Tuesday, July 7, 2015

தென்சென்னை நொச்சிக்குப்பத்தில் மீனவர் வீடுகள் இடிப்பு.அராஜகம்???


      இன்று [ 07-07-2015] காலை 10 மணிக்கு திடீரென 100 ஆயுதங்களுடன் காவல்துறையினர், மயிலாப்பூர் நொச்சிக் குப்பம் வந்திறங்கினர்.அவர்களை,மயிலாப்பூர் உதவி ஆணையர் ரவிசேகரும்,ஆய்வாளர் சிபுகுமாரும் தலைமை தாங்கினர்.அவர்களுக்கு "சம்பளம்" கொடுப்பவர்களாக "குடிசை மாற்றுவாரியம்" நிர்வாக இயக்குனர் நாகேஷ், உதவி பொறியியலாளர் காளியப்பன் அங்கெ வந்திருந்தனர். காவல்துறை அதிகாரிகளுக்குதான் தமிழக அரசாங்கம் "சம்பளம்" கொடுக்குமே? எதற்காக "குடிசை மாற்ற்ய்வாரிய" அதிகாரிகள் "சம்பளமோ,கிம்பலமோ" கொடுக்கவேண்டும்? என்று நீங்கள் வினவலாம். அதுதானே நாங்களும் கேட்கிறோம் என்று நொச்சிக்குப்பம் மக்களும் கூறுகின்றனர்.இவையெல்லாம் ஏன் நடக்கிறது? அந்தக் கதையைத்தான் நாம் கண்டுபிடிக்கவேண்டும்.

        நொச்சிக்குப்பம் மீனவர்களது வீடுகளை கட்டிக்கொடுக்க,1969 ஆம் ஆண்டு அங்குள்ள கடலோர நிலம் "குடிசைமாற்றுவாரியதுக்கு" கடலோர பாரம்பரிய மீனவ மக்களால் "இலவசமாக" கொடுக்கப்பட்டது.மீனவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கிறோம் என்ற அன்றைய தி.மு.க. அரசால் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நம்பி மீனவ மக்கள் அங்குள்ள நிலத்தை ஒப்படைத்தார்கள்."கடலோரமும்,கடலும்" மீனவனுக்கே "சொந்தம்" என்ற முழக்கத்தை மட்டுமே புரிந்திருந்த "கடல்சார் பழங்குடி மக்களான" மீனவர்கள்,"நிலம் சார்ந்த"மக்களைப்போல,தங்கள் நிலங்களுக்கு "தாங்கள் பட்டா"வாங்கி வைக்கவேண்டும் என்ற புரிதல் இன்றியே வாழ்ந்து வருகிறார்கள். அதுவே அவர்கள்,"பழங்குடி ஆதிவாசி" மனோபாவம் கொண்டவர்கள் என்பதற்கு சான்று.

அதனால்தான் 1984 ஆம் ஆண்டு, எம்.ஜி.ஆர். ஆட்சியில், மெரினா கடற்கரை ஓரத்தை "அழகுபடுதப்போகிறோம்" என்ற பெயரில், அதிகாரிகளின் ஆலோசனைப்படி, அரசு மீனவ மக்களின் "கட்டுமரங்களையும்,வலைகளையும்"
அகற்ற்யபோது, "பெருங்கலவரம்" ஏற்பட்டது. நடுக்குப்பம் மீனவர்களை தேவாரம் ஐ.பி.எஸ்.தலைமையில் தாக்கியபோது, இதே நொச்சிக்குப்பம் மீனவர்கள் தேவாரம் தலைமையிலான காவலர்களை "விரட்டி,விரட்டி" அடித்தனர்.மாட்டிக்கொண்ட தேவாரத்தின் உயிரை அன்று காப்பாற்றியது அங்குள்ள மீனவப்பெண்களே ஆனாலும் "சூடு"பட்ட தேவாரம் மீண்டும் ஒரு ஆயுதப்படையை திரட்டி வந்து "துப்பாக்கி சூடு" நடத்தியதும், அதில் "ஆறு மீனவர்கள்" கொலை செய்யப்பட்டதும், நாடறிந்த வரலாறு. அவர்களுக்கான "நினைவுச் சின்னம்" இன்னமும் "அயோத்தியாகுப்பத்தில்" இருக்கிறது.இவாறாக எம்.ஜி.ஆர்.காலத்திலேயே "போராடி தங்களது கடற்கரை மீதான உரிமையை"நிலை நாட்டியவர்கள் அங்குள்ள மீனவர்கள்.இன்னமும் கூறப்போனால், அன்று காவல்துறையை எதிர்த்து போராடியதற்கு தலைமை ஏற்றவர் "கட்டுமர மீனவர் சங்க" செயலாளரான அ.இ.தி.மு.க.வைச் சேர்ந்த ஆர்.விஸ்வநாதன். இவ்வாறு  ஆளும் கட்சிக்காரர்களே "அநியாயமான காவல்துறை அராஜகத்தை" எதிர்த்து, போராடி வென்ற வரலாற்றை  கொண்டவர்களாக இருக்கின்றனர்.

      1969 இல் மீனவர்களால் இலவசமாக கொடுக்கப்பட்ட நிலத்தில் அவர்களுக்கு "அடுக்குமாடி வீடுகளை" கட்டிக்கொடுக்க தி.மு.க. அரசு திட்டமிட்டது. அதுவரை அந்த மக்கள் குடிசை போட்டு வாழ்வதற்கு,"வீட்டிற்கு நாற்பது ரூபாயை" குடிசை மாற்று வாரியம் வழங்கியது.அவாறு "தற்காலிக குடிசைகளை" போட்டுக்கொண்ட மீனவ மக்கள்,1973 இல் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளில் 1974 வரை குடியேறினர். 2006 ஆம் ஆண்டு, ஆட்சிக்கு வந்த தி.மு.க.தலைவர் கருணாநிதி, " நான் 1974 இல் கட்டிக்கொடுத்த வீடுகள் நொச்சிக்குப்பத்தில் இப்போது "சிதிலமடைந்த நிலையில்" உள்ளது.சிதிலமடைந்த நிலை என்றால் உடைந்துவிழும்  நிலை என்று அர்த்தம்" என்பதாகவும் கூறி, அதனால் நான் முதலில் அவர்களுக்கு வீடுகள் காட்டிக்கொடுப்பேன்" என்றார். 2006 முதல் 2011 வரை ஆண்ட தி.மு.க  புதிய வீடுகளை கட்டவும் இல்லை.கொடுக்கவும் இல்லை.மாறாக அருகே உள்ள "நொச்சி நகரில்" 600 வீடுகளை ஒரு வீடு 250 சதுர அடி என்பதாக கட்டி முடித்துஉள்ளது. நொச்சிக்குப்பதிற்கு தி.மு.க. ஆட்சி 1200 வீடுகள் கட்டிக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்திருந்தது.

   ஆனால் அ.தி.மு.க. அரசு வந்த பிறகு, நான்கு ஆண்டுகள் இழுத்தடித்து,சமீபத்தில், 540 வீடுகளை கட்டிக் கொடுப்பதாக கூறியுள்ளது. அவற்றை ஒரு வீடு 400 சதுர அடி என்று கட்டிக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தது.இதுவரை நொச்சிக்குப்பம் வீடுகள் கட்டத் தொடங்க வில்லை..நொச்சிநகர் வீடுகளை திறக்க இதனை காலம் கழித்து அரசு சமீபத்தில்தான் திறந்துள்ளது.அதிலும் "மீனவர் அல்லாத சமூகங்களுக்கு பெரும்பான்மையும், மீனவர்களுக்கு 150 வீடுகளும்" இப்போது கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு இன்னமும் 30 வீடுகள் யாருக்குமே ஒதுக்காமல் "காலியாக" இருக்கிறது. அந்த 30 வீடுகளை இங்கே "இடிக்கப்படும் மீனவர்களது" வீடுகளுக்கு பதிலாக "ஒதுக்கி கொடுங்கள்" என்ற மீனவர் சங்கங்களின் கோரிக்கையை குடிசை மாற்று வாரியம் செவி மடுக்கத தயாராக இல்லை.

      இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், இன்று காவல்துறையும், குடிசை மாற்று வாரியமும் இணைந்து வந்து "காசு செலவழித்து" மீனவ மக்களின் 10 வீடுகளை அராஜகமாக இடித்து தள்ளியுள்ளனர்.அதில் அ.இ.அ.தி.மு.க. மாநகராட்சி உறுப்பினர்  ராஜலட்சுமி வீடும் உள்ளடக்கம்."சிறிது காலம் கொடுங்கள் காலி செய்துவிடுவார்கள்" என்று மீனவர் சங்க தலைவர் கபடி.மாறன் கேட்டதற்கு, "உனக்கு ஒரு வாரம் நேரம் கொடுத்தோமே?" என்று அதிகாரிகள் பதில் கூறியுள்ளனர்.அதற்கு மாறன்," குடிசை மாற்று வாரியத்ம்தளைவரும், அமைச்சரும் ஊரிலில்லை" என்று கூறியும், தென்னிந்திய மீனவர் நலச் சங்க தலைவர் கு.பாரதி, தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்க தலைவர் கபடி.மாறன் ஆகியோரை மிரட்டிவிட்டு, காவல்திரை வீடுகளை இடித்து தள்ளியிருக்கிறார்கள்.அப்போது, குடிசை மாற்று வாரிய நிர்வாக பொறியியலாளர் நாகேஷ், உதவி பொறியியலாளர் காளியன்னனிடம் "காசைகொடு" என்று கூற,ஆய்வாளர் சிபு.குமாருக்கு ஒரு "ஆயிரம் ரூபாய் நோட்டுக்க்கட்டை"  காளியண்ணன் மக்கள் முன்னாலேயே கொடுக்கிறார்.உதவி ஆணையருக்கும் அதேபோல பணக்கட்டு கொடுக்கப்பட்டுள்ளது என்பதே மக்களது கூற்று. தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கையாக இது இருந்தால்  எதற்காக  குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் ஏதோ "கூலிப்படைக்கு" கொடுப்பதுபோல, "காசு கொடுத்து வீடுகளை இடிக்க சொல்லவேண்டும்?".அதற்கும் அங்கு வந்த குடிசை மாற்று வாரிய நிர்வாக பொறியியலாளரான நாகேஷ் தெளிவாகவே," பலகோடி ரூபாய்க்கான திட்டம் இது". "இதை செயல்படுத்த இந்த அதிகாரப்பதவியைப்பெற தான் 50 லட்சம் செலவழித்து இந்த பதவிக்கு " வந்துள்ளதாக கூறியுள்ளார். இது என்ன வெளிப்படையான அறிவிப்பு?

          குடிசை மாற்று வாரிய தலைவரான ஒரத்தநாடு தங்கமுத்துவும், வீட்டுவசதி அமைச்சரான ஒரத்தநாடு வைத்தியலிங்கமும் ,இணைந்து, அதே உறவு கொண்ட ஒரு மயிலாப்பூர் உதவி ஆணையர் ரவிசேகர் மூலம் இந்த "அராஜக இடிப்பு வேலையை" செய்யவைக்கிரார்களா? ஏற்கனவே "நொச்சிநகரில் மீதம் உள்ள 30 வீடுகளை" 6 லட்சம், 8 லட்சம் என்ற விலைக்கு விற்பது உண்மைதானா?அதனால்தான் ஆளும்கட்சியின் மாநகராட்சி உறுப்பினர் வீடடியும்கூட இப்படி இடித்து தள்ளுகிறார்கள்.அந்த பெண் கவுன்சிலரின் மருமகன் அங்கேயே ஆளும்கட்சியின் பகுதி செயலாளாராக இருக்கிறார் என்றாலும்கூட, இந்த அதிகாரிகளும், அமைச்சரும் செய்யும் வேலை, "ஜெயலலிதா ஆட்சி மீனவர்களுக்கு ஆதரவானது" என்ற கருத்தை உடைக்க வேறு யாராவது இவர்களை இயக்குகிறார்களா? அல்லது உண்மையில் இந்த ஆட்சி மீனவர்களுக்கு எதிரானது என்பதை, தலைநகர் சென்னையிலிருந்தே "ஆதாரம்" காட்டுவதன்மூலம் தமிழகத்தின் 13 மாவட்டங்களில் உள்ள கரையோர மக்களை "புறக்கணிக்கிறோம்" என்பதை இந்த அரசு "வெளிச்சம்" போட்டு காட்டுகிறதா?