Sunday, September 19, 2010

ராஜபக்சே வருகிறார். ஐ.நா.வே உஷார்.

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, அடுத்தவாரம் ஐ.நா.பொதுசபையில் உரையாற்ற போகிறார் என்ற செய்தி உலக தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் நிறைவுற்ற நாலாம் வன்னி போரில், 50000 நிராயுதபாணியான அப்பாவி தமிழ்மக்களை கொன்று குவித்த கொடுஞ்செயலுக்கு, போற்குற்றவாளியாக அறிவிக்கபடவேண்டியவர் என்று மகிந்த மீது உலகத்தமிழர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளார்கள். சரணடைந்த விடுதலை புலிகளையும் கொலை செய்தவர் என்ற குற்றச்சாட்டு, போர் குற்றங்களிலே பெரியதும், கொடூரமானதுமாக கருதப்படுகிறது. பல்வேறு மனித உரிமை மீறல்களை கூடுதலான குற்றங்களாக செய்தவர் என்ற பொறுப்பும், மகிந்த தலைமையிலான அரசாங்கத்தியே சாரும். போர் காலத்தில், அப்பாவி தமிழ்மக்கள் மீது, பீரங்கி தாக்குதல்களை நடத்தியது, காயம்பட்டவர்களுக்கும், உயிரிழந்தவர்களுக்கும் உதவ, மருந்துகளும், சிகிச்சையும் அனுப்பாதது, உணவு கிடைக்க வழியில்லாமல் சாலைகளை தடுத்து, மக்களை பட்டினி போட்டது, போன்ற பல்வேறு மனித உரிமை மீறல்களையும் மகிந்தா அரசாங்கம் செய்தது என்பதற்கான ஆதாரங்கள் போதுமானதாக இருக்கிறது.
அப்படி இருக்கும்போது, இப்போது எப்படி போர்க்குற்றவாளி மகிந்தாவை ஐ.நா. சபை வரவேற்கலாம் என்பதே உலக தமிழர்களின் கேள்வி. ஏற்கனவே ஐ.நா. சபையின் மனித உரிமை கழகம், ராஜபக்சேவின் மனித உரிமை மீறல்களை விசாரிக்க முயன்றது. அப்போது இந்திய அரசும், சீன அரசும் அந்த முயற்ச்சியை முறியடித்து, ஐ.நா.மனித உரிமை கழகத்தையே செய;ல்படவிடாமல் செய்து மகிந்தாவை காப்பாற்றியது. ஐ.நா.மனித உரிமை கழகத்தின் தலைவரான நவீன் பிள்ளை, போரில் நடந்த மனித உரிமை மீறல்களை விசாரிக்க எடுத்துக்கொண்ட அக்கறை, உலக தமிழர்கள் மத்தியில் ஒரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியது. அதேபோல உலகத்தமிழர்கள் அமெரிக்காவையும், அதன் புதிய அதிபர் பாரக் ஒபமாவையும் பெரிதும் நம்பி, அவரிடம் ஈழத்தமிழர் பிரச்சனையை முறையிட்டு வந்தார்கள்.அமெரிக்காவும் தனக்கு இருக்கும் இரண்டு முகங்களில் ஒரு முகமான மனித உரிமை முகத்தை மட்டுமே ஈழத்தமிழர்கள் விசயத்திலும் காட்டிவந்தது. அதுநேரம் ராஜபக்சே,மேற்க்கத்தியநாடுகளுக்கு எதிரான ஆள் போல காட்டிக்கொண்டிருந்தார்.
அதுதான் உண்மை என்றால், இப்போது எப்படி இந்த போர்குற்றவாளி, ஐ.நா. செல்ல முடியும்? எப்படி அமெரிக்கா அவரை வரவேற்க முடியும்? உண்மையில் இதுவரை தமிழருக்கு புரியாமல் போனது என்ன? உண்மையில் அமெரிக்காவின் முகம்தான் என்ன? இப்போது விழுந்தடித்து ராஜபக்சேக்கு வரவேற்ப்பு கிடைக்க காரணம் என்ன?
ராஜபக்சேவின் வருகையை ஒட்டி, கனடா நாட்டு தமிழர்கள் இப்போது பெரும் ஆர்ப்பாட்டத்தை, அங்கே உள்ள ஐ.நா. தூதரகம் முன்பு செய்துள்ளார்கள். போர் குற்றவாளி என்றும், இலங்கையில் உள்ள முள்வேலி முகாம்களை மூடச்சொல்லியும், ஈழத்தமிழர்களை காப்பாற்றச்சொல்லியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பியுள்ளனர். போர்க்குற்றவாளி ராஜபக்சேவை, நீதிக்கு முன் கொண்டுவந்து நிறுத்துங்கள் என்ற கோரிக்கையையும் அவர்கள் அப்போது எழுப்பி உள்ளனர். அத்தகைய கோரிக்கைகளை அவர்கள் ஐ.நா.சபைக்கும், அமெரிக்க அரசிற்கும் கேட்டுள்ளார்கள். அத்தகைய கோரிக்கைகளை, இன்றைய நிலையில் ஐ.நா. சபையை நோக்கித்தான் கேட்கமுடியும். அதனால்தான் நாடு கடந்த தமிழீழ அரசின் சார்பாகவும் அத்தகைய கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளனது. அமெரிக்காவை பொருத்தவரை, தமிழீழ விடுதலைப்புலிகளை பயங்கரவாத சக்திகள் என்று முதலில் முத்திரை குத்தியதற்க்கான பொறுப்பு கொண்டவர்கள். அதேசமயம் அமெரிக்க முதலாளிகளின் நிறுவனங்கள் , தங்களது சாவு வியாபாரம் நடக்கவேண்டும் என்பதற்காக, உலகின் எந்த மூலையில் உள்ளவர்களுக்கும் ஆயதங்களை விற்க தயார் என்பதை நடைமுறைபடுத்துபவர்கள். அவ்வாறு ஆயுதங்களை விற்ப்பதில் அவர்கள் புலிகளுக்கு விற்பதற்கும் என்றும் தயங்கியதில்லை. ஆகவே அமெரிக்காவை புரிந்துகொள்ளவேண்டும் எனபதுதான் நமக்கு முன்னால் உள்ள விஷயம்.
ஈழத்தமிழரின் சுய-நிர்ணய உரிமை போராட்டத்தை நேரடியாக அமெரிக்கா ஆதரிக்காதபோதும், ராஜபக்சே அரசு மேற்க்கத்திய நாடுகளை தங்கள் நாட்டு உள்விவகாரத்தில் தலையிடவிடமாட்டோமென பகிரங்கமாக அறிவித்து வந்தது., அது இலங்கை அரசின் திட்டமான அருகாமை நாடுகளை அதாவது அருகாமை நாட்டு அரசுகளை சார்ந்து தனது சிங்கள பௌத்த அரசை நடத்துவது என்ற எண்ணத்தின் அடிப்படையில் செய்யப்ப்பட்ட தந்திரமாகவே தெரிகிறது. அதற்காக மகிந்தா அரசு இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய அரசுகளின் உதவியுடன் செயல்படுவதே அதன் செயல்தந்திரமாகும். , இந்திய அரசு , தனக்கு சமமாக சீனாவையும், பாகிஸ்தானையும் வைப்பதை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது இந்த செயல்தந்திரத்தில் மகிந்தா அரசுக்கு வசதியாகபோய்விட்டது. அதனால் இந்திய அரசுக்கும், சீன அரசுக்கும் உள்ள முரண்பாடுகளையும், இந்திய அரசுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் உள்ள வேறுபாடுகளையும் மகிந்தா அரசு சரியாக பயன்படுத்தி கையாள தொடங்கியது. அதுவே வடக்கே மன்னார் கடற்கரையில், இந்திய அரசுக்கு 100 ஏக்கர் கொடுத்தால், சீன அரசுக்கும் 100 ஏக்கர் கொடுப்பது, அம்பந்தோட்டா கரையை சீனாவிற்கு துறைமுகம் கட்ட கொடுத்தால், அதன்மூலம் அருகே இந்தியாவில் உள்ள துறைமுகங்களுக்கு போட்டியாக சீன துறைமுகத்தை நிறுத்துவது, ரயில்வே பாதை போட இந்தியாவிற்கு கொடுத்தால், முல்லைதீவு கடற்கரையை மீன் பிடிக்க சீனாவிற்கு ஏலத்திற்கு விடுவது, இப்படியாக சீனாவையும், இந்தியாவையும் எதிர்,எதிராக நிறுத்தி அதன்மூலம் தனது காரியங்களை சாதித்துக்கொள்வது மகிந்தாவின் பாணியாக மாறிவிட்டது.
அதேபோல மகிந்தா பாகிஸ்தானையும், இந்தியாவையும் உள்ளே அனுமதித்து அதன்மூலமும் லாபம் பெற்றார். அப்படி செய்யும்போது ஏற்ப்பட்ட முரண்பாட்டில்தான், சேலை வியாபாரிகள் போல வந்த இந்திய அரசின் உளவு ஒற்றர்களை பாகிஸ்தான் உளவு ஒற்றர்கள் மட்டக்கிளப்பில் கொன்றுவிட்டார்கள் என்பதற்காக, லாகூர் தாக்குதலை இந்திய ஒற்றர்கள் செய்த செய்தி வெளிவந்தது. அதன்மூலம் இலங்கை--பாகிஸ்தான் உறவை கெடுக்கலாம் என இந்திய ஒற்றர்கள் திட்டமிட்டால் அது எதிரிடையாக சென்று விட்டது.
இப்போது மட்டக்கிளப்பில் நடந்த சீன கண்டைனர் வெடிப்பிலும் இதே கரங்கள் இருக்க வாய்ப்பு தெரிகிறது. ஏற்க்கனவே அந்த வட்டாரத்தில் ஒரு ராமு படை என்று போலி விடுதலை புலி படையை வைத்திருப்பதில் இந்திய ஒற்றர்கள் பெயர்பெற்றுள்ளனர். அதேபோல கிழக்கு பகுதியின் முதல்வர் பிள்ளையன் இந்திய அரசின் செல்லப்பிள்ளையாக இருப்பதால்தான் உயிருடன் கருணா குழு அவரை விட்டுவைக்கிறார்கள் என்ற செய்தியிலும் உண்மை இருக்கிறது. பிள்ளையன் ஆட்சிக்கு வருவதற்காக, சில குழுக்களுடன் ரகசிய ஒப்பந்தம் போட்டதும் வெளியே தெரியவந்துள்ளது. பாகிஸ்தானின் உளவுத்துறையுடன் மட்டுமின்றி, ஈரான் நாட்டுடனும் நல்லுறவை ராஜபக்சே அரசு வைத்துக்கொண்டுள்ளது. ஈரான் அதிபர் கொழும்பு வந்ததும், அவருடன் ராஜபக்சே இருக்கும் விளம்பர பலகைகள் கொழும்பில் பிரபலமாக இருந்ததும் வன்னி போர் நேரத்திலேயே நடந்தது. இது அமெரிக்காவால் ரசிக்க முடியாத செய்தி. ஆனாலும் இப்போது அமெரிக்கா எப்படி ராஜபக்சேவை ஏற்றுக்கொள்கிறது?
அதற்கும் இன்றைய இந்திய அரசே காரணம்.. அதாவது அமெரிக்காவிற்கு தன்னால் நேரடியாக இலங்கையில் அரசியல் செய்ய முடியாது என்பது தெரியும். அதேசமயம் ஆசியாவில், குறிப்பாக தெற்காசியாவில் சீனா செல்வாக்கு பெறுவது எதிர்காலத்தில் அமெரிக்காவுக்கு ஆபத்தாக முடியும். ஆகவே சீனா செல்வாக்கு இலங்கையில் பெருகுவதை தடுக்க ஒரே வழி, அதற்கு பிராந்திய போட்டியாளராக உள்ள இந்தியாவை வலுப்படுத்துவதாலேயே முடியும் என்பதை அமெரிக்கா உணர்ந்துள்ளது. அதனால்தான் வன்னி போர் முடிவுக்கு பின், அமெரிக்க தலைவர்கள் தங்களது அறிக்கைகளில், தான் இத்தனை ஆண்டுகளாக இந்தியா மூலம் கண்காணித்து, இலங்கை பிரச்சனையில் தலையிட்டு வருகிறோம் என்று கூறினார்கள். அதேபோல இலங்கைக்கு அமெரிக்க பிரதிநிதியை அனுப்பி தங்கள் ஆதரவை ராஜபக்சேவுக்கு தெரிவித்தனர்.
இப்போது சிங்கள எதிர்க்கட்சி உட்பட எல்லோரும் ராஜபக்சே அரசுக்கு எதிராக புதியதோர் அரசியல் போராட்டத்தை எடுத்துவருகின்றனர். மீண்டும் சட்டத்தை வளைத்து மூன்றாவது முறையும் அதிபரே ஆட்சியாளர்களாக தொடர்வதற்கான புதிய சட்ட திருத்தத்தை சிங்க பொதுமக்கள் எதிர்க்க தொடங்கியுள்ளனர். அதை ஜனநாயகம் கருதியாவது இந்திய அரசும், அமெரிக்க அரசும் ஆதரிக்கவேண்டுமல்லவா? அதை அவர்கள் செய்ய வில்லை.
ஆகவே இந்திய அரசின் வழியை எடுத்து ராஜபக்சே அரசுடன் சமரசபோக்குக்கு அமெரிக்க அரசு போய்விட்டதையே அது காட்டுகிறது.ஐ.நா.வை வளைத்து ராஜபக்சே அரசுக்கு சாதகமாக நிலை எடுக்கவைக்க அமெரிக்க அரசால் முடியும். அதுவே இந்திய அரசின் நிலைப்பாடாகவும் இருக்கும்.
ஆனால் உலக தமிழர்கள் இப்போது அரசியல் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அவர்கள் இந்த ஆயுதம் தாங்கிய அரசுகளின் மனித தன்மையற்ற கொள்கைகளை புறம் தள்ளிவிட்டு தொடர்ந்து போர் குற்றவாளிகளை தண்டிக்கவேண்டும் என்ற உறுதியான கோரிக்கையை தொடர்ந்தது எடுத்து செல்வார்கள். அதில் வெற்றியும் பெறுவார்கள். ஏன் என்றால் உலகம் முழுவதும் உள்ள தமிழர் கூட்டம் இப்போது ஒரே கோரிக்கையுடன் எழுந்து விட்டது. ஒவ்வொரு நாட்டிலும் அதன் எதிரொலி கேட்டே தீரும்.