Wednesday, September 1, 2010

வறுமையை கணக்குப் பார்க்கயிருக்கும் ஐ.நா. சபை.

வருகிற செப்டம்பர் 20 முதல் 22 வரை அமெரிக்காவிலிருக்கும் நியுயார்க் நகரில், ஐ.நா. பொதுச்சபையின் உயர்மட்ட சிறிய மாநாட்டுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அதில் ஐ.நா. சபையின் அனைத்து உறுப்பு நாடுகளும் பங்குகொள்ளும். அந்த மாநாட்டுக் கூட்டத்தில், 2000மாவது ஆண்டில், ஐ.நா. பொதுச்சபையில் ஒப்புக்கொள்ளப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறார்களா என்ற அறிக்கையை ஒவ்வொரு நாடும் முன்வைக்க வேண்டும். உலகம் முழுவதிலும் வறுமையும், ஏழ்மையும், சமூக புறக்கணிப்பும், சிசுக் கொலைகளும், பெண் கருக்கொலைகளும், கல்வியின்மையும், எய்ட்ஸ் போன்ற நோய்களும், சுற்றுச்சூழல் பாதுகாப்பின்மையும், வளர்ச்சியின்மையும், பெண்ணடிமையும் இருப்பதை அனைத்து உலகநாடுகளும், ஐ.நா. பொதுச்சபையில் ஒப்புக்கொண்டன. அவற்றை போக்குவதற்கும், ஆரோக்கியமான உலகத்தை உருவாக்குவதற்கும் திட்டமிட வேண்டும் என்றும் அவர்கள் அப்போது ஒப்புக்கொண்டனர். அதையெட்டி புத்தாயிரம் வளர்ச்சி லட்சியங்கள் என்பதாக 8 லட்சியங்களை உருவாக்கினார்கள். அவை தீவிர வறுமை நிலையை ஒழிக்கவேண்டும் என்றும், பிரபஞ்சம் தழுவிய ஆரம்பகல்வியை எட்டவேண்டுமென்றும், பாலினச் சமத்துவத்தையும், பெண்கள் அதிகார மேம்படுத்தலையும், சாதிக்க வேண்டுமென்றும், குழந்தைகள் மரணத்தை குறைக்கவேண்டுமென்றும், பிரசவ மரணங்களை தவிர்க்கவேண்டுமென்றும், சுற்றுச்சூழலில் நீடித்தத் தன்மையை ஏற்படுத்தவேண்டுமென்றும், வளர்ச்சிக்கான உலக பங்களிப்பை வளர்க்கவேண்டுமென்றும் 8 வகைகளாக கூறப்பட்டுள்ளன. மேற்கண்ட லட்சியங்களை எட்டுவதற்காக 2000ம் ஆண்டிலிருந்து 2015ம் ஆண்டு வரை கால அளவு நிர்ணயிக்கப்பட்டது. அத்தகைய இலக்குகளை 10 ஆண்டுகளில் எந்த அளவிற்கு நிறைவேற்றியிருக்கிறோம் என்பதை கணக்குப் பார்ப்பதற்காக, மேற்க்கூறப்பட்ட ஐ.நா. உச்சி மாநாடு நடத்தப்படவிருக்கிறது. நாடுகள் தாங்கள் செய்ததையும், செய்யப்போவதையும் கணக்கு காட்டும்போது, ஐ.நா.வும் தனது 27 அமைப்புகள் மூலம் அது பற்றிய விவரங்களை சேகரிக்கும். அதற்காக அனைத்து நாட்டு தொழிலாளர் அமைப்பு, ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு, ஐ.நா. தொழில் வளர்ச்சி அமைப்பு, உலக சுகாதார அமைப்பு, உலக வங்கி, அனைத்து நாட்டு நிதியம், அனைத்து நாட்டு தொலைத்தொடர்பு யூனியன், ஆப்பிரிக்காவிற்கான பொருளாதார ஆணையம், ஐரோப்பாவிற்கான பொருளாதார ஆணையம், லத்தீன் அமெரிக்காவிற்கான பொருளாதார ஆணையம், ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளுக்கான பொருளாதார ஆணையம், மேற்கு ஆசியாவிற்கான பொருளாதார ஆணையம், எச்.ஐ.வி./எய்ட்ஸ் போன்றவற்றிற்கான ஐ.நா. கூட்டுத் திட்டம், ஐ.நா. குழந்தைகள் நிதி, வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான ஐ.நா. மாநாடு, பெண்களுக்கான ஐ.நா. வளர்ச்சிநிதி, ஐ.நா. வளர்ச்சித் திட்டம், ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம், பருவநிலை மாற்றத்திற்கான ஐ.நா. தொடர்பு கட்டமைப்பு, அகதிகளுக்கான ஐ.நா. ஆணையம், ஐ.நா. மனித குடியேற்றத் திட்டம், ஐ.நா. மக்கள்தொகை நிதி, அனைத்து நாட்டு வர்த்தக மையம், அனைத்து நாட்டு நாடாளுமன்ற யூனியன், பொருளாதார கூட்டுறவுக்கும், வளர்ச்சிக்குமான அமைப்பு, உலக வர்த்தக அமைப்பு ஆகியவற்றிலிருந்து ஒவ்வொரு நாட்டை பற்றிய புள்ளிவிவரங்களையும் சேகரிக்கிறது. எம்.டி.ஜி. என்ற புத்தாயிரம் வளர்ச்சி லட்சியங்கள் என்ற ஆவணத்தில் 212 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இன்னும் 5 ஆண்டுகளே இலக்கை எட்டுவதற்கு இருப்பதனால், உலகத் தலைவர்கள் அனைவரும் வருகிற செப்டம்பர் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு, முன்னேற்றத்தை துரிதப்படுத்தி இலட்சியங்களை அடையவேண்டும் என ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கீமூன் அறைகோல்விடுத்துள்ளார். தீவிர வறுமை என்பது உலக அளவில் உடனடி அவசரப் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. வறுமை, பட்டினி, நோய், பிரசவ மரணங்கள் மற்றும் குழந்தை மரணங்கள் 2015 என்ற காலக்கெடுவிற்குள் ஒரு கட்டுக்குள் கொண்டுவரப்படவேண்டும் என்பதே அதன் குறிக்கோள். உலகத்திலுள்ள நாடுகளில் இந்தியாவும், சீனாவும் மட்டும்தான் குறைந்தபட்சம் மேற்கூறிய லட்சியங்களை எட்டுவதில் முன்னேறியிருக்கின்றன. அதனால் மட்டுமே இந்த இரு நாடுகளின் நிலமை ஆரோக்கியமாக இருப்பதாக பொருள்கொள்ள முடியாது. இந்தியா முழுவதும் இருக்கின்ற புள்ளிவிவரங்களை எடுத்து, ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்குகளை இந்த நாடு அடைந்துள்ளதா என்று கணக்குப் பார்க்கும் பணியை, அரசு சாரா நிறுவனமான “வாதா ந தோடோ அபேயன்” டெல்லியை தலைமையாகக் கொண்டு செயல்ப்பட்டு வருகிறது. அது கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்ற கேள்வியுடன் விவரங்களைத் தொகுக்குகிறது. அதேபோல ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் சில அரசு சாரா நிறுவனங்கள், அரசாங்கம் ஒப்புக்கொண்ட இலக்குகளை எட்டியிருக்கிறதா என்று கணக்குப் பார்க்கிறார்கள். அவ்வாறு எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களையும், சம்மந்தப்பட்ட மக்களையும் உள்ளடக்கிய, பெண்கள் தீர்ப்பாயம் ஒன்று சென்னையில் சென்ற வாரம் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் அவ்வாறு எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களில், கடந்த 10 ஆண்டுகளில் ஒப்புக்கொள்ளப்பட்ட 8 லட்சியங்களில் 37% மட்டுமே அடைந்துள்ளோம் என்பதற்கான விவரங்களை அவர்கள் தொகுத்துள்ளார்கள். வறுமையை பாதியாக குறைப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்ட இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் இருக்கும் நிலமையை ஆய்வு செய்திருக்கிறார்கள். 1998 முதல் 2005 வரை தமிழ்நாட்டிலுள்ள விவசாய நிலங்களின் அளவு குறைந்திருக்கிறது என்ற அடிப்படை உண்மையை வெளியிடுகிறார்கள். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கீழே உள்ள அரசு அதிகாரிகளுக்கு எம்.டி.ஜி. பற்றி எதுவுமே தெரியவில்லை. சிறு விவசாயிகளின் நிலங்கள் பறிபோன நிலையில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம், வேலை கொடுத்துவிட்டால் சரியாகிவிடுமா? என்ற கேள்வியும் எழுகிறது. மாநில அரசாங்கத்தின் புள்ளிவிவரப்படியே, 100 நாள் வேலைக்கு 54 நாட்கள் தான் வேலைக் கொடுக்கப்படுகிறது என்று தெரிகிறது. கிராமப்புற தலித் மக்களுக்கு கழிப்பறைகளும், பாதுகாப்பான குடிநீரும் கிடைக்கவில்லை. ஆனால் இலவச தொலைக்காட்சி கிடைத்துள்ளது. தலித் மற்றும் ஆதிவாசி குடும்பங்களின் ஆண் குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வியில் விகிதம் கூடவில்லை. பாலினச் சமத்துவம் ஆரம்ப பள்ளிகளிலும், உயர் பள்ளிகளிலும் சிறிது கூடியிருந்தாலும், கல்லூரிக் கல்விகளில் எட்டப்படவில்லை. எச்.ஐ.வி./எய்ட்ஸ் போன்றவை 15லிருந்து 41 வயது வரையுள்ள பெண்களை அதிகம் பாதித்துள்ளது. இந்திய மட்டத்தை விட கூடுதலாக தமிழகத்தில் பெண்கள் மீதான வன்முறை 42%ஆக இருக்கிறது. 44% மக்கள் நகர்புறங்களில் வாழ்கிறார்கள். அதில் உள்ள குடிசைப் பகுதிகளுக்கு வளர்ச்சித் திட்டங்கள் போய்ச் சேரவில்லை. கிராமங்களை சென்று அடைந்த சுகாதாரத் திட்டங்கள், இப்போது ஆரம்ப சுகாதார நிலையங்களில் மையம் கொள்வதால், கூலி மக்கள் அவற்றை அடைய முடிவதில்லை. இவ்வாறு தலித், சிறுபான்மை, தனித்துவிடப்பட்ட பெண்கள் ஆகியோரின் தமிழ்நாடு என்பது வேறுபட்டு நிற்கிறது என்று கூறும் சமூக ஆராய்ச்சியாளர்களின் கணிப்பை மாற்றுவதற்கு அரசு முயலுமா என்ற கேள்வி நமக்கு எழுகிறது. எப்படியானாலும் வரயிருக்கின்ற ஐ.நா.வின் உச்சி மாநாடு பல்வேறு விவரங்களை அம்பலப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.