Tuesday, March 16, 2010

இந்திய வெளிவிவகாரக் கொள்கை ஒரு மாபெரும் தோல்வியா?

இந்திய அரசின் வெளிவிவகாரக் கொள்கைகள் தொடர்ந்து தோல்வி யடைந்து வருவதாக ஒரு கருத்து டெல்லியில் பரவி வருகிறது. குறிப் பாக பாகிஸ்தான் விஷயத்திலும், ஆப்கானிஸ்தான் விஷயத்திலும் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகம் மற்றும் இந்திய தலைமையமைச்சர் அலுவலகம் எடுக்கின்ற நிலைப்பாடுகள், வெற்றி பெறுவது இல்லை என்பதே அந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையாக இருக்கிறது.
சமீப காலங்களில் தலைமையமைச்சர் மன்மோகன் சிங்கின் சில கருத்துக்களும், வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் சில அறிக்கைகளும், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சில அறிவிப்புகளும் செய்து வந்தாலும், அவை சம்மந்தப்பட்ட வெளிநாடுகளில் எடுபட வில்லை. குறிப்பாக பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் இந்த இந்திய தலைவர்களின் முயற்சிகள் எல்லாமே தோற்கடிக்கப்பட்டு வருகின்றன என்பதாக பட்டியல் போடப்படுகிறது. டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும், டெல்லி பல் கலைக்கழகத்திலும், இந்திய வெளி விவகாரக் கொள்கைகளை ஆராய்ச்சி செய்கின்ற ஆய்வுக் குழுக்களிலும் இதுபோன்ற ஒரு விவாதம் நடந்து வருகிறது.
ஆப்கானிஸ்தானில் இந்தியா கையாண்டு வரும் அணுகுமுறைகள் அல்லது விருப்பங்கள், தொலைநோக்கு பார்வையில் பலன்களை தராது என்ற நிலை தெரிகிறது. பாகிஸ்தான் விஷ யத்திலும், இந்திய அரசின் அணுகு முறைகள் சிறிதளவு கூட வெற்றிப் பெற்றதாக தெரியவில்லை. குறிப்பாக ஆப்கானிஸ் தானில் நடந்து வருகின்ற அரசியல் நிகழ்வுகளில், இந்திய அரசின் பாத்திரம் என்பது பார்வையாளர் நிலைக்கு ஓரம் கட்டப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு புனரமைப்பு பணிகளை, அதிக ஈடுபாட்டுடன் செய்த இந்தியாவை, ஆப்கான் நாட்டின் எதிர்காலத்தை திட்டமிடுவதில் அமெரிக்கா ஓரங்கட்டிவிட்டது என்பதுதான் அந்த குற்றச்சாட்டின் முக்கியமான அம்சம். அதே சமயம் பாகிஸ்தான் அரசின் உள்நுழைவை, ஆப்கானிஸ்தான் நாட்டிற்குள் தவிர்க்கவிரும்பிய இந்திய அரசின் முயற்சிகள் அனைத்தும் அமெரிக்க ஏற்பாட்டில் தோல்வியைத் தழுவியுள்ளன. அமெரிக்காவினுடைய தலைமையில் அல்கொய்தாவை எதிர்த்தும், தாலிபன்களை எதிர்த்தும், ஆப்கானிஸ்தான் மண்ணில் நடத்தப்படும் போரில், உளப்பூர்வமாக ஆதரவு கொடுத்த இந்திய அரசு, பாகிஸ்தான் அரசின் கரங்கள் ஆப்கானிற்குள் நுழைய விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தது. ஆனால் அமெரிக்காவின் அணுகுமுறை வித்தியாசமாக இருக்கிறது. பாகிஸ்தான் அரசின் துணையோடு, ஆப்கான் நாட்டில் அல்கொய்தாவையும், தாலிபன்களையும் அடக்குவதற்கு, அமெரிக்கா திட்டமிட்டு செயல்படுவதால், அதில் இந்திய அரசின் தொலைநோக்குப் பார்வை தொலைந்து போனது. ஆப்கான் நாட்டில் இருக்கின்ற பெருவாரியான ஆப்கான் மக்கள், அல்கொய்தாவையும், தாலிபன்களையும், வெறுக்கிறார்கள் என்பது இந்திய அரசின் மதிப்பீடு. ஆனால் அமெரிக்க ராணு வமும், நேட்டோ கூட்டமைப்பின் ராணுவமும் கடந்த 8 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்து, போரைத் தொடர்ந்து நடத்தியும் அதன் மூலம் ராணுவ ரீதியான வெற்றியை அடைந்தார்களா என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது. கண்டகரில் நடந்த தற்கொலைப் படைத்தாக்குதல்கள் சமீபத்தில் கூட, அல்கொய்தாவினுடைய மற்றும் தாலிபன்களுடைய தீவிர செயல்பாடுகளை நிரூபித்த வண்ணமாய் இருக்கிறது.
இந்திய அரசைப் பொருத்தவரை ஆப்கானிஸ்தானில் இருக்கின்ற அத்தகைய போராளிக்குழுக்களுடன், பாகிஸ்தான் அரசு இணைந்து கொண்டால் அதுவே காஷ்மீர் மாநிலத்திற்குள் போராளிகளின் தாக்குதல் களுக்குப் பின்னணியாக அமைந்து விடும் என்பதுதான் முதல் கவலை. அதனால்தான் அமெரிக்க ராணுவமும், நேட்டோ கூட்டுப்படை ராணுவமும் ஆப்கான் நாட்டை விட்டு வெளியேறுவதை இந்திய அரசு ரசிக்கவில்லை. அது இந்திய தலைமை அமைச்சரின் ஆலோசனையில் வெளிப்பட்டது. அப்போதும் ஆப்கான் பிரச்சினையில் பாகிஸ்தானை அதிகமாக சார்ந்து இருக்கும் போக்கைத்தான் அமெரிக்காவின் புதிய ஆட்சியாளர்களும் எடுத்துள்ளார்கள். இதுவே இந்திய அரசு ராணுவ ரீதியாக எந்த வீர சாகசத்தையும், ஆப்கானுக்குள் செய்வதைத் தடுக்கிறது. அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானிலிருந்து திரும்பச் சென்ற பிறகு, இந்திய அரசு பாகிஸ்தான் அரசை காரணம் கூறி, ஆப்கானிற்குள் தலையீடு செய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய அரசின் கொள்கை வகுப்பாளர்கள் எண்ணலாம் என்றும் அறிவுஜீவிகள் கருதுகிறார்கள்.
இந்திய அரசின் கொள்கை வகுப் பாளர்கள் கடந்த 60 ஆண்டுகளாக முயற்சித்தும் கூட, பாகிஸ்தான் அமெரிக்கா உறவு நெருக்கத்தை குறைப்பதற்கு அரசியல் அரங்கிலும், ராணுவ அரங்கிலும், பொருளாதார மட்டத்திலும் கூட தோற்றுவிட்டார்கள். காஷ்மீர் பிரச்சினையில் இந்திய அரசின் அணுகுமுறையை எப்போதுமே ஏற்காத பாகிஸ்தான் அரசின் நிலைப்பாட்டை, அமெரிக்க அதிபராக யார் வந்தாலும் எதிர்ப்பதில்லை என்பது கூட, இந்திய அரசின் வெளிவிவகாரக் கொள்கைக்கு கிடைத்திருக்கின்ற தோல்விதான்.
இந்திய அரசு இன்றைய நிலையில் தனது தேவைக்கு அதிகமாக, அமெரிக்க
சார்பாக நிர்ப்பதனால் மட்டுமே இத்தகைய தோல்விகளைத் தாங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் சீன அரசின் சந்தேகப்பார்வையும், தெற்காசிய களத்தில் இந்தியாவிற்கு போட்டியாகவோ, அல்லது எதிர்ப்பா கவோ சீனாவை நிறுத்துகின்ற செயல் பாடுகளும் நடைபெறுகின்றன. 1962ம் ஆண்டின் இந்திய சீன எல்லை மோதலை ஏற்படுத்தியதற்கு காரணமாக இருந்தது அன்றைய அமெரிக்காதான் என சீன அரசு உறுதியாக நம்புகிறது. மீண்டும் உலக அரங்கில் இன்று பொருளாதார ரீதியாக பலவீனப்பட்ட நிலையில் இருக்கும் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியாவின் பொருளாதார அறுதியிடல் பற்றி அச்சமடைந்துள்ள அமெரிக்கா, சீன இந்திய நட்பை உடைக்கவும், அதே சமயம் சீனாவுக்கு எதிராக இந்திய அரசைப் பயன்படுத்தவும் தயங்காது என்பது சீன அரசின் அனுபவரீதியான மதிப்பீடு. ஆகவே அமெரிக்காவைச் சார்ந்து இந்திய அரசு எடுக்கின்ற முடிவுகளை எல்லாம், தங்களுக்கு எதிராகச் செல்வதற்கே என்று சீன அரசு கருத வாய்ப்பு இருக்கிறது. அதுவே சீன அரசை, பாகிஸ்தான் அரசுக்கு ஆதரவாக செயல்படும்படி உந்தித் தள்ளுகிறது. அதனால் தான் நேற்று வரை சீனா தலையிடாமல் இருந்த, காஷ்மீர் விவகாரத்திலும் நேரடியாகத் தலையிடத் துவங்கியுள்ளது. அதற்கு ஒரு சான்றாக காஷ்மீர் பயணிகளுக்கு தனி விசாத் தாள் கொடுப்பதற்கு சீன அரசு முன் வந்ததைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் அமெரிக்கச் சார்பு இன்றைய காலத்தின் கட்டாயம் கிடையாது. அப்படி இருந்தும் கூட, அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம், இந்தியப் பெருங்கடலைக் கண்காணிக்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம், அமெரிக்க கடற்படையுடன் இந்திய கடற்படையின் கூட்டுப் பயிற்சி என்பதாக தெற்காசிய வட்டாரத்தில் தொடர்ந்து, தற்போதைய இந்திய அரசு எடுத்துவரும் முயற்சிகள் அண்டை நாடுகளில் வலுவாக இருக்கும் சீனாவை எதிராக நிறுத்தி விடுகிறது. அத்தகைய அமெரிக்க ஆதரவு முயற் சிகளினால், இந்தியாவிற்கு எந்த வகை யிலும் அமெரிக்க அரசிடமிருந்து பலன்கள் கிடைத்திடவில்லை என்பது தெளிவாக விளங்குகிறது.
இந்திய நாட்டிற்கும், இந்திய மக்களுக்கும் சேவை செய்தற்காக இந்திய வெளிவிவகாரக் கொள்கை இருக்க வேண்டுமே தவிர, அரசு அதிகாரத்தில் அமர்ந்திருக்கின்ற சிலரு டைய விருப்பங் களுக்காகவோ, நலன்களுக்காகவோ இருக்கக்கூடாது என்று சுபாஷ் கபிலா போன்ற ஆய்வாளர்கள் கூறு கிறார்கள். ஆப்கானில் அமெரிக்காவின் நலன்களுக்கு ஆதரவு கொடுக்கப்போய், தேவையற்று அல்கொய்தாவின் எதிர்ப்பு இலக்காகவும் இந்தியாவை ஆக்கிக்கொள்வது
சாதுர்யமான நிலைப்பாடு அல்ல. மேற்கண்ட இந்திய அரசின் தவறான கொள்கைகள், பொதுமக்கள் மத்தியி லும் பகிரங்கமான விவாதத்திற்கு உள்ளாக்கப் படவேண்டும்.