Wednesday, February 25, 2015

தென் மாவட்டங்களில் கொலைக் களம் என்பது உண்மையா?

தென் மாவட்டங்களில் கொலைக் களம் என்பது உண்மையா?
------------------------------------------------------------------------------------------------
     வள்ளியூர் பகுதியில் இதுபோன்ற சாதிக் கொலைகள் நடந்த தடயங்கள் வரலாற்றில் அதிகம் இல்லை. இப்போது திருவைகுண்டம் நகர புதிய தமிழகம் செயலாளர் பாஸ்கர் படுகொலையானதும், அதையொட்டி அவரது சடலத்தை வாங்க மறுத்து கொலைகாரர்களை கைது செய்யக் கோரியும், புதிய தமிழகத தினரின் மூன்று நாட்களாக மறியல் செய்தும் கூட, வட்டார அதிகாரிகள் எந்த ஆக்கபூர்வமான முயற்சியும் எடுக்கவில்லை எனபதே மக்களது குரல். டாக்டர் கிரூஷ்ணசாமி வருகிறார் என்றதும் வட்டாரத்தில் "தடை" உத்தரவு போட முடிந்த காவல்துறைக்கு, அவர் விமானத்தில் வந்து இறங்கியதும் "பாஸ்கர் கொலையை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு" உத்தரவிடத் தெரிந்த காவல்துறைக்கு, மூன்று நாட்களாக குறிப்பிட்ட "சுவரொட்டி விளம்பரப் புகழ் குற்றம் சாட்டப்பட்டவரை" கைது செய்ய இயலாவிட்டாலும், "முதல் தகவல் அறிக்கையில்" போட முடியாமல் போனது ஏன்? குறிப்பிட்ட "குற்றம் சாட்டப்படும்" கும்பல், தொடர்ந்து இதுபோன்ற கொலைகளை செய்வதாக மக்கள் கூறுவது பொய்யா?

அந்த வட்டாரத்தில் குறிப்பாக வள்ளியூர் பகுதியில் ஒரு அருந்ததியரை கொலை செய்து ஒரு மாதம் முன்பு நடந்த கொடும் செயலை கண்டித்து வட்டாரம் வந்த "அருந்ததியர் தலைவர் அதியமானுக்கும்" இப்போது கிரூஷ்ணசாமிக்கு நடப்பது போலவே,"உள்ளே நுழைய தடை" என்பது போடப்படவில்லையா?  சமூகத் தலைவர்களுக்கு "உள்ளே நுழைய தடை"போடுவதால் வன்முறைகளைத் தடுக்க முடியுமா? பலியான சமூகத்தின் மக்களை ஆறுதல் கூற வரும் தலைவர்களை தடுப்பது, ஒடுக்கப்பட்ட அல்லது அதிகாரத்தில் இல்லாத சமூகத்தினரின் "மன உணர்வை" எழவிடாமல் "அழுத்துவது" ஆகாதா?

சமீபத்தில் வள்ளியூர் பகுதியில் படுகொலை செய்யப்பட "டேவிட் என்ற நாடார் சமூக" நபருக்கும் இதே நிலைதானே? அவரது கொலையிலும் இதே "கொலைக் கும்பல்"தான் இருந்ததாகவும், வட்டார அணைத்து சமூக மக்கள் கூறுகின்றனரே? வட்டாரத்தில் தொடர்ந்து இதுபோன்ற "பயங்கரவாதச் செயல்களை" கட்டவிழ்த்து விடும் கும்பலின் நோக்கம் என்ன? அவர்கள் எங்கிருந்து இந்த தைரியத்தை பெறுகிறார்கள்? தங்கள் சமூகத்தினருக்கு "அதிகாரம்" கைக்கு வந்ததாக அவர்கள் நினைத்து பேசுவது காவல்துறையின் காதுகளுக்கு கேட்கவில்லையா?

        வள்ளியூர் பகுதிக்கு துணை கண்காணிப்பாளராக பாலாஜி வந்த பிறகு ஏன் இந்த கொலைகள் தொடர் நிகழ்வுகளாக ஆக்யுள்ளன" அவர் ஒடுக்கப்பட்ட சமூகம் ஆனாலும் அவருக்கு மட்டும் "அதிகாரம்"இல்லையா?. அதற்கு மக்கள் சொல்வதுபோல காவல்நிலைய ஆய்வாளர் குருனாதன் தான் காரணமா? அவர் இங்கே வள்ளியூரில் பொறுப்பெடுத்து சிறிது காலத்திலேயே இப்படியா? அவர்  கொலையாளிகளுடன் நெருக்கம் கொண்டவரா? மக்கள் இதுபோன்று பேசுவது மேலோட்டமான பார்வையா? உண்மை செய்தியா? அருந்தியர் ஒருவர் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராடும்போது, இந்த ஆய்வாளர் குருநாதன் கோவையிலிருந்து கொலையாளிகள் என்று சிலரை கொண்டுவந்து சரணடைய வைத்தாராமே? உண்மையா? இந்த குருநாதன் இப்போதும் தேடப்படும் குற்றவாளிகளுக்கு சாதகமனவரா? இந்த குருநாதன் தனக்கு மேலே உள்ள துணை கண்காணிப்பாளர் பாலஜியையே "மீறி" சாதி உணர்வுடன் செயல்படுகிறார் என்ற குற்றச் சாட்டும் உண்மையா?

  டாக்டர் கிருஷ்ணசாமி கூறும் குற்றச் சாட்டுக்கு, ஆதாரமாகதானே  இந்த வட்டாரத்தின் தொடர் கொலை நிகழ்வுகள் இருக்கின்றன? மீண்டும் தென்மாவட்டங்களில் "சாதி மோதலை" கிளப்பிவிட்டு "ஆர்சுக்கு நெருக்கடி" கொடுக்க எண்ணும் சக்திகள் "எந்த அதிகார மமதையில்" இப்படி செயல்படுகின்றன? இப்போது "நியாயம்" கேட்டு புதிய தமிழகத்தினர் விருதுநகர் மாவட்டம் முழுவதும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் போராட,கைதாக தொடங்கிவிட்டது எதனுடைய "எதிர்வினை"?சாதிகளைத் தாண்டி அரசியல்வாதிகள் குறிப்பாக ஆதிக்கம் செலுத்தும் சமூகத்தின் அரசியல்வாதிகள் வெளியே வந்தால் மட்டும்தான் இந்த கொலைகார சூழல் மாறும். இது எப்படி அமைதி தவழும் தமிழ்நாடு என்று முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்தான் விளக்கவேண்டும்.



Saturday, February 7, 2015

சிறப்பு அகதிகள் முகாமில் சிங்கள மீனவர்கள்



        சிறப்பு அகதிகள் முகாம்கள் இப்போது திருச்சியிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாரிலும் உள்ளது. அதில் ஈழத் தமிழர் அகதிகள் சிலரை தமிழக அரசு பிடித்து வைத்திருக்கிறதே? என்ற கேள்வி எல்லா தமிழர்கள் மத்தியிலும் தொடர்ந்து இருந்து வருகிறது. நடுவணரசில் காங்கிரஸ் இருக்கும்போது  கொடுக்கப்பட்ட வழிகாட்டலில் அத்தகைய "சிறப்பு அகதிகள் முகாம்கள்" ஏற்படுத்தப்பட்டன என்பதே அப்போது கிடைத்த பதில்.அப்படியானால் ஏன் பா.ஜ.க. அரசு வந்தபிற்பாடும் அவை நீடிக்கின்றன? என்ற கேள்வியும் தொடர்கிறது. "விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிக்க" ஏதோ ஆதாரம் வேண்டுமே என்பதற்காக இததகைய சிறப்பு அகதிகள் முகாம்களை நீடிக்க வைக்க நடுவணரசு எண்ணுகிறது என்பதே கிடைக்கும் செய்தியாக இருக்கிறது. தமிழகத்தை ஆளும் திராவிடக் கட்சிகள் ஏன் இத்தகைய முகாம்களை நீடித்து வைத்திருக்க வேண்டும்? ஒவ்வொரு முறையும் சிலரை இந்த சிறப்பு முகாம்களில் இருந்து வெளியே அனுப்பும்போது, எதற்காக சம்பந்தமே இல்லாத சிலரை, வயதான மூப்புகளைக் கூட உள்ளே இதில் வைக்க வேண்டும்? என்ற கேள்வியும் மனித உரிமை ஆர்வலர்கள் இடையே உண்டு.

    நடுவணரசு இந்த சிறப்பு அகதிகள் முகாம்களின் இருத்தலுக்கு  "நியாயம்"  கற்பிக்க அவற்றில் சிறைவாசிகளின் எண்ணிக்கையை "தக்கவைக்க" விரும்புவதால் தவிர்க்க முடியாமல் தமிழக அதிகாரிகள் அவற்றில் யாரையாவது போட்டு நிரப்பி வருகிறார்கள் என்ற பதிலும் கிடைத்து வந்தது. ஒரு "ஒற்றையாட்சி இந்திய அரசில்" இப்படிஎல்லாம்தான் இருக்கும்போல என்றும் நம்மை எண்ணவைத்தது.இப்போது இந்தியாவிலும் ஆட்சி மாற்றம், இலங்கையிலும் ஆட்சி மாற்றம் வந்துள்ளது. இரண்டு புதிய அடசிகளும் "தமிழர்களுக்கு எதிரானவர்கள் தாங்கள் அல்ல" என்று உரக்க கூறி வருகிறார்கள்.அதை உண்மை என்று தமிழக மக்களோ, ஈழ மக்களோ நம்பவில்லை. இந்த நேரத்தில் இங்கே இருக்கும் திருச்சி, செய்யார் சிறப்பு அகதிகள் முகாம்களில் இருக்கும் ஈழத் தமிழர்களில் ஐந்து, ஐந்து பேரை, இரண்டு முகாம்களிலும் சேர்த்து " பாத்து பேரை" தமிழக அரசு சென்ற வாரம் விடுதலை செய்துள்ளது. இதுதவிர சிலர் உயர்நீதிமன்ற ஆணையின் மூலமும் வெளியே வந்துள்ளனர்.

               இந்த சூழலில்தான் சிங்கள மீனவர்கள் ஐந்து பேர் திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இது இரு தேசிய இனங்களின் இளைஞர்கள் மததியில் சிறப்பு முகாமிற்குள் பிரச்சனையை உருவாக்குமா? என்று சிலர் வினவினார்கள். உருவாக்காது. ஏன் என்றால் ஈழத் தமிழர்கள் "மனிதாபிமானம்" கொண்டவர்கள். சிங்கள மக்கள் மீது அவர்களுக்கு எந்த கோபமும் கிடையாது. சிங்கள ஆளும்கூட்டதின் மீதுதான் அவர்களுக்கு எதிர்ப்பு உணர்வு உண்டு என்று நாம் கூறினோம். ஆனாலும் இந்த நேரத்தில், அதாவது "இலங்கை நீதிமன்ற உத்தரவுப்படி,இந்தியத் தமிழ் மீனவர்களை விடுதலை செய்த சிங்கள அரசு அவர்களது படகுகள் 87 ஐ விடாமல்" பிடித்து வைத்துக் கொண்டுள்ளது., இந்த நேரம்பார்த்து, இலங்கை சிங்கள மீனவர்கள் நமது இந்திய கடலோரம் வந்து இயற்கையாக, வரலாற்று வழக்கப்படி, அதாவது இருபுறமும் உள்ள  மீனவர்கள் வரலாற்று வழக்கப்படி இருபுறமும் கரையோரம் சென்று மீன் பிடிக்கும் முறைப்படி, வந்தபோது, மாட்டிக் கொண்டார்கள். அவர்களை பிடித்து சிறையில் அடைத்தபோது, நீதிமன்றம் அவர்களை சிறப்பு அகதிகள் முகாமில் போடச் செய்துள்ளது.இந்த செயல் என்னதான் வருகிற 16 ஆம் நாள் இந்தியாவிற்கு இலங்கை அதிபர் சிரிசேனா வருவதற்கு முன்பே, வருகிற 9 ஆம் தேதியே இலங்கையில் பிடிததுவைக்கப்பட்டுள்ள 87 படகுகளை விடுதலை செய்வோம் என்று இலங்கை அமைச்சர் வேலாயுதம் ராமேஸ்வரம் வந்து கூறினாலும், இதுவரை நடந்துவந்த கடந்த கால நிகழ்வுகள் நம்பிக்கைகளை விதைக்கவில்லை.

       அததகைய சூழலில், இலங்கை சிங்கள மீனவர்களை நீதிமன்றம் விடுவித்தாலும், சிறப்பு அகதிகள் முகாமில் வைத்திருப்பது, இலங்கை அரசுக்கு  எட்டட்டும். அதை ஒட்டி அவர்கள் நமது மீனவர்களின் படகுகள் 87 ஐ உடனே விடுதலை செய்யட்டும்.அப்போது நமது அரசும், சிங்கள மீனவர்களை சிறப்பு முகாமிலிருந்து விடுதலை செய்யட்டும். இலங்கை சிங்கள மீனவர்கள் "இங்குள்ள சிறப்பு அகதிகள் முகாம்கள்" பற்றி" இலங்கை அரசுக்கு தொலைபேசியில் சொல்லட்டும்.{ சிறைகளில் சுதந்திர கைபேசி உரையாடல்கள் சாதியமில்லாவிட்டாலும், சிறப்பு அகதிகள் முகாம்களில் சாத்தியம்} அதன்மூலம் இலங்கை அரசு, இந்திய அரசான தனது நண்பரிடம் "சிறப்பு அகதிகள் முகாம்களை கலைக்க ஆலோசனை" கூறட்டும். அதுவே இந்திய நடுவணரசின் சிறப்பு அகதிகள் முகாம் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தட்டும்.இவ்வாறு தமிழர்கள் எண்ணிப்பார்ப்பது தவறல்லவே?இந்த அளவு சீரிய சிந்தனை செய்யும் அதிகாரிகள் வாழ்க.

Tuesday, February 3, 2015

ஆட்சி மாறியது; காட்சி மாறியதா?


      மகிந்தா வின் ஆட்சி காட்டுமிராண்டி ஆட்சி.உண்மைதான். தமிழின அழிப்பு ஆட்சி.உண்மைதான். ஒரு மாபெரும் இன அழிப்பு போரை நடத்தி, அதற்கு இந்திய வல்லரசுதான் முழு பொறுப்பு என்பதுபோல " இந்தியாவின் போரை நாங்கள் நடத்தினோம்" என்று பகிரங்கமாக நாடாளுமன்றத்தில் அறிவித்த ஒரு சிங்கள பவுத்த பேரினவாத ஆட்சியின் தலைவர்தான் மஹிந்த ராஜபக்சே. அப்படிப்பட்ட ஒரு கொடியவரின் குடும்பமே கொள்ளை அடித்துவந்த ஸ்ரீலங்கா நாட்டில், தென்னிலங்கை மக்களும்கூட வெறுக்கும் அளவுக்கு ஒரு ஆட்சியை நடத்திவந்த மகிந்தா, உலக சமூகத்தின் வெறுப்பையும் சம்பாதிததுவிட்ட மகிந்தா,ஐ.நா.மனித உரிமை கழகத்தின் தீர்மானப்படி, ஒரு உலக விசாரணையை சந்திக்கும் மகிந்தா,அமெரிக்காவின் மற்றும் ஐரோப்பாவின் வெறுப்பை சம்பாதித்து  விட்ட மகிந்தா, ஐ.நா.சபையின் பொதுச்செயலாளரின் கோபத்திற்கு உள்ளான மகிந்தா, இப்போது இலங்கை மக்களால் தேர்தல் மூலம் தூக்கி எறியப்பட்டுல்லார்ட் என்பது உண்மை. அதை மேற்கண்ட வெறுப்பு கொண்டவர்களும், கோபம் கொப்பளிததவர்களும், மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள் அல்லது வரவேற்றார்கள் என்பதும் உண்மை.அது தமிழர்களுக்கும், ஜனநாயகம் விரும்புவோருக்கும் ஒரு " மூச்சுவிடும் வெளியை " அளித்துள்ளது என்பதும் உண்மைதான்.

    ஆனால் இலங்கை தீவில் ஏற்கனவே இருந்துவரும் "இனச்சிக்கல்" அல்லது "இன ஒடுக்கல்" அல்லது "இன அடக்குமுறை" அல்லது " இன விடுதலைப்போர்" அல்லது "இன விடுதலைக்கான போரை அடக்கும் மனோநிலை" அல்லது ஏற்கனவே இருந்துவரும் "சிங்கள பவுத்த" இனத்தவர் மட்டுமே ஆட்சித் தலைமைக்கு வரமுடியும் என்ற சட்டம் இந்த தேர்தல்மூலம் கிடைத்துள்ள "ஆட்சி மாற்றத்தால்"  மாற்றப்பட்டுவிடுமா? என்றால் "வாய்ப்பில்லை" என்பதே எல்லா திசைகளில் இருந்தும் வருகின்ற பதிலாக இருக்கும். இப்போது ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள மைத்திரி பால சிரிசேனா, ரணில் விக்ரமசிங்கே, சந்திரிகா, சரத் பொன்சேகா, மற்றும் அவர்களை ஆதரித்து  ஆட்சிக்கு கொண்டுவதுள்ள புத்த பிக்குகளின் ஜாதிக கட்சி, ஜனதா விமுக்தி பெரமுனா, ஆகியவை மேற்கண்ட கேள்விகளுக்கான "விடைகளை" அல்லது "மாற்றை" தரக்கூடியவர்களா? என்றால் அதுவும் இல்லை.

      உலக சமூகத்தின் வெறுப்பை சம்பாதித்து, ஐ.நா.மனித உரிமை கழகத்தின் "போர் குற்ற விசாரணையை" எதிர்கொள்ளும் மகிந்தா அரசாங்கம், செல்வாக்கை இழந்த நிலையில், சிங்கள பவுத்த ஆளும்வர்க்கம் அல்லது ஆளும் கும்பல், என்ன நினைக்கும்?அல்லது நினைத்திருக்கும்? ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் எதிரான ஒரு பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுதியதால், தென்னிலங்கை மக்கள் மத்தியிலும் "கடுமையான பசி,பட்டினி, விலைவாசி உயர்வு" ஆகியவற்றை சந்தித்துவரும் வேளையில், அந்த இலங்கை தீவின் மக்கள் மத்தியில் "தொடர்ந்து" ஆள விரும்பும் சிங்கள பவுத்த பேரினவாதம் என்ன நினைக்கும்?அல்லது நினைத்திருக்கும்? செல்வாக்கு இழந்த கும்பலை தூர எறிந்துவிட்டு, புதிய கும்பலை ஆட்சிக்கு கொண்டுவந்து தங்கள் கொள்கைகளை தொடரத்தானே நினைக்கும்? அல்லது நினைத்திருக்கும்?

       அப்படிச் சூழலில்தான் மக்களின் கோபத்திலிருந்து தப்பிக்க "இந்திய ஆளும்வர்க்கமும், அமெரிக்க ஆளும்வர்க்கமும் " சரியான தருணத்தில் உதவிக்கு வந்தனர். அவர்களின் குறிப்பாக அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் ஏற்பாடுதான், மைதிரிபாலா சிரிசேனா. ஐ.தே.க.கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கே, ஏற்கனவே அமெரிக்க சார்பு கொள்கை உடையவர் என்பது ஊரறிந்த உண்மை. கடைசிவரை மகிந்தா நம்பி இருந்தது "இந்திய ஆளும்வரக்கத்தை". இந்திய ஆளுமவர்க்கமும் தனது மகிந்தா சார்பு நிலைப்பாட்டை கடைசிவரை மாற்றிக்கொள்ளவில்லை. டில்லியின் தலைமையிலிருந்து செயல்படும் "உளவுத் துறையினர்" கடைசி வரை மகிந்தாவை காப்பாற்றவே  விரும்பினர். அதற்கான காரணங்கள் ஊரறிந்தவைதான். ஐ.பி.கே.எப். என்ற "இந்திய அமைதிப் படை" மூலம் வடக்கு-கிழக்கு இலங்கையில் முதல் "தமிழின அழிப்பை" தொடங்கிவைத்த "பெருமை" இந்திய அரசுக்கே சொந்தம். அதை இரண்டாம் "கட்ட " இன அழிப்பு போருக்கு இட்டுச் சென்ற "பெருமைதான்" மகிந்தா ராஜபக்சேவிற்கு சொந்தமானது. இந்த செய்தியை மறைமுகமாக அவ்வப்போது கூறி, மகிந்தா இந்திய அரசை மிரட்டி வந்தார் என்பதும் தெரிந்த கதை.

      அதனால்தான் இந்திய அரசு, "ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம்" மன்மோஹன்சிங்  தலைமையில் இருக்கும்போதே, ஐ.நா.மனித உரிமைகழகத்தில், அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட "இலங்கை போர்குற்றங்கள் அல்லது மனித உரிமை மீறல்கள்" பற்றிய தீர்மானத்தில், நீர்ததும்போகும் அளவுக்கு "திருத்தங்கள்" கொண்டுவருவதும், "இலங்கைக்கு உள்ளேயே" விசாரணை" என்ற பதத்தை பயன்படுத்தி, மகிந்தாவிற்கு "பிணை எடுத்துவிடும்" பணியை செய்வதுமாக இரண்டு முறையும், மூன்றாவது முறை தீர்மானம் வரும்போது,"வெளி விசாரணை எப்படியும் வந்துவிடும்" என்ற நிலையில், அதை "புறக்கணிப்பதும்" என்ற நிலையை எடுத்தது. இது மகிந்தா அரசை காப்பாற்றுவதற்கான செயல் என வெளிப்படையாக தெரிந்தாலும், இந்திய அரசு "தன்னை" ஒரு உலக விசாரணையிலிருந்து "காப்பற்றிக்கொள்வதற்கான" செயல் எனபதே அதன் சாரம்சமாகும்.

        இலங்கை தீவிற்குள் இரண்டு இனங்களுக்கும் இடையே "சண்டை" நடந்தால், அல்லது "இன வேற்றுமை" இருந்தால், அதை பயன்படுத்திக் கொண்டு, இரண்டு "தேசிய இனங்களுக்கும்" இடையே "பிளவை" ஏற்படுத்தி, இரண்டு இனங்களுமே அருகிலே உள்ள "பெரிய அரசை" சார்ந்து நிற்க செய்யவேண்டும் என்று எந்த "பெரிய அரசுமே" நினைக்கத்தானே செய்யும்? அந்த நினைப்புதான் இந்திய அரசின் நினைப்பும். அதனால்தான் "இந்திராகாந்தி" காலத்தில் "ஈழப்போராளிக்குழுக்களுக்கு" கொடுக்கப்பட்ட "கருவிகளும், பயிற்சிகளும்" என்பதை எத்தனைபேர் சிந்தித்து பார்க்கப்போகிறார்கள்? அதேநேரம் "ஆளும் சிங்கள ராணுவத்திற்கும் " ஆயுதப்பயிற்சி கொடுக்காமல் இருந்ததா இந்திய அரசு? இல்லையே? அதற்க்கு என்ன பொருள்? அமேரிக்கா ஒரு உலக "சாவு வியாபாரியாக" உலகில் எந்த இடத்தில இரண்டு குழுக்களுக்குள், அல்லது நாடுகளுக்குள், அல்லது இனங்களுக்குள் "மோதல்" இருந்தாலும் இரண்டு பக்கத்திற்கும் தனது "ஆயுதங்களை" விற்று "பிழைப்பை" நடத்தும் என்று உரக்க கூவிவரும் நாம், அதேபோல்தான் இந்திய அரசும், தனது செல்வாக்கிற்கு உட்பட்ட "தெற்காசியாவிற்குள்" அல்லது "தென்கிழக்கு ஆசியாவிற்குள்" இரண்டு சக்திகள் மோதிக கொண்டால் இரண்டிற்கும் ஆயுதம் கொடுத்து,,இரண்டையுமே "தனது காலடியில்" விழ வைப்பதற்கான தன்மைகளை கொண்ட ஒரு" பிராந்திய மேலாதிக்க வல்லரசுதான்" என்பதை புரிந்துகொள்ளவோ, பகிரங்கமாக அறிவிக்கவோ ஏன் தயங்குகிறோம்?

       அத்தகைய ஒரு நிலையில்தான் இலங்கையில் நடந்து முடிந்த "அதிபர் தேர்தலின்" முடிவுகளையும், அதை ஆதரித்து ஓடிவரும் "இந்திய,அமெரிக்க அரசுகளையும்" நாம் காண வேண்டும். சந்திரிகா இந்திய அரசுக்கு நெருக்கமானவர் என்பதும், ரணிலும், மைத்திரி பாலாவும் அமெரிக்கக் அரசுக்கு நெருக்கமானவர்கள் என்பதும் நாடறிந்த உண்மைதான். அதை இலங்கை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு இன்றுவரை, இந்திய அரசை ஆட்சி செய்யும், "தேசிய ஜனநாயக கூட்டணி" தலைமையில் இருக்கும் நரேந்திர  மோடியை இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரசிங்கே சந்திப்பதும், இணைந்து திட்டமிடுவதும், அதை ஒட்டி "அகதிகளை திருப்பி அனுப்புவது" என்ற நிர்ப்பந்த அரசியலை ஆலோசிப்பதும், அதன்மூலம் மார்ச் மாதம் வர இருக்கும் "ஐ.நா.மனித உரிமை கழகத்தின்" விசாரணைக் குழு அறிக்கையிலிருந்து, இலங்கையையும், இந்தியாவையும் "காப்பாற்ற" திட்டமிடுவதும், அமெரிக்க வெளிவிவகார துணை அமைச்சர் இலங்கை வருகை தந்து "அமெரிக்காவின் முழு ஒத்துழைப்பை" உறுதி கூறுவதும், அதை ஒட்டி, "மைத்திரிபால இந்தியா வர இருப்பதும், அடுத்து மோடி இலங்கை செல்ல இருப்பதும்" எல்லாமே ஒரு திட்டமிட்ட "இந்திய-அமெரிக்க" ஆதிக்கத்தை இலங்கை மீது மட்டுமின்றி, இந்தியப் பெருங்கடல் மீது, "டியாகோ கார்சியா" என்ற  தளம் அமைக்கும் பழைய திட்டத்திற்கு புதிய மெருகு கொடுக்க முயற்சிப்பதாக இருக்கிறது என்று புரிய வேண்டாமா?

     இதை இந்திய மக்களையும், குறிப்பாக இந்தியாவில் உள்ள "தமிழ்நாடு மக்களையும்" ஏற்க வைக்க வேண்டும் என்றால், அதற்கு "சீனா ஆபத்து" என்ற ஒரு "மிகையான" செய்தியை பரப்புவது அவர்களுக்கு கை வந்த கலைதானே? ஒரு புறம் இந்திய அரசு "அமெர்க்காவையும்  திருப்தி செய்து, சீன நட்பையும்" உறுதி செய்யும் நேரத்தில், இலங்கையில் "சீனாவால் பெரும் ஆபத்து" என்ற பூதத்தை "ஊடகங்களுக்காக " கிளப்பிவிடும் இந்திய அரசின் "தந்திரத்தில்" அமெரிக்க குள்ள நரியும் ஒளிந்துகொண்டிருப்பதை புரிந்துகொள்ள முடியும். எப்படியும் சீனாவிற்கு "தென் சீனக் கடலில்" ஜப்பானுடன், "போர்த்திர" வகையில்,மோதல் இருக்கும்போது, ஜப்பானை பின்னாலிருந்து ஆதரிக்கும் அமெரிக்க வல்லரசு, ஒபாமாவின் இந்திய வருகையின்போது "இந்திய-அமெரிக்க" கூட்டு அறிக்கையில் "தென்சீனக் கடலில் இந்தியாவின் செல்வாக்கை உறுதி செய்வோம்" என்று "தேவையற்ற" சொற்களை சேர்த்து சீனாவை "வெறுப்படைய" செய்தது. ஒபமா விமானம் ஏறிய உடனேயே இந்திய அரசு, தனது வெளிவிவகார அமைச்சர் சுஷ்மாவை சீனாவிற்கு அனுப்பி தங்கள்" நட்பை" உறுதியாக  அறிவித்தது.அடுத்து மோடியின் சீன பயணத்தை அறிவித்துள்ளது. இதுதான் இலங்கைதீவில், இந்தியாவிற்கும், சீனாவிற்கும் "போட்டியும்,மோதலும்" முதனமையாக இருக்கிறது என்பதற்கான பொருளா? இருவரும் "சந்தைப்போட்டி" வைத்துக் கொண்டுள்ளனர் என்பதும், அமெரிக்காவை சார்ந்து அந்த சந்தைப்போட்டியில் இந்திய அரசு நிற்கிறது என்பதும் இதில் வெளிப்படையாக தெரியவில்லையா? இந்தப் பொருளில் ஏற்கனவே நவ சம சாச கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்னா பேசவில்லையா?

               பகிரங்கமாக "தமிழின அழிப்பு போரை" நடத்தி இனப்படுகொலை செய்த ராஜபக்சே கும்பலுக்கும், "போருக்கான நிதிநிலை அறிக்கையை" நாடாளுமன்றத்தில் ஆதரித்த "ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விகிரமசின்கேவிற்கும் " சாராம்சத்தில் வேறுபாடு இருக்கிறதா? கடைசி கட்ட வன்னிப் போரில், மகிந்தாவின் வெளிநாடு பயணத்தை ஒட்டி, "இன அழிப்பு போருக்கு" தலைமை முடிவுகள் எடுத்த மைத்திரிபால சிரிசேனா மாறுபட்டவரா? உலக சமூகத்தின் கோபத்திற்கு ஆளான போதும்,"ஐ.நா.மனித உரிமை கழகத்தின் விசாரணையை" அனுமதிக்க மாட்டேன் என்று முரட்டுத்தனமாக கூறிய மகிந்தாவும், இப்போது "இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கான" ஐ.நா. ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றும் அதனால்,வெளியிலிருந்து விசாரணை சாத்தியமில்லை எனவும், உள்நாட்டிலேயே போரில் மனித உரிமை மீறல் பற்றிய விசாரணை" என்றும்,அதுபற்றி தாங்கள் "ஐ.நா.மனித உரிமை கழகத்துடன் பேசுவோம்" எனவும் கூறுகின்ற இலங்கை பிரதமர் ரணில் விகிரமசின்கேவின் கூற்றும் வேறுபட்டவையா?

     ஆகவே எப்போது, சிங்கள ராணுவம் வடக்கு-கிழக்கு பகுதிகளை விட்டு வெளிஏறுகிறதோ , எப்போது மாகாணங்களுக்கு "நில உரிமை, காவல் உரிமை"வழங்கப்படுகிறதோ, எப்போது ஈழத் தமிழர்களது நிலங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறதோ, அதாவது சிங்கள ராணுவத்தாலும், சிங்கள குடியேற்றதாலும்  ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களிலிருந்து ஆக்கிரமிப்பு சக்திகள் அகற்றப்படுகிறதோ, அன்றுதான் ஆட்சி மாறியதால், காட்சி மாறியுள்ளது என்று கொள்ள முடியும்.அதுமட்டுமல்ல. 1987 இன் ராஜீவ் காந்தி-ஜெயவர்தனே  ஒப்பந்தப்படி வடக்கும்-கிழக்கும் இணைக்கப்பட்டால்தான் புதிய ஆட்சி மீதும் நம்பிக்கை பிறக்கும். தமிழர்களுக்கு அதிகாரம் தருவதற்கு ஓடிவரும் அமெரிக்க-இந்திய அரசுகள் தங்கள் சொல் கேட்கும் இலங்கை அரசிடம், "ஆங்கிலேயே அரசு  ஸ்காட்டிற்கு" நடத்திய " பொதுவாக்கெடுப்பு போல" ஒரு பொதுவாக்கெடுப்பை ஈழத் தமிழர் இடையே நடத்தி அதன்மூலம் உலகுக்கு தங்களது "ஜனநாயக அணுகுமுறையை" நிரூபிக்க தயாராவர்களா?--தெ.சீ.சு.மணி.ஊடகவியலாளர்.{ டிஎஸ்.எஸ்.மணி} மக்கள் சிவில் உரிமை கழக தேசியக் குழு உறுப்பினர்.{பி.யு.சி.எல். சென்னை பெருநகர மாவட்ட செயலாளர்}..