Saturday, May 15, 2010

ஈரான் எரிவாயு குழாய், தெற்காசிய முகத்தை மாற்றும்

இன்று இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, ஈரான் செல்கிறார். வளரும் நாடுகளின் ஜி15 உச்சி மாநாடு மூன்று நாட்கள் நடக்க இருக்கிறது. அப்போது ஈரானிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் மனோசெகர் மோட்டாக்கியை சந்திக்கிறார். அந்த சந்திப்பில் ஈரான் பாகிஸ்தான் இந்தியா எரிவாயு குழாய் திட்டம் பற்றி பேசுகிறார்.
70 லட்சம் டாலர் விலையுள்ள அந்த எரிவாயு திட்டம், மீண்டும் உயிர் பெறுமா என்று ஏங்குகிறது. அத்தகைய ஒப்பந்தத் திற்கு தடையாக உள்ள அனைத்தையும் நீக்கி, உயிர் பெற வைக்கமுடியும் என்று அதன் அனைத்து பங்காளிகளும், நேர்மை யாக நம்புகிறார்கள் என்பது கிருஷ்ணாவின் கருத்து.
அத்தகையதொரு ஒப்பந்தத்திற்கு அனைத்து தடைகளையும் போட்டுக் கொண்டிருப்பது அமெரிக்காதான் என்பது உலகறிந்த உண்மை. ஏற்கனவே ஒரு கட்டுரையில் நாம் குறிப்பிட்டது போல, அத்தகையதொரு ஒப்பந்தத்திற்கு முயன்றதால்தான் அமெரிக்க முயற்சியால் நட்வர் சிங், அமைச்சரவையிலிருந்து அகற்றப்பட்டார். அடுத்து பெட்ரோலிய அமைச்சராக இருந்த மணிசங்கர்ஐயர் இந்த குறிப்பிட்ட ஒப்பந்தத்திற்கு முயற்சி எடுத்ததால்தான், அமெரிக்க நிர்ப்பந்தத்தில் ஐயரது அமைச்சர் பொறுப்பு மாற்றப்பட்டது.
1988ம் ஆண்டு ஈரான் நாட்டின் தெற்கு பார்ஸ் வெளியில், இயற்கை எரிவாயு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதிலிருந்து ஈரான் அரசாங்கம் அதிகமான முயற்சி எடுத்து எரிவாயு ஏற்றுமதியை பிறநாடுகளுக்கு அனுப்புவதில் கவனம் செலுத்தியது. இந்தியா, பாகிஸ்தான் போன்ற தெற்காசிய நாடுகளில், இயற்கை எரிவாயு இருப்பு மிகவும் குறைவாக இருப்பதால், கிடைக்கின்ற எரிவாயு தேவைக்கு போதாமல் இருப்பதால், அங்கே அதிகமான லாபத்திற்கான வாய்ப்பை ஈரான் அரசு சிந்தித்துப் பார்த்தது.
1995ம் ஆண்டில் பாகிஸ்தானும், ஈரானும் ஒரு தொடக்க நிலை ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். பாரசீக வளைகுடாவில் இருக்கும் ஈரானிய தெற்கு பார்ஸ் இயற்கை எரிவாயு வெளியிலிருந்து, இயற்கை எரிவாயு குழாயை கராச்சியுடன் தொடர்பு கொள்ள கட்டியமைக்க வேண்டும் என்பதுதான் அந்த ஒப்பந்தம். கராச்சி அரபிக் கடலில் இருக்கின்ற பாகிஸ்தானின் முக்கியமான தொழில்துறை துறைமுகம். அதன் பிறகு அதே எரிவாயு குழாயை பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு நீட்டிக்கலாம் என்ற முன்வைப்பை ஈரான் வைத்தது.
ஈரானின் இயற்கை வாயு ஏற்றுமதியால் பாகிஸ்தானுக்கு பயன்கிடைக்கும் என்பது மட்டுமின்றி, இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய பாகிஸ்தான் நிலத்தை போக்குவரத்து பாதையாக பயன்படுத்தல் என்பதும் பாகிஸ்தானிற்கு இன்னொரு லாபம். இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் நிலவும் வரலாற்றில் பதட்ட உறவு நீடிப்பதால், இந்திய அரசுக்கு அதில் தயக்கமிருந்தது. அதனால் மாற்று வழியாக ஆழ்கடல் எரிவாயு குழாய் அமைத்தால், பாதுகாப்பு பிரச்சினை எழாது என்றும் இந்திய அரசு கருதியது.
2000வது ஆண்டில் இந்தியாவும், ஈரானும், பாகிஸ்தானும் தங்களது அரசாங்க அதிகாரிகள் மூலம், குழாய் வரும் பாதை, போக்குவரத்து வழி, மற்றும் பூகோள அரசியல் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்தார்கள். அத்தகைய பேச்சு வார்த்தையே இரு நாடுகளுக்கும் இடையிலும், பிராந்தியத்திற்கு உள்ளேயும் இருக்கும் அரசியலில் முக்கியமாக கருதப்பட்டது. இயற்கை எரிவாயு வருவதன் மூலம் பொருளாதார மற்றும் வளர்ச்சி பலன்கள் கிடைக்கும் என்பதால், இந்தியா, ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள் காஷ்மீர், ஆப்கானிஸ்தான், தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள் ஆகிய பிராந்திய மோதல்களில், அதற்கான கொள்கைகளில் தங்களது பாத்திரங்களை மறுமதிப்பீடு செய்யத் தொடங்கினர்.
இந்த நாடுகள் தங்கள் தேவை யையொட்டியும், வளர்ச் சிக்காகவும் ஏற்றுக் கொண்டுள்ள எரிவாயு குழாய் திட்டம், பிராந்திய மோதல்களை தீர்க்கும் பட்சத்தில், ஒரு சமாதானத்திற்கான குழாய் திட்டமாக மறு உருப்பெற்றுள்ளது. அதன் மூலம் தெற்காசியாவின், பிராந்திய அரசியல் முகமே மாறுவதற்கான ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது. இது பொருளாதார ஒத்துழைப்புகள் எப்படி சமூக மற்றும் அரசியல் பரிமாற்றத்தின் அதிகாரத்தை மாற்றியமைக்கின்றன என்பதற்கான முன்னுதாரணமாக நிற்கின்றது.
பிரச்சினைகள் பாகிஸ்தானிற்கும், இந்தியாவிற்கும் மட்டுமே இருக்கவில்லை. பாகிஸ்தானும், ஈரானும் முஸ்லிம் நாடுகள் என்பதால் அவர்களுக்குள் பிரச்சினை இல்லை என்று கணிக்கக் கூடிய, முஸ்லிம் அல்லாத பார்வையும் சரியல்ல. ஆப்கானிஸ்தான் பிரச்சினையில் பாகிஸ்தானிற்கும், ஈரானுக்கும் ஒரே பார்வை கிடையாது. அமெரிக்க ஆதிக்கத்தை ஒப்புக்கொள்ளும் பாகிஸ்தான் அரசு போல, ஆப்கானிஸ்தான் சிக்கலை ஈரான் பார்ப்பதில்லை. இந்த பிராந்தியத்தில் இருக்கின்ற ஷியா சன்னி என்ற பிரிவினர்களுக்கு இடையில் உள்ள சிக்கலிலும் ஈரான், பாகிஸ்தான் அரசுடன் ஒத்துப்போவதில்லை. ஈரான் நாடு முழுமையாக ஷியா பிரிவினரின் செல்வாக்கில் இருக்கிறது.
ஆனால் பாகிஸ்தானில் ஷியா பிரிவினர், சன்னி பிரிவினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். இத்தகைய முரண்பாட்டையும் கூட பொருளாதார தேவைகளையொட்டி, எரிவாயு குழாய் சமரசம் செய்து வைக்கிறது. அதனால் பொருளாதார உலகமயமாக்கல் காலத்தில், வணிகம் பிராந்தியத்திற்கு உள்ளேயும், வெளியேயும் மோதல்களை தவிர்க்க உதவுவது இயற்கையான ஒரு செயல்பாடுதான்.
உலகில் இருக்கின்ற இயற்கை எரிவாயு இருப்பில், ஈரான் நாட்டில் 9% இருக்கிறது. எண்ணெய் வள நாடுகளிலேயே, 2வது எண்ணெய் வள உற்பத்தி நடப்பது ஈரானில்தான். எண்ணெய் வளம் போலவே இயற்கை எரிவாயு உற்பத்தியிலும் உலகின் 2வது பெரிய நாடாக ஈரான் திகழ்கிறது. 812 லட்சம் கோடி கனஅடி வரை அது உற்பத்தி செய்கிறது.
அதே சமயம் ஏற்றுமதிக்காகவும் ஈரான் துடிக்கிறது. அதனால்தான் இந்தியாவுடன் உள்ள ஏற்றுமதிக்கான முன்வைப்பை 1993ம் ஆண்டிலிருந்து முயற்சிக்கிறது. பாகிஸ்தானின் முக்கிய நகரங்ளான கராச்சிக்கும், முல்தானுக்கும் பாரசீக வளைகுடாவில் உள்ள தெற்கு பார்ஸ் வெளியிலிருந்து வரயிருக்கும் இந்த எரிவாயு குழாய் நீட்டிக்கப்பட்டு, இந்தியாவில் உள்ள டெல்லிக்கு எடுத்து வரப்படும். ஈரானில் உள்ள அசாலுயே, பாகிஸ்தானில் உள்ள குஸ்தர், கராச்சி, முல்தான், டெல்லி என்பதாக அந்த பாதை வகுக்கப்படுகிறது.
ஈரானிலிருந்து கராச்சி வரை 870 மைல் நீளம் கொண்டதாக அந்த குழாய் இருக்கும். மொத்தம் 2670 கி.மீ. நீளமுள்ள, 48 விட்டம் கொண்ட குழாய் 32 லட்சம் டாலர் எரிவாயுவை எடுத்துச் செல்லும். போக்குவரத்துக்கு வழி விடுவதன் மூலம் பாகிஸ்தான் 5,000 லட்சம் டாலரை சம்பாதிக்கும். ஆஸ்திரேலியா நாட்டின் பி.எச்.பி. கம்பெனி, மலேசியா நாட்டின் என்.ஐ.ஜி.சி., பிரெஞ்சு நாட்டின் பெட்ரோனாஸ் கம்பெனிகள் இந்த குழாய் கட்டுமானத்தில் ஈடுபடும் என தெரிகிறது. 1999ம் ஆண்டு இந்தியாவும், ஈரானும் ஒரு தொடக்க நிலை ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
இத்தகைய இருநாட்டு பரஸ்பர ஒப்பந்தங்கள் போதாது. முத்தரப்பு ஒப்பந்தம் ஒன்று மூன்று நாடுகளுக்கு மத்தியில் போடப்படவேண்டும்.
மேற்கண்ட வர்த்தக உறவு தெற்காசிய நாடுகளுக்குள், முதன்மையான நிலையை கைப்பற்றியுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குள் இருக்கும் பரஸ்பர சார்புத்தன்மை கொண்ட ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தும். அதுவே இந்த பிராந்தியத்தில் உள்ள இரு பெரும் நாடுகளுக்கு மத்தியில் உள்ள பிளவை பயன்படுத்தி, அமெரிக்கா தனது தலையீட்டை செய்வதை தவிர்க்கும்.
எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைகளுக்கும், அமெரிக்காவையும், அமெரிக்கா சார்பு நாடுகளையும் எதிர் பார்த்து நிற்பதை ஒரு முடிவுக்கு கொண்டு வரும். இத்தகைய இயற்கையான, தேவையின் அடிப்படையிலான திட்டமாக, இந்த சமாதான எரிவாயு குழாய் திட்டம் அமைவதை வரவேற்கலாம்.