Wednesday, January 19, 2011

நீதிதேவதை தேர்விலேயே முறைகேடா?

மாவட்ட நீதியரசர் தேர்வு என்பது ஒரு முக்கியமான கட்டமாக நீதித்துறையிலே இருந்துவருகிறது. சமீபத்தில் நடந்த அத்தகைய தேர்வில் செய்யப்ப்பட்ட குளறுபடிகள் இப்போது அம்பலத்திற்கு வந்துள்ளன. வழக்கமாக மாவட்ட நீதியரசர்களுக்கான தேர்வு என்ற எழுத்து தேர்வு ஒன்று நடக்கும். அதில் பல வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுவார்கள். ஏழு ஆண்டுகள் வழக்கறிஞராக தொழில் நடத்தியவர்கள் மட்டுமே இத்தகைய தேர்வில் எழுத முடியும். அப்படி இந்த முறையும் 2010 ஆண்டு அக்டோபர் மாதம் எழுத்து தேர்வு நடந்தது. அந்த தேர்வுக்கு கூட கேள்வித்தாள்கள் நான்கு வகைகளில் கொடுக்கப்பட்டதாகவும், அதில் மூன்று வகைகளிலிருந்து கேள்விகள் வந்துவிடும் என்றும் வதந்தி பரவியது. சிலர் அந்த கேள்வித்தாள் கசிந்ததாலேயே அதிக மதிப்பெண்கள் பெற்றார்கள் என்று சொள்ளப்படுவதைஎல்லாம் நாம் வதந்திகள் என்பதாக என்னலாம். ஆனால் அதற்கு பிறகு நடந்த கதைகள் ஏற்கத்தக்கதாய் இல்லை.
மாவட்ட நீதியரசர் தேர்வு என்பதை, தமிழ்நாடு பொது தேர்வு ஆணையம் மூலமாகத்தான் எடுக்கவேண்டும் என்று கூறினார்கள். நாம் உடனடியாக அவர்களிடம் சென்று விசாரித்தோம். அதற்கு மொத்தத்தில் தேவையான மாவட்ட நீதியரசர்கள் அதிகம் என்றும்., அதில் பத்து விழுக்காடு எண்ணிக்கையைத்தான் உயர்நீதிமன்றம் மூலம் எடுக்கிறார்கள் என்றும், மீதியை தேர்வாணையம் தான் தேர்வு செய்யும் என்றும் விளக்கம் அளித்தார்கள். இப்போது பதினேழு நீதியரசர்களை தேர்வு செய்ததில்தான் சிக்கல் எழுந்துள்ளது. அது மொத்தத்தில் பத்து விழுக்காடுதான் என்பது ஒரு செய்தி. அந்த பத்து விழுக்காடு தேவையை உயர்நீதிமன்றம் செய்கிறது என்பதுதான் அதில் உள்ள விவரம். அப்படி உயர்நீதிமன்றம் செய்யும்போதெல்லாம் தான் தேர்ந்தெடுத்த நபர்கள் பற்றிய விவரங்களை உயர்நீதிமன்ற இணைய தளத்தில் வெளியிடுவார்கள். அப்படி இந்த முறை வெளியிட்டார்களா? என்பதே கேள்வியாக நிற்கிறது.
எழுத்து தேர்வில் இந்தமுறை எழுதியவர்கள் எண்ணிக்கை 2524 பேர். அதில் 800 பேர் சுழி மதிப்பெண் எடுத்திருந்தார்கள். தேர்வு நடந்த அக்டோபர் மாதமே அதில் 103 பேர்தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களது மதிப்பெண்களும் வெளியாகி விட்டது. அதன்பிறகு அந்த தேர்வான நபர்களுக்கு, வாய் மொழி தேர்வு நடந்தது. அது சென்ற ஆண்டின் நவம்பர் பதினொன்றாம் நாள் தொடங்கி பதின்மூன்றாம் நாள் வரை நடந்தது. வழக்கப்படி பதின்மூன்றாம் நாள் இரவில் அந்த வாய் மொழி தேர்வின் முடிவுகளை அதாவது எந்த பதினேழு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதை இணையதளத்தில் உயர்நீதிமன்றம் போடவேண்டும். அதுதான் வழமை. அந்த வழக்கமான செயல் இங்கே செய்யப்படவில்லை.
ஆனால் அதேநேரம் திடீரென தமிழ்நாடு அரசின் ஆணையாக யார், யார் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்று ஜி.ஒ. போட்டு, இந்த ஆண்டின் பதினோராவது ஆணையாக அது பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் நடத்திய ஒரு தேர்வில் அதுவே தனது இனைய தளத்தில் வெளியிடாத ஒரு தேர்வு முடிவை எப்படி அரசாங்கத்தின் ஆணையாக வெளியிட முடியும்? அதுவும் அந்த அரசாணைக்கு தலைநிலைய செயலாளர் மாலதி கையெழுத்து போட்டிருக்கிறார்கள். அதாவது முதலமைச்சரின் ஒப்புதலுடன் மட்டுமே இப்படி ஆணையை வெளியிட முடியும். இந்த இடத்தில் உயர்நீதிமன்றம் தனது இணைய தளத்தில் போடாத ஒரு தேர்வு முடிவை எப்படி முதல்வர் தங்களது அரசாணையில் வெளியிடவைத்தார் என்பதிலும், பெரும் சந்தேகங்கள் கிளப்பட்டுள்ளன. உயர்நீதிமன்ற ஏன் வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை? ஒவ்வொரு நீதியரசர் பொறுப்புக்கும் எண்பத்தைந்து லட்சம் என்று பேசப்படும் செய்தியை நாம் நம்பாமல் இருக்கலாம். ஆனால் அதை மக்கள் நம்புவார்களா? இப்போது சக்திவேல், காந்தகுமார், நந்தகுமார், பாண்டியராஜன், நசீம பானு, அன்புராஜ், சுதாதேவி, பூர்ணிமா, தனபால், குமரப்பன், ஜோதிராமன், சுமதி, முருகன், சுரேஷ் விஸ்வநாத், ரஹ்மான், ராஜசேகர், இளவழகன் ஆகிய பதினேழு பேர்களை தமிழக அரசின் ஆணைய உத்தராவின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்று அறிவுத்துள்ளார்கள் இது எப்படி வெளிப்படைத்தன்மை. கொண்டது என்பதே நமது கேள்வி