Wednesday, August 25, 2010

அந்நியர், தனியார் கைகளில் தேசப்பாதுகாப்பு போய்விடுமா?

ஆகஸ்ட் 25ம் நாள் நாடாளுமன்றத்தின் மக்களவையில், அணுஉலை விபத்து இழப்பீடு சட்ட முன்வரைவு விவாதத்திற்காக வைக்கப்பட்டது. எத்தகைய விவாதம் எழுந்தாலும், எப்படியாவது முன்வைக்கப்பட்ட சட்ட முன்வரைவை நிறைவேற்றி விட வேண்டும் என்ற துடிப்பு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியாளர்களிடம் தென்படுகிறது. அதற்காக ஒருபுறத்தில் பிரச்சனைகளை கிளப்பும் பா.ஜ.க.வுடனும், மறுபுறத்தில் இடதுசாரிகளுடனும் தனிநபர் பேச்சுவார்த்தைகளை ஆட்சியாளர்கள் ஏற்கனவே தொடங்கி விட்டார்கள். மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சீத்தாராம் யெச்சுரியுடனும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் து.ராஜாவுடனும், தலைமை அமைச்சர் அலுவலகத்திலிருக்கும் மாநிலங்களவை அமைச்சர் பிருத்திவிராஜ் சவான், அரசாங்க அணுகுமுறை பற்றிய பேச்சுவார்த்தையை நடத்தினார். அணுஉலைகளுக்கு எரிபொருட்களை விற்பனைச் செய்கின்ற அந்நிய விநியோகத்தர்கள் நலன்களையும், உள்நாட்டு தனியார் சக்திகளின் நலன்களையும் பாதுகாப்பதற்காக, ஏற்கனவே எழுதப்பட்ட வரைவு நகலை நீர்த்துப்போக வைக்கும் திருத்தங்களை ஆட்சியாளர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது இடதுசாரிகளின் தொடர் குற்றச்சாட்டாக இருக்கிறது. இழப்பீடு தொகைக்கான எல்லையை ரூ.500 கோடியிலிருந்து, ரூ.1500 கோடிக்கு உயர்த்தி இருக்கிறோம் என்ற செய்தியையே தொடர்ந்து பிருத்திவிராஜ் சவான் கூறி வந்தார். ஆனால் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவரான யெச்சுரியின் வாதப்படி, ரூ.1500 கோடியிலிருந்து இழப்பீடு தொகை எல்லையை, ரூ.10,000 கோடிக்கு உயர்த்த வேண்டும் என்ற தங்களது ஆலோசனையை ஆட்சியாளர்கள் கேட்கவில்லை என்பதே. இழப்பீடு தொகையின் மீதான எண்ணிக்கை வாதம் ஒரு பெரும் தடங்கலாக ஆள்வோர் நினைக்கவில்லை.
அதேசமயம் திருத்தம் 17ல் உள்ள ஆ பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள, உள்நோக்கத்துடன் என்ற சொல்லாடல் நீக்கப்பட வேண்டும் என்பதாக இடதுசாரிகள் வைக்கின்ற வாதத்தை ஆட்சியாளர்கள் செவிமடுக்க தயாராயிருக்கிறார்கள். அதே பிரச்சனையை எழுப்பியுள்ள பா.ஜ.க.வின் கருத்தையும் ஏற்கத் தயார் என அறிவித்தார்கள். தனியார் துறைக்கு அணுஉலைகளை தாரை வார்ப்பதற்காக கடைசி மூன்று சேர்க்கைகளை, கடைசி நேரத்தில் அதாவது ஆகஸ்ட் 20ம் நாள் தலைமை அமைச்சரும், மத்திய அமைச்சகமும் இணைத்து விட்டன என்ற பிரச்சனை இடதுசாரிகளால் ஒப்புக்கொள்ளப்படவில்லை. அதாவது அரசாங்கத்தாலோ, அரசாங்கத்தின் நிறுவனங்களாலோ இயக்கப்படாமல், இயங்கி வரும் அணுஉலைகளில் விபத்து ஏற்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுடைய தேவைகளுக்காக இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் அறிவிப்பாணை கொடுக்குமானால், அத்தகைய நிகழ்வுகளிலும் முழு இழப்பீடு தொகை வழங்கப்படும் என்ற சேர்க்கையைத் தான் இடதுசாரிகள் அவ்வாறு கேள்விக் கேட்கிறார்கள். அதற்கு பதிலளித்த பிருத்திவிராஜ் சவான், அத்தகைய விளக்கம் தவறானது என்று மட்டும் கூறி தப்புவதற்கு முயன்றிருக்கிறார்.
என்.பி.சி.ஐ. என்ற இந்திய அணுசக்தி வாரியம், அனைத்து நாட்டு ஆய்வுக்குள் அடங்காது என்பதால், அரசாங்கமும் அதனால் ஏற்படும் பாதிப்பிற்கு இழப்பீடு தொகையை எழுதவில்லை என்றால், அத்தகைய அணுஉலைகளுக்கு பரிசோதனைக்கான காப்பீடு செய்யப்பட வேண்டும் என்பதையும் கூட இடதுசாரிகள் வலியுறுத்துகிறார்கள். அதேசமயம் சி.எஸ்.சி. என்று அழைக்கப்படும் துணை இழப்பீடு ஒப்பந்தத்தில், இந்திய அரசு இணையக் கூடாது என்ற கருத்தை இ.க.க. தலைவர் து.ராஜா, வலியுறுத்தியுள்ளார்.
தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வடிவத்திலேயே இந்த இழப்பீடு சட்டமுன்வரைவை ஏற்க முடியாது என்று இடதுசாரிகள் தெரிவித்தனர். அதேசமயம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிறகு அதன் மீது கருத்துக்கள் கூறுவதாகவும் கூறினர். அதேபோல தெலுங்கு தேசம் கட்சியும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர். தேவையான மாற்றங்களை முன்வைக்கப்பட்ட மசோதாவில் கொண்டு வரவில்லை என்றால் தாங்கள் அதை ஏற்கமாட்டோம் என்று தெலுங்கு தேசக் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் அறிவித்தார்.
திடீரென இந்தியாவிலிருக்கும் அணுசக்தி தொழிலதிபர்களிடமிருந்தும் மேற்கண்ட மசோதாவிற்கு எதிர்ப்புக் கிளம்பியது. தலைமை அமைச்சருக்கு எழுதிய ஒரு கடிதத்தில், இந்திய வணிகம் மற்றும் தொழிற்சாலைகளின் கூட்டமைப்பு இதுபற்றி ஒரு கடிதத்தை, அதன் தலைவர் ராஜன் பார்த்தி மிட்டல் பெயரில் அனுப்பியது. அதில் 17வது திருத்தத்திலுள்ள ஆ பிரிவில் பிரச்சனையைக் கிளப்பியிருந்தார்கள். அதேபோல இந்திய தொழிற்சாலைகளின் கூட்டமைப்பின் பொது இயக்குநர் சந்திரஜித் பேனர்ஜியும், அதே போன்ற பிரச்சனையை அமைச்சர் பிருத்திவிராஜ் சவானுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார். மிட்டல் தனது கடிதத்தில் அணுஉலைக்கு எரிபொருள் விநியோகிக்கும் யாரையும் விபத்து இழப்பீட்டிற்கு பொறுப்பெடுக்க வைத்தால், அது குறிப்பாக எதிர்காலத்தில் இந்திய தொழிலதிபர்களை பாதிக்கும் என்று எதிர்ச்சால் ஒன்றை ஓட்டியுள்ளார். இப்போது இந்தியாவிற்குள் இருக்கும் 17 அணுஉலை நிறுவனங்களை ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் குறைபாட்டிற்காக விநியோகத்தரிடம் இழப்பீடு பெறுவதை, அனைத்து நாட்டளவில் ஏற்றுக் கொண்டபடி, விநியோகித்த கருவியை அளித்த 12 மாதங்களிலிருந்து, 24 மாதங்களுக்குள் என்ற வரையறையை தாண்டினால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அணுஉலை தொழில்நுட்பங்களை தொடர்ந்து பெறமுடியாது என்ற மிரட்டல் அம்சத்தையும் தனது கடிதத்தில் மிட்டல் கூறியுள்ளார்.
அதேசமயம் 17வது திருத்தத்தில் அமுலாக்குவதற்கான சாத்தியப்பாடோ, நியாயமோ இல்லை என்கிறார் அவர். விநியோகத்தர் அல்லது சேவை செய்வோர் தங்கள் விநியோகக் காலம் தாண்டி பொறுப்பெடுக்க வைத்தால், அதாவது திட்டத்தின் 60 வயதுடன் மேலும் 20 ஆண்டுகளைச் சேர்த்து காலம் நீட்டிக்கப்படுமானால், எதிர்காலத்தில் தங்களது பங்களிப்பு இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார். விநியோகத்தர் பட்டியலில், கருவிகள் கொடுத்தோர், சேவை ஈடுபடுவோர் என்ற வகையில் சிறிய மற்றும் நடுத்தர வணிகர்களையும் இணைத்து 300 நிறுவனங்களை இழப்பீடு பொறுப்பெடுக்கும் பட்டியலில் வருமானால், அது நடைமுறை சாத்தியமல்ல என்றும் தனியார் அணுஉலை எரிபொருள் வர்த்தகர்கள் சார்பாக தெரிவித்துள்ளார். அதற்காக 17வது திருத்தத்திலுள்ள ஆ பிரிவையே நீக்க வேண்டும் என்பது அவரது வாதம். காப்பீடு திட்டம் ஒன்று இல்லாமல், வெளிநாட்டு விநியோகத்தர்களும் பங்குக் கொள்ளமாட்டார்கள் என்பது அவரது வாதம்.
பா.ஜ.க. உதவியில்லாமல் மேற்கண்ட சட்டமுன்வரைவை, சட்டமாக்க முடியாது என்பதில் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ. ஆட்சியாளர்கள் உறுதியாக இருக்கிறார்கள். இந்த சட்டத்தால் அதிகமான நலனை பெறுபவர் என்று வருணிக்கப்படும் அமெரிக்காவும் இந்த இரு இந்திய பெரும் கட்சிகளை நம்பியே உள்ளது. இந்த நேரத்தில் பா.ஜ.க.வின் ஜஸ்வந்த் சிங், கொண்டு வந்த திருத்தங்களை ஏற்க ஆட்சியாளர்கள் சம்மதித்தனர். ஒபாமா வருகைக்கு முன்பு அவசரமாக இந்த மசோதாவை கொண்டு வந்ததாக குற்றம்சாட்டிய பா.ஜ.க., அமெரிக்காவை திருப்திப்படுத்த இதை கொண்டுவராதீர்கள் என்று கூறி, ஒரு போலியான அமெரிக்க எதிர்ப்பை மக்களவையில் பதிவு செய்தது. அதேசமயம் தங்கள் திருத்தங்கள் ஏற்கப்பட்டால், சட்டமாவதை ஆதரிப்போம் என்ற உள்கருத்தையும் கூறிவிட்டது.
இவ்வாறு ஒரு சட்டம் இந்திய மக்களின் மீது குறிப்பாக வரிசெலுத்துவோர் மீது ஏற்றப்படுகிறது. அதேசமயம் அந்நிய நாட்டு அணு எரிபொருள் முதலாளிகள் மற்றும் இந்திய நாட்டு முதலாளிகள் ஆகியோரை குளிர்வித்து, நாட்டின் பாதுகாப்பு அம்சத்தையே தனியார் கைகளில் கொடுப்பதற்கு வழிவகை செய்கிறது. இத்தகைய செய்திகளை நாட்டுப்பற்றுடன் ஊடகங்களும், பொதுமக்களும் புரிந்துக் கொள்ளப்போவது எந்த நாள் என்பது தான் இப்போது தொடங்கியிருக்கும் கணக்கு.