Sunday, August 8, 2010

நாகசாகி நாள் : இழப்பீட்டை நிராகரிக்க ஒரு இழப்பீடு மசோதா

1945ம் ஆண்டு ஆகஸ்டு 9ம் நாள் அந்த கொடூரம் நடந்தது. அதாவது 2ம் உலகப் போரில் இறுதி நேரத்தில் அமெரிக்கா, ஜப்பான் நாட்டிலுள்ள நாகசாகி நகரின் மீது அன்று அணுகுண்டை வீசியது. ஹிரோஷிமா நகரின் மீது குட்டிப் பையன் என்ற ஒரு அணுகுண்டை வீசிய 3ம் நாள், நாகசாகி நகரின் மீது, "தடி மனிதன்" என்ற பெயர் கொண்ட அணுகுண்டை நாகசாகி மீது வீசியது. நாகசாகி நகரில் 80,000 பேர் வரை இந்த அணுகுண்டு தாக்குதலில் மரணமடைந்தார்கள். நாகசாகி நகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 6வது நாள் அதாவது ஆகஸ்டு 15ம் நாள் ஜப்பான் அரசு, எதிர்தரப்பிடம் சரணடைந்தது. பசிபிக் போர் என்று அழைக்கப்பட்ட 2வது உலகப் போர் அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 2ம் நாள் முடிவடைந்தது. ஜப்பான் சரணடைவுக்கான கையெழுத்தை அந்த நாளில் போட்டது. அதனுடன் சேர்ந்த ஜெர்மனி மே 7ம் நாள் ஐரோப்பாவில் போரை நிறுத்தி சரணடைவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அணு ஆயுதங்களை அனைத்து நாடுகளும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அப்போதிலிருந்து ஜப்பான் முன்வைத்து வருகிறது. உலகம் முழுவதும் அமைதிக்காகவும், சமாதானத்திற்காகவும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் நாடாக கடந்த காலங்களில் அறியப்பட்ட இந்திய அரசு, இப்போது இந்திய நாடாளுமன்றத்திற்கு முன்னால் ஒரு மசோதாவை சட்டமாக்குவதற்காக முன்வைத்துள்ளது. சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான ஒப்பந்தம் என்று கூறப்போனால், 123 அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தை கூறலாம். அதாவது இந்தியாவில் இருக்கின்ற அணுசக்தி உற்பத்தியை, ஆக்கத்திற்கான அணுசக்தி என்றும், அழிவிற்கான அணுசக்தி என்றும் பிரிக்கலாம் என்பதாகவும், பிரித்து அதில் ஆக்கத்திற்கான அணுசக்தியை அதிகமாக உற்பத்தி செய்வதற்காக அமெரிக்கா உதவி செய்யும் பொருட்டு உருவாக்கப்படும் ஒப்பந்தம் என்பதாகவும் அது சொல்லப்படுகிறது. உண்மையிலேயே உலகில் இருக்கின்ற எந்த நாட்டிலும் ஆக்கத்திற்கான அணுசக்தி என்பதையும், அழிவிற்கான அணுசக்தி என்பதையும் பிரிக்க முடியுமா? ஆக்கத்திற்கான அணுசக்தி என்பது நாட்டின் தேவைக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான அணுசக்தி என்பதாக விளக்கப்படுகிறது. அழிவிற்கான அணுசக்தி என்பது அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கான அணுசக்தி என்பதாக விவரிக்கப்படுகிறது. இந்தியாவில் இதுவரை இயங்கி வருகின்ற மின்சார உற்பத்திக்கான அணு உலைகள் என்பவை என்ன செய்து கொண்டிருக் கின்றன? மும்பையில் இருக்கும் தாராப்பூர் அணுசக்தி நிலையம் பற்றிய பல்வேறு சர்ச்சைகள் தொடரத்தான் செய்கின்றன. அதே போல சென்னை அருகே உள்ள கல்பாக்கத்தில் இருக்கின்ற அணுசக்தி நிலையம் பல்வேறு விவாதங்களால் கேள்வி கேட்கப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் இருக்கின்ற கெய்கா அணுசக்தி நிலையம் தொடங்கப்படுவதற்கு முன்பே அதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. அப்போது கர்நாடக அரசு இருதரப்பு கருத்துக்களையும் விவாதிப்பதற்கான ஒரு பெரிய அளவிலான கருத்தரங்கை ஏற்பாடு செய்தது. அதன் பிறகு வழக்கமாக அரசுகள் செய்வது போல, அந்த கெய்கா அணுசக்தி நிலையத்தை கொண்டு வந்தது.இத்தகைய விவாதங்கள் ஏற்கனவே இருந்து வரும் போது, 23 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூடங்குளத்தில் ஒரு அணுஉலையை ரஷ்யாவின் உதவியுடன் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் அறிவிக்கப்பட்டன. அப்போதுதான் ரஷ்ய நாட்டில் இருக்கின்ற செர்னோபில் என்ற நகரத்தில் இருந்த அணுஉலை வெடித்து, அதனால் லட்சக்கணக்கான மக்களின் மரணத்தையும், பாதிப்பையும் இந்த உலகம் அதிர்ச்சியுடன் சந்தித்தது. செர்னோபில் நகரத்திலும், சுற்றுவட்டாரத்திலும் இருக்கும் புல், பூண்டுகள், செடி, கொடிகள் போன்ற தாவரங்களும் அதனால் பாதிக்கப்பட்டன. மாடுகள் கறக்கின்ற பாலிலும் அணுக்கதிர்வீச்சு பாதித்திருப்பதை கண்டுபிடித்தார்கள். இத்தகைய ஆபத்து வாய்ந்த அணுஉலைகளை, நமது மாநிலத்தில் கொண்டு வந்து இறக்குவதற்கு ரஷ்ய அரசுடன் சேர்ந்து கொண்டு இந்திய அரசும் கைகோர்த்தது. கடலோரத்தில் நிறுவப் படுகின்ற அணுஉலைகளின் கதிர்வீச்சுக்கள் கசிந்து, கடலில் உள்ள மீன்களைப் பாதிக்கும் என்றும், நச்சுத் தன்மை கொண்ட மீன்களை பிடித்து உணவுக்காக தொழில் செய்ய முடியாது என்று உணர்ந்த மீனவ மக்கள், இதை எதிர்த்துப் போராடத் தொடங்கினர். ஏற்கனவே கல்பாக்கம் நகரிலுள்ள அணுஉலைகளின் கதிர்வீச்சுக்கள், அருகாமை யிலுள்ள கடலில் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றன. அதனால் மீன்களுக்கும், மீனவர் களுக்கும் பாதிப்பு இருக்கிறது என அவர்களும் போராடி வருகிறார்கள். இந்த நிலையில்தான் கூடங்குளம் அணுஉலைகள் வந்து இறங்கியுள்ளன.கல்பாக்கத்தில் மின் உற்பத்திக்கான அணுஉலைகள் இயங்கத் தொடங்கியதும், அணுவைப் பிளந்து வெளிவரும் சக்திகளில் புளூடோனியம் என்பதை அணுகுண்டு தயாரிக்க பயன்படுத்துகிறார்கள். இப்படிப்பட்ட அழிவிற்கான அணுகுண்டு தயாரிப்பிற்கு, ஆக்கத்திற்கான என்று சொல்லப்படும் அணு உலைகள் பயன்படுகின்றன என்று அணு கதிர்வீச்சு எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டி வந்தனர். அதை அணுசக்தி துறை மறுத்து வந்தது. கல்பாக்கம் அணு உலையிலும் இதே போல பி.ஆர்.பி. என்ற துறையில் புளூடோனியம் சேமிக்கப்பட்டு, அணுகுண்டு தயாரிப்பிற்கு ஏற்பாடு நடப்பதாக கூறப்பட்ட குற்றச்சாட்டையும், 20 ஆண்டுகளுக்கு முன்னால் அணுசக்தி துறை மறுத்தது. ஆனால் அதுவே இப்போது அம்பலமாகி யுள்ளது. சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் தலைமை அமைச்சர், ஒரு அணுவிசை நீர்மூழ்கி கப்பலை தொடங்கி வைத்தார். உடனடியாக கல்பாக்கத்திலுள்ள அணு விஞ்ஞானிகள், தாங்கள் தான் அதற்கான அணுவிசையை, ரகசியமாக தயாரித்துக் கொடுத்தோம் என்று பெருமை தேடிக் கொண்டனர். இத்தகைய நிலையில் ஆக்கத்திற்கான அணுசக்தியை பிரித்து நிறுத்துவது என்ற அமெரிக்காவின் தந்திரமான செயலை, ஆதரிக்கும் இந்திய அரசின் நிலைப்பாடும் கேள்விக் குறியாகியுள்ளது. சென்னையில் ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சு நாளன்று, அணு உலைகளை எதிர்க்காமல், அணு ஆயுதங்களை மட்டும் எதிர்ப்பது என்ற சில அறிவுஜீவிகளின் அரங்கு கூட்டமும் கூட, அம்பலப்பட்டுப் போனது. இந்நேரத்தில்தான் இந்திய நாடாளுமன்றத்தில் முன்பு வைக்கப்பட்டுள்ள அணுசக்தி விபத்தை இழப்பீடு மசோதா 2010 என்பது பற்றிய விவாதம் எழுகிறது. இதே போன்ற விபத்து பாதுகாப்பு சட்டங்கள், அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் இருக்கின்றன. அவை தருகின்ற இழப்பீடு தொகையை விட, இந்திய அரசு முன்வைத்துள்ள மசோதாவிலுள்ள இழப்பீடு தொகை 23 மடங்கு குறைவாக இருக்கிறது. அணுஉலைகள் இயல்பாக இயங்கும் போதே, அதாவது விபத்து ஒன்று நடைபெறாத போதே, அணுக்கதிர்வீச்சு நடக்கத்தான் செய்யும். அந்த கதிர்வீச்சால் பாதிக்கப்படும் மக்களுக்கு அமெரிக்காவில் உள்ள சட்டத்தில் இழப்பீடு தொகை கொடுக்கப்படும். ஆனால் இந்திய மசோதாவில் விபத்து நடைபெறாத காலத்தில் நடக்கும் அணுக்கதிர்வீச்சு பாதிப்புகளுக்கு இழப்பீடு கேட்க முடியாது. அணுகதிர்வீச்சின் விளைவுகளாக தைராய்டு, புற்றுநோய், மல்டிபிள் மைலமோ போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. அத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு இல்லை என்றோ, ஆமாம் என்றோ அணுசக்தி துறை இங்கே கூற மறுக்கிறது. கதிர்வீச்சால் ஏற்படும் புற்றுநோய் அடையாளம் காணப்பட 10 ஆண்டுகள் காலம் பிடிக்கும். ஆனால் இழப்பீட்டிற்கான இந்திய மசோதாவில், 10 ஆண்டுகளுக்குள் இழப்பீடு கேட்டு விண்ணப்பிக்காவிட்டால், இழப்பீடு கிடைக்காது என்பதாக குறிப்பிடப் பட்டுள்ளது. இதன் மூலம் இழப்பீட்டை நிராகரிக்கின்ற ஒரு இழப்பீடு மசோதாதான் இந்திய நாடாளுமன்றம் முன்னால் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது. இது ஒரு கேலிக் கூத்தாக இருக்கிறது.