Monday, October 11, 2010

போர்--தற்கொலை பற்றிய..புதிய சதியில் தமிழர்களை ஏமாற்ற வரும் உளவியலாளர்கள்

.
ஏடுகளில் வந்துள்ள செய்திகள் அதிர்ச்சி தந்தன. போர் காலங்களில் உள்ளதைவிட போர் இல்லாத காலங்களில் இலங்கையில் அதிகமான தற்கொலைகள் நடந்துள்ளன என்ற மதிப்பீட்டை, இலங்கை நாட்டின் உளவியல் நிபுணர் தயா சோமசுந்தரம் கூறியதாக அந்த ஆங்கில ஏடு செய்தி வெளியிட்டிருந்தது இது சாதாரண மக்களை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கலாம். ஆனால் உளவியல் நிபுணர்களை அல்ல. எமிலே துர்கீம் என்ற பிரான்ஸ் நாட்டு உளவியல் நிபுணர், போர் காலத்தில் அடையாளம் காணப்பட்ட எதிரியை எதிர்த்து அனைவரும் உளப்பூர்வமாக திரண்டு நிற்பார்கள் . அதனால் அன்றாட வாழக்கையில் மக்களுக்குள் பெரும் பிரச்சனை எழுவதில்லை என்று கூறியுள்ளார்.

அதையே இந்த சோமசுந்தரம் சற்று மாற்றி, தற்கொலை மனோபாவம், ஈழப்போர் நேரத்தில் வேறு ஒரு உணர்வாக மாற்றப்பட்டுவிட்டது என்று கூற முற்படுகிறார். உண்மை என்ன என்றால் உளவியல் ரீதியான பார்வையை பார்க்க முனையும் இது போன்ற உளவியல் நிபுணர்கள், தளத்தில் நடக்கும் போர் பற்றியோ அதை சம்பந்தப்படுத்தி மக்கள் மத்தியில் உருவாகும் உணர்வுகள் பற்றியோ என்ன புரிதலில் இருக்கிறார்கள் என்பதையும் சேர்த்தே இந்த நிபுணர்களின் அபிப்பிராயங்களை காண வேண்டி உள்ளது. ஈழம் என்பது அடைய வேண்டிய ஒரு இலக்கு என்பதை அங்கு வாழும் மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள் எனபது அவர்களது வேலை திட்டங்களில் இருந்தே அறியமுடியும்.

அதை விளக்க வருகிறேன் என்று சோமசுந்தரம் கூறும்போது, போர் தனக்கு வெளியே உள்ள எதிரியை அடையாளம் காண வைத்து அதன்மூலம் அந்த எதிரிக்கு எதிரான போரில் தன்னை மாய்த்துக்கொள்ள செய்கிறது. என்கிறார். போர் இல்லாத சூழலில் தனக்குள்ளேயே உள்ள முரண்பாடுகளை சந்திக்க வலு இன்றி தற்கொலை செய்து கொவதாக கூறுகிறார். உள்ளபடியே இது போன்ற அறிஞர்கள் தற்கொலைகளை தனி, தனியாக எடுத்து பார்ப்பதனால், அவர்களுக்கு சமூக சூழலை ஒட்டி அவற்றை படிக்க தெரிய வில்லை என்றுதான் கூறவேண்டும். பொது எதிரியை எதிர்த்து போரிட வாய்ப்பு இல்லாமல் போகும்போது, தனக்குள் உள்ள எதிரியை ஒருவர் தேடிக்கொள்வதாக இவர்கள் கூறுகிறார்கள். அதை சமாதான காலங்களில் என்று வர்ணிக்கிறார்கள். அதாவது இப்போது இலங்கை தீவில் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சமாதான நிலைமை நிலவுவதாக கற்பனை செய்துகொண்டு, இந்த நிபுணர் கூறியுள்ளார். அதாவது அரசாங்கத்தின் அறிவிப்புகளை மட்டுமே குளிர்சாதன அறைக்குள் இருந்து கொண்டு, காணும் இந்த நிபுணர்களுக்கு உண்மை நிலைமை நாட்டில் என்ன இருக்கிறது என்பதோ, மக்கள் மத்தியில் எப்படிப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றன என்பதை பற்றியோ தெரியவில்லை என்பதே இதிலிருந்து தெரிகிறது.

ஊசலாட்ட வயதில் உள்ளவர்களுக்கு, தீவிர விரக்தியாலோ, உள்நாட்டு மோதல்களின் விளைவாகவோ, ஒருவிதமான நிலையற்ற மனோ நிலை ஏற்படுகிறது எகிறார் இந்த சோமசுந்தரம். அப்படி நேரங்களில் அத்தகைய இளைஞர்கள் போரில் போராளிகளுடன் சேர்ந்துகொண்டு, மரியாதைக்குரிய மரணங்களை எட்டிவிடுகின்றனர். அதற்காக அவர்களது பெயர்கள், " வீர சாவு" என்று பெயரிடப்பட்டு அவர்களுடைய படங்கள் சுவரொட்டிகளாக ஒட்டப்பட்டு அதன் மூலம் அவர்களது மரணங்கள் மரியாதைக்கு உரியதாக ஆக்கப்படுகின்றன. என்றும் இந்த நிபுணர் கருத்து சொல்லியிருக்கிறார். யாழ்ப்பாணத்தில் ஆனந்தராஜா என்ற ஒரு ஆறுதல் மையம் வைத்திருப்பவர் கூறிய கருத்துக்களை இந்த நிபுணர் தனது வாதத்திற்கு துணையாக எடுத்துக்கொள்கிறார். ஆனந்தராஜா கூற்றில் சில இளைஞர்கள் போர் நேரத்தில் தங்கள் பெற்றோரிடம், ஒன்று தற்கொலை செய்துகொள்வேன் அல்லது போராளிகளுடன் போய் சேர்ந்து விடுவேன் என்று கூறியுள்ளனர் என்ற வாதத்தை தனக்கு சாதகமாக எடுத்து கொள்கிறார்.

1980 இன் காலங்களில் சமாதான நேரத்தில் யாழ்ப்பாணத்தில்தான் அதிகமான தற்கொலைகள் நடந்துள்ளன என்று ஒரு கணக்கையும் இவர்கள் தங்கள் வாதத்தை நிரூபிக்க பயன்படுத்துகிறார்கள். உள்ளபடியே இவர்கள் எடுத்துள்ள கணக்கு என்ற எண்ணிக்கை உண்மைதான். ஆனால் அவை ஏன் என்ற காரணத்தை அறிவதற்கான அறிவு இவர்களுக்கு, அதாவது இந்த நிபுணர்கள் என்ற பெயரில் நடமாடும் புத்தி ஜீவிகளுக்கு இல்லாமல் போய்விட்டது. அதேசமயம் போர் நடக்கும் நேரத்தில், தற்கொலை செய்யும் ஆண்களின் எண்ணிக்கை 800 விழுக்காடும், தற்கொலை செய்துகொள்ளும் பெண்களின் எண்ணிக்கை 180 விழுக்காடும் குறைந்துள்ளன என்பது இவர்கள் எடுத்துள்ள கணக்கு. அந்த கணக்கில் நமக்கு பிரச்சனை இல்லை. அது உண்மையாக இருக்கலாம். ஆனால் அதற்க்கான காரணமாக அவர்கள் கூறும் கண்டுபிடிப்பில்தான் பிரச்சனை உள்ளது. பதினைந்து வயதிலிருந்து இருபத்துநான்கு வயது வரை உள்ள ஆண்களின் கணக்கில்தான் தாங்கள் கூறுவதாக இவர்களே அறிவித்துள்ளனர். இந்த வயதில் உள்ள ஆண்கள்தான் போர் இல்லாத காலங்களில் அதிகமான தற்கொலைகளில் மரணமடைந்தவர்கள் என்றும் இவர்களே கூறுகிறார்கள்.

உள்ளபடியே இலங்கை தீவில் ஒரு இன அடக்குமுறை இருப்பதோ, சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்களாக தமிழர்கள் இருப்பதோ, அவர்கள் மீது சிங்கள பெரும்பான்மை அடக்குமுறை செலுத்துவதோ, இவர்களது உளவியல் ஆய்வுக்கு உட்படவே இல்லை. இன ஒடுக்கல் என்பது எந்த அளவுக்கு ஒரு தேசிய இனத்தின் இருத்தலுக்கே இடையூறாக அமையும் என்பதும் இவர்களுக்கு கணக்கில் வரவில்லை. வன்னியில் போர் நடக்கும் நேரத்தில், அன்றாடம் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் செத்துக்கொண்டிருக்கும் செய்திகள் வந்து அடையும் போது, இந்தியாவில் உள்ள தமிழகத்தில் நமக்கெல்லாம் எப்படி இருந்தது என்பதே இது போன்ற அறிவுஜீவிகளுக்கு தெரியாத செய்தியாக இருக்கிறது. இங்கே ஒவ்வொருவரும் கையறு நிலையில் இருந்தோம் என்ற சூழல் இவர்களது அறிவுக்கு எட்டவில்லை போலும். இங்கே இருக்கும் முதல்வர் கூட நாம் கையறு நிலையில் உள்ளோம் என்று கூறியது இவர்களுக்கு தெரியாது போலும். அந்த அளவுக்கு ஒரு தேசிய இன ஒடுக்கல் மக்களது மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கூட தெரியாதவன் எப்படி உளவியல் நிபுணராக இருக்க முடியும்?

உரிமை என்பது மனிதனுக்கு அடிப்படையானது என்று தெரியாத ஒரு உளவியல் இருக்க முடியுமா? இலங்கை வரலாற்றில் நடக்கும் இன ஒடுக்கல் உளவியல்ரீதியாக எப்படி சிறுபான்மை மக்களை பாதிக்கும் என்பது தெரியாதவன் உளவியல் நிபுணனாக இருக்க முடியுமா? முறையாக போராளிகள் போரை நடத்துவதற்கு முன்பு, அனைத்து அறவழி முறைகளும் தோற்றுவிட்ட நிலையில், இளைஞர்கள் விரக்தியடைந்தால் யார் பொறுப்பு? கைகளில் போராட ஆயுதம் வந்த பிறகு எந்த முட்டாள் தற்கொலை செய்து கொள்வான் என்பதையும் என்பதும் புரியாதவன் உளவியலாளரா?

இப்போது போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொலை செய்து விட்டு, போரில் வெல்லவும் முடியாத ஒரு சூழலில், சமாதானம் என்ற பெயரில் சிங்கள பெரும்பான்மை யாழ்ப்பானத்திர்க்குள் குடியமர்த்தப்படுவார்கள், அதை தட்டி கேட்க முடியாத நிலையில் இளைஞர்கள் என்ன செய்வார்கள்? தற்கொலைதானே செய்துகொள்வார்கள்? இதுகூட தெரியாதவன் உளவியலாளரா? இப்படி ஒரு ஆய்வை நடத்தி அதை பிரபல படுத்த மக்கள் மத்தியில் ஏடுகள் மூலம் கொடுப்பவனது நோக்கம் என்ன? இன உணர்வு என்பதோ, உரிமை என்பதோ சாத்தியப்படாத ஒன்றுதான் என்று உறுதிபடுத்துவதுதானே?

இப்போது இலங்கை தீவை ஆளும் கொள்ளை கூட்டத்திற்கும், அதில் பங்கு போட துடிக்கும் வட்டார, மற்றும் வெளிநாட்டு ஏகாதிபத்திய சக்திகளுக்கும், மீண்டும் ஒரு தேசிய இன உணர்வு துளிர்விடக்கூடாது என்பதுதானே நோக்கம்? அதற்கு ஏற்றார்போல பல திட்டங்களை அமுல்படுத்தும் அவர்கள், இந்த உளவியலாளர் என்ற பெயரில் சில குழப்பங்களை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி அதன்மூலம் நம்பிக்கை இழப்பை ஏற்படுத்துவது எனபதை தவிர வேறு என்ன சிந்திப்பார்கள்? ஆகவே இவர்கள் மனோதத்துவ நிபுணர்களோ, உளவியல் அறிஞர்களோ அல்ல, மாறாக இவர்கள் உளவு சொல்லும் ஒற்றர்கள் என்பது தெளிவு. உளவியல்போர் ஒன்றை நடத்துவதே இப்போது தமிழின எதிரிகளின் முக்கிய தொழில் எனபதை நாம் உணர வேண்டியுள்ளது.

நக்சல்பாரி தலைவர் சாரு மஜும்தார் கைதாகும்போது கூறிய வார்த்தைகள்....

1972 ஆம் ஆண்டு ஜூலை--12 ஆம் நாள் கொல்கத்தாவில் ஒரு வீட்டில் தங்கி இருக்கும்போது, அதிகாலையில் காவல்துறையினர், சாருவை கைது செய்ய உள்ளே நுழைந்து விட்டனர். அப்போது சாரு மஜும்தார் என்றால், நக்சல்பாரி புரட்சிக்கு வித்திட்டவர் என்று காவல்துறை நடுங்கி கொண்டிருந்த காலம். நக்சல்பாரி புரட்சியின் தந்தை என்று சாரு அழைக்கப்பட்ட காலம். மேற்கு வங்கத்தில் தொடங்கி, ஆந்திரா, பீகார், மத்திய பிரதேசம், ஒரிசா, என சாருவின் நடமாட்டம் பற்றி காவல்துறை அலைந்து திரிந்து கொண்டிருந்த நேரம். சாருவுக்கு வயது அப்போது அறுபத்தி இரண்டு. அவர் அனுப்பி இருந்த " தொடர்பாளர்" [கொரியர்] முந்திய இரவில் திரும்பி வரவில்லை. அதனால் சாருவுக்கு சந்தேகம் ஒரு ஓரத்தில் இருந்திருக்கிறது. ஏற்கனவே தோழர்கள் சரோஜ் தத்தா, போன்ற முக்கிய தலைவர்களை வங்காளத்திலும், வேம்பட்டம்பு சத்யநாராயணா, ஆதிபத்திய கைலாசா, எம்.எல்.நாராயணா, பஞ்சத்ரி கிருஷ்ணமூர்த்தி, நிர்மலா கிருஷ்ணமூர்த்தி ஆகிய தலைமை தோழர்களை, ஆந்திராவில் எதிரிகளின் தோட்டாக்களுக்கு பலி கொடுத்த நேரம். அதனால் எந்த நேரமும் எதரியின் தாக்குதல் வரலாம் என்ற எதிர்பார்ப்பு அந்த தலைவரிடம் இருந்தது.

அதுவும் கொல்கத்தா நகருக்குள், ரகசியமான தாங்கும் இடங்களை தேர்வு செய்வதும் , அவற்றில் தங்கி இருப்பதும், அவ்வப்போது தங்கும் இடங்களை மாற்றிக்கொள்வதும், புரட்சியாளர்களுக்கு கை வந்தகலை. அதேசமயம் சாரு போன்ற தலைவர்களை இட மாற்றம் செய்யும்போது அதிக கவனத்துடன் பயணத்தை திட்டமிட வேண்டும். அன்றைய அதிகாலைக்கு முன்பே, இரவு வெகுநேரம் கழித்து, சாருவால் வெளியே அனுப்பப்பட்ட அந்த கொரியர் தோழர், திரும்பவில்லை என்ற செய்தியை செரிப்பதற்க்குள், காவல்துறையினர் உள்ளே நுழைந்துவிட்டனர். அதனால் ஒவ்வொரு நிமிடமும் அந்த புரட்சியாளறது மனதில் ஓடிய சந்தேகம் அப்போது உறுதியானது.

எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற மன நிலை அந்த தலைமை தோழருக்கு இருந்திருக்க வேண்டும். ஆகவே அவர் காவலர்கள் உள்ளே வந்தவுடன், " நான் எதிர்பார்த்தேன் " என்று கூறி இருக்கிறார். அதற்கு பொருளே தனிதான். எந்த நேரத்திலும் நகர்புறத்தில், அதாவது எதிரியின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் பெரு நகரில், எதிரியின் சுற்றி வளைத்தல் நடக்கலாம் என்பதுதான் புரட்சியாளர்களின் எதிர்பார்ப்பு. குறிப்பிட்ட நேரத்தில் அப்படி நடந்து விடவே அதுவே அவரது எதிரொலியாக இருந்திருக்கிறது.
அன்று கைது செய்த சாருவை, சிறையில் பன்னிரெண்டே நாட்கள் உயிருடன் வைத்திருந்த மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சி, அவர் ஜூலை-28 அன்று மரணமடைய காரணமாக இருந்தார்கள். கடும் இருதய நோயில் இருந்த அந்த தலைவனுக்கு தேவையான மருந்துகளை அளிக்காமல், அவரது மறைவுக்கு மறைமுகமாக காரணமாக இருந்துவிட்டார்கள். அதனால்தான் இன்று வரை அந்த மறைவு நாளை, "தியாகிகள் தினம்" என்று குறிப்பிடுகிறார்கள்.