Wednesday, January 13, 2010

பிலிப்பைன்ஸ் நாட்டு மார்க்கோஸ் வழியில் செல்கிறாரா ராஜபக்சே?

1965 முதல் 1986 வரை பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிபராக இருந்த பெர்டினான்டு இமானுவேல் எட்ரலின் மார்க்கோஸ் வரலாறு ஒரு படிப்பினையாக இருக்குமா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. மார்க்கோஸ் ஒரு வழக்கறிஞராக இருந்தார். பிலிப்பைன்ஸ் நாட்டின் பிரதிநிதிகள் சபை உறுப்பினராக 1949 முதல் 1959 வரை இருந்தார்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் செனட் உறுப்பினராக 1959 லிருந்து 1965 வரை இருந்தார். 1963ம் ஆண்டு செனட் தலைவரானார். அவர் தன்னைப்பற்றி பெருமையாக கூறிக்கொண்டவர். வடக்கு லூசான் பகுதியில் ஆங் மகார்லிகா என்ற கொரில்லா படையின் தலைவராக, 2ம் உலக யுத்த காலத்தில் இருந்ததாக அவர் கூறிக்கொள்வார். அவரது நிர்வாகம் கடுமையான சர்வாதிகார, ஊழல், லஞ்சம், அரசியல் ஒடுக்குமுறை, மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றால் நிரம்பி வழிந்தது. தனது ஆட்சி காலத்தில் அவர் மிகப்பெரும் தனிப்பட்ட செல்வாக்கைப் பெற்றிருந்தார். 1983ம் ஆண்டு ஜுனியர் பெனிக்னோ, அகினோ என்ற எதிர் கட்சி அரசியல் தலைவரை படுகொலை செய்த வழக்கில் அவரது ஆட்சி குற்றவாளியாக்கப்பட்டது. அதையொட்டி ஒரு அதிபர் தேர்தல் நடந்தது. அதுவே 1986ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் அதிகாரத்திற்கான புரட்சி நடப்பதற்கு ஒரு கிரியா ஊக்கியாக இருந்தது. அதுவே அதிகாரத்திலிருந்து இவரை கீழே இறக்கியது. உடனடியாக இவர் ஹவாய் தீவில் அடைக்கலம் தேடி ஓடினார். மார்க்கோசும், அவரது மனைவி இமல்டா மார்க்கோசும் பல லட்சம் கோடி டாலர் பெருமான பொதுப்பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடி விட்டார்கள் என்று பின்னால் தெரிந்தது. அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, மற்ற நாடுகளில் பல்வேறு போலி பெயர்களில் இயங்கிய வர்த்தக குழுமங்களில் தான் ஆட்சியிலிருந்த 20 ஆண்டுகளிலும் சுருட்டிய பணத்தை போட்டு வைத்திருந்தார்கள் என்று அம்பலமானது.
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, இப்போது அதிபர் தேர்தலை சந்திக்கிறார். அவரும், அவரது குடும்பத்தாரும் அதிகமான அளவில் பொதுப்பணத்தை கொள்ளை யடித்து விட்டார்கள் என்று இப்போது குற்றம் சாட்டப்படுகிறது. நேற்றைய பிலிப்பைன்ஸ், நாளைய இலங்கையாக இருக்குமா என்பதும், மார்க்கோஸ் சந்தித்த சூழலை, மகிந்த ராஜபக்சேவும் சந்திப்பாரா என்பதும் இப்போது விவாதிக்கப்படுகிறது.
தன்னுடைய குறிக்கோள்களை அடைவதற்காக, அதிபர் மார்க்கோஸ் படைபலம் திரட்டினார். பிலிப்பைன்ஸ் ஆயுதப்படைகள் மூலமாக, சாதாரண குடிமக்கள் செய்ய வேண்டிய உள்கட்டுமான பணிகள், பொருளாதார திட்டமிடல், திட்டங்களை அமுல்படுத்தல் ஆகியவற்றையும், தொழிற்சாலை பகுதிகளை திட்டமிடல் மற்றும் வளர்ச்சிப் பணிகளையும் செய்து வந்தார். தனது அமைச்சரவையை மற்றும் அதிகாரிகளை நியமிப்பதில் உயர் தொழில்நுட்ப மற்றும் உயர் கல்வி கற்ற மேட்டுக்குடிகளை நியமித்து வந்தார். வியட்நாம் போர் நடக்கும் போது, 1965ல், தென் வியட்நாமிற்கு 10,450 பிலிப்பைன் நாட்டு போர் வீரர்களை, மார்க்கோஸ் நிர்வாகம் அனுப்பி வைத்தது. 1969ல் 2வது முறையும் மார்க்கோஸ் வெற்றி பெற்று மறுபடியும் ஆட்சிக்கு வந்தார். அப்போது தனது தனி நபர் செல்வாக்கை உயர்த்திக் கொண்டார். அனைத்து சட்ட ரீதியான அதிகாரங்களையும், உள்கட்டுமான கட்டுப்பாடுகளையும் மார்க்கோஸ் தனது கையில் வைத்திருந்தார். முழு பிலிப்பைன்ஸ் நாடும் அவரை சுற்றியே எதிர்பார்ப்பிலிருந்தது. வணிக அங்காடி களிலும், பள்ளிக்கூடங்களிலும் கூட, நாடு தழுவிய அளவில் அதிபர் மார்க்கோசுடைய பெரிய படங்கள் தொங்க வேண்டும். இல்லாவிடில் அந்த கடைகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் இழுத்து மூடப்படும். இப்படிப்பட்ட ஒரு தனி நபர் புகழ் பாடுதலை மார்க்கோஸ் உருவாக்கியிருந்தார். 1986ம் ஆண்டு ஆட்சியை விட்டு, கீழே இறக்கப்படும் வரை, மார்க்கோஸ் தனது புகழ் பாடுதலை நிறுத்தவில்லை. அவரது 2வது கட்ட ஆட்சிகாலத்தில் பிலிப்பைன்ஸ் பொருளாதாரம் நெருக்கடியை சந்தித்தது. நாட்டில் குற்றங்கள் கூடிக்கொண்டே இருந்தன. கம்யூனிஸ்டு இயக்கத்தின் ஆயுதம் தாங்கிய புரட்சிகரப் போராட்டம் எழுச்சி பெற்றிருந்தது. பணவீக்கம் அதிகரித்து வந்தது. பிலிப்பைன்ஸ் நாட்டின் பீசோ என்ற பணத்தின் மதிப்பு குறைந்து வந்தது. ஊடகங்கள் மார்க்கோஸ் அரசியலில் நுழைந்த காலத்திலிருந்து, சேர்த்து குவித்த கோடிக்கணக்கான சொத்துக்களைப்பற்றி கணக்கு சொல்லிக் கொண்டிருந்தார்கள். பல்வேறு இடங்களில் தனது பணத்தை மூலதனமாக மார்க்கோஸ் போட்டிருந்தார் என்பதும் வெளியாகிக் கொண்டிருந்தது. இடது சாரி இயக்க போராட்டங்களால், பிலிப்பைன்ஸ் நாட்டின் எல்லா பிராந்தியங்களிலும் ஒரு குழப்பமான சூழல் இருந்தது. எண்ணை உற்பத்தி செய்யும் அரபு நாடுகள், இஸ்ரேலுக்கு மேற்கத்திய நாடுகளின் ராணுவ உதவியை கண்டித்து, அமெரிக்க ஆதரவான பிலிப்பைன்ஸ் அரசை எதிர்ப்பதற்காக, எண்ணை உற்பத்தியை நிறுத்தி விட்டார்கள். இயற்கை பேரழிவுகளும் நாட்டின் உள்கட்டுமானம், விவசாய உற்பத்தி மற்றும் கால்நடைகள் ஆகியவற்றை அழித்தது. உள்நாட்டு, வெளிநாட்டு லாப நோக்க சக்திகளின் விளைவாக அத்தியாவசிய தேவை பொருட்களின் விலை உயர்வு கூடிக் கொண்டே இருந்தது. 1960ன் கடைசி ஆண்டுகளிலும், 1970ன் தொடக்க காலத்திலும் மாணவர் இயக்கங்கள், அரசுக்கு எதிராக பல்வேறு கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பெரும் எழுச்சிமிகு போராட்டங்களை நடத்தியது. 1970ம் ஆண்டு ஜனவரி 30ம் நாள், 50,000 மாணவர்களும், தொழிலாளர்களும், அதிபரின் மாளிகையை முற்றுகையிட்டு நெருப்பிட்டனர்.
ராணுவம் அவர்களை விரட்ட, துப்பாக்கி சண்டை நேரடியாக நடந்தது. 4 பேர் பலியானார்கள். இருபுறமும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. பிலிப்பைன்ஸ் பல்கலைகழகத்தில் பயிலும் 18,000 மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மற்ற பள்ளிகளிலும், பாலி டெக்னிக் மற்றும் பல்கலைக்கழகங்களிலும், இடது சாரி இயக்கங்களின் செல்வாக்கில் மாணவர் போராட்டங்கள் கிளர்ந்து எழுந்தன.
1972ம் ஆண்டு செப்டம் 21ம் நாள், மார்க்கோஸ் ராணுவ சட்டத்தை அறிவித்தார். அதன் மூலம் ஊடக சுதந்திரத்தை தடை செய்தார். சிவில் உரிமை அமைப்புகள் செயல்படவிடாமல் தடுக்கப்பட்டன. ஊடக நிறுவனங்கள் கட்டாயமாக மூடப்பட்டன. எதிர்கட்சி தலைவர்களை கைது செய்ய உத்தரவுகள் பறந்தன. பல எதிர்கட்சி தலைவர்கள் தலைமறைவானார்கள். அதிபர் ஆட்சி முறை 1973ல் மாற்றப்பட்டு, நாடாளுமன்ற ஆட்சி முறையாக ஆனது. அதிலும் மார்க்கோஸே பிரதமராக ஆகிவிட்டார். ஒரு புதிய சமூகத்தை தோற்றுவிக்க, ராணுவ சட்டம் அதன் தொடக்கம் என்று மார்க்கோஸ் விளக்கம் அளித்தார். இமால்டோ மார்க்கஸ் அதிகமான அளவுக்கு வைரங்களையும், வைடூரியங் களையும் சேர்த்திருந்தார் என்பது வெளியே தெரிந்தது. தொடக்கத்தில் ராணுவ சட்டம் வரவேற்கப்பட்டது. பிறகுதான் மக்கள் மத்தியில் எதிர்ப்பு தொடங்கியது. மார்க்கோசின் சுயசர்வாதிகார ஆட்சிமுறையை, எப்படித்தான் பிலிப்பைன்ஸ் மக்கள் ஏற்றுக் கொண்டார்களோ என்று, உலக சமூகம் ஆச்சரியப்பட்டது. தங்களது சுதந்திரத்தை அழிப்பவனை எதிர்த்து மக்கள் எழவில்லையா என்று உலகம் கேட்டது. அமெரிக்க அதிகாரிகள் பிலிப்பைன்ஸ் நாட்டைப் பற்றி வர்ணிக்கும் போது, 4 கோடி கோழைகளும், ஒரு பிசாசின் மகனும் இருக்கும் நாடு என்பதாக கூறினார்கள்.
மேற்கண்ட ஒவ்வொரு நிகழ்வும் நமக்கு ராஜபக்சேயின் ஆட்சிமுறையையும், இலங்கைத் தீவின் மக்கள் நிலையையும் நினைவுக்கு கொண்டு வந்தால், அதற்கு நாம் பொறுப்பல்ல.
பிலிப்பைன்சில் ஆயிரக்கணக்கான காட்டு மிரண்டித்தனமான மனிதர்கள், ராணுவத்தில் மார்க்கோஸ் ஆட்சியில் இருந்தார்கள். ஆயுதப்படையின் முக்கிய தளபதிகள்தான் 1972 முதல் 1981 வரை ராணுவ சட்டத்தின் நிர்வாகிகளாக கோலோச்சினார்கள். பிலிப்பைன்சின் அன்றைய 3 முக்கிய நிர்வாகிகள், இன்று நமக்கு மகிந்தாவையும், பசிலையும், கோத்தபாயாவையும் நினைவு படுத்துகிறார்கள். 1981ல் மார்க்கோஸ் ஆட்சியை பாராட்டிய அமெரிக்க துணை ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், மார்க்கோசின் ஜனநாயக கொள்கைகளை பகிரங்கமாக பாராட்டிவிட்டு, மார்க்கோஸ் தனிமைப்பட விடமாட்டோம் என்று சூளுரைத்தார். அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகனுக்கு, மார்க்கோஸ் கோடிக்கணக்காக நிதி கொடுத்ததாகவும் கூறுவார்கள். 1986ல் தேர்தலில் கொலை செய்யப்பட்ட அகினோவின் மனைவி கோரசான், சுதந்திர தேர்தலுக்கான தேசிய இயக்கம் சார்பாக 8 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனாலும் அரசாங்க பட்டியல் 16 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் மார்க்கோஸ் வென்றதாக காட்டியது. தேர்தல் தில்லு முல்லு அம்பலமானது. மக்கள் போர் வெடித்தது. 1983 ஆகஸ்டில் அகினோ படுகொலை செய்யப்பட்டார். மக்கள் எழுச்சி பலமடங்கானது. மார்க்கோஸ் அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவுக்கு ஓடினார். 1989ல் ஹோனலாலுவில் உடல் நலக்குறைவால் இறந்து போனார். அவரது மறைத்து வைக்கப்பட்ட சொத்துக்கள் எல்லாம் மக்களால், தேடி எடுக்கப்பட்டது.
மேற்கண்ட நிலைமைதான் ஜனவரி 26ம் நாள், இலங்கை அதிபர் தேர்தலுக்கு பிறகு மகிந்த ராஜபக்சே குடும்பத்திற்கு வரும் என்ற விவாதம் இப்போது எங்கெனும் தொடங்கியுள்ளது. சர்வாதிகாரிகள் விரட்டப்படுவார்கள் என்பது சரித்திரமாகட்டும்.