக்கை செய்தது’. இவையெல்லாம் நாம் கேள்விப்பட்ட செய்திகள். அதனால்தான் இன்றைய இந்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜெட்லி நாங்கள் 1962 போல இல்லை என்று கூறுகிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் மக்களவை உறுப்பினர் பி.ராமமூர்த்தி, நாடாளுமன்றத்திலேயே, ‘இது சீன ஆக்கிரமிப்பு அல்ல. வெறும் எல்லைத் தகராறு’ என்று பேசிவிட்டு, அதையே புத்தகமாக வெளியிட்டார். அந்தப் புத்தகத்தையும் இந்திய அரசு ‘தடை’ செய்தது. அமெரிக்கா, இந்தப் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்குக்கு எதிராக அன்றும் சரி, இன்றும் சரி செயல்படுவது வெள்ளிடை மலை. அன்றைய சூழலில், நேருவின் ஆட்சிக் காலத்தில், அமெரிக்காவின் வலியுறுத்தலில்தான், நேரு நமது படைகளை சீனா மீது ஆக்கிரமிக்க அனுப்பினார் என்றும், அது எல்லை ஓரத்தில் சீனா அப்போது கட்டிவந்த ஏவுகணை தளத்தை கட்ட விடாமல் செய்வதற்காக அமெரிக்காவால் தூண்டி விடப்பட்டது என்றும் கம்யூனிஸ்டுகள் பேசி வந்தார்கள். இந்திய - சீனப் போரில், கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டதும், பிறகு அதையும் ஒரு காரணமாக வைத்தே கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்ததும் வேறு கதை. இங்கிலாந்திலிருந்து வந்த ‘நீவில் மாக்ஸ்வெல்’ என்ற பிரபல எழுத்தாளர், அந்தப் போர் பற்றி மூன்று ஆண்டுகள் இந்திய வந்து ஆராய்ச்சி செய்து, பல இந்திய ராணுவ வீரர்களையும், தளபதிகளையும் சந்தித்து, ஒரு புத்தகம் எழுதினார். அந்தப் புத்தகத்தின் பெயர், ‘இந்தியாவின் சீனப் போர்’. அந்தப் புத்தகத்தையும் இந்திய அரசு தடை செய்து விட்டது. இவ்வாறு இந்திய அரசின் செயல்பாடுகளில், அந்தக் காலம்தொட்டே, பல கேள்விகள் இன்னமும் நிற்கின்றன.
இன்று நடக்கும் இந்த விவாதத்தில் இந்திய அரசு, சீனா மீது கூறும் குற்றச்சாட்டு, ‘சீனா பூடான் எல்லையில் சாலை போடுகிறது. அது நமது பாதுகாப்புக்கு ஆபத்து’ என்பதே. அதுவும், இந்தியப் பிரதமர் மோடி அவர்கள், அமெரிக்க அதிபரைச் சந்தித்துவிட்டு வந்த பிறகே பெரிதாகக் கிளப்பப்பட்டது. ஆனால், சீனா கிளப்பும் பிரச்னை பெரியது. இந்திய ராணுவம் தொடர்ந்து எல்லை மீறுவதாகவும், இப்போதும் சீன எல்லைக்குள் வந்திருப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள். அதையும் தாண்டி, சிக்கிம் தனி நாடக இருந்தது. அதை இந்தியா ஆக்கிரமித்துக் கொண்டது. சிக்கிமை தனிநாடாக அறிவிக்க சிக்கிம் மக்கள் விரும்புகிறார்கள் என்ற குண்டையும் தூக்கிப் போடுகிறார்கள். உள்ளபடியே சிக்கிம் 1975 வரை தனி நாடாகத்தான் இருந்தது. இந்திரா காந்தி ஆட்சியில், சிக்கிம் மக்களிடம் பொதுக்கருத்துக் கேட்டு இந்தியா தன்னுடன் சிக்கிமை இணைத்துக் கொண்டது என்பது இன்று ஊடகங்களின் செய்தி. ஆனால், ஒரே நள்ளிரவில், திடீரென இந்திய ராணுவம் சிக்கிம் நாட்டுக்குள் சென்று, சிக்கிமை இணைத்துக் கொண்டது என்பது நமது நினைவில் இருக்கும் செய்தி. தனிக் கொடியுடனும், தனி தேசிய கீதத்துடன் வாழ்ந்த சிக்கிம் மக்கள் அந்த இணைப்புக்குப் பிறகு, இந்தியக் கொடியுடனும், இந்திய தேசிய கீதத்துடனும்
வாழ வைக்கப்பட்டார்கள். நெருக்கடி நிலைக்குப் பிறகு, ஜனதா கட்சி ஆட்சி வந்த பிறகு, பிரதமராக மொரார்ஜி தேசாய் வந்த பிறகு, மொரார்ஜி லண்டன் செல்கிறார். அங்கே ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்வி, “நீங்கள் சிக்கிம் இணைப்பை ஏற்றுக்கொள்கிறீர்களா?” அதற்கு மொரார்ஜி தேசாயினுடைய பதில், “நான் தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இந்தியப் பிரதமராக நான் எதுவும் செய்ய முடியாது”. இதுதான் இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை அமைச்சருக்கே உள்ள நிலை. அப்படியானால், இந்தியாவை ஆள்வது யார்? முடிவுகளைத் தீர்மானிப்பது யார்? ‘அரசு இயந்திரம்தான்’ என்றால், அது என்ன தன்மையைக் கொண்டது? அது ‘விரிவாக்கம்’ என்ற தன்மையைக் கொண்டதா? அது ‘பிராந்திய மேலாதிக்கம்’ என்ற தன்மையைக் கொண்டதா? இதுபோன்ற கேள்விகளுக்கும் நாம் விடை காண வேண்டியுள்ளது.Spl Story-