Tuesday, January 19, 2010

விசாரணைக் கைதிகளை சிறையிலடைக்க சட்டம் சொல்கிறதா?

இந்தியாவின் மத்திய சட்டஅமைச்சர் நேற்று ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாடு தழுவிய 1500 சிறைகளில் இருக்கின்ற, விசாரணைக் கைதிகளான 1 லட்சத்து 70 ஆயிரம் பேரை விரைவில் விடுதலை செய்வோம் என்பதுதான் அந்த அறிவிப்பு. குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், நீதிமன்றத்தில் விசாரணைக்குப்பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டு, தண்டனை பெற்றார் எனும் போது, தண்டணைக் காலத்தை கழிக்க சிறையில் அடைக்கப்படுவார் என்பதுதான் நீதித்துறை யைப்பற்றியும், சிறைச்சாலையைப்பற்றியும் இருக்கின்ற அடிப்படை புரிதல். இந்த புரிதல் சரிதான். இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், நீதிமன்ற விசாரணைக்கு முன்னமேயே சிறையில் அடைக்கப்பட்டால் என்ன அர்த்தம்? இதற்கு பதில் சொல்ல எந்த ஒரு சட்டப் புத்தகமும் இடம் கொடுக்கவில்லை. இதற்கான பதிலை எந்த நீதியரசரும் விளக்கவில்லை. இதை நியாயப்படுத்த எந்த வழக்கறிஞரும் தயாராயில்லை. ஆனால் இதை காவல் துறை அதிகாரிகள் அமுலாக்கி வருகிறார்கள். அதற்கு ஒத்துழைப்புக் கொடுத்து, மாஜிஸ்திரேட்டுகள் என்ற நீதித்துறையின் குற்றியியல் நீதியரசர்கள் சம்பந்தப்பட்டவர் களை சிறைக்கு அனுப்பி வருகிறார்கள். மேற்கண்ட நடைமுறை எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் செயல்படுத்தப்படுகிறது. ஒருவர் மீது குற்றம் பதிவு செய்யப்பட்டவுடன், அவரை கைது செய்வதும், மாஜிஸ்திரேட் முன்கொண்டு நிறுத்தி சிறைக்கு அனுப்புவதும் தங்களுடைய வேலை என்பதாக காவல்துறை அதிகாரிகள் நம்புகிறார்கள். காவல்துறை அதிகாரிகள் ஒருவரை கைது செய்து தன்முன்னே கொண்டு நிறுத்தினால், உடனடியாக அவரை சிறைக்கு அனுப்ப வேண்டியது தனது கடமை என்று மாஜிதிரேட்டுகள் நம்புகிறார்கள்.
மேற்கண்ட இவர்களது நம்பிக்கை எல்லாம் சரியானது என்றால், இப்போது 2 லட்சம் வரை இருக்கின்ற விசாரணைக் கைதிகளை விடுதலை செய்வோம் என்று சட்ட அமைச்சர் கூறக்கூடாது. சட்ட அமைச்சர் இப்படி கூறுவது மட்டும்தான் சட்டத்தைப்பற்றிய சரியான விளக்கம் என்றால், இன்று வரை விசாரணைக் கைதிகளை சிறையில் அடைத்து வைத்திருந்தது தவறு என்பதாக ஆகிறது.
மேற்கண்ட 2 செயல்களில் ஒன்றுதான் சரியாக இருக்கும். மற்றது தவறாக இருக்கும். 16ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவின் உச்சநீதிமன்றத்தை ஒரு வழக்கு உலுக்கியது. வழக்கம் போன்ற வழக்காக அது வந்தாலும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதியரசராக அமர்ந்திருந்த வெங்கடச்செல்லையா இந்த வழக்கில் மற்ற 2 நீதியரசர்களுடன் சேர்ந்து ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார். அந்த வழக்கு ஜோகிந்தர்குமார் என்பவருக்கும் உத்தரப்பிரதேச மாநில அரசாங்கத்திற்கும் மத்தியிலானது என்பதான ஒன்று. 1994ம் ஆண்டு இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுகிறது. இது அரசியல் சட்டத்தின் 32வது பிரிவின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்கு.
விசாரணைக்காக 28 வயது கொண்ட ஜோகிந்தர்குமார் என்ற சட்டம் படித்து, வழக்கறிஞராக பதிவு செய்யப்பட்ட ஒருவர் ஜனவரி 7ம் நாள் காசியாபாத் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முன்னால் விசாரணைக்கு அழைக்கப்படுகிறார். அதை அவரது சகோதரர் முதலமைச்சருக்கு தந்தியாக அனுப்புகிறார். பிறகு அந்த இளைஞர் சட்ட விரோத காவலில் வைக்கப்படுகின்றார். அவரது விடுதலைக்காக மனு போடப்படுகிறது. ஜனவரி 11ம் நாள் உத்தரபிரதேசத்திலுள்ள காசியாபாத் காவல்நிலையத்திற்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்புகிறது. 14ம் நாள் நேரில் சம்பந்தப்பட்டவரை ஆஜர்படுத்த கோருகிறது. சட்ட விரோத காவலில் வைக்கவில்லை என்றும், விசாரணைக்காக பல இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் காவல்துறை கூறுகிறது. எதற்காக 5 நாட்கள் அப்படி வைத்திருக்க வேண்டும் என்று விசாரித்து விளக்கமளிக்குமாறு மாவட்ட நீதிமன்றத்திற்கு, உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
இந்த பிரச்சனையையொட்டி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மனித உரிமைகள் பிரச்சனை இருப்பதாக குறிப்பிட்டது. தனிமனித உரிமைகளுக்கும், கடமைகளுக்கும் மத்தியில் சீரான பார்வை தேவை என அதில் கூறப்பட்டுள்ளது. ஒருபுறம் குற்றங்கள் ஒடுக்கப்படவேண்டும் என்பது சமூக தேவையாக இருக்கிறது. இன்னொரு புறம் சட்டம் அதிகாரத்தால் பறக்கவிடப்படக்கூடாது என்பதும் சமூக தேவையாக இருக்கிறது. இதில் ஏதாவது ஒன்றை மட்டும் தேர்வு செய்வது ஆபத்தாக முடியும். சுதந்திரமான ஒரு சமூகத்தின் நலன் என்பது அதிகாரிகள், காவல்துறை ஆகியோர் நடத்தும் இழிவு படுத்தல், ஒடுக்குமுறை களிலிருந்து தனிநபரை பாதுகாப்பதில் அடங்கியிருக்கிறது என்று அந்த தீர்ப்பு கூறியிருந்தது.
ஒரு நாட்டின் நாகரீகம் என்பது, குற்றயியல் சட்டங்களை அமுல்படுத்து வதற்கு பெருவாரியாக எத்தகைய முறைகள் கையாளப்படுகின்றன என்பதை பொருத்தே அமைந்துள்ளது என்று அந்த தீர்ப்பு கூறுகிறது. நந்தினி சத்பதிக்கும், பி.எல்.டானிக்குமான வழக்கின் தீர்ப்பை மேற்கோள் காட்டிய அந்த பெஞ்ச் கீழ்கண்டவாறு கூறியது. சட்ட அமுலாக்கத்தின் தேவையை ஒரு புறமும், அமுலாக்க அமைப்பின் கைகளில் அநீதியாகவும், ஒடுக்கப்படும் நிலையிலும் இருக்கும் குடிமக்களை பாதுகாப்பது இன்னொரு புறமுமாக, சமன்படுத்தி பார்க்க வேண்டும். இதற்கான தராசு ஒரு புறமே இதுவரை சாய்ந்து இருக்கிறது. ஒரு புறம் குற்றங்களை கண்டுபிடிப்பதற்கான சமூக நலனும், மறுபுறம் குற்றம் சாட்டப்பட்ட தனிநபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட உரிமைகளும் என்பதாக உள்ள மோதலை காணவேண்டும்.
தேசிய காவல் ஆணையம் தனது 3வது அறிக்கையை காவல்துறையில் ஊழல் நடப்பதற்கான தலையாய காரணமே, கைது செய்வதற்காக அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம்தான் என்று கூறுகிறது. இதையும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டுகிறது. 60% கைதுகள் தேவையற்றவை அல்லது நியாயமற்றவை என்பதும் அந்த அறிக்கையிலிருந்து காட்டப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நியாயமற்ற காவல்துறையின் நடவடிக்கை களால், சிறைச்சாலையின் செலவு 43.2% அதிகமாகியுள்ளது. பெருவாரியான கைதுகள் சிறிய வழக்குகளுக்காக செய்யப்படுகின்றன. தொடர்ந்து ஒருவரை சிறையில் வைத்திருப் பது பாரமரிப்பு செலவுகளை விரைய மாக்குகிறது. கடைசியாக கைதே தேவையில்லை என்று முடிவாகக் கூடிய வழக்குகள் இதில் அதிகமாக உள்ளன.
மேற்கண்ட உச்சநீதிமன்ற சுட்டிக்காட்டல்கள் 16 ஆண்டுகளுக்குப்பிறகு இப்போதுதான் புரியப்படுகிறதா? ஆங்கிலே யன் ஆட்சியில் அடிமட்டம் வரை வெளி நாட்டு அதிகாரிகள் இருந்த போது, அவர் களுக்கு அடையாளம் தெரியாத இந்தியர் களை விசாரணைக்காக கூட, சிறையில் வைத்து வழக்கு நடத்தவேண்டிய பழக்கம் இருந்தது. இந்திய சுதந்திரத்திற்கு பிறகும், ஒவ்வொரு குடிமகனுக்கும் முகவரியும், அடையாள அட்டையும் இருக்கும் போது, எதற்காக அவர்களை விசாரணைக் காலத்திலும் சிறையில் வைத்திருக்க வேண்டும்? இது பச்சையான காலனி ஆதிக்க நடைமுறையின்றி, வேறென்ன?
நீதியரசர்கள் வெங்கடாசெல்லையா, மோகன், ஏ.எஸ்.ஆனந்த் ஆகியோருடைய அந்த பெஞ்ச், மேற்கண்ட வழக்கின் தீர்ப்பில் சில வழிகாட்டல்கள் கொடுத்துள்ளனர்.
காவலில் ஒருவரை தொடர்ந்து வைத்திருக்க சில காரணங்கள் இருக்க வேண்டும். அவர் தன்னை அடையாளம் காட்ட மறுத்தாலோ, குறிப்பிட்ட குற்றத்தை மீண்டும் செய்வதிலிருந்து தடுக்க வேண்டும் என்றோ, கைதானவரை பாதுகாப்பதற்கோ, விசாரணையில் அவரிடம் சாட்சியம் எடுப்பதற்கோ, நீதிமன்றத்திற்கு அவர் ஆஜராகாமல் இருந்தாலோ, சமன் வழங்கப் படலாம் என்ற ஆங்கிலேய நீதிமன்றத்தின் பரிந்துரையை அதில் சுட்டிக் காட்டியிருக் கிறார்கள்.
காவல்துறை அதிகாரி நீதிமன்றத்திற்கு வரக்கோரி சம்பந்தப்பட்டவருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பலாம். மேற்கண்ட அறிவுரைகளை ஏற்றிருந்தால், மத்திய அரசு சிறைசாலையில் கும்பல், கும்பலாக விசாரணைக் கைதிகள் குவிந்து கிடக்கும் நிலைமையை தவிர்த்திருக்கலாம். இத்தகை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதாவது மத்திய அரசுக்கு, மனித உரிமை பார்வை வந்ததே என்று நாம் மகிழ்ச்சியடையலாம். வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்படவேண்டிய அவசியமோ, காவலில் வைக்கப்பட வேண்டிய தேவையோ இல்லை என்பதை இனிமேலாவது அதிகாரிகள் மட்டத்தில் உணர்ந்து கொள்வார்களா என்று உரத்த குரலில் நாம் கேட்க விரும்புகிறோம்.