Friday, September 2, 2011

தாயாய் இருந்து வளர்த்தவளை, தவிக்கவிட்டாயே?

மக்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் செல்வி. மகேஷ், உன்னை "தாயாக" இருந்து வளர்த்தாரே. செங்கொடி, நீ மக்கள் மன்றத்தின் " கூட்டு வாழ்க்கைக்கு" வந்த காலம் தொட்டு, மகேசுவின் உடல்நலத்தில் கவனம் எடுத்து, அவளை நேரத்திற்கு "மருந்து" சாப்பிட, "மாத்திரை" சாப்பிட அடம்பிடித்து "சம்மதிக்க" வைப்பாயாமே? இப்போது மகேஷ் அதை "சொல்லி, சொல்லி" அழுகிறாளே? மகேஷ் அன்று அந்த " 28 ஆம் நாள்" சென்னையிலிருந்து திரும்பியவுடன், மக்கள் மன்றத்தில் உன்னை தேடினாளே? உன்னையும் காணவில்லை, அந்த இரு சக்கர வாகனமான "எக்செலையும்" காணவில்லை என்றதும் "தவித்துப்போனாளே?"வ்வோருவரையும் ஒவ்வொரு பக்கம் அனுப்பி உன்னை தேடச்சொன்ன அந்த "தாயுள்ளம்" எப்படி "தவித்துப்போயிருக்கும்"? எண்ணிப்பார்த்தாயா? அதற்கெல்லாம் உனக்கு எங்கே செங்கொடி நேரம்? நீதான் "முழுமையாக" பேரறிவாளன், சாந்தன் முருகன், உயிர் காப்பில் உனது முழு கவனத்தையும் "திருப்பி" கொண்டாயே?

யாரோ வட்டாட்சிய அலுவலகத்தில் ஒரு சிறுமி "கொளுத்திக் கொண்டாராம்" என்று கூற, அங்கே ஓடினாளே அந்த மகேஷ்? அதாவது உனக்கு தெரியுமா, செங்கொடி? அங்கிருந்து காவலர்கள், மருத்துவமனைக்கு "எறிந்து கொண்டிருந்த" உடலை எடுத்துச் சென்றார்கள் என்று கேள்விப்பட்டு அங்கும் ஓடினார்களே? அதாவது உனக்கு தெரியுமா? செங்கொடி, நீதான் அதற்குள் "நிரந்தர நித்திரைக்கு" சென்று விட்டாயே? உனக்கு எப்படி இவையெல்லாம் தெரியும்? நான் சென்னையில் அப்போது மணி ஐந்தரை இருக்கலாம், கோயம்பேடு திருச்சி சவுந்தரராஜனின் "ஆடோ கேரேஜ்" வளாகத்தில், "கயலும், வடிவும், சுஜாதாவும்" மூன்று வழக்கறிஞர்களும், மூன்று தமிழர் உயிர் காக்க "பட்டினிப் போராட்டத்தில்" ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களது கூட்டத்தில் இருந்துவிட்டேனே?

அப்போதுதானே வழக்கறிஞர் "பாவேந்தன்" தொலைபேசி செய்தியை வைத்து, "காஞ்சியில் மக்கள் மன்றத்தின் செங்கொடி என்ற சிறுமி தீக்குளித்தார்" என்று அறிவித்தாரே? யாரோ, என்னிடம் "மக்கள் மன்றம் பற்றி அறிவிப்பு". கேட்டீர்களா?என்று கூறினார்களே? நான் நம்பவில்லை. ஏன் இப்படி "அறிவிக்கிறார்?" என்றுதான் எண்ணினேன். உடனே "மகேசிற்கு" தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். கிடைக்கவில்லை. "செங்கொடிக்கு என்ன நடந்தது?" என்று ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினேன். மகேஷ் "தொடர்பில்" வந்தாள். " மணிஅண்ணா, செங்கொடி தன்னை "கொளுத்திகிட்டா" என்று அலறினார். அந்த "அலறல்" உனக்கு கேட்டிருக்க "நியாயம்" இல்லை. நீதான் அண்ணன்மார்களான "பேரறிவாளன், சாந்தன், முருகன்" ஆகியோருக்கு "தயார்" செய்ஹ்டுகொண்டிருந்த "தூக்கு கயிறாய்" ஒரு கன்னி விடாமல் "அறுத்துக் கொண்டிருந்தாயே"? அதுகூட எங்களுக்கு "இப்போதுதானே" தெரியும். உனக்கு "அப்போது" மகேசின் "அழுகுரல்" எப்படி கேட்கும்?

அதிர்ந்து போன " நான்" அந்த கோயம்பேடு வளாக கூட்டத்தினர் மத்தியிலேயே, "வெடித்து, சிதறி" அழுதுவிட்டேன். நான் அழுவதை இதுவரை காணாதவர்கள், அப்போது "திகைத்து" என்னை காண்பது எனக்கு "புரிந்தது" அதுவே எனது "அழுகையை" நிறுத்த போதவில்லை. செங்கொடி, நீ ஒவ்வொருமுறையும் நான் "மக்கள் மன்றம்" வரும்போதும், அருகே வந்து நின்று கொண்டு " தோழர்" என்று கூறி ஒரு "சிரிப்பு" சிரிப்பாயே? அதுமட்டுமே நினைவில் "வந்துகொண்டிருந்தது". அது மட்டுமல்ல. இருபத்தொரு ஆண்டுகளாக என்னுடன் சேர்ந்து "புரட்சிகர" கருத்துகளை உச்சரித்துவரும் செல்வி. மகேசின் "அழுகுரலையும்" என்னால் "தாங்கமுடியவில்லை"> அதுவும் சேர்ந்து என்னை "நிலை குலைய" வைத்துள்ளது.

"கற்றது தமிழ்" திரைப்பட இயக்குனர் "ராம்" அங்கே இருந்தார். அவரது வாகனம் "காஞ்சி செல்கிறது"> நீங்களும் அதில் செல்லுங்கள் எனு கவிதா கூறினார். ராம் கூறினார். ராமின் உதவியாளர் "சாம்ராட்" கூறினார். கவிதா அவரது கணவர் முரளியிடம் கூறி என்னை " ஆற்றுப்படுத்த" சொன்னார். உன்னை "தடுக்க முடியாமல்" போன மூத்தவர்கள் நாங்கள் எப்படி எங்களை "ஆற்றுபப்டுதிக்கொள்கிறோம்" பார்? மீனவர் சங்க "பொன்னுசாமியும், மகேசும் " உடன் இருந்தார்கள். "நடைப்பிணம்" போல காஞ்சி செல்லப்போகிறோம் என்பதை நான் உணர்ந்தேன். அப்போது "சன் டி.வி.யில்" நீ இறந்துவிட்டதாக "அறிவிப்பு" செய்தார்கள். அதுவே எங்களை "மேலும்" கலக்கமடையச் செய்தது. கடைசியாக சென்னையை விட்டு "நாடக கலிஞர் ஸ்ரீஜித்து உடனும், திரை இயக்குனர் தாமிராவின் வாகனத்தில்" நாங்கள் காஞ்சி கிளம்பினோம். ஆனாலும் நீ உன் "தாய்" மகேசை இப்படி "தவிக்க" விட்டிருக்கக் கூடாது.

எத்தனை நாள் திட்டமிட்டாய் செங்கொடி?

மூன்று தமிழர் உயிர்காக்க நாம் எல்லோருமே குரல் எழுப்பி வந்தோம். யார் அதற்காக குரல் கொடுத்தாலும் அங்கே போய் நாமும்கழந்து கொண்டோம். இதுதானே செங்கொடி, நமக்குள் இருந்துவந்த ஒற்றுமை? ஆகஸ்ட் 18 இல் சென்னையிலிருந்து புறப்பட்ட நூற்றுகனக்கான இரு சக்கர வாகனங்களை," மூன்று தமிழர் உயிர் காக்க" பேரணியாக "மரணதண்டனை எதிர்ப்பு மக்கள் இயக்கம்" ஒட்டி வந்தபோது,, காஞ்சியில் அதை வரவேற்க காத்திருந்த தோழர்கள், மூன்று மணி நேரம் முழக்கமிட்டதில், செங்கொடி உன்னுடைய முழக்கங்கள் "மேலோங்கி" இருந்தனவே? காஞ்சி வந்த இரு சக்கர வாகன பேரணியில், மற்ற தோழர்களுடன் செங்கொடி நீயும் கலந்து கொண்டு, வேலூர் நோக்கி செல்லும்போது, ஒரு வாகனத்தின் பின்புறம் அமர்ந்துகொண்டு, நீ "குறளை உயர்த்தி" முழக்கமிட்டாயாமே? எல்லா தோழர்களும் அந்த பேரணியில் உன்னுடைய முழக்கத்தை கவனித்திருக்கிரார்களே?
வேலூர் நகரில் "தொரப்படி சிறைக்கு" அருகே சென்ற போது, செங்கொடி உன்னுடைய முழக்கங்கள் ஒவ்வொரு தொழராலும் கவனிக்கப்பட்டுள்ளதே? நீ எந்த அளவு இந்த பிரச்சனையில், "மூன்று தமிழர் உயிர் காக்கும்" பிரச்சனையில், ஆழமாக ஈடுபாடு கொண்டிருந்தாய் என்பதற்கு இவையெல்லாம் எங்களுக்கு "கண்ணாடி" போல தெரிகிறது. அப்போதே நீ உன்னை பற்றி உன் உயிர் பற்றி "தீர்மானித்துவிட்டாயா?" நீ அப்போதே "திட்டமிட்டு விட்டாயா" செங்கொடி? அடுத்து "மக்கள் மன்றம்" அகஸ்ட் 23 ஆம் நாள் வேலூரில் ஏற்பாடு செய்திருந்த "ஆர்பாட்டத்திலும், ஊர்வலத்திலும்" கலந்து கொள்ள நான் சென்னையிலிருந்து அவசர, அவசரமாக வந்தேன். மற்ற மக்கள் மன்ற தோழர்களுடன் செங்கொடி நீயும் இணைந்துகொண்டு முழக்கமிட்டாய், ஆனால் உனது "முழக்கங்கள்" அன்று வானதிர கேட்டனவே? அப்போதும் உனக்குள் எழும்பியிருந்த கிளர்ச்சி "வித்தியாசமாக" இருக்கிறதே என்று நாங்கள் எண்ணிப்பார்க்கவில்லையே?
அகஸ்ட் 26 இல், "மூன்று தமிழர் உயிர் காக்கும் இயக்கம்" ஒவ்வொரு மாவட்டத்திலும் "மனிதச் சங்கிலி" என்று அறிவித்திருந்தது. அதை காஞ்சியில் வெற்றிகரமாக ஆக்க " மக்கள் மன்றமும்" ஏனைய அமைப்புகளும் இணைந்து தயார் செய்தன. அந்த மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில், வைகோ கலந்து கொண்டார். என்றைக்கும் இல்லாத அளாவுக்கு, செங்கொடி நீ வைகோ அருகில் போய் நின்று கொண்டு, "பெரும் சத்தத்துடன்" முழக்கங்களை எழுப்பினாயே? அப்போதுகூட நம் த்ழர்களுக்கு உன்னிடம் வந்திருக்கும் "ஆவேசம்" பற்றி எண்ணிப் பார்க்க முடியவில்லையே? அப்போதே நீ இந்த "திட்டத்தை" தீர்மானித்து விட்டாயா, செங்கொடி? இப்படி நீ தொடர்ந்து ஒரு வார காலமாக, "ஆவேசம்" அதிகம் வெளிப்படுத்தி, "பேரரவாலன், முருகன், சாந்தன்" ஆகியோரை காப்பாற்ற பெரும் அளவில் போராட்டங்களில் பங்கெடுத்து வந்தாயே? அவை எல்லாம் உன்னிடம் இப்படி "உன்னையே மாய்த்துக் கொள்ளும்" திட்டம் ஒன்று இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லையே?
செங்கொடி, நீ "எத்தனை நாள்" திட்டமிட்டாய்? என்று எண்ணிப் பார்க்க முடியாத "கையாலாகதவர்களாய்" நாங்கள் ஆகிவிட்டோம். எங்களை இப்படி "அழவைத்துவிட்டு" நீ மட்டும் "கொள்கை" தீப்பொறியை உடலில் தாங்கிச் சென்று விட்டாயே? நீ இளம் தழியாக மட்டுமில்லை. சிறிய தங்கையா மட்டும் இல்லை. நீ "உரிமை வேண்டும் தமிழர்களின்" ஒட்டுமொத்த தமிழர் தாயா?

செங்கொடி, நீ திட்டமிடுவதில் எங்களை மிஞ்சிவிட்டாய்.


நாங்கள் ஏதோ நாற்பதுஆண்டு அனுபவத்தில், போராட்டங்களுக்கு திட்டமிடுகிறோம் என்றும், அது அனேகமாக வெற்றிபெறுகின்றன என்றும் எண்ணி இறுமாந்து இருந்தோம். ஆனால் செங்கொடி, நீ திட்டமிட்டு நடந்துகொண்டதில் உன் திட்டத்தை நிறைவேற்றியதில் , அதில் நீ வெற்றிபெற்றதில், நாங்கள் மட்டுமல்ல, இந்த உலகமே வருத்தப்படுகிறது. ஒரு இளம் தோழர் புரட்சிகரமாக வளர்ந்த இளம் பெண் தோழி,,தானே தனித்து திட்டமிடுவதில்,திட்டமிட்டதில், சக தோழர்களையும் கலந்துகொள்ளாமல் திட்டமிட்டதில், அதையும் சகதோழர்களுக்கு தெரியாமலேயே நிறைவேற்றியதில், உனது இளம் வயதில் நீ வெற்றி பெற்றதில் நாங்கள் மகிழ்ச்சி அடையவில்லை. மாறாக ஆளாத்துயரத்தில் வீழ்ந்தோம். ஏன் தெரியுமா? நீ நாம் வைக்கும் கோரிக்கைகாக "உன் உயிரையே" தியாகம் செய்துவிட்டாய். இதை எப்படி செங்கொடி நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியும்? நீ இப்படி உயிரை விடுவதற்கா உனக்கு உன் அக்காமார்கள் மார்க்சையும், லெனினையும், மாவோவையும், பிரபாகரனையும், அறிமுகம் செய்தார்கள்?

இத்தனை நாளும் எந்த விசயமானாலும் உன் தாய் போல உடன் இருந்து உன் வளர்ச்சிக்கு உதவிய உன் அக்கா மகேசிடம் சொல்லாமல், கேட்காமல் நீ எதையாவது செய்தது உண்டா? இப்போது மட்டும் மகேசுக்கு தெரியாமல்,, ஜெசிக்கு தெரியாமல், மகாவிற்கு தெரியாமல், மேகலாவிடம் கூறாமல்,வின்சென்ட் அண்ணனிடம் தெரிவிக்காமல்,நீவீட்டைவிட்டு கிளம்பும்போது வீட்டில் இருந்த நீலாவிடம் சொல்லிக்கொள்ளாமல், எப்படி உன்னால் கிளம்ப முடிந்தது? சின்ன தம்பிகளாக அந்த "கூட்டு வாழ்க்கையில்" உன்னுடன் "மக்கள் மன்றத்தில்" வாழ்ந்துவரும் "கவுதமும், பகத்சிங்கும்" உனக்கு நினைவுக்கு வரவில்லையா? அந்த "குழந்தை கலைஞர்கள்" அடிப்ப்படும்போது ரசிப்பாய்? நீ ஆடிப்ப்படும்போது அந்த குழந்தை செல்வங்கள் ரசிப்பார்களே? எல்லாம் எப்படி மறந்து, இப்படி ஒரு முடிவை எடுத்தாய்? எதிர்களை வீழ்த்தத் தானே நாங்கள் "கதைகள்" சொல்வோம். எப்போதாவது நாமே நம்மையே வீழ்த்திக் கொள்வதை ஏற்றுக் கொண்டுள்ளோமா? உனக்கு மட்டும் அந்த விபரீத எண்ணம்எப்படிவந்தது? நக்சல்பாரி இயக்கம் பல வர்க்க எதிரிகளை அழித்தொழ்த்தது பற்றி வேண்டுமானால் நான் பேசியிருப்பேன். என்றுமே "தன் உயிர் தியாகம்" செய்வதை ஆதரித்து பேசியது இல்லையே? முத்துகுமார் மறைவு உனக்குள் இப்படி விபரீத முடிவை ஊக்குவித்ததா?


உன் முடிவை நீ தேடிக்கொள்வதற்கு முந்திய நாள்,முத்துகுமார் பற்றி அவரது மறைவால் ஏற்பட்ட எழுச்சி பற்றி ஏன் வினவி இருக்கிறாய்?. அது உனக்குள் ஒரு நெருப்பாய் எழுந்து கடைசியில் உன்னை அழித்துவிட்டதா? செங்கொடி, நீ பெரும்பாலான மக்கள் மன்றத்தின் தோழர்கள் சென்னை சென்றுள்ள சூழலில்,இரு சக்கரவாகனத்தை தனியே எடுத்துக் கொண்டு, காஞ்சி நகருக்கு ஏன் கிளம்பியிருகிறாய்?என்றுமே சொல்லாமல் வெளியே செல்லாத நீ அன்று மட்டும் ஏன் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமலே, வெளியே கிளம்பினாய்? கையில் இருக்கும் இரு சக்கர வாகனத்தை காட்டி பெட்ரோல்பங்கில் பாட்டில் நிறைய பெட்ரோல் வாங்கி ஏன் ஊற்றிக் கொண்டுள்ளாய்? வட்டாட்சியர் அலுவலகத்தில் வழக்கமாக மக்கள் மன்றம் போராட்டங்களை நடத்தி வந்ததால், நீ திட்டமிட்ட போராட்டத்திற்கும் வட்டாட்சியர் அலுவலக வளாகமே உன்னால் தேர்வு செய்யப்பட்டதா? வழமையாக மக்கள் மன்றத்தினர் ஒவ்வொரு ஆர்ப்பாட்டத்திற்கு வரும்போதும், மனுக்கள் கொடுக்க வரும்போதும், வழக்குகள் பலவற்றையும் நடத்த அங்கே இருக்கும் நீதிமன்றத்திற்கு வரும்போதும், தேநீர் குடிக்கும் கடைக்காரர் உனக்கும் பழக்கமானதால், அதை எப்படி தந்திரமாக பயன்படுத்திக்கொண்டாய்? அந்த "தேநீர் கடைக்காரிடம்" போக்குவரத்து நெரிசல் என்பதால், இரு சக்கர வாகனத்தை இங்கே நிறுத்தி செல்கிறேன் என்றும், நாளை அக்கா வரும்போது "சாவியை" கொடுத்து விடுங்கள் என்றும் சொல்லும் தந்திரத் திட்டம் உனக்கு எங்கிருந்து வந்தது? ஞாயிற்று கிழமை என்பதால், ஆள் நடமாட்டம் இல்லை எண்பதை பயன்படுத்திக் கொண்டு, மறைவில் உடலெங்கும் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு, திடீரென வெளியே தோன்றி " மூவரையும் தூக்கிலிடாதே" என்று உரக்க கூவிக் கொண்டே கீழே வீழ்ந்துள்ளாயே?

எப்படிப் பெண்ணே இத்தனை "திட்டங்களையும்" நீயே போட்டு நீயே நிறைவேற்றி எங்கள் எல்லோரையும் வென்று விட்டாய்? நாங்கள் உன்னிடம் "தோற்று விட்டோம்". .