Saturday, April 24, 2010

ஈழத்தில் பெண்ணடிமை உடைய, புலிகள் காரணமா?

உலகம் எங்கும் இருப்பது போல, இலங்கைத் தீவிலும் அதிலும் ஈழத்தமிழர் தேசத்திலும், ஆண்களின் ஆதிக்கம்தான் கோலோச்சி வருகிறது என்பது பொதுவான மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பெண்ணுரிமையாளர்களின் புரிதல். ஆணாதிக்கம் என்பதோ, பெண்ணடிமை என்பதோ பண்பாட்டு அரங்கில், அரசியல் அரங்கில், பொது வாழ்க்கையில் இருந்து வரக்கூடிய ஒரு அவலம். அதில் பண்பாட்டு அரங்கு என்பது பல்வேறு அம்சங்களைக் கொண்டதாக இருக்கிறது. உடை உடுத்து வதற்கான உரிமை, குடும்பத்தில் வகிக்கின்ற பொறுப்பு, ஆகியவை கூட, பண்பாட்டு அரங்கில் இருக்கின்ற முக்கிய அம்சங்கள். பொதுவாக உலகம் எங்கிலும் இருக்கின்ற ஒவ்வொரு நாட்டிலும் நிலவுகின்ற பாலின வேறுபாடுகளையும், பாலின முன்னேற்ற த்தையும் ஐ.நா.வின் மதிப்பீட்டிலிருந்து பார்த்தோமானால் இலங்கைத் தீவும், அதிகமான தூரம் செல்லவேண்டியிருக்கிறது என்பதாக புரிந்து கொள்ளலாம். 1948ம் ஆண்டு காலனிய ஆட்சி முறையிலிருந்து சுதந்திரம் பெற்றதாக இலங்கைத் தீவு அறிவிக்கப்பட்ட பிற்பாடு அங்கு நிலவுகின்ற மானூட வளர்ச்சி விகிதம் முன்னேறியிருக் கிறது என்பது ஒரு மதிப்பீடு. எழுத்தறி விலும், குழந்தைப் பிறப்பிலும், குழந்தை வளர்ப்பிலும் தேசிய அளவில் முன்னேற்ற மான அம்சங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. வரலாற்று ரீதியாக அரசாங்கத்தினுடைய மூலதனம், அடிப்படை சுகாதாரத்திலும், கல்வியிலும் இருப்பதாக எண்ணப்படுகிறது. ஐ.நா.வின் வளர்ச்சித் திட்டம், 1998ம் ஆண்டின் தேசிய வளர்ச்சி அறிக்கையின் படி, வறுமையின் மட்டம் குறைந்திருப்பதாக கூறுகிறது. மற்ற ஆசிய நாடுகளை விட, சராசரி பாலின வளர்ச்சி கூடியிருப்பதாகவும், அது 69% இருப்பதாகவும், அதே சமயம் பாலின அதிகார மேம்படுதல் மிகவும் குறைவாக 20%தான் இருப்பதாகவும் கூறப்படுகிறது. உலகத்திலேயே ஒரு பெண்ணை நாட்டின் தலைவியாக கொண்டு வருவதில் முதல் நாடாக இருக்கிறது என்றும் பெயர் பெற்றுள்ளது. பாலின வளர்ச்சிக்கும், பாலின அதிகார மேம்படுத்தலுக்கும் இருக்கின்ற வேறு பாடுகள் இங்கே கவனிக்கப்படவேண்டும். அதாவது இலங்கையில் பெண்கள் மீதான தாக்கத்தை செலுத்தும் மறைந்திருக்கும் உண்மைகள் ஆய்வு செய்யப்படவேண்டும். அவை சமூக, பண்பாட்டு, பொருளாதார தன்மைகளையொட்டி நடந்துள்ளன. நடந்து முடிந்த போர், பெண்கள் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு மாகாணங்களில் மட்டும் 18,657 போரினால் விதவையானவர்கள் இருக்கிறார்கள். தென்னிலங்கையில் போருக்குச் சென்று மரணமடைந்த சிங்கள போர் வீரர்களது மனைவிகள் பல்லாயிரக்கணக்கில் விதவைக ளாக வீட்டில் அடைந்திருக் கிறார்கள். இலங்கையில் சுமார் 22% குடும்பங்களில், பெண்கள் தலைமை எடுத்து செயல்படும் நிலைமை இருக்கிறது. வருமானம் பெறுகின்ற வழிகளைப் பற்றி குறைந்த அளவுக்கு புரிதல் மட்டுமே உள்ள பெண்கள்தான், பல குடும்பங்களுக்கு உணவு பெற்றுக் கொடுக்கும் பொறுப்பில் இருக்கின்றனர். விதவைகளாக இருக்கின்ற பெண்களின் நிலைமை பொதுவாக மோசமாக இருக்கிறது. நிலவுகின்ற பண்பாட்டு சூழல் அவர்களை பரிதாபகரமான சூழ்நிலையில் தள்ளியுள்ளது. இத்தகைய பெண்களுக்கு தவிர்க்க முடியாமல், சமூக தனிமைப்படுதலே வறுமையை வரவழைத்து விடுகிறது. இளம் வயதிலேயே பல பெண்கள், விதவைகளாக மாறிவிடுகிறார்கள். பெண்கள் மத்தியிலுள்ள எழுத்தறிவு என்பது பிராந்தியத்திற்கு பிராந்தியம் மாறுபடுகிறது. ஆனாலும் பல ஆண்டுகளாக 87% எழுத்தறிவு பெண்கள் மத்தியில் நிலவுகிறது. நகர்ப்புறங்களுக்கும், கிராமப் புறங்களுக்கும் மத்தியில் உள்ள வேறுபாடும் கூட, இன்னமும் நிலவி வருகிறது. அவை தேசிய வளர்ச்சி மதிப்பீட்டில் இடம் பெறவில்லை. நகர்ப்புறங்களில் பெண்களுக் கான எழுத்தறிவு 90% என்றும், கிராமப்புறங் களில் 78% என்றும் மதிப்பீடு செய்யப்படு கிறது. பெண்கள் மத்தியில் இருக்கின்ற ரத்தசோகை 65% என்பதாக கூறப்படுகிறது. இவை அச்சடித்த ஆவணங்களில் இடம் பெறுவதில்லை. கல்வி என்பது வேறு ஒரு பிரச்சினை 1989ம் ஆண்டு இலங்கையில் உள்ள பெண்கள் பல்கலைக்கழகங்களில் 42% படிக்கச் சென்றார்கள் என்றும், 1999ல் 52% படிக்கச் சென்றார்கள் என்றும் கூறப் படுகிறது. அதிலும் பல்கலைக்கழக படிப்பு, மொத்த மக்கள் தொகையில் 1%க்கு மட்டும்தான் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு துறைகளில் பெண்களுடைய பங்களிப்பு இல்லை. வேலை வாய்ப்பு என்ற பிரமீடில், அடித்தளத்தில்தான் பெண்களுக்கு இடம் கிடைத்துள்ளது. அப்படிக் கிடைத்தாலும் கீழ்மட்டத்தில், குறைவான திறனில், குறைவான கூலியில் விவசாயத்திலும், தோட்டத் தொழிலிலும் மட்டுமே கிடைத்துள் ளது. ஆண்களை விட பெண்கள் மத்தியில் உள்ள வேலையில்லா திண்டாட்டம் இரு மடங்காக அதாவது 22% ஆக இருக்கிறது. கிடைக்கும் வேலைகளும் அமைப்பு சாரா தொழிலிலும், தற்காலிகத் தன்மையிலும் மட்டுமே இருக்கின்றன. இடம் பெயர்ந்த திறன் பெறாத பெண் தொழிலாளர்கள் 76% இருக்கிறார்கள். இவர்கள் எண்ணெய் வள நாடுகளிலும், தென்கிழக்கு ஆசியநாடுகளிலும் போய் வேலை செய்கிறார்கள். அத்தகைய பெண்கள் சொல்லமுடியாத அளவுக்கு கடினங்களையும், அடிகளையும், சித்ரவதை களையும் வாங்குகிறார்கள். அதில் மரணங்கள் அடிக்கடி சம்பவிக்கின்றன. இருநாடுகளுக்கு மத்தியில் ஆரோக்கியமான ஒப்பந்தங்கள் இல்லாததால், இந்த அவல நிலை தொடர்கிறது. இப்படிப்பட்ட சூழலில் இப்போது வெளிவந்திருக்கக் கூடிய செய்திக் கட்டுரை வித்தியாசமான ஒரு நிலவரத்தை, படம் பிடித்துக் காட்டுகிறது. பழமைவாதக் கருத்துக்கள் மற்றும் பாரம்பரியமாக இருந்து வரும் கட்டுப்பாடுகளில் இருந்தும், யாழ்ப்பாணப் பெண்கள் சிறிது, சிறிதாக விடுதலை பெற்று வருவதாக ஒரு செய்தி அறிக்கை கூறுகிறது. இலங்கையின் உள்நாட்டுப் போர் தமிழ் பெண்களின் மீது ஏற்படுத்திய பாதிப்புக்கள் குறித்து சர்வதேச செய்தி நிறுவனங்களில் வெளிவந்துள்ளது. ஒரு செய்தியாளர் மனித உரிமைகளுக்கான இல்லத்தின் பணியாளரான ஷெரீன் சேவியரைச் சந்தித்து கலந்துரையாடி யுள்ளார். ஈழத்தமிழர்கள் விடுதலை பெறுவதற்காக நடத்தப்பட்ட போரில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோல்வி அடைந்திருந் தாலும், பெண் என்றால் இப்படித்தான் வாழ வேண்டும் என காலாதிகாலமாக இருந்து வரும் கட்டுப்பாடுகளைக் கடந்து யாழ்ப்பாணப் பெண்கள் தமக்கான புதிய வாய்ப்புகளையும், வழிகளையும் தேடுவ தற்கு விடுதலைப்புலிகளுக்கே நன்றி தெரிவிக்க வேண்டும் என ஷெரீன் சேவியர் கூறியதாக அந்தக் கட்டுரை தெரிவித்துள்ளது. தமக்கு தனிப்பட்ட ரீதியில் ஏற்பட்டுள்ள துன்பங்கள் காரணமாகவும் யாழ்ப்பாணப் பெண்கள், சமூக ரீதியான கட்டுப்பாடுகளைக் கடந்து, தமக்கான புதிய வாய்ப்புகளைத் தேடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். போரின் காரணமாக தங்களது கணவன்மாரை இழந்துள்ள ஆயிரக்கணக்கான பெண்களும் இதற்குள் அடங்கியுள்ளனர். இலங்கைப் படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் நடைபெற்ற வேளையில் யாழ்குடா நாட்டிலும், ஏனைய பிரதேசங்களிலும் பெண்கள் முதன்மையான பங்கினை வகிக்க வேண்டியிருந்ததாக ஷெரீன் தெரிவிக்கின்றார். தமது கணவன்மார்கள் உயிருடன் இருந்தாலும் குறித்த சில குடும்பப் பெண்கள் முதன்மையான பங்கினை வகிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். போர் நடைபெற்ற காலப்பகுதியில் தனக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தலின் காரணமாக ஆண் வெளியில் செல்ல முடியாத நிலையில் இருந்ததால், குடும்பத்திற்குத் தேவையான வெளிவேலைகளைச் செய்ய வேண்டிய நிலைக்குப் பெண்கள், சூழல் காரணமாக நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். போர் இடம் பெற்ற காலங்களில் சந்தேகத்தின் பேரில் இலங்கைப் படையினரால் ஆண்கள் வீடுகளிலிருந்து இழுத்துச் செல்லப்பட்ட தால், பல ஆண்கள் விடுதலை இயக்கங்க ளோடு இணைந்து கொள்வதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். இக்காலப் பகுதியில் குடும்பப் பெண்கள் எவ்வாறு நிலைமையினைக் கையாண்டார்கள் என்பதை யாழ்ப்பாணத்தின் முதியவர்கள் கீழ்வருமாறு விவரிக்கிறார்கள். இவர்களுக்கு இரட்டைச்சுமை. குடும்பத்தினை நிர்வகிப்பதோடு, குடும்பம் தொடர்பான தேவையான முடிவுகளையும் எடுக்க வேண்டும். குடும்பத்தினை நிர்வகித்தல் என்ற முதலாவது பணியையே, பெரும்பாலான பெண்கள் காலம், காலமாகச் செய்து பழக்கப்பட்டவர்கள். இந்நிலையில் யாழ்ப்பாணப் பெண்கள் புதிய வாய்ப்பு களைத் தமதாக்குவதைச் சமூகம் அனுமதிக்க ஆரம்பித்துவிட்டது. குடும்ப அங்கத்தினர் களின் நல்வாழ்வு மற்றும் கல்வி ஆகிய விசயங்கள் தொடர்பான முடிவுகளைத் தற்போது பெண்களே எடுத்து வருகின்றார் கள். யாழ்ப்பாணச் சமூகத்தைப் பொறுத்து, இத்தகைய முடிவுகளை எடுப்பது ஆண்களுக்குரிய பணியாகவே கருதப்பட்டு வந்தது. இந்நிலையில் பெண்கள் கூட தம்முடன் இணைந்து செயற்படலாம் என்ற நிலையினை விடுதலைப் புலிகள் உருவாக்கினார்கள். பெண்களுக்கே உரிய வெட்கம் போன்ற இயல்புகளைக் கொண்ட கிராமத்துப் பெண்களை இலட்சியத்துக்காக ஆயுதங்களை ஏந்த வைத்து ஜீன்சுடனும், சட்டையுடனும் இயங்கும் நிலைக்கு விடுதலைப் புலிகள் அவர்களை மாற்றிக் காட்டியிருந்தார்கள். சமூகத்தில் தமக்கிருந்த கட்டுப்பாடுகளை ஒதுக்கிவிட்டு பெண் விடுதலை என்ற இலட்சியத்துடன் இருந்த தமிழ்ப் பெண்கள் தாம் சமமாக நடத்தப்படும் நாளுக்காக காத்திருந்தார்கள். இப்பெண்கள் எதிர்பார்த்த பால் ரீதியான சமத்துவத்தினை விடுதலைப் புலிகள் வழங்கினார்கள் என ஷெரீன் சேவியர் கூறுகின்றார். கணவருடன் இருந்தாலும் பாலினச் சமத்துவம் மற்றும் பெண் விடுதலை தொடர்பில் தெளிவான கருத்துக்களைக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினராக இருந்த அடேல் பாலசிங்கம் போன்ற பெண்கள் தங்களுக்கு முன்னுதாரணமாகச் செயற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராக அன்ரன் பாலசிங்கம் செயற்பட்ட வேளையில், அவரது மனைவியான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அடேல் நடைமுறையில் விடுதலைப் புலிகளின் பெண்கள் பிரிவின் தலைவியாகச் செயற்பட்டு வந்ததாக அவர் குறிப்பிட்டுள் ளார்.விடுதலைப் போர் அதன் இயக்கப் போக்கிலேயே, சாதி வேறுபாடு, பாலின வேறுபாடு ஆகியவற்றை இல்லாமல் செய்து விடுகிறது என்பதற்கு இதுவே நல்லதொரு உதாரணமாகத் திகழ்கிறது.