Thursday, February 3, 2011

ராஜா சிக்கினாரா? தலைவர் சிக்கினாரா? கட்சியே சிக்கியதா?

ராஜா மீது குற்றச்சாட்டு எழுந்தவுடன் தி.மு.க. தலைவர் திணறினார். பிறகு ராஜாவை கழட்டிவிட எண்ணினார். அதற்கு குடும்பத்திற்குள் ஆதரவு அதிகம் இருந்தது. தயாநிதி தூண்டிவிட, செல்வி, ஸ்டாலின், அழகிரி என்று அணி திரண்டனர். தி.மு.க.வின் நால்வர் அணி என்று அது பெயர் பெற்றது. குடும்பத்தலைவன் யோசித்தார். அதற்குள் ராஜா வீடு சோதனை என்று சீ.பி.ஐ. பாய்ந்தது. ராஜா உண்மையை சொல்லத்தொடங்கினால், குடும்பத்தில் எல்லோரும் சிக்க வேண்டும். சிக்கலை உருவாக்கியது 2007 ஆம் ஆண்டிலேயே கே.டி.பிறதேர்ஸ் என்பது குடும்பத்தலைவரின் கணிப்பு. ராஜாவை காப்பாற்ற படைகளை இறக்கிவிட்டார். அதுவே முதலில் தமிழ் ஊடகங்கள் பேரவை என்ற பெயரில் போடப்பட்ட கூட்டம். அதில் கட்சி சார்பற்ற கட்சி விசுவாச அறிவுஜீவிகள் பேசினர்.தி.மு.க.வில் இரண்டு வகை உறுப்பினர் அட்டை இருப்பது தெரிந்தது. ஒன்று திராவிட முன்னேற்ற கழக கட்சியின் உறுப்பினர் அட்டை. அதில் அண்ணா முதல் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் போன்றோர் கையெழுத்து போட்டிருப்பார்கள். இன்னொன்று கையெழுத்து போடாத உறுப்பினர் அட்டை. அது திருக்குவளையூர் முத்துவேலர் கருணாநிதி குடும்ப அட்டை. நீங்கள் நேரடியாக அந்த குடும்பத்தின் உறுப்பினர் என்றால் அப்படி அட்டை தேவை இல்லை. இல்லாவிட்டால் உங்களுக்கு கொடுக்கப்படும்.
அப்படி குடும்ப அட்டையை பெற்றவர்கள் பல துறைகளிலும் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் மட்டுமே ராஜா சார்பாக பேச வெளியே வந்தார்கள். அதன் பிறகு குடும்ப தலைவரே கட்சி தலைவர் என்பதால் கட்சியின் முடிவு என்ற பெயரில் ராஜாவை பாதுகாக்க தொடங்கினார் தலைவர்.இது மாறன் சகோதரர்களுக்கு பிடிக்கவில்லை. அவர்கள் தங்களது அணியை சேர்ந்த மற்ற மூவரையும் எச்சரித்தனர். அவர்களது அணியின் முக்கிய குதிரையாக இருந்த ஸ்டாலின் திடீரென பல்டி அடித்தார். தயா கேலி செய்தார். அப்பா வழி சென்றால்தான் தனயனுக்கு சிம்மாசனம் என்பது இளையவரின் கருத்து. ராஜாவை ஸ்டாலின் தற்காத்து அறிக்கைகளை வெளியிட்டார். அழகிரி முதலில் மசியவில்லை. முரண்டு பிடித்தார். தந்தை கவலைப்படைல்லை. ராஜாவிடம் வான்க்காமல் ஸ்டாலினும், அழகிரியும் இல்லை என்பது துணை கதை. தயாதான் பிரச்சனை என்று தலைவர் எண்ணினார். காங்கிரஸ் கட்சி தலைமையை தயா நெருங்கி சென்று திட்டமுடிகிறார் என்று தலைவர் சந்தேகப்பட்டார். கணிராஸ்-தி.மு.க. தேர்தல் உடன்பாட்டை தயா முறிக்க பார்க்கிறார் என்ற அளவு சந்தேகம். அதேபோல தயாவின் காட்சி ஊடகமும், அச்சு ஊடகமும் குடும்பத்தலைவரின் ஆட்சிக்கு எதிரான கருத்துகளுக்கு அதிக விளம்பரம் செய்துவந்தன. இப்போதும் செய்து வருகின்றன.ராஜாவை விட்டால் எல்லோரையும் அம்பலப்படுத்துவார் என்ற பயம் தலைமைக்கு உண்டு. இத்தனை கோடி ரூபாயை ஒரே மனிதர் கொள்ளை அடிக்கமுடியுமா என்று கான்கிஈஸ் தலைமையையும் வலைக்குள் சிக்க வைக்க முயற்ச்சித்தார். அதற்குள் டில்லிக்காரர்களுக்கு உச்சநீதிமன்ற வழக்கு சிக்கலை அதிகப்படுத்தியது.
உச்சநீதிமன்றத்தில் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கை காப்பாற்ற வேண்டும்.கபில்சிபல் அதற்காக பொய்களை கண்டபடி பேசத்தொடங்கினார். சீ.பி.ஐ. வசமாக சிக்கிக்கொண்டது. பெயர் அசிங்கப்படாமல் இருக்க சில சோதனைகளையும், இப்போது கைதுகளையும் செய்து வருகிறது.மீண்டும் தி.மு.க. பொதுக்குழுவை கூட்டி ராஜாவை பாதுகாத்து விட்டது. இதை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சிக்கு சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளும், அமைச்சரவை பங்கும் கேட்கலாம் என்பது அதன் யுத்தி. வருகிற பத்தாம் நாளில் சீ.பி.ஐ. முன்வைக்கும் அறிககையை உச்சநீதிமன்றம் எப்படி பார்க்கப்போகிறது என்று பொறுத்திருந்து தேர்தல் கூட்டு பற்றி முடிவு செய்யலாம் என்று காங்கிரஸ் எண்ணுகிறது. எப்படியோ மாட்டிக்கொண்டது ஆளும் மன்னர் குடும்பம்.ஆமாம். சோனியா மிரட்டினாங்கன்னு ஒரு செய்தி நடமாடுதே. நூறு தொகுதி கேட்டு, என்பதாவது வாங்கனும்னு காங்கிரஸ் உறுதியா இருக்காங்களாமே. எல்லாம் உண்மையா? பா.ம.க. பற்றி சோனியா சந்தர்ப்பவாதின்னு கருனாநிதிட்ட சொன்னதா தி.மு.க. பொதுக்குழுவிலேயே தலைவர் சொல்லியிருக்காரே, அதுக்கு என்ன அர்த்தம்?