Sunday, October 3, 2010

எந்திரன் படம் வசீகரிக்கிறதா? விமர்சிக்கப்படுகிறதா?

நூற்று எண்பது கோடியை செலவழித்து, ஒரு பெரிய சினிமா பேனர் ஒரு பெரிய நடிகரை போட்டு ஒரு பெரிய விளம்பரம் செய்யப்பட்டு , ஒரு பெரிய படத்தை எடுத்திருக்கும் போது, அதை சாதாரணமாக விமர்சிக்கலாமா? படம் சுமார் மூவாயிரம் கொட்டகைகளில் திரையிடப்பட்டு, தமிழ்நாடெங்கும் தொண்ணூறு விழுக்காடு கொட்டகைகளில் வெளியாகி, முதல் மூன்று நாள் வசூலிலேயே முழு செலவையும் எடுத்துவிடும் என்று கூறப்படுகிறது என்றால், இது என்ன சினிமா தானா, வேறு ஏதாவதா என்று மலைக்க தோன்றும். இதுதான் இன்றைய வணிக உலகம் என்று நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். அதை எப்படி சாத்தித்தார்கள் என்பது அசிங்கமான வரலாறாக இருக்கலாம். ஆனால் சாதித்து விட்டார்கள் என்பது யதார்த்தமாக ஆகிவிட்டது.

இனி யார் படம் எடுத்தாலும் ஐந்து கோடிக்கு எடுக்கிறேன் என்று சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் எந்த ஒரு திறமையும், கலைப்படைப்பும், படைப்பாற்றலும் இனி பல நூறு கோடிகளுடன் வந்தால் மட்டும்தான் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற ஒரு மாயை பரவிவிடும்.

பல கோடிகள் மட்டுமே படத்தின் வெற்றியை தீர்மானித்து விட்டதா? ரஜினி என்ற ஒரு பெரிய சூபர் ஸ்டார் நடித்ததனால் இது பெரும் வெற்றியை எட்டிவிட்டதா? வெறும் பணமும், வெறும் ரஜினியும் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று தெரியவில்லையே? ரஜினி எப்போதுமே நடிப்புக்கு பெயர் பெற்றவர் அல்ல. அவரது ஸ்டைல் மட்டும்தான் எப்போதுமே உயர்ந்து நிற்கும். இந்த படத்திலும் அது அப்படியே நிற்கிறது. ஆனால் இந்த படத்தில் வழமையான ஸ்டைல் போல இன்னொரு ஸ்டைலும் இருக்கிறதே? அதுதானே ஐஸ்வர்யாராய் ? அந்த நடிகை நடிக்கவும் செய்கிறார். ஸ்டைலும் செய்கிறார்.. அழகாகவும் இருக்கிறார் என்பதுதானே இளைஞர்களின் கருத்து? அதனால் ரஜினியை தூக்கி சாப்பிட்டு விடுகிறாரே? இரண்டு ரஜினி வந்தும் ஒரு ஐஸ் சோபிக்கிறார் என்றால் என்ன அர்த்தம்? அதை ரஜினியே ஒரு விளம்பரத்தில் கூறியிருந்தாரே? தான் நாற்பது முறை பயிற்சி எடுத்தும், ஒரே மூவில் அந்த ஐஸ் நடனம் ஆடிவிட்டார் என்று சொல்லவில்லையா?

சரி. பணமோ, ரஜினியோ வெற்றியை தீர்மானிக்கவில்லை என்றால் யார்தான் தீர்மானித்தது? இசை அமைப்பாளர் பங்கை சொல்லாமல் இருக்க முடியாது. அது என்ன இந்த ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கும்போதேல்லாம், முதல் முறை நாம் கேட்கும் பாட்டு ஈர்ப்பதில்லை. பிறகு மீண்டும் கேட்கும்போது, பயங்கரமா ஈர்க்குதே? அது எண் என்றே புரிய வில்லை. கேமெரா கோணங்களை எல்லோரும் பாராட்டறாங்க. ஆமா. சொல்லமாட்டாங்களா. இத்தனை காசை போட்டு கரியாக்கி கேமெரா கோணம் பெயர் வாங்கல்லைனா என்ன அர்த்தம்? அதே மாதிரி சாபுசரில் கேட்கணுமா? ஆர்ட் இயக்குனர்னா சும்மாவா? கிராபிக்ஸ் என்னாமாதிரி வருது? அம்மாடி. இந்தமாதிரி பெரிய அளவில் கிராபிக்ஸை பயன்படுத்தியவர்களே இல்லை என்று சொல்லும்படி செய்து விட்டாரே ஐயா? சரி இது திறமையா? திறமை போன்ற மாயையா? எப்படியோ எல்லோரும் சங்கரை இதற்காகவே பாராட்டிவிட்டார்கள். நாமும் சேர்ந்து கொள்ளா விட்டால், தனிமைபடுவோம் போல இருக்கே?
டானி டென்சான்க்பா வருகிறார்னு எழுத்து போடும் போது பார்த்தவுடன் எனக்கு ஒரே கொண்டாட்டம்தான். ஏன் என்றால் அவர் அஞ்சல் பெட்டி 520 ல நடிச்சார் பாருங்க. நான் அவரது ரசிகனா ஆயிட்டேன். ஆனா அந்த டானிய பார்க்க முடியல்லையே? சங்கர் அவர பேராசிரியர், விஞ்ஞானி அப்படின்னு காட்டுதுக்காக போட்டிருப்பார் போலும்.

எப்படியோ. தேர்தலில் வாக்காளர்களுக்கு ஆயிரக்கணக்கா பணம் பட்டுவாடா செய்து இனிமே யாராவது தேர்தல்ல நில்லுங்க காசு இல்லாம பார்க்கலாம் என்று சவால் விட்டார்கள். முழு வணிகமாக தேர்தலை ஆக்கிவிட்டோமே என்று அவர்கள் பெருமைபடலாம். அதுபோல இப்போ எவனாவது நூறு கோடிக்கு குறைவா காசை எடுத்துக்கிட்டு வந்து சினிமா எடுக்கனும்னு சொல்லுங்க பார்க்கறோம் என்று சவால் விடுவதுதானே இது.அப்படியானால் சினிமாவை ஏகபோகப் படுத்தியாச்சா? சரி. சினிமா காட்டுற இடத்தையுமில்ல ஏகபோக படுத்திட்டாக? எல்லா சினிமா கொட்டகையையுமில்ல அவுக ஏகபோக படுத்திட்டாக? இப்போ புரியுதா ஏக போகம்னா என்னனு? இதுதான் ஏகபோகம்னு அமெரிக்காகாரனுக்கே இனிமே விளங்கப்படுத்துவோமில்லா? எப்படியோ ஒரு ஏகபோக படத்தை முதல்நாளே பார்த்த திருப்தி.

கடைசி நேரத்தில் அலகாபாத் தீர்ப்பை மாற்றியவர்கள், டில்லிகாரர்களா?

ஒரு அதிர்ச்சி செய்தி நாட்டை உலுக்கி வருகிறது. அதுதான் அலகாபாத் நீதிமன்றம் எழுதி வைத்திருந்த தீர்ப்பு, முக்கியமான செயல்பாட்டு பகுதிகளில், கடைசி நேரத் தலையீட்டால் மாற்றப்பட்டுள்ளது என்ற செய்தி. அந்த கடைசி நேர தலையீடு டில்லியிலிருந்து வந்தது என்பதும் இன்னொரு அதிர்ச்சி செய்தி. அதுவும் தீர்ப்பு கொடுக்கப்பட்ட நாளன்று அதிகாலையில் டில்லியிலிருந்து விமானத்தில் வந்து இறங்கியது என்பது கூடுதலான செய்தி. இத்தனை செய்திகளும் இரண்டே வரிகளில் ஒரு தமிழ் வாரம் இருமுறை வெளிவரும் ஏட்டில் வெளிவந்துள்ளது என்பது அச்சு ஊடக செய்தி. இந்த செய்திக்கான காரணம் என்ன? இந்த செய்திப்படி செய்யப்படட் மாற்றம்தான் என்ன? அந்த மாற்றம் செய்யப்படுவற்கு முன்பு அந்த செயல்பாட்டு பகுதியில் இருந்த தீர்ப்பு என்ன? இத்தகைய மாற்றம் செய்ய வேண்டிய காரணம் என்ன? அது அரசியல் காரணமா? அத்தகைய மாற்றத்தை செய்தவர்கள் அரசியல்வாதிகளா? அவர்களுக்கு பின்னால் இருந்த சக்திகள் என்ன? அதுபற்றிய ஆழமான ஆய்வுதான் நாம் பார்க்கவேண்டியுள்ளது.

1940 ஆம் ஆண்டு ஆங்கிலேயன் இந்தியாவை ஆண்டு வந்த நேரம். அப்போது இன்றைய இந்தியாவும், இன்றைய பாகிஸ்தானும் ஒரே நாடாக அன்கிலேயனின் ஆட்சிக்கு கீழ் இருந்த நேரம். அப்போது ஆங்கிலேயனின் ப்ரீவி கவுன்சில் என்ற நீதிமன்றத்தில் ஒரு வழக்கிற்கு தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கும், அந்த தீர்ப்பும் இப்போது பாபர் மசூதி ---ராம ஜன்ம பூமிக்கு எப்படி சம்பந்தப்படுகின்றன என்று கேட்கலாம். அதுவும் ஒரு வழிபாட்டு தளத்தை இடித்து இன்னொரு வழிபட்டுக்காரர்கள் செய்த செயல் பற்றிய வழக்குதான். அதுவும் யாருக்கு அந்த இடம் சொந்தம் என்ற வழக்குதான். இடிக்கப்பட்ட வழிபாட்டுக்காரர்களுக்கா? அல்லது இடித்தவர்களுக்கா? யாருக்கு அந்த இடம் சொந்தம் என்ற வழக்குதான். அப்படியானால் அந்த வழக்கின் தீர்ப்பு இந்த அலஹாபாத் நீதிமன்றம் முன்னால் வந்த வழக்கிற்கு முன் உதாரணமாக எடுக்கப்படும் அல்லவா? அப்படி எடுக்கப்பட்டதா?

மேற்கண்ட லாகூர் வழக்கு என்று அறியப்பட்ட பிரபல வழக்கு, சீக்கியர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் உள்ள வழக்கு. அதாவது சீக்கியர்களின் குருத்வாரா என்ற கோவிலை, முஸ்லிம்கள் உரிமை கொண்டாடினார்கள் என்ற வழக்கு அது. அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு வருகின்ற நேரத்தில், ஆங்கில ஏடுகள் பழைய லாகூர் ப்ரீவி கவுன்சில் தீர்ப்பை சுட்டிக்காட்டி எழுதியிருந்தனர். அதாவது இன்றைய பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில், பிரபல நவுலகா பஜார் என்ற இடத்தில் 1722 இல் ஒரு மசூதி கட்டப்பட்டது. அதற்கு ஷஹித் கஞ்ச் மசூதி என்று பெயர். 1762 இல் சீக்கியர்கள் லாகூரை கைப்பற்றிய போது, அந்த மசூதியையும் ஆக்கிரமித்துக்கொண்டனர். 1849 ஆம் ஆண்டுவரை சீக்கியர்களின் ஆக்கிரமிப்பின் கீழ் லாகூர் இருந்தது. அதுவரை இந்த மசூதியும் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது. 1849 இல் ஆங்கிலேயர்கள் லாகூரை கைப்பற்றியபோதும், அந்த மசூதி சீக்கியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1850 ஆம் ஆண்டு நூர் அஹமது என்பவர் அந்த மசூதியின் பொறுப்பாளர் என்று ஒரு வழக்கை தொடுக்கிறார். அவர் நீண்ட காலமாக தனது பொறுப்பில் மசூதியை வைத்திருக்கவில்லை என்பதால், அவரது வழக்கு எடுபடவில்லை. 1855 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இருபத்தைந்தாம் நாள் அவர் இன்னொரு வழக்கை சீக்கியர்களை எதிர்த்து தொடுக்கிறார். அதுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது.

அதன்பிறகு 1925 ஆம் ஆண்டு ஷஹித் கஞ்ச் குருத்வாரா, ஒரு சீக்கிய குருத்வாரா சட்டத்தை கொண்டுவருகிறார்கள். அதில் அந்த குறிப்பிட்ட வழிபாட்டுத்தலமும் சேர்க்கப்படுகிறது. பல்வேறு தரப்பினர் அந்த இடத்திற்கு சொந்தம் கொண்டாடினார்கள். ஆனால் சீக்கிய தீர்ப்பாயம் அந்த இடம் லாகூரின் சீக்கிய குருத்வாராவின் மேலாண்மை குழுவிடம்தான் இருக்கவேண்டும் என்று தீர்ப்பு கூறிவிட்டது. அதன்பிறகு 1935 ஆம் ஆண்டு ஜூலை ஏழாம் நாள், அந்த ஷஹித் கஞ்ச் கட்டிடம் இடிக்கப்பட்டது. அது லாகூரில் கலவரத்தையும், ஒழுங்கின்மையையும் ஏற்படுத்தியது. 1935 ஆம் ஆண்டு அக்டோபர்-30 ஆம் நாள் சிரோன்மணி குருத்வாரா பற்பந்தக்குழுவை எதிர்த்து ஒரு வழக்கு போடப்பட்டது. அதில் அந்த கட்டிடம் ஒரு மசூதியாக இருந்தது என்றும், அதில் வழிபாடு நடத்த அனைத்து இஸ்லாமிய மக்களுக்கும் உரிமை இருக்கிறது என்றும் அறிவிக்கவேண்டும் என்பதாக கோரப்பட்டது. அந்த கட்டிடத்தை தவறாக பயன்படுத்த யாரையும் அனுமதிக்க கூடாது என்றும் கோரப்பட்டது. வழிபாடு நடத்த முஸ்லிம்களுக்கு உள்ள உரிமையில் யாரும் தலையிடக்கூடாது என்றும் கோரப்பட்டது.

ஆனால் 1938 ஆம் ஆண்டு லாகூர் உயர்நீதிமன்றத்தில், அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 1940 ஆம் ஆண்டு, ஆங்கிலேயரின் ப்ரீவி கவுன்சில், உயர்நீதிமன்ற தீர்ப்பை அங்கீகரிக்கிறது. அந்த இடத்தின் மீது உரிமை கோருதலை, குறிப்பிட்ட கால அளவான பன்னிரண்டு ஆண்டுகளுக்குள், முஸ்லிகள் உரிமை கோரவில்லை என்பதால் அவர்களது உரிமை முடிந்து விட்டது என்று தீர்ப்பு சொல்லப்பட்டது. அதன்மூலம் அங்கே குருத்வாரா தொடர்ந்து இயங்குவதற்கு அங்கீகாரம் கொடுத்து விடுகிறது. அது ஆங்கிலேயர் ஆட்சியில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு.

ஆனால் ஆங்கிலேயரின் அரசியல் சட்டத்தின் அடிப்படையில்தான் இன்றைய இந்திய மற்றும் இன்றைய பாகிஸ்தான் அரசியல் சட்டங்கள் இயங்குகின்றன என்பது இன்னொரு செய்தி. ஆனாலும்கூட அந்த முன்னுதாரணம் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதே இப்போதைய கேள்வி. சுதந்திரத்திற்கு முன்னால் உள்ள ப்ரீவி கவுன்சில் தீர்ப்புகளை, குறிப்பாக இந்திய உச்சநீதிமன்றம் தனது புதிய தீர்ப்பின் மூலம் மறுதலித்தால் மட்டும்தான், அந்த ப்ரீவி கவுன்சில் தீர்ப்பு செல்லாது. அகவே இந்த இடத்தில் அந்த ப்ரீவி கவுன்சில் தீர்ப்பு செல்லாது என்று கூறுவதற்கு வாய்ப்பே இல்லை. அதனால்தான் எல்லா ஊடக இயலாளர்களும், ஆர்வலர்களும் இந்த அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம்களுக்கு சாதகமாக வரும் என்று எதிர்பார்த்தார்கள்.

அப்படிப்பட்ட எதிர்ப்பார்ப்பு கடைசி நேரத்தில் மாறியதற்கு காரணம் என்ன என்பதுதான் இப்போதுள்ள மில்லியன் டாலர் கேள்வி. அதற்குதான் இப்போது பதில் கிடைத்துள்ளது. ஒரு சதி டில்லியில் தீர்ப்பன்று முடுக்கி விடப்பட்டது. அதாவது அதிகாலை ஆறு மணிக்கே, டில்லியிலிருந்து ஒரு அறிவுஜீவி குழாம் , முழுமையான அதிகார வழிகாட்டலுடன் லக்னோவிற்கு, அதாவது அலகாபாத் உயர்நீதிமன்ற கிளை உள்ள இடத்திற்கு பறந்து சென்றது. அது அங்குபோய், அங்குள்ள அந்த மூன்று நீதியரசர்களை சந்தித்து, தீர்ப்பின் முக்கிய இடங்களை, அதாவது ஆபரேஷனல் பகுதி என்று சொல்லப்படும் செயல்பாட்டு பகுதியில் சில மாற்றங்களை செய்தது.

லாகூர் தீர்ப்பின் 1940 ஆம் ஆண்டின் தீர்ப்பு உதாரணங்களுடன், நானூறு ஆண்டுகளாக முஸ்லிம்களின் கையிருப்பில் இருந்த அய்யோத்தியின் சர்ச்சைக்குரிய இடம் , அவர்களுக்கே சொந்தம் என்றும், காலம் கடந்து வழக்கு தொடுத்த இந்துக்களின் உரிமை காலாவதி ஆகிவிட்டது எனவும் எழுதப்பட்டிருந்த தீர்ப்பு அன்று மாற்றப்பட்டது.

அவ்வாறு மாற்றப்பட்டது இந்தியாவில் பெரும்பான்மை இந்துக்கள் மத்தியிலிருந்து எந்த கலவரமும் வெடித்து விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலா? இல்லவே இல்லை. ஏன் என்றால் 1941 ஆம் ஆண்டு கணக்குப்படி , லாகூரில் இருந்த மக்கள்தொகையில், 50 % முஸ்லிம்களும், 36 % இந்துக்களும், 13 % சீக்கியர்களும் இருந்தார்கள். அதாவது பெரும்பான்மையாக முஸ்லிம்கள் இருந்தும் அந்த நீதிமன்ற தீர்ப்பு எந்த ஒரு நிரந்தர கலவரத்தையும் அங்கு ஏற்படுத்தி விடவில்லை. மாறாக இன்னமும் அந்த இடம் சீக்கியர்களின் பொறுப்பில்தான் உள்ளது. அப்படியானால் ஒரு இஸ்லாமிய அரசு என்று அறிவித்துக்கொள்ளும் பாகிஸ்தானிலேயே இது சாத்தியம் என்றால், அதே விஷயம் மதச்சார்பற்ற நாடு என்று அறிவிக்கப்பட்ட இந்தியாவில் ,பெரும்பான்மை மக்களை நியாயம் பக்கம் திருப்ப, அதன்மூலம் அமைதியை ஏற்படுத்த முடியாதா? அதனால் இந்த மாற்றத்தை ஏற்படுதுவத்துவதற்க்கான காரணம் ஒரு அரசியல் சதியே என்பது தெளிவாகிறது.

அது என்ன அரசியல் சதி? பா.ஜ.க. அந்த காலத்தில் அள்ளிச்சென்ற இந்து மத உணர்வாளர்களின் வாக்கு வங்கிகளை , தாங்கள் அள்ளிச்செல்ல காங்கிரசு கட்சி செய்த அரசியல் சதி என்றுதான் பெரும்பாலும் ஊடகவியலாளர்கள் கருதுகிறார்கள். இந்த தீர்ப்பு விளையாட்டில் காங்கிரசு கட்சியின் அரசியல் சதி பலிக்குமா என்ற கேள்வியும் இங்கே எழுந்துள்ளது.