Monday, August 23, 2010

அமெரிக்க சரணடைவை விமர்சிக்கும் விஞ்ஞானிகள்.




நாடாளுமன்றத்தின் முன்னால் வைக்கப்பட்டுள்ள, அணுஉலை விபத்து இழப்பீடு மசோதா2010, நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் பெரும் சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. அமெரிக்கஇந்திய அணுசக்தி ஒப்பந்தம் எந்த அளவிற்கு இந்தியாவின் தலைமை அமைச்சரை அமெரிக்க நலன்விரும்பி என்று அம்பலப்படுத்தியதோ, அதைவிட அதிகமான அளவில் மேற்கண்ட மசோதா அவரது நாட்டுப்பற்றையும், அவர் தலையிலான மத்திய அரசின் தன்மையையும் கேள்விக் குறியாக்கியுள்ளது. அமெரிக்க நட்பு சக்தியான தலைமை அமைச்சர் ஆகஸ்ட் 20ம் நாள் அந்த இழப்பீடு மசோதாவிற்கு ஒப்புதல் கொடுப்பதற்காக, மத்திய அமைச்சரவை கூட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார் என்பதாக ஊடகங்கள் சித்தரிக்கத் தொடங்கியுள்ளன. 2008ம் ஆண்டு செப்டம்பர் 10ம் நாள் இந்திய நாடாளுமன்றத்தை கலந்துக் கொள்ளாமல், அமெரிக்காவிடம் இருந்து 10,000 மெகா வாட் மதிப்புள்ள லேசான நீர் உலைகளை இந்தியா விலைக்கு வாங்கிக் கொள்ளும் என்று, அமெரிக்க அரசுத் துறைச்செயலாளரிடம் இந்திய வெளிவிவகாரத் துறை செயலாளர் மூலம் ஒரு கடிதத்தை, மன்மோகன் சிங் வாக்குறுதியாகக் கொடுத்தார் என்று குற்றம் சாட்டப்படுகிறது. புதிதாக வரவிருக்கின்ற சட்டம், விலை அதிகம் உள்ள அதே நேரத்தில் சோதிக்கப்படாத லேசான நீர் உலைகளை பெரும் விலைக்கு இந்தியாவிற்கு, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாட்டு அணுசக்தி தொழிற்சாலைகள் விற்பதற்கு வழிவகை செய்யும் என்பதான குற்றச் சாட்டு எழுந்துள்ளது. நமது தலைமை அமைச்சர் மன்மோகன் சிங், அமெரிக்காவுடன் நிறுத்திக் கொள்ளாமல், பிரான்ஸ் நாட்டிற்கும் இந்திய நாட்டின் மக்களை அடகுவைக்க வாக்குறுதிக் கொடுத்துள்ளார் என்பதே அந்த குற்றச் சாட்டு. பிரான்ஸ் நாட்டு அதிபர் நிகோலஸ் சர்கோசியிடம், மன்மோகன் அதுபற்றி வாக்குறுதி கொடுத்துள்ளார். அணுசக்தி விநியோகத்தர்கள் குழுவின் நிபந்தனைகளை இந்திய அரசிற்கு இணங்குமாறு கொண்டு வர உதவிச் செய்ததற்கு பிரதிபலனாக, இந்திய அரசு பிரான்ஸ் நாட்டு அணுஉலைகளை விலைக்கு வாங்கிக் கொள்ளும் என்பதாக அந்த வாக்குறுதி விளக்கப்படுகிறது. அணுஉலையில் விபத்து ஏற்படும் போது, அதற்கான பொறுப்பை எந்த வகையிலும் வெளிநாட்டு எரிபொருள் விநியோகத்தர் மீது சுமத்தாத ஒரு இழப்பீடு சட்டத்தை இந்தியா உருவாக்காமல், வெளிநாடுகள் அணுசக்தி வணிகத்தில் இந்தியாவுடன் ஈடுபட தயங்குவார்கள் என்பது தான் நமது தலைமை அமைச்சரின் வாதமாகயிருக்கிறது. ஏற்கனவே சர்ச்சைக்குரிய இழப்பீடு மசோதாவில் இருக்கின்ற சட்டத் திருத்தம் 17ல் உள்ள “அ”, “ஆ”, “இ” பிரிவுகளில் உள்ள கருத்துக்களை இணைத்தும், குழப்பியும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நிலைக்குழு செய்த தந்திரங்கள் அம்பலப்படுத்தப்பட்டன. இப்போது இதேபோல மத்திய அமைச்சரவை கடைசி நேரத்தில் சேர்த்திருக்க கூடிய, திருத்தப்பட்ட பிரிவுகள் பிரச்சனையை உருவாக்கியுள்ளன. அதாவது பிரிவு 2 (1) என்பதில், ஒரு அணுஉலை நிறுவனர் என்ற இயக்குனர் பொறுப்பில் மத்திய அரசோ அல்லது எந்த அதிகாரமோ அல்லது அதனால் நிறுவப்பட்ட கார்ப்பரேஷனோ அல்லது அரசாங்க கம்பெனியோ, யாருக்கு 1962ன் சட்டமான அணுசக்தி சட்டம், அந்த அணுஉலையை இயக்குவதற்காக ஒப்புதல் கொடுத்துள்ளதோ, என்பதாக விளக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மத்திய அமைச்சரவை 3 (அ) என்று ஒரு பிரிவை புதிதாக சேர்த்துள்ளது. அதில் இந்த சட்டம் மத்திய அரசு செந்தமாகவோ அல்லது அதன் கட்டுப்பாட்டுக்கு கீழோ, தன்னாலோ அல்லது ஒரு அதிகாரத்தாலோ அல்லது தான் நிறுவிய கார்ப்பரேஷனாலோ, அல்லது அரசாங்க கம்பெனியாலோ நிறுவப்பட்ட அணுஉலைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் அரசாங்க கம்பெனி என்றால் அதில் மத்திய அரசின் பங்குத் தொகையாக 51%க்கு குறைவில்லாமல் இருக்க வேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது. கூடுதலாக மத்திய அமைச்சரவை பிரிவு 7 (1)ன் கடைசியில், மத்திய அரசாங்கம் தன்னால் இயக்கப்படாத ஒரு அணுசக்தி நிலையத்திற்கு முழுமையான இழப்பீட்டு தொகையை ஒரு அறிவிப்பாணை மூலம், பொது நலனுக்கு தேவை என்று அது கருதும் பட்சத்தில் கொடுக்கலாம் என்று எழுதியுள்ளது. மேற்கண்ட பிரிவுகள் 2 (1), 3 (அ) மற்றும் 7 (1)ல் உள்ள கூடுதல் விளக்கம் ஆகியவை கடைசி நேரத்தில் தலைமை அமைச்சர் மற்றும் மத்திய அமைச்சரவை மட்டத்தில் உருவாக்கப்பட்ட ஒன்றே என்பதாக, இந்திய அரசாங்கத்தின் அணுசக்தி ஒழுங்குப்படுத்தல் வாரியத்தின் முன்னாள் தலைவர் ஏ.கோபாலகிருஷ்ணன் எழுதுகிறார். அதாவது மேற்கண்ட புதிய சேர்த்தல்கள் எல்லாமே தனியார் துறையின் கட்டுப்பாட்டில், தனியார் துறையால் ஒரு கட்டத்திற்கு பிறகு சொந்தமாக நிறுவப்படும் அணுசக்தி உலைகளை மனதில் வைத்து எழுதப்பட்டது என்பது தெரிகிறது. 1962ல் அணுசக்தி சட்டத்தில் தங்கள் விரும்பக்கூடிய திருத்தங்களை கொண்டு வந்த பிறகு, அப்படிப்பட்ட ஒரு கட்டத்தை உருவாக்குவார்கள் என்பதும் புரிகிறது. இது பற்றிய விழிப்புணர்வு இதுவரை எழுப்பப்படாதது விந்தையாகயிருக்கிறது. விஞ்ஞானி கோபாலகிருஷ்ணனின் விளக்கங்களும் கேள்விகளும் புதிய செய்திகளை, நடக்கின்ற சர்ச்சையில் சேர்த்துள்ளன. அமெரிக்காவுடனும், பிரான்சுடனும், மற்ற அணுசக்தி எரிபொருள் வழங்கும் நாடுகளுடனும், இந்திய அரசு இன்றைக்கு செய்து வரும் ஒப்பந்தங்களின் அடிப்படையில், ஆக்கத்திற்கான அணுசக்தி உற்பத்திக்கு அத்தகைய அந்நிய நாடுகளிலிருந்து யுரேனியத்தை பெருமளவில் வாங்கவிருக்கிறது. அதன் மூலம் இந்தியாவிற்கு தேவையான மின்சாரத்தை 2035ம் ஆண்டில் 40,000 மெகா வாட் வரை பெற்றுவிடலாம் என்று மத்திய அரசு கூறுகிறது. அதற்காக எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு பெரும் தொகையை இந்திய மக்களின் வரிப் பணத்திலிருந்து செலவழிக்க திட்டமிடுகிறது. ஆனால் அணு விஞ்ஞானி கோபாலகிருஷ்ணனின் கூற்றுப்படி இந்தியா தோரியம் மூலம் அணுஉலைகளை உருவாக்கும் தொழில்நுட்பத்தில் உலக நாடுகளிலேயே முதல் நாடாக இருக்கிறது. 2040ம் ஆண்டிற்குள் தோரியம் அடிப்படையிலான அணுஉலைகளை முறையாக செயல்படுத்த வைக்க முடியும் என்கிறார் அவர். அதற்காக கேரளத்து கடற்கரையோரம் இருக்கின்ற தோரியம் கலந்த மணலை பயன்படுத்தலாம் என்கிறார். இன்னும் 10 ஆண்டுகளில் 1000 மெகா வாட் தருகின்ற கனநீர் உலைகளை இந்தியா உருவாக்கிவிட முடியும் என்றும் கூறியுள்ளார். 220 மெ.வா. உலைகளில் தொடங்கிய நாம் 700 மெ.வா. உலைகள் செய்ய வளர்ந்துள்ளோம். விரைவில் 1000 மெ.வா. உலைகளை உருவாக்க முடியும். இப்போது 1650 மெ.வா. பிரான்சு உலைகளை இறக்குமதிச் செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. இது தற்போது வளர்ந்து வரும் தோரியம் சார்ந்த இந்தியாவின் சொந்த உலைகளை வளர்ப்பதை உடைத்துவிடும். அதிக விலையுள்ள அமெரிக்க மற்றும் பிரான்சு உலைகளை இறக்குமதிச் செய்வதன் மூலம், இந்திய நாட்டு சொந்த தயாரிப்பு உலைகள் விரையமாகும். அமெரிக்க தயாரிப்பான ஏ பி 1000 போன்ற இன்னமும் உருவாக்கப்படாத, சோதிக்கப்படாத உலைகளை இந்தியா வாங்க முற்படுவது சரியல்ல. அவற்றை உருவாக்க அமெரிக்க தொழிற்சாலைகளுக்கும் காலம் அதிகம் பிடிக்கும். மேற்கண்ட விஞ்ஞானி கோபாலகிருஷ்ணனின் வாதங்களும், ஒரு செய்தியை உறுதிப்படுத்தியுள்ளன. அதாவது அணுசக்தியை ஆதரிக்கும் நாட்டுப்பற்றுக் கொண்ட இந்தியர்கள் கூட, மத்திய அமைச்சரவையின் அந்நிய சார்பு அணு விளைச்சலை ஏற்க மாட்டார்கள் என்பதே. இப்போது இந்திய ஆட்சியாளர்கள் யாருக்காக இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.