Monday, August 30, 2010

காவி பயங்கரவாதம் பற்றிய பேச்சு--ஒரு செயல் தந்திரமா?

இந்திய அரசியல் வாதிகள் இப்போதெல்லாம், மேற்கத்திய நாடுகளின் அரசியல் தலைவர்கள் போல தங்களது பேச்சுகளின் மூலம், ஊடகங்கள் மத்தியில் புயலைக் கிளப்புவதற்கு கற்றுக்கொண்டு விட்டனர். ஆகஸ்டு 25ம் நாள் காஷ்மீர் பகுதியின் காவல்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகளின் கூட்டத்தில் கலந்து கொண்ட, மத்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம், காவி பயங்கரவாதம் பற்றி பேசியிருக்கிறார். சமீபகாலங்களில் பல வெடிகுண்டு தாக்குதல்கள் காவி பயங்கரவாதத்தால் செய்யப்பட்டன என்பதாக அம்பலமாகியிருக்கிறது என்பதை கூறியிருக்கிறார். அத்தகைய பயங்கரவாதத்தை எதிர்கொள்ள மத்திய அரசு மற்றும் மாநில அரசு மட்டங்களில் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதும் உள்துறை அமைச்சரின் ஒரு ஆலோசனை. மேற்கண்ட கருத்துகளை ஜம்முகாஷ்மீர் பகுதியில் நடந்த காவல்துறை அதிகாரிகளின் மூன்று நாள் மாநாட்டில் உள்துறை அமைச்சர் பேசியிருந்தார். சிதம்பரம் காஷ்மீர் செல்லும்போது, அந்த வட்டாரத்தில் காவல்துறையினுடைய அராஜகங்களை எதிர்த்து பொதுமக்களின் எழுச்சி நடந்துகொண்டிருந்தது. ஆகவே அவற்றை கெடுவாய்ப்பான நிகழ்வுகள் என்று சிதம்பரம் வர்ணித்தார். எதிர்பாளர்களை தான் சந்திக்க முயல்வாதாகவும், மக்களுடைய உரிமைகளையும், அந்தஸ்த்தையும் மீட்டுக் கொடுக்க உறுதியளிப்பதாகவும், அதன் மூலம் சமாதானத்தை ஏற்படுத்த முயல்வதாகவும், அவ்வாறு தொடங்கும் பேச்சுவார்த்தை ஒரு தீர்வை கொடுக்கும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார். கல்லெறிகள், தடியடிகள், கண்ணீர்புகை வீச்சு, துப்பாக்கி சூடு ஆகியவை உயிர் பலிகளை ஏற்படுத்துகின்றன என்றும், அதுவே மேலும் கல்லெறிகளை தூண்டிவிடுகின்றன என்றும் அப்போது கூறினார். அமர்நாத் யாத்திரைக்கு சென்ற ஆண்டு 292000 பேர் சென்றார்கள் என்று, இந்த ஆண்டு 457,324 பேர் சென்றிருப்பதாகவும், ஜம்முகாஷ்மீருக்கு சென்ற ஆண்டு வருகைபுரிந்த 355,960 பயணிகள் எண்ணிக்கை, இந்த ஆண்டு 516,970 என்று கூடியிருப்பதையும் சுட்டிகாட்டினார். மேற்கண்ட மத்திய அமைச்சரின் புள்ளி விவரங்கள், காஷ்மீர் பகுதி மக்கள் முதிர்ச்சியை படம் பிடித்து காட்டியது. அமர்நாத் யாத்திரைக்கு செல்லும் இந்துக்களின் எண்ணிக்கை அதிகமாகியிருப்பது, காஷ்மீர் வாழ் மூஸ்லீம்களின் நல்லிணக்க மனோபாவத்தை காட்டுகிறது. அதே சமயம் தங்களுடைய சுயாட்சி உரிமைக்காக அவர்கள் ஆயுதம் தாங்கிய மத்திய அரசப்படையை எதிர்த்து நிற்கிறார்கள் என்பதையும் புரியவைக்கிறது. காஷ்மீர் மக்கள் மீது மத்திய அரசப்படைகள் நடத்திவரும் அடக்குமுறைகளை மறக்கடிக்கவைப்பதற்காக, காவி பயங்கரவாதத்தை பற்றி அங்கேபோய் சிதம்பரம் பேசினாரா என்பது தெரியவில்லை. காவி பயங்கரவாதம் தனது திட்டமிட்ட வெடிகுண்டு தாக்குதல்களை நடத்திய இடத்திலெல்லாம், மூஸ்லீம்கள் அத்தகைய தாக்குதல்களை நடத்தியதாக வெளிகாட்டுவதற்காகவே செய்திருக்கிறார்கள் என்பதும் அம்பலமாகியுள்ளது. காஷ்மீர் பிரச்சனையை மனதில் கொண்டு, மூஸ்லீம்கள் அவ்வாறு தாக்குதலில் ஈடுபட்டதாக கருதும் வண்ணம், காவி பயங்கரவாதம் தனது சதிகளை திட்டமிட்டு செய்துள்ளது என்பது தெரிகிறது. ஆகவே காஷ்மீர் சென்று காவி பயங்கரவாதத்தை எதிர்த்து, பேசுவதன் மூலம் அங்குள்ள பேராளிகளையும், அரசியல் உரிமை கோருவோரையும், ஈர்த்துவிடலாம் என்று உள்துறை அமைச்சர் நம்பியிருக்கலாம். காஷ்மீர் தேசிய இனத்தின் சுயநிர்ணய போராட்டத்தை, ஒரு மதம் சார்ந்த பிரச்சனையாக மாற்றுவதன் மூலம் அல்லது சித்தரிப்பதன் மூலம் அல்லது புரியவைப்பதன் மூலம், அந்த போராட்டம் அடிப்படையில் இழிவுபடுத்தப்படுகிறது. அத்தகைய வேலையை வெளிப்படையாக காவி பயங்கரவாதம் செய்து கொண்டிருந்தாலும், அதை குறை கூறும் இன்றைய மத்திய அரசும் அத்தகைய வண்ணத்தை பூச எண்ணியே, இத்தகைய கருத்துகளை காஷ்மீர் சென்று கக்குகிறாரோ என்ற ஐயம் உருவாகிறது. சிதம்பரத்தின் குற்றச்சாட்டுகளை உடனடியாக எதிரொலித்தவர் குஜராத் மாநிலத்தின் முதல்வர் நரேந்திரமோடி. காவி பயங்கரவாதம் என்ற சொல்லை பயன்படுத்துவதன் மூலம் இந்தியாவின் பண்பாட்டையே மத்திய அரசு அசிங்கபடுத்திவிட்டது என்றும், பயங்கரவாதத்திற்கு எந்த வண்ணமும் கிடையாது என்றும், வாக்கு வங்கிகளை அடைவதற்காக காவியுடன் பயங்கரவாதத்தை இணைத்து பேசியதாகவும், இந்திய தேசிய கொடியில் இருக்கின்ற வண்ணங்களில் ஒன்று காவி நிறம் என்றும், அதுவே இந்தியாவிலிருக்கும் துறவிகளும், இந்து கோயில்களும் பயன்படுத்துகின்ற வண்ணம் என்றும் கூறி ஒரு பெரும் பிரச்சனையை மோடி உருவாக்கிவிட்டார். அதற்காக பிரதமரிடமிருந்து மன்னிப்பும் கோரினார். அதேசமயம் பா.ஜ.க.வின் தேசிய உதவி தலைவர் கல்ராஜ்மிஷ்ரா, சிதம்பரத்தை குற்றம்சாட்டினார். இந்திய பண்பாட்டையும் இழிவுபடுத்தியதாக அவரும் கோரினார். மூஸ்லீம்களை தங்கள் பக்கம் இழுக்க சிதம்பரம், காவி பயங்கரவாதம் பற்றி பேசியதாக அவர் குற்றம்சாட்டினார். அதே சமயம் ராஷ்டிரிய ஜனதா தளமும், லோக் ஜனசக்தி கட்சியும், ஆர்.எஸ்.எஸ்.சை தடைசெய்ய வேண்டும் என்று கோரினர். ஜம்முகாஷ்மீர் பகுதிக்கு சுயாட்சி கொடுப்பது என்ற மத்திய அரசின் அணுகுமுறையையும், பா.ஜ.க. குறை கூறியது. தங்கள் அடிமடியில் கைவைக்கும் போது, பா.ஜ.க. இந்த கண்டுபிடிப்பை கூறுகிறது. அதாவது பயங்கரவாதத்திற்கு மதம் கிடையாது என்பது தான் அந்த கண்டுபிடிப்பு. நேற்றுவரை இஸ்லாமிய பயங்கரவாதம் என்று, அமெரிக்கா தொடங்கி, பா.ஜ.க. வரை கூறிவந்த முத்திரைக் குத்தல் இப்போது தங்களையே தாக்குவதால், அறிவு வந்திருக்கிறது போலும். அதேபோல சிவப்பு பயங்கரவாதம் என்று வண்ண முத்திரைக் குத்துவதில், இவர்கள் யாருமே சளைத்தவர்கள் அல்ல என்பதும் கவனிக்கப்படவேண்டும். 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி நடத்தப்பட்ட மாலேகான் குண்டுவெடிப்பு, இந்துத்துவா பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தியது. மத்திய அரசின் அமைச்சரவை செயலாளராக இருந்த பி.ராமன், அப்போதே மேற்கண்ட மாலேகான் குண்டுவெடிப்பில் சில இந்துக்களின் தொடர்பை சந்தேகித்து எழுதியிருந்தார். ஒவ்வொரு குண்டுவெடிப்பையும் பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்இதெய்பா விற்கும், வங்காள தேசத்திலுள்ள ஹுஜி அமைப்பிற்கும் தொடர்புபடுத்தி பார்க்க கூடாது என்று அப்போதே எழுதியிருந்தார். இந்துதுவா சக்திகள் அப்பாவி இந்திய மூஸ்லீம்களை தாக்குவதற்காக முயலலாம் என்றும், ராணுவத்தில் உள்ள சில இந்துத்துவா சக்திகள் அவ்வாறு ஈடுபடலாம் என்றும், அவர் குறிப்பிட்டிருந்தார். பாகிஸ்தானுக்கு எதிராக பதிளடிகொடுக்க, நம் நாட்டு மூஸ்லீம்களை தாக்குவது என்பதை நமது நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் மட்டத்திலேயே ஆதரிப்போரும் உண்டு என்பது பி.ராமனின் கருத்து. ஐதரபாத்தில் உள்ள மெகா மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலும், சம்ஜோதா விரைவு ரயில்வண்டியில் நடத்தப்பட்ட தாக்குதலும், மாலேகான் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட இந்துத்துவாவாதிகள் என்று இந்திய புலனாய்வுத் துறை கண்டுபிடித்தது. ஆனால் அவர்களை காப்பாற்ற, மேற்கண்ட தாக்குதல்கள் பாகிஸ்தானில் உள்ள ஜிகாதி அமைப்பினரால் நடத்தப்பட்டதாக அமெரிக்க புலனாய்வுத்துறை ஏன் கூறுகிறது என்பது கண்காணிக்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட ஒரு சிக்கலான விஷயத்தை, மேலும் சிக்கலாக்குவதற்கும், வாக்கு வங்கிகளை உருவாக்குவதற்கும், உரிமை போராட்டங்களை திசை திருப்புவதற்கும், ஆள்வோர் செயல் தந்திரங்களாக பயன்படுத்துகிறார்களா என்று மக்கள் மன்றம் தான் முடிவு செய்யவேண்டும்.