Wednesday, July 28, 2010

மக்கள் போராட்டம் ஒடுக்கப்பட்டால், ஆயுதப் போரா?

சமாதானத்திற்காகவும், நீதிக்காகவும் ஒரு நீண்ட பயணம் என்பதாக வருகிற ஆகஸ்ட்15ம் நாளுக்காக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது கொல்கத்தாவிலிருந்து லால்கர் நோக்கி என்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல சமூக சேவகர் மேதாபட்கர், கொத்தடிமை விடுதலை முன்னணியின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சுவாமி அக்னிவேஷ் ஆகியோர் இந்த அறிவிப்பில் கையெழுத்திட்டுள்ளனர். இது அறவழியில் மக்களை அணிதிரட்டி நடத்தப்பட இருக்கின்ற ஒரு போராட்டம் என்பது புரிகிறது. இந்தியாவில் நிலவுகின்ற பல்வேறு பிரச்சனைகள் இது போன்ற பல்வேறு மக்கள் போராட்டங்களை கோரி நிற்கின்றன.
ஐ.நா. சபை சமீபத்தில் வறுமை பற்றி கொடுத்த ஒரு புதிய புள்ளி விவரத்தில் 28 ஏழ்மைமிக்க ஆப்ரிக்க நாடுகளை விட, 8 இந்திய மாநிலங்கள் வறுமையில் அதிகமான மக்களை தள்ளியுள்ளன என்பதாக கூறியுள்ளது. அது சம்பந்தப்பட்ட பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன. இந்திய மக்கள் தொகையில் 38 விழுக்காடு ஏழ்மையில் உழல்கிறார்கள் என்று ஒரு செய்தி. தெற்காசியாவில் தான் உலகிலேயே ஏழ்மை மக்களில் பாதி பேர் வாழ்கிறார்கள் என்று ஒரு செய்தி. பீகார், சத்திஸ்கர், ஜார்கண்ட், மத்தியபிரதேசம், ஓரிசா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம், மேற்குவங்கம் ஆகிய 8 மாநிலங்களில் மட்டும் 4 கோடியே 21 லட்சம் மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். பீகார் மாநிலத்தில் 81 விழுக்காடு ஏழை மக்கள். டெல்லியில் 15% ஏழைகள். இத்தகைய சூழ்நிலையில் பாதிக்கப்படும் மக்கள், போராட்டங்களில் ஈடுபடுவது இயற்கை தான்.
மற்ற மாநிலங்களை விட 43 ஆண்டுகளாக இந்தியாவின் பெரிய நாடாளுமன்ற இடது சாரி கட்சியின் ஆட்சி நடைபெறும் மேற்குவங்கத்தில் இந்த நிலைமை தொடர்வதற்கான காரணம் என்ன? மேற்குவங்கம் மாநிலத்தில் தங்கள் கோரிக்கைகளுக்காக போராடப் புறப்பட்ட மக்கள் இயக்கங்களை அரசு அனுமதித்ததா? அல்லது அடக்குமுறை செய்து நசுக்கியதா? சமீபத்தில் மேற்கு மிகினாபூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளின் வட்டார தளபதி சிதுசோரன் மற்றும் 5 பேரை காவல் துறை படுகொலைச் செய்தது. அதை வெளியிட்ட அரசு, காவல் துறையின் அராஜகத்திற்கு எதிரான மக்கள் குழுவின் சிதுகானு மக்கள் தொண்டர்கள் என்ற போராட்ட முன்னணியை சேர்ந்தவர்கள் என்று கொல்லப்பட்டவர்களை வர்ணித்தது. அதாவது பிரபலமான மக்கள் திரள் அமைப்பை சேர்ந்தவர்களை, மாவோயிஸ்டுகள் என்ற பெயரில் கொலைச் செய்ததை அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு போராடும் மக்களமைப்புகளை நசுக்குவதும், அதன் முன்னோடிகளை கொலைச் செய்வதும் ஒரு அரசாங்கத்தின் வாடிக்கையாக இருப்பதனால் தான், போராட்ட முன்னோடிகளும், இளைஞர்களும் ஆயுதப் போராட்ட பாதையை நோக்கி செல்கிறார்கள் என்பதற்கு இதை விட போதுமான ஆதாரம் கிடைக்காது.
43 ஆண்டுகளாக அந்த மாநிலத்தை ஆளுகின்ற மார்க்சிஸ்ட் கட்சி, தனது கொள்கைகளை, மக்கள் ஜனநாயக புரட்சி என்று பரப்புரை செய்து, லட்சக்கணக்கான ஊழியர்களை திரட்டி வைத்திருந்தது. 1964ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை சமரசவாதமாக செல்வதாக குற்றம் சாட்டி, புதிய கட்சியை சி.பி.எம். என்ற பெயரில் தொடங்கியது. அந்த கட்சி மக்களை திரட்டி புரட்சியை நடத்தப் போவதாக ஊழியர்கள் நம்பினார்கள். ஆனால் தன்னால் குற்றம் சாட்டப்பட்ட இ.க.க. தலைமையை போலவே தானும் சமரசவாத பாதைக்கு சென்றது. அதையொட்டியே 1967ல் டார்ஜிலிங் மாவட்டத்தில், நக்சல்பாரி கிராமத்தில் விவசாய புரட்சியை சாரு மஜும்தார் தொடங்கி வைத்தார். 1972ம் ஆண்டு அவரை ஜூலை 16ம் நாள் கைது செய்த மே.வங்க காவல் துறை ஜூலை 28ம் நாள் சிறையிலேயே மரணமடையவைத்தது. அதனால் தான் அவர் நினைவில் ஜூலை 28ம் நாளை புரட்சியாளர்கள் தியாகிகள் தினம் என்று கடைப்பிடிக்கிறார்கள். இப்போதும் மாவோயிஸ்டுகள் அதை அறிவித்துள்ளார்கள்.
சாருமஜும்தாரை திரிபுவாதத்திற்கு பதிலடி கொடுத்தவராக புரட்சியாளர்கள் பார்க்கிறார்கள். சி.பி.எம். கட்சி முன் வைத்த நாடாளுமன்ற பாதைக்கான ஐக்கிய முன்னணியை மறுத்து, மாவோ கூறிய புரட்சிக்கான ஐக்கிய முன்னணியை முன் வைத்தார் என்கிறார்கள். இந்தியா அரசியல் சுதந்திரம் பெற்றுவிட்டது என்ற சி.பி.எம்.மின் வாதத்தை மறுத்து, பொருளாதார சுதந்திரம் கிடைக்காமல், அரசியல் சுதந்திரம் கிடைக்காது என்ற வாதத்தையும் சாருவிடமிருந்து எடுத்துக் கொள்கிறார்கள். இந்தியாவை ஆள்வது பெருமுதலாளிகள் என்ற மார்க்சிஸ்ட் கட்சி மதிப்பீட்டை மறுத்து, தரகுமுதலாளிகள் ஆள்வதாக சாரு கூறியதை ஏற்றுக் கொள்கிறார்கள். மாவோவின் மக்கள் போர்ப் பாதை, கிராமப் புறங்களை விடுதலை செய்து, நகர்ப் புறங்களை சுற்றிவளைத்து விடுதலை செய்வது தான் என்ற சாருவின் கொள்கையை பின்பற்றுகிறார்கள். இவ்வாறு சாருமஜும்தாரை தங்கள் வழிக்காட்டியாக கொண்டதால் தான், இந்திய புரட்சியாளர்கள் அவரது நினைவு நாளை, தியாகிகள் நாளாக கடைப்பிடிக்கிறார்கள்.
அறவழியில், அமைதிப் பாதையில் மக்களைத் திரட்டி போராடக் கூடிய மக்கள் திரள் இயக்கங்களை முத்திரைக் குத்தி, அடக்குமுறை செய்வதனால் தான் இளைஞர்கள் ஆயுதம் தாங்கிய புரட்சிகரப்பாதைக்கு ஈர்க்கப்பட்டுள்ளார்கள். அது தான் இப்போது மேற்கு மிதினாப்பூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட படுக் கொலைகளிலும் நடந்துள்ளது. அதனால் தான் மார்க்சிஸ்ட் கட்சி 43 ஆண்டுகளாக ஆண்டு வரும் மாநிலத்திலும், வறுமை இன்னமும் தாண்டவமாடுகிறது. ஆகவே வன்முறையை கைவிட்டு, நன் முறையில் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க கோரும் நீண்ட பயணம் பிரபலமாக எதிர் பார்க்கப்படுகிறது.
அவ்வாறு லால்கர் நோக்கி புறப்படுங்கள் என்ற மேதாபட்கரின், சுவாமி அக்னிவேஷின் நீண்ட பயணம் சில கோரிக்கைகளை முன்வைக்கிறது. மக்களது வாழ்க்கைக்கும், அந்தஸ்த்திற்கும் உள்ள உரிமை என்பது எப்போதும் மனிதத் தன்மையற்ற வழிகள் மூலம் நியாயப்படுத்தப்பட முடியாது என்பதாக அவர்கள் கூறுகிறார்கள். வன்முறைக்கு முடிவுக் கட்டுவோம் என்கிறார்கள்.
நிலம், தண்ணீர், காடுகள், கனிமவளங்கள் ஆகிய மூலாதாரங்களை பெறுவதற்கான உரிமை மக்களுக்கு, குறிப்பாக ஆதிவாசி சமூகங்களுக்கு வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார்கள். பன்னாட்டு மூலதன நிறுவனங்களுக்கு, ஆதிவாசிகளின் மூலாதாரங்களை தாரைவார்க்க சுடாது. லால்கர் பகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும். வளர்ச்சி என்பது சமத்துவம், நீதி, ஜனநாயக முறை ஆகியவற்றின் மூலம் தான் எட்டப்பட முடியும். மக்களுக்காக அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் கொடுக்கப்பட வேண்டும். 1996ன் பஞ்சாயத்துச் சட்டம், வனச்சட்டம் ஆகியவை அமுல்படுத்தப்பட வேண்டும். மக்கள் போராட்டங்கள் அனுமதிக்கப்பட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை இந்த அமைதி வேண்டுவோர் முன் வைக்கிறார்கள்.
இதே கோரிக்கைகளுக்காக நடத்தப்படும் மக்கள் இயக்கங்களை அரசு ஒடுக்கும்போது தானே, இளைஞர்கள் ஆயுதம் தாங்கிய அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கும் வழியை தேர்வுச் செய்கிறார்கள்? இந்த முறை மேற்குவங்க அரசு தன்னை மாற்றிக் கொள்ளுமா? அல்லது தன்னை தூக்கியெறிய மக்களை தூண்டிவிடுமா? இதுதான் இன்றைய கேள்வியாக எழுகிறது.