Friday, August 27, 2010

ராகுல் காந்தியின் புதிய வேடம்

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் ராகுல் காந்தி திடீரென ஒரிசா மாநிலம் நியாம்கிரி மலைகளுக்கு பயணம் செய்துள்ளார். அங்கேதான் ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா நிறுவனம், பாக்ஸைட் சுரங்கம் தோண்டுவதற்கான முதல்கட்ட அனுமதியை பெற்று, அந்த மலைத் தொடரை அழித்து வந்தது. அதன்மூலம் பல்லாயிரக்கணக்கான பழம்குடியினர் தங்கள் பாரம்பரிய மலையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். வெளியேற்றப் பட்டவர்களில் மிகச் சிலருக்கு குடியிருப்புகள் அங்கேயே கட்டிக் கொடுக்கப்பட்டது. ஆனால், அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கான எந்தவொரு வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பதற்றத்தில் இருக்கின்றனர். நியாம்கிரி மலைத் தொடரை தங்களுடைய கடவுளாக அந்த பழங்குடியினர் பூஜை செய்து வருகின்றனர். தங்கள் கடவுளையே வயிற்றில் குத்தி, உடைக்கிறார்களே என்று, வேதாந்தா நிறுவனம் மீது ஆத்திரம் கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட வேதாந்தாவிற்கு, சென்றவாரம் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனஇலகா அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், பாக்ஸைட் சுரங்கம் தோண்டுவதற்கும், அலுமினியம் சுத்திகரிப்பு ஆலையை நடத்துவற்கும் கொடுக்கப்பட வேண்டிய சுற்றுச்சூழல் அனுமதியை மறுத்து அறிவித்தார். அதுவே, நாடு தழுவிய விவாதமாக மாறியது.நியாம்கிரி மலைத் தொடர் பகுதியில் உள்ள பழங்குடி மக்கள், தவிர்க்க முடியாமல் தங்கள் பாதுகாப்பிற்கு மாவோயிஸ்டுகளை நாடி சென்றிருந்தனர். இதை, அறிந்த மத்திய அரசின் தந்திரமாக, பழங்குடி மக்களை தங்கள் பக்கம் இழுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு இருந்தது. இத்தகைய சூழலில் தான், ராகுல்காந்தி தாடி வைத்த புதிய தோற்றத்துடன், நியாம்கிரி மலைகளுக்கு பயணம் செய்துள்ளார். மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு சுரங்கம் மற்றும் சுத்தகரிப்பு ஆலை அனுமதி மறுப்பை அறிவித்து இரண்டே நாட்களில், ராகுல் காந்தியும் பயணம் அந்த மலையை நோக்கி நடத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை, புதிய அவதாரத்துடன் ராகுல்காந்தி திறந்து வைத்துள்ளார் என்று ஒரு ஆங்கில ஏடு எழுதியுள்ளது.2004ம் ஆண்டு புதிய ஆட்சியை ஐ.மு.கூ. தொடங்கியபோது, ராகுல் காந்தி டெல்லியில் நமது ஆட்களின் ஆட்சி இனி நடைபெறும் என்று கூறினார். அதை இப்போது செய்துள்ளதாக கூறிக்கொள்கிறார். தலித்துகள் மற்றும் பின்தங்கிய மக்களின் குரல் கேட்கப்படுவதுதான் வளர்ச்சி என்று ராகுல் இப்போது புதிய விளக்கம் கூறியிருக்கிறார். லாஞ்சிகார் என்ற பகுதிக்கு ராகுல் சென்றுள்ளார். அங்கு வசிக்கும் டோங்கிரியா கோன்ட்ஸ் என்ற பழங்குடியின மக்கள் மத்தியில் பேசியிருக்கிறார்.உங்கள் சிப்பாயாக நான் வேலை செய்வேன் என்று அந்த பழங்குடியின மக்களிடம் ராகுல் கூறிய, தலைப்புச் செய்தியாக வெளிவருகிறது. ஒரிசா மாநிலத்தின் காலஹண்டி மாவட்டத்தின் ஜகன்நாத்பூர் என்ற ஊரில் நடந்த கூட்டத்தில் வந்திருந்த பழங்குடியின மக்களைப் பார்த்து, உங்களுக்காக டெல்லியில் இருந்து கொண்டு பணியாற்றுவேன் என்று கூறியிருக்கிறார். என் உதவி வேண்டும் போது அழையுங்கள் என்று புதிய அவதாரம் எடுத்த கடவுள் போல கூறியிருக்கிறார். வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக போராடிவரும் அந்த பழங்குடி மக்களின் போராட்டத்தின் வெற்றிதான், வேதாந்தா நிறுவனத்திற்கான அனுமதி மறுக்கப்பட்டதும் என்று பழங்குடி மக்களின் பாராட்டியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அங்கே சென்றபோது, அவர்களுக்காக போராடுவதாக தான் கூறியுள்ளதை நினைவுபடுத்தியுள்ளார். அந்த வட்டாரத்தில் பாரம்பரியமாக, மலைகளின் இயற்கை சூழலை சார்ந்து வாழ்ந்து வரும், டோங்கரியா கோண்ட்ஸ், மற்றும் குட்டியா கோண்ட்ஸ் என்ற இரண்டு பழங்குடியின மக்களது வாழ்நிலையை காப்பாற்ற தாங்கள் முயற்சியில் ஈடுபடுவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். ஏழைகளை விரட்டுவதன் மூலம் பழங்குடி மக்களின் வளர்ச்சியை எட்டமுடியாது என்றும், ஏழைமக்களிடம் காது கொடுத்து கேட்பதன் மூலம் தான், வளர்ச்சியை எட்டமுடியும் என்றும் புதிய வியாக்கியானம் பேசியிருக்கிறார். பழங்குடி மக்களின் குரல்கள் நசுக்கப்படுகின்ற என்றும், அவை டெல்லியில் கேட்கின்றன என்றும் கூறியுள்ளார்.கடந்த 10 ஆண்டுகளாக அந்த வட்டாரத்தின் பழங்குடியின மக்களின் வாக்கு வங்கி காங்கிரஸ் கரங்களிலிருந்து மாறி, பாரதீய ஜனதா தளம் என்ற நவீன் பட்நாயக் கட்சிக்கு மாறியிருக்கிறது. அந்த பழங்குடியின மக்களின் வாக்கு வங்கியை, இளைஞர் ராகுல் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு கொண்டு வருவதற்காக இவ்வாறு அரும்பாடு படுகிறார் என்று கூறப்படுகிறது.நியாம்கிரி மலை வட்டாரத்தில் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்கள் கடந்த 5 ஆண்டுகளாக வேதாந்தா நிறுவனத்தை எதிர்த்து போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வேதாந்தா நிறுவனம் ஒரிசா மாநிலத்தில் அந்த அலுமினியம் சுத்திகரிப்பு ஆலைக்காக 540 லட்சம் டாலர்களை மூலதனமாக போட்டுள்ளது. அதனால் தனது திட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளும் எண்ணமே அந்த ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு இல்லை. ஒரிசா அரசாங்கம் அவர்களுக்கு மாற்றுயிடம் ஏற்பாடு செய்யுமா? என்ற கேள்வியும் நிற்கிறது.ஸ்டெர்லைட்டின் நிறுவனமான வேதாந்தா ஒரு கார்ப்பரேட் என்று அழைக்கப்படும் பெரும் வணிகக் குழுமம். அது இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. ஒரிசா மாநிலத்தில் வன பாதுகாப்பு சட்டம், வன உரிமை சட்டம், கிராம சபை விதிகள் ஆகியவற்றை உடைத்து தன்னுடைய சுரங்கத்தையும், ஆலைப் பணியையும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. முதல் கட்டத்தில் அதற்கு கொடுத்த சுற்றுச்சூழல் அனுமதி, முந்தைய ஐ.மு.கூ. ஆட்சியில்தான் மத்திய சுற்றுசூழல் மற்றும் வன இலாகாவால் கொடுக்கப் பட்டுள்ளது. ஆகவே, அனுமதி கொடுத்து ஆதிவாசிகளை அழிக்க வைத்த அதே காங்கிரஸ் கட்சி, இப்போது எதற்காக இரண்டாவது கட்டத்தில் அனுமதி மறுக்கிறது? கார்ப்பரேட் என்று அழைக்கப்படும் பெருவணிக குழுமங்களின் நலன்களுக்காக நாட்டை ஆண்டு வரும் காங்கிரஸ் கட்சி, இந்த குறிப்பிட்ட வேதாந்தா நிறுவனத்தின் செயல்பாட்டை மட்டும் ஏன் தடுக்கிறது? நாடெங்கிலும் வெளிநாட்டு பெருவணிகக் குழுமங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை, வரிசையாக கையெழுத்திட்ட காங்கிரஸ் அரசாங்கம், இந்த இடத்தில் மட்டும் பெருவணிகக் குழுமமான ஸ்டெர்லைட்டின் வேதாந்தாவை எதிர்ப்பதற்கு ஆதரவு கொடுப்பது ஏன்?மேற்கண்ட கேள்விகள் எழும்போது, அரசியல் தளத்தில் அதற்கான பதில்கள் எல்லாம் வாக்கு வங்கி அரசியல் என்பதாக மட்டும் புரியப்படுகிறது. அதாவது காங்கிரஸ் கட்சிக்கு எதிரான நவீன் பட்நாயக் கட்சியான பாரதிய ஜனதா தளத்தை எதிர்ப்பதற்காக, ஒரிசா மாநிலத்தில் இந்த அரசியல் நாடகம் நடத்தப்படுகிறது என்று கூறுகிறார்கள். அதே போல, சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளுகின்ற பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக, காங்கிரஸ் கட்சி இதே போன்ற பழங்குடி மக்களின் நலன் பற்றி பேசவும் தயாராக இருக்கிறது என்கிறார்கள். இதே நிலைமைதான் பா.ஜ.க. தளத்தில் கூட்டு சேர்ந்து வெற்றி பெற்று வரும், சிபுசோரனின் ஜார்க்கண்ட் விடுதலை முண்ணனியையும் எதிர்த்து, காங்கிரஸ் கட்சி ஜார்க்கண்ட் மாநிலத்திலும் பழங்குடி மக்கள் நலன் பற்றி அக்கறை காட்டும் என்றும் விளக்குகிறார்கள். இதே நிலைப்பாட்டில் தான், மேற்கு வங்கத்தில் இடது சாரிகளின் ஆட்சிக்கெதிராக, மம்தா கட்சியின் ஆதரவுடன் பழங்குடி மக்கள் பாதுகாப்பு பற்றி காங்கிரஸ் கட்சி பேசத் தயாராக இருக்கிறது என்பதாகவும் கூறப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரிசா மாநிலத்தில் காசியாபூரில், டாடா ஆலைக்கெதிராக திரண்ட ஆதிவாசிகளை சுட்டுக் கொன்ற போது, 8 லட்சம் ஆதிவாசிகள் பேரணியாக புறப்பட்டார்கள். அப்போது அங்கே நேரில் சென்று துப்பாக்கி சூட்டில் இறந்த பழங்குடி மக்களுக்கு இழப்பீடு தொகையை சோனியா காந்தி வழங்கினார். இவ்வாறாக இந்தியாவின் இதயப் பகுதியில் வாழ்ந்து பழங்குடி மக்கள் பிரச்சனையில், மாற்றுக் கட்சி ஆட்சிகளுக்கெதிராக காங்கிரஸ் கட்சி காய் நகர்த்தி வருகிறது.அப்படியானால், பச்சை வேட்டை என்ற பெயரில் வெள்ளை உடையணிந்த உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ஏன் மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்குவேன் என்ற பெயரில், பழங்குடி மக்களை வேட்டையாடி வருகிறார்? அத்தகைய பச்சை வேட்டைக்கும், இப்போது ராகுல் காந்தி மூலம் பழங்குடி மக்களுக்கு கொடுக்கப்படும் இனிப்பிற்கும் என்ன முரண்பாடு? ஒன்று கேரட் கொடுப்பது என்றும், மற்றது குச்சியால் அடிப்பது என்றும் எடுத்துக் கொள்ளலாமா? அரசு இயந்திரத்தை பாதுகாக்கும் எண்ணத்தில், சிதம்பரம் தூண்டிவிடும் பச்சை வேட்டை, தேர்தல் அரசியலில் வெற்றி பெற ராகுல் கொடுக்கின்ற மிட்டாய்களுக்கு எதிரானதா?இந்திரா காந்தி ஆட்சியில், பிருந்தன்வாலே பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியால் ஒரு கட்டம் வளர்க்கப்பட்டு, பிறகு ராணுவத்தின் நீல நட்சத்திர நடவடிக்கையால் அழிக்கப்பட வில்லையா? இந்திரா காலத்தில் புலிகள் உள்பட, ஈழப் போராளிகளுக்கு பயிற்சியும், ஆயுதமும் கொடுத்து விட்டு, ராஜிவ் காலத்தில் இந்திய அமைதிப் படையை அனுப்பி அவர்களை கொன்று விட்டு, சோனியா காலத்தில் ஈழத் தமிழ் இனத்தையே அழிப்பதற்கும் துணியவில்லையா? ஆகவே, இப்போது, ராகுல் காந்தி காட்டுகின்ற பச்சைக் கொடி என்பது அடிப்படையில் பழங்குடி மக்களுடைய நலன்களை பாதுகாக்க அல்ல. மாறாக பன்னாட்டு மூலதன நிறுவனங்களையும், பெருவணிகக் குழுமங்களையும் பாதுகாக்க புதிய, புதிய வேடங்களை போட்டுக் கொண்டு வருகிறார்கள். இத்தகைய புரிதல் வரலாற்றை உற்று நோக்குவோருக்கு வரத்தானே செய்யும்?