Saturday, April 3, 2010

தலித் கிருத்துவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதா?

நேற்று இந்திய தலைமை அமைச் சருக்கு தமிழக முதல்வர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். வழக்கமாக தமிழக முதல்வரின் கடிதம், தமிழ்நாட்டின் தேவைகளைப் பற்றியதாக இருக்கும். காவிரி நீர் தீர்ப்பாணையம், முல்லைப் பெரியாறு அணைக்கட்டு உயர்த்துவது, பாலாற்றில் கட்டப்படும் தடுப்பணை, போன்ற தமிழ்நாட்டின் தேவைகள் பற்றி, வழமையாக தமிழக முதல்வர் இந்தியத் தலைமை அமைச் சருக்கு கடிதங்கள் எழுதுவதுண்டு. சில நேரங்களில் ஈழப்பிரச்சனை சம்மந்தமாகவும், ஒரு கட்டத்தில் வன் னிப்போரில் பொதுமக்களை அழிப்பது சம்மந்தமாகவும், தமிழ் நாட்டில் வாழும் ஈழ அகதிகள் குறித் தும், தமிழக முதல்வர் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கிற்கு கடிதங்கள் எழுதியதுண்டு. ஆனால் இந்தியா தழுவிய ஒரு முக்கிய சமூகப் பிரச்சனையின் மீது, அதிலும் குறிப்பாக தலித் மக்களின் ஒரு சாராரது அடிப்படையான உரிமை குறித்து இப்போது கடிதம் எழுதியுள்ளார்.
தாழ்த்தப்பட்ட மக்களாக இந்திய துணைக் கண்டத்தில் ஒடுக்கப்பட்டு கிடக்கின்ற தலித் மக்கள் சொல்லொ ணாக் கொடுமைகளுக்கு ஆளாகி வருகிறார்கள். அவர்கள் மீது தீண் டாமை என்ற அடக்கு முறையும், அவமதிப்பு முறையும் பாய்கிறது. அப்படிப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, மதவேறுபாடின்றி
சாதிய ரீதியான ஒடுக்குமுறையை மட்டுமே கணக்கிலெடுத்து இடஒதுக் கீடு கொடுக்கப்பட வேண்டும் என்பது சரியான ஒரு கோரிக்கை. இன்றைய சமூகத்தில் அது ஒரு முற்போக்கான கோரிக்கையும் கூட. கிராமப்புறங்களில் குறிப்பாக நடத்தப்படுகின்ற அடக்குமுறைகளில், ஒருவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று கவனிப்பதை விட, எந்த சாதியைச் சேர்ந்தவர் என்பது தான் கவனிக்கப்படுகிறது.
சாதியை வைத்து மட்டுமே ஒருவர் கிராமப்புறங்களில் மரியாதை பெற முடிகிறது. ஒருவருடைய வாழும் இடத்தைக் கூட, கிராமப்புறங்களில் சாதி தான் தீர்மானிக்கிறது. மதம் மாறியதால் மட்டுமே எந்தவொரு சாதிக்காரரும், தன்னுடைய கிராமத் தில் மாற்றுச் சாதியினர் வாழும் தெருவிற்குள் குடியேறுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. வாழும் இடம், பழகும் மக்கள், உறவுக் காரர்கள், ரத்த உறவுகள், மணம் முடிப்போர் இப்படியாக அனைத் துமே சாதியரீதியாக மட்டுமே தீர் மானிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு நாட்டில் இருக்கின்ற அல்லது மாறுகின்ற மதத்தை வைத்து ஒரு மனிதருக்கு வழங்கப்பட வேண்டிய ஒதுக்கீடுகளை முடிவு செய்யாமல், அவர் அழுத்தப்பட்டுள்ள சாதியை வைத்து மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என்ற இந்த கோரிக்கை மிகவும் நியாயமான ஒன்று.
முதல்வர் மேற்கோள் காட்டுகின்ற 1950ம் ஆண்டுக்கான தாழ்த்தப் பட்டோர் சட்டம், 1956ம் ஆண்டுக் கான தாழ்த்தப்பட்டோர் சீரமைப்புச்
சட்டம், 1976ம் ஆண்டுக்கான எஸ்.சி, எஸ்.டி. சட்டத்திருத்தம் ஆகியவை ஒருவர் இந்துவாயிருந்தாலும், சீக்கியர் என்றாலும், புத்தமதத்தைச் சேர்ந்தவர் என்றாலும் எந்த மதத் தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர் என்றால் அவரை தாழ்த்தப்பட்டவர் என்றே கருத வேண்டும் என்பது பொருத்தமாக இருக்கிறது.
இந்து மதத்தில் இருக்கின்ற தாழ்த்தப்பட்ட மக்களை, பட்டியல் இனத்தவர் என்பதாக வரையறை செய்து, அவர்களுக்கான தனிச்சலு கைகளை அல்லது உரிமைகளை அரசியல் சட்டத்திலேயே அடிப்படை உரிமையாக இணைத்தார்கள். 1950ம் ஆண்டு தாழ்த்தப்பட்டோர் சட்டத்தில் மூன்றாவது பாராவில் 56ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது என்றும், அதில் சீக்கிய மதத்தைச்
சேர்ந்த தாழ்த்தப்பட்டோரையும், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டது என்பதையும் சுட் டிக்காட்டுகிறார். அதுமட்டுமின்றி 1990ம் ஆண்டு புத்தமதத்தை ஏற்றுக் கொண்ட தாழ்த்தப்பட்ட மக்களையும், இந்த பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதற்காக ஒரு சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந் தார்கள். உண்மை விவரங்கள் இப்படியிருக்கையில், கிருத்துவ மதத்திற்கு மாறிச் சென்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும், அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு கிடைக் காமலேயே இருக்கிறது.
முதல்வர் எழுதிய கடிதத்தில் நாடாளுமன்றச் சட்டப்பிரிவுகள் 341(2) மற்றும் 342(2) ஆகியவற்றின் கீழ் பிரதமரே நேரடியாக தலையிட்டு, இதற்கான தீர்வைக் கொண்டுவர வேண்டும் என்று கூறியுள்ளார். மேற்கண்ட கோரிக்கை தொடர்ந்து இருக்கின்ற ஒன்று தான் என்றாலும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது என்பதை அந்த கடிதத்தில் முதல்வர் பகிர்ந்து கொள்கிறார். இத்தகைய கடிதத்தின் தேவை நிலவுகின்ற சாதிய ரீதியான சமூகச் சூழலாலும், நடை முறையில் உள்ள கிருத்துவ திருச்சபைகளின் குரல்களாலும் இன்றைக்கு மீண்டும் வெளிவந்திருக்கலாம். ஆனால் இத்தகைய கோரிக்கைக்கான அடிப்படை சமூகச் சூழல் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் இருக்கும் கிராமங் களில் இந்து மத நம்பிக்கை கொண்ட தாழ்த்தப்பட்ட மக்கள், தங்கள் விருப்ப தெய்வங்களை வழிபட, கோவில்களுக்கு செல்வதில் கூட, பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதுதான் சிவகங்கை மாவட்டத்தில், தேவகோட்டை வட்டத்தில் கண்டதேவி கிராமத்தில் உள்ள
சொர்ணமூர்த்தீஸ்வரர் ஆலையத்தில், தேர்வடம் பிடிக்க தாழ்த்தப்பட்டோர் அனுமதிக்கப்படவில்லை. நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று வந்தும் கூட, ஆதிக்கவாதிகளின் தடையை முழுமையாக அரசு நிர்வாகத்தாலும், காவல் துறையாலும் உடைக்க முடியவில்லை. அதேபோல கோவில்பட்டி மாரியம்மன் கோவி லில் தாழ்த்தப்பட்டோருக்கான மண்டகப்படி இதுவரை ஆதிக்கச் சாதியினரால் கொடுக்கப்படவில்லை. கோவையில் மலைக்கோவிலான வேலாயுதன் பாளையத்தில், தாழ்த் தப்பட்டோர் சுதந்திரமாக வழிபாடு செய்ய முடியவில்லை. காஞ்சி மாவட்டத்தில் கூத்தரம்பாக்கம் கிராமத்தில், கோவிலுக்கான வரி செலுத்தியும் கூட, தாழ்த்தப்பட்டோர் தெருவிற்கு சாமி பல்லக்கு வருவதற்கு ஆதிக்கச் சாதியினர் இன்னமும் அனுமதிக்கவில்லை. இப்படியாக நேரடியான சாதிய அடக்குமுறையை தலித் மக்களின் மீது கட்டவிழ்த்து விடும்போது, அவர்கள் சுதந்திர மான வழிபாட்டிற்காக மதம் மாறுகிறார் கள்.
அரசாங்கம் மற்றும் தேர்தல் ஆணையம், தனித் தொகுதிகளாக அறிவித்தும் கூட, தலித் பிரதிநிதிகள் மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், மேலவளவு கிராமத்திலும், கீரிப்பட்டி, பாப்பாரப்பட்டி கிராமங்களிலும் ஊராட்சித் தலைவர்களாக சுதந்திரமாக தேர்ந்தெடுக்கப்படுவது குதிரைக் கொம்பாக இருக்கிறது. உத்தபுரத்தில் தீண்டாமைச் சுவர் பிரச்சனை இன்னமும் தீர்க்கப்படவில்லை. சொந்த மதத்தைச் சேர்ந்த ஆதிக்க
சாதிக்காரர்களால் அவதிப்படுவதினால், அவமானப்படுத்தப்படுவதினால், விரக்தியடையும் தாழ்த்தப்பட்ட மக்கள் மதம் மாறி செல்கின்றனர். அவ்வாறு கிருத்துவ மதத்திற்கு சென் றவர்களுக்குக் கூட, சாதி முத்திரை அழிக்கப்படவில்லை. கிருத்துவ மதத்திற்கு உள்ளேயும், தனிவழிபாட்டு தலம், தனி சுடுகாடு போன்றவற்றால் அவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். இந்தியாவில் இருக்கும் கிருத்துவ மதப்பிரிவுகள், சாதி அடையாளத்தை உடைக்காமல் பாதுகாத்து வரு வது அனைவரும் அறிந்த ஒரு உண்மை. அப்படியிருக்கையில் மத அடையாளத்தைக் காரணம் காட்டி, அவர்களுக்கு சாதி அடையாளத்தால் கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பறிப்பது எந்த விதத்திலும் நியாய மில்லை.
இந்திய அரசியல் சட்டத்தில் யார் வேண்டுமானாலும், எந்த மதத்திற்கும் விரும்பினால் மாறிச் செல்லலாம் என்ற உரிமை வழங்கப்பட்டுள்ளது. அத்தகைய தனிநபர் உரிமையே அவர்களுக்கான சாதிவழி சட்ட உரிமைகளை தடுப்பதற்காக பயன் படுத்தப்படலாமா? செங்கல்பட்டில் பஞ்சமி நில போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தலித் இளைஞர்கள், ஜாண் தாமஸிற்கும், ஏழுமலைக்கும் காவல்துறையின் தோட்டாக்கள் வேறுபாடு பார்த்ததா? தூத்துக்குடி மாவட்டம் கொடியங்குளத்தில், உடைக்கப்பட்ட வீடுகளில் மாட சாமிக்கும், அந்தோணி சாமிக்கும் வேறுபாடு காட்டமுடியுமா? இந்து மதத்தில் இருந்தால் தான் தாழ்த் தப்பட்டோருக்கான இடஒதுக் கீடு கிடைக்கும் என்றால், அது மறைமுக மாக சலுகை கொடுத்து குறிப்பிட்ட மதத்தில், மக்களை தக்கவைத்துக் கொள்ளும் போக்கு என கருதப்பட முடியாதா? இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பது உண்மையானால், மதத்தை அளவுகோலாக்கி, சாதி ஒடுக்கலுக்கு எதிராக வழங்கப்படும் உரிமைகள் மறுக்கப்படலாமா? மேற்கண்ட கேள்விகள் முதல்வரின் கடிதத்திற்கு ஆதரவாக கூடுதலாகவே எழுகின்றன. மத்திய அரசு தலித் கிருத்துவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கும்வரை, தமிழ்நாடு அரசு அவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில், இடைக்கால நிவாரணம் போல
சேர்க்கக்கூடாதா? இவையெல்லாம் விவாதங்களின் மத்தியில் வந்தி ருக்கின்ற வினாக்களாக இருக்கின் றன.