Friday, March 5, 2010

ஆசிரமச் சாமியார்கள்,கற்பனைக் கதாபாத்திரங்களா?

மூன்று நாட்களாக தமிழகத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்ட பரபரப்புச் செய்தி யாக ஒரு இளம் சாமியாரின், துறவரத்தை துறந்த படக்காட்சிகள் எல்லோரையும் நிலை குலைய வைத்தது. சாமிகளை வணங்கும் பக்தர்கள் தங்களது தீராத பிரச்சினைகளுக்கு, நேரடியாக சாமிகளின் பெயர்களில் ஆசாமிகள் கொடுத்து வரும் தீர்வாலோசனைகளை, தாங்கள் ஏற்றுக் கொள்வது மட்டுமின்றி, மற்றவர்களுக்கும் பரப்பி மகிழ்ச்சியடைந்து வருகிறார்கள். உளவியல் ரீதியாக பலமின்றி இருக்கின்ற நமது மக்கள்தான் இதுபோன்ற ஆசாமி களின் ஆற்றலால் ஈர்க்கப் படுகிறார்கள். பொதுவாக ஏழைகள் முதல் பணக்காரர் வரை, மனத்திடம் போதுமான அளவு இல்லாதவர்கள்தான் இதுபோன்று ஈர்க்கப்பட்டு பிறகு தங்களையும் இழக்கும் பக்தர்கள். மேலே குறிப்பிட்ட திருவண்ணாமலையைச் சேர்ந்த சாமியார் நித்தியானந்தா, பெங்களூரில் பெரிய அளவிலும், அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்சில் மிகப்பெரிய அளவிலும் ஆசிரமம் வைத்து செயல்படுபவர்.
அதையே ஒரு வியாபாரமாக, தொழி லாக ராஜசேகரன் என்ற பெயர் கொண்ட அந்த நித்தியானந்தா செய்து வருகிறார். தான் வேதமுறைப்படி பண்பாட்டை பரப்பி வருவதாக கூறுகிறார். தங்களது யோகா பயிற்சி, கிராமப்புறங்களில் பள்ளிகளுக்கு உதவி செய்தல் போன்ற சமூக சேவைகள் பல லட்சம் மக்களுக்கு பயன்பட்டுள்ளது என்பது இவர்களது வாதம். குறிப்பிட்ட இந்த சாமியார் 200 புத்தகங்களை, 20 மொழிகளில் எழுதியுள்ளராம். 7 ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வருகிறாராம். 20 லட்சம் மக்கள் இவருடைய சக்தியை, பெற்றுள் ளார்களாம். இவையெல்லாம் இவருடைய இணையதளத்தில் கூறப்படுகின்ற பரப்பு ரைச் செய்திகள்.
மேலே குறிப்பிடப்படும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் சாமியார், தான் பெற்றுள்ள சக்தியை பிறருக்கு கொடுப் பதற்கு அவர்களது தலையிலோ அல்லது உடலிலோ தனது காலால் உதைப்பாராம். அப்படி உதை வாங்குபவர்களுக்கு இவரது சக்தி மாறிச் செல்லுமாம். இப்படி ஒரு கதையை கிளப்பி விட்டு அதை நம்புவதற்கு பெரும் பணக்காரர்கள் உட்பட இந்த நாட்டில் இருக்கிறார்கள். முன்னாள் கல்வி அமைச்சர் ஒருவர் இதுபோல தனது அறிவியல் கற்றுக் கொடுக்கும் கல்லூரியிலேயே, உதை வாங்கும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். நித்தியானந்தரிடம் அளப்பரிய சக்தி இருப்பதாகவும், அவரால் புற்றுநோயைக் குணப்படுத்த முடியும் என்றும், தமிழில் எழுதக்கூடிய எழுத்தாளர்கள் கூட பரப்பி இருக்கிறார்கள். இத்தகைய போலி சாமி யார்களை பெரும் தீரர்களாக வெளி வுலகுக்கு காட்டிய பேச்சாளர்களும், எழுத்தாளர்களும், இந்த போலி சாமியார் களை விட ஆபத்தானவர்கள்.
இதுபோல ஒரு கோயில் குருக்கள், கருவ றைக்குள் பெண்களை மயக்கி பாலியல் பலாத்காரம் செய்து, அதையே படம் எடுத்து ரசிப்பது மட்டுமின்றி வியாபாரமும் செய்திருக்கிறார் என்பது பிடிபட்ட பிறகு தெரிகிறது. இன்னொரு ஆசிரம சாமியார் பெண் பக்தைகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கியதாலும், ஆசிரமத்திற்குள்ளேயே கொலை செய்ததாலும், இரண்டு ஆயுள் தண்டனைகளைப் பெற்று சிறைக்குள் தவித்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு மடாதிபதி பெண்களை தனது கட்டுப்பாட்டிற்குள் வன்புணர்ச்சி செய்ததற்காகவும், தட்டிக் கேட்டவரை கொலை செய்ததற்காகவும், குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றப் படிக் கட்டுகளில் ஏறி, இறங்கி வருகிறார். இவர்களுக் கெல்லாம் உலகம் முழுவதிலும் ஆசிரமக் கிளைகள் இருக்கின்றன. பல்வேறு நாடுகளிலிருந்து அதிகமான அளவில் வெளிநாட்டுப் பணம் நன்கொடையாக வந்து குவிகிறது. அப்படியானால் இந்த ஆசிரம செயல்பாடுகளும், மடங்களின் நடவடிக்கைகளும் ஒரு வியாபாரமாக நடந்து வருகின்றன என்று தானே பொரு ளாகும். இப்படிப்பட்டவர்கள் ஆன்மீக வியாபாரிகள் என்று ஏன் அழைக்கக் கூடாது?
இப்போது மாட்டிக் கொண்டுள்ள சாமியார் சிறப்பாக பேசுவாராம். அறிவு பூர்வமாக, அழகாக எழுதுவாராம். இப்படி கதவைத் திறந்தால் காற்று வரும் என்ற எழுத்து வல்லுனர்கள், நமது நாட்டின் அல்லது உலக நாடுகளின் பக்தர்களைக் கவர முடிகிறது. இது யாருடைய குற்றம்? தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுத் தேடி, சாமியிடம் ஓடி அங்கும் கிடைக்காமல், ஆசாமியிடம் நாடி வரும் மக்கள் செய்யும் குற்றமா? மனத்தளவில் தங்கள் சுய முயற்சியிலேயே, எந்த ஒரு சவாலையும் சந்திக்க முடியும் என்ற நம்பிக்கையில்லாத மனிதர்கள், இப்படிப்பட்ட சாமி நாடல், ஆசாமியிடம் ஓடல் என்ற பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள்? அதைத்தான் நமது முதல்வரின் வார்த்தைகளில் சந்திர காந்தா, சொர்க்க வாசல், மனோகரா, வேலைக்காரி, பராசக்தி, தூக்குமேடை போன்ற திரைப்படங்கள் மூலம் காவியுடை தாரிகளின் கபட நாடகத்தை எடுத்துக் காட்டியும் கூட இன்னமும் புரிந்து கொள்ள முடியாத, புரிந்து கொண்டாலும் திரிந்துக் கொள்ள இயலாத மானுடர்களைப் பார்த்து வருத்தப்படுவதைத்தான் நாமும் செய்ய முடியும். அதையும் தாண்டி அத்தகைய காட்சிகளை, காட்சி ஊடகங்களிலும், அச்சு ஊடகங்களிலும் பரப்பி வருவதை, அறுவருக்கத்தக்கச் செய்திகள் மற்றும் படங்கள் என்று தமிழக முதல்வர் கலைஞர் கண்டித்திருப்பது சரியானதொரு தலை யீடு என்பதைச் சொல்லாமல் இருக்க முடியாது.
மத நூல்களிலும், புராணங்களிலும் அறிவியலைத் தேடுவது, மலத்தில் அரிசியைப் பொறுக்குவதற்கு ஒப்பாகும் என்று தந்தைப் பெரியார் கூறிய சொற்கள் இந்த இடத்தில் அழுத்தமாக புரியப் பட வேண்டியிருக்கிறது. மேற்கண்ட பிரச்சினைகளை உருவாக்குவதற்கு ஊற்றுக்கண்ணாக இன்றைக்கு புற்றீசலென வளர்ந்து விட்ட போலிச் சாமியார் களும், அவர்களது ஆசிரமங்களும் அடை யாளம் காணப்படுகின்றன. இவர்களுக்கு கிடைக்கின்ற ஆயிரக்கணக்கானக் கோடி நிதி, இவர்களை வலுப்படுத்துகிறது.
மத வேறுபாடு இல்லாமல் இத்தகைய ஆசிரமங்கள், வெளிநாட்டு நிதி உதவிகளில் முக்கியமாக வாழ்ந்து வருகின்றன. அதற்காகவே இந்த ஆன்மீக வியாபாரிகள் உருவாக்கியுள்ள இணையதளங்களும், விளம்பரங்கள் செயல்படுகின்றன. குருடர் களுக்கு பார்வைக் கொடுக்கிறோம்; முடவர்களை நடக்க வைக்கிறோம்; ஊமைகளைப் பேச வைக்கிறோம் போன்ற அற்புதங்களைக் காட்டி ஒரு மதத்தின் பெயரால் சிலர் வித்தை செய்கிறார்கள். பில்லி சூனியங்களை எடுக்கிறோம் என்று ஒலியுல்லாக்களின் சமாதிகளில் இருந்து ஒரு மதத்தின் பெயரால் சிலர் பிழைத்துக் கொள்கிறார்கள். இவ்வாறாக மூன்று மதங்களின் பெயர்களாலும், போலிச் சாமியார்கள் உலா வருகிறார்கள். சிலர் உயர் தொழில்நுட்ப அறிவாளிகளையும், உளவியல் நிபுணர்களையும் பயன்படுத்தி, மனச்சோர்வு பெற்றோருக்கு ஆறுதல் கூறி, அனைத்தையுமே ஆண்டவனுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஆசாமி என்று ஒருவரை உயர்த்திப் பிடிக்கிறார்கள். முற்போக்குப் பேசும் மனிதர்கள் கூட, தங்கள் மனக்குறைகளைத் தீர்க்க வழி தெரியாமல், இத்தகைய யோக சாலைகளில் மாட்டிக் கொள்கிறார்கள். இத்தகைய ஆசிரம முறைகளை, ஆன்மீக பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் என்று அழைக்கலாம்.
பன்னாட்டு மூலதன நிறுவனங்களின் பங்கை விட, பண்பாட்டு நிலைகுலைதலை ஏற்படுத்தும் இத்தகைய போதை மயக் கங்கள் ஆபத்தானவை. இவற்றை வைத்து வியாபாரம் செய்யலாம் என இறங்கு கின்ற ஊடக வியாபாரிகள், அதைவிட ஆபத்தானவர்கள்.
தாழ்வு மனப்பான்மைக் கொண்ட மானூடர்களுக்குத்தான், இதுபோன்ற ஆசிரமச்சாமிகள் ஊன்று கோல்களாகத் தேவைப்படுகிறது. தாழ்வு மனப்பான்மை யைத் தகர்த்தெறியுங்கள்; தரணியை வெல்லத் தாங்களும் அறுதியிடுங்கள் என்ற முழக்கத்தை நாம் எழுப்புவோம். நமது மக்கள் பலிகடா ஆவதில் இருந்து காக்க உதவுவோம்.