Monday, May 17, 2010

மே17, வன்னிப்படுகொலையின் ஓராண்டு நினைவு

இன்று 2010ம் ஆண்டின் மே17. இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு, இந்த நாளில் மௌன அஞ்சலி செலுத்தும்படி தமிழ் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. உலகமெங்கும் இருக்கும் தமிழர்கள் இந்த நாளை வலி சுமக்கும் நாளாக, கடைபிடிக்கிறார்கள். தமிழின அழிப்புப் போர் பற்றிய அனுபவங்களை தொகுக்கிறார்கள். வீரச்சாவை அடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் தியாகங்களை எண்ணிப் பார்க்கிறார்கள்.
உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஈழத்தமிழர்கள் நடத்தி வந்த விடுதலைப் போர், ஒரு தலைநிமிர்வை ஏற்படுத்தியது. அதே சமயம் 4வது வன்னிப் போர் அவருடைய இக்கட்டான நிலைமையை சந்திக்கத் தொடங்கிய 2008ம் ஆண்டு இறுதியிலிருந்து, ஒரு இறுக்கமான மனப்போக்கை உலகத்தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. 2009ம் ஆண்டின் ஜனவரி மாதம் தொடங்கி, 7 நாட்டு அரசுகளின் உதவியுடன் சிங்களப் பேரினவாத அரசு நடத்திய இனவாதப் போர், உலகத்தமிழர்களின் உள்ளங்களில் எல்லாம் ஊசி கொண்டு தைத்தது. அந்த இனவாதப் போர் ஒரு இன அழிப்புப் போராக திசைத் திரும்புவதை முன்கூட்டியே உணர்ந்த நிலையில், உலகத்தமிழர்கள் கூக்குரலிட்டனர். முல்லைத் தீவு மாவட்டத்திற்குள் மூன்றரை லட்ச மக்களுடன், தமிழீழ போராளிகள் ஓரங்கட்டப்பட்ட போது, உலகத் தமிழர்கள் புலம்பித் தவித்தனர். 2009ம் ஆண்டின் மே 17ல் ஒரே நாளில் 30,000க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் ஒட்டு மொத்தமாக படுகொலை செய்யப்பட்ட போது, உலகத் தமிழர்கள் வாய் விட்டு அழுதனர். அந்த நாள்தான் இந்த நாள். ஓராண்டு நிறைவுற்று விட்டது. ஆனால் அன்று சிங்கள ராணுவத்திடம் சரணடைந்த 3 லட்சத்திற்கு மேலான தமிழர்கள் நிலை இன்று வரை, கூண்டில் அடைப்பட்ட நிலைமையிலேயே உள்ளது.
வன்னிப் போரில் வென்றதாக சிங்கள பேரினவாதம் கொக்கரித்தது. ஆனால் முள்ளிவாய்க்கால், இரட்டை வாய்க்கால் கிராமங்களில் சிக்கிய அப்பாவி தமிழ்மக்கள் 3 லட்சம் பேருக்கு மேல், ராணுவத்தின் அதிகாரமுள்ள பகுதிக்கு வரும்போது, அச்சத்துடனேயே சிங்கள ராணுவம் நடந்து கொண்டது. அப்பாவி தமிழர்கள் மத்தியிலிருந்து, புலிப்படையின் தற்கொலைப் படையினர் தாக்கி விடுவார்களோ என்ற அச்சத்தில், அனைத்து தமிழ் மக்களையும் ஆடைகளை களைந்து, நிர்வாணமாக தங்கள் அதிகாரப் பகுதிக்கு வருமாறு கட்டளையிட்டது. தமிழர்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள தந்தையும், தாயும், மகனும், மகளும், குழந்தைகளும் நிர்வாணமாக அந்த நெடியத் தூரத்தை நடந்து வந்து கடந்தனர். இத்தகைய ஒரு கொடுமை உலகில் எந்த ஒரு உலகப் போர் சூழலிலும் கூட, நடந்ததில்லை. போர் விதிகள் என்று ஐ.நா. அறிவித்துள்ள எந்த ஒரு விதிகளிலும், இத்தகைய அணுகுமுறை அங்கீகரிக்கப்படவில்லை. தமிழனுக்கு மட்டும் இந்த உலகில் தனியான விதிமுறைகள் தான் பின்பற்றப்படுகின்றன. கடுமையாக உழைக்கக் கூடிய அப்பாவி களாக இருக்கின்ற தமிழினத்திற்கு மாத்திரம் தனியான அணுகுமுறை என்பது புரியப்படவேண்டும். அதற்கான வரலாற்று காரணம் அறியப்படவேண்டும்.
உலகுக்கு வெளிப்படையாக தெரிந்த இன மோதல் நாள் 1983ம் ஆண்டின் ஜூலை 23. அன்றைய நாளில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை, சிறைக்குள் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை, யுலைப் படுகொலை நாள் என்பதாக ஈழத்தமிழர்கள் பதிவு செய்தார்கள். இனியும் அமைதியான வழியில், சிங்கள பேரினவாதத்தை எதிர்கொள்ள முடியாது என்று முடிவெடுத்த தமிழ் இளைஞர்கள் பேரினவாத அரசுக்கு எதிராக போர் பிரகடனம் செய்தார்கள்.
30 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆயுதப் போராட்டம் இந்த நாளில் ஒரு முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக, அரசாங்கங்கள் அறிவித்தன. இதுவரை இந்தப் போரில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை, அரசாங்கக் கணக்குப்படி 80,000 பேர். தமிழர்களின் பட்டியலில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்று அறிவிக்கப்படுகிறது. விடுதலைப்புலிகளின் செயல் தந்திரங்களில் அல்லது ராணுவ முறைகளில் பயங்கரவாதம் இருப்பதாக, உலக வல்லரசுகள் குற்றம் சாட்டினர். அதனால் அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள், இந்தியா உட்பட 32 நாட்டு அரசாங்கங்கள், புலிகளை பயங்கரவாத அமைப்பு என்று அறிவித்து தடை செய்தனர். போர் முடிந்து விட்டது என அறிவித்த பிற்பாடும், விடுதலைப் புலிகள் முற்றுமுழுதாக அழிந்து விட்டனர் என்று கூறி பெரு மகிழ்ச்சியடைந்த இந்திய அரசு, சில நாட்கள் முன்பு புலிகள் மீதான தடையை இன்னமும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்துள்ளது.
இந்த 30 ஆண்டு ஆயுதப் போராட்ட காலத்திற்குள், 3 முறை பேச்சு வார்த்தை காலம் என்று அறிவிக்கப்பட்டு, மேசைப் பேச்சும் நடந்தது. ராஜீவ் ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தையொட்டி, 1987ல் இலங்கை சென்ற இந்திய அமைதிப்படை ஒரு பேச்சு வார்த்தைக்கான சூழலை ஏற்படுத்தியது. அது 1987ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரை நீடித்தது.
இந்திய இலங்கை அரசுகளின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அதிகார பிரதிநிதித்துவத்தை ஏற்றுக் கொள்ளாத புலிகள் மீது, இந்திய ராணுவம் மோதல் கொள்ளத் தொடங்கியது. அதனாலேயே முதல்கட்ட பேச்சு வார்த்தை, தொடக்க காலத்திலேயே மறைந்து விட்டது. 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம், புலிகள் பக்கத்திலிருந்து தன்னார்வமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அனைத்து நாட்டு மேற்பார்வையுடன் கூடிய ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் 2002ம் ஆண்டு, அரசுக்கும், புலிகளுக்கும் இடையில் கையெழுத்தானது. 2005ம் ஆண்டு அத்தகைய சூழலிலும் விரிசல் ஏற்பட்டது. 2006ம் ஆண்டு ஜூலையில் தொடங்கி, புலிகளுக்கு எதிராக ராணுவத்தின் தாக்குதல் அதிகரித்தது.
அதையொட்டி கிழக்கு மாகாணத்திலிருந்து புலிகள் பின்வாங்கிக் கொள்ள, சிங்கள ராணுவம் கிழக்கே வென்று விட்டதாக அறிவித்தது. 2007ம் ஆண்டு வடக்கு மாகாணங்கள் மீது ராணுவம் தனது தாக்குதலை விரிவுபடுத்தியது. 2008ம் ஆண்டு ஜனவரி 2ம் நாள் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கிக் கொள்வதாக அறிவித்தது. அதன் பிறகு தொடர்ந்த 4வது வன்னிப்போர்தான், தமிழனை இந்த நிலைமைக்கு தள்ளியது.
இலங்கையில் நடக்கும் இன உரிமைப் போர், வீச்சாக வளர்ந்ததற்கும் பிறகு வீழ்ந்ததற்கும், வெளிச்சக்திகளின் காரணங் களும் ஆராயப்படவேண்டும். மே8ம் நாள் சென்னையில் ஒரு வார ஏட்டால் நடத்தப் பட்ட கருத்தரங்கில் பேசிய பிரமுகர்கள் ஒரு செய்தியை சொன்னார்கள். இந்திய அரசு 4ம் வன்னிப்போரில் தமிழர்கள் தோற்பதற்கு முக்கிய காரணமாக இருந்ததாக குற்றம் சாட்டினார்கள். இந்திரா காந்தி காலத்திலிருந்து இந்தியாவின் தலையீடு என்பது, ஈழத்தமிழர்களின் உரிமைப் போருக்கு கேடு விளைவித்தது என்றும் கூறினார்கள். 80ம் ஆண்டுகளில் தொடக்கத்திலிருந்தே அத்தகைய தலையீடுகள் நடத்தப்பட்டன. இந்தியாவில் இருக்கின்ற தேசிய இனங்கள் தங்களது சுயநிர்ணய உரிமைகளுக்காக, போரிட்டு வரும் போது, இந்திரா காந்தி அரசு இலங்கையில் வாழும் ஈழத் தமிழருக்கு எந்த விதத்தில் நியாயம் செய்ய தலையிட்டார் என்பதாக இப்போது அறிவு ஜீவிகள் விவாதிக்கிறார்கள்.
தொடக்கத்திலிருந்தே இந்திய அரசுக்கு ஈழத்தமிழர்களின் உரிமைப் போரில் அக்கறை இல்லை. ஆனாலும் கூட அவர்களை பல்லாயிரக்கணக்கில் இந்தியாவிற்கு தருவித்து, ஆயுதப் பயிற்சி கொடுத்து, ஆயுதங்கள் கொடுத்து ஊக்குவித்த இந்திய அரசின் தொலை தூர நோக்கம் என்ன என்று விவாதிக்கிறார்கள். இப்போது நேரடி தலையீட்டின் மூலம், ஈழப்போர் தோற்பத ற்கும், தமிழீன அழிப்பு நடப்பதற்கும் காரணமாகி விட்டதாக கருதுகிறார்கள்.
ஒரு இனத்தின் விடுதலைக்காக போராட புறப்பட்ட இளைஞர்கள், அடுத்த நாட்டின் அரவணைப்பை முழுமையாக சார்ந்து நின்ற வரலாறு இப்போது கேள்விக்குள்ளாக்கப் பட்டுள்ளது. இதைத்தான் அன்றே கவிஞர் இன்குலாப் எழுதும் போது,
“நமது அவசரத்தில் அட்டைகளிடம் போய் ரத்ததானம் கேட்க வேண்டாம்.
கம்சனின் பிடியில் ஈழக்குழந்தை கதறுகின்றது உண்மைதான்.
அதற்காக பூதகியைப்போய் பாலூட்டச் சொல்லாதீர்கள்.” அதுதான் நினைவுக்கு வருகிறது.