Monday, May 24, 2010

சிதம்பரத்தை குற்றம்சாட்டிய ஆய்வறிக்கை

கடந்த மாதம் சத்தீஸ்கர் மாநிலத்தில் தண்டேவாடா பகுதியில் மத்திய மற்றும் மாநில காவல்படையினர் 76 பேர் கொல்லப்பட்ட நிகழ்வு பற்றி ஆய்வு செய்ய, மத்திய அரசு எல்லைப்பாதுகாப்பு படையின் முன்னாள் பொது இயக்குநர் ராம்மோகன் மூலம் ஏற்பாடு செய்திருந்தது. இப்போது அந்த ராம்மோகனின் அறிக்கை வெளிவந்துள்ளது. அதில் மத்திய உள்துறை அமைச்சகம், சத்தீஸ்கர் அரசாங்கம், மற்றும் அரசு நிறுவனங்களை பொறுப்பாக்கி ஆய்வுகள் வெளியிடப்பட்டன. நடவடிக்கைகளுக்காக விதிகளை வழிகாட்டியிருந்தும் கூட, அவை சரியான முறையில் பின்பற்றப்படவில்லை என்று அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட மத்திய சிறப்பு காவல்படையின் 62வது அணியினர், தங்களுக்கு கொடுக்கப்பட்ட வழிகாட்டல்களை எச்சரிக்கையின்றி செயல்படுத்தினார்கள் என்று அந்த குற்றச்சாட்டுக் கூறுகிறது. காடுகள் வழியாக ஒரு அரைவட்ட வடிவில் முன்னேறி தேடுதல் வேட்டையை நடத்துமாறு வழிகாட்டல்கள் கொடுக்கப்பட்டிருந்தன. ஆனால் அவற்றை அலட்சியப்படுத்தி விட்டு துணை தளபதி சத்தியவான் யாதவ், சிந்தாள்நார் பகுதியிலிருந்து தனது படைவரிசையை, முக்ரம் என்ற கிராமத்திற்கு ஒற்றைவழிப் பாதை மூலம் பின்வாங்கி எடுத்துச் சென்றார் என்று குற்றம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த முயற்சி ஒரு தற்கொலை முயற்சி என்பதாக அறிக்கை வர்ணிக்கிறது. இது மத்திய சிறப்பு காவல்படையில் பலவீனமான தலைமை இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. சிந்தள்நார் முகாமில், வீரர்களுக்கு எந்தவொரு தற்காப்பு வாய்ப்புகளும் இல்லை. தங்கும் இடமும் கூட, சௌகரியமாக இல்லை.
மாநில காவல்படையும், மத்திய படையும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று ராம்மோகன் கூறுகிறார். மத்திய சிறப்பு காவல்படைக்கு உள்ளேயிருக்கும் குறைபாடுகளை ஆய்வு செய்யும் போது, மாவோயிஸ்ட்களை எதிர்த்து தாக்குப்பிடிக்கும் அளவிற்கு தன்மை உள்ளவர்களாக அவர்கள் இல்லை. ஆய்வறிக்கை வெளியிடப்பட்டதையொட்டி மத்திய சிறப்பு காவல்படை தங்களின் 3 பெரிய அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது. அதில் டி.ஐ.ஜி.நலின் பிரபாத், படை தளபதி விமல் பிசிட், ஆய்வாளர் சஞ்சிவ் பாக்ரே ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், மே 6ம் நாள் பேசச் சென்ற உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தண்டேவாடா பிரச்சனை மீது விவாதம் எழுந்த போது, 1 ஐ.ஜி.யும், 2 டி.ஐ.ஜி.யும், 1 எஸ்.பி.யும் சிந்திக்காமல், திட்டமிடாமல் நடந்து கொண்டுள்ளனர் என்று பகிரங்கமாகவே அறிவித்தார். கட்டுப்பாடுள்ள மத்திய ஆயுதப்படையின் உள்விவகாரங்களை ஆய்வு செய்து அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்பே, சம்மந்தப்பட்ட அமைச்சர் இப்படி பகிரங்கமாக உயர் அதிகாரிகளைப் பற்றி குற்றம்சாட்டி பொது இடத்தில் பேசலாமா என்பது நமக்கு புரியவில்லை. ஆனால் ஆய்வறிக்கையை வெளியிட்ட ராம்மோகன் குழுவும், விசாரணை நீதிமன்றம் கொடுத்துள்ள கண்டுபிடித்தல்களும், மேற்கண்ட மூன்று அதிகாரிகளுக்கு மிகவும் சிறிய அளவுதான் சம்பவத்தில் பங்கு உண்டு என்று கூறியுள்ளன. அதேசமயம் படைவீரர்களும், களத்தில் இருந்த தளபதிகளும் மேலிருந்து கொடுக்கப்பட்ட திட்டங்களை அலட்சியப்படுத்தி விட்டு, மேலிடத்திற்கு தங்கள் நடமாட்டத்தைப் பற்றிய பொய்ச் செய்திகளை கொடுத்துள்ளனர் என்று ராம்மோகன் குழு கூறியுள்ளது. மத்திய சிறப்பு காவல்படையை முழுமையாக சார்ந்து தான், மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கைகளை அரசு நடத்த வேண்டியுள்ளது. ஆகவே இது மிகவும் சிக்கலாகிவிட்ட ஒரு பிரச்சனை.
மாவோயிஸ்ட்கள் மத்திய சிறப்பு காவல்படை மீது நடத்திய தாக்குதல்கள் அனைத்துமே, 5கி.மி. தூரத்தில் இருக்கும் தங்களது முகாம்களில் இருந்து தான் நடத்தியுள்ளனர் என்பதும் இப்போது தெளிவாகியுள்ளது. அதாவது மாவோயிஸ்ட்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குச் சென்ற, மத்திய அரசு படை தங்களுக்கு சுற்றுவட்டாரத்தில் இருக்கும் ஆயுதந்தாங்கிய மாவோயிஸ்ட்களின் குவிதலை அப்புறப்படுத்தாமல், அசட்டையாக இருந்துள்ளனர் என்பது இங்கு தெரிந்துள்ளது.
இப்போது இடமாற்றம் செய்யப்படும் அதிகாரியான பிஸ்ட், 62வது படையணியின் ஆல்பா கம்பெனியை, சுற்றுப்புறமுள்ள மாவோயிஸ்ட்களை விரட்டுவதற்கு கட்டளையிட்டிருக்கிறார். அந்த கட்டளையை அவர்கள் அலட்சியப்படுத்தி விட்டார்கள். இதை விசாரணை நீதிமன்றம் கண்டுபிடித்துள்ளது. ஏப்ரல் 4ம் நாள் மாலையில், 62வது படையணியிலிருந்து ஒரு ஒயர்லஸ் செய்தியை தங்களது தலைமைக்கு அனுப்பியுள்ளனர். அதில் தாங்கள் நடவடிக்கைகளை தொடங்கிவிட்டதாக எழுதியுள்ளனர். உண்மையில் அவர்கள் அப்போது தங்கள் இடத்தை விட்டு நகரவில்லை. மறுநாளான ஏப்ரல் 5ம் நாள் அதிகாலை 2.30 மணிக்கு, சிந்தாள்நார் முகாமை விட்டு அவர்கள் புறப்பட்டு, புர்காபால் என்ற கிராமத்தில் சோதனை நடத்த சென்றனர். மீண்டும் அரசப்படையினர் முக்ராம் என்ற கிராமத்திற்கு திரும்பி வந்தனர். மதியத்திற்கு மேல் முக்ராம் கிராமத்தின் அருகே மைதானத்தில் அமர்ந்தனர். தண்ணீருக்கும், எரியூட்ட கட்டைகளுக்கும் ஆள் அனுப்பினர். பெரியதொரு பாத்திரத்தில் கிச்சடியை உணவுக்கு தயார் செய்தனர். படையணிக்கு கொடுக்கப்பட்டிருந்த சமைக்கப்பட்ட உணவை அவர்கள் எடுத்துச் செல்லவில்லை. இந்த அளவுக்கு தங்களது பாதுகாப்பில் கட்டுப்பாடு இல்லாமல் இருந்திருக்கிறார்கள் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. ஏப்ரல் 6ம் நாள் அதிகாலையில் முக்ரம் கிராமத்திற்கு திரும்பிய பின், தங்களது ஒயர்லஸ் செட் ஒன்று தொலைந்ததை படையணியினர் உணர்ந்துள்ளனர். இந்த நடமாட்டம் பற்றிய தெளிவான செய்திகளை, மாவோயிஸ்ட்கள் தங்களது ஒற்றர்கள் மூலம் அறிந்த பிற்பாடு, படையணி திரும்பி வரும் போது தங்களது தாக்குதலை நடத்தியுள்ளனர்.
மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் அதிகமாகயிருக்கும் பகுதிகளில், படையணியினர் சோதனை நடத்த தயங்குகின்றனர் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகரான ரெய்பூரில் உள்ள உளவுத்துறை நிலையத்திற்கு, மே 5ம் நாளே அந்த பகுதியில் மாவோயிஸ்ட்கள் அதிகமாக குவிந்துள்ளது பற்றிய செய்தி கிடைத்துள்ளது. அதை அவர்கள் தண்டேவாடாவிலுள்ள சத்தீஸ்கர் காவல்துறைக்கு, மாலையிலேயே அனுப்பியுள்ளனர். ஆனால் வட்டார காவல்துறை அப்படிப்பட்ட செய்தி தாக்குதலுக்கு முன்பு கிடைக்கவில்லை என்பதாக கூறுகிறார்கள். அரசப்படையினர் காடுகளில் போர்புரியும் தந்திரங்களிலும் பயிற்சி பெற்றிருக்கவில்லை. இதே நேரத்தில் உத்திரபிரதேசத்தில் உள்ள ராம்பூர் தலைநகரில் அரசப்படையினர் பல்வேறு ஆயுதங்களையும், தோட்டாக்களையும் வட்டாரத்திலுள்ள கிரிமினல்களுக்கு விற்றதற்காக பிடிபட்டுள்ளனர்.
உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை, மாவோயிஸ்ட்களுக்கு எதிரான கடுமையான போரை நடத்த வேண்டும் என்று கூறும் அதே நேரம், அவரது மனைவியான திட்டகமிஷன் உறுப்பினர் செயலாளர் சுதா பிள்ளை, வளர்ச்சித் திட்டங்களை எடுத்துச் செல்வதன் மூலம் மட்டுமே, மாவோயிஸ்ட்களை வெல்ல முடியும் என்று கூறியுள்ளார்.
அதேநேரம் எழுத்தாளர் அருந்ததி ராய் மாவோயிஸ்ட்கள் எந்தவொரு காந்தியவாதியை விடவும், அதிக காந்தியவாதியாக இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். அரசு செயல்படாத பகுதிகளில் தான் மாவோயிஸ்ட்கள் செயல்படுகிறார்கள் என்றும் செய்திகள் அறிவிக்கின்றன. மேற்கண்ட அறிக்கைகளில் குற்றம்சாட்டப்படும் நிலையில் உள்ள அமைச்சர் ப.சிதம்பரம் அதற்கான பொறுப்பை ஏற்பாரா என்ற கேள்வி, மங்களூர் விமான விபத்திற்கு பொறுப்பேற்கிறேன் என்று அமைச்சர் ரபுல் பட்டேல் தெரிவித்த பிறகு நமக்கும் எழுகிறது.