Friday, August 13, 2010

சீனச் செல்வாக்கில் இலங்கை மூழ்கியதா?

இன்றைய இலங்கைத் தீவின் சூழ்நிலை வித்தியாசமாக மாறியிருக்கிறது. தென்னிலங்கையிலும், குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், தலைநகர் கொழும்பிலும் சிங்கள தேசிய சின்னம் பொருந்திய இலங்கை அரசின் கொடியைத் தவிர, அந்நிய நாட்டு செல்வாக்கு என்று சொல்லப்போனால், அது சீன அரசின் மற்றும் இந்திய அரசின் செல்வாக்கையே குறிக்கும் என்ற நிலை இருக்கிறது. 2009ம் ஆண்டு மே 17ல் 4வது வன்னிப்போரின் இறுதிப்பகுதியை சந்தித்தப் பின், இலங்கைத் தீவின் ஒட்டுமொத்த சூழலில் இந்த மாற்றம் படிப்படியாகத் தெரிகிறது. அதிலும் குறிப்பாக கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் தவிர எங்கும் இந்திய அரசின் கொடியை காண்பது அரிதாக இருக்கிறது. அதேசமயம் தலைநகர் கொழும்பிலும், மற்றும் கிழக்கு மாகாணத்திலும் குறிப்பாக மட்டகிளப்பு துறைமுகம் உட்பட வன்னிப்பகுதியில் நந்திக்கடல் உட்பட, தமிழர்கள் ஆண்டுவந்த மண்ணில் எங்கு நோக்கினும் சீன அரசின் கொடிகள் பறக்கின்றன. இத்தகைய மாற்றம் எந்த வகையிலும் தமிழர்களுக்கோ அல்லது இந்தியாவிற்கோ ஆரோக்கியமான எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பதற்கு பயன்படக்கூடிய மாற்றமல்ல.
இந்தியா, சீனா இரண்டு நாடுகளையுமே சமதூரத்தில் வைத்து, தாங்கள் உதவிகளைப் பெற்று வருவதாக கூறிக் கொண்டிருக்கும் ராஜபக்சே அரசாங்கம் செயலில் அதுபோல நடந்துக் கொள்கிறதா என்ற கேள்வி எழுகிறது. சமீபத்தில் இந்தியாவில் தலைநகரான டெல்லிக்கு வருகை புரிந்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, இந்திய அரசுடன் 7 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார் என்பதை இந்திய அரசு பெருமையாக பார்க்கலாம். ஆனால் டெல்லியிலிருந்து திரும்பிய கையோடு அவர் சீன உதவி பிரதமர் சேங் டெஜியாங் உடன் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டு முக்கிய ஒப்பந்தங்களை முடிவு செய்தார் என்பது தமிழர்களுக்கும், இந்தியர்களுக்கும் ஒரு கசப்பான உண்மையாக அமைந்தது.
அந்த சந்திப்பிற்கு கொழும்பு வந்திருந்த சேங் டெஜியாங், 30 உறுப்பினர்கள் கொண்ட சீனக் குழுவை அழைத்து வந்திருந்தார். அந்த குழுவினர் பொருளாதாரம், வர்த்தகம், மூலதனம் ஆகிய துறைகளில் இலங்கை அரசுடன் பேசுவதற்காக வந்திருந்த உயர்மட்ட பிரதிநிதிகள். அவர்கள் இலங்கை துணை பிரதமரான ஜெயரத்னேவுடன் உள்கட்டுமான மூலதனங்கள், தொழில்நுட்ப ஒத்துழைப்புகள் ஆகியவற்றிற்கான புதிய 6 ஒப்பந்தங்களை கையெழுத்திட்டார்கள். அதேசமயம் அம்பாந் தோட்டத்தில் சீனா கட்டி வரும் துறைமுக வளர்ச்சித் திட்டத்தின் 2வது கட்டம் பற்றியும் பேசி திட்டமிட்டுக் கொண்டுள்ளார்கள்.
இலங்கைத் தீவின் உள்கட்டுமான வளர்ச்சிக்காக இந்திய அரசு 8,000 லட்சம் அமெரிக்க டாலர்களை கடனாக கொடுக்க வாக்குக் கொடுத்த போது, சீனா 304 லட்சம் அமெரிக்க டாலர்களை நிதியுதவியாக இலங்கைக்கு வழங்கியது. இது 2006ம் ஆண்டிலிருந்து நடந்து வருகின்ற நிகழ்வு. சீனாவின் பங்கிற்கு தலைநகர் கொழும்பிலுள்ள கட்டுநாயகா விமான நிலையத்திலிருந்து வருகின்ற பாதையான கட்டுநாயகா எக்ஸ்பிரஸ்வே என்று சொல்லப்படும் பெரிய பாதையை கட்டிக்கொடுத்தது. அதேபோல நோரோச்சோலை நிலக்கரி மின்திட்டம் மற்றும் நிகழ் கலைக்கான மையம் ஆகியவற்றை சீனா கட்டிக் கொடுக்கிறது. அதாவது தலைநகர் கொழும்பில் இருக்கின்ற டவுன் ஹால் அருகே இருக்கும் மாபெரும் பூங்காவிற்கு எதிரே அத்தகைய நிகழ்கலை மையம் கட்டப்பட்டு வருகிறது. அதேசமயம் இந்திய அரசின் உதவியில் மத்தாராகொழும்பு ரயில்வே பாதை கட்டப்பட்டு வருகிறது. தமிழர்களின் வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாணத்தில் இருக்கும் காங்கேசன் துறைமுகத்தையும், இந்திய அரசு கட்டிக் கொடுக்கிறது. அதேபோல பழுதடைந்துள்ள பலாலி விமான நிலையத்தையும் இந்திய அரசு ஒழுங்குப்படுத்திக் கொடுக்கிறது. சீனா இலங்கைக்கு கொடுத்த கடனான 340 லட்சம் டாலர் தொகையை கணக்கிடும் போது, இந்திய அரசு இலங்கைக்கு எதிர்காலத்தில் கொடுக்கவுள்ள 180 லட்சம் அமெரிக்க டாலர் என்பது பாதியளவு கூட வராத நிலையில் தான் உள்ளது. 2 நாடுகளில் இருந்தும் இலங்கைக்கு கிடைக்கின்ற மூலனதமும், இலங்கையின் மீது 2 நாடுகளுக்கும் இருக்கின்ற அக்கறையும் புதிய சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இந்தியாவின் தென்பகுதியில், இந்திய அரசின் செல்வாக்கின் கீழ் நீண்டகாலமாக இருந்து வந்த இலங்கைத் தீவு புதிதாக இப்போது சீனாவின் அதிக அக்கறைக்கு உள்ளாகிறது என்ற செய்தி, டெல்லியை சிறிது நிலைகுலையச் செய்துள்ளது.
இலங்கை அரசு சீனாவிற்கு ஒரு முழுமையான சிறப்புப் பொருளாதார மண்டலத்தை கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளது. அதில் ஹாங்காங்கில் இருக்கின்ற கான்க்ளோ மேரேட் ஹுய்சென் மூலதன லிமிடெட் என்ற வர்த்தக நிறுவனம் 280 டாலர்களை மூலதனமிட்டு, தலைநகர் கொழும்பிலுள்ள முக்கிய துறைமுகத்திலிருந்து 55 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள மிரிகாமா என்ற இடத்தில் ஒரு பொருளாதார மண்டலத்தை உருவாக்கப்போகிறது. மேற்கத்திய நாடுகள் ஐ.நா.வில் இலங்கை அரசை போர்க்குற்றங்களுக்காகவும், மனித உரிமை மீறல்களுக்காகவும் தனிமைப்படுத்திய போது, தங்களுக்கு உதவியது சீன அரசு என்பதாக இலங்கை அரசு கருதுகிறது. இதுபோன்ற போட்டி பொருளாதார முதலீடுகளை, சீன அரசு எத்தியோப்பியா, சாம்பியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளிலும் செய்து வருகிறது.
இலங்கையில் சீனா இறக்கும் மூலதனங்களில் முக்கியமாக அம்பந்தோட்டா துறைமுகம் கருதப்படுகிறது. அதேபோல நோரோச்சோலை அனல்மின் நிலையத்தை கட்டிக் கொடுப்பதில், 20 ஆண்டுகளில் திருப்பி அடைக்கக்கூடிய 8,910 லட்சம் டாலர்களை சீனா கடனாக 2% வட்டிக்கு இலங்கைக்கு அளித்துள்ளது. அம்பந்தோட்டா துறைமுகத்திற்காக சீனாவின் எக்ஸிம் வங்கி 3,600 லட்சம் டாலரை முதல் கட்டமாக செலவழித்துள்ளது. இலங்கைத் தீவு மத்திய கிழக்கு நாடுகளுக்கும், தூரக்கிழக்கு நாடுகளுக்கும் மையத்தில் இருப்பதனால் அது தொலைநோக்கு போர்த்தந்திர பாணியில் தங்களுக்கு உதவும் என்று சீன அரசு எண்ணுகிறது.
சீனா, இந்தியா தவிர பாகிஸ்தானுடனும் இலங்கை அரசு சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை செய்து வருகிறது. அதில் இந்தியா 4,150 பொருட்களுக்கும், பாகிஸ்தான் 206 பொருட்களுக்கும் பரிமாற்ற உத்தரவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசுடன் இருக்கின்ற நல்லுறவை தக்க வைத்துக் கொள்வதற்காக இலங்கை அரசு சில அரசியல் அணுகுமுறைகளை மேற்கொள்கிறது. இலங்கையின் வெளிவிவகாரத்துறை அமைச்சரான காமினி பீரிஸ் கூறும்போது, சீனாவிற்கும், இலங்கைக்கும் இடையேயுள்ள உறவு வர்த்தக ரீதியானது என்றும், தங்களுக்குள் இருக்கும் கூட்டுறவைக் கண்டு வேறு யாரும் பயப்படத் தேவையில்லை என்றும் கூறியுள்ளார். குறிப்பாக அம்பந்தோட்டா துறைமுகம் முழுமையாக வர்த்தக ரீதியாகவும், போட்டி தன்மையற்றதாகவும் மட்டுமே உருவாக்கப்படுகிறது என்று கூறியுள்ளார். அந்த துறைமுகத்தில் முதல் கப்பல் நவம்பர் 19ம் நாள் வருகை தரும் என்பதாகவும் அறிவித்துள்ளார். தலைநகர் கொழும்பிலிருந்து தென்னிலங்கை பகுதிகளுக்கு செல்லுகின்ற முக்கிய சாலைகளையும் சீனா கட்டிக்கொடுக்கிறது என்று அமைச்சர் கூறியுள்ளார். அதேபோல தமிழர்களின் வடக்குப் பகுதியில் மேலும் 9 பெரிய சாலைகளை சீனா அமைத்துக் கொடுக்கப் போகிறது என்று கூறியுள்ளார்.
மேற்கண்ட இரு பெரும் நாட்டு அரசுகளின் போட்டிகள், இலங்கைத் தீவிற்குள் செல்வாக்கு மண்டலங்களை உருவாக்கி வரும் அதே வேளையில், ராஜபக்சே அரசு தமிழர்கள் பகுதியான வடக்கிலும், கிழக்கிலும் பாரம்பரிய தமிழர் அடையாளங்களை அழிப்பதையும், தங்களது சிங்கள பௌத்த அடையாளங்களை அறுதியிடுவதிலும் உறுதியாக இருக்கிறது. வடக்கு மாகாணத்திலிருந்து சில இடங்களில் இடம் பெயர்ந்து செல்லும் சிங்கள ராணுவத்தினர், தங்கள் பழைய முகாம்களில் புத்தர் கோயில்களை விட்டுச் செல்கின்றனர். அதேபோல வடக்கு பகுதியில் எடுக்கப்படுவதாக காட்டப்படும் சிறிய புத்தர் சிலைகளை பயன்படுத்தி, இலங்கையினர் அனைத்து பகுதிகளிலும் இருந்ததான ஒரு வரலாற்றுத் தோற்றத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். அதன் விளைவே சொர்ணவாகினி என்ற சிங்கள தனியார் காட்சி ஊடகத்தில் வடக்கில் பௌத்தம் என்ற ஒரு நிகழ்ச்சியை, அரசின் உதவியோடு ஏற்பாடு செய்துள்ளனர்.
மேற்கண்ட நிகழ்வுகள் அனைத்துமே, இந்தியாவின் இருத்தலுக்கும், இயங்குதலுக்கும் சவாலாக அமைந்துள்ளது என்பதை டெல்லி உணர்ந்துக் கொண்டால் போதாது. டெல்லியை நம்பி அரசியல் நடத்தும் தென்னிந்திய அரசியல்வாதிகளும், அதிகார சக்திகளும் உணரவேண்டும். தங்களுக்கு சாதகமானது தமிழர்களின் அடையாளமும், அறுதியிடலும் மட்டுமே என்பதை அவர்கள் உணர்வார்களா?