Monday, April 5, 2010

பெரியாரையும், அம்பேத்கரையும் மதவாதிகள் பயன்படுத்தமுடியுமா?

சமீப நாட்களில் தமிழ் நாட்டு அரசியலில், மாநில அரசாங்கம் அறி வித்த சில திட்டங்களை எதிர்த்து பா.ஜ.க. கட்சியின் மாநில தலைமையிலிருந்து கடுமையான கண்டன அறிக்கைகள் வெளிவந்துள்ளன. அவற்றில் தாங்கள் இதுவரை விலகியே நிற் கும் தத்துவங்களை மேற்கோள் காட் டுகிறார்கள். தங்கள் கொள்கைக்கு எதிரானதாக அவர்கள் நேற்றுவரை அடையாளப்படுத்திக்கொண்ட பெரியார் சிந்தனைகள் மற்றும் அம்பேத்கர் கருத்துக்களை, இன்றைய அரசியல் தேவைகளுக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள். முதலில் அவர்கள் தொடுத்த தாக்குதல், பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென் னரசின் கருத்துக்கள் மீது. அதாவது அந்த அமைச்சர் சமச்சீர் கல்வி பற்றி பேசி இருக்கிறார். அப்படி பேசும்போது அதற்கான புதிய பாடப் புத்தகங்கள் வெளி கொண்டுவருவதைக் குறிப்பிட்டுள்ளார். அந்த புத்தகங்களில் பெரியாரின் கருத்துக்களை வெளியிடுகிறோம் என்று பெருமையாக அறிவித்துள்ளார். வர்ணாசிரம தர்மத்தை எதிர்த்து பெரியார் கூறிய கருத்துக்களை அவற்றில் கொண்டு வருகிறோம் என்று கல்வி அமைச்சர் கூறிய செய்திதான், பா.ஜ.க.வை கண்டிக் கத் தூண்டியிருக்கிறது.
சமச்சீர் பாடத் திட்டத்தில் மதத்தை இழிவு படுத்துவதாக பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ் ணன் கொந்தளித்துள்ளார். சாதி வேறு பாடுகளைத்தான் வர்ணாசிரம தர்மம் என்று அழைக்கிறார்கள். சாதிகள் பிற் போக்கானவை என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள். அதேபோல சாதிகள் இல்லாத சமூதாயத்தைப் படைபோம் என்று அரசியல்வாதிகள் தொடங்கி அறிவுஜிவிகள் வரை கூறு கிறார்கள். சாதி வேறுபாடுகள் சமூகத்தின் இழிவு என ஆராய்ச்சியாளர்கள் எழுதுகிறார்கள். ஆகவே வர்ணாசிரம தர்மத்தை எதிர்ப்பதோ, வேரோடு அழிக்க பாடுபடுவதோ, சாதிகளற்ற சமூதாயத்தை ஏற்படுத்துவதற்காக உள்ள படிக்கட்டுகள் தான். அப்படிப்பட்ட நல்ல கருத்துக் களை, சமூதாயத்திற்கான முன் னேற்றக் கருத்துக்களை பள்ளிக் கல்வி அமைச்சர் கூறினார் என்றால் அதை எந்தொரு அரசியல் கட்சியும் எப்படி எதிர்க்க முடியும்? ஆனால் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் எதிர்க்கின்றார்.
சாதி வேறுபாடு என்ற வர்ணாசிரம தத்துவத்தை வேரோடு அழிக்க பெரியார் சிந்தித்தார் என்பது நல்ல செய்தி என்பதாகத்தான் நாடு ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழ் நாட்டு மக்களும் பெரியாரை சாதி மறுப்பு, சாதி ஒழிப்பு ஆகிய கொள்கைகளிலிருந்துதான் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். பெரியார் கருத்துக்களில் உள்ள கடவுள் மறுப்பு, நாத்திகம் ஆகிய கொள்கைளில் ஈர்க்கப்பட்ட மக்களைவிட, சாதி மறுப்பு மற்றும் சாதி ஒழிப்பு கருத்துக்களில் ஈர்க் கப்பட்டவர்களின் எண்ணிக்கை எப் போதுமே அதிகம். அப்படிப்பட்ட சமூக முன்னேற்றத்திற்கான கருத்துக்களை பெரியார், தமிழக மக்களுக்கு தந்துள்ளார். அவற்றை பள்ளிப் பாடத்தில் சேர்க்க வேண்டும் என்பதுதான் ஆரோக்கியமாக இருக்கமுடியும். ஆனால் அதை பொன்.ராதாகிருஷ்ணன் எதிர்க்கிறார்.
வர்ணாசிரம தர்மத்தை ஒழிப்பது என்பது இந்து மதத்தை ஒழிப்பது என்று பொருள்படும் என ராதாகிருஷ்ணன் ஒரு விளக்க உரை தருகிறார். அப்படியா னால் பொதுமக்களை சாதியரீதியாக பிளவுபடுத்தவதும், அதில் சில சாதிகளை இழிவு படுத்துவதும் ஒரு மதத்தின் கொள் கைகள் என்பதாக வியாக்கியானம் செய்யும் பொன்.ராதாகிருஷ்ணன், இதன் மூலம் அந்த மதத்தை மிகவும் இழிவாக கருதுகிறார் என்பதாக எடுத்துக் கொள்ளலாமா? அடுத்து பெரியாரை ஒரு மதச்சார்பற்றவாதி அல்ல என்றும், அவர் நாத்திக கருத்துக்களை பரப்புரை செய்பவர் என்றும் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மதச்சார்பற்ற அரசு ஒரு மதத்தை அழிப்பதாக கூறிய ஒருவரை எப்படி அங்கீகரிக்கலாம் என்பது அவரது வாதம். மதச்சார்பற்ற அரசு என்றால் என்ன என்று இந்த பா.ஜ.க. தலைவர் புரிந்து கொண்டாரா என்பது நமக்கு புரிய வில்லை.
மதச்சார்பற்ற என்ற சொல் இந்தியா வின் அரசியல் சட்டத்தில் பொறிக்க பட்டுள்ளது. இந்திய அரசின் தன்மைப் பற்றி குறிப்பிடும்போது, அது மதச்சார் பற்ற அரசு என்பதாகத்தான் அறிவிக்கப் பட்டுள்ளது. அதன் பொருளே, அனைத்து மதங்களிலிருந்தும், மத நம்பிக்கை களிலிருந்தும், மத வழிபாடுகளிலிருந்தும் தூர விலகி நிற்பதே ஒரு அரசின் கொள்கை என்பதே. மதச்சார்பின்மையை அதன் சரியான பொருளில் புரிந்து கொள்ளாமல், அதையே மதநல்லிணக்கம் என்று வழங் கப்படும் ஒரு பொருளை, இவர் புரிந்து கொண்டிருப்பாரோ என்று நாம் அச்சப் பட வேண்டியிருக்கிறது. இதே போல 2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில், பெரும்பான்மை மத வெறிச்சக்திகளால் தொடர் படுகொலைகள் சிறுபான்மை மதத்தினர் மீது நடத்தப்பட்ட நேரத்தில், சென்னை தியாகராயநகரில் ஒரு கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தை ஒரு முஸ்லிம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. அந்தக் கூட்டத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் என்று அழைக்கப்பட்ட ஜெயேந்திர சரஸ்வதி என்பவர் பேசினார், அங்கு மதச்சார்பற்ற நிலைப்பாடு பற்றி எடுத்துக் கூறப்பட்ட கருத்துக்களை அவர் எதிர்த்துப் பேசினார். மதச்சார்பற்ற என்றால் எந்த மதமும் வேண்டாம் என்று அர்த்தம் அல்ல என்றும், எல்லா மதமும் வேண்டும் என்று அர்த்தம் என்பதாக, ஒரு புதிய விளக்கத்தை அளித்தார். இந்தப் புரிதலில்தான் மதவாத சக்திகள் இந்தியாவில் நடமாடிக் கொண்டிருக்கின்றன என்பதாக நாம் புரிய வேண்டியிருக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தை எதிர்க்க முடியாததால், அதில் உள்ள மதச்சார்பற்ற என்ற சொல்லை பொருள் மாற்றி விளக்குகிறார்கள் என்பதாகவும் இவர்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். இவர்களது உண்மைப் பெயர்களுக்கு புதிய ஆர்ப்பாட்டப் பெயர்கள் அலங்கரிக்கப்படுவது போல, இந்த நாட்டின் மதச்சார்பற்ற தன்மை யையும், தங்கள் விருப்பத்திற்கு விளங்கிக் கொள்ளவும், விளக்கிக் கொள்ளவும் செய்கிறார்கள்.
பெரியாரின் சாதி ஒழிப்பு என்ற வர்னாசிரம ஒழிப்பு என்பது தீண்டாமை மற்றும் காணாமை ஆகிய முறைகளால் ஒடுக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தின் பல பிரிவுகள் முன்னேற வழிவகுத்துள்ளது. அதனால் மட்டுமே மதவாத அமைப்பாக இருக்கின்ற அரசியல் கட்சியில், ஆதிக்க சாதிகள் மட்டுமே தலைமையேற்ற இடத்தில் மாற்றங்கள் உருவாகி, மேற்கண்ட ஒடுக்கப்பட்ட பிரிவு களிலிருந்து வந்தவர்களும் பொறுப்புக்கு வருவதற் கான வாய்ப்புக்கள் உருவானது. அப்படிப் பட்ட பெரியாரின் கருத்துக்களைத்தான், பள்ளிக் கல்வி அமைச்சர் சமச்சீர் கல்வியில் கொண்டு வருகிறோம் எனக் கூறியுள்ளார்.
அடுத்து இதே தலைவர் அம்பேத்கரை மேற்கோள் காட்டி, தமிழக முதல்வரின் அறிக்கைக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளார். தலித் கிருத்துவர்களுக்கு தலித் பட்டியலில் இடம் கொடுக்க வேண்டும் என்ற முதல்வரின் கடிதத்திற்கு இவர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இந்து மதத்தில் சாதிகள் இருப்பதை அதில் ஒப்புக் கொண்டுள்ளார். கிருத்துவ மதத்தில் சாதிகள் இல்லை என்று புதிய விளக்கத்தை கொடுத்துள்ளார். இந்தியா முழுவதும் இருக்கின்ற கிருத்துவ திருச்சபைகள் அனைத்தும் இணைந்து, தலித் கிருத்துவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக குரலெழுப்பி வருவது, ஏனோ இவருக்கு தெரியவில்லை. இந்தியாவில் இருக்கும் கிருத்துவ மதத்தில், சாதிகள் அப்படியே இருக்கின்றன என்பதும், தலித் கிருத்துவர்கள் தீண் டாமைக்கு உள்ளாக்கப் படுகிறார்கள் என்பதும், அனைவராலும் ஒப்புக் கொள் ளப்பட்ட உண்மை.
ஆதிக்க சாதிகளின் அதிகாரப் பறிப்பு, கிருத்துவ தேவலாயங்களுக் குள்ளேயும் நடந்து வருகின்ற ஒரு செயல்தான் என்பது இந்தத் தலைவருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் கூட கட்சி அரசியல் காரணங்களுக்காக, மதவாதத்தை தூண்டிவிட்டாவது அரசியல் செய்ய வேண்டும் என்ற அவசியத்திற்காக, இது போன்ற கண்டனங்களை அவர் எழுப்பி யிருக்கலாம். அதற்காக அம்பேத்கரை துணைக்கு அழைக்கிறார். இந்தியாவில் இருக்கின்ற மதத்தில் நிலவும் சாதி ஒடுக் கலை நீக்க, தாழ்த்தப்பட்டோருக்கு அம்பேத்கர் தனி ஒதுக்கீடுகளை முன் வைத்தார் என்று ஒரு வாதத்தை முன் வைக்கிறார். அதையும் குறிப்பிடும் போது தலித் மக்களால் வெறுக்கப்படும், ஹரிசன் என்ற சொல்லை பயன்படுத்துகிறார். இந்து மதத்தில் தாழ்த்தப்பட்டோர் மீதான தீண்டாமை கொடுமைக்கு முடிவு கிடைக்காத காரணத்தால், அந்த மதத்தையே விட்டுவிட்டு வெளியேறி, புத்த மதத்திற்கு மாறிச் சென்றவர் அம்பேத்கர். அதுமட்டுமின்றி தன்னைப்போலவே மதம் மாற தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்தவர் அம்பேத்கர் என்ற செய்தியும் இந்தத் தலைவருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியவில்லை. உண்மையில் இந்து மதத்தில் இருக்கின்ற தலித் மக்கள் மீது கரிசனை இருக்குமானால், இந்து தலித்துகள் மற்றும் கிருத்துவ தலித்துகள் அனைவருக்கும் சேர்த்து இடஒதுக்கீட்டின் விழுக்காட்டு அளவை அதிகப்படுத்த வேண்டும் என்று இந்த அரசியல்வாதி குரல்கொடுத்திருக்க வேண்டும். மாறாக தங்கள் மதவாத வெறுப்புகளை உமிழ்வதற்கு, பெரியா ரையும், அம்பேத்கரையும் பயன்படுத்த முயற்சித்தால், தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டு மக்கள் ஏமாறத் தயாராக இல்லை என்பதை நாம் உறுதிபடக் கூற வேண்டியிருக்கிறது.