Sunday, August 22, 2010

அமெரிக்காவிற்கும், இந்திய மக்களுக்கும் இடையில் சிக்கிக் கொண்ட மன்மோகன் அரசு.

தடுக்கி, தடுக்கி விழுந்துக் கொண்டிருக்கிறது அணுஉலை விபத்து இழப்பீடு மசோதா 2010. நாடாளுமன்றத்தின் முன்னால், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் நிலைக்குழுவால் முன்வைக்கப்பட்ட, அந்த மசோதா ஒவ்வொரு நாளும் மாற்றங்களுக்கு உள்ளாகி, மாட்டிக்கொண்டு முழிக்கிறது. ஆப்பரேட்டர் என்று அழைக்கப்படுகின்ற இந்திய அரசின் நிறுவனம், ஒரு அணுஉலையில் விபத்து ஏற்படும் பட்சத்தில் அதன் பாதிப்புகளுக்கு முழுமையான இழப்பீட்டையும் தானே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதாக இந்த மசோதா முதலில் எழுதப்பட்டது அது வரி செலுத்தும் இந்திய மக்கள் மீதே சுமையை ஏற்படுத்தும் என்ற விமர்சனம் எழுந்தது. அதேபோல ஒவ்வொரு அணுஉலைக்கும் எரிபொருள் வழங்கும் வெளி நாட்டு தனியார் நிறுவனமோ, வெளிநாட்டு அரசாங்கமோ, நடக்கும் விபத்திற்கு தான் காரணமாக இருந்தாலும் கூட, தன் கையில் இருந்து இழப்பீடு தொகையை வழங்கவேண்டிய அவசியமில்லை என்ற பொருளில் அது எழுதப்பட்டிருந்தது. இவ்வாறு சப்ளையர் என்று சொல்லப்படும் எரிபொருள் விநியோகத்தர் அணுஉலை விபத்திற்கு காரணமாக இருந்துவிட்டு, இழப்பீடு தொகை பொறுப்பெடுப்பதிலிருந்து தப்பிச் செல்ல அனுமதிக்கக்கூடாது என்ற விமர்சனம் பெரிதாக எழுந்தது. அத்தகைய விமர்சனத்தை முறியடிக்க பா.ஜ.க. உடன் காங்கிரஸ் சமரசம் செய்து கொண்டது. நிலைக்குழு முன் வைத்த நகலில் 17வது திருத்தத்தில் இருந்த “அ” பிரிவிற்கும், “ஆ” பிரிவிற்கும் மத்தியில் ஒரு இணைப்பு, அண்டு என்ற ஆங்கிலச் சொல்லால் எழுதப்பட்டது விவாதமானது. அதை ஊடகங்கள் அம்பலப்படுத்தின. அதாவது இந்திய அரசின் நிறுவனமான அணுஉலை இயக்குநர், வெளிநாட்டு விநியோகத்தரிடம் இழப்பீடு கேட்கலாம் என்ற “ஆ” பிரிவில் உள்ள செய்தியை, “அ” பிரிவில் உள்ள “சம்மந்தப்பட்ட வெளிநாட்டு நிறுவனத்துடன் எழுத்துப் பூர்வமான ஒப்பந்தம் அணுஉலை இயக்குநரால் செய்யப்பட்டிருந்தால்” என்ற நிபந்தனைக்கு உள்ளடங்கி போகச் செய்துவிடும். ஆகவே வெளிநாட்டு விநியோகத்தரிடம் இழப்பீடு பெறுவது என்பது முடக்கப்பட்டுவிடும். மேற்கண்ட கருத்தை இரு பிரிவுகளையும் இணைக்கும் “அண்டு” கொடுக்கிறது என ஊடகங்கள் அம்பலப்படுத்த, அதையே பா.ஜ.க. வும் எதிரொலிக்க உடனடியாக அமைச்சரவை அந்த “அண்டு” என்ற சொல்லை நீக்கி, மசோதாவிற்கு ஒப்புதல் கொடுத்துவிட்டது. இந்த விவாதம் வந்த போது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மாநிலங்களவை அமைச்சர் பிருதிவிராஜ் சவான், இந்த மசோதா குறிப்பிட்ட நாட்டில் நலனுக்கான உருவாக்கப்பட்டது அல்ல என்று அமெரிக்க நலனைக் குறிப்பிட்டு கூறினார். “அண்டு” என்ற சொல்லை நீக்கிவிட்டதால், பழைய நிலைக்கு மசோதா வந்துவிட்டது என்றார். ஆனால் “அண்டு” என்ற சொல், நிலைக்குழுவில் இடதுசாரி உறுப்பினரால் மறுக்கப்பட்ட போது, அதை ஆதரித்து பா.ஜ.க. உட்பட நிலைக்குழு முழுமையும் ஏற்றுக்கொண்டது என்ற பழைய நிகழ்ச்சியை நாம் சௌகரியமாக மறந்துவிடலாம். ஆனால் அமெரிக்கா சென்ற போது மன்மோகன் கொடுத்த வாக்குறுதிப்படி, இந்தியா சி.எஸ்.சி. என்று அழைக்கப்படுகின்ற துணை இழப்பீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும். அந்த ஒப்பந்தம் எழுத்துப் பூர்வமான பரஸ்பர ஆவணத்தை அணுஉலை இயக்குநரும், வெளிநாட்டு விநியோகத்தரும் செய்து கொண்டால் மட்டுமே, விநியோகத்தர் பொறுப்பேற்க முடியும் என்று உள்ளது. அதையொட்டியே நிலைக்குழு தடுமாறியுள்ளது என்பது புரிகிறது. இப்போது புதிதாக இன்னொரு பிரச்சனை எழுந்துள்ளது. கடந்த சனிக் கிழமை 18 திருத்தங்களை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது. அதில் ஒன்று இழப்பீடு மசோதாவில், உள்நோக்கத்தோடு என்ற சொல்லை சேர்த்தது. அதாவது திருத்தம் 17ன் “ஆ” பிரிவையும், “இ” பிரிவையும் இணைத்து அதன் மூலம் “ஆ” பிரிவிலுள்ள வெளிநாட்டு விநியோகத்தரை பொறுப்பேர்க்க வைக்கும் விதத்தை இல்லாமல் செய்வது என்ற மற்றொரு பிரச்சனை எழுந்துள்ளது. அதாவது 17வது திருத்தத்தின்படி, அதன் 6வது அம்சத்தில் கூறியுள்ள அணுஉலை விபத்து நடக்கும் பட்சத்தில், அதற்கான இழப்பீட்டை அணுஉலை இயக்குனரான இந்திய அரசின் நிறுவனம் முதலில் கொடுத்துவிட வேண்டும். அதன் பிறகு அந்த விபத்து வெளிநாட்டு விநியோகத்தர் கொடுத்த பொருள்களினாலோ, குறைபாடுகள் கொண்ட கருவிகளினாலோ, தரம்குறைந்த சேவையினாலோ அல்லது வெளிநாட்டு விநியோகத்தரின் ஊழியர்களாலோ ஏற்பட்டிருந்தால், அவர்களிடம் இழப்பீட்டுத் தொகையை இயக்குநர் பெறலாம் என்று தனது “ஆ” பிரிவில் எழுதியுள்ளது. இப்போது “ ஒரு நபர் உள்நோக்கத்துடன் விபத்தை ஏற்படுத்தியிருந்தால் ” என்ற சொற்கள் அந்த திருத்தத்தின் “இ” பிரிவில் இருந்தது. அதை “ஒரு நபர் என்று விநியோகத்தரை குறித்தச் சொல்லை, தனி நபர் என்று மாற்றி” “இ” பிரிவில் சேர்த்திருப்பது பிரச்சனையை எழுப்பியுள்ளது. இது மீண்டும் வெளிநாட்டு விநியோகத்தரை தப்பிக்க வைப்பதற்காக செய்யப்படுகின்ற சொல்லாடல் என்பது அம்பலமாகியுள்ளது. விபத்து ஏற்படுத்த உள் நோக்கத்துடன் செய்யப்பட்டது என்பதாக வெளிநாட்டு விநியோகத்தர் மீது நிரூபிக்க, இந்திய இயக்குனரால் இயலாமல் போகும். அப்போதும் வெளிநாட்டு விநியோகத்தரான, அமெரிக்க மற்றும் பிரான்ஸ் நாட்டு பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் தப்பிக்க வழியுண்டு. மேற்கண்ட சர்ச்சைகள் நமக்கு சில செய்திகளை உறுதிப்படுத்துகின்றன. அதாவது இந்திய நாடாளுமன்றத்திற்கும், மத்திய அமைச்சரவைக்கும் தெரியாமலேயே, இந்தியாவின் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங், அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ்புஷ் உடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அந்த அமெரிக்கஇந்திய அணுசக்தி ஒப்பந்தம் 123 ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது. அதை முழுமைப்படுத்துவதற்கு முன்பே, அன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்து வந்த இடதுசாரிகள், அந்த ஒப்பந்தத்தை எதிர்த்து கூட்டணியை விட்டு வெளியே வந்து அதை அம்பலப்படுத்தினர். இப்போது அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தாலும், என்.எஸ்.ஜி. என்று அழைக்கப்படுகின்ற அணு எரிபொருள் விநியோகிக்கும் நாடுகளின் நிர்ப்பந்தத்தாலும், அணுஉலை விபத்து இழப்பீடு சட்டம் ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை இந்திய அரசிற்கு வந்துவிட்டது. அதனால் தவிர்க்க முடியாமல் நாடாளுமன்றத்தை நாடுகிறார்கள். அதில்தான் இத்தனை சர்ச்சைகளும் உருவாகியுள்ளது. பா.ஜ.க.வையும், லாலு, முலாயம், மயாவதி ஆகியோரையும் இணங்கவைத்து இந்த அடிமை மசோதாவை ஐ.மு.கூ. ஆட்சி நாடாளுமன்ற ஒப்புதலுடன் சட்டமாக்கிவிடலாம். ஆனாலும் அந்நியநாட்டு சக்திகளின் நிர்ப்பந்தம் ஒருபுறமும், இந்திய மக்களின் நாட்டுப்பற்று இன்னொரு புறமும் நெருக்கும் போது, மன்மோகன் அரசு சிக்கித் தவிப்பது நமக்குப் புரிகிறது.