Monday, August 9, 2010

இங்கிலாந்தின் சாவு வியாபாரிகளுக்கு லாபம்: இந்திய மக்களுக்கு பட்டை நாமம்

சமீபத்தில் இங்கிலாந்து நாட்டின் அதிபர் டேவிட் கேமரானுடைய வர்த்தக குழுவினர், தங்கள் இந்திய வருகையின் போது ஏற்படுத்திய வர்த்தக ஒப்பந்தங்கள் புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது. டேவிட் கேமரானுடன் இங்கிலாந்து நாட்டின் 6 மூத்த அமைச்சர்களும், 50 வணிக தலைவர்களும், 2 ஆயுத உற்பத்தி செய்யும் சாவு வியாபார நிர்வாகிகளும் வந்திருந்தார்கள். கேமரானுடைய வருகைக்கு முன்பு இங்கிலாந்து வெளிவிவகாரத் துறையும், பாதுகாப்புத் துறையும் இந்தியாவுடன் ஆயுத வியாபார ஒப்பந்தங்களுக்கு எதிராக இருந்தனர். அணுகுண்டு தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத இந்தியாவுடன் எப்படி ஆயுத வர்த்தக பரிமாற்றம் செய்வது என்பதான விவாதம் இங்கிலாந்தில் இருந்தது. அதனால் அதிகமான அளவில் இந்தியாவுடன் வர்த்தகம் செய்து கொள்ளலாம் என்ற லாப வெறி கொண்ட தனியார் ஆயுத உற்பத்தியாளர்கள் இங்கிலாந்தின் ஆட்சியை செல்வாக்கு செலுத்தினர். அதையொட்டி இரு நாடுகளும் தனியார் துறை நிறுவனங்களுக்கிடையில், பெரும் ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தை செய்து கொண்டனர். இங்கிலாந்தின் பி.ஏ.இ. மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் என்ற 2 ஆயுத வியாபார நிறுவனங்களுடன், இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் என்ற தனியார் நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதையொட்டி 57 ஹாக் பயிற்சி விமானங்கள் இந்தியாவிற்கு கொடுக்கப்படும். முந்தைய ஒப்பந்தத்தில் 66 ஹாக் விமானங்கள் கொடுக்கப்பட்டன. இப்போது பி.ஏ.இ. நிறுவனத்திற்கு 5000 லட்சம் பௌண்டு என்ற இங்கிலாந்து நாணயமும், ரோல்ஸ் ராய்ஸ் என்ற இங்கிலாந்து நிறுவனத்திற்கு 2000 லட்சம் பௌண்டும், ஆக மொத்தம் 7000 லட்சம் பௌண்டு மதிப்புள்ள ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் இங்கிலாந்தில் 200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்பட்டது. இந்த ஒப்பந்தம் தங்களுடைய புதிய வணிக ரீதியான வெளிநாட்டு கொள்கைகயை நடைமுறைப்படுத்தியதால் கிடைத்தது என்று கேமரான் பெருமைப்பட்டுக் கொண்டார். இந்தியாவை இந்த பிராந்தியத்தில் ஏற்றுமதிக்கும், மூலதனமிடவும் முக்கியமான பொருளாதார பங்காளியாக, இங்கிலாந்து அரசாங்கம் காண்கிறது என்றும் வருகை புரிந்தவர்கள் அப்போது கூறினார்கள். உலகத்தை முழுக்க தங்கள் கதவடிக்கு கொண்டுவரும் தன்மையுள்ள இந்தியா தங்களுடைய எதிர்கால பங்காளியாக இருக்கும் என்று அப்போது கேமரான் எழுதினார். தனது வருகை இங்கிலாந்து நாட்டில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கம் கொண்டது என்றும் கூறினார். இங்கிலாந்தில் இருக்கின்ற இந்திய நிறுவனங்களில் 90,000 பேர் இதுவரை வேலை செய்வதாக இந்திய பிரதமர் கூறியதையொட்டி, இந்தியாவில் இங்கிலாந்து நிறுவனங்களுடைய நடவடிக்கையால் மேலும் பலருக்கு வேலை கிடைக்கும் என்று அப்போது கேமரான் கூறினார். இரு நாடுகளிலும் ஆயிரக்கணக்கானோருக்கு எதிர்காலத்தில் வேலை கிடைக்கும் என்று நம்பிக்கைக் கொடுத்தார். தனது வருகை வர்த்தக பயணமாக இருந்தாலும், வேலை தேடும் பயணமாக இருப்பதையே தான் விரும்புவதாகவும் அப்போது கூறினார். 2006ம் ஆண்டு ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவராக இருந்த கேமரான் இந்தியா வந்திருந்தார். அப்போது இங்கிலாந்தை தொழிலாளர் கட்சி ஆட்சி செய்தது. பழமைவாத கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியும் தலைவராக அப்போது அவர் வருகை புரிந்தார். இங்கிலாந்தின் வாகன உற்பத்திக்கும், எஃகு உற்பத்திக்கும் இந்திய முதலாளிகள் ஈடுபட்டு வருவதை சுட்டிக்காட்டிய கேமரான், வங்கி, காப்பீடு, பாதுகாப்பு உற்பத்தி, சட்டபூர்வமான சேவைகளில் வர்த்தக தடைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுமாறு ஆலோசனை கூறியுள்ளார். இப்போது கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தத்தின் மூலம் ரூ.5,110 கோடிக்கான ஹாக் ஜெட் ஒப்பந்தம் ஒரு மாபெரும் வெற்றி என்பதாக இங்கிலாந்து ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் தனியார் சாவு வியாபாரியான பி.ஏ.இ.க்கு ரூ.3,600 கோடியும், ரோல்ஸ் ராய்ஸ்க்கு ரூ.1,500 கோடியும் கிடைக்கும். இத்தகைய பல கோடி ரூபாய்க்கான ஆயுத விற்பனையை இந்தியாவிற்கு, இங்கிலாந்தின் ஆயுத நிறுவனங்கள் அறிவிப்பதற்கு ஒரு வாரம் முன்பு தான், ஆப்பிரிக்காவின் பாலைவனங்களை விட அதிகமான ஏழ்மையை இந்தியா சந்திக்கிறது என்ற உண்மையை இங்கிலாந்து மக்கள் கேள்விப்பட்டார்கள். ஆகவே அவர்களுக்கே கூட இது அதிர்ச்சி தரும் ஒப்பந்தம். இந்திய பெரும்பான்மை மக்களுக்கு உணவு பாதுகாப்பும், குடிநீரும், அடிப்படை சுகாதார தேவையும் கிடைக்காத சூழலில், அதிக செலவில் பெரும் ஆயுதங்கள் வாங்குவதற்கான தேவை எங்கே வந்தது என்ற கேள்வியை இங்கிலாந்து ஊடகங்களும் கேட்கின்றன. இத்தகைய ஒப்பந்தம் கொலைகள் செய்வதற்கான கருவிகளை விற்கக்கூடிய கொடூரமான நடைமுறையை முகமூடி போட்டு மறைக்கவும், ஒப்புக்கொள்ள வைக்கவும், அவை வேலைகளை உருவாக்கும் என்றும், நல்ல வர்த்தகத்தை கொடுக்கிறது என்றும் அரசாங்கமும், ஊடகங்களும் கூறுவதாக விமர்சனங்கள் அந்த நாட்டில் எழுந்துள்ளன. ஆனால் இவற்றால் பாதிக்கப்படும் இந்திய நாட்டிலோ, ஊடகங்கள் வாயிலாகவோ, எதிர்க்கட்சிகள் மூலமாகவோ எந்தவொரு கடுமையான விமர்சனங்களும் மக்கள் மன்றத்திற்கு வரவில்லை. இப்போது இந்தியா உலகத்திலேயே தனது பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட்டை பத்தாவது பெரிய பட்ஜெட்டாக உருவாக்கியுள்ளது. இது ஆண்டுதோறும் சீன நாடு செலவழிக்கும் தொகையில் 40% வருகிறது. உலகிலேயே இந்தியா தான் அதிகமான அளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடு என்று ஸ்டாக் ஹோம் சமாதான ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. 2000மாவது ஆண்டுக்குப் பிறகு இந்தியா தனது ஆயுத இறக்குமதியை 240% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் பாதுகாப்பு துறைக்கான செலவை 34% உயர்த்தியுள்ளது. இந்தியாவிலிருக்கும் அதிகாரம் படைத்த மேட்டுக்குடி பணக்காரர்களுடைய விருப்பங்களையும், தேவைகளையும் இத்தகைய சாவு வியாபார வர்த்தகம் செய்யும் போது, 80 கோடி இந்தியர்கள் ஒரு நாளுக்கு ரூ.80 வருவாயில், ஆப்பிரிக்க பாலைவனங்களை விட 2 மடங்கு ஏழ்மையில் இருக்கிறார்கள் என்று இங்கிலாந்தின் ஊடகங்களே அம்பலப்படுத்தியுள்ளன. இந்திய அரசு பின்பற்றக்கூடிய நவீன தாராளவாத பொருளாதார திட்டத்தின் விளைவு தான் இத்தகைய சீரழிவு என்பதையும் அவர்கள் கூறுகின்றனர். ஒரு நாட்டின் தெருவில் நடமாடும் சாதாரண மக்கள் தான், அந்த நாட்டின் உண்மையான அடையாளம். அப்படியிருக்கையில் இந்திய நாட்டின் அடையாளம் என்பது ஏழ்மையில் உழலும் மக்கள் தான். அப்படிப்பட்ட ஒரு நாட்டிற்கு ராணுவ முறையில் ஆயுத சேகரிப்பை ஏற்படுத்துவது மற்றும் விளையாட்டுப் போட்டிக்கு கண்டபடி செலவழிப்பது மற்றும் சேர்க்கைக் கோள் திட்டங்களுக்கு பணத்தைக் கொட்டுவது ஆகியவை யாருக்கு நன்மை பயக்கும்? மேற்கண்ட சர்ச்சைகளை உலகத்தின் மௌனமான சாட்சியங்கள் விவாதித்து வருகின்றன. இந்திய நாட்டில் இருக்கின்ற பொதுமக்களும், முன்னோடிகளும், ஆர்வலர்களும், எதிர்கட்சிகளும், இன்னமும் போதுமான அளவிற்கு இத்தகைய பற்றி எரியும் நெருப்பான பிரச்சனையை விவாதிக்காமல் இருப்பது ஏன்? சொரணையற்ற ஒரு வாழ்க்கை இங்கிருக்கும் அறிவுஜீவிகளுக்கு தேவைதானா? நாடாளுமன்றத்தில் இப்போது எழுப்பப்படும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஏற்பாட்டிலுள்ள ஊழல் விவாதம், உதவாக்கரை வேலைகளுக்கு கோடிக்கணக்கில் பணத்தை கொட்டிச் செலவழிப்பதை தட்டிக்கேட்குமா? தடுத்து நிறுத்துமா?