Wednesday, June 30, 2010

பழங்குடி நிலப்பறிப்பும், ராணுவ உயிர்பறிப்பும்

செவ்வாய் கிழமை சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள நாராயண்பூர் மாவட்டத்தில், மத்திய சிறப்பு காவல் படையினர் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் அரசுப் படையினர் பலியாகினர். இது போன்ற தொடர்ந்த உயிரிழப்புகள் இந்திய அரசை உலுக்கிவருகிறது. தனது தளபதிகளையும், அதிகாரிகளையும் இழந்தார் துணை ராணுவம் மனஉறுதியை இழக்கத் தொடங்கியுள்ளது. அபுஜ்மத் என்ற 40,000 சதுர கி.மீ. உள்ள காடுகளின் வாயில் பகுதியாக கருதப்படும் நாராயண்பூர்ஒர்சா சாலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அந்த காட்டுபகுதியை நக்சல்பாரிகளின் விடுதலைப் பகுதி என்று அழைக்கிறார்கள். பஸ்தர் பகுதியில் உள்ள தங்கள் முகாமிற்கு திரும்பி வரும் போது அந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மதியம் 3 மணிக்கு நடத்தப்பட்ட அந்த தாக்குதலில், நவீன ஆயுதங்களை மாவோயிஸ்டுகள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
அந்த மாவட்டத்தின் காவல் துறை அதிகாரிகள் வேறு ஒரு கதையை சொல்கிறார்கள். முக்கிய இடமான ஜரகதியில் ஒரு ராணுவ முகாமை நிறுவ வேண்டும் என்று தாங்கள் கூறியதாகவும், அதை துணை ராணுவம் மறுத்துவிட்டது என்றும் கூறுகிறார்கள். ஆனால் துணை ராணுவத்தினர் அந்த இடத்தில் முதலில் ஒரு கட்டிடத்தை உருவாக்கி அதில் அனைத்து வசதிகளும் செய்யப்பட வேண்டும் என்று விரும்பியதாகவும் காவல்துறையினர் கூறுகிறார்கள். மத்திய சிறப்பு காவல்படையை, தொடர்ந்து மாவோயிஸ்டுகளிடம் பலியாகி வருவதாக காவல் துறையினர் அந்த மாநிலத்தில் குறைக் கூறுகின்றனர். காடுகளில் பணியாற்ற அனுபவம் இல்லாமல் இருக்கிறார்கள் என்றும் துணை ராணுவத்தினரை காவல்துறையினர் விமர்சிக்கிறார். பஸ்தர் பகுதியில் உள்ள காடுகளில் சோதனை நடவடிக்கைகளுக்கு செல்லும் போது, துணை ராணுவத்தினர் உளவுத்துறையினர் கூறும் கருத்துக்களை எடுத்துக் கொள்வதில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.
காஷ்மீர் மாநிலத்தில் மோதல் பகுதிகளிலிருந்து, நேரடியாக பஸ்தர் பகுதிக்கு பெருவாரியான மத்தியச் சிறப்பு காவல்படையினர் கொண்டுவந்து தள்ளப்பட்டுள்ளனர் என்றும், அவர்களுக்கு இடைக்காலத்தில் ஒய்வு கூட கொடுக்கப்படவில்லை என்றும், அதனால் ஓய்வின்றி சோர்வாக வந்திறங்கியுள்ளனர் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளார்கள்.
சத்திஸ்கர் மாநிலத்தில் இருக்கும் காவல்துறைக்கும், துணை ராணுவத்திற்கும் இடையில் சரியான ஒருங்கிணைப்பு இல்லை. கண்ணிவெடி புதைக்கப்பட்ட இடங்களில், அவற்றை அகற்றாமல் உள்ளே நுழைவது அவர்களுக்கு பழக்கமாகயிருக்கிறது. பஸ்தர் பகுதி, 5 மாவட்டங்களை கொண்டது. பஸ்தர், நாராயண்பூர், கான்கெர், பிஜபூர், தன்டேவாடா ஆகிய மாவட்டங்களை கொண்டது. அது தான் மாவோயிஸ்டுகளுடைய மைய பகுதியாகவும் இருக்கிறது. 80ன் கடைசியில் இருந்து கொரில்லா போராட்டப் பகுதியாக அது இருக்கிறது. பஸ்தர் பகுதியின் 40,000 சதுர கி.மீ. காட்டுப்பகுதியில், 25,000 சதுர கி.மீ. வரை மாவோயிஸ்டுகள், கண்ணி வெடிகளை புதைத்துள்ளனர் என்று சத்திஸ்கர் மாநில காவல்துறை தலைவர் விஸ்வரன்ஜன் கூறியுள்ளார். இதுவரை அந்த மாநிலத்தில் மத்திய சிறப்பு காவல்படையை சோர்ந்த 14 பட்டாலியன்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றில் தெற்கேயுள்ள பஸ்தர் பகுதியில் மட்டும் 13 நிறுத்தப்பட்டுள்ளன. சுர்குஜா என்ற ஜார்கன்த் எல்லையை ஒட்டிய வடக்கு மாவட்டத்தில் ஒரு பட்டாலியன் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த அளவிற்கு ஆயுதம் தாங்கிய அரசுப்படைகள் குவிக்கப்பட்டாலும் பழங்குடி மக்களின் காட்டுப்பகுதிக்குள் செல்வது என்பது எளிதாகயில்லை.
மேற்கண்ட பகுதிகளில் பழங்குடி மக்களுக்கு சொந்தமான காடுகளையும், நிலங்களையும் அவர்களிடம் இருந்து பறித்து, தனியார் நிறுவனங்களுக்கு கொடுப்பதற்கு துணைபோனவர்கள் யார் என்பது இப்போது அம்பலமாகிறது. இந்தியாவின் சுற்றுசூழல் மற்றும் வன இலாக்கா தான், காட்டுநிலங்களை பழங்குடி மக்களிடமிருந்து பறித்தெடுக்க உதவிகரமாக இருந்திருக்கிறது.
காட்டு நிலங்கள் மீதான மத்திய வன அமைச்சரவையின் கட்டுப்பாடு, லட்சக்கணக்கான மக்களின் வீடுகள், வாழ்வாதாரம், வாழ்க்கை ஆகியவற்றின் மீது அதிகமான அதிகாரத்தையும் அதன் மூலம் அநிதியையும் இழைத்துள்ளது. 1980 ஆம் ஆண்டின் காடு வளர்ப்புச் சட்டம், இந்தியாவில் இருக்கின்ற நிலங்களில் 23% காடுகள் என்று பதிவு செய்துள்ளது. 2006ம் ஆண்டிலிருந்து இன்று வரை அன்றைய மத்திய பிரதேசத்திலும், இன்றைய சத்திஸ்கரில் மட்டும் கொள்கை ரீதியாக, சட்ட விரோதமாக பல்வேறு திட்டங்களுக்கு 15,411 ஹெக்டேர் காட்டு நிலங்களை இந்த அமைச்சகம் கொடுத்துள்ளது. அந்த வட்டாரத்தில் வாழும் பழங்குடி மக்கள் உட்பட, குடியிருக்கும் மக்களிடம் அவர்கள் பயன்படுத்தும் அல்லது சார்ந்து இருக்கும் நிலங்களை பறித்துக் கொடுப்பது பற்றி கலந்தாலோசிக்க வில்லை. 2009ம் ஆண்டு ஆகஸ்டு 3ம் நாள் இந்த வனஇலாகா அமைச்சகம் நடந்ததெல்லாம் சட்ட விரோத மென்றும், அது நிறுத்தப்பட வேண்டும் என்றும் சுற்றறிக்கையை வெளி யிட்டது. ஆனாலும் வனப்பகுதிகளில் நிலப்பறிப்பு நின்றபாடில்லை. ஒவ்வொரு ஹெக்டேர் நிலம் வனங்களிலிருந்து மாற்றப்படும் போதும், அதற்கு சமமாக வருவாய் நிலத்திலிருந்து ஒரு ஹெக்டேரோ அல்லது கைவிடப்பட்ட வனப்பகுதிகளிலிருந்து 2 ஹெக்டேரோ, புதிய மரங்களை நடுவதன் மூலம் திருப்பி அளிக்கப்படவேண்டும் என்பதாக அந்த வனப்பாதுகாப்பு சட்டம் கூறுகிறது. இது ஆவண அளவில் நல்லதாக தோன்றினாலும், இயற்கை வனங்களுக்கு மாற்றாக ஒரு மரத்தை நடுவது என்பது பல்லுயிர் சூழலின் இழப்பை சரிகட்டாது. அதே போல நீர் நிலைகளின் இழப்பை ஈடுகட்டாது. தோட்டங்களும் கூட புதிய நிலப்பறிப்பை ஏற்படுத்தவே செய்யும். அது திட்டங்கள் பெயரில் இல்லாமல், வனத்துறை பெயரில் நடைபெறும். எந்த வகையிலும் வாழ்ந்து வரும் மக்கள் தங்களது நிலங்களை இழப்பார்கள்.
புதிய தோட்டங்கள் வனவாழ் மக்களது அல்லது கிராம பொது நிலத்தையோ பறிப்பதன் மூலம் தான் நடைபெறும்.
1980 முதல் 2009 வரை இது போன்ற ஈடுகட்டும் தோட்டங்கள் 11,83,472 ஹெக்டேர் நிலத்தில் உருவாக்கப் பட்டுள்ளன. அதில் 5,54,635 ஹெக்டேர் வருவாய் துறை நிலத்தி லிருந்து வனத்துறைக்கு எடுக்கப் பட்டது. இவை அனைத்துமே மத்திய பிரதேசத்திலும், சத்திஸ்கரிலும் நடந்த சட்ட விரோத திருப்பங்கள். கூட்டு வன மேலாண்மை என்ற முறையின்படி அதிகமான நிலங்களை கிராம மக்களிடமிருந்து பறித்து எடுத்தல் தொடர்கிறது. வன இலாகா காவலர்களால் தலைமை தாங்கப்பட்டு, பங்களிப்பு திட்டத்தின்படி வனச் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சட்டமாக் கியுள்ளனர். ஆனால் அங்கு வாழும் மக்களுக்கு மரத்திலும், வருமானத்திலும் பங்கு கொடுப்பதற்கு பதில், அவர்களது இலவசமான உழைப்பை பெற்றுக் கொள்கிறார்கள். கூட்டு வன மேலாண்மைக் குழுக்கள் முழுமையாக ஒப்பந்தக்காரர்களையும், வர்த்தகர்களையும், மேட்டுக்குடி களையும் மற்றும் வனத்துறைக்கு வேண்டியவர் களையும் கொண்டதாக உருவாக்கப் பட்டுள்ளது. அதன் மூலம் வனங்களில் வாழ்ந்து வரும் மக்கள் நிலங்களிலிருந்து அந்நியப்படுத்தப் படுகிறார்கள். அந்த திட்டத்திற்காக 2008 லிருந்து 2010 வரை கொடுக்கப்பட்ட ரூ. 1056.74 கோடிகள் மேற்கண்ட லாபநோக்க சக்திகளால் கொள்ளை யடிக்கப் பட்டுள்ளது.
காடுகளை அழிப்பது மீண்டும் வனவாழ் மக்களது வாழ்க்கை அழித்து வருகிறது. 2009ம் ஆண்டு மாநில அரசாங்கங்களால் ரூ.5000 கோடி அனைத்து நாட்டு கடனாக பெறப் பட்டுள்ளது. அவற்றை அமுல் படுத்த கூட்டு வன மேலாண்மை பயன்படுத்தப் படவேண்டும். அது முழுமையாக வட்டார மக்களுக்கு எதிராகவே பயன்படுகிறது. இவ்வாறு வனத்துறை அமைச்சகம் பறிக்கப்பட்ட நிலங்கள் பழங்குடிகளை, மாவோயிஸ்டுகளிடம் கொண்டு போய் சேர்த்துள்ளது. அதன் விளைவாக அங்கே செல்லும் துணை ராணுவத்தினரின் உயிர்கள் பறிக்கப் படுகின்றன. நிலங்களை பறி கொடுத்த பழங்குடிகள், அரசப்படைகளின் உயிர்களை பறித்தெடுக்கிறார்கள் என்ற எதார்த்த உண்மையை எப்போது அரசு புரிந்து கொள்ளும் என்று தெரியவில்லை.

காதல் புரியுமா?

இளையவளே
அவன் உன்னுடன்
பேசிக்கொண்டிருக்கும்போது
வெயில் வந்துவிட்டதே
அதிகாலை முதல்
அவனுடன் கடற்கரையில்
பேசி, பேசியே நேரம்
போனது தெரியவில்லையே
கடற்கரை மணலில்
ஏறும் சூடு உனக்கு
தெரியாதுதானே
அதை புரிந்து கொண்டால்
உலகம் திருந்தி விடும்
என்கிறாயா?

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடர்ந்து தாக்குதலா?

ஒரு வாரமாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து வருகின்ற செய்திகள் எதுவுமே ஆரோக்கியமாக இல்லை. காட்சி ஊடகங்களுக்கு சுடச் சுட செய்திகள் கிடைக்கின்றன என்பது தவிர, வன்முறையற்ற எந்த ஒரு செய்தியும் அங்கிருந்து வரவில்லை. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள சோப்பூர் என்ற நகரில் ஒரு இளைஞர் மத்திய சிறப்பு காவல்படையின் தோட்டக்களுக்கு பலியானார். அதையொட்டி அந்த நகரின் அருகே இருக்கும் கிராமங்களிலிருந்து மக்கள் சோப்பூர் நகரை நோக்கி கூட்டம், கூட்டமாக வரத் தொடங்கினர். இதற்கிடையில் மத்திய சிறப்பு காவல்படை ஊரடங்கு உத்தரவை அறிவித்திருந்தது. ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ள பகுதிகளில், அந்த குறிப்பிட்ட நேரத்தில் யார் வெளியே வந்தாலும் உடனடியாக சுட்டுக் கொல்வார்கள் என்பது இந்தியாவில் நடைமுறையிலிருக்கும் பழக்கம். ஆனால் ஹூரியத் மாநாடு என்று சொல்லப்படும், தேர்தல் போட்டியிடாமல் காஷ்மீரின் சுயநிர்ணய உரிமைக்காக போராடக்கூடிய மக்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு, இந்த ஊரடங்கை எதிர்த்து தெருவுக்கு வந்து போராட மக்களை அறைகூவியிருந்தது. அதையொட்டியே மக்கள் ஆயிரக்கணக்கில் தெருவுக்கு வந்தார்கள் என்பது அரசாங்கத்தின் குற்றச்சாட்டு. ஊர்வலமாக வந்த மக்கள் கூட்டத்தைக் கண்டவுடன் துணை ராணுவப்படையினர் ஷாகார் சினிமா கொட்டகை அருகே, ஊர்வலத்தைப் பார்த்து பகிரங்கமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அதையொட்டியே எதிர்ப்பாளர்கள் கலக்கமடைந்து கலவரமாக வெடித்துள்ளது.
இதே போல 20 ஆண்டுகளுக்கு முன்னால் அஸ்ஸாம் மாநிலத்தில், வங்காளிகளின் ஆதிக்கத்தை எதிர்த்து மாணவர்கள் ஆசு என்ற மாணவர் அமைப்பின் மூலம் அணி திரண்டு போராடினார்கள். அப்போது அங்கே அனுப்பப்பட்ட துணை ராணுவப்படை ஊரடங்கு உத்தரவு ஒன்றை அறிவித்திருந்தது. அதை எதிர்த்து அனைத்து அஸ்ஸாம் மாணவர் அமைப்பு என்று கூறப்படும் ஆசு அமைப்பினர், மக்கள் ஊரடங்கு என்ற எதிர்முழக்கத்தை முன்வைத்தனர். வயோதிகர்கள் முதற்கொண்டு குழந்தைகள் வரை, தெருவுக்கு வந்து அமைதியான வழியில் ஊர்வலமாக சென்றனர். அதிர்ச்சியடைந்த துணை ராணுவத்தினரோ, பின்வாங்கிக் கொண்டனர். அதுவும் கூட ஒரு தேசிய இனத்தின் வாழ்வாதாரத்திற்கான போராட்டம் தான். அதிலும் பெரும்பான்மை மக்கள் தான் திரண்டு தங்களுடைய நிலத்தை காப்பாற்ற தெருவுக்கு வந்தார்கள்.
அதே போல காஷ்மீரிலும் பெரும்பான்மை மக்கள் தங்களுடைய நிலத்தை காப்பாற்றுவதற்காக, ஆக்கிரமிப்பு போல வந்திருக்கும் துணை ராணுவப்படையை எதிர்த்து ஊரடங்கை மறுத்து தெருவுக்கு வந்துள்ளனர். ஆனால் காஷ்மீர் பிரச்சினை இந்திய ஆட்சியாளர்களுக்கு கவுரப் பிரச்சினையாக வும், அண்டை நாடான பாகிஸ்தானுடன் பகைத்துக் கொள்வதற்கான துருப்புச் சீட்டாகவும், டெல்லி மனோபாவத்தில் விட்டுக் கொடுக்க முடியாத பிரச்சினையாகவும் இருக்கிறது. அதனால் தானோ என்னவோ, டெல்லியின் விரல் அசைப்பு, துணை ராணுவப்படையில் பகை முகம் காட்டும் நிலைக்கு தொடர்ந்து தள்ளி வருகிறது. ஹூரியத் மாநாடு அறிவித்தவுடன் பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கில் தெருவுக்கு வருகிறார்கள் என்றால், பொதுமக்களுடைய உணர்வுகளை அந்த அமைப்புதான் சரியாக பிரதிபலிக்கிறது என்று அர்த்தம்.
தேர்தல் மூலம் காஷ்மீரில் முதலமைச்சராக இருக்கும் உமர் அப்துல்லாவோ, மத்திய காங்கிரஸ் தலைமையோ கொண்டுள்ள மக்கள் செல்வாக்கை விட, ஹூரியத் மாநாடு மக்கள் மத்தியில் செல்வாக்குடன் இருப்பது இதன் மூலம் தெரிகிறது. ஹூரியத் மாநாடு அமைப்பினர் ஆயுதம் தாங்கி போராடுபவர்கள் அல்ல. ஆனாலும் காஷ்மீரின் சுய நிர்ணய உரிமைக்காக அவர்கள் உறுதியாக நிற்கிறார்கள். அவர்கள் பின்னால் மக்கள் நிற்பதால், காஷ்மீர் மக்களும் சுய நிர்ணய உரிமையை வேண்டி நிற்கிறார்கள் என்பது புலனாகிறது.
காஷ்மீர் மாநிலத்தின் சட்டத்தையும், நாடளுமன்ற விவகாரத்தையும் கவனிக்கின்ற அமைச்சர் அலி முகமது சாகர், ஞாயிற்றுக் கிழமை நடந்த வன்முறைகளை வித்தியாசமாக வர்ணிக்கிறார். மத்திய சிறப்பு காவல் படையினர் சரியான தலைமைக் கட்டளை இல்லாமல், கட்டுப்பாட்டை இழந்து போய்விட்டனர் என்று அந்த முக்கிய அமைச்சர் கூறியுள்ளார். உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் காஷ்மீருக்கு வருகை தந்து, மத்திய சிறப்பு காவல் படையை கட்டுப்படுத்தவேண்டும் என்றும் கூறியுள்ளார். மீண்டும் சிதம்பரத்தின் அமைச்சரவையின் கீழே உள்ள அரசப்படைகளின் கட்டுப்பாடின்மை அம்பலமாகியுள்ளது. 4 மாதங்களுக்கு முன்னால் காஷ்மீர் சென்ற ப.சிதம்பரம், காவல்துறை கைகளில் சட்ட ஒழுங்கு கொடுக்கப்பட்டு, துணை ராணுவம் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்தார். அந்த வாக்குறுதி என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.
காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா தனது புதிய ஊடக பேட்டியில், ஹூரியத் மாநாட்டிற்கும், மத்திய உள்துறைக்கும் உள்ள பேச்சுவார்த்தைப் பற்றி சில செய்திகளை அம்பலப்படுத்துகிறார். அமைதியான வழியில் தூதரகப் பேச்சு என்ற பெயரில் ப.சிதம்பரம் அழைத்த பேச்சு வார்த்தைப்பற்றி கூறுகிறார். அத்தகைய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள ஹூரியத் மாநாடு அமைப்பினர், பாகிஸ்தான் அரசிடம் கேட்டுக் கொண்டுதான் செயல்படுகிறார்கள் என்று உமர் அப்துல்லா ஒருபுறம் முத்திரைக் குத்தினாலும், இன்னொரு புறம் பாகிஸ்தான் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ள இந்திய வெளிவிவகாரத்துறை செயலாளர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோருடைய முயற்சிக்குப் பிறகு, காஷ்மீர் பேச்சு வார்த்தையும் பலன் தரும் என்று கூறுகிறார். தற்போது உள்துறை அமைச்சருடன் ஹூரியத் மாநாடு அமைப்பினர் பேச்சு வார்த்தை தொடர்கிறார்களா என்ற கேள்விக்கு மௌனம் சாதிக்கிறார். மத்திய அரசின் பேச்சு வார்த்தை அணுகுமுறைப் பற்றியும், அதற்கு வருகின்ற தடங்கல்கள் பற்றியும் இருக்கும் ரகசியங்களை அரசியலிலிருந்து ஓய்வு பெற்றப்பின் எழுதுவேன் என்கிறார். அதே சமயம் உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை, காஷ்மீர் காவல்துறைதான் முன்னால் நிற்கவேண்டும் என்றும், துணை ராணுவம் பின்னால்தான் நிற்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். இதற்கு எதிரான செயல்பாடுகள்தான் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடந்து வருகின்றன.
சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்த டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் கிலானி இதுபற்றி பேசினார். அவர் நாடாளுமன்ற தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்டு விடுதலையானவர். காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த அறிவுஜீவி. அவர் இந்தியாவில் மக்கள் எப்படி சிந்திக்கவேண்டும் என்பதை ஆட்சியாளர்கள் தீர்மானித்து, அதற்கு தகுந்தாற்போல் செய்திகளை திருப்பி விடும் ஊடகங்களின் காலம் இது என்று கூறுகிறார். காஷ்மீரில் ஜம்மு பகுதி இந்து மதச்சார்பான மக்கள் அதிகம் வாழும் பகுதி. அங்கே அரசாங்கம் கிராம பாதுகாப்பு குழுக்களை கட்டியுள்ளது. அவர்கள் ராணுவத்திற்காக வேலை செய்கிறார்கள். அவர்களில் யாரையாவது காஷ்மீர் போராளிகள் தாக்கி விட்டால், உடனடியாக இந்து மக்களை போராளிகள் தாக்கி விட்டார்கள் என்று விளம்பரப்படுத்துகிறார்கள். அதன் மூலம் சுய நிர்ணய உரிமைக்கான இயக்கத்தை, இந்து மக்கள் எதிர்ப்பு இயக்கம் போல சித்தரித்து விடுகிறார்கள் என்று கூறினார். அந்த கிராம பாதுகாப்பு குழுக்களிலும் முக்கியமாக முன்னாள் ராணுவத்தினர் இருக்கிறார்கள். அவர்களை அரசு ஆயுதம் தாங்கியவர்களாக மாற்றி விடுகிறது. காஷ்மீரில் இறங்கி இருக்கும் அரச படையில் 99% கவனமாக இந்துக்களாக இணைக்கப் பட்டுள்ளனர். 40 ஆண்டுகள் அமைதி வழி போராட்டத்தின் மூலம் சுயநிர்ணய உரிமைக்கான இயக்கம் நடந்தது. மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்ததாதனால், இளைஞர்கள் எல்லா நாட்டிலும் நடப்பது போல, ஆயுதம் தாங்கிய வழியை தேர்வு செய்தார்கள். தங்களது குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை ஆகியவற்றை விட்டு விட்டு, காடுகளுக்கு சென்று கொரில்லா போராளிகளாக மாறியுள்ளார்கள் என்று பேராசிரியர் அப்போது கூறினார். தங்கள் மக்கள் மதிப்புடன் சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதற்காக, போராளி ஆணும், பெண்ணும் தங்கள் உயிரைக் கொடுக்க தயாராக இறங்கியிருக்கிறார்கள் என்று அப்போது கூறினார். இந்தியாவில் நீதித்துறை உட்பட அனைத்து நிறுவப்பட்ட அதிகார நிறுவனங்களும் உடைந்து போனப்பிறகு, ஜனநாயக மதிப்பீடுகளை எங்கிருந்து எதிர்பார்க்கிறீர்கள் என்று சூடாகவே அப்போது பேராசிரியர் சென்னைவாசிகளைப் பார்த்து, கேள்வி கேட்டார். நீதி கிடைக்காமல் அமைதி எப்படி வரும் என்று வினவினார். சுடுகாட்டில் நிலவும் அமைதிதான் இவர்களது எதிர்பார்ப்பா என்று கேட்டார்.
2005ம் ஆண்டிலிருந்து இப்போது வரை காஷ்மீரில் அரசப்படைகள் நடத்திய 350 மீறல் குற்றங்களை வழக்குப்போட, அங்குள்ள அரசு மத்திய அரசிடம் அனுமதி கேட்டது. இதுவரை கிடைக்கவில்லை அதே சமயம் சுதந்திரமாக கருத்துச் சொல்பவர்களுக்கு எதிராக யு.ஏ.பி.ஏ. என்ற சட்ட விரோதமாக கூடுதல் தவிர்ப்பு சட்டம் என்பது பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற தவறுகளை எதிர்த்து, மற்ற மாநிலத்தில் உள்ள மக்கள் கேள்வி கேட்காவிட்டால், அவர்களது மௌனம் அத்தகைய தவறுகளுக்கு கொடுக்கின்ற ஆதரவு என்றும் பேராசிரியர் கடுமையாகவே கூறினார். இதுதான் நமக்கு நினைவுக்கு வருகிறது. ஈழத்தில் இன அழிப்பை அனுபவித்து துவண்டு போன தமிழ் நாட்டு மக்கள், காஷ்மீரில் நடத்தப்படும் இன ஒடுக்கலை எதிர்த்து கேள்வி கேட்கப் போகிறோமா? அல்லது மௌனத்தின் மூலம் ஆதரிக்கப் போகிறோமா? இதுதான் நமக்கு எழும் கேள்வி.