Wednesday, March 30, 2011

புலிகள் மீதான தடையை நீக்கு--சென்னையில் கையெழுத்து இயக்கம்.

இன்று மாலை நான்கு மணியிலிருந்து எழு மணிவரை, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நெருக்கடியான பொக்குவரத்து பகுதியில் "புலிகள் மீதான தடையை நீக்கு" என்ற பெரிய எழுத்துக்கள் கொண்ட பதாகையுடன் கையெழுத்து இயக்கம் சிறப்பாக நடைபெற்றது. திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் முன்முயர்ச்சியில் நடத்தப்பட்ட இந்த இயக்கம் தடை பல கடந்து நடந்ததுதான் வரவேற்கத் தக்கது மூன்று மாதங்களுக்கு முன்பே இத்தகைய ஒரு கையெழுத்து இயக்கத்தை பகிரங்கமாக நடத்த இயக்குனர் புகழேந்தி கருணாநிதி அரசின் காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்தார். புலிகளின் அரசியல் பிரிவு தலைவராக இருந்து கொல்லப்பட்ட சு.பா.தமிழ்ச்செல்வனுக்கு இரங்கற்ப்பா எழுதிய தமிழக முதல்வரின் தலைமையிலான காவல்துறை அதற்கு அனுமதி மறுத்திருந்தது.


அந்த நிலையிலும் விடாப்பிடியாக புகழேந்தி அதே கையெழுத்து இயக்கத்தை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடத்தினார். அது சிறப்பாக பல தமிழர்களின் பங்களிப்போடு நடந்தேறியது. அதற்காக சென்னை பத்திர்கையாளர் மன்றத்திடம் கேள்வி கேட்டது கருணாநிதியின் காவல்துறை. அதன்பிறகு அனுமதி மறுக்கப்பட்ட சைதை பனகல் மாளிகையிலேயே நடத்த உயர்நீதிமன்றம் சென்று நீதி கேட்டார் புகழேந்தி. அந்த வழக்கு நீதிமன்றத்தின் வழமைப்படி தாமதமாக எடுக்கப்பட்டு, கடந்த பத்து நாட்கள் முன்பு தீர்ப்பாக வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பை வழங்கிய நீதியரசர் சந்துரு, தடை செய்யப்ப்பட்ட விடுதலைப் புலிகள் பற்றி பேசலாம் என்றும் ஆதரிக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் பொடா வழக்கில் தீர்ப்பு கூறியிருப்பதையும் சுட்டிக் காட்டி, இதுபோன்று விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க கோருவது ஜனநாயக மரபுகளுக்கு உட்பட்டதுதான் என்று ஒரு சிறப்பான தீர்ப்பை கூறி, அதற்க்கான காவல்துர அனுமதியை அதே இடமான சைதை பனகல் மாளிகை அருகே கொடுக்க வேண்டும் என்றும் மார்ச் 30 ஆம் நாள் மாலை நான்கு மணியிலிருந்து எழு மணி வரை வழங்குமாறும் கூறிவிட்டார்.

இந்த வரலாற்று தீர்ப்பை அமுல்படுத்தி இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், பெரியார் திராவிடக் கழக தொண்டர்களின் உதவியுடன், நாற்ப்பது அடிக்கு மூன்றடி என்ற அளவில் ஒரு பெரும் பதாகையை உருவாக்கி அதை நடைபாதையையே நிரப்பும் அளவுக்கு நிறுத்திவைத்து, அதில் துணியில் அனைவரும் கையெழுத்து போடும்படி ஏற்பாடு செய்து அதற்க்கான எழுத்தாணிகளையும் தயார்செய்து, அங்கே நின்று மிகச்சிறப்பாக செய்தார்கள். "விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு" என்ற அந்த முழக்கம் வருவோர், போவோர் அனைவரையும் கவரும் வண்ணம் கருப்பு எழுத்துக்களால் தடியாக பொறிக்கப்பட்டிருந்தது. அதில் நூற்றுக்கணக்கானோர் கையெழுத்திட்ட வண்ணம் இருந்தனர். எல்லோர் சட்டையிலும் அதே வாசகங்கள் பொறிக்கப்பட்ட அட்டைகள் குத்தப்பட்டிருந்தன.

பழ.நெடுமாறன், ஓவியர் வீர சந்தானம், பேராசிரியர் சரஸ்வதி, விடுதலை ராஜேந்திரன், திரை கவிஞர் தாமரை, தியாகு, நாம் தமிழர் இயக்கத்தின் சாகுல் ஹமீது, ஊடகவியலாளர்கள், மீனவர் சங்க மகேஷ், புரட்சிகர இளைஞர் கழகத்தினர், பெரியார் திராவிடர் கழகத்தினர், மதிமுகவினர், தமிழர் அமைப்புக்களைச்செர்ந்தோர், மே பதினேழு இயக்க திருமுருகன், தெ.சீ.சு.மணி, டேவிட் பெரியார், ஸ்டாலின் ராஜா, பாரதி தமிழன், ஏகலைவன்[ஊடகத்தார்] , பல பெண் தோழியர்கள் மற்றும் நூற்றுக்கணக்கில் இளைஞர்கள், ஆதவன், போன்ற பல தோழர்களின் கையெழுத்துக்கள் அங்கே பதிவு செய்யப்பட்டன. இடையில் வீரசந்தானம் முழக்கங்களை எழுப்பினார். அதில்"தடையை நீக்கு, தடையை நீக்கு. விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு" என்பதாக எழுந்த முழக்கங்கள் வானைப் பிளந்தன. இவ்வாறு தமிழ்கூறும் நல்லுலகில் தமிழ்நாட்டின் தலைநகரில் ஒரு ஜனநாயாக குறளை எழுப்புவதற்கு நீதிமன்றம் சென்று திரும்பினால்தான் சுதந்திரம் கிடைக்கும் என்ற நிலை உலகுக்கு அம்பலமானது..