Thursday, August 5, 2010

ஹிரோஷிமா: அமெரிக்கா போட்ட அணுகுண்டு

1945ம் ஆண்டு 2ம் உலகப்போரின் கடைசிக் கட்டம். அமெரிக்காவும், இங்கிலாந்தும் ஒரு முகாம் என்றால், ஜப்பானும், ஜெர்மனியும் இன்னொரு முகாம் என்பதாக இரண்டாவது உலகப்போர் நடந்து வந்த காலம். ஜப்பான் நாட்டிலுள்ள ஹிரோசிமா என்ற நகரின் மீது ஆகஸ்ட் 6ம் நாள் அமெரிக்கா ஒரு அணுகுண்டை வீசியது. அந்த அணுகுண்டுவிற்கு ‘குட்டி பையன்’ என்று பெயர். அது துப்பாக்கி வடிவில் இருந்தது. யுரேனியம்235 ஆல் அது உருவாக்கப்பட்டது. டென்னேஸியில் உள்ள ஓக் ரிட்ச் என்ற இடத்தில் ராட்சச தொழிற்சாலையில், யுரேனியத்திலிருந்து அரிதான ஐசோடோப்பை எடுத்து அந்த அணுகுண்டு தயார் செய்யப்பட்டது. ஜுலை 16ம் நாளே புது மெக்சிகோவில் அலமோ கார்டோ அருகே டிரினிடி சைட்டில் முதலில் சோதிக்கப்பட்டது. அது மன்ஹட்டன் திட்டம் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. அதன் அறிவியல் ஆராய்ச்சி அமெரிக்க மருத்துவர் ராபர்ட் ஓபன்ஹீமர் என்பவரால் இயக்கப்பட்டது. அமெரிக்க ராணுவத்தின் பொறியியலாளர்கள் படையிலிருந்து தளபதி லெஸ்லி க்ரோவ்ஸ் அதிகாரத்தின் கீழ் அந்த முழு திட்டமும் தயார் செய்யப்பட்டது. 6 மாதங்கள் தொடர்ந்து நடத்தப்பட்ட குண்டுவீச்சுக்களால் ஜப்பான் நாட்டின் 67 நகரங்களை, அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் தாக்கியிருந்தன. அதன் பிறகு அமெரிக்கா கொடுத்த கெடுவையும் ஜப்பான் அரசாங்கம் அலட்சியப்படுத்தியது. அதனாலேயே அப்போதைய அமெரிக்க அதிபரான ஹேரி ட்ரூமன் ஹிரோஷிமா நகரின் மீது அந்த குட்டி பையனை ஏவிவிட தீர்மானித்தார்.
ஹிரோஷிமா நகரம் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்தது. ஜப்பானின் இரண்டாவது ராணுவ தலைநகராக இருந்தது. அது தவிர தொடர்பு மையமாகவும், சேமிப்பு கிடங்காகவும் இயங்கி வந்தது. ஹிரோஷிமா மீதான அணுகுண்டு தாக்குதலுக்குப் பிறகு 4 மாதங்களில், 90,000 பேரில் இருந்து 166,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். ஹிரோஷிமாவில் உள்ள சுகாதாரத்துறையின் மதிப்பீட்டின் படி, இறந்தவர்களில் 60% குண்டின் எதிரொலியிலோ, பற்றிய நெருப்பின் காயத்திலோ இறந்திருக்கிறார்கள். 30% பேர் உடைந்து விழுந்த கட்டிடங்களினால் இறந்திருக்கிறார்கள். 10% மற்ற காரணங்களால் இறந்திருக்கிறார்கள். அடுத்த சில மாதங்களில் தீப்புண்ணின் பாதிப்பிலும், கதிர்வீச்சின் நோயிலும், மற்ற காயங்களிலும் நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கிறார்கள். மொத்தத்தில் 20% வரை அணுகதிர்வீச்சு நோயாலும், 30% வரை தீப்புண்களாலும், 60% வரை மற்றக் காயங்களால் ஏற்பட்ட நோய்களாலும், பெரும்பாலும் பொதுமக்களே இறந்திருக்கிறார்கள்.
முதலில் இந்த தாக்குதலை நடத்துவதற்கான இலக்குகளாக கியோட்டா, ஹிரோஷிமா, யோகோஹாமா மற்றும் கோகுராவிலுள்ள ஆயுத தளவாட கிடங்கு ஆகியவை ராபர்ட் ஓபன்ஹீமர் தலைமையில், இலக்குக் குழு என்பதில் 1945ம் ஆண்டு மே 10,11 தேதிகளில் முன்வைக்கப்பட்டது. ஹிரோஷிமா நகரம் நகர்ப்புற தொழிற்சாலைப் பகுதிக்கு மத்தியில் அமைந்துள்ளது. அங்கு அதிகளவிலான சேதாரத்தை அந்த அணுகுண்டு தாக்குதல் ஏற்படுத்தும் என்று அனுமானிக்கப்பட்டது. அண்டையில் இருக்கும் மலைகளும், பயங்கரமான எதிரொலிகளைக் கொடுத்து வெடியின் பாதிப்பை அதிகமாக்கிக் கொடுக்கும் என்று தீர்மானித்தனர். போட்ஸ் டாம் பிரகடனத்தின் அம்சங்களை நிபந்தனையற்று சரணடைவுடன், ஜப்பான் சரணடைந்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான், அந்த தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் இலக்குகள் மூலம் உளவியல் ரீதியான தாக்கங்களுக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதேபோல அனைத்து நாட்டளவில் பகிரங்கமாக இத்தகைய முதல் அணுகுண்டு தாக்குதல் நடத்தப்படுவதன் மூலம், அதன் முக்கியத்துவத்தை போதுமான அளவு உணரவைக்க வேண்டும் என்பதும் நோக்கமாகும்.
கியோட்டாவில் தாக்குதல் நடத்தியிருந்தால், அது ராணுவத் தொழிற்சாலைகளின் மையமாக இருப்பதாலும், அறிவுஜீவி மையம் என்பதாக இருப்பதாலும், அந்த அணுகுண்டின் முக்கியத்துவம் மேலும் கூடியிருக்கும். ஆனால் இரண்டாம் உலகப்போரின் காலத்தில், அமெரிக்க ராணுவ உளவுசேவையில் ஜப்பான் பற்றிய நிபுணர் என்று கருதப்பட்ட எட்வின் ரெய்ஸ்சௌர் கியோட்டா மீதான குண்டுவீச்சை தவறுதலாக தவிர்த்து விட்டார். அதேசமயம் பல பத்தாண்டுகள் முன்னால் தனது தேனிலவை கியோட்டாவில் கொண்டாடிய ஹென்றி ஸ்டிம்சன் என்ற போர் செயலாளர், அந்த நகரின் மீது தனக்கிருந்த மரியாதையால் அதன் மீதான தாக்குதலை தவிர்த்தார். ஜுலை 26ம் நாள் அமெரிக்க அதிபர் ட்ரூமனும், கூட்டாளி நாடுகளின் தலைவர்களும், ஜப்பானை சரணடைய கோரும் போட்ஸ் டம் பிரகடனத்தை வெளியிட்டார்கள். அது ஒரு கெடுவாக வைக்கப்பட்டது. சரணடையாவிட்டால் தாக்குவோம் என அறிவித்திருந்தார்கள். முழுமையாக ஜப்பான் ஆயுதப்படையை அழித்து விடுவோம் எனவும், ஜப்பானிய தாய் நாட்டை உடைத்து விடுவோம் எனவும் அப்போதைய மிரட்டல் அமைந்திருந்தது. அதற்கு பொருள் அப்படிப்பட்ட தன்மைக் கொண்ட அணுகுண்டு ஒன்றை ஜப்பான் மீது வீசப்போகிறார்கள் என்று அப்போது புரிந்துக் கொள்ள முடியவில்லை. அதனால் ஜுலை 28ம் நாள் ஜப்பான் அரசாங்கம் அந்த மிரட்டல் பிரகடனத்தை நிராகரித்ததாக ஜப்பானிய ஊடகங்கள் வெளியிட்டன.
ஹிரோஷிமா நகரம் 3,81,000 மக்கள் தொகை கொண்டதாக இருந்தது. அணுகுண்டு வீச்சுக்குப் பிறகு, மக்கள் தொகை கணக்கெடுத்த ஆவணங்கள் கூட நெருப்புக்கு பலியாகியிருந்தன. அணுகுண்டு வீச்சு நடத்தப்பட்டதற்கு ஒரு மணி நேரம் முன்பு, சில அமெரிக்க விமானங்கள் ஜப்பானின் தெற்கு பகுதியை நோக்கி வருவதை ரேடார்கள் கண்டுபிடித்தன. அதையொட்டி எச்சரிக்கைக் கொடுக்கப்பட்டு, ஹிரோஷிமா உட்பட பல நகரங்களில் வானொலி கூட நிறுத்தப்பட்டது. வீசப்பட்ட ‘குட்டி பையன்’ என்ற அணுகுண்டு 65 கி.கிராம் யுரேனியம் 235 உடன் 43 செகண்ட்கள் நேரம் எடுத்து கீழே இறங்கியது.
மேற்கண்ட அணுகுண்டு தாக்குதல் உலகம் முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுமார் 100 கிலோ மீட்டர் வரை வெடித்த அணுகுண்டிலிருந்து வெளியேறிய அணுக்கதிர் வீச்சுகள் மக்களை தாக்கின. அதன் பாதிப்பு இன்னமும் மக்கள் மத்தியிலும், பல்வேறு உயிரினங்கள் மத்தியிலும் இருக்கிறது.
அணுகுண்டின் தாக்குதலால் ஏற்படுத்தப்படும் அணுக்கதிர் வீச்சுகள், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் அழியாமல் உலகின் உயிரினங்களை அழித்துக் கொண்டிருக்கும் தன்மை கொண்டவை. அணுகதிர் வீச்சுகளிலிருந்து பாதுகாப்பு என்பது இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்படவில்லை. புளுட்டோனியம்239 என்பதன் அணுவின் அளவு பாதியாக குறைவதற்கே 24,000 ஆண்டுகள் ஆகும் என்று அறிவியலாளர்கள் அறிவிக்கிறார்கள்.
அணுகுண்டுகள் அழிவை ஏற்படுத்தக்கூடியது என்பதை உலக நாடுகள் அனைத்தும் ஒப்புக் கொள்கின்றன. ஆனாலும் வர்த்தகப் போட்டியிலும், அதற்கான அதிகார மற்றும் ஆதிக்க போட்டியிலும் ஈடுபடும் உலக நாடுகளின் அரசுகள், அணுகுண்டுகளை தயார் செய்வதில் முனைப்புடன் ஈடுபடுகின்றன. அமெரிக்கா போன்ற நாடுகள் அணுகுண்டுகளை அதிகமான அளவில் உருவாக்கி, அவற்றை சேமித்து பெரும் அளவில் வைத்திருக்கின்றன. அதேசமயம் அணுகுண்டு சோதனைகளை கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை, இன்னொரு புறம் முன்வைக்கின்றன. தங்களிடம் சேமிப்பில் உள்ள அணுகுண்டுகளால் தாங்கள் நிரந்தரமாக ஆதிக்கம் செலுத்துவதற்காக, பிற நாட்டு அரசுகள் அணுகுண்டு சோதனை செய்வதையும், அணுகுண்டு தயாரிப்பதையும் எதிர்க்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
அணுகுண்டுகளை தயார் செய்வதற்கான புளுட்டோனியத்தை, அணுஉலைகளிலிருந்தே இந்திய நாட்டில் பெற்றுக் கொள்கிறார்கள். ஆகவே சமாதானத்திற்கான அணுசக்தி, அழிவிற்கான அணுசக்தி என்பதாக அமெரிக்கா கூறுவது போல, இந்திய அரசும் இணைந்து அறிவிப்பது போல ஒன்று உண்டா என்ற கேள்வியை பொதுமக்கள் கேட்கத் தொடங்கினால் தான், உண்மையைக் கூறும் நிலமைக்கு அரசு தள்ளப்பட முடியும்.