Monday, January 18, 2010

மம்தா கெடு பலன் தருமா?

மாவோயிஸ்டுகளுக்கு மம்தா பேனர்ஜி ஒருவாரம் கெடுவிதித்தார். அதே நேரத்தில் காவல்துறையினர் அவரது கெடுவிற்கு கேடு விளைவிக்கின்றனர்.மேற்கு வங்கத்தில் ஜர்க்ராம் பகுதிக்கு சென்ற மத்திய அமைச்சர் மம்தா பேனர்ஜி, கூப்பிய கரங்களுடன், வன்முறையை கைவிடுங்கள் என்று மாவோயிஸ்டுகளிடம் அறைகூவல் விடுத்தாராம். மேற்கு மிதினாப்பூர் மாவட்டத்தில் லால்கர், பேல்பகாரி, பின்பூர், சல்போனி மற்றும் பகுதிகளில் நடந்து வரும் வன்முறைகளை நிறுத்தி அமைதி கொண்டு வரவேண்டும் என மம்தா கேட்டுக் கொண்டார். ஒரு பேரணியில் இத்தகைய அறைகூவலை விடுத்திருக்கிறார். லால்கரிலிருந்து 40 கி.மீ. தூரத்திலுள்ள ஜார்க்ரம் நகராட்சி மைதானத்தில் 50 நிமிடம் உரையாற்றிய மம்தா இப்படி பேசியிருக்கிறார். கண்ணி வெடிகள் வைக்காமல், முக்கிய நீரோட்டத்திற்கு வாருங்கள் என அழைத்திருக்கிறார். தேவைப்பட்டால், மத்திய அரசிடம் தான் எடுத்துச் சொல்லி, அந்த வட்டார மக்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வைப்பேன் என்று கூறியிருக்கிறார். லால்கர் பகுதியிலிருந்து கூட்டுப் படைகளைக் கூட திரும்ப பெறவைப்பேன் என்பது அவரது வாக்கு.
மாவோயிஸ்டுகள் விரும்பினால், பேச்சுவார்த்தைக்கு தான் பாலமாக இருப்பேன் என்கிறார் மம்தா. தன்னை தீண்டத்தகாதவராக பார்த்தார்களானால் வேறு ஒரு சமரசப் பேச்சாளரை தேர்வு செய்யுங்கள் என்றும் இறங்கி பேசியிருக்கிறார். பேச்சு வார்த்தை என்பதுதான் முக்கியம் என்பதாக விளக்குகிறார். தான் காவல்துறை அராஜ கத்தை எதிர்க்கும் மக்கள் கமிட்டியை தொடங்கும் நேரத்தில் அதனுடன் ஒத்துழைத்ததாக மம்தா ஒப்புக் கொண்டார். ஆனால் அவர்கள் வன்முறையில் ஈடுபடும் பொழுது, அவர்களிடமிருந்து பின்வாங்கிவிட்டதாகவும் எடுத்துச் சொன்னார். அந்த கமிட்டியை இப்போது தலைமை தாங்கும் அசிட்மகதோ கூறும்போது, கூட்டுப்படைகள் திரும்பப் பெறப்பட்டால் பேச்சு வார்த்தை தொடங்கலாம் என்றும், தங்கள் தலைவர் சத்ரதார் மகதோவை இழிவுபடுத்திய மம்தாவை தாங்கள் நம்பத்தயாராயில்லை என்றும் கூறினார்.
மேற்கண்ட கூற்றுக்களில் உண்மை என்ன இருக்கிறது என்பதை அறிய வேண்டுமானால், மேற்கு வங்கத்துடன் நிற்காமல், அருகாமையிலுள்ள ஒரிசாவையும் நாம் உற்று நோக்கவேண்டும். ஒரிசாவின் கிழக்கு பகுதியில், கோராபட் மாவட்டத்தில் நாராயணபட்னா என்ற இடத்தில் 2 ஆதிவாசிகளை காவல்துறையினர் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். பலர் காயமடைந் தார்கள். நூற்றுக்குமேற்பட்ட ஆதிவாசிகள் கண்டபடி கைது செய்யப்பட்டார்கள். அதில் 12 குழந்தைகளும் சிறைக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் மீது சதி, கலவரம், ராஜதுரோகம், அரசுக்கு எதிராக போர் தொடுத்தல் ஆகிய வழக்குகளை காவல்துறையும், துணை ராணுவமும் பதிவு செய்திருக்கின்றன. சாசிமுலியா ஆதிவாசி சங்கம் என்ற ஆதிவாசிகளுடைய உரிமைகளுக்காக போராடக்கூடிய மக்கள் திறள் அமைப்பின் செயல்பாட்டாளர்களை விரட்டி, விரட்டி தேடுவது என்றும், கைது செய்வது என்றும் அடக்குமுறையை காவல்துறை கட்டவிழ்த்துள்ளது.
இத்தகைய அடக்குமுறைகளின் விளைவாக ஜனநாயக உரிமைகளுக்காக போராடக்கூடிய மக்கள் திரள் அமைப்புகளில் உள்ள ஆதிவாசிகள், சுற்றிவரை இருக்கும் காடுகளில் அடைக்கலம் தேடி ஓடுகிறார்கள். அந்த காடுகள் ஏற்கனவே மாவோயிஸ்டுகளின் தங்குமிடங்களாக இருந்து வருகின்றன. இவ்வாறு கோரப்பட் மாவட்டத்தின் உயர் அதிகாரிகளே கருதுகிறார்கள். காவல்துறை தங்களது நடவடிக்கைகளின் மூலம், சாதாரண ஆதிவாசிகளை மாவோயிஸ்டுகளாக மாற்றிக்கொண்டிருக்கிறது என்பதுதான் இதில் புரியப்படும் நீதியாகும்.
மேற்கண்ட நிகழ்வுகள் நாராயண பாட்னாவில் மட்டுமல்லாமல் ஒரிசா மாநிலத்தில் இருக்கும் ஆதிவாசிகள் பகுதிகளில் அடங்கிய கிராமங்களிலும், நகரங்களிலும் நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி சத்திஸ்கர், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் இதுவேதான் நடந்து வருகிறது. ஆதிவாசிகளுக்கு எதிரான காவல்துறையின் அட்டூழியங்கள், மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவு தரும் எரிபொருளாக பயன்படுகிறது. இந்திய சமுதாயத்தில் ஆதிவாசிகள் தான் மிகவும் விளிம்பு நிலையில் இருக்கின்ற மக்கள். ஆதிவாசிகளில் 49.5%, அரசாங்க மதிப்பீட்டின் படி வறுமையின் எல்லைக் கோட்டுக் கீழே இருக்கிறார்கள். 76.2% எழுத்தறிவில்லா நிலையில் இருக்கிறார்கள். 30% மருத்துவர்கள் அல்லது மருத்துவ மனைகள் தொடர்பின்றியே வாழ்ந்து வருகிறார்கள். தங்களுடைய நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், தங்கள் நிலத்தை ஆக்கிரமித்துள்ள தொழிற்சாலைகளில் கூட, வேலைக்கு சேர்க்கப்படாத நிலமையில், அந்த ஆதிவாசிகள் தங்கள் பாரம்பரிய நிலங்களை மட்டுமே நம்பி வாழ்வதால், அவற்றை தக்கவைத்துக் கொள்ளப் போராடுகிறார்கள்.
அமைதியான கிளர்ச்சிகள் மற்றும் ஜனநாயக முறையீடுகள் ஆகியவை தங்களுடைய பிரச்சனைகளை வெளிப்படுத்த இயலாமல் தோற்றுவிட்டன என்று உணர்கிறார்கள். அதன் விளைவாக இந்திய ஜனநாயகத்தில் ஆதிவாசிகள் அந்நியப்படுத்தப்பட்டு கிடக்கிறார்கள். இத்தகைய கோபத்திலும், அந்நியமாதலிலும் உள்ள ஆதிவாசிகள், மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாளர்களாகவும், புதிய வரவுகளாகவும் ஆகிவிடுகிறார்கள்.
இந்திய மாவோயிஸ்டுகள் ஆயுதப் போராட்டத்தின் மூலமாக அரசை தூக்கி ஏறிந்து, சமூக பொருளாதார மாற்றத்தை கொண்டு வரமுடியும் என்று நம்புகிறார்கள். வன்முறையில் நம்பிக்கையில்லாத ஆதிவாசிகள் கூட வேறுவழியில்லாமல் காவல்துறையின் நிர்ப்பந்தத்தினால் மாவோயிஸ்டுகளுடன் சென்று நிற்கிறார்கள். ஆனாலும் பெரும்பாலும் ஆதிவாசிகள், வெகுமக்கள் அரசியலில் ஈடுபடுவதையே விரும்புகிறார்கள். ஒருபுறம் காவல்துறையின் தள்ளிவிடுதலும், மறுபுறம் மாவோயிஸ்டுகளின் அரவணைப்பும், ஆதிவாசிகளை திக்குமுக்காட செய்கிறது. ஆதிவாசிகளை கடுமையாக சுரண்டிவரும் மற்றும் சித்ரவதை செய்து வரும் பண்ணையார்கள், காவலர்கள் , கந்துவெட்டிக்காரர்கள் ஆகியோரைத்தான் மாவோயிஸ்டுகள் இலக்காக்கி தாக்கி வருகிறார்கள். ஆதிவாசிகளின் இதுபோன்ற சமூக பொருளாதார பாதிப்புகளுக்கு, அரசு உரிய முறையில் நடவடிக்கை எடுக்க தவறிய நேரத்தில், மாவோயிஸ்டுகளின் இந்த செயல்பாடு செல்வாக்கை ஏற்படுத்துகிறது.
ராணுவ ரீதியாக மாவோயிஸ்டுகளை அழித்துவிட்டால் பிரச்சனை தீர்ந்து விடும் என்று அரசு நம்புகிறது. அதற்காக 80,000 ராணுவத்தை ஏற்கனவே இறக்கிவிட்டுள்ளது. மகாராஷ்டிரா, சத்திஸ்கர், ஒரிசா மாநிலங்களின் காடுகளில் மேலும் 20,000 ராணுவத்தை இப்போது இறக்கப்போகிறது. இந்த வட்டாரத்தில் 20 லட்சம் மக்கள் வாழுகிறார்கள். அவர்களில் பாதிபேர் ஆதிவாசிகள். வெளியே இருக்கும் அதிகாரிகள் ராணுவ வெற்றியை எதிர்பார்த்தாலும், களத்திலிருக்கும் அதிகாரிகள் எந்த நம்பிக்கையும் கொண்டு இருக்கவில்லை. அரசிடம் இருந்து ஆதிவாசிகள் அந்நியமாகி நிற்பது ஏற்கெனவே ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டது. சாசிமுலியா ஆதிவாசி சங்கம் நாராயணபாட்னா பகுதியை கைப்பற்றி விடும் என்று கூறிவருகிறார்கள்.
நாராயணபாட்னா பகுதியல் ஆதிவாசி சங்கத்தினர் 800 ஹெக்டேர் நிலத்தை மீட்டெடுப்பதில், வெற்றி பெற்றிருக்கிறார்கள். தனியார் சுரங்க கம்பெனிகள், சாராய முதலாளிகள், நிலத்திருடர்கள், ஒப்பந்தக்காரர்கள் ஆகியோர் இணைந்து ஆதிவாசி சங்கங்களை எதிர்த்து கொரப்பட், மல்கங்கிரி மாவட்டங்களில் தங்கள் ஆதரவு குழுக்களை உருவாக்குகிறார்கள். ஒரிசா மாநிலத்தில் இந்தியாவில் கிடைக்கும் பாக்ஸைட் தாதுப்பொருள் 70% கிடைக்கிறது. உலகிலேயே இந்தியாதான் 6 வது பெரிய பாக்ஸைட் கையிருப்பு கொண்ட நாடு. இந்தியாவில் கிடைக்கும் குரோம் தாதுவும், நிக்கலும் 90%, நிலக்கரியில் 24%ம் இங்கே கிடைக்கிறது. பன்னாட்டு மூலதன கம்பெனிகள் அவற்றை கொள்ளையடிக்க இறங்கிக் கொண்டிருக்கின்றன. அமைதிக்குழு என்ற பெயரில் ஆதிவாசிகளிடமிருந்து நிலங்களை கொள்ளையடிக்க மேற்கண்ட சக்திகள் முயற்சிக்கின்றன.
ஆதிவாசிகளையும், மாவோயிஸ்டுகளையும் சமமாகவே பாவிக்கக்கூடிய காவல்துறை மற்றும் துணை ராணுவத்தின் இத்தகைய அணுகுமுறைகள் ஆபத்தில் கொண்டு போய் முடிக்கப்போகிறது. அதாவது இந்தியாவின் ஆதிவாசிகள் வாழும் இதயப்பகுதியில் ஒரு பெரும் ரத்த வெள்ளத்தை பார்க்கும் நிலை உருவாகும். மேற்கண்டவாறு ஒரிசா சென்று ஆய்வு செய்த ஊடகவியலாளர் சுதா கூறியிருக்கிறார். ஒரு புறம் மம்தாவின் கெடுவும், மறுபுறம் காவல்துறையின் சுடுதலும் எங்கே அவர்களை நிறுத்தப்போகிறது என்பதுதான் இப்போது கேள்வி.