Monday, March 15, 2010

பழங்குடி அதிகார முறிவுக்கு, புதுக்குடி அடக்குமுறையா?

நடந்து வரும் மாவோயிஸ்ட் வன் முறைக்கு எதிராக, ராணுவகாவல் துறை கூட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்பதுதான் அரசாங்க அறிவிப்பு. மாநிலங்களுக்குள்ளான ஒருங்கிணைப்புடன் கூடிய தாக்குதலை, மாவோயிஸ்ட் கோட்டையில் நடத்தத் தொடங்கியிருக்கிறோம் என்று அரசு கூறுகிறது. பெருமளவில் ஆயுதங்களையும், தோட்டாக்களையும் கைப்பற்றி இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. ஒரு பகுதியின் மாவோயிஸ்ட் ராணுவத்தளபதி கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் வெற்றிச் செய்தியை ஊடகங்களுக்குக் கொடுக்கிறது. இவையெல்லாம் அர சாங்கம் தோற்றுவிடவில்லை என்று அறிவிப்பதற்காக இருக்கலாம். ஊடகங் களில் வருகின்ற செய்திகளின் மூலமாக, மாவோயிஸ்ட்டுகள் ராணுவ ரீதியில் வலுவாக இருக்கிறார்கள் என மக்கள் நம்புகிறார்கள். அத்தகைய நம்பிக்கையை உடைத்து, அரசும், அரசப்படைகளும் வலுவாக உள்ளன என்ற கருத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான பொறுப்பு அரசாங்கத்திடம் உள்ளது. அதைச் செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகம், மேற்கண்ட செய்திகளை ஊடகங்களில் வெளியிட்டிருக்கலாம். ஆனாலும் எல்லாமே ராணுவப்பலம் சம்பந்தப்பட்ட செய்திகளாக இருக்கின்றன. அப்படியானால் மாவோயிஸ்ட்டுகளின் சவால் என்பது, மத்திய அரசுக்கு ராணுவ ரீதியான பிரச்சினை மட்டும் தானா?
இந்த கேள்விக்கு பதில் கொடுக்க முனையும் அறிவுஜீவிகளும், சமூக ஆர்வலர்களும் கூறுகின்ற விளக்கம் வேறுமாதிரி இருக்கிறது. அதாவது சமூக, பொருளாதார கட்டமைப்பின் காரண மாக, நாட்டில் நிலவும் ஏற்றத்தாழ் வான நிலைமையும், வறுமையின் எல்லைக் கோட்டுக்கு கீழே தள்ளப்பட்ட மக்கள் போராடப் புறப்படும் சூழலும், குறிப் பாக மலைகளிலும், காடுகளிலும் வாழு கின்ற பழங்குடி மக்களின் கடினமான வாழ்க்கை முறையும் மட்டுமே மாவோ யிஸ்ட் வளர்ச்சிக்கும், அதனால் ஏற்படும் வன்முறைக்கு காரணம் என்பது அவர்களது வாதம். இந்த வாதத்தை அடிப்படையாகக் கொண்டு, மாவோ யிஸ்ட்களுக்கு அறிவுஜீவிகளின் ஆதரவு இருக்கிறது என்பது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் கருத்து.
ஆனால் இந்த இரண்டு விசயங்க ளையும் தாண்டி, வேறொரு செய்தி அந்த காட்டுப்பகுதிகளிலிருந்து வந்து கொண்டிருக்கிறது. அதை ஊடகங்களோ, நியாயம் பேசும் அறிவுஜீவிகளோ உணர்ந்தார்களா என்பது தெரியவில்லை. மாவோயிஸ்ட்டுகள் வழிகாட்டலில், பழங் குடி மக்கள் மற்றும் காடும், காடு சார்ந்த இடமும் எனவும், மலையும் மலை சார்ந்த இடமும் எனவும் வாழ்ந்து வரும் மக்கள், தங்களது அதிகாரத்தை அங்கேயே நிறுவி வருகிறார்கள் என்ற செய்தி புதியதாக வந்தி ருக்கிறது. அப்படியானால் அத்தகைய மக்கள் அதிகாரத்தை சகிக்க முடியாமல், மாற்று அதிகாரமாக அந்தப் பகுதியில் செல்வாக்கு செலுத்த விரும்பும் அரசு அதிகாரம், தன்னுடைய நலனுக்கு ஏற்ற வகையில் செய்திகளைத் தருகிறதா என் றும் நாம் கேட்க வேண்டியுள்ளது.
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, சத்திஸ்கர் மாநிலத் தின் தண்டகாரண்யா பகுதியை நாம் எடுத்துக் கொண்டு ஆராயலாம். இந்த தண்டகாரண்யா காட்டுப்பகுதி, பிரபல இந்திய இதிகாசமான ராமாயணத்தில் தண்டகாகாடு என்று வருகிறது. இந்தக் காடு 35,600 சதுர மைல்களைக் கொண்டது. இந்தியாவின் கிழக்கு மத்தியப் பகுதியில் இது இருக்கிறது. மேற்கு திசையில் அபுஜ்மர் மலைகளையும், கிழக்கு திசையில் கிழக்கு தொடர்ச்சி மலைகளையும் கொண்டதாக இருக்கிறது. இந்தக் காடுகள் வடக்கே இருந்து தெற்கே வரை 200 மைல்களும், கிழக்கே இருந்து மேற்கே வரை 300 மைல்களும் கொண்ட பரந்த பகுதியில் இருக்கிறது. இது மத்திய பிரதேசம், சத்திஸ்கர், ஒரிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்குள் பரந்து விரிந்து இருக்கும் காடு. இதன் தெற்குப் பகுதி ஒரிசாவிலும், சத்திஸ்கரிலும் இருக்கிறது. இந்த வனப்பகுதி கடல்மட்டத்திலிருந்து 300 அடி உயரத்திலிருக்கிறது. சில ஆண்டுகளாக பழங்குடி மக்கள் வாழும் இந்த காடுகளின் வட்டாரத்தில் அனைத்து மக்களின் அதிகார அமைப்புகள் நிறு வப்பட்டு வருகின்றது. அத்தகைய மக்கள் அரசாங்கத்திற்கு, ஜனாதனா
சர்க்கார் என்று பெயர். இது தொடக்க நிலையில் இருக்கிறது. இந்த ஜனாதனா சர்க்கார் உற்பத்தி, பண்பாடு, கல்வி மற்றும் ராணுவப்பிரிவு ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
உதாரணத்திற்கு மாட் என்ற பகுதியில் நடக்கும் நிகழ்வுகளை நேரில் கண்ட, பஞ்சாப் மாநிலத்தின் அறிவுஜீவிகள் குழாம் கொடுத்துள்ள அறிக்கையில் சில செய்திகளைக் காணலாம். இன்று நிலவி வரும் அரசாங்க அமைப்பில், கூட்டுற வுத்துறை அதிகமாக ஊழலால் பாதிக்கப் பட்டிருக்கும் நிலை பொதுமக்களை பெரிதும் திணறடிக்கிறது. அதே நேரம் இந்த புரட்சிகரமான மக்கள் அதிகாரத்தின் வழிகாட்டலில், கூட்டுறவுத்துறை அங்கே உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் கலப்பையையும், எருதையும் மட்டுமே வைத்திருக்கும் ஏழை விவசாயிகளுக்கு உழவுக் கருவிகள் குறிப்பாக ஏர் மற்றும் கலப்பை ஆகியவை கூட்டு விவசாயப் பணிகள் மூலம் வழங்கப்படுகிறது.
விவசாயிகள் மத்தியில் புரட்சிகரத் தலைமையின் வழிகாட்டலில் பணிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் மூலம் குளங்களைத் தோண்டுவதும், மீன்பிடித் தொழிலை வளர்ப்பதும், விதைகளை விதைத்தல், நிலங்களை உழுதல், கிணறுகளைத் தோண்டுதல் ஆகிய செயல்பாடுகளும் முன் சென் றுள்ளன. அவற்றில் பொதுமக்களே பயிற்றுவிக்கிறார்கள். பொதுமக்களே தங்கள் வட்டாரத்திற்குத் தேவையான கிணறுகளையும், குளங்களையும் அமைத்தனர். தானியங்களையும், மீன்களையும் விற்க ஏற்பாடு செய்தனர். அதில் வருமானமும் பெற்றனர். கூட்டு செயல்பாடுகளினால் உற்பத்தி அதிகரித்தது. உற்பத்தி முறையில் மாற்றம் ஏற்பட்டது. கால்நடைகளையும், விவசாயக் கருவிகளையும் கூட்டான முயற்சிகளால் அதிகளவில் பயன்படுத்த முடிகிறது. மக்கள் அரசாங்கம் இந்தப் பகுதியில் மட்டும் 250 கால்நடைகளை வாங்கி, ஏழை விவசாயிகளுக்கு விநி யோகித்தது. நெல், எள், பருப்பு,
சோளம், சாமை போன்ற விதைகளை 540 குவிண்டால் அளவுக்கு, மக்கள் அரசாங்கம் மூலம் விநியோகித்தனர். வீடற்ற ஏழைகளுக்கு 70 வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளனர். வீடுகள் பழுதான விவ சாயிகளுக்கு 350 வீடுகளில் பழுதுபார்த்துக் கொடுத்துள்ளனர்.
மழை இல்லாததால் நம் நாட்டின் விவசாயிகள், உற்பத்தியில் ஈடுபட முடியவில்லை என்றும், அவர்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ஊதியம் கொடுத்து வறுமையைப் போக்கலாம் என்றும் டெல்லியில் அமர்ந்து கொண்டு, ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து பல மாநாடுகளை நடத்தி, இந்திய நாட்டின் பிரதமரும், திட்ட கமிஷன் துணைத் தலைவரும் பேசி வருவது இந்த வட்டார மக்களை எட்டவில்லை. ஆனால் இந்த மாட் வட்டாரத்தில் ரூ.25,000 வறட்சி நிவாரணமாக, பழங்குடி மக்களை முதன்மையாகக் கொண்ட மக்கள் அர
சாங்கம் விநியோகித்துள்ளது. அதே போல சோம்பேறிப் பண்ணையார்களிடமிருந்து 1436 ஏக்கர் நிலத்தை பறிமுதல் செய்து, அதில் 1057 ஏக்கர் நிலத்தை 482 குடும்பங்களுக்கு விநியோகித்துள்ளது. மீதி 310 ஏக்கர் நிலம் மக்கள் அரசாங் கத்தின் கட்டுப்பாட்டிலும், 65 ஏக்கர் நிலம் கிராமப்புற முன்னோடிகளைக் கொண்ட குடிப்படை வசமும் ஒப்படைக் கப்பட்டுள்ளது. கூட்டுறவு முயற்சியில் பெண்களும் அதிகமாக உற்பத்தியில் பங்கேற்கின்றனர். விவசாய பணிகளில் பழைய காலத்தில் இந்த வட்டார பழங்குடி பெண்கள் அனுமதிக்கப்படாத பணிகளையும், இப்போது கூட்டுறவு முறையில் பெண்கள் ஈடுபட்டு செய்து வருகின்றனர். இதனால் மரபுவழி மூடநம்பிக்கைகள் உடைபடுகின்றன. அரசாங்க கூலிப்படையான சல் வாஜூடுமால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு, இந்த கூட்டுறவு அர
சாங்கம் உதவி செய்கிறது. மக்கள்படை சுய தேவைகளை பூர்த்தி செய்ததோடு நில்லாமல், தானியங்களை விளைவிப்பது, வருமானத்தைப் பெருக்குவது ஆகியவற்றின் மூலம், மக்கள் அரசாங்கத் திற்கும் உதவி வருகிறது. கால்நடைகளைப் பேணுவது என்பதிலும் கவனம் செலுத்தி வருகிறது. சல்வாஜூடும் கூலிப்படையால் இழந்த மாடுகள், ஆடுகள், கோழிக்குஞ்சுகளையும், மீன்வளர்ப்புக்கான மீன்களையும் இந்த மக்கள் அரசாங்கம் வழங்கி வருகிறது. காடுகள் பாதுகாப்புக் குழு என்பதாக தனியாக திட்டமிட்டும் செயல்பட்டு வருகிறார்கள். வீடுகள், விவசாயக்கருவிகள், கட்டிடங்கள் ஆகியவற்றை உருவாக்க தேவையான மரங்களை வெட்டுவதில் கூட, காடுகளைப் பாதுகாக்கும் அடிப்படையில், ஆய்வு செய்து, தேர்ந்தெடுத்து மரங் களை வெட்ட அனுமதிக்கிறார்கள். குடும்பங் களுக்குள்ளும், வெளியேயும் எழுகின்ற முரண்பாடுகளை, கிராமத்தலைவர்கள் முன்னால் பேசித் தீர்வு காணும் பழைய முறையை மாற்றி, மக்கள் அமைப்புகள் மூலம் அவற்றைத் தீர்வு காண்கிறார்கள். பண்பாட்டுக் குழு, கல்விக்குழு, நீதித்துறைக்குழு ஆகியவற்றையும் உருவாக்கியிருக்கிறார்கள்.
பழங்குடி மக்கள் மத்தியில் இருந்து வந்த மாந்திரீகம், பலதாரமணம் ஆகியவற்றை எதிர்த்து பெண்கள் அமைப்பின் போராட்டங்களின் மூலம், புதிய பண்பாட்டை ஏற்படுத்தி வருகிறார்கள். சல்வாஜூடும் என்ற கூலிப்படைக்கு எதிராக போராட மக்களைத் திரட்டி, பண்பாட்டு நடவடிக்கைகளையும், பாடல் களையும் உருவாக்கி உள்ளனர். இது போன்ற பழங்குடி மக்களின் அதிகாரம் அமைப்பாவதால்தான், அரசப்படைகளின் தாக்குதல் அங்கே குவிகிறதா என்ற கேள்வி எழுகிறது.