Friday, February 26, 2010

மியான்மர் எனும் பர்மாவிற்கு ஜனநாயகம் திரும்புமா?

உலகில் மாபெரும் ஜனநாயக நாடு என்று அறியப்படும் இந்தியாவிற்கு அருகே அது ஒரு சிறிய நாடு. அன்றைக்கு அதற்குப் பெயர் பர்மா. இன்றைக்கு அதற்குப் பெயர் மியான்மர். ஐ.நா.வரை இப்போது அந்த சிறிய நாடு பிரபலமடைந்து விட்டது. அமெரிக்கா கூட அந்த நாட்டைப் பற்றிக் கவலைப்படுகிறது. அதிபர் ஒபாமா அதிகமாக கவலைப்படுவதாகக் கூறினார். அண்டை நாடான இந்தியா கவலைப்பட்டதா என்று நமக்கு இது வரை தெரியவில்லை. மியான்மர் நாடு பிரபலமடைந்தது, அதன் சாதனை களுக்காக அல்ல. அந்த நாட்டில் நடக்கும் ராணுவ ஆட்சியாளர்களால், அந்த நாட்டின் ஜனநாயகம் வேதனைப் படுகிறது என்பதனால். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற ஜனநாயகப் பாதை அந்த நாட்டிலும் இருந்தது. ஆனால் அங்கு மட்டும் மக்களால் வாக்களிக்கப்பட்டு வெற்றி அடைபவர்கள், நாடாளுமன்றம்
சென்று பதவி ஏற்பதற்கு பதில், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்கள். அதில் தான் அந்த நாடு பிரபலமடைந்துள்ளது. நாடாளுமன்றப் பாதையைப் போற்றிப் புகழும் இந்தியத் திருநாட்டின், ஆட்சி யாளர்கள் கண்டு கொண்டார்களா என்பது இந்தியக் குடிமக்களுக்கு இன்னமும் விளங்கவில்லை.
ராணுவத்திற்குள் இருந்து மியான்மர் நாட்டில், ஜனநாயக சிந்தனையுள்ள அதிகாரிகளும் வெளியே வந்திருக்கிறார் கள். அதற்கு உதாரணமாகத் தான் டின்ஓ என்ற தலைவர் இருக்கிறார். அவர் ஒரு முன்னாள் ராணுவ அதிகாரி. அவருக்கு ராணுவ ஆட்சியாளர்களுடன் முரண்பாடு உருவானது. அதன் விளைவாக ராணுவ ஆட்சியாளர்களை விமர்சித்து விட்டு வெளியே வந்தார். வெளியே வந்தவர் 1988ம் ஆண்டு தேசிய ஜனநாயக லீக் என்ற கட்சியைத் தொடங்கினார். ஆங்சான் சூ கியூ என்ற பெண் தலைவருடன்
சேர்ந்து அந்த கட்சியை டின்ஓ தொடங் கினார். மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட
சூ கியூ வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு நோபல் சமாதான பரிசு அளிக் கப்பட்டது. அவர்களுடன் சேர்ந்து ஜனநாயக ஆதரவாளர்கள் 21,000 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்ற வாரம் சனிக்கிழமை டின்ஓ என்ற அந்த வயதான தலைவர் வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். மியான்மர் நாட்டின் மனித உரிமைகள் நிலைமை பற்றி நேரடியாக மதிப்பீடு செய்ய, கடந்த திங்கட்கிழமை ஐ.நா.சபையிலிருந்து சிறப்புத் தூதர் ஒருவர், மியான்மர் நாட்டிற்கு வருகை தந்தார். அதை முன்னிட்டோ அல்லது வேறு காரணத்திற்கோ அதற்கு இரண்டு நாள் முன்பு டின்ஓ விடுதலை செய்யப்பட்டார். சூ கியூ உட்பட எதிர்கட்சித் தலைவர்களை சந்திக்க ஐ.நா.வில் சிறப்புத் தூதர் முயற்சி செய்தார். இப்படித்தான் அந்த நாட்டின் ராணுவ ஆட்சியாளர்கள் நடப்பு இருக்கிறது. இது எந்த வகையிலும் இந்தியாவிற்கு தெற்கே உள்ள இலங்கை நாட்டின் அதிபர் ஆட்சியிலிருந்து மாறுபட்டு தெரியவில்லை.
7 ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டிருந்த வயதான தலைவர் டின்ஓ, தான் விடுதலையானவுடன் தனது கட்சி ஆதரவாளர்களுடன் யங்கோன் நகரில், விவாதித்தார். அவரது விடுதலை என்பது மீண்டும் அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை என்பதாக எடுத்துக் கொள்ளப்பட முடியாது. அதுதான் மியான்மர் ஆட்சியின் நிலைமை. பின் எதற்காக டின்ஓ விடுதலை செய்யப்பட்டார்?
இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும், தாய்லாந்திலும் புலம் பெயர்ந்த மியான்மர் நாட்டு குடிமக்கள் வாழ்ந்து வருகிறார்கள். மீண்டும் தங்கள் நாட்டில் ஒரு ஜனநாயக ஆட்சி அதிகாரத்தை, நிறுவுவதற்காக அந்த புலம் பெயர்ந்த பர்மாக்காரர்கள் முயன்று வருகிறார்கள். தான் ஒரு ராணுவ ஆட்சியின் தலைவர் என்பதால், ராணுவ தளபதி தான் ஷ்வே என்ற அதிபர், தேசிய சபைக்கான தேர்தல்கள் விரைவில் நடத்தப்படும் என்பதாக அறிவித்துள்ளார். இதுவரை அதற்கான தேதிகள் அறிவிக்கப்படாவிட்டாலும், ஒரு ராணுவ ஆட்சித் தலைமை, தனது நாட்டில் பொதுத் தேர்தல் நடத்தப்போகி றோம் என அறிவித்துள்ளது. தமிழ் தேசிய விடுதலைக்காக போராடிக்கொண்டிருக் கும், புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தங்கள் நாட்டில் ஜனநாயக பூர்வமான ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கும் போது, ராணுவத் தலைமையை கையில் வைத்திருக்கும் அதிபர் மகிந்த ராஜபக்சே, தானாகவே ஒரு அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை செய்ததைப் போலவே, மியான்மர் நாட்டின் ராணுவத் தலைமையும் நடந்து கொள்கிறது. இரண்டு நாட்டு ஆட்சியாளர்களுக்கும், அண்டை நாடான இந்த பெரிய ஜனநாயக நாட்டின் ஆட்சியாளர்கள் ஆலோ
சனை கொடுத்தார்களா என்பது நமக்குத் தெரியாது.
மியான்மர் நாட்டு ராணுவத்தலைவர் தான் ஷ்வே, தனது நாட்டில் தேர்தல் என்பது சுதந்திரமாக, நியாயமாக நடக்கும் என்று முன்கூட்டியே அறிவித்துள்ளார். அதிருப்தியாளர்கள் கூற்றுப்படி, அந்த ராணுவத்தலைமை குறைந்த பட்சம், ஐ.நா.விற்கும், அனைத்து நாட்டு சமூகத்திற்கும், தான் ஜனநாயக ரீதியான தேர்தலை விரும்புவதாக காட்டிக் கொள்ள அப்படிக் கூறியிருக்கலாம். ஆனால் அனைத்து நாட்டு சமூகத்திற்கும், ஐ.நா.விற்கும் வளைந்து கொடுக்க மகிந்த ராஜபக்சே, இலங்கையில் முயன்றதாக நமக்கு தகவல்கள் இல்லை.
ஜனநாயக ரீதியான தேர்தல்களை மியான்மர் நாட்டில் நடத்த வேண்டும் என் றால், எதிர்க்கட்சி என்று பெயரளவுக்காவது ஒன்று இருக்க வேண்டும். ஜனநாயக ஆதரவு போராட்டங்கள் நடத்தப்பட்டு விடக்கூடாது. ஆனால் தேர்தலில் மட்டும் ஒரு பெயரளவு எதிர்க்கட்சி போட்டிப் போடவேண்டும். இது மியான்மர் நாட்டின் ராணுவ ஆட்சியாளர்களுக்குத் தேவையாக இருக்கிறது. இந்த பணியை செய்ய டின்ஓ தயாராக இருப்பார் என்று தெரிகிறது. அதே சமயம் இன்னொரு அபிப்ராயமும் அந்த நாட்டிற்குள் விவாதிக்கப்படுகிறது. ஐ.நா.சபையின் சிறப்புத் தூதர் தாமஸ் ஓஜியா குயின்டானா வருகையின் போது, மியான்மர் நாட்டில் நிலவுகின்ற மனித உரிமை நிலைமைகள் பற்றி பதிவு செய்யும் போது, ஜனநாயகம் பற்றி சில சொற்களை அனுமதிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்காக டின்ஓவை விடுதலை செய்திருக்கலாம். அந்த நேரத்தில் டின்ஓ பேசுகின்ற ஜனநாயகக் குரலை எல்லாம் அரசு தரப்பு பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். ஐ.நா.தூதர் திரும்பிச் சென்று ஐ.நா. அலுவலகத்தில் தனது அறிக்கையை கொடுத்த பிற்பாடு, பதிவு செய்யப்பட்ட டின்ஓவின் கலகக் கருத்துக்களைக் காரணங்காட்டி, மீண்டும் டின்ஓ கைது செய்யப்படலாம்.
மேற்கண்ட சந்தேகங்கள் அந்த நாட்டின் ஜனநாயக சக்திகளுக்கு எழுகிறது. பழம் பெரும் எதிர்க்கட்சித் தலைவரான 87 வயதுள்ள டின்ஓவை விடுதலை செய்வதன் மூலம், ராணுவ ஆட்சியாளர்களுக்கு வெளிநாட்டு உதவி என்ற பெயரில் நிறைய நிதி கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதே சமயம் அந்த வயதில் அந்த தலைவர் மக்களைத் திரட்ட முடியாதவராக இருக்கிறார். மியான்மரில் உள்ள ஜனநாயக இயக்கத் திற்கும், தான் எப்படி தேர்தலை எதிர் கொள்ளப்போகிறோம் என்பதில் மாறு பட்ட கருத்துக்கள் அவர்களிடையே நிலவுகின்றன. இதுதான் இலங்கையிலும் எதிர்க்கட்சிகளை உடைப்பதில் ஆளுங் கட்சிக்கு வெற்றித் தேடித்தந்தது. மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சியாளர்கள் கொடுக்கும் வாக்குறுதிகளைக் கண்டு மயக்கமடைவோரும் உண்டு. தேசிய ஜனநாயக லீக் போட்டியிடுமானால், ஐ.நா.வின் மேற்பார்வை வேண்டும் என்று கருதுவோரும் உண்டு. தேசிய சபையில் பிரதிநிதித்துவம் பெறுவது என்ற குறைந்தபட்ச தேவையாவது நிறை வேறும் என எதிர்பார்ப்பதும் உண்டு. அப்படி தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மூலமாக குரல் எழுப்பி, அனைத்து நாட்டு சமூகத்திற்கும், ஐ.நா.விற்கும் செய்தி கூறமுடியும் என்று எண்ணுவோரும் உண்டு. ராணுவ ஆட்சியாளர்கள் தாங்கள் தொடர்ந்து ஆட்சி செய்ய இந்த தேர்தலை, ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்த இருக்கிறார்கள் என்ற கருத்து பொதுவாக இருக்கிறது.
இப்படி ஒரு சிறிய நாட்டு நசுக்கப் படும் ஜனநாயக குரல்களுக்காக, பெரிய நாடு இந்தியா செவிமடுக்காதது ஏன்? என்ற கேள்வியை இந்திய மக்கள் எழுப்புவதில்லை. இலங்கையில் பயங் கரவாதத்திற்கு எதிரான போர் என்று காரணம் கூறி தப்பித்து வந்த நமது மத்திய அரசு, மியான்மர் நாட்டு விவகாரத்திற்கு என்ன பதில் கூறுவார்கள் என்று தெரிய வில்லை.