Thursday, May 10, 2012

ஜெ.க்கு மிரட்டல்--டில்லி சதியா?



டில்லிகார்கள் கெட்டிக்காரர்கள்.தங்கள் எதிரிகளை முதலில் அடையாளம் காண்பார்கள். பிறகு அவர்களை அவர்களது வீட்டிற்குள்ளேயே முடக்குவது எப்படி என்று சிந்திப்பார்கள். அதற்கென்றே தனி திட்டமிடுவார்கள். இது ஏகாதிபத்தியத்தின் உலகமயமாக்கலின் காலகட்டம். அதனால் ஊடகங்களுக்கே அதிக செல்வாக்கு உண்டு. ஊடகங்களின் பணி என்ன? கருத்துகளை உருவாக்குவது. அப்படி கருத்துகளை உருவாக்கி தாங்கள் அடையாளம் கண்ட தங்கள் எதிர்களை "முடங்க" வைப்பது இன்றைய  உலக ஆதிக்கத்தை செயல்படுத்தும் சக்திகளுக்கு கைவந்த கலை. அதில் ஒன்று நமது முதல்வருக்கு மிரட்டல் விடுக்கும் இணைய அஞ்சல் என்று எப்படி கூறுவது? பொறுப்புள்ள டில்லிகாரர்கள் அப்படி செய்வார்களா? 

எல்லாவற்றிற்கும் வரலாற்று சான்றுகள் இருந்தால்தானே ஏற்றுக்கொள்ள வேண்டும்? .  அப்படி வரலாற்று சான்றுகள் டில்லியின் சதி பற்றி இருக்கிறதா? என் ஜெக்கு டில்லி மிரட்டல் விட என்ன வேண்டும்? இதற்கும் அரசியல் ரீதியில் காரணம் கண்டுபிடித்தாக வேண்டும். இன்று டில்லியின் முக்கிய பிரச்சணையே என்.சீ.டி.சீ. என்ற " தேசிய பயங்கரவாத தடுப்பு மையம்"பற்றியதுதான். அதை எதிர்ப்பதில் தமிழக முதல்வர்தான் முக்கியமாக நிற்கிறார் என்பது டில்லியின் புரிதல். அதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது. டில்லியை ஆளும் "அய்.மு.கூ." ஆட்சியாளர்களுக்கு யாரால் மாற்று கொடுத்து டில்லியில் ஆள முடியுமோ, அல்லது ஆளமுடியும் என்ற நம்பிக்கை யாருக்கு இருக்கிறதோ அவர்தானே டில்லியின் அந்த திணித்தல் நடவடிக்கையை எதிர்த்து ஊர்தியாக நிற்க முடியும்? அது செல்வி ஜெயலலிதா மட்டும்தான் என்பது கண்கூடு. அதனால தங்களுக்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எதிரியாக நின்று அனைவரையும் ஐக்கியப்படுத்தும் சக்தி செல்வி.. ஜெயலலிதா தான் என்பது இன்றைய டில்லியின் ஆரூடம்.


அதற்காக ஜெக்கு எதிராக மிரட்டல் என்று ஒரு கப்சாவை அவிழ்த்துவிட டில்லி துணியுமா? துணியும். அதற்கான சான்றுகள் வரலாற்றில் இருக்கிறதா? இருக்கிறது. அதாவது 2005 ஆம் ஆண்டு. செல்வி.ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருந்தது. ஆனால் நாடாளுமனறத்தை காங்கிரசும், திமுகவும் கொண்ட கூட்டணி கைப்பற்றி விட்டது. அதுவரை பாஜக ஆட்சி நடந்துவந்தது. அப்போது உள்துறை அமைச்சர்க்க பாஜக ஆட்சியில் அத்வானி இருந்தார். ஒவ்வொரு ஆண்டும் உள்துறை அமைச்சகம் ஒரு சட்ட-ஒழுங்கு நிலைமை பற்றியா நாடு தழுவிய அறிககையை முன்வைக்கும். அவ்வாறு அத்வானி முன்வைத்த கடைசி ஆண்டி அறிக்கையில் தமிழ்நாட்டின் சட்ட-ஒழுங்கு பற்றி எந்த குறைபாடும் கூறவில்லை. ஆனால் அய்.மு.கூ. முதல் கட்ட ஆட்சியில், சிவராஜ் பட்டீல் உள்துறையை கையில் எடுத்தவுடன் ஒரு சட்ட-ஒழுங்கு பற்றிய அறிககையை முன்வைத்தார். அதில் தமிழ்நாட்டில் "விடுதலை புலிகளின் நடமாட்டம் " இருப்பதாக எழுதி அறிவித்தார். இது அதிமுக ஆட்சிக்கு எதிரான மறைமுக குற்றச்சாட்டு. உடனடியாக ஒரு ஆங்கில ஏட்டில் ஓராண்டு முன்பு உள்துறை காணாத ஒரு கண்டுபிடிப்பை இவர் கண்டுவிட்டாரா? என கேட்டு எழுதியது.

அன்றே செல்வி.ஜெயலலிதா முதல்வர் பொறுப்பில் இருந்துகொண்டே இந்த குற்றச்சாட்டு ஒரு பொய் எனபதை அறிக்கையாக வெளியிட்டார்.  அதற்கு பிறகு இரண்டு மாதங்கள் கழித்து, மீண்டும் உள்துறை இது போன்ற ஒரு பூதத்தை கிளப்பியது. அதுதான் பெண்புலிகள் இரண்டு பேர் மணப்பாக்கம் வந்திருகிரறாக்கள் என்றும் அவர்கள் செல்வி.ஜெயலலிதாவை கொல்ல வந்திருக்கிறார்கள் என்றும் ஒரு கடிதத்தை அதே உள்துறையின் அமைச்சர் சிவார்ஜ் பட்டீல் முதல்வர் ஜெக்கு எழுதினார். அதுவும் அடுத்த பொய் என்பதை அதிமுக ஆட்சி அம்பலப்படுத்தியது. அது பற்றி ஜெயா தொலைக்காட்சியும் நிகழ்ச்சி நடத்தி புலி எனும் கிலியை டில்லி கிளப்புகிறது என்று அம்பலப்படுத்தியது. 

அதேபோன்ற கதை இப்போதும் தொடர்கிறது. டில்லிக்கு இப்போது செல்வி.ஜெயலலிதாவின் அழுத்தமான அறிவிப்புகள் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளன. அதற்கு இதுபோன்ற குறுக்கு வழிகள்தான் அவர்களுக்கு தெரிந்த பாதை. இப்போது புலிகளை காரணம் கட்ட முடியாது. ஆகவே அவர்கள் மாவோவாதிகளை கார்ணமாக்குகிரார்கள்.மாவோவாதிகளுக்கு தமிழக முதல்வர் மீது எந்த கோபமும் இப்போது இருக்க வாய்ப்பில்லை. அதுமட்டுமின்றி ஜெயலலிதா எதிர்க்கும் அதே என்.சீ.டி.சீ.யை மாவோவாதிகளும் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஆகவே இந்த மிரட்டல் ஒரு சதிதான். அதற்காக் முதலில் தென் இந்தியாவில் மாவோவாதிகள் விரிவாக்கம் செய்ய திட்டம் என்ற பொய்யை முதலில் அவிழ்த்து விட்டார்கள். அடுத்த நாளே இந்த புருடா கதையை கக்குகிறார்கள்.ஒரு நாட்டின் ஆட்சியாளர்கள் இப்படி நடந்துகொள்வது கேவலமாக இருக்கிறது.