Friday, July 5, 2013

பூக்கள பறிக்காதீங்க, காதல முறிக்காதீங்க.....


       இளவரசன் மரணம் ஏன் ? உங்கள் சமூகத்தால்  அதன் சாதி திமிறால், உங்கள் சீரழிந்த அரசியலால் அதன் வாக்குகள் பெறுவதற்கு சாதி வெறியை தூண்டும் கேவலத்தால், சொந்த சமூகத்தின்  பெண்களை உங்களது "உடமைகளாக" எண்ணும்  அழுகிப்போன பண்பாட்டால், முற்போக்கு பேசிக் கொண்டு பிற்போக்காக செயல்படலாம் என்று தமிழ் மக்கள் பலரையும் அனுமதித்து, நடமாட விட்டுள்ள, இழிநிலையால், நீதிமன்றம் வந்தாலும் பெண்ணை ஆண்கள் அன்பாகவே மிரட்ட முடியும் என்ற அசிங்கத்தை பொதுமக்கள் கேள்வி கேட்காமல் இருக்கும் முதுகெலும்பு அற்ற சூழலால், நெருக்கடியில் உள்ள தாய்க்கும், மகளுக்கும், கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்று கூட தோன்றாத "நீதிமான்களின்" அளவற்ற அக்கறையால், "நேர்மையான அன்பு " இந்த புழுத்துப் போன புவியில் இல்லாததால், சாதியின் பெயரில் "சண்டியர் தனம் " அனுமதிக்கப்பட்டுள்ளதால், இங்குள்ள இழி பிறவிகளுடன் வாழ "தகுதியற்றவனாக" ஆகிவிட்டதால், ஏற்பட்ட மரணம்தானே? 
       ஒன்று புரிந்து விட்டது. இளைய தலைமுறை மீது,"முதிய தலைமுறையின் சாதி அரசியல்" ஒரு போரை கட்டவிழ்த்து  விட்டுள்ளது.அந்த போரை சந்திக்க இளைய தலைமுறை  தயாராக வேண்டும். அதிலும், இளைய தலைமுறையின் இளம் பெண்கள் முன் நின்று சந்திக்க வேண்டும். உங்களுக்கு முதிய தலைமுறையின் பெண்கள் துணை நிற்பார்கள்  ஏன்  என்றால், அவர்கள் ஏற்கனவே இந்த ஆணாதிக்க சாதிய வெறியர்களை சந்தித்து விட்டு வந்தவர்கள்  இளம் பெண்கள் கைகளில்தான் இந்த உலகம் இருக்கிறது. மாவோ கூறியது போல , "இளைஞர்களே, நீங்கள்தான் உலகை உருவாக்க இருப்பவர்கள்.நாங்களும்தான். ஆனால் இறுதி ஆய்வில் நீங்கள்தான் " நினைவில் வையுங்கள்.