Friday, January 27, 2012

அன்றைய ராதாவும், இன்றைய ராதாவும்.

அய்.எஸ்.ஆர்.ஒ. வின் எஸ். பான்ட் ஊழல் இப்போது நாட்டை சுற்றி வரும்போது, அந்த புயலில் அடிக்கப்படும் மாதவன் நாயர் வகையாறாக்கள் கிளப்பும் கேள்விகள் நன்றாகத்தான் இருக்கின்றன. இன்றைய அய்.எஸ்.ஆர்.ஒ.வின் தலைவர் ராதாகிருஷ்ணன், அன்று 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் வணிக பிரிவான ஆன்றிக்ஸ் சார்பாக தனியார் அமிப்பான தேவாஸ் உடன் ஒப்பந்தத்தை போடுவதில் உடன் இருந்தவர்தான் என்று இப்போது அம்பலப்படுத்துகிறார்கள். 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பிறகுதான் அவர் புரண்டு, தங்களுக்கு எதிராக இப்படி ஒரு முடிவை எடுக்க காரணமாக இருக்கிறார் என்கின்றனர்.


இதுவே அனைத்து அதிகாரிகளும் சேர்ந்துதான் இந்திய திருநாட்டை ஏமாற்றி இருக்கிறார்கள் என்பதை புரிய வைக்கிறது. இந்த அதிகாரிகளுக்கு தனி சுதந்திரத்தை தந்திருப்பது நாட்டின் தலைமை அமைச்சர் அலுவலகம். நாட்டின் மிக முக்கியமான ரகசியங்கள் என்ற பெயரில் இந்த அய்.எஸ்.ஆர்.ஒ.வின் செயல்பாடுகளை எந்த மத்திய அமைச்சரவைக்கோ, அல்லது நாடாளுமன்றத்திற்கோ, அல்லது ஊடகங்களுக்கோ, அல்லது நாட்டு மக்களுக்கோ தெரியவிடாமல், ரகசியமாக வைத்துக் கொள்ள இந்த நிறுவனத்திற்கு அதிகாரத்தை நமது சட்டம் கொடுத்துள்ளது. அதனாலேயே இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளையும், அதன் நிதி போககுவரத்து கணக்குகளையும், வெளியே தெரியாமல் அதாவது மத்திய அமைச்சரவைக்கோ, நாடாளுமன்றத்திற்கோ, தெரியவிடாமல், தலைமை அமைச்சர் அலுவலகமே பார்த்துக் கொள்ளும் என்பதுதான் அதில் உள்ள விதிமுறை. இந்த அளவுக்கு முக்கியமான ஒரு விஷயம் அது என்றால் அதில் தவறுகள் நடக்கும் பொது, அது எனக்கு தெரியாது என்று கூறுகின்ற ஒரு பிரதமரை நாம் வைத்துக் கொண்டு இருக்கிறோம் என்பது இப்போது அம்பலமாகிறது.

இந்த கூத்தை ஒரு மாதவன் நாயர் மேல் மட்டுமே நடவடிக்கை எடுத்து முடித்துவிடாமல், எப்படி இதன் பொறுப்பை நாட்டின் பிரதமர் மீது கேள்வியாக எழுப்பபோகிறோம்?

அய்.எஸ்.ஆர்.ஒ. வேண்டாமே?

மாதவன் நாயர் போன்ற ஊழல் சக்திகள்தான் அந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் "அறிவியலாளர்கள்" என்ற பெயரில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்பது இப்போது கண்கூடாக தெரிந்துவிட்டது. இந்த ஊழல் நாயர் இப்போது இருக்கும் அந்த நிறுவன தலைவரான ராதாகிருஷ்ணனை குற்றம் சுமத்துகிறார். தன்னை போட்டுக் கொடுத்து, தங்கள் மேல் அரசு நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்தவர் என்று அவர் இவரை குறை சொல்கிறார். இந்த ஆதிக்கவாதிகள் எப்போதுமே தங்களுக்குள் கள்ள கூட்டணி வைத்துக் கொள்பவர்கள். ஆனால் எப்போது தங்களை விட அதிகாரம் படைத்த அரசாங்கத்தால் ஒரு நடவடிக்கை தங்களுக்கு எதிராக வந்துவிட்டது என்றால், பயந்துபோய், அதற்கு இன்னொரு பலவீனமான சக்தியை குறை சொல்லி விடுவார்கள்.அரசாங்கத்தை அப்போதும் முழுமையாக எதிர்க்க மாட்டார்கள். ஏன் என்றால் இவர்கள் கொள்ளை அடிக்க ஏற்பாடு செய்து கொடுத்ததே அந்த அரசாங்கம்தானே?

இப்போது மாதவன் நாயர், ராதாகிருஷ்ணன் மீது பாய்கிறார். ராதாகிருஷ்ணன் நல்லவர் போல என்று நாம் நினைத்தால், இல்லை என்று மாதவன் நாயரே சான்று கூறுகிறார். தாங்கள் நடத்தும் அதாவது ஒய்வு பெற்ற அய்.எஸ்.ஆர்.ஒ. அதிகாரிகள் நடத்தும் தனியார் நிறுவனமான "தேவாஸ்" உடன் செய்துகொண்ட அன்றிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தத்தில் இருந்தவர் என்பதே அந்த குற்றச்சாட்டு.நாட்டு துரோக ஒப்பந்தம் செய்தபோது முதலில் இருந்தவர்தான் இந்த ராதாகிருஷ்ணனும் என்று மாதவன் நாயர் போட்டு கொடுத்து விட்டார். அப்படியானால் அந்த ஆன்றிக்ஸ்-தேவா ஒப்பந்தம் என்பது ஒரு கூட்டு சதிதானோ என்று நாம் புரிந்து கொள்ள உதவிகரமாக உள்ளது. ஆன்றிக்ஸ் என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் வணிக பிரிவின் பெயர். அந்த வணிக பிரிவு, ஒரு தனியாரான பெங்களூருவில் உள்ள தேவாஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யும்போதுதான் இந்த நட்டங்களும், சிக்கல்களும் அம்பலமாகி உள்ளன.


இப்போது மாதவன் நாயர் என்பவரை ராதாகிருஷ்ணன் என்ற இன்னொரு நாயர் போட்டு கொடுத்து விட்டார் என்பதே செய்தி. அப்படியானால் இந்த நாயர்களும், மேனன்களும், எல்லோரையும் அடிமப்படுத்துவார்கள் என்பதும், அவர்களுக்குள் சண்டை வந்தால் ஒழிய அவர்களை வீழ்த்த முடியாது என்பதும் இதிலிருந்து தெரிகிறது.எப்படியோ இந்திய துணைக் கண்டத்தை இவர்கள் டில்லியில் இருந்து கொண்டு ஆண்டு வரும் போக்கினால், முதலில் "தமிழன்" பலிகடா ஆனான். இப்போது அவர்களுக்குள்ளே குடுமி பிடி சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.இன்று தினமணியில் ஒரு தலையங்கம். அதில் மேற்கு வங்கத்தில் ஊழலில் பிடிபட்ட ராணுவ அதிகாரிகளின் சலுகைகள், சம்பளம் உட்பட அனைத்தும் பறிக்கப்பட்டன என்றும் ஆனால் இந்த நாயர்களுக்கு இனி அரசாங்க பதவி கிடையாது என்று கூறியதற்கே கொதிக்கிரார்களே என்றும் எழுதியுள்ளார்கள்.


இன்னமும் முக்கியத்துவம் வாய்ந்தது என்ன என்றால், இந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவன கணக்குகள் எங்கும் வெளிப்படையாக இருக்க கூடாது என்றும் அது இறையாண்மையின் ரகசியம் என்றும் சட்டம் இருக்கிறது. அந்த சட்டத்தை பபயன்படுத்தி கொண்டுதான் இந்த அதிகாரிகள் தங்கள் விருப்பத்திற்கு ரகசிய புதிய கண்டுபிடிப்புகளை தனியார் பெயருக்கு வாங்குவதும், அதையே அந்நிய நாட்டிற்கு பெரும் தொகைக்கு விற்பதற்கும் முடிந்துள்ளது. அதாவது "நாட்டு துரோகம்" என்ற குற்றப் பிரிவின் கீழ் இவர்கள் கைது செய்யப்படவேண்டும். இந்த விண்வெளி ஆராய்ச்சி நமது நாட்டிற்கு தேவையா? நாட்டில் ஐம்பது விழுக்காட்டிற்கு மேல் வறுமை இருக்கும்போது, பல ஆயிரம் கொடிகளை "விண்வெளி ஆராய்ச்சி" என்ற பெயரில் விரயம் செய்தால் நாடு வல்லரசு ஆகிவிடும் என்பது உண்மையா?


ஐரோப்பாவின் பல நாடுகள், உதாரணமாக டச்சு நாடுகள் எல்லாம் தங்களுக்கு விண்வெளி ஆராய்ச்சி தேவை இல்லை என்று ஒத்துக்கி விட்டார்கள். அவர்கள் தேவைப்பட்டால் பெரும் பணக்கார நாடுகளில் இருந்து வாங்கி கொள்கிறார்கள். அதுபோல தங்களுக்கு செயற்கை கொள் மூலம் தேவைப்படும் புள்ளி விவரங்களை இந்திய அரசும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து காசு கொடுத்து வாங்கி கொள்ளலாமே? எதற்காக அதற்கு தனி துறை என்றும் அதற்கு பல்லாயிரம் கோடி பணம் என்றும், அதை வெளியே தெரியாமல் செலவு செய்யவேண்டும் என்றும் சட்டம் போட்டு நாட்டின் இறையாண்மைக்கு இதுபோன்ற "அதிகார வர்க்க தரகு முதலாளிகளை" பதவியில் வைத்து அவர்கள் மூலமே நாட்டின் அரசு நட்டம் அடைவதும், அவர்கள் மூலமே நாட்டு ரகசியங்களை அன்னியருக்கு விற்கும் "துரோகத்தை" செய்வதும் நடைபெறுகிறது? ஆகவே பட்டினிகள் நிறைந்திருக்கும் நம் நாட்டிற்கு "விண்வெளி ஆராய்ச்சி" தேவையில்லை என்ற முழக்கத்தை நாம் முன்வைக்கலாம். வல்லரசாக ஆய்கொண்டிருக்கிறோம் என்ற மாயையை விடுத்து, நல்லரசாக் ஆக வழிபார்க்க சொல்லுவோம்.