Monday, May 31, 2010

ஆக்கிரமிக்கப்பட்ட வடக்கும், கிழக்கும்

இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர் பகுதிகளாக அறியப்பட்டவை. தமிழர் தாயகம் என்பதாக அறிவிக்கப்பட்டவை. 1987ம் ஆண்டு இலங்கையை ஆண்டு வந்த அதிபர் ஜெயவர்தனாவும், இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், வடக்கையும், கிழக்கையும் இணைத்த தமிழர் தாயகம் உருவாக்கப்பட வேண்டும் என்பதாக கையெழுத்திடப்பட்டது. இந்திய அமைதிப்படை இலங்கையில் இறங்கிய பிற்பாடு, விடுதலைப்புலிகளுக்கும், இந்திய அமைதிப்படைக்கும் முரண்பாடு ஏற்பட்ட பிறகு, இலங்கை அரசும், இந்திய அரசும் இணைந்து உருவாக்கிய வரதராஜபெருமாள் தலைமையிலான தமிழர் ஆட்சி என்பது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கியே இருந்தது.
தென்னிலங்கையில் சிங்களர்கள் பெரும்பான்மையாக வாழ்வதும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்வதும் என்ற எதார்த்த நிலை அங்கே அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. அதுமட்டுமின்றி இலங்கையின் ரூபாய் நோட்டிலும், பல்வேறு அரசு பதிவுகளிலும், சிங்களத்துடன் தமிழும் இணைந்தே காணப்படும் என்பதும் ஒரு வரலாற்று உண்மை. வடக்கு மாகாணங்களில் தமிழரான டக்ளஸ் தேவானந்தா மூலமும், கிழக்கு மாகாணங்களில் தமிழர்களான கருணா, பிள்ளையான் மூலமும் தனது ஆட்சி முறையை மகிந்த ராஜபக்சே நடத்தி வந்தார் என்பதும் நாடறிந்த செய்தி. ஆனால் தற்போது அத்தகைய குறைந்தபட்ச அங்கீகாரத்திற்கு கூட தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழர் நிலத்திற்கும், தமிழர் குடியேற்றத்திற்கும், தமிழர் பண்பாட்டிற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்பது தான் அதிர்ச்சி செய்தியாக இருக்கிறது.
வடக்கு மாகாணங்களிலும், கிழக்கு மாகாணங்களிலும் இலங்கை ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. குவிக்கப்பட்டுள்ள இந்த ராணுவத்தில் முழுமையாக சிங்களர்கள் தான் இருக்கிறார்கள். அதாவது தமிழர் பகுதிகளில் சிங்கள ராணுவம் நிரந்தரமாக நிறுத்தப்படுகின்ற சூழ்நிலை அங்கே உருவாக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்திலுள்ள மாணிக் பண்ணையில் இன்னமும் அவதியுற்றுக் கொண்டிருக்கும் பல பத்தாயிரம் தமிழ் மக்கள், தங்களது சொந்தப் பகுதிகளுக்கு மீள்குடியேற்றம் செய்யப்படாமல் பரிதவித்து நிற்கின்றனர். அவர்களை கண்காணித்து, காவல் நிற்பவர்கள் சிங்கள ராணுவத்தினர். இதுவரை முள்வேலி முகாம்களிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டதாக கூறப்படும் தமிழ் மக்கள், இப்போது குடியேறியிருக்கும் திரிகோணமலை மாவட்டத்திலும், மன்னார் மாவட்டத்திலும் ராணுவத்தாரின் முழுமையான மேற்பார்வையிலும், கண்காணிப்பிலும் மட்டுமே வாழ முடிகிறது. இதுவே ராணுவ ஆக்ரமிப்புக்கு உள்ளாக்கப்பட்ட தமிழர் பகுதிகளாகத் தான் இருக்கின்றன.
யாழ்பாண நகரம் முழுமையாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கிறது. அதனால் அதை ஆக்ரமிக்கப்பட்ட தமிழர் பகுதி என்பதாகத் தான் விவரிக்க முடியும். வன்னிப்பகுதிக்கு மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவதாக, அரசு செய்திகளை கூறுகிறது. ஆனால் கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் முழுமையாக ராணுவ முகாம்கள் தான் இருக்கின்றன. இடிந்து போன தங்கள் வீடுகளுக்கு சென்ற தமிழர்களும், பெரிய அளவுக்கு இடிபடாத தங்கள் வீடுகளில் குடியேறியுள்ள தமிழர்களும், அன்றாடம் ராணுவ வீரர்களின் நேரடி கண்காணிப்பில் இருக்கிறார்கள். அதாவது அப்படி தங்கள் சொந்த பகுதிக்கு மீண்டு சென்றுள்ள தமிழ் மக்களின் வீடுகளுக்கு, தினசரி ராணுவ வீரர்கள் உள்ளே வந்து சோதனையிடுவதும் தொடர்கிறது. தங்களுக்குத் தேவையான உணவுப்பொருட்களையும், மற்ற சாமான்களையும் வாங்குவதற்கு தமிழர்கள், ராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கடைகளுக்கு மட்டும் தான் செல்லமுடியும். தமிழர்கள் யாராவது தனியாக ஒரு கடையை திறந்தால், ராணுவத்தினர் வந்து அதை மூடிவிடும் படி கேட்டுக்கொள்கிறார்கள். தமிழர்கள் வைத்திருக்கும் கடைகளில், தமிழர்கள் பொருள் வாங்க வருகை தந்து, தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள் என்றும், அதை தவிர்க்க வேண்டும் என்றும் ராணுவத்தினர் கூறுகின்றனர்.
4வது வன்னிப்போரின் விளைவாக நடந்த உள்நாட்டு இடம்பெயர்ந்த அகதிகள் பிரச்சனையை நாம் கவலையுடன் அணுகும்போது, அதைவிட முக்கிய பிரச்சனையை யாழ்பாண மக்கள் கூறுகிறார்கள். அதாவது 33 ஆண்டுகளுக்கு முன்னால், யாழ்ப்பாணத்திற்குள்ளேயே வாழ்ந்து வந்த தமிழ் மக்களை கட்டாய இடம்பெயர்தல் செய்து ராணுவம், அகதிகள் முகாம்களில் இன்னமும் வைத்திருக்கின்ற பிரச்சனையை கூறினார்கள். காங்கேசன் துறை, தெலிபல்லி ஆகிய யாழ்ப்பாணப் பகுதிகளில் வாழ்ந்து வந்த தமிழர்களைத் தான், 33 ஆண்டுகளுக்கு முன்னால் ராணுவம் கட்டாயமாக இடம்பெயரச் செய்தது. அவர்களது அகதிகள் முகாம் இன்னமும் யாழ்ப்பாணத்தில் ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அதில் 3,000 தமிழர்கள் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் அனைவருமே விவசாயத்தையும், மீன்பிடித் தொழிலையும் சார்ந்து வாழ்ந்து வந்தவர்கள். அவர்கள் வாழ்ந்த பகுதிகளான காங்கேசன் துறையிலும், தெலிபல்லியிலும் ராணுவம் தனக்கான உயர் பாதுகாப்பு வளையமாக, வளைத்துக் கொண்டதால் ஏற்பட்ட விளைவு தான் அவர்கள் உள்நாட்டு அகதிகளாக கைட்ஸ் பகுதியில் முகாமில் இருக்கும் வரலாறு.
அவர்களுக்கு தங்கள் தொழில்களை செய்து வாழ்வாதாரம் பெற முடியாததால், ராணுவ ரேசன்களை சார்ந்தே வாழ்கிறார்கள். சிங்கள ராணுவமும் அந்த பகுதியை, உயர் பாதுகாப்பு வளையத்திலிருந்து நீக்குவதாக தெரியவில்லை. ஏ9 சாலை ஓரங்களில் புத்தர் கோவில்களை ராணுவத்தினர் உருவாக்கியுள்ளார்கள். அரச மரங்களை அங்கங்கே நட்டிருக்கிறார்கள். ராணுவ முகாம்களிலிருந்து சிங்களர்கள் அதிகாலையில், புத்த பெருமானின் சுப்ரபாதத்தை பாட வைக்கிறார்கள். இதுவே அருகிலிருக்கும் தமிழர்களுக்கு தாங்க முடியவில்லை. சைவத் தமிழர்கள் தேவாரம் பாடுவதை எந்நேரமும் பழக்கமாகக் கொண்டவர்கள். அவர்களுக்கு இந்த பண்பாட்டு ஆக்ரமிப்பு விரக்தியை உருவாக்குகிறது.
முல்லைத் தீவு மாவட்டத்தில் சாலை சந்திப்புகளுக்கும், தெருக்களுக்கும் சிங்கள பெயர்களை சூட்டியுள்ளனர். தென்னிலங்கையின் சிங்கள பகுதிகள் போல அவற்றை உருவாக்கி வருகின்றனர். தான்தோன்றி ஈஸ்வரன் கோவில் அருகே ஒட்டிச்சூடான் சந்திப்பில் உள்ள, மாங்குளத்திலிருந்து முல்லைத் தீவு செல்லக்கூடிய சாலை, நெடுங்கேணியிலிருந்து வருகின்ற சாலையில் சந்திக்கிறது. அந்த இடத்திற்கு பிலிமா ஹாண்டியா என்ற சிங்கள பெயரை சூட்டியிருக்கிறார்கள். சிலை சந்திப்பு என்பது அதற்கான அர்த்தமாகும். அங்கே புத்தர் சிலையை நிறுவயிருக்கிறார்கள். ஒட்டிச்சூடானிலுள்ள சிவன் கோவில் குளமும், பள்ளிக்கூடமும் இடிக்கப்படாமல் உள்ளன. வன்னியில் இன்னொரு சந்திப்புக்கு கார்ஹாண்டியா என்ற சிங்கள பெயரை ராணுவம் சூட்டியுள்ளது. அதற்கு கார் சந்திப்பு என்று பொருள். வன்னிப்போரில் பல கார்களை, ராணுவம் இந்த இடத்தில் எரித்தது. இது புதுக்குடியிருப்பிலிருந்து வருகின்ற சாலை. நந்திக்கடலுக்கு அருகேயுள்ள பாலத்திற்கு அலிஹாண்டியா என்று சிங்கள பெயரை ராணுவம் சூட்டியுள்ளது. கிளிநொச்சியில் இருந்த வீரச்சாவடைந்த புலிகளின் கல்லறைகளை, ராணுவம் உடைத்துள்ளது. இது போர் விதிகளை மீறுகின்ற குற்றங்களுக்கு ஒப்பானது. செத்த பிறகும் தமிழர்களை ஓய்வெடுக்க விடாத ஆட்சி என்பதாக இதை மனிதஉரிமை ஆர்வலர்கள் வர்ணிக்கிறார்கள்.
புலிகள் ஆட்சி செய்யும் போது, யாழ்ப்பாணம் அருகேயுள்ள நாகதீபா என்ற பௌத்த கோவிலை, எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாத்தனர். ஆனால் இப்போது யாழ்ப்பாணத்திலுள்ள நல்லூர் முருகன் கோவிலின் புனித தன்மையை, சிங்கள ராணுவமும், ஆட்சியாளர்களும் அசிங்கப்படுத்தி வருகிறார்கள். 3 லட்சம் தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வரும் சூழலில், 4 லட்சத்திற்கு மேல் சிங்கள பயணிகள் சுற்றுலாவிற்காக ஒவ்வொரு மாதமும் யாழ்ப்பாணம் வந்துப் போகிறார்கள். அவர்கள் சைவ சித்தாந்த பண்பாட்டுப்படி, நடைபெற்று வந்த நல்லூர் முருகன் கோவிலுக்கு தங்களது மேலாடைகளுடன் சென்று வேடிக்கை பார்க்கிறார்கள். பருத்திதுறை வடை என்ற தட்டை வடைகளை, சிங்கள சுற்றுலா பயணிகளுக்கு அதிக விலைக்கு விற்பதில் சிங்கள இடைத்தரகர்கள் பணம் சேர்க்கிறார்கள். அருகேயுள்ள தமிழ் மன்னன் சங்கிலியின் அரண்மனை இடத்தை, நல்லூர் ஓட்டலாக மாற்ற சிங்கள அரசு ஏற்பாடு செய்கிறது.
யாழ்ப்பாண விடுதிகளில் தமிழர்கள், அரை குறை சிங்களம் பேச பழக்கப்பட்டு விட்டனர். யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சிலர், அரசு பணிகளுக்காக சிங்களம் படிக்கத்தொடங்கி விட்டனர். இப்படியாக ஒரு சிங்கள ஆக்ரமிப்பு, நிலத்திலும், வாழ்விலும், பண்பாட்டிலும் அதிகரித்து வரும் நிலை தமிழர் பகுதிகளில் நிலவுகிறது. இந்த செய்தியை, டெல்லியிலுள்ள ஆட்சியாளர்களிடம் எடுத்துச் சொல்லி, புரிய வைத்து, தமிழர் அடையாளங்கள் அழிக்கப்படுவதை நிறுத்த வேண்டிய பொறுப்பு, தமிழக அரசியல்வாதிகளிடம் இருக்கிறது.

Sunday, May 30, 2010

மாவோயிஸ்டுகள் பற்றி கலைஞர் என்ன எழுதப் போகிறார்?

கடந்த சில வாரங்களாக ஊடகங்களில் வடமாநிலங்களில் நடக்கின்ற வன்முறைகள் பற்றி தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அவை அனைத்துமே மாவோயிஸ்டுகளால் செய்யப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளும் எழுப்பப்படுகின்றன. அநேகமாக அந்த வன்முறைகளில் பலியானவர்கள் அரசப்படைகளாக இருக்கிறார்கள். சிலவற்றில் அரசுக்கு உளவு சொன்ன மக்களும் பலியாகியிருக்கிறார்கள். அவர்களை அப்பாவி மக்கள் என்றும் கூட, சில ஊடகங்கள் வர்ணிக்கின்றன. அந்த நேரங்களில் பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான லாலு போன்றோர், மாவோயிஸ்டுகள் அப்பாவி மக்களை கொலை செய்ய மாட்டார்கள் என்றும், காவல் துறைக்கு உளவு சொன்னவர்கள் தான் கொலையாகி இருப்பார்கள் என்றும் நியாயம் பேசினார்கள். இப்போது மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் விபத்து பற்றிய சர்ச்சை எழுந்துள்ளது. மாவோயிஸ்டுகள் இதற்கு காரணமா? இல்லையா? என்று விவாதம் தொடர்கிறது. இது ஒரு அரசியல் சதி என்று ரயில்வே அமைச்சர் மம்தா கூறுகிறார். மாவோயிஸ்டுகளை மம்தா பாதுகாக்கிறார் என்று மார்க்சிஸ்ட் கட்சி கூறுகிறது.
இத்தகைய சூழலில் தமிழக முதல்வர் ஊடகவியலாளர்களிடம் பேசும் போது, மாவோயிஸ்ட்டுகளின் வன்முறைப் பற்றி பதில் கூறியிருக்கிறார். அதில் அவர்களது லட்சியங்கள் உயர்ந்தவைகளாக இருக்கலாம் என்றும், அவர்களது கொள்கைகள் சிலாக்கியமானவைகளாக இருக்கலாம் என்றும், ஆனால் அவற்றை நிறைவேற்றுவதில் அவர்கள் கையாளுகின்ற முறைகள் மனித நேயத்திற்கு முற்றிலும் விரோதமானவை என்று குறிப்பிட்டுள்ளார். நடந்து முடிந்த ரயில் விபத்தில் ஒரு காட்சியை முதல்வர் விளக்குகிறார். இறந்து போன ஒரு குழந்தையின் சவத்தை பயணிகள் தூக்கிச் செல்கின்ற காட்சி அது. இதில் அந்த குழந்தைக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் கருத்து வேறுபாடு என்று ஒன்று இல்லை என்பதை முதல்வர் கலைஞர் சுட்டிக்காட்டுகிறார்.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோரது இறப்பைப் பற்றி கவலைப்படாமல் தங்களின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்று கருதுவது நல்லதல்ல என்றும் கூறியுள்ளார். அந்த இயக்கங்களின் அடிப்படையான பொது உடமைக் கொள்கைகளில் தனக்கு மாறுபாடு இல்லை என்கிறார் முதல்வர். அவற்றை நிறைவேற்றிக் கொள்வதில், இந்த முறை சரிதானா என்று கேள்வி எழுப்புகிறார். அது பற்றி இரண்டு நாட்களில் விரிவாக எழுதுவேன் என்றும் அறிவித்திருக்கிறார்.
அதே நேரத்தில் நேற்றைய ஆங்கில நாளேட்டில், ஒரு காங்கிரஸ் தலைவரின் கட்டுரை வந்துள்ளது. சந்தன் யாதவ் என்ற இந்திய இளைஞர் காங்கிரசின் முன்னாள் தேசிய பொதுச் செயலாளர் அந்தக் கட்டுரையை எழுதியுள்ளார். அவர் டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பட்டம் பெற்றவர். ஜே.என்.யு.வில் நக்சலைட்டுகளுடன் வேலை செய்ததாலும், பிறகு ஜார்கண்ட், ஒரிசா மாநிலங்களில் இளைஞர் காங்கிரசின் பொறுப்பை ஏற்று, தேசிய பொதுச் செயலாளராக இருந்ததாலும் , பீகார் மாநிலத்தில் தனது சொந்த மாவட்டமான ககாரியாவில் நக்சலைட்டுகளுடன் பழகியதாலும், தான் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில், சந்தன் யாதவ் அப்படி ஒரு கட்டுரையை எழுதுகிறார்.
அண்ணாசாலை ஆங்கில ஏட்டில் வெளியான அந்தக் கட்டுரை, மாவோயிஸ்டுகளுடன் கருத்தியல் போரும் கூட நடத்தப்பட வேண்டும் என்பதன் தேவையை வலியுறுத்துகிறது. தான் பயணம் செய்த மாவோயிஸ்டு செல்வாக்கு உள்ள பகுதிகள் எல்லாவற்றிலுமே, அடிப்படை உள்கட்டுமான வசதிகள் கூட இல்லாத நிலைமையையும், தேவைகள் கூட கிடைக்காத சூழலையும், சட்ட ஒழுங்கு இல்லா நிலையையும், அந்த மக்களின் பிரச்சினைக்கு நிர்வாகம் அக்கறை செலுத்தாததையும் காணமுடிந்தது என்கிறார் அவர். அந்தப் பகுதிகள் அனைத்தையும் ஒரே மாதிரியான சூழல் நிலவுவதை, காங்கிரஸ் தலைவர் சந்தன் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.
அதன் விளைவாக அந்த வட்டார இளைஞர்கள் விரக்தியிலும், வாழ்வதற்கு வேறு வழியில்லா சூழ்நிலையிலும், நக்சல்பாரி கருத்தியலுக்கு பலியாகி இருக்கிறார்கள் என்கிறார் அவர். ஆயுதபாணியாகி தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். நிலவும் அரசியல் கட்டமைப்பை மாற்றுவதன் மூலம் மட்டுமே, தங்களுக்கு எதிரான சூழல் மாறும் என நம்புகிறார்கள். அதுவே தங்களுக்கான கனவுகளை நிறைவு செய்யும் என்று புரிந்து இருக்கிறார்கள். தாங்கள் மனம் மாறி ஆயுதங்களை விடுத்து, முக்கிய நீரோட்டத்திற்கு வந்தாலும், தண்டிக்கப்படுகிறோம் என்பதாக அவர்கள் கூறுகிறார்கள். இவையெல்லாம் சந்தன் யாதவின் உணர்தல்கள்.
தமிழ் நாட்டில் கூட பண்ணையார்கள் அழித்தொழிப்பை நடத்திய கூலி விவசாயி ராயப்பன், ராஜபாளையம் பகுதியில் ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்த பிற்பாடு, பண்ணையார்கள் ஏற்பாட்டின் மூலம் கொலை செய்யப்பட்ட நிகழ்ச்சி, மேற்கண்ட பீகார் சூழ்நிலையை புரிய வைக்கிறது. மேலும் எழுதுகின்ற சந்தன்யாதவ், நக்சலைட்டுகள் ஒரு வலுவான ஊழியர்களை அடிப்படையாகக் கொண்ட அமைப்பு என்கிறார். அதன் உறுப்பினர்கள் கருத்தியல் ரீதியாக வளர்ந்துள்ளனர் என்றும், தங்கள் கட்சியின் நிலைப்பாடுகள் பற்றி ஒவ்வொரு சாதாரண உறுப்பினரும் தெளிவாக தெரிந்திருக்கிறார்கள் என்றும், சிறப்பான பயிற்சி அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்றும் சந்தன் எழுதுகிறார். ஆனால் மற்ற அரசியல் கட்சிகளில் லாப நோக்கத்துடன் மட்டுமே ஊழியர்கள் இருக்கிறார்கள் என்கிறார்.
நக்சலைட்டுகள் மத்தியில் தோழமை இருக்கிறது என்றும் சந்தன் எழுதியுள்ளார். முடிவுகள் எடுக்கும் நிலையில் மட்டும்தான், தலைமைக்கும், தொண்டர்களுக்கும் இடையில் வேறுபாடு உள்ளது என்றும் மற்றபடி அவர்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள் என்றும் எழுதியுள்ளார். அவர்களில் பெருவாரியானவர்கள் உயர் படிப்பு படித்தவர்கள். பிரபல கல்வி நிறுவனங்களில் கற்றவர்கள். மேட்டுக்குடி குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். அவர்கள் கருத்தியல் ரீதியாக மாவோயிஸ்ட்டு சிந்தனையை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இப்படி எல்லாம் சந்தன் யாதவ் எழுதியுள்ளார்.
சமூக பொருளாதார காரணங்களையோ, சட்ட ஒழுங்கு காரணங்களையோ கூறி மட்டும், நக்சலைட்டுகளை பார்க்கக்கூடாது என்கிறார் கட்டுரையாளர். அவர்களது கருத்தியலை நாம் எதிர்கொள்ளவேண்டும் என்று கூறுகிறார்.
வளர்ச்சியில் உள்ள ஏற்றத்தாழ்வுகள், நக்சலைட்டுகள் வளர ஒரு காரணம் என்பது உண்மைதான். ஏற்றத்தாழ்வான சூழலை மாற்றினால் வளர்ச்சிக்கான அணுகுமுறை வெற்றியடையும். ஆனால் ஏற்றத்தாழ்வும் வளர்ச்சி பெற வேண்டிய பகுதிகளும் அதிகமாக இருக்கின்றன. உதாரணமாக ஏழைகளும், தலித்களும் இன்று கிராமக் கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியலாம். ஆனால் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பது என்பது ஏற்றத்தாழ்வான நிலையில்தான் உள்ளது. அதனால் பல ஆண்டுகளுக்கு இந்த ஏற்றத்தாழ்வு தொடரும்.
கடந்த 62 ஆண்டுகளில் பல வளர்ச்சி திட்டங்கள் நிறைவேறியுள்ளன. ஏழைகளுக்கான திட்டங்கள் பலவற்றால், பல ஏழைகள் பயனடைந்துள்ளனர். ஆனாலும் ஏற்றத்தாழ்வுக்கான புதிய அளவு கோல்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆகவே அந்த இயக்கத்தை, கருத்தியல் ரீதியாக எதிர்கொள்வது மிகவும் தேவையாக இருக்கிறது. மேற்கண்ட கருத்துகளை எழுதியுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அறிவுஜீவி சந்தன்யாதவ் முன் வைக்கும் புதிய கோணம், நமக்கு வித்தியாசமான விளக்கத்தை சொல்லிக் கொடுக்குமா?
வன்முறை என்பது இரு புறமும் கூர்மையான ஒரு வாள் என்பதை, அதை முதலில் பயன்படுத்தும் அரசு இயந்திரம் கற்றுக் கொள்ளுமா? நமது முதல்வரின் ஆக்கப்பூர்வமான எழுத்துக்களும், மேற்படி உண்மைகளை எதிரொலிக்குமா? இந்த விவாதம் ஒரு தொடர்கதையாக இருக்கிறது.

Saturday, May 29, 2010

ஈழத்தமிழருக்கு அரசியல் தீர்வு தர பிரகாஷ் காரத்தால் முடியுமா?

ஜுன் 8ம் நாள் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, டெல்லி வருகிறார். இந்திய அரசியல் தலைவர்களிடம் பேசப்போகிறார். அப்போது முள்வேலி முகாம்களில் இன்னமும் அவதியுறும் தமிழர்களை, மீள்குடியேற்றம் செய்வது பற்றி பேசுவாரா? அதற்காக ரூ.500 கோடியை இந்திய அரசு, இலங்கை அரசுக்கு கொடுத்த பிறகு செலவு செய்த பட்டியல் பற்றி பேசுவாரா? திரிகோணமலை துறைமுகப் பகுதியிலும், மன்னார் கடலோர வட்டாரத்திலும், இந்திய அரசின் எண்ணெய் எடுக்கும் நிறுவனங்களும், இந்தியாவின் தனியார் நிறுவனங்களும் வணிகம் செய்வதுப் பற்றி பேசுவாரா? சி.ஈ.பி.ஏ. என்று சொல்லப்படும் ஒப்பந்தத்தின் மூலம் இந்திய அரசு, இலங்கை அரசிடம் வணிக ஒப்பந்தங்களை செய்ய முனைவதுப் பற்றி பேசுவாரா? அத்தகைய வணிக ஒப்பந்தங்களில் இருபுறமும் பலன் பெறுவது பற்றி பேசுவாரா? இந்தியாவிற்கு மட்டுமே பலன் கிடைத்து, இலங்கை அரசுக்கு பலன் இல்லாத வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட மாட்டோம் என பேசுவாரா? அதற்காகவே மகிந்தாவால் ஏற்பாடு செய்யப்பட்டு, சென்றவாரம் கொழும்பு நகரில் நடத்தப்பட்ட, இந்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பற்றி பேசுவாரா? இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வெளியே சொல்வது போல, ஈழத்தமிழருக்கான அரசியல் தீர்வு பற்றி பேசுவாரா? இத்தனை கேள்விகளும் இந்திய ஊடகத்தாரிடையே சுற்றி வருகிறது.
இந்த நேரத்தில் இந்திய அரசின் வெளிவிவகாரத்துறைக்கு உதவி செய்வதற்கான உளவுத்துறை ஒருபுறம் தனது ஏற்பாட்டில் தயாரான தீர்வு சிந்தனைகளை, ஏதாவது ஒரு விதத்தில் பொதுமக்கள் அபிப்ராயமாக உருவாக்குவதற்கான முயற்சிகள் செய்யப்படுகின்றன. அதேசமயம் மத்திய உள்துறைக்கு உதவி செய்யும் உளவுத்துறை தன்னுடைய புரிதலுக்குட்பட்ட கருத்துக்களை வலுப்படுத்த இன்னொரு புறம் முயற்சிக்கிறது.
இத்தகைய சூழ்நிலையில் தான், அக்கறையுள்ள குடிமக்களும், அறிவுஜீவிகளும், தமிழின உணர்வாளர்களும், இந்தியா வருகை தரும் இலங்கை அதிபரிடம் இந்திய அரசு தமிழருக்கான அரசியல் தீர்வு பற்றி வலியுறுத்த வேண்டும் என்ற செய்திகளை வெளியிடுகிறார்கள். இந்த அணிவரிசையில் இப்போது இடதுசாரிகளும், தங்கள் பக்கத்து குரலை எழுப்பத் தொடங்கியுள்ளனர். அவ்வாறு நடத்தப்பட்ட ஒரு கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தனது கருத்துக்களை முன்வைத்தார்.
மாக்சிஸ்ட் கட்சியின் சார்பாக இலங்கையில் நடந்து வரும் இனப்பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கான முயற்சியில், இருதரப்பிலும் உள்ள அரசியல் அமைப்புகளுடன் பேசி உதவி செய்யக்கூடிய பொறுப்பை, பல ஆண்டுகளாக பிரகாஷ் காரத்திடம் கட்சியின் மேலிடம் ஒப்படைத்திருந்தது என்ற செய்தி அவரது இந்த வருகையின் போது தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு அவர் எடுத்த முயற்சிகள் பற்றியும், அதில் கிடைக்காத வெற்றியைப் பற்றியும் தனது உரையில் காரத் தெரிவித்தார்.
முதலில் இலங்கையில் நடந்து வரும் இனப்பிரச்சனைக்கு, இந்தியாவில் இருக்கும் பெரிய இடதுசாரி நாடாளுமன்ற கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி எப்படிப்பட்ட அரசியல் தீர்வை முன்வைக்கிறது என்ற கேள்வி எழுகிறது. இலங்கை ஒன்றுபட்ட நாடாக இருக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது. அடுத்த நாட்டிற்கு உள்ளே நடக்கும் பிரச்சனை என்பதாகவும் அந்த கட்சி கூறுகிறது. சிறுபான்மை தமிழின மக்களது பிரச்சனை நியாயமானது என்றும் தெரிவிக்கிறது. அடுத்த நாட்டு பிரச்சனையில் முழுமையாக தலையிட முடியாது என்பதையும் அறிவிக்கிறது. இலங்கையை ஆண்டு வரும் சிங்கள ஆட்சியாளர்கள் பேரினவாத கண்ணோட்டத்தில் இருப்பதையும், மார்க்சிஸ்ட் கட்சி கூறுகிறது. ஆனால் அடுத்த நாடான இலங்கையில், ஒன்றுபட்ட நாட்டிற்குள் மட்டும் தான் தீர்வு காணப்பட வேண்டும் என்று சி.பி.எம்.ஆல் எப்படி கூறமுடியும் என்பது நமக்கு விளங்கவில்லை.
4வது வன்னிப்போர் உக்கிரமமாக நடந்து வந்த வேளையில், 2009ம் ஆண்டின் தொடக்கத்திலாவது நாடு தழுவிய அளவில் இந்தியாவில், போரை உடனே நிறுத்த வேண்டும் என்ற குரல் கிளம்பியது. அந்த சூழ்நிலையில் கூட, சி.பி.எம். கட்சி போரை நிறுத்தச் சொல்லி குரல் எழுப்பவில்லை என்ற கருத்தை, இடதுசாரி அணியிலுள்ள இன்னொரு கட்சியிடமிருந்து கேள்விப்படும் போது நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. நடந்து வரும் இனவாத போரில், அப்பாவி மக்கள் கொல்லப்படும் போது, உலகின் எந்த மூலையிலும் இருக்கின்ற சமாதானம் விரும்புவோர், போரை நிறுத்து என்று தான் முழக்கமிடுவார்கள். போர் எதிர்ப்பு என்பது சாதாரண மக்களுடைய சாதாரண உணர்வின் வெளிப்பாடு. அதற்கு அரசியல் தீர்வை அடைய வேண்டும் என்ற புரிதல் கூட தேவையில்லை. அரசியல் விழிப்புணர்வில் முன்னேறிய சக்திகள் மட்டும்தான், அரசியல் தீர்வை எட்டவேண்டும் என்ற குரலை எழுப்புவார்கள். ஆனால் அப்பாவி மக்கள் கூட, போர் வேண்டாம் என்ற உணர்வை வெளிப்படுத்த முடியும். இப்போது இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு ஒன்று கொடுக்கப்பட வேண்டும் என்று தங்களது கொள்கையை வெளிப்படுத்துகின்ற சி.பி.எம். கட்சி, போர் நடக்கும் காலத்தில் ஏன் போரை நிறுத்தக் கோரவில்லை என்ற கேள்வி நியாயமாகபடுகிறது.
இன்றும் கூட இலங்கையில் வவுனியா மாவட்டத்தில் இருக்கின்ற மாணிக் பண்ணை என்ற இடத்தில் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்ட மூன்றரை லட்சம் தமிழ் அகதிகளில், கணிசமானோர் அல்லது பெரும்பான்மையினர் விடுதலை செய்யப்படவில்லை என்ற செய்தியை சி.பி.எம். தலைவர்கள் தங்களது மேடையிலேயே தெரிவித்தார்கள். அப்படிப்பட்ட மனோபாவம் கொண்ட, தமிழின எதிர்ப்பு சிந்தனையாளர்கள் கொழும்பின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பதை இங்கே சி.பி.எம். கட்சி கூறியுள்ளது. அப்படியிருக்கையில் அவர்களுக்கான அரசியல் தீர்வை, ஒன்றுபட்ட இலங்கைக்குள் மட்டும் தான் சாத்தியம் என்று இந்த நாட்டில் இருந்துக் கொண்டு எப்படி கூறமுடிகிறது என்ற கேள்வி எழுகிறது. அதற்கும் சி.பி.எம். தலைவர் கூட்டத்தில் பதில் கூறினார். அதாவது ஏகாதிபத்தியம் எல்லா நாடுகளையும் உடைத்து, சிறு நாடுகளாக பிளவுப்படுத்துகிறது என்பதால் அதை எதிர்க்கிறோம் என்று கூறினார்.
அதேசமயத்தில் இந்திய அரசு மற்றும் இந்தியாவிலுள்ள தனியார் பெரு வணிகக் குழுமங்கள், போர் முடிந்த நிலையிலுள்ள இலங்கையுடன் வர்த்தக உறவுகள் கொள்ள துடிக்கிறார்கள் என்றும் சி.பி.எம். தலைவர்கள் அந்தக் கூட்டத்தில் விமர்சனம் செய்தார்கள். இந்தியாவின் வர்த்தக நலனுக்கும், சீனாவின் வர்த்தக நலனுக்கும் இலங்கைத் தீவு களமாக ஆகிக் கொண்டிருக்கிறது என்ற உண்மை ஒரு உலகறிந்த செய்தி. அப்படியிருக்கும் போது இந்த இரு நாட்டு அரசுகளின் அணுகுமுறை, ஏகாதிபத்திய தன்மை வாய்ந்தது இல்லையா என்றும், காலனியப் பார்வை கொண்டது தானே என்பதும் இயற்கையாக எழுகின்ற கேள்விகளாக இருக்கின்றன.
ராஜபக்சே அரசை இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளை எடுக்கச் சொல்லி, இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும் என்று பிரகாஷ் காரத் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக தமிழர்களுக்கான சுயாட்சி, கூட்டமைப்பு முறை ஆகியவைப்பற்றி சி.பி.எம். கட்சி வலியுறுத்துவதாக கூறியுள்ளார். தங்கள் தொடர்பிலுள்ள இடதுசாரி கட்சியான ஜே.வி.பி.யிடம் இதுபற்றி பலமுறை பேசியும், அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் காரத் கூறுகிறார். இதுபோன்ற விவாதங்களை அக்கறையோடு, இடதுசாரி கட்சிகள் இணைந்து டெல்லி போன்ற தலைநகரங்களில் நடத்தினால், வடஇந்தியாவில் இருக்கின்ற பொதுமக்கள் அபிப்ராயத்திலும், ஊடகங்களின் கண்ணோட்டத்திலும், தமிழர்களின் நியாயமான பிரச்சனையும், அதற்கான அரசியல் தீர்வு தேவை என்பதும் இந்திய மனச்சாட்சிக்கு எடுத்துச்சொல்ல உதவாதா என்பதே நமது கேள்வி.

Thursday, May 27, 2010

சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஏன் தாமதம்?

மத்திய அமைச்சரவை நேற்று கூடிய போதும், விவாதித்து ஒரு முடிவும் எடுக்க முடியவில்லை. இந்தியாவில் நடந்து வரும் மக்கள்தொகை கணக்கெடுப்பில், சாதிவாரி கணக்கெடுப்பும் இணைக்கப்பட வேண்டுமா என்பது பற்றி ஒரு முடிவு எடுக்கமுடியவில்லை. இதுதான் இந்திய மத்திய அமைச்சகத்தின் கொள்கை நிலை. அமைச்சர்கள் குழு ஒன்றை நிறுவி, அந்த குழு தனது கருத்தை தெரிவிக்கும் என்பதாக ஒரு நழுவல்வாத முடிவை மத்திய அமைச்சகம் நேற்று எடுத்துள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது ஏன் இந்த அளவுக்கு சர்ச்சைக்குள்ளாகிறது? இந்தியாவின் மத்திய அரசால் 1931ம் ஆண்டு, அரசியல் சட்டத்தின் 340வது பிரிவின் அடிப்படையில் நிறுவப்பட்ட காகா கலேல்கர் தலைமையிலான, பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஆணையம் நாடு தழுவிய அளவில் உள்ள சமூகரீதியில், கல்விரீதியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை பற்றிய ஆய்வை செய்தது. அந்த காகா கலேல்கர் ஆணையம் 1955ம் ஆண்டு தனது அறிக்கையை கொடுத்தது. பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை அவர்களது வேலை அடிப்படையிலும், தொழில் அடிப்படையிலும், எழுத்தறிவு விழுக்காடு அடிப்படையிலும், பொதுவான கல்வி முன்னேற்ற அடிப்படையிலும் அந்த ஆணையம் மதிப்பீடு செய்திருந்தது. அந்த ஆணையத்தின் அறிக்கை அப்போதே நாடாளுமன்றம் முன்னால் வைக்கப்பட்டது. ஆனாலும் கூட அதன் மீது எந்த விவாதமும் நாடாளுமன்றத்தில் நடத்தப்படவில்லை.
அதேசமயத்தில் 1961ம் ஆண்டு மத்திய அரசு, மாநில அரசாங்கங்களுக்கு ஒரு வழிகாட்டல் அனுப்பியது. அதில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை ஒவ்வொரு மாநிலத்திலும் வரையறைச்செய்யும்படி கேட்டுக்கொண்டது. அந்த வழிகாட்டலில் மத்திய அரசு, சாதிவாரியாக மதிப்பீடு செய்யாமல் பொருளாதார அளவுகோலை வைத்து பிற்படுத்தப்பட்ட சமூகங்களை அடையாளம் காணுமாறு கூறியிருந்தது. அதாவது அன்றைய சூழலில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களிலிருந்து, அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு சென்ற, மற்றும் அரசு அலுவலகப் பணிகளுக்கு சென்ற, அமைச்சர்களாக பொறுப்பேற்றிருந்த நபர்களுக்கு தங்கள் சமூகங்களின் முன்னேற்றத்திற்கான இடஒதுக்கீட்டை, சமூக, கல்விரீதியான பின்தங்கிய நிலையை கணக்கில் கொண்டு அடைய வேண்டும் என்ற விழிப்புணர்வு கிடைக்கவில்லை என்பது புரிகிறது.
அதையொட்டி பல்வேறு மாநில அரசாங்கங்கள் தங்கள் மாநிலத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களை அடையாளம் காண தனி ஆணையங்களை நியமிக்கத் தொடங்கின. அதுதான் தமிழ்நாட்டில் அம்பாசங்கர் ஆணையம் என்ற ஒன்று உருவாவதற்கும் வாய்ப்பாக அமைந்தது. அம்பாசங்கர் ஆணையத்தின் வழிகாட்டல் தமிழ்நாட்டில் சில முன்னேறிய சாதிகளைக் கூட, பிற்படுத்தப்பட்ட சாதிகளாக அறிவிக்கும் நிலையை ஏற்படுத்தியது. இந்த அணுகுமுறை அகில இந்திய ரீதியில் சமூக, கல்வி ரீதியாக பின்தங்கிய சமூகங்களை அணுகிப்பார்த்த தன்மையிலிருந்து, மாறுப்பட்டு இருந்ததா என்பது இப்போதும் சர்ச்சைக்குள்ளாக்கப்படாமல் இருக்கிறது.
உதாரணமாக பீகார் மாநிலத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு பூமிகார் என்ற சமூகம், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்தது. மண்டல் ஆணையத்தின் அறிக்கையில் சமூக, கல்வி, பொருளாதார, அரசியல் நிலைமைகளை ஆய்வு செய்து, பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் பற்றிய மறுஆய்வு வெளியிடப்பட்டது. அதில் பூமிகார் என்ற அந்த சமூகம் முன்னேறிய சமூகமாக அறிவிக்கப்பட்டது. இப்படிப்பட்ட புதிய நிலைமைகளை ஒட்டிய மதிப்பீடுகளை, மண்டல் ஆணையம் தன்னால் முடிந்த அளவிற்கு செய்து காட்டியது. ஆனாலும் கூட 1931ம் ஆண்டு இந்தியாவில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தான், மண்டல் ஆணையமும் தனது மதிப்பீட்டை செய்ய வேண்டியிருந்தது. அதுவே காலாவதியான கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டது என்பதால், சில இடங்களில் பொருத்தமாக இல்லை என்ற விமர்சனத்திற்குள்ளானது.
அதனால் தான் 1931ம் ஆண்டிற்குப் பிறகு, எடுக்கப்படாத சாதிவாரி கணக்கெடுப்பு, இந்த முறையாவது மக்கள் தொகை கணக்கெடுப்பில் இணைக்கப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கை வலுவாக எழுகிறது. உள்ளபடியே இந்திய அரசியல் சட்டப்பிரிவுகள் 341 மற்றும் 342 ஆகியவற்றின் கீழ் இடஒதுக்கீடு, பட்டியலின சாதிகளுக்கும், பட்டியலின பழங்குடியினருக்கும் மட்டுமே, குடியரசுத் தலைவரின் அறிவிப்பாணையின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. சாதிகள் அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது அனுமதிக்கப்படவில்லை. மாறாக சமூக ரீதியில் மற்றும் கல்வி ரீதியில் பின்தங்கியுள்ள வகுப்புகள் என்ற பெயரில் இடஒதுக்கீடு அனுமதிக்கப்பட்டுள்ளது.
1979ம் ஆண்டு சட்டபிரிவு 340ன் கீழ், இன்னொரு பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஆணையமான மண்டல் ஆணையம் உருவாக்கப்பட்டது. அதில் சமூக, கல்வி ரீதியான பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை விளக்குவதற்காக 4 நிபந்தனைகள் கொடுக்கப்பட்டன. 1980ம் ஆண்டின் இறுதியில் மண்டல் தனது அறிக்கையை கொடுத்தார். அந்த அறிக்கையில் 3வது பாகத்தில் 1வது பிரிவில் காகா கலேல்கர் ஆணையம் பற்றி விமர்சிக்கப்பட்டுள்ளது. கலேகர் ஆணையம் சமூக, கல்வி ரீதியான பின்தங்கிய வகுப்புகளை சரியான நிபந்தனைகளுடன், புறநிலை சோதனைகளுடன் முன்வைக்க தவறிவிட்டது என்பதாக கூறப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றமும், பல உயர்நீதிமன்றங்களும் இதே வரையறைகளை கேட்டுக்கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் அடையாளங்களையும் கேட்டு வருகின்றனர். கெடுவாய்ப்பாக மண்டல ஆணையமும், அதை நிவர்த்திச் செய்யவில்லை. மண்டல ஆணையத்தின் 12வது பாகத்தில், 22வது பிரிவில் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள், இந்திய மக்கள்தொகையில் 52% என்பதாக எழுதப்பட்டுள்ளது. அதுவும் 1931ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவே தொடர்ந்து நிலையானது என்று எப்படி கூறமுடியும்?
1931ம் ஆண்டில் இந்தியா என்ற நாடு, பாகிஸ்தானையும், இன்றைய வங்காளதேசத்தையும் சேர்த்து இருந்தது. அப்போதுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, இப்போது எப்படிப் பொருந்தும்? அதனடிப்படையில் 1981ம் ஆண்டிற்கும், அதன்பிறகு 2007ம் ஆண்டிற்கும் பொருத்திப் பார்க்கும் மத்திய அரசை எந்த நிலையில் ஏற்றுக் கொள்ளமுடியும்? 198283ம் ஆண்டு மண்டல் அறிக்கை நாடாளுமன்றத்தில் 2 முறை விவாதிக்கப்பட்டது. அப்போது மாநிலங்கள் அடையாளம் கண்ட பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கும், மண்டல் அறிக்கையால் அடையாளம் காணப்பட்டதற்கும் மத்தியில் பெருத்த வேறுபாடு தெரிந்தது.
1991ம் ஆண்டு செப்டம்பர் 25ல், பிரதமர் வி.பி.சிங்கால், மண்டல் அறிக்கை மறுஉரு பெற்று அமுலாக்கப்பட்டது. மண்டல் அறிக்கையில் 3743 சாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும், மண்டலால் 2 கிராமங்களும், ஒரு ஒன்றியமும் மட்டுமே மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் 0.06% கிராமங்கள் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சமூகபொருளாதார கள ஆய்வு 3745 சாதிகளில், 406 சாதிகள் பற்றி மட்டுமே செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் 11% சாதிகள் மட்டுமே கள ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதனால் தான் இப்போது எடுக்கின்ற மக்கள்தொகை கணக்கெடுப்பில், சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியம் மீண்டும் வலுப்பெறுகிறது.
கலேல்கர் ஆணைய அறிக்கையில் தமிழ்நாட்டில் 156 பிற்படுத்தப்பட்ட சாதிகள் அடையாளம் காணப்பட்டன. அதேசமயம் தமிழ்நாடு அரசு 1245 சாதிகளை, பிற்படுத்தப்பட்ட வகுப்புகளாக அறிவித்துள்ளது. அசாமிலும், கர்நாடகாவிலும், மஹாராஷ்ராவிலும் இதேபோல மதிப்பீடுகள் மாறுபடுகின்றன. இந்த குழப்பங்களுக்கு மத்தியில் உச்சநீதிமன்றம் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கான உயர்கல்வி இடஒதுக்கீட்டில் 27% கூட இடைக்கால தடைசெய்தது. அதற்கான காரணத்தைக் கூறும் போது, 1931க்கு பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு இல்லை என்பதையே கூறியிருந்தது. இத்தனை காரணங்களையும் எடுத்துச்சொல்லி, இன்னமும் பின்தங்கியிருக்கும் மக்கள் பிரிவினரை முன்னேற்ற, அரசாங்கம் திட்டங்களை தீட்டுவதற்கு, சாதிவாரி கணக்கெடுப்பின் காரணங்களை முன்வைத்து, தமிழக அரசு கடுமையாக போராட வேண்டும் என்பது தான் நமது எதிர்பார்ப்பு.

பல்லுயிரியலை அழிக்கும் பன்னாட்டு மூலதனம்----திரைப்படங்கள்

நேற்று சென்னையில் பல்லுயிரியல் பற்றிய திரைப்படங்கள் காட்டப்பட்டன. இந்த ஆண்டு ஐ.நா.சபையால், பல்லுயிரியல் ஆண்டு என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே 21ம் நாள் அதற்கான உலக நாள் என்பதாகவும் கடைபிடிக்கப்பட்டது. அதையொட்டியே பல்லுயிரியல் பற்றிய திரைப்படங்களை, மரபணுமாற்று இயலுக்கு எதிராக தெற்கு என்ற அமைப்பிலிருந்து திரையிட்டார்கள். இயற்கையாக பல்லுயிரியல் எப்படி தாவரங்கள், விலங்கினங்கள், மனிதயினம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்தி வைத்துள்ளது என்பது இந்த நேரத்தில் கவனிக்கப்பட வேண்டும். விவசாயத்தில் பல்லுயிரியல் எவ்வாறு ஆரோக்கியமான சூழலை உருவாக்கியிருந்தது என்பதை, இன்றைய அழிந்து வரும் சூழலில் நின்றுக் கொண்டு பார்க்க வேண்டியிருக்கிறது.
மாறிவரும் தட்பவெப்ப நிலைகளுக்கு ஒப்ப, ஒரே நிலத்தில் பல்வேறு வகையான பயிர்களை நமது விவசாயிகள் பயிரிடுவார்கள். அதில் சிறு தானியங்களின் உற்பத்தியும் அடங்கும். கம்பு, கேழ்வரகு, சோளம், சாமை, திணை, வரகு, குதிரைவாலி, பனிவரகு, காடை, கண்ணி போன்ற சிறு தானியங்களை, நமது விவசாயிகள் பயிரிட்டு வந்ததை நாம் பார்த்திருக்கிறோம். நெல் உற்பத்திச் செய்கின்ற நிலத்திலேயே, காலத்திற்கு ஒப்ப கடலையையும் பயிரிடும் நமது பண்டைய விவசாயிகள், ஆரோக்கியமான சூழ்நிலையை தக்கவைத்துக் கொண்டிருந்தார்கள். பல்வேறு பயிர்கள் ஒரே நிலத்தில் பயிரிடப்படும் போது, பூச்சிகளின் தாக்குதல்களும், நோய்வாய்படுதல்களும் கட்டுப்படுத்தப்படுகின்றன. இவ்வாறு பல்லுயிரியல் என்பது நமது பாரம்பரிய விவசாயத்தின் ஊறிப்போன ஒரு நடைமுறையாக இருந்து வருகிறது.
மேற்கண்ட பல்லுயிரியல், 1965ம் ஆண்டு இந்தியாவில் திணிக்கப்பட்ட, அமெரிக்காவின் பசுமைப்புரட்சி மூலம் விவசாயத்தில் முதலில் உடைக்கப்பட்டது. பாரம்பரிய பயிர்களின் விதைகள் நாடெங்கிலும் திரட்டப்பட்டு, பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள தலைநகர் மணிலாவில், அமெரிக்காவால் நடத்தப்பட்ட சோதனைசாலையில் உருமாற்றம் செய்யப்பட்டு, வீரிய விதைகளாக இந்தியாவிற்கு அனுப்பப்பட்டன. அந்த வீரிய விதைகள் இந்திய விவசாயத்தின் முகத்தையே மாற்றிவிட்டன. அவற்றை பயிரிட்ட நிலங்கள், சத்துக்களை இழக்கத் தொடங்கின. அதை ஈடுசெய்வதற்காக மேற்கத்திய நாடுகளின் உதவியால் ரசாயன உரங்கள், நமது நிலங்களில் இறங்கின. அவை ஏற்படுத்திய நோய்களைத் தீர்க்க, பூச்சிமருந்து கொல்லிகளை வெளிநாட்டவர்களே இறக்குமதிச் செய்தார்கள். இப்படியாக நமது பாரம்பரிய நிலங்கள் தங்களது சத்துக்களையும் இழக்கத்தொடங்கின. இது பல்லுயிரியலுக்கு கொடுக்கப்பட்ட முதல் அடி.
அடுத்து உலக அரங்கில் பன்னாட்டு மூலதன நிறுவனத்தின் மரபணுமாற்று விதைகள், பல்லுயிரியலை அழிப்பதற்கான வேலைகளை செய்யத் தொடங்கின. அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் செயற்கை விதைகள், 80 விழுக்காடு அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனமான மான்சான்டோவின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன. வெற்றியைத் தேடி ஒரு பேராபத்து என்ற திரைப்படத்தின் மூலம், தென்னாப்பிரிக்கா, இந்தோனேஷியா, தாய்லாந்து, வடஆப்பிரிக்காவின் மாலி ஆகிய நாடுகளில், மரபணுமாற்றியல் செயல்பட்ட விதம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த படத்தில் பி.டி.பருத்தி விதையின் வில்லங்கங்கள் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளன.
மான்சான்டோ நிறுவனம் மரபணுமாற்று உறுப்புகள் மூலம், பாதுகாப்பையும், அதிகமான பொருள் வரவையும் ஈட்டலாம் என்ற பரப்புரையை செய்து வருகிறது. ஆனால் அது எந்தளவுக்கு பொய்யானது என்பதை இந்தப் படம் விளக்குகிறது. தென்னாப்பிரிக்காவின் மகதினி என்ற பகுதியில், சிறு விவசாயிகளுக்கு மான்சான்டோவின் பி.டி.பருத்தி விதைகள் அதிக வெற்றியைக் கொடுத்திருப்பதாக, அந்த நிறுவனம் கூறியது. ஆனால் சிறு விவசாயிகளை அழிக்கத் தான் அந்த மரபணுமாற்று பருத்தி உதவியிருக்கிறது என்பதை இந்தப் படம் நேரடியாக விளக்குகிறது.
அதேபோல இந்தோனேஷியாவில் பி.டி.பருத்தி அறிமுகப்படுத்தப்பட்டு சுலாவாசி என்ற இடத்தில், ஓராண்டு கழித்து, சிறு விவசாயிகளை நட்டம் அடைய வைத்திருக்கிறது என்பதையும் இந்தப் படம் அம்பலப்படுத்துகிறது. அதேபோல தாய்லாந்தில் நிலவுகின்ற சட்டங்களை வஞ்சகமாக மீறி, விவசாயிகள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட மரபணுமாற்று பருத்தி பெரும் தோல்வியை ஏற்படுத்தி, தாய்லாந்து விவசாயிகளை புலம்பவைத்துள்ளது என்பதும் இந்த திரைப்படத்தின் மூலம் நாம் காணமுடிகிறது. மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் மாலி நாட்டில், மரபணுமாற்று பருத்தி அறிமுகப்படுத்தப்பட்ட போது, அங்குள்ள சிறு விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அதன் மூலம் மாலி நாட்டிற்குள் மரபணுமாற்றியல் நுழையக்கூடாது என்ற தடை விதிக்கப்பட்டதையும் இந்தப் படம் சித்தரிக்கிறது. அதேசமயம் இந்தியாவில் பி.டி.பருத்தி 5 ஆண்டுகளில் விவசாயிகள் மத்தியில் ஆழமான நெருக்கடியை ஏற்படுத்தி, விவசாயிகளின் தற்கொலைகளுக்கு காரணமாக ஆனதையும் இந்த திரைப்படம் தெளிவாக காட்டுகிறது.
அடுத்து மான்சாடோவின் பார்வையில் உலகம் என்ற ஒரு திரைப்படம் காட்டப்பட்டது. ஒரு மணி நேரமும், ஐம்பது நிமிடங்களும் ஓடும் இந்தப் படம், மான்சான்டோவின் இணையதளத்திற்குள் சென்று, பல்வேறு விவரங்களை பட்டியலிடுகிறது. 1901ம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கிய காலத்திலிருந்து தனது உற்பத்திகளில் உள்ள நச்சுத்தன்மைகளால், பல்வேறு வழக்குகளை சந்தித்தது என்பது காட்டப்படுகிறது. 2002ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டு வரை ரூ.10,000 கோடி டாலரை, மான்சான்டோ நிறுவனம் சம்பாதித்துள்ளது. இந்த அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனம், பி.சி.பி என்று அழைக்கப்படும் பாலி குளோரினேட்டட் பைபினய்ல்ஸ் என்ற தனது உற்பத்தியின் மூலம், புற்றுநோயையும், தைராயிடையும் ஏற்படுத்தியதை நாம் காணமுடிகிறது.
அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து ஒப்புதல் குழு மூலம், நச்சுத்தன்மைக் கொண்ட மான்சான்டோவின் உற்பத்திகள் ஒப்புதல் பெற்றன என்பதும் இந்தப் படத்தில் தெரிகிறது. அதன் பல்லுயிரியல் ஒருங்கிணைப்பாளரான ஜேம்ஸ் மயன்ஸ்கி என்ற ஆராய்ச்சியாளரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு, அவர் திணறுவது இதில் காட்டப்படுகிறது. மான்சான்டோ உற்பத்திகளின் பக்கவிளைவுகளால் 1000 பேர் ஊனமுற்றதை அவரால் மறுக்க முடியவில்லை. அமெரிக்க குடிமக்களையே சோதனைப்பன்றிகள் போல, பயன்படுத்துவதை ஆராய்ச்சியாளர்கள் இந்த படத்தில் குற்றம்சாட்டுகிறார்கள். கனடாவில் அதிகாரப்பூர்வமற்ற நிலையிலும், ஐரோப்பாவில் தடைசெய்யப்பட்ட நிலையிலும் உள்ள போவின் வளர்ஹார்மோன்ஸை, மாடுகளுக்கு ஊசியின் மூலம் இறக்கி, பால் உற்பத்தியை அதிகப்படுத்துவதாக கூறி, நச்சுத்தன்மையை பரப்பி வருவதையும் இதில் சுட்டிக்காட்டுகிறார்கள்.
வடஅமெரிக்க விவசாயிகள் ஒவ்வொருவருடனும், மான்சான்டோ நிறுவனம் கட்டாயமாக ஒப்பந்தம் போட்டு, தனது மரபணுமாற்று விதைகளை திணித்துள்ளது. அதில் நட்டம் அடைந்த விவசாயிகள் தங்களது பண்ணைகளுக்கு இனி மான்சான்டோ நுழையக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்ததையும் இப்படம் விளக்குகிறது. சோயா பீன்சிலும் மரபணுமாற்று வேலை செய்து தோல்வி அடைந்ததை காட்டுகிறார்கள். மெக்சிகோவில் பல பத்து லட்சம் விவசாயிகள் மத்தியில், பாரம்பரிய சோளத்தை அழித்து, மரபணுமாற்று சோளம் கொண்டு வந்ததால் ஏற்பட்ட பாதிப்பு காட்டப்படுகிறது. மான்சான்டோ நிறுவனம் உருவாக்கிய ரசாயன கலவையான ஏஜென்ட் ஆரஞ்சு என்ற நச்சுப்பொருளை, அமெரிக்க ராணுவம் வியட்நாம் போரில் பயன்படுத்தியதால் 4 லட்சம் மரணத்தையும், 5 லட்சம் குழந்தைகளின் குறைப்பிரசவத்தையும் அடைந்ததை நாம் சிந்தித்துப்பார்க்க இந்தப் படம் உதவுகிறது.
இந்தியாவில் மஹிகோ என்ற விதைக் கம்பெனியை முழுமையாகவும், ஈ.ஐ.டி.பாரியின் சிறிய விதைப் பிரிவையும் மான்சான்டோ வாங்கி விட்டது. போன்கார்டு என்ற பெயரில் ஆந்திராவில் நுழைந்துள்ளது. அதன் விளைவாக 25 வயது விவசாயி உட்பட, பல ஆயிரம் விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துக் கொண்டதை இந்தப் படம் அம்பலப்படுத்துகிறது. தமிழ்நாட்டில் ராசி 12, ராசி 14 என்ற பெயர்களில் மரபணுமாற்று பருத்தி விதைகளை, மான்சான்டோ மாற்றுப்பெயர்களில் சந்தையில் திணித்து வருகிறது. இந்தப்படங்கள் காட்டும் உண்மைகளை, காட்சிகளின் மூலம் ஆட்சிக்கு வரும் நமது அரசியல்வாதிகள் புரிந்துக்கொண்டு சுதாரிப்பார்களா என்ற கேள்வி நமக்கு எழுகிறது.

Wednesday, May 26, 2010

தமிழக அரசுக்கு டெல்லி தரும் நெருக்கடியா?

தமிழகத்தை ஆண்டுவரும் ஆளுங்கட்சி, டெல்லியை ஆண்டுவரும் அதாவது இந்தியாவை ஆண்டுவரும் ஆளுங்கட்சியுடன் கூட்டணியாக செயல்படுவது உண்மை தான். அதுமட்டுமின்றி இந்த கூட்டணியான ஐக்கியமுற்போக்கு கூட்டணி தனது 2வது ஆட்சியின் முதல் ஆண்டை முடித்திருப்பதும் உண்மை தான். அதைப்பற்றி ஓராண்டாக தான் சந்திக்காத ஊடகவியலாளர்களை, தலைமை அமைச்சர் சந்தித்ததும் உண்மை தான். எந்தவொரு கேள்விக்கும் விரிவான விடையை தலைமை அமைச்சர் கொடுக்கவில்லை என்பதே ஊடகக்காரர்களின் வருத்தம். ஆனாலும் சில கேள்விகளுக்கு அவர் விரிவாக விடையளித்ததாகத் தான் தெரிகிறது. உதாரணமாக ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றிய கேள்விகளுக்கு, தவறு எதுவும் நடக்கவில்லையென்று மத்திய அமைச்சர் ஆ.ராஜாவிற்கு ஒரு பாராட்டே கொடுத்துள்ளார். ஆனாலும் கடைசியில் தவறு நிரூபணமானால், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த இடத்தில் தான் ஒரு சிறிய நெருடல் தெரிகிறது.
மாநிலத்தில் தேர்தல் வரயிருக்கும் காலத்தில், கூட்டணி கட்சிகளுக்குள் அதுவும் பெரிய கட்சிகளுக்குள் ஒரு பேர உரசல் இருக்கத்தான் செய்யும். தங்கள் தங்கள் பாணியில் ஒவ்வொருவரும், தங்கள் பேரத்தை அதிகப்படுத்துவதற்காக நெருக்கடி தருவார்கள். மத்திய அரசை ஆளுகின்ற பாரம்பரியக் கட்சியான காங்கிரஸ் கட்சி இப்படிப்பட்ட நெருக்கடிகளை தருகின்ற பாணியே தனிதான். அப்படிப்பட்ட ஒரு அடிநீரோட்ட காய் நகர்த்தல்கள் காங்கிரஸ் கட்சியால் நடத்தப்படுகிறதா? மாநில ஆட்சியில் கூட்டணி ஆட்சியை நிறுவ, ஏதாவது நிர்ப்பந்தம் இப்போதிலிருந்தே கொடுக்கப்படுகிறதா? அதற்காக மத்திய ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்த முயல்கிறார்களா? எதிர்கட்சிகள் மீது சி.பி.ஐ. வழக்குகள் மூலம் நிர்ப்பந்தம் கொடுப்பதாக காங்கிரஸ் மீது ஏற்கனவே புகார் இருக்கிறதே? அதையும் கூட பிரதமர் தனது பேட்டியில் மறுத்திருக்கிறாரே?
இப்போது வெளிவரப்பட்டுள்ள உள்துறை அமைச்சகத்தின் குறிப்பிட்ட அதிகாரப்பூர்வமான அறிக்கை, அப்படிப்பட்ட சந்தேகங்களை ஏற்படுத்துகிறது அல்லவா? மத்திய உள்துறை இணைச்செயலாளர் தர்மேந்திர சர்மா, வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவுக்கு கள்ளத்தோணி மூலம் விடுதலைப்புலிகள் வந்துள்ளனர் என்பதாகவும், விடுதலைப்புலி ஆதரவாளர்களால் தமிழக பாதுகாப்புக்கு ஆபத்து என்பதாகவும் கூறியுள்ளார். இதுதான் இப்போது மேல்மட்டங்களில், பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த அறிக்கையில் இலங்கையில் நிலவும் கொந்தளிப்பைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு திரட்ட, அதன் ஆதரவு அமைப்புகள் ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி அமைதியற்ற நிலையை ஏற்படுத்தி தமிழகத்திற்கு ஒரு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளனர் என்பதாக கூறுகிறார். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்தி.
ஏனென்றால் இலங்கைத் தீவில், விடுதலைப்புலிகள் அமைப்பில் போரில் வென்று, அதிபர் மகிந்தா அந்த வெற்றியின் ஓராண்டை கொண்டாடியும் விட்டார். அதனால் அங்கே கொந்தளிப்பான சூழல் இல்லை. தமிழ்நாட்டிலும் காவல்துறை விடுதலைப்புலி ஆதரவாளர்களுக்கு, எந்தவொரு ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தவும் எளிதாக அனுமதிக் கொடுப்பதில்லை. நீதிமன்ற உத்தரவில் அனுமதிப் பெற்றவர்களையும், ஆயிரம் நிபந்தனைப் போட்டு அடக்கி வருவது தமிழக காவல்துறையின் வழக்கமாக ஆகிவிட்டது. அப்படியிருக்கும் போது தமிழகத்தில் நிலவும் சட்டஒழுங்கு நிலைமைப் பற்றி அபாண்டமாக மத்திய அரசு ஓர் அறிக்கையை வெளியிட வேண்டிய தேவை என்ன?
உள்துறையின் அறிக்கையில் எஞ்சியுள்ள விடுதலைப்புலியின் போராளிகளும், தலைவர்களும் நம்பிக்கை துரோகிகள் என இந்திய அரசையும், எதிரிகள் என இலங்கை அரசையும் பழிவாங்கும் நோக்கத்துடன் தமிழகத்தில் ஒன்று சேர்ந்து வருகின்றனர் என்று பொறுப்பற்ற ரீதியில், ஒரு பொல்லாப்பை கூறியுள்ளது. கடல்வழியாகவும், முறையான ஆவணங்கள் மூலமாகவும், இலங்கை தமிழ் அகதிகள் என்ற போர்வையில் இந்தியாவுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் இருப்பதை புறந்தள்ளிவிட முடியாது என்று உள்துறை கூறுகிறது. இத்தகைய கூற்று, உள்துறையின் தாக்கும் குறிகளாக அப்பாவி ஈழ அகதிகள் இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. தமிழக முதல்வர் தனது முயற்சியில், ரூ.100 கோடியை ஒதுக்கி தமிழகத்தில் வாழும் ஈழ அகதிகளுக்கு மேம்பாட்டு உதவிகளை செய்து வருகின்ற நேரத்தில், அந்த அப்பாவி 1 லட்சம் மக்கள் மீது இப்படிப்பட்ட அபாண்ட பழியை, மத்திய அரசு சுமத்த வேண்டிய காரணம் என்ன?
இணையதளத்தில் ஈழப்போரின் தோல்விக்கு இந்தியாவே காரணம் என்ற இந்திய விரோதப்போக்கை, இலங்கைத் தமிழரிடையே விதைக்கின்ற வகையில் கட்டுரைகள் எழுதப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது உலக அரங்கில் இருக்கின்ற தமிழர்களின் கருத்துரிமைக்கு, எழுத்துரிமைக்கு எதிராக இந்திய அரசு தொடுக்கின்ற மிரட்டல் என்பதாகத் தான் எடுத்துக்கொள்ளப்பட முடியும். இதே கருத்தை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தமிழ்நாட்டு எம்.பி.க்கள் பேசியிருக்கிறார்கள். அவர்களிடம் முறையாக அந்த அவைகளில் பதில் சொல்லாத, உள்துறை அமைச்சகம் இந்த நேரத்தில் இப்படிப்பட்ட அறிக்கையை வெளியிடுவதன் நோக்கம் என்ன?
மாநில நிர்வாகத்தின் நடவடிக்கைகள் மீதும் புலி ஆதரவாளர்கள் வெறுப்புற்றிருக்கிறார்கள் எனவும் மத்திய அரசு கூறுகிறது. அதனால் தான் விடுதலைகள் புலிகள் அமைப்பை சட்டவிரோதமானது என்று மத்திய அரசு அறிவித்துள்ளதாக ஒரு நியாயப்படுத்தல் அறிக்கையை, உள்துறை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை மாநில ஆட்சியை நெருக்குவதற்கும், மிரட்டுவதற்கும் என்று சொன்னால் சரியாக இருக்குமா? இதற்கு முன்னால் மத்திய அரசு இதுபோன்று மாநில அரசை மிரட்டிய வரலாறு உண்டா? அதற்காக பொய்க் காரணங்களை கூறிய ஆதாரங்கள் இருக்கிறதா? இந்த கேள்விகளுக்கு பதிலை நாம் தேட வேண்டும்.
2005ம் ஆண்டு தமிழகத்தில் ஜெயலலிதாவை முதல்வராகக் கொண்டு, அ.தி.மு.க. ஆட்சி நடந்து வந்தது. அப்போது மத்திய அரசின் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் இதுபோன்ற பீதியுற வைக்கும் கடிதத்தை, மாநில அரசுக்கு அனுப்பி வைத்தது. 200405 ஆண்டுக்கான உள்துறை அறிக்கையில், சிவராஜ் பாட்டீல் தமிழ்நாட்டில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக ஒரு அச்சுறுத்தும் அறிக்கையை வெளியிட்டார். 200304 ஆண்டுக்கான அறிக்கையில், உள்துறை அமைச்சர் அத்வானி அப்படிப்பட்ட எந்தவொரு சட்டஒழுங்கு பிரச்சனையையும் தமிழ்நாடு பற்றி கிளப்பவில்லை. இடைப்பட்ட ஓராண்டில் எதுவும் நடக்காதபோது, மத்திய உள்துறை ஏன் அப்படி பீதியை கிளப்பியது? அடுத்து அன்றைய முதல்வரை கொலை செய்வதற்காக, 2 விடுதலைப்புலிகளின் தற்கொலை பெண்புலிகள் இறங்கியிருப்பதாக, முதலமைச்சருக்கு உள்துறை அமைச்சர் கடிதம் அனுப்பினார். இவை அனைத்துமே தமிழ்நாட்டில் சட்டஒழுங்கு இல்லை என்ற கற்பித்தலை ஏற்படுத்தத்தான் என்று அன்றைய முதல்வர் அறிக்கை விடுத்தார்.
இப்போது செம்மொழி மாநாட்டிற்கான துரிதப் பணிகளில், தமிழக ஆட்சியாளர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். உலகம் முழுவதும் செம்மொழி தமிழ் மாநாடு மூலம், விரும்பியோ, விரும்பாமலோ, தமிழின உணர்வும், தமிழ் மொழி உணர்வும் மேலோங்கும் என்ற அச்சம் மத்திய அரசுக்கு இருக்கிறது. அதனால் தான் இந்த சந்தர்ப்பத்தில், இப்படியொரு அச்சுறுத்தல் அறிக்கையை அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். இதை புரிந்துக்கொள்ளும் தமிழக அரசியல் சக்திகள், சரியான வழியில் பதில் கொடுத்து, அச்சுறுத்தும் அறிக்கைகளை முறியடிக்க முடியும். தேர்தல் அரசியல் களத்தில் இருக்கும் தமிழக அரசியல் சக்திகள், விவரம் புரிந்து வியூகம் உடைப்பார்களா என்பதே நமக்கு எழுகின்ற கேள்வி.

Tuesday, May 25, 2010

கள்ளத்தோணியும், நல்ல தோணியும்

இந்திய அரசுக்கு எப்போதுமே அறிக்கைகள் கொடுப்பதில் ஒரு அலாதி பிரியம் உண்டு. அதுவும் இந்தியாவில் அரசியல்வாதிகளுக்கு பதில், அமைச்சர்களுக்கு பதில், உயர் அதிகாரிகள் மூலம் அறிக்கைகள் கொடுப்பதில்தான் அந்த அலாதிப் பிரியம் வெளிப்படும். இந்தமுறை அத்தகைய ஒரு அறிக்கையை மத்திய உள்துறையின் இணைச்செயலாளர் தர்மேந்திர சர்மா மூலம் வெளியிட்டுள்ளனர். இந்தியாவின் உள்நாட்டு அடக்குமுறையை மாவோயிஸ்டுகள் பெயரில் கட்டவிழ்த்துவிட, உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை மூலம் வெளியிடுவார்கள். அதை அடுத்த ஒரு திட்டத்திற்கு இப்போது இணைச் செயலாளரை பயன்படுத்துகிறார்கள் போலத்தெரிகிறது. இந்த அறிக்கையில் மத்திய அரசின் குறி, விடுதலைப்புலிகள் மீது. இந்திய அரசும், இலங்கை அரசும் ஏற்கனவே விடுதலைப்புலிகள் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டனர் என்று அறிவித்தார்களே என்று நீங்கள் அப்பாவித்தனமாக கேட்கலாம். அதுவும் உண்மைதான். திட்டமிட்டு ஏழு நாடுகள் அல்லது இப்போது புரிவதுபோல இருபது நாடுகள் சேர்ந்து திட்டமிட்டு புலிகள் இயக்கத்தை அழித்துவிட வேண்டுமென்று, இலங்கை அரசுக்கு முழுமையான உதவியைச்செய்தன. அதன் உண்மைப்பொருள் புலிகள் இயக்கத்தை அல்ல, ஆனால் ஒட்டுமொத்த தமிழ் இனத்தை என்பதை அப்போது பலரும் புரிந்து கொள்ளவில்லை. உள்ளபடியே இலங்கை அரசுக்கும், அண்டை நாடுகளில் உள்ள விரிவாக்க சிந்தனையுள்ள அரசுகளுக்கும், தமிழ் இனத்தின் எழுச்சி என்பதன் மீது ஒருவிதமான அச்சம் இருக்கிறது.
பாரம்பரியமிக்க தமிழ் தேசிய இனம், ஆங்கிலேயரின் ஆட்சி காலத்திலேயே அவர்களது தேவைக்காக ஒவ்வொரு நாட்டுக்கும் இந்தியாவிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டனர். அதாவது அன்று ஆங்கிலேயர்களுக்கு குடிக்க தேநீர் தேவைப்பட்டது. அதற்காக தேயிலைத்தோட்டங்களை மலைப்பகுதிகளில் நிறுவ முயன்றனர். தாங்கள் காலனிகளாக ஆக்கிரமித்துள்ள நாடுகளில் மலைப்பிரதேசங்களை அடையாளங்கண்டனர். அப்படி அவர்கள் அடையாளங்கண்ட நாடுகள் மலேசியாவும், இலங்கையும். அந்த இரு நாடுகளுக்கும் தேயிலைத்தோட்டங்களை உருவாக்க கடினமாக உழைக்கும் கூட்டம் அவர்களுக்கு தேவைப்பட்டது. ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்த கடின உழைப்பாளர்கள் தமிழர்களே. அதனாலேயே இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டிலேயிருந்து கூலித்தொழிலாளர்களை கூட்டம், கூட்டமாக அந்த இரு நாடுகளுக்கும் ஆங்கிலேயர்கள் எடுத்து சென்றனர். அப்படி அந்த நாடுகளுக்கு சென்ற தமிழர்கள் இலங்கையிலும், மலேசியாவிலும், மலைகளை, காடுகளை வெட்டி, பண்படுத்தி, தோட்டங்களாக மாற்றி, அவற்றில் தேயிலைச் செடிகளை வளர்த்து, அந்த தேயிலைச் செடிகளுடன் அதிகாலை ஆறு மணியிலிருந்து போராடி, மாலை வரை உழைத்து, கோடி, கோடியாக அந்த நாடுகளுக்கு சம்பாதித்து கொடுத்துள்ளனர். அப்படிப்பட்ட தமிழர்களை இலங்கை அரசு, குடியுரிமை தராமல் பல ஆண்டுகள் அடிமைகளாக நடத்தி வந்தது. அதன்பிறகு இன்று வரை மலையக தோட்டத்தொழிலாளர்களான இந்திய வம்சாவழியினருக்கு, எந்த ஒரு முன்னேற்றமும் கொடுக்க வில்லை. மாறாக அவர்களது அரசியல் பிரதிநிதிகளை அடிமைகளாக இலங்கையின் சிங்கள அரசு நடத்தி வருகிறது. சுதந்திரமான தொழிற்சங்கத்தையோ, தொழிலாளர்களின் அரசியல் பிரதிநிதிகளையோ வளர விடுவதில்லை. அன்றைய காலத்தில் ஷண்முகதாசன் தொடங்கி, இன்றைக்கு மனோகணேசன் வரை தோட்ட தொழிலாளர்கள் மத்தியிலிருந்து வளரும் தலைவர்களை வெற்றி பெற விடுவதில்லை.
அதையும் மீறி எதிர்கட்சியான ஐ.தே.க. எம்.பி.யாக, மலையகப் பகுதியான நுவரலியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காதரையும் ஆளுங்கட்சி இப்போது இழுக்கிறது. தென்னிலங்கையில் இந்திய வம்சாவழி தமிழர்கள், சிங்கள பெரும்பான்மை மக்கள் மத்தியில் அச்சத்துடன்தான் வாழ முடிகிறது. இதே நிலைமைதான் மலேசியாவிலும் நடந்து வருகிறது. மலேசியாவில் மலாய் இனத்தவருக்கு போட்டியாக பெரும்பான்மையாக இருக்கும் சீன இனத்தை இணைத்துக் கொண்டுதான், தமிழர்கள் அங்கே அரசியல் களத்தில் வெற்றி பெற முடிகிறது. உதாரணமாக ஜனநாயக செயல்கட்சி என்ற சீன இனத்தவர் தலைமையிலான கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டு, பிணாங்கு மாநிலத்தில் துணை முதல்வராகவும், அதேபோல எம்.பி.க்களாகவும், எம்.எல்.ஏ.க்களாகவும் தமிழர்கள் தங்களை அறுதியிட்டுக் கொள்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் திறமையும், தகுதியும், கடின உழைப்பும் உள்ள தமிழர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஆளுகின்ற ஆட்சியாளர்கள், இந்த வட்டாரத்திலும் எண்ணுகிறார்கள்.
அதன் பாதிப்புதான் இன்றைக்கு விடுதலை புலிகளுக்கு எதிராக மத்திய அரசு திடீரென எதிர்பாராதவிதமாக கொடுத்திருக்கின்ற அறிக்கை. ஈழத்தில் 4வது வன்னிப்போர் தோற்றப்பிறகு, ஆயுதம் தாங்கிய தமிழர்களின் படை தோற்கடிக்கப்பட்ட பிறகு, அவர்களது அனைத்து நாட்டு தொடர்புகளும், போராளிகளும், பிடிபட்டபிறகும் ஆள்வோருக்கு ஏன் இந்த கொலைவெறி என்பதாக தமிழர்கள் எண்ணிப் பார்க்கிறார்கள். அழிக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்ட புலிகள் இயக்கத்திற்கு, அடுத்த நாடான இந்தியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு தடை நீடிப்பு. அதையொட்டி, இப்போது அச்சுறுத்தும் வகையில் கள்ளத்தோணி பற்றி மத்திய உள்துறையின் அறிக்கை.
புலிகள் இயக்கத்திலிருந்து தப்பியோடி வந்தவர்கள், பழைய போராளிகள் இவர்களெல்லாம் மீண்டும் தமிழ்நாட்டில் கூடி, ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தப்போகிறார்கள் என்று நம்ப முடியாத ஒரு புதிய கதையை நமது உள்துறை அறிவித்துள்ளது. அதற்காக மூன்று காரணங்களையும் வரிசைப்படுத்தி எழுதியுள்ளது. வன்னிப்போரில் இந்திய அரசின் தமிழர் விரோத பங்களிப்பை பற்றி கோபத்துடனும், ஆதங்கத்துடனும், அழுகையுடனும் உலகம் முழுவதும் தமிழர்கள் எழுதி வருகின்ற எழுத்துக்கள், மத்திய அரசால் இங்கே கோடிட்டு காட்டப்படுகின்றன. உள்ளபடியே அரசியல் போராட்டத்தில் இனி ஈடுபடுவது மட்டுமே,
தமிழ் தேசிய இனத்திற்கு எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்கும் என்ற நம்பிக்கையில் உலகத் தமிழினம் செயல்பட்டு வருகிறது. அதற்காக ஒரு வடிவமைப்பையும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற பெயரில் ஏற்படுத்தி வருகிறது. எந்த விதத்திலும் ஆயுதங்களை பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாமல், அரசியல் போராட்டத்தில் மட்டுமே நம்பிக்கை வைத்து உலகத் தமிழர்கள் தங்கள் பாதைகளை வடிவமைத்து வருகின்றனர். தமிழ் தேசிய இனத்தின் உலகம் தழுவிய தாக்கத்தை புரிந்து வைத்துக் கொண்டுள்ள, எதிர் சக்திகள் இப்போது அத்தகைய அரசியல் போராட்டத்தை உடைப்பதற்காக பல்வேறு வழிகளில் சதிகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.
அவற்றில் மீண்டும் ஆயுதப் போராட்டம் தொடங்கும் என்றும், மீண்டும் புலிப் போராளிகள் தாக்குவார்கள் என்றும் வீர வசனங்களை பேசுகின்ற உணர்ச்சித் தமிழர்களையும், அப்பாவித் தமிழர்களையும் ஒருபுறம் அனுமதிக்கிறார்கள். இன்னொரு புறம், ஈழத்தில் மீண்டும் காடுகளில் ஆயுதம் தாங்கிய புலிகள் இருப்பதாக, அல்லது அணி சேர்வதாக ஒரு மாயையை, கதை வடிவில் வசனங்களுடன் வெளியிடுகிறார்கள். அதன்மூலம் இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் சிங்கள ராணுவத்தை தொடர்ந்து தக்க வைப்பதற்கும், அவசர நிலையை இலங்கைத் தீவில் தொடர வைப்பதற்கும், மிச்சமீதி போராளிகளை அடையாளம் கண்டு கைப்பற்றுவதற்கும் பயன்படுத்துகிறார்கள். அதேபோல, இந்தியாவில் புலிகள் மீதான தடையை நீட்டிப்பதற்கு அதையே காரணமாக பயன்படுத்துகிறார்கள். இப்போது, மேற்கண்ட தகவல்களை காரணங்களாக மாற்றி, ஓடிவந்த அல்லது தப்பிவந்த அல்லது விரக்தியடைந்த அல்லது மனைவி, மக்களுடன் நிம்மதியாக தமிழ்நாட்டில் வாழ்வதற்காக அடைக்கலம் தேடிவந்த, ஈழத் தமிழர்களை மேலும் ஒடுக்குவதற்காக இத்தகைய அறிக்கைகளை பயன்படுத்துகிறார்கள். மேற்கண்ட அச்சம் தமிழர்கள் மத்தியில் நிலவுகிறது. அதுமட்டுமின்றி மாநில அரசாங்கத்தில் இருக்கின்ற கட்சியின் மீது, ஒரு விதமான நெருக்கடியை உருவாக்குவதற்காக, மத்திய அரசு இத்தகைய அணுகுமுறைகளை செய்கிறதா என்ற சந்தேகம் மாநில ஆளுங்கட்சி வட்டாரத்தில் பிரதிபலிக்கிறது.
எது எப்படி இருந்தாலும், இந்திய குடிமக்களாகிய நாம் மத்திய அரசின் கொள்கைகளையும், அறிக்கைகளையும் நம்பி மட்டுமே வாழ்ந்து வருகிறோம். தமிழர்களுக்கு அமைதி வழியில், அறவழிப்பாதையில், அரசியல் போராட்டங்களின் மூலம் ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்க, இன்றைய சூழலில் உறுதி எடுக்க வேண்டியது தேவையாக இருக்கிறது.

Monday, May 24, 2010

சிதம்பரத்தை குற்றம்சாட்டிய ஆய்வறிக்கை

கடந்த மாதம் சத்தீஸ்கர் மாநிலத்தில் தண்டேவாடா பகுதியில் மத்திய மற்றும் மாநில காவல்படையினர் 76 பேர் கொல்லப்பட்ட நிகழ்வு பற்றி ஆய்வு செய்ய, மத்திய அரசு எல்லைப்பாதுகாப்பு படையின் முன்னாள் பொது இயக்குநர் ராம்மோகன் மூலம் ஏற்பாடு செய்திருந்தது. இப்போது அந்த ராம்மோகனின் அறிக்கை வெளிவந்துள்ளது. அதில் மத்திய உள்துறை அமைச்சகம், சத்தீஸ்கர் அரசாங்கம், மற்றும் அரசு நிறுவனங்களை பொறுப்பாக்கி ஆய்வுகள் வெளியிடப்பட்டன. நடவடிக்கைகளுக்காக விதிகளை வழிகாட்டியிருந்தும் கூட, அவை சரியான முறையில் பின்பற்றப்படவில்லை என்று அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட மத்திய சிறப்பு காவல்படையின் 62வது அணியினர், தங்களுக்கு கொடுக்கப்பட்ட வழிகாட்டல்களை எச்சரிக்கையின்றி செயல்படுத்தினார்கள் என்று அந்த குற்றச்சாட்டுக் கூறுகிறது. காடுகள் வழியாக ஒரு அரைவட்ட வடிவில் முன்னேறி தேடுதல் வேட்டையை நடத்துமாறு வழிகாட்டல்கள் கொடுக்கப்பட்டிருந்தன. ஆனால் அவற்றை அலட்சியப்படுத்தி விட்டு துணை தளபதி சத்தியவான் யாதவ், சிந்தாள்நார் பகுதியிலிருந்து தனது படைவரிசையை, முக்ரம் என்ற கிராமத்திற்கு ஒற்றைவழிப் பாதை மூலம் பின்வாங்கி எடுத்துச் சென்றார் என்று குற்றம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த முயற்சி ஒரு தற்கொலை முயற்சி என்பதாக அறிக்கை வர்ணிக்கிறது. இது மத்திய சிறப்பு காவல்படையில் பலவீனமான தலைமை இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. சிந்தள்நார் முகாமில், வீரர்களுக்கு எந்தவொரு தற்காப்பு வாய்ப்புகளும் இல்லை. தங்கும் இடமும் கூட, சௌகரியமாக இல்லை.
மாநில காவல்படையும், மத்திய படையும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று ராம்மோகன் கூறுகிறார். மத்திய சிறப்பு காவல்படைக்கு உள்ளேயிருக்கும் குறைபாடுகளை ஆய்வு செய்யும் போது, மாவோயிஸ்ட்களை எதிர்த்து தாக்குப்பிடிக்கும் அளவிற்கு தன்மை உள்ளவர்களாக அவர்கள் இல்லை. ஆய்வறிக்கை வெளியிடப்பட்டதையொட்டி மத்திய சிறப்பு காவல்படை தங்களின் 3 பெரிய அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது. அதில் டி.ஐ.ஜி.நலின் பிரபாத், படை தளபதி விமல் பிசிட், ஆய்வாளர் சஞ்சிவ் பாக்ரே ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், மே 6ம் நாள் பேசச் சென்ற உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தண்டேவாடா பிரச்சனை மீது விவாதம் எழுந்த போது, 1 ஐ.ஜி.யும், 2 டி.ஐ.ஜி.யும், 1 எஸ்.பி.யும் சிந்திக்காமல், திட்டமிடாமல் நடந்து கொண்டுள்ளனர் என்று பகிரங்கமாகவே அறிவித்தார். கட்டுப்பாடுள்ள மத்திய ஆயுதப்படையின் உள்விவகாரங்களை ஆய்வு செய்து அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்பே, சம்மந்தப்பட்ட அமைச்சர் இப்படி பகிரங்கமாக உயர் அதிகாரிகளைப் பற்றி குற்றம்சாட்டி பொது இடத்தில் பேசலாமா என்பது நமக்கு புரியவில்லை. ஆனால் ஆய்வறிக்கையை வெளியிட்ட ராம்மோகன் குழுவும், விசாரணை நீதிமன்றம் கொடுத்துள்ள கண்டுபிடித்தல்களும், மேற்கண்ட மூன்று அதிகாரிகளுக்கு மிகவும் சிறிய அளவுதான் சம்பவத்தில் பங்கு உண்டு என்று கூறியுள்ளன. அதேசமயம் படைவீரர்களும், களத்தில் இருந்த தளபதிகளும் மேலிருந்து கொடுக்கப்பட்ட திட்டங்களை அலட்சியப்படுத்தி விட்டு, மேலிடத்திற்கு தங்கள் நடமாட்டத்தைப் பற்றிய பொய்ச் செய்திகளை கொடுத்துள்ளனர் என்று ராம்மோகன் குழு கூறியுள்ளது. மத்திய சிறப்பு காவல்படையை முழுமையாக சார்ந்து தான், மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கைகளை அரசு நடத்த வேண்டியுள்ளது. ஆகவே இது மிகவும் சிக்கலாகிவிட்ட ஒரு பிரச்சனை.
மாவோயிஸ்ட்கள் மத்திய சிறப்பு காவல்படை மீது நடத்திய தாக்குதல்கள் அனைத்துமே, 5கி.மி. தூரத்தில் இருக்கும் தங்களது முகாம்களில் இருந்து தான் நடத்தியுள்ளனர் என்பதும் இப்போது தெளிவாகியுள்ளது. அதாவது மாவோயிஸ்ட்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குச் சென்ற, மத்திய அரசு படை தங்களுக்கு சுற்றுவட்டாரத்தில் இருக்கும் ஆயுதந்தாங்கிய மாவோயிஸ்ட்களின் குவிதலை அப்புறப்படுத்தாமல், அசட்டையாக இருந்துள்ளனர் என்பது இங்கு தெரிந்துள்ளது.
இப்போது இடமாற்றம் செய்யப்படும் அதிகாரியான பிஸ்ட், 62வது படையணியின் ஆல்பா கம்பெனியை, சுற்றுப்புறமுள்ள மாவோயிஸ்ட்களை விரட்டுவதற்கு கட்டளையிட்டிருக்கிறார். அந்த கட்டளையை அவர்கள் அலட்சியப்படுத்தி விட்டார்கள். இதை விசாரணை நீதிமன்றம் கண்டுபிடித்துள்ளது. ஏப்ரல் 4ம் நாள் மாலையில், 62வது படையணியிலிருந்து ஒரு ஒயர்லஸ் செய்தியை தங்களது தலைமைக்கு அனுப்பியுள்ளனர். அதில் தாங்கள் நடவடிக்கைகளை தொடங்கிவிட்டதாக எழுதியுள்ளனர். உண்மையில் அவர்கள் அப்போது தங்கள் இடத்தை விட்டு நகரவில்லை. மறுநாளான ஏப்ரல் 5ம் நாள் அதிகாலை 2.30 மணிக்கு, சிந்தாள்நார் முகாமை விட்டு அவர்கள் புறப்பட்டு, புர்காபால் என்ற கிராமத்தில் சோதனை நடத்த சென்றனர். மீண்டும் அரசப்படையினர் முக்ராம் என்ற கிராமத்திற்கு திரும்பி வந்தனர். மதியத்திற்கு மேல் முக்ராம் கிராமத்தின் அருகே மைதானத்தில் அமர்ந்தனர். தண்ணீருக்கும், எரியூட்ட கட்டைகளுக்கும் ஆள் அனுப்பினர். பெரியதொரு பாத்திரத்தில் கிச்சடியை உணவுக்கு தயார் செய்தனர். படையணிக்கு கொடுக்கப்பட்டிருந்த சமைக்கப்பட்ட உணவை அவர்கள் எடுத்துச் செல்லவில்லை. இந்த அளவுக்கு தங்களது பாதுகாப்பில் கட்டுப்பாடு இல்லாமல் இருந்திருக்கிறார்கள் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. ஏப்ரல் 6ம் நாள் அதிகாலையில் முக்ரம் கிராமத்திற்கு திரும்பிய பின், தங்களது ஒயர்லஸ் செட் ஒன்று தொலைந்ததை படையணியினர் உணர்ந்துள்ளனர். இந்த நடமாட்டம் பற்றிய தெளிவான செய்திகளை, மாவோயிஸ்ட்கள் தங்களது ஒற்றர்கள் மூலம் அறிந்த பிற்பாடு, படையணி திரும்பி வரும் போது தங்களது தாக்குதலை நடத்தியுள்ளனர்.
மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் அதிகமாகயிருக்கும் பகுதிகளில், படையணியினர் சோதனை நடத்த தயங்குகின்றனர் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகரான ரெய்பூரில் உள்ள உளவுத்துறை நிலையத்திற்கு, மே 5ம் நாளே அந்த பகுதியில் மாவோயிஸ்ட்கள் அதிகமாக குவிந்துள்ளது பற்றிய செய்தி கிடைத்துள்ளது. அதை அவர்கள் தண்டேவாடாவிலுள்ள சத்தீஸ்கர் காவல்துறைக்கு, மாலையிலேயே அனுப்பியுள்ளனர். ஆனால் வட்டார காவல்துறை அப்படிப்பட்ட செய்தி தாக்குதலுக்கு முன்பு கிடைக்கவில்லை என்பதாக கூறுகிறார்கள். அரசப்படையினர் காடுகளில் போர்புரியும் தந்திரங்களிலும் பயிற்சி பெற்றிருக்கவில்லை. இதே நேரத்தில் உத்திரபிரதேசத்தில் உள்ள ராம்பூர் தலைநகரில் அரசப்படையினர் பல்வேறு ஆயுதங்களையும், தோட்டாக்களையும் வட்டாரத்திலுள்ள கிரிமினல்களுக்கு விற்றதற்காக பிடிபட்டுள்ளனர்.
உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை, மாவோயிஸ்ட்களுக்கு எதிரான கடுமையான போரை நடத்த வேண்டும் என்று கூறும் அதே நேரம், அவரது மனைவியான திட்டகமிஷன் உறுப்பினர் செயலாளர் சுதா பிள்ளை, வளர்ச்சித் திட்டங்களை எடுத்துச் செல்வதன் மூலம் மட்டுமே, மாவோயிஸ்ட்களை வெல்ல முடியும் என்று கூறியுள்ளார்.
அதேநேரம் எழுத்தாளர் அருந்ததி ராய் மாவோயிஸ்ட்கள் எந்தவொரு காந்தியவாதியை விடவும், அதிக காந்தியவாதியாக இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். அரசு செயல்படாத பகுதிகளில் தான் மாவோயிஸ்ட்கள் செயல்படுகிறார்கள் என்றும் செய்திகள் அறிவிக்கின்றன. மேற்கண்ட அறிக்கைகளில் குற்றம்சாட்டப்படும் நிலையில் உள்ள அமைச்சர் ப.சிதம்பரம் அதற்கான பொறுப்பை ஏற்பாரா என்ற கேள்வி, மங்களூர் விமான விபத்திற்கு பொறுப்பேற்கிறேன் என்று அமைச்சர் ரபுல் பட்டேல் தெரிவித்த பிறகு நமக்கும் எழுகிறது.

Saturday, May 22, 2010

ராஜிவ்காந்தி நிலைப்பாடு தொடர்கிறதா?

19 ஆண்டுகளுக்கு முன்னால், மே 21ம் நாள் தமிழ்நாட்டில் உள்ள திருப்பெரும்புதூரில், முன்னாள் தலைமை அமைச்சர் ராஜிவ்காந்தி மனித வெடிகுண்டின் மூலம் கொல்லப்பட்டார். அந்த நாள் பயங்கரவாத எதிர்ப்பு நாளாக ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது. ராஜிவ்காந்தி உயிரோடு இருக்கும் போது கடைப்பிடித்து வந்த கொள்கைகள், நிலைப்பாடுகள் தொடர்ந்து காங்கிரஸ் தலைமையால் செயல்படுத்தப்படுகிறதா என்ற கேள்வியை கேட்க வேண்டிய நாள் இது.
ராஜிவ்காந்தியின் நிலைப்பாடு என்றால் என்ன என்ற கேள்வி முதலில் எழுகிறது. ராஜிவ்காந்தி கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசும், மாநில அரசுகளும் கடைப்பிடித்து வருவதன் மூலம் திடீர் பணக்காரர்களை கல்வி வள்ளல்களாக மாற்றக்கூடிய சுயநிதி கல்விச் சாலைகளையும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றனர் என்பது உண்மை தான். அதன் விளைவாக கல்வியின் தரம் குறைந்து, காசுக்காக கல்வியை விற்கின்ற ஒரு நிலை உருவாகியுள்ளது. அதுவே மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையை பாதித்துள்ளது. அதன் விளைவாக இப்போது நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் பற்றி, மறுபரிசீலனை செய்யும் அளவிற்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது. இதுகூட அவரது நிலைப்பாட்டின் தொடர்ச்சிதான்.
ராஜிவ்காந்தியின் தாயார் இந்திராகாந்தி, இந்திய தலைமை அமைச்சராக கடமையாற்றும் காலத்திலேயே, சீக்கிய பயங்கரவாதிகளால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். அப்போது ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியின் சேவாதள உறுப்பினர்கள், டெல்லியில் சீக்கிய வீடுகளில் புகுந்து மூவாயிரம் இளைஞர்களை படுகொலை செய்தனர். ஆத்திரத்தில் ராஜிவ்காந்தி அந்த படுகொலைகளை நியாயப்படுத்தி பேசினார். அத்தகைய அரசமனப்பான்மை இன்றைக்கும் காங்கிரஸ் தலைமையில் தொடர்கிறது. அதனால் அவரது நிலைப்பாடு தொடர்கிறது என்று சிலர் கூறிக்கொள்ளலாம். அரச வம்சமும், வாரிசு மனப்பான்மையும், பண்ணையாதிக்கச் சிந்தனையும், பழிவாங்கும் மனப்போக்கும், வன்முறையை நியாயப்படுத்தும் தன்மையும் மட்டுமே அவரது நிலைப்பாடுகள் என யாராவது எண்ணினார்கள் என்றால், அவர்கள் அவரது நிலைப்பாடு முறையாக தொடரத்தானே செய்கிறது என்று வாதிடலாம்.
ஆனால் இந்தியா என்ற மாபெரும் தீபகற்ப நாட்டில், 100 கோடிக்கு மேல் மக்கள் வாழும் போது, அவர்களது எதிர்காலத்திற்காகவும், இந்தியாவின் நிலையான தன்மைக்காகவும், ராஜிவ்காந்தி அளித்த பங்களிப்பு தொடர்கிறதா என்பது தான் ஆராயப்பட வேண்டிய கேள்வி. அதிலும் கூட இலங்கைத் தீவில் சமாதானம் ஏற்படுத்த என்ற பெயரில் ராஜிவ்காந்தி, இந்திய அமைதிப்படையை அனுப்பி வைத்தது தமிழர்களுக்கு எதிரானது தானே என்ற கேள்வியும் எழுகிறது. அப்படி தமிழர்களுக்கு எதிராக அவர் எடுத்த நிலைப்பாட்டை, மேலும் வலுப்படுத்தி ஈழத்தமிழர்களை இன அழிப்புச் செய்த, இனவாதப் போரை நடத்திய மகிந்தா அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்தது அவரது நிலைப்பாட்டை மேலும் தொடர்வது தானே என்று சில காங்கிரசார் வாதம் செய்யலாம்.
இந்தியா இலங்கை என்ற அளவில் தனது தலையீட்டை செய்து வந்த ராஜிவ்காந்தியின் நிலைப்பாட்டை விட, இன்றைய காங்கிரஸ் தலைமை இலங்கை ஆட்சியாளர்களின் தமிழின அழிப்பு நடவடிக்கைகளுக்கு நேரடியாக துணை நிற்பதும், அவர்களை உலக அரங்கில் நியாயப்படுத்த அனைத்து பணிகளையும் செய்வதும், ராஜிவ்காந்தியின் நிலைப்பாட்டை வலுப்படுத்தவில்லையா என்றும் அவர்கள் வினவலாம். ஆனால் நமது கேள்வி இந்திய மக்களுக்கு, இந்திய நாட்டிற்கு ராஜிவ்காந்தி அளித்த சாதகமான பங்களிப்பு இப்போது என்ன ஆயிற்று என்பது தான்.
ராஜிவ்காந்தியின் தாயாரான இந்திராகாந்தி இந்தியாவை ஆண்டு வரும் காலத்தில், அவர் மீதும் பல்வேறு விமர்சனங்கள் இருக்கத் தான் செய்தன. பொருளாதார கொள்கைகளில் பண்ணையார்களுக்கும், பெருமுதலாளிகளுக்கும், அதிகாரவர்க்க மூலதனத்திற்கும் வலுவேற்றிய பணியைத் தான் இந்திராகாந்தி செய்து வந்தார் என்பது போன்ற விமர்சனங்கள் உண்டு. ஜனநாயக உரிமைகளை மறுத்து, அவசர நிலை போன்ற பிரகடனங்களை செய்து, எதிர்கட்சிகளின் நடவடிக்கைகளையும், தொழிற்சங்கங்களின் செயல்பாடுகளையும் நசுக்கி வந்தார் என்பது போன்ற குற்றச்சாட்டுக்கள் அப்போதும் எழுந்தன. ஆனாலும் இந்திராகாந்தி சுயசார்பு பற்றி அதிகமாக பரப்புரை செய்தார். அமெரிக்க சார்பு நிலைப்பாட்டை அப்பட்டமாக எடுப்பதற்கு தயங்கினார்.
தன் தாயைப் போலவே இந்திய மக்கள் மத்தியில் பெருமளவில் செல்வாக்கை ராஜிவ்காந்தி பெற்றிருந்தார். அதன் காரணமாக அவர் தலைமையில் இருந்த போது, காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்தை தேர்தலில் எட்ட முடிந்தது. அதன் மூலம் இந்திய அரசு நினைத்தப்படி, தங்களது வெளிநாட்டுக் கொள்கைகளை வகுக்க முடிந்தது. அதாவது அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளை சார்ந்து மட்டுமே சிந்திக்கும் நிலையில் அப்போது அரசாங்கம் இல்லை. எப்போதெல்லாம் ஒரு நாட்டின் தலைமை ஆட்சியாளர்கள், பெருத்த செல்வாக்கில் பெரும்பான்மை பலத்தில் ஆட்சி அமைக்க முடிகிறதோ, அப்போதெல்லாம் அவர்களால் உலக அரங்கில் சில முக்கிய விஷயங்களிலாவது, சுயமாக முடிவெடுக்கும் நிலைப்பாட்டை தக்கவைக்க முடியும்.
அப்படிப்பட்ட ஒரு நிலைப்பாடு இன்று இருக்கிறதா? இந்தக் கேள்வியை இப்போது நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. ராஜிவ்காந்தியின் மரணத்திற்குப் பிறகு, இந்திய அரசை ஆள்வதற்காக காங்கிரஸ் சார்பாக பி.வி.நரசிம்மராவ் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அப்போது அவரது ஆட்சி சிறுபான்மை அரசு என்ற நிலையில் தான் நிற்க வேண்டி இருந்தது. 1991ம் ஆண்டு இந்தியாவின் தலைமை அமைச்சராக நரசிம்மராவ் இருக்கும்போது தான், புதிய பொருளாதார கொள்கை என்ற பெயரில், அமெரிக்க வழிகாட்டலில் இந்திய கொள்கைகள் வகுக்கப்பட்டன. டங்கல், காட் போன்ற ஒப்பந்தங்கள் வந்திறங்கின. உலகமயமாக்கலின் தொடக்கம் இந்தியாவிற்குள் வரவேற்கப்பட்டது. தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் ஆகியவை இந்தியாவின் முக்கிய பொருளாதார கொள்கைகளாக மாற்றப்பட்டன. நேரு, இந்திராகாந்தி, ராஜிவ்காந்தி காலத்தில் இருந்த பொதுத்துறை மெல்ல, மெல்ல வலுவிழக்கச் செய்யப்பட்டது. இத்தனையும் ராஜிவ் மரணத்திற்குப் பிறகு, நரசிம்மராவின் தலைமையிலான சிறுபான்மை காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்டது. அதனால் அதிகமாக பயனடைந்தவர்கள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் தான். ராஜிவ் மரணம் இவ்வாறாக அமெரிக்க உள் நுழைதலுக்கு பயன்பட்டது.
இன்று மன்மோகன்சிங் தலைமையிலான இந்திய அரசாங்கத்தில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நேரடி அன்னிய மூலதனம் பெருமளவில் உள் நுழைந்துள்ளது. மன்மோகன், ப.சிதம்பரம், மான்டெக்சிங் அலுவாலியா ஆகியோர் பகிரங்கமாகவே அமெரிக்க பொருளாதார கொள்கைகளை பின்பற்றுபவர்கள் என்பது வெள்ளிடை மலையாக உள்ளது. அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்யப்படுகிறது. அமெரிக்காவுடன் ராணுவ கூட்டுப்பயிற்சி நடத்தப்படுகிறது. அமெரிக்காவுடன் இந்திய கடலை கண்காணிக்கும் பங்காளியாக, இந்திய அரசு மாறுகிறது. இவையெல்லாம் ராஜிவ் காந்தி காலத்திய நிலைப்பாட்டின் தொடர்ச்சியா?
குடும்ப வாரிசும், கட்சி வாரிசும் நிலைப்பாடுகளை தீர்மானிப்பதில்லை. நாட்டிற்கு வகுக்கப்படும் கொள்கைகள் தான், நிலைப்பாடுகளை தீர்மானிக்கிறது. அவ்வகையில் பார்ப்போமானால், ராஜிவ்காந்தியின் மரணத்தால் இந்தியா இழந்திருக்கிறது; அமெரிக்கா பலனடைந்திருக்கிறது. இத்தகைய கணக்கீட்டை இந்திய மக்கள், இந்த நாளில் மதிப்பீடு செய்து பார்க்க வாய்ப்பிருக்கிறதா?

Monday, May 17, 2010

மே17, வன்னிப்படுகொலையின் ஓராண்டு நினைவு

இன்று 2010ம் ஆண்டின் மே17. இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு, இந்த நாளில் மௌன அஞ்சலி செலுத்தும்படி தமிழ் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. உலகமெங்கும் இருக்கும் தமிழர்கள் இந்த நாளை வலி சுமக்கும் நாளாக, கடைபிடிக்கிறார்கள். தமிழின அழிப்புப் போர் பற்றிய அனுபவங்களை தொகுக்கிறார்கள். வீரச்சாவை அடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் தியாகங்களை எண்ணிப் பார்க்கிறார்கள்.
உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஈழத்தமிழர்கள் நடத்தி வந்த விடுதலைப் போர், ஒரு தலைநிமிர்வை ஏற்படுத்தியது. அதே சமயம் 4வது வன்னிப் போர் அவருடைய இக்கட்டான நிலைமையை சந்திக்கத் தொடங்கிய 2008ம் ஆண்டு இறுதியிலிருந்து, ஒரு இறுக்கமான மனப்போக்கை உலகத்தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. 2009ம் ஆண்டின் ஜனவரி மாதம் தொடங்கி, 7 நாட்டு அரசுகளின் உதவியுடன் சிங்களப் பேரினவாத அரசு நடத்திய இனவாதப் போர், உலகத்தமிழர்களின் உள்ளங்களில் எல்லாம் ஊசி கொண்டு தைத்தது. அந்த இனவாதப் போர் ஒரு இன அழிப்புப் போராக திசைத் திரும்புவதை முன்கூட்டியே உணர்ந்த நிலையில், உலகத்தமிழர்கள் கூக்குரலிட்டனர். முல்லைத் தீவு மாவட்டத்திற்குள் மூன்றரை லட்ச மக்களுடன், தமிழீழ போராளிகள் ஓரங்கட்டப்பட்ட போது, உலகத் தமிழர்கள் புலம்பித் தவித்தனர். 2009ம் ஆண்டின் மே 17ல் ஒரே நாளில் 30,000க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் ஒட்டு மொத்தமாக படுகொலை செய்யப்பட்ட போது, உலகத் தமிழர்கள் வாய் விட்டு அழுதனர். அந்த நாள்தான் இந்த நாள். ஓராண்டு நிறைவுற்று விட்டது. ஆனால் அன்று சிங்கள ராணுவத்திடம் சரணடைந்த 3 லட்சத்திற்கு மேலான தமிழர்கள் நிலை இன்று வரை, கூண்டில் அடைப்பட்ட நிலைமையிலேயே உள்ளது.
வன்னிப் போரில் வென்றதாக சிங்கள பேரினவாதம் கொக்கரித்தது. ஆனால் முள்ளிவாய்க்கால், இரட்டை வாய்க்கால் கிராமங்களில் சிக்கிய அப்பாவி தமிழ்மக்கள் 3 லட்சம் பேருக்கு மேல், ராணுவத்தின் அதிகாரமுள்ள பகுதிக்கு வரும்போது, அச்சத்துடனேயே சிங்கள ராணுவம் நடந்து கொண்டது. அப்பாவி தமிழர்கள் மத்தியிலிருந்து, புலிப்படையின் தற்கொலைப் படையினர் தாக்கி விடுவார்களோ என்ற அச்சத்தில், அனைத்து தமிழ் மக்களையும் ஆடைகளை களைந்து, நிர்வாணமாக தங்கள் அதிகாரப் பகுதிக்கு வருமாறு கட்டளையிட்டது. தமிழர்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள தந்தையும், தாயும், மகனும், மகளும், குழந்தைகளும் நிர்வாணமாக அந்த நெடியத் தூரத்தை நடந்து வந்து கடந்தனர். இத்தகைய ஒரு கொடுமை உலகில் எந்த ஒரு உலகப் போர் சூழலிலும் கூட, நடந்ததில்லை. போர் விதிகள் என்று ஐ.நா. அறிவித்துள்ள எந்த ஒரு விதிகளிலும், இத்தகைய அணுகுமுறை அங்கீகரிக்கப்படவில்லை. தமிழனுக்கு மட்டும் இந்த உலகில் தனியான விதிமுறைகள் தான் பின்பற்றப்படுகின்றன. கடுமையாக உழைக்கக் கூடிய அப்பாவி களாக இருக்கின்ற தமிழினத்திற்கு மாத்திரம் தனியான அணுகுமுறை என்பது புரியப்படவேண்டும். அதற்கான வரலாற்று காரணம் அறியப்படவேண்டும்.
உலகுக்கு வெளிப்படையாக தெரிந்த இன மோதல் நாள் 1983ம் ஆண்டின் ஜூலை 23. அன்றைய நாளில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை, சிறைக்குள் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை, யுலைப் படுகொலை நாள் என்பதாக ஈழத்தமிழர்கள் பதிவு செய்தார்கள். இனியும் அமைதியான வழியில், சிங்கள பேரினவாதத்தை எதிர்கொள்ள முடியாது என்று முடிவெடுத்த தமிழ் இளைஞர்கள் பேரினவாத அரசுக்கு எதிராக போர் பிரகடனம் செய்தார்கள்.
30 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆயுதப் போராட்டம் இந்த நாளில் ஒரு முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக, அரசாங்கங்கள் அறிவித்தன. இதுவரை இந்தப் போரில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை, அரசாங்கக் கணக்குப்படி 80,000 பேர். தமிழர்களின் பட்டியலில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்று அறிவிக்கப்படுகிறது. விடுதலைப்புலிகளின் செயல் தந்திரங்களில் அல்லது ராணுவ முறைகளில் பயங்கரவாதம் இருப்பதாக, உலக வல்லரசுகள் குற்றம் சாட்டினர். அதனால் அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள், இந்தியா உட்பட 32 நாட்டு அரசாங்கங்கள், புலிகளை பயங்கரவாத அமைப்பு என்று அறிவித்து தடை செய்தனர். போர் முடிந்து விட்டது என அறிவித்த பிற்பாடும், விடுதலைப் புலிகள் முற்றுமுழுதாக அழிந்து விட்டனர் என்று கூறி பெரு மகிழ்ச்சியடைந்த இந்திய அரசு, சில நாட்கள் முன்பு புலிகள் மீதான தடையை இன்னமும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்துள்ளது.
இந்த 30 ஆண்டு ஆயுதப் போராட்ட காலத்திற்குள், 3 முறை பேச்சு வார்த்தை காலம் என்று அறிவிக்கப்பட்டு, மேசைப் பேச்சும் நடந்தது. ராஜீவ் ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தையொட்டி, 1987ல் இலங்கை சென்ற இந்திய அமைதிப்படை ஒரு பேச்சு வார்த்தைக்கான சூழலை ஏற்படுத்தியது. அது 1987ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரை நீடித்தது.
இந்திய இலங்கை அரசுகளின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அதிகார பிரதிநிதித்துவத்தை ஏற்றுக் கொள்ளாத புலிகள் மீது, இந்திய ராணுவம் மோதல் கொள்ளத் தொடங்கியது. அதனாலேயே முதல்கட்ட பேச்சு வார்த்தை, தொடக்க காலத்திலேயே மறைந்து விட்டது. 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம், புலிகள் பக்கத்திலிருந்து தன்னார்வமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அனைத்து நாட்டு மேற்பார்வையுடன் கூடிய ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் 2002ம் ஆண்டு, அரசுக்கும், புலிகளுக்கும் இடையில் கையெழுத்தானது. 2005ம் ஆண்டு அத்தகைய சூழலிலும் விரிசல் ஏற்பட்டது. 2006ம் ஆண்டு ஜூலையில் தொடங்கி, புலிகளுக்கு எதிராக ராணுவத்தின் தாக்குதல் அதிகரித்தது.
அதையொட்டி கிழக்கு மாகாணத்திலிருந்து புலிகள் பின்வாங்கிக் கொள்ள, சிங்கள ராணுவம் கிழக்கே வென்று விட்டதாக அறிவித்தது. 2007ம் ஆண்டு வடக்கு மாகாணங்கள் மீது ராணுவம் தனது தாக்குதலை விரிவுபடுத்தியது. 2008ம் ஆண்டு ஜனவரி 2ம் நாள் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கிக் கொள்வதாக அறிவித்தது. அதன் பிறகு தொடர்ந்த 4வது வன்னிப்போர்தான், தமிழனை இந்த நிலைமைக்கு தள்ளியது.
இலங்கையில் நடக்கும் இன உரிமைப் போர், வீச்சாக வளர்ந்ததற்கும் பிறகு வீழ்ந்ததற்கும், வெளிச்சக்திகளின் காரணங் களும் ஆராயப்படவேண்டும். மே8ம் நாள் சென்னையில் ஒரு வார ஏட்டால் நடத்தப் பட்ட கருத்தரங்கில் பேசிய பிரமுகர்கள் ஒரு செய்தியை சொன்னார்கள். இந்திய அரசு 4ம் வன்னிப்போரில் தமிழர்கள் தோற்பதற்கு முக்கிய காரணமாக இருந்ததாக குற்றம் சாட்டினார்கள். இந்திரா காந்தி காலத்திலிருந்து இந்தியாவின் தலையீடு என்பது, ஈழத்தமிழர்களின் உரிமைப் போருக்கு கேடு விளைவித்தது என்றும் கூறினார்கள். 80ம் ஆண்டுகளில் தொடக்கத்திலிருந்தே அத்தகைய தலையீடுகள் நடத்தப்பட்டன. இந்தியாவில் இருக்கின்ற தேசிய இனங்கள் தங்களது சுயநிர்ணய உரிமைகளுக்காக, போரிட்டு வரும் போது, இந்திரா காந்தி அரசு இலங்கையில் வாழும் ஈழத் தமிழருக்கு எந்த விதத்தில் நியாயம் செய்ய தலையிட்டார் என்பதாக இப்போது அறிவு ஜீவிகள் விவாதிக்கிறார்கள்.
தொடக்கத்திலிருந்தே இந்திய அரசுக்கு ஈழத்தமிழர்களின் உரிமைப் போரில் அக்கறை இல்லை. ஆனாலும் கூட அவர்களை பல்லாயிரக்கணக்கில் இந்தியாவிற்கு தருவித்து, ஆயுதப் பயிற்சி கொடுத்து, ஆயுதங்கள் கொடுத்து ஊக்குவித்த இந்திய அரசின் தொலை தூர நோக்கம் என்ன என்று விவாதிக்கிறார்கள். இப்போது நேரடி தலையீட்டின் மூலம், ஈழப்போர் தோற்பத ற்கும், தமிழீன அழிப்பு நடப்பதற்கும் காரணமாகி விட்டதாக கருதுகிறார்கள்.
ஒரு இனத்தின் விடுதலைக்காக போராட புறப்பட்ட இளைஞர்கள், அடுத்த நாட்டின் அரவணைப்பை முழுமையாக சார்ந்து நின்ற வரலாறு இப்போது கேள்விக்குள்ளாக்கப் பட்டுள்ளது. இதைத்தான் அன்றே கவிஞர் இன்குலாப் எழுதும் போது,
“நமது அவசரத்தில் அட்டைகளிடம் போய் ரத்ததானம் கேட்க வேண்டாம்.
கம்சனின் பிடியில் ஈழக்குழந்தை கதறுகின்றது உண்மைதான்.
அதற்காக பூதகியைப்போய் பாலூட்டச் சொல்லாதீர்கள்.” அதுதான் நினைவுக்கு வருகிறது.

Sunday, May 16, 2010

கல்வி வியாபாரமா? அடிப்படை உரிமையா?

சென்ற வாரம் தமிழக சட்டமன்றத்தில் பள்ளிக் கல்வி அமைச்சர், தனியார் பள்ளிகளுக்கு கட்டணங்களை ஒழுங்கு படுத்துவது பற்றிய அரசின் அறிக்கையை முன்வைத்தார். தமிழ்நாட்டில் இருக்கின்ற 10,934 தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு அரசு, கட்டண ஒழுங்கமைப்பு ஒன்றை அதில் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு 3 ஆண்டுகளுக்கு அமுலில் இருக்கும் என்ப தாகவும் கூறப்பட்டுள்ளது. கோவிந்தராஜன் குழு என்ற அரசால் நிறுவப்பட்ட, தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயிப்புக் குழு, பல்வேறு பிரச்சினைகளை விரிவாக ஆய்வு செய்த பிறகு இந்த கட்டண ஒழுங்கமைப் பை ஆலோசனையாக வைத்தது. பெற்றோர் கள் மற்றும் பள்ளிகளின் நலனை கணக்கில் கொண்டு இந்த ஒழுங்கமைப்பு செய்யப் பட்டது என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
இதற்கான ஆய்விற்கு அந்த குழு ஒரு கேள்வித் தாளை 10,934 பள்ளிகளுக்கும் அனுப்பி வைத்தது. அதில் 10,233 பள்ளிகளிலிருந்து பதில்கள் வந்தன. அந்த பள்ளிகளின் வரவையும் செலவையும் அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கான கட்டண ஒழுங்கமைப்பு உருவாக்கப் பட்டது. செலவை விட மாணவர்களிடம் வாங்கும் கட்டணம் மூலம் வரவு அதிகமாக இருந்தால், அதைக் குறைத்துக் கொள்ளும் படி அந்தப் பள்ளிகளுக்கு வழிகாட்டல் கொடுக்கப்பட்டது. செலவு வரவை விட அதிகமாக இருக்கும் பள்ளிகளுக்கு, நிலவும் கட்டணங்களை வாங்க அனுமதி கொடுக்கப் பட்டது. ஆய்வுக் குழுவின் கேள்விகளுக்கு பதில் தராத 701 பள்ளிகளுக்கு, அண்டை பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு போடப்பட்ட கட்டணங்களை குழு அறிவித்தது. நகரில் உள்ள ஆரம்பப் பள்ளிகளுக்கு ரூ.5000/யும், நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.8000/யும், உயர்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.9000/யும், மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.11,000/யும் சராசரியாக குழு நிர்ணயித்தது.
நகரில் சில மேல்நிலைப்பள்ளிகளில் ரூ.35,000/ ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் வசூல் செய்கின்றன. அதே சமயம் நகரில் உள்ள ஆரம்பப்பள்ளிகளில் பெரும்பான்மை யானவர்கள் ஒரு மாணவனிடம் ரூ.2000/ தான் வசூல் செய்கின்றன. அதே சமயம் நெல்லை மாவட்டத்தில் உள்ள கடைய நல்லூரில் ஒரு விடுதியுடன் கூடிய பள்ளியில் ரூ.1.25 லட்சம் பணத்தை ஒரு ஆரம்பப் பள்ளி மாணவனிடம் வசூலிக்கிறார்கள் என்ற செய்தி அதிர்ச்சியாக வந்தடைந்துள்ளது. அந்தப் பள்ளி ரூ.3000/ ஒவ்வொரு மாணவருக்கும் செலவழிப்பதாக கணக்கு காட்டியதால், அதையே கட்டணமாக கோவிந்தராஜன் குழு நிர்ணயித்தது. இது தவிர பள்ளியின் வளர்ச்சிக்கான செலவாக, 10% செலவினத்தைக் கூட்டிக் கொள்ளவும் அந்தக் குழு அனுமதித்துள்ளது. மேற்கண்ட ஒழுங்கமைப்பை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட விவரங்கள் வியாபாரமாக்கி விட்ட கல்வியின் நிலைமையை படம் பிடித்துக் காட்டுகின்றது. அதே சமயம் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் மேற்கண்ட கட்டண ஒழுங்கமைப்பின் மூலம், பள்ளி களை நடத்த முடியாது என்று கலகம் செய்யத் தொடங்கி விட்டன. பள்ளிகளின் தரம் குறைந்து விடும் என்று அந்த கல்வி முதலாளிகள் கூக்குரலிடுகிறார்கள். தங்கள் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கவும், வகுப்பறைகளுக்கு வண்ணம்பூசவும் முடியாது என்று புதுப் பிரச்சினையை கிளப்புகிறார்கள். ஒரு மேல்நிலைப்பள்ளியில் ரூ.20,000க்கு குறைவாக கட்டணம் வசூலித்தல் நடைமுறை சாத்தியமில்லை என்று அந்த தனியார் கல்வி வியாபாரிகளின் பொறுப்பாளர் கூறியுள்ளார்.
ஓய்வு பெற்ற நீதியரசர் கோவிந்தராஜன் தலைமையிலான குழுவைப் பொறுத்தவரை அவர்கள் 8 அமர்வுகளில் விவாதித்து, தனியார் பள்ளிகளுடனும் விரிவான விவாதங் களை நடத்தி, பிறகே தங்களது ஆலோசனை யை வகுத்துள்ளார்கள். ஆனாலும் இப்போது தனியார் பள்ளி சங்கங்கள் அறிவிக்கப் பட்டுள்ள கட்டண ஒழுங்கமைப்பை எதிர்த்து, பள்ளிகளை திறக்க மாட்டோம் என்று அடம் பிடிக்கிறார்கள். அதே நேரத்தில் பெற்றோர் சங்கங்களிடம் இன்னொரு அச்சம் தோன்றியுள்ளது. அரசு அறிவிப்பிற்குப் பிறகு தனியார் பள்ளிகள், சிறப்பு கட்டணம் என்று கட்டாய வசூலில் ஈடுபடுவார்கள் என்றும், அந்த வசூலுக்கு ரசீது தரமாட்டார் கள் என்றும் பெற்றோர்கள் அச்சப்படத் தொடங்கியுள்ளார்கள்.
இந்த நேரத்தில் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவெங்கும் ஒரு புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் தேதி, இந்திய நாடாளு மன்றத்தில் ஆரம்பக் கல்வியை கட்டாய மாக்கக் கூடிய ஒரு சட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். அது கல்வியை ஒரு அடிப்படை உரிமை என்பதாக அறிவிக்கிறது. 6 வயதிலிருந்து 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, 2009ம் ஆண்டின் இலவசமாக கல்வி பெறுவதற்கான உரிமையையும், கட்டாய கல்வி சட்டத்தையும் அது அறிவித்துள்ளது. அதன் மூலம் இப்போது பள்ளிக்கு செல்லாத அல்லது செல்லமுடியாத ஒரு கோடி குழந்தைகள் பயன் பெறுவார்கள். அவர்கள் சூழ்நிலையின் காரணமாக படிப்பை நிறுத்தியிருக்கலாம் அல்லது கல்விக் கூடத்திற்கே செல்லமுடியாமல் இருந்திருக்க லாம். அந்த சட்டப்படி தனியார் கல்வி நிறுவனங்கள் 25% இடத்தை, சமூகத்தின் நலிந்த பிரிவினர்களின் குழந்தைகளுக்கு ஒதுக்கவேண்டும். அத்தகைய குழந்தை களுக்கு செலவிடப்படும் தொகையில், 55% மத்திய அரசும், 45% மாநில அரசும் பொறுப்பேற்கும்.இந்த சட்டத்தை அமுல்படுத்த மாநிலங்களுக்கு ரூ.25,000, மத்திய நிதி ஆணையத்தால் கொடுக்கப்படும். சட்டத்தின் அறிவிப்பிலேயே 201011 ஆண்டுகளுக்கான ரூ.15,000 கோடிக்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்து விட்டது. இத்தகைய ஒரு மகத்தான சட்டமும், கல்வியை வியாபாரமாக்கும் தனியார் மத்தியில் இந்த நாட்டில் தான் அரங்கேறியுள்ளது. உலகில் உள்ள சில நாடுகள் மட்டுமே இதுபோன்ற கட்டாய இலவச கல்வியை, ஆரம்பப் பள்ளிக்கு அறிவித்துள்ளன.
மேற்கண்ட சட்டம் கல்வியை அடிப்படை உரிமையாக ஆக்குவதன் மூலம், மனித உரிமை தளத்தில் ஒரு சாதனையையும், அதே சமயம் அடுத்த தலைமுறைக்கு ஒரு உத்தரவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கங்களால் தங்கள் அறிவிப்புகளையே அமுல்படுத்த முடியாத ஒரு சூழ்நிலையை, தனியார் கல்வி வியாபாரிகள் உருவாக்குகிறார் கள் என்று சொன்னால், இதற்கான அடிப்படை காரணம் என்ன என்பதை ஆராய வேண்டும்.
கடந்த காலங்களில் தர்மகர்த்தா மனோநிலையில், தனியார்கள் சேவை மனோபாவத்தில் கல்விக் கூடங்களை ஏற்படுத்தினார்கள். அதன் பிறகு அரசு அந்தப் பொறுப்பை உணர்ந்து, கல்விச் சாலைகளை ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை உருவாகியது. இத்தகைய நிலைமைக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொண்டு வந்த, “புதிய கல்விக் கொள்கை” ஒரு முற்றுப்புள்ளியை வைத்தது. நிலவும் கல்விச் சாலைகளின் அவலநிலைகளை, அணு அணுவாக தொகுத்து முன்வைத்து, அதற்கான தீர்வாக தனியார் கைகளில் கல்வியைக் கொடுத்து விடுவது என்பது தான் அந்த புதிய கல்விக் கொள்கை. அதுவே புற்றீசல் என சுயநிதி கல்விச்சாலைகளை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். ஆட்சியில், கல்வி அமைச்சரின் தனியார் நிறுவன பாசம், புற்றீசல் என கல்விக் கொள்ளையர்கள் மாநிலமெங்கும் உருவாக உதவி செய்தது. இப்போது அவர்களின் கூட்டமைப்பால், அரசின் நல்ல திட்டம் கூட மிரட்டப்படுகிறது. இவ்வாறு அரசால் அனுமதிக்கப்பட்டு, வளர்க்கப்பட்ட ஒரு நச்சு விதை,மரமாக வளர்ந்து பேயாக ஆடுகின்ற சூழலை காண்கின்றோம். இப்போதாவது மன உறுதியுடன் அரசு தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதே நமது கோரிக்கையும்.

Saturday, May 15, 2010

ஈரான் எரிவாயு குழாய், தெற்காசிய முகத்தை மாற்றும்

இன்று இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, ஈரான் செல்கிறார். வளரும் நாடுகளின் ஜி15 உச்சி மாநாடு மூன்று நாட்கள் நடக்க இருக்கிறது. அப்போது ஈரானிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் மனோசெகர் மோட்டாக்கியை சந்திக்கிறார். அந்த சந்திப்பில் ஈரான் பாகிஸ்தான் இந்தியா எரிவாயு குழாய் திட்டம் பற்றி பேசுகிறார்.
70 லட்சம் டாலர் விலையுள்ள அந்த எரிவாயு திட்டம், மீண்டும் உயிர் பெறுமா என்று ஏங்குகிறது. அத்தகைய ஒப்பந்தத் திற்கு தடையாக உள்ள அனைத்தையும் நீக்கி, உயிர் பெற வைக்கமுடியும் என்று அதன் அனைத்து பங்காளிகளும், நேர்மை யாக நம்புகிறார்கள் என்பது கிருஷ்ணாவின் கருத்து.
அத்தகையதொரு ஒப்பந்தத்திற்கு அனைத்து தடைகளையும் போட்டுக் கொண்டிருப்பது அமெரிக்காதான் என்பது உலகறிந்த உண்மை. ஏற்கனவே ஒரு கட்டுரையில் நாம் குறிப்பிட்டது போல, அத்தகையதொரு ஒப்பந்தத்திற்கு முயன்றதால்தான் அமெரிக்க முயற்சியால் நட்வர் சிங், அமைச்சரவையிலிருந்து அகற்றப்பட்டார். அடுத்து பெட்ரோலிய அமைச்சராக இருந்த மணிசங்கர்ஐயர் இந்த குறிப்பிட்ட ஒப்பந்தத்திற்கு முயற்சி எடுத்ததால்தான், அமெரிக்க நிர்ப்பந்தத்தில் ஐயரது அமைச்சர் பொறுப்பு மாற்றப்பட்டது.
1988ம் ஆண்டு ஈரான் நாட்டின் தெற்கு பார்ஸ் வெளியில், இயற்கை எரிவாயு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதிலிருந்து ஈரான் அரசாங்கம் அதிகமான முயற்சி எடுத்து எரிவாயு ஏற்றுமதியை பிறநாடுகளுக்கு அனுப்புவதில் கவனம் செலுத்தியது. இந்தியா, பாகிஸ்தான் போன்ற தெற்காசிய நாடுகளில், இயற்கை எரிவாயு இருப்பு மிகவும் குறைவாக இருப்பதால், கிடைக்கின்ற எரிவாயு தேவைக்கு போதாமல் இருப்பதால், அங்கே அதிகமான லாபத்திற்கான வாய்ப்பை ஈரான் அரசு சிந்தித்துப் பார்த்தது.
1995ம் ஆண்டில் பாகிஸ்தானும், ஈரானும் ஒரு தொடக்க நிலை ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். பாரசீக வளைகுடாவில் இருக்கும் ஈரானிய தெற்கு பார்ஸ் இயற்கை எரிவாயு வெளியிலிருந்து, இயற்கை எரிவாயு குழாயை கராச்சியுடன் தொடர்பு கொள்ள கட்டியமைக்க வேண்டும் என்பதுதான் அந்த ஒப்பந்தம். கராச்சி அரபிக் கடலில் இருக்கின்ற பாகிஸ்தானின் முக்கியமான தொழில்துறை துறைமுகம். அதன் பிறகு அதே எரிவாயு குழாயை பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு நீட்டிக்கலாம் என்ற முன்வைப்பை ஈரான் வைத்தது.
ஈரானின் இயற்கை வாயு ஏற்றுமதியால் பாகிஸ்தானுக்கு பயன்கிடைக்கும் என்பது மட்டுமின்றி, இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய பாகிஸ்தான் நிலத்தை போக்குவரத்து பாதையாக பயன்படுத்தல் என்பதும் பாகிஸ்தானிற்கு இன்னொரு லாபம். இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் நிலவும் வரலாற்றில் பதட்ட உறவு நீடிப்பதால், இந்திய அரசுக்கு அதில் தயக்கமிருந்தது. அதனால் மாற்று வழியாக ஆழ்கடல் எரிவாயு குழாய் அமைத்தால், பாதுகாப்பு பிரச்சினை எழாது என்றும் இந்திய அரசு கருதியது.
2000வது ஆண்டில் இந்தியாவும், ஈரானும், பாகிஸ்தானும் தங்களது அரசாங்க அதிகாரிகள் மூலம், குழாய் வரும் பாதை, போக்குவரத்து வழி, மற்றும் பூகோள அரசியல் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்தார்கள். அத்தகைய பேச்சு வார்த்தையே இரு நாடுகளுக்கும் இடையிலும், பிராந்தியத்திற்கு உள்ளேயும் இருக்கும் அரசியலில் முக்கியமாக கருதப்பட்டது. இயற்கை எரிவாயு வருவதன் மூலம் பொருளாதார மற்றும் வளர்ச்சி பலன்கள் கிடைக்கும் என்பதால், இந்தியா, ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள் காஷ்மீர், ஆப்கானிஸ்தான், தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள் ஆகிய பிராந்திய மோதல்களில், அதற்கான கொள்கைகளில் தங்களது பாத்திரங்களை மறுமதிப்பீடு செய்யத் தொடங்கினர்.
இந்த நாடுகள் தங்கள் தேவை யையொட்டியும், வளர்ச் சிக்காகவும் ஏற்றுக் கொண்டுள்ள எரிவாயு குழாய் திட்டம், பிராந்திய மோதல்களை தீர்க்கும் பட்சத்தில், ஒரு சமாதானத்திற்கான குழாய் திட்டமாக மறு உருப்பெற்றுள்ளது. அதன் மூலம் தெற்காசியாவின், பிராந்திய அரசியல் முகமே மாறுவதற்கான ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது. இது பொருளாதார ஒத்துழைப்புகள் எப்படி சமூக மற்றும் அரசியல் பரிமாற்றத்தின் அதிகாரத்தை மாற்றியமைக்கின்றன என்பதற்கான முன்னுதாரணமாக நிற்கின்றது.
பிரச்சினைகள் பாகிஸ்தானிற்கும், இந்தியாவிற்கும் மட்டுமே இருக்கவில்லை. பாகிஸ்தானும், ஈரானும் முஸ்லிம் நாடுகள் என்பதால் அவர்களுக்குள் பிரச்சினை இல்லை என்று கணிக்கக் கூடிய, முஸ்லிம் அல்லாத பார்வையும் சரியல்ல. ஆப்கானிஸ்தான் பிரச்சினையில் பாகிஸ்தானிற்கும், ஈரானுக்கும் ஒரே பார்வை கிடையாது. அமெரிக்க ஆதிக்கத்தை ஒப்புக்கொள்ளும் பாகிஸ்தான் அரசு போல, ஆப்கானிஸ்தான் சிக்கலை ஈரான் பார்ப்பதில்லை. இந்த பிராந்தியத்தில் இருக்கின்ற ஷியா சன்னி என்ற பிரிவினர்களுக்கு இடையில் உள்ள சிக்கலிலும் ஈரான், பாகிஸ்தான் அரசுடன் ஒத்துப்போவதில்லை. ஈரான் நாடு முழுமையாக ஷியா பிரிவினரின் செல்வாக்கில் இருக்கிறது.
ஆனால் பாகிஸ்தானில் ஷியா பிரிவினர், சன்னி பிரிவினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். இத்தகைய முரண்பாட்டையும் கூட பொருளாதார தேவைகளையொட்டி, எரிவாயு குழாய் சமரசம் செய்து வைக்கிறது. அதனால் பொருளாதார உலகமயமாக்கல் காலத்தில், வணிகம் பிராந்தியத்திற்கு உள்ளேயும், வெளியேயும் மோதல்களை தவிர்க்க உதவுவது இயற்கையான ஒரு செயல்பாடுதான்.
உலகில் இருக்கின்ற இயற்கை எரிவாயு இருப்பில், ஈரான் நாட்டில் 9% இருக்கிறது. எண்ணெய் வள நாடுகளிலேயே, 2வது எண்ணெய் வள உற்பத்தி நடப்பது ஈரானில்தான். எண்ணெய் வளம் போலவே இயற்கை எரிவாயு உற்பத்தியிலும் உலகின் 2வது பெரிய நாடாக ஈரான் திகழ்கிறது. 812 லட்சம் கோடி கனஅடி வரை அது உற்பத்தி செய்கிறது.
அதே சமயம் ஏற்றுமதிக்காகவும் ஈரான் துடிக்கிறது. அதனால்தான் இந்தியாவுடன் உள்ள ஏற்றுமதிக்கான முன்வைப்பை 1993ம் ஆண்டிலிருந்து முயற்சிக்கிறது. பாகிஸ்தானின் முக்கிய நகரங்ளான கராச்சிக்கும், முல்தானுக்கும் பாரசீக வளைகுடாவில் உள்ள தெற்கு பார்ஸ் வெளியிலிருந்து வரயிருக்கும் இந்த எரிவாயு குழாய் நீட்டிக்கப்பட்டு, இந்தியாவில் உள்ள டெல்லிக்கு எடுத்து வரப்படும். ஈரானில் உள்ள அசாலுயே, பாகிஸ்தானில் உள்ள குஸ்தர், கராச்சி, முல்தான், டெல்லி என்பதாக அந்த பாதை வகுக்கப்படுகிறது.
ஈரானிலிருந்து கராச்சி வரை 870 மைல் நீளம் கொண்டதாக அந்த குழாய் இருக்கும். மொத்தம் 2670 கி.மீ. நீளமுள்ள, 48 விட்டம் கொண்ட குழாய் 32 லட்சம் டாலர் எரிவாயுவை எடுத்துச் செல்லும். போக்குவரத்துக்கு வழி விடுவதன் மூலம் பாகிஸ்தான் 5,000 லட்சம் டாலரை சம்பாதிக்கும். ஆஸ்திரேலியா நாட்டின் பி.எச்.பி. கம்பெனி, மலேசியா நாட்டின் என்.ஐ.ஜி.சி., பிரெஞ்சு நாட்டின் பெட்ரோனாஸ் கம்பெனிகள் இந்த குழாய் கட்டுமானத்தில் ஈடுபடும் என தெரிகிறது. 1999ம் ஆண்டு இந்தியாவும், ஈரானும் ஒரு தொடக்க நிலை ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
இத்தகைய இருநாட்டு பரஸ்பர ஒப்பந்தங்கள் போதாது. முத்தரப்பு ஒப்பந்தம் ஒன்று மூன்று நாடுகளுக்கு மத்தியில் போடப்படவேண்டும்.
மேற்கண்ட வர்த்தக உறவு தெற்காசிய நாடுகளுக்குள், முதன்மையான நிலையை கைப்பற்றியுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குள் இருக்கும் பரஸ்பர சார்புத்தன்மை கொண்ட ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தும். அதுவே இந்த பிராந்தியத்தில் உள்ள இரு பெரும் நாடுகளுக்கு மத்தியில் உள்ள பிளவை பயன்படுத்தி, அமெரிக்கா தனது தலையீட்டை செய்வதை தவிர்க்கும்.
எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைகளுக்கும், அமெரிக்காவையும், அமெரிக்கா சார்பு நாடுகளையும் எதிர் பார்த்து நிற்பதை ஒரு முடிவுக்கு கொண்டு வரும். இத்தகைய இயற்கையான, தேவையின் அடிப்படையிலான திட்டமாக, இந்த சமாதான எரிவாயு குழாய் திட்டம் அமைவதை வரவேற்கலாம்.

Friday, May 14, 2010

தமிழர்களுக்கு எதிரான உளவியல் போர்

உலக நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக இலங்கைத் தீவிலும், இந்திய நாட்டிலும், மலேசியாவிலும் வாழ்ந்து வரும் தமிழர்கள் பற்றி வருகின்ற செய்திகள் முதன்மையாக உள்ளன. அதில் இலங்கைத் தீவில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்கள் தங்களுடைய சுயநிர்ணய உரிமைப் போருக்காக பல்வேறு வடிவங்களில் போராடி வருகிறார்கள். அவர்களது போராட்டம் ஆயுதப் போராட்ட வடிவம் எடுத்த போது மட்டுமே, உலகம் அவர்களைத் திரும்பிப் பார்த்தது. ஒரு கட்டம் வரை அவர்களது உரிமைப் போராட்டத்தை, தங்களது கட்டுப்பாட்டிற் குள் வைத்துக் கொள்ளலாம் என்று எண்ணிய வெளிநாட்டு சக்திகள், அது இயலாது என்ற நிலை வந்தபிறகு அந்த உரிமைப் போரை நசுக்கத் தலைப்பட்டன. அத்தகைய வெளிநாட்டு சக்திகளில் பிராந்திய மேலாதிக்க சக்திகளும், உலக வல்லரசு சக்திகளும் அடக்கம்.
இந்தியாவிற்குள் இருக்கின்ற தமிழ் நாட்டில் வாழ்ந்து வரும் தமிழர்களுக்காக, உரிமைப் போர் வழியில் தந்தை பெரியார் குரல் கொடுத்து வந்த காலத்தில் டெல்லிக்கு ஒரு விதமான கலக்கம் இருந்தது. அதன் பிறகு தமிழ்நாட்டின் அரசியல் தலைமையை ஏற்ற சக்திகள், இந்திய அரசியல் சட்டத்தில் பிரிவினைவாதத்திற்கு எதிரான அம்சங்கள் சேர்க்கப்பட்ட பிறகு, தங்களது அணுகு முறையை மாற்றிக்கொண்டார்கள். அதன் பிறகு தமிழகத்து அரசியல் என்பது டெல்லி அரசியலுடன் இணைந்தும், இழைந்தும், பங்கெடுத்தும் செல்வதாக மாறியது. அதனால் இந்திய பேரரசு தங்களுக்கு ஒரு தலைவலி தீர்ந்தது என்பதாக எண்ணத் தொடங்கியது. அதே சமயம் இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களது உரிமைக் குரல் என்பது அரவணைக்கப்படாமல், அங்குள்ள அரசால் ஒடுக்கப்பட்டது. அதன் விளைவாக 60 ஆண்டுகளில் பல்வேறு வடிவங்களில், ஈழத்தமிழர்களது உரிமைப் போர் விடுத லைப் போராக வடிவெடுத்தது.
இலங்கையில் வாழும் தமிழர்களை ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லிம்கள், இந்திய வம்சாவழியான மலையகத் தமிழர்கள் என்பதாகப் பார்க்கலாம். இவர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான கோரிக்கைகளும், தயார் நிலைகளும் இருக் கின்றன. அவரவர் கடந்து வந்த பாதையை யொட்டி, அவரவரது அரசியல் வழிமுறை தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில் ஈழத்தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சூழலிலும் கூட, அதன் எதிரொலியாக அரசியல் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல, டி.என்.ஏ. என்ற தமிழர் தேசிய கூட்டமைப்பு செயல்பட்டது. இது போன்ற நிகழ்வுகள் உலகில் பல நாடுகளிலும் நடந்துள்ளன.
அயர்லாந்து நாட்டில், ஐரிஷ் குடியரசு படை என்ற ஐ.ஆர்.ஏ. கொரில்லா போராட்டங்களின் மூலம் ஆயுதப் போராட்டத்தை நடத்தி வந்தது. அவர்கள் கத் தோலிக்க கிறித்துவ சமூகத்தவராக இருந்தார் கள். அந்த ஐ.ஆர்.ஏ. சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைவராக இருந்த மாசேதுங்கின் சிந்தனை களை வழிகாட்டியாக கொண்டு போராடி வந்தார்கள். அவர்களுக்கு எதிராக இங்கிலாந்து நாட்டின் ராணுவம், உல்சர் என்ற பிராட்டஸ்டண்ட்களை பயன்படுத்தி வந்தது. அப்போது பேச்சு வார்த்தைகளை நடத்து வதற்கும், மக்களை அரசியல் வழிப்படுத்து வதற்கும், தங்களது அரசியல் பிரதிநிதிகளாக, சின்பியான் என்ற அமைப்பை ஐ.ஆர்.ஏ. பயன்படுத்தினார்கள். அதுபோலவே காஷ்மீரத்தில் சுயநிர்ணய உரிமைக்கான ஆயுதப்போராட்டத்தை சில குழுக்கள் நடத்துகின்றன. அவர்களது அரசியல் விருப்பங்களை, கருத்துக்களை அங்கே இருக்கும் ஹூரியத் மாநாடு அமைப்பினர் பிரதிநதித்துவப் படுத்துகின்றனர். இந்திய அரசுக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் ஹூரியத் மாநாடு பிரதிநிதிகளுடன் சமரசப் பேச்சு வார்த்தைகளை நடத்துவது எளிதாக இருக் கிறது. இவையெல்லாம் அரசியல் போராட் டத்தின், அதை நடத்துவதற்கான அணியின் அல்லது அமைப்பின் முக்கியத்துவத்தை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
இதே போல ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும், நேரடியாக தனக்கான அரசியல் அமைப்பை உருவாக்க தொடர்ந்து முயற்சி எடுத்துக் கொண்டிருந்தது. விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற அமைப்பை யோகி தலைமையிலும், பிறகு மாத்தையா தலைமையிலும் புலிகள் அவ்வப்போது முயற்சி எடுத்தார்கள். பிறகு தங்களுக்கான அரசியல் அணியை சுப.தமிழ்செல்வன் தலைமையில் அமைத்தார்கள். ஆயுதப் போராட்டத்தை அதிகமான ஆயுத வலுக் கொண்டு தடுத்து விடவோ, அழித்து விடவோ முடியும் என்று உலகில் உள்ள வல்லாதிக்க சக்திகள் எப்போதுமே நம்பு கின்றன. அதில் பிராந்திய மேலாண்மை சக்திகள் மாறுபட்டவை அல்ல. அதே சமயம் அரசியல் தலைமையை, அரசியல் அமைப் பை, அரசியல் அணியை சந்திப்பதும், எதிர்கொள்வதும் கடினமானது என்பது பிற்போக்கு அரசியல் வல்லாண்மை சக்திகளுக்கு தெரிந்த செய்தி. ஏனென்றால் விடுதலையும், உரிமைகளும், சுயநிர்ணய மும் இயற்கையான உண்மைகள். அவை மக்கள் மத்தியில் ஊறி விட்டால், உணர்வு களை அழித்தல் எளிதானதல்ல. அதைத்தான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், “அடக்குமுறை செய்திடல் முடியும். கொள்கை அழிக்குமுறை எவ்வாறு முடியும். ஒடுக்கு சிறை காட்டுதல் முடியும். உணர்வொடுக்குதல் எவ்வாறு முடியும்.” என்று எழுதினார்.
இதை அனுபவத்தின் மூலம் உணர்ந்துள்ள வல்லாண்மை சக்திகள் நார்வே நாடு சென்று சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு திரும்பிய சுப.தமிழ்செல்வன் முன்வைக்கும் அரசியலை தொடரவிடத் தயாராயில்லை. அதனால் தான் அவரது இருப்பிடம், செயற்கை கோள் மூலம் பிராந்திய வல்லாதிக்க சக்திகளால் அடையாளம் காணப்பட்டு, சிங்கள ராணுவத்தால் அழித்தொழிப்பு செய்யப்பட்டது. அடுத்து அரசியல் அணியை புலிகளுக்காக தலைமை தாங்கிய நடேசனை, வெள்ளைக் கொடியுடன் அறிவித்து விட்டு சரணடைந்த போதும் படுகொலை செய்தது. தமிழின அழிப்பு சக்திகளுக்கு விடுதலைப் போரின் அரசியல் பிரதிநிதிகள் மீது எப்போதுமே ஒரு ரத்த வெறி இருந்து கொண்டே இருக்கிறது. இப்போது அதுவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற் கான முயற்சிகளை உலக அரங்கில் எடுக்கின்ற ஜனநாயக அரசியல் சக்திகளின் மீது பாய்கிறது.
ராணுவ நடவடிக்கைகளை 7 நாடுகளின் உதவியுடன் நடத்திய கொழும்பு அரசாங்கம், இப்போது உளவியல் போரில் முழுமையாக ஈடுபட்டுள்ளது. ஆயுதப் போராட்டத்தின் உயர்ந்த கட்டமாக, உலகெங்கிலும் அரசியல் போராட்டம் நடத்தப்படுவதை தாங்க முடியா மல், அதை உடைத்து விட உளவியல் போர் அவர்களுக்கு உதவுகிறது.
ஆயுதப் போராட்டத்திற்கும், அரசியல் போராட்டத்திற்கும் இருக்கின்ற இயற்கை யான விதிகளை புரிந்து கொள்ள முடியாத போராளிகள் மற்றும் ஆதரவு சக்திகள் மத்தியில், போலியான தோற்றங்களை காட்டி திசைத் திருப்ப திட்டங்களை உருவாக்கி வருகிறார்கள். அதற்கு பிராந்திய மேலாண் மை மற்றும் உலக வல்லரசு நாடுகளின் உளவுத்துறைகள் சிறப்பான முறையில் உதவிகள் செய்கின்றன. அதைத்தான் இலங்கையில் புலிகளுக்கு எதிரான போரை வெற்றி கொண்ட போதிலும், அனைத்து நாட்டு ரீதியில் போர் தொடர்வதாக இலங்கை ராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்கே கூறியுள்ளார். அதில் வெற்றி பெற நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ள தாகவும் தெரிவித்துள்ளார். அத்தகைய தொடக்கங்கள்தான் உளவு நிறுவனங்களின் ஊடுறுருவல் செயல்பாடுகள். இதை உலகத் தமிழர்கள் உணர்ந்து கொள்வதை யொட்டி தான், சரியான நண்பர்களை அடையாளம் கண்டு கொள்வார்கள்.
இந்த நிலையில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் மத்தியிலிருந்தும், இலங்கை சிங்கள பௌத்த அரசுக்கு எதிராக போராட்டங்கள் தோன்று கின்றன. கொழும்பில் கொம்பனி வீதியில் வீடுகள் உடைக்கப்பட்டன. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னால் சார்க் மாநாட்டு சூழலில், அதே இடத்தில் தமிழ் பேசும் முஸ்லிம் சிறுவியாபாரிகளின் வீடுகள் உடைக்கப்பட்டன. இப்போது அங்கு தொடங்கி இருக்கும் அரசாங்க அடக்கு முறை, தலைநகர் எங்கும் விரிவாகும் என்ற புரிதலில் ஆர்ப்பாட்டத்தை கொழும்பு குடியிருப்புகள் பாதுகாப்பு மன்றம் ஏற்பாடு செய்துள்ளது. இதுபோன்ற ஒவ்வொரு சிறிய ஜனநாயக போராட்டங்களும் ஒருங்கிணைக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது.
உலகத் தமிழர்கள் மத்தியிலும், உள்ளூர் தமிழர்கள் மத்தியிலும், தமிழ் பேசும் அனைத்து மதத்தினர் மத்தியிலும் ஒவ்வொரு நாட்டிலும் ஏற்படும் அல்லது ஏற்படுத்தப் படும் பிளவுகளை முறியடித்து முன்னேறு வதில்தான் தமிழர்களின் உரிமைக்குரல் எழமுடியும். உளவியல் போருக்கான உளவு நிலைப் போரை ஆதிக்க சக்திகள் செய்து கொண்டுதான் இருப்பார்கள். மே 12 லிருந்து, மே 18 வரையுள்ள வலி சுமந்த வாரத்திலா வது, இதை நாம் உணர வேண்டும் என்பதே உலகத்தமிழருக்கான ஒரே செய்தி.

Thursday, May 13, 2010

ஐ.நா. தீர்மானம் ஒரு பைசாவிற்கு கூட பயனில்லை

ஈரான் நாட்டில் அணுஆயுதங்கள் தயார் செய்வதாக அமெரிக்கா தொடர்ந்து தொந்தரவு செய்து வருகிறது. அதற்காக ஐக்கிய சபை மூலம் ஈரான் நாட்டிற்கு எதிராக அனைத்து காய் நகர்த்தும் வேலைகளையும் அமெரிக்கா செய்து வருகிறது. இத்தகைய சூழலில் ஈரான் நாட்டின் தலைநகரான் டெஹ்ரானில் இந்த ஆண்டு ஏப்ரல் 17,18 தேதிகளில், ‘அணு சக்தி எல்லோருக்கும். அணு ஆயுதம் யாருக்கும் இல்லை’என்ற தலைப்பில் ஒரு மாநாட்டை ஈரான் நடத்தியது. அந்த மாநாட்டிற்கு இந்திய பிரதிநிதி செல்லக் கூடாது என்ற கருத்தை அமெரிக்கா வைத்திருந்தது. 55 நாடுகளிலிருந்து அமைச்சர்களும், அதிகாரிகளும், அணுசக்தி நிபுணர்களும் கலந்து கொண்ட அந்த மாநாட்டில், ஈரான் நாட்டில் இந்திய தூதராக இருக்கின்ற சஞ்சய் சிங், கலந்து கொள்வதையே அமெரிக்கா விரும்பாமல் இருந்தது. ஏனென்றால் ஈரான் நாட்டினுடைய அணுசக்தி திட்டத்தின் மீது குற்றம்சாட்டி அதையொட்டி ஈரான் நாட்டின் மீது பொருளாதார தடையை அமெரிக்கா தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. அதேசமயம் ஏப்ரல் 12,13 தேதிகளில் வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், இந்திய பிரதமர் மன்மோகனும் அணுசக்தி பாதுகாப்பு உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு பேசினர்.
ஏற்கனவே ஈரான் நாட்டிலிருந்து எரிவாயுவை குழாய் மூலம் பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குக் கொண்டு வரும் திட்டத்தை அமெரிக்கா எதிர்த்தாலும், இந்திய நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு தேவைக்காக, வளர்ந்து வரும் பொருளாதார நிலையில், டெல்லி அரசு ஆதரித்து வருகிறது. ஏற்கனவே சென்ற மார்ச் மாதத்திலேயே பாகிஸ்தான் அரசு ஈரான் நாட்டுடன் ஒரு பல்லாயிரக்கணக்கான டாலர் மதிப்புள்ள வாயு குழாய் மூலம் இரண்டு நாடுகளையும் இணைப்பதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்தியாவும் அந்த குழாய் திட்டத்தை தன் நாட்டை நோக்கி நீட்டிக்க விரும்பி வருகிறது. இவையெல்லாமே அமெரிக்க அரசால் செரிக்கப்பட முடியவில்லை.
ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடையை அறிவித்தாலும், அமெரிக்காவில் உள்ள பெரும் முதலாளிகளும், வணிகர் சங்கமும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடையை கொண்டுவரும் அமெரிக்க சபையான காங்கிரசின் திட்டத்தை, அவர்கள் எதிர்க்கிறார்கள். அது அமெரிக்க நலனுக்கு உகந்ததல்ல என்பது அவர்களது கருத்து. அமெரிக்காவின் நட்பு நாடுகளுடன், அமெரிக்காவில் இருக்கின்ற பொருளாதார, தூதரக, சட்டபூர்வமான உறவுகளில் மோதலை, அத்தகைய பொருளாதார தடை ஏற்படுத்தும் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகளிடம் கடிதம் மூலமாக அமெரிக்க பெரு வணிக சங்கங்கள் இந்த ஆண்டு ஜனவரி மாதமே தெரிவித்திருந்தன. உலகம் முழுவதும் இருக்கின்ற பல்வேறு நாடுகளுடன் உள்ள வர்த்தக உறவுகள், நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக இதனால் பாதிக்கப்படும் என்பது அவர்கள் வாதம். ஆனால் அமெரிக்காவின் ஹவுஸ் மற்றும் செனட் ஆகிய இரண்டு பிரதிநிதித்துவ சபைகளும் அப்படிப்பட்ட தடையை முன்வைத்தன.
இது அமெரிக்க பொருளாதாரத்திற்குள் இருக்கின்ற இரண்டு வகையான பெரு முதலாளிகளுக்குள் நிலவும் முரண்பாடு. அதாவது ஆயுதங்களை உற்பத்தி செய்யும் சாவு வியாபாரிகள், அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைகளை செல்வாக்குச் செலுத்துவதில் எப்போதுமே முதன்மைப் பங்கை வகித்து வருகிறார்கள். அவர்கள் தான் ஈரானுடன் இருக்கின்ற உறவை உடைத்து, அதையே ஒரு போருக்கு தள்ளிவிட முயல்பவர்கள். அதன் மூலம் அவர்களால் தங்களது ஆயுத விற்பனையை அமெரிக்க அரசாங்கத்திற்கும், மற்ற நட்பு நாடுகளின் ராணுவங்களுக்கும், அதேசமயம் வேறு வழியில் எதிர்தரப்பு நாடுகளுக்கும் செய்து விட முடியும். அது அவர்களுக்கு பெரும் லாபத்தை கொண்டு வந்து குவிக்கும். அதே நேரத்தில் விவசாயப் பொருட்களையும், நுகர்வுப் பொருட்களையும் தயார் செய்கின்ற பெரு முதலாளிகள் தங்களது வர்த்தக உறவுகள் பாதிக்கப்படுமே என அஞ்சுவதிலும் நியாயமிருக்கிறது. ஒரு காலத்தில் அமெரிக்கா அசைக்க முடியாத சக்தியாக இருக்கும் போது, அதை அதே நிலையில் தக்கவைக்கின்ற திறமை ஆயுத வியாபாரிகளிடம் இருந்தது. ஆனால் இன்று பொருளாதார வீழ்ச்சியில் அமெரிக்கா இருக்கும் போது, ஆயுத உற்பத்தி அல்லாத பிற உற்பத்திகளில் ஈடுபடுகின்ற பெரு முதலாளிகள் செல்வாக்கு அதிகமாகி வருகிறது. ஆனாலும் கூட வரலாற்றுக் காரணங்களால் செனட்டிலும், ஹவுசிலும் இரு சபைகளிலுமே ஆயுத வியாபாரிகளின் நலன்களை ஊக்குவிக்கும் பிரதிநிதிகள் அதிகமாக இருப்பது புலனாகிறது.
இத்தகைய சூழலில் மக்கள் சீன குடியரசு, ஈரான் நாட்டின் மீது அறிவிக்கப்படும் பொருளாதார தடையை எதிர்க்கிறது. ஈரான் நாட்டின் அணுசக்தித் திட்டத்தின் மீது, அனைத்து நாட்டு புறக்கணிப்பை கூடுதலாக அறிவிப்பதை சீன நாட்டின் துணை வெளிவிவகாரத்துறை அமைச்சர் எதிர்த்துள்ளார். டெஹ்ரானில் நடந்த அனைத்து நாட்டு அணுஆயுத ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு, சீனா அந்த மாநாட்டை ஆக்கபூர்வமானது என்று வரவேற்றுள்ளது. இப்படியொரு மாநாட்டை நடத்தியதற்காக ஈரானை சீனா பாராட்டியுள்ளது.
ஐ.நா.சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ஈரானுக்கு எதிராக நான்காவது முறையாக பொருளாதார தடையை திணிப்பதற்கு, அமெரிக்கா பரப்புரை செய்யும் நேரம், அந்த கவுன்சிலில் தீர்மானங்களை நிராகரிக்கும் வீட்டோ உரிமையைப் பெற்ற ஒரு உறுப்பினரான சீனா அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக தயாராகயில்லை. ஈரான் நாடு ஆக்கப்பூர்வமான தேவைகளுக்காக அணுசக்தியை உற்பத்திச் செய்யும் திட்டத்தை பொய்யாக அறிவித்து விட்டு, ராணுவ தேவைகளுக்கான அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருகிறது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை ஒரு புறம் ஈரான் மறுத்து வருகிறது. அணுசக்தி தொழில்நுட்பத்தில் விரைவான முன்னேற்றத்தை ஈரான் நாடு அடைய கூடாது என மேற்கத்திய நாடுகள் தடுத்து வருவதாக ஈரான் குற்றஞ்சாட்டி வருகிறது. அதேசமயம் தங்களது மத நம்பிக்கையின் படி, பேரழிவு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கோ, வைத்துக் கொள்வதற்கோ இடமில்லை என்று ஈரான் திரும்ப, திரும்ப சொல்லி வருகிறது. அப்படிப்பட்ட பேரழிவு ஆயுதங்களை உலக அளவில் அழிக்க வேண்டும் என்றும் ஈரான் அறைகூவல் விடுகிறது.
இதையே கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் ஈரான் அதிபர் அஹமதி நிஜாத் கூறினார். அப்போது அணு ஆயுதங்களை சேமித்து வைத்திருக்கும் நாடுகள் எப்படி அணு ஆயுதங்களுக்கு எதிராக இருக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார். இதைக் கேட்டு அணு ஆயுதங்களை அதிகமாக சேமித்து வைத்திருக்கும் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் வெளிநடப்புச் செய்தனர். சில வாரங்களுக்குள் ஈரானுக்கு எதிரான புறக்கணிப்பை கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா துடி துடிக்கிறார். ஆனால் அதற்கு சீனா உடன்படவில்லை. சீனாவைத் தவிர ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அனைத்து நிரந்தர உறுப்பினர்களும் அமெரிக்காவின் முயற்சிக்கு உடன்பட்டு விட்டனர். ஈரான் நாட்டின் சார்பாக அணுசக்தி பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தலைவர் சையத் ஜலிலி சீன நாடு சென்றிருக்கும் நேரத்தில், அமெரிக்க அதிபர் ஒபாமா சீனத் தலைவர் ஹுவுடன் தொலைபேசியில் இதுபற்றி பேசினார்.
ஒரு புறம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே, இன்னொரு புறம் நிர்ப்பந்தம் செய்வது எப்படி சரியாக இருக்கும் என்ற கேள்வியை ஜலிலி எழுப்பினார். அமெரிக்கா தயார் செய்துள்ள தீர்மான நகலில், ஈரானின் புரட்சிகர படையும் மற்றும், ஈரானின் கம்பெனிகளின் சொத்துக்களும் இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்றும், ஈரான் வணிகர்களுடன் காப்பீடும், கப்பல் உறவும் தடுக்கப்பட வேண்டும் என்றும், ஈரான் நிதி நிறுவனங்களின் கறுப்புப் பட்டியலில், ஈரான் மத்திய வங்கியும் சேர்க்கப்பட வேண்டும் என்றும் எழுதப்பட்டுள்ளது. அதன் மீது விவாதிக்க தயாராகும் சீனாவை, ரஷ்யாவும், பிரேசிலும் ஆதரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில் ஐ.நா.வில் நிறைவேறும் தீர்மானம் ஒரு பைசாவுக்கு கூட பயனில்லை என்று உறுதியாக ஈரான் நாட்டு அதிபர் அஹமதி நிஜாத் அறிவித்துள்ளது, உலக மக்களின் பகுத்தறிவு உணர்வுகளை, போர் எதிர்ப்பு சிந்தனைகளை உசுப்பி விட்டுள்ளது.

Wednesday, May 12, 2010

பிரபலங்களிடையே சிக்கிய பிரபல அமிதாப் பச்சன்

திரைத்துறையின் பிரபலங்கள் எப்போதுமே உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு நாட்டிலும், சாதாரண குடிமக்களை விட அதிகமாக கவனிக்கப்படுகிறார்கள். அதிகமாக விரும்பப்படுகிறார்கள். அதனால் அரசியலிலும், வணிகத்திலும் அதிகமாக திரையுலக பிரமுகர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். பொதுமக்கள் மத்தியில் பிரபலமான யாரையும், எதையும் வணிகக்குழுமங்களுக்கு சமமாக இன்றைக்கு அரசியல்வாதிகள் பயன்படுத்த விரும்புகிறார்கள். பிரபலங்கள் மூலம் தங்கள் கட்சியும் அதன் செயல்பாடும் பிரபலமடையும் என்று அரசியல்வாதிகள் நம்புகிறார்கள். அதன் மூலம் பொதுமக்களை ஈர்த்து தாங்கள் வாக்குகள் பெறுவது எளிதானது என்பதாக அவர்கள் நம்புகிறார்கள். வணிகக்குழுமங்கள் தங்களது சரக்குகளை விற்பனைச் செய்ய, விளம்பரங்களில் பிரபலங்களை ஆடவிட்டு, ஓடவிட்டு, பேசவிட்டு அதன்மூலம் லாபம் அடைகிறார்கள். இன்று அரசியல் ஒரு வணிகமாகிப்போனதினாலோ என்னவோ, அரசியலிலும் பிரபலங்களை நோக்கி ஓடுகின்ற ஒரு போக்கு அதிகமாக வளர்ந்து வருகிறது.
திரைத்துறையில் பிரபலமான கலைஞர்கள் தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும், மத்திய அரசிலும் கூட அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிய வரலாறுகள் நம் கண் முன்னே உள்ளன. தமிழ்நாட்டின் முதலமைச்சர்களாக வந்திருக்கின்ற எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் அதற்கான சாட்சியங்கள். அதேபோல கவிஞர் கண்ணதாசன் முதல் நடிகை தீபா வரை பயன்படுத்த காங்கிரஸ் கட்சி கூட தயங்கியதில்லை. வைஜயந்திமாலா பாலி தமிழ்நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததும், தமிழ் திரையில் இருந்து வடஇந்திய திரைத்துறைக்குச் சென்ற நடிகை ஹேமமாலினி அன்று முதல் இன்று வரை பா.ஜ.க. கட்சியில் பொறுப்புக்கு வருவதும் இதற்கான கூடுதல் சாட்சிகள்.
தமிழ்நாட்டு அரசியலில் சரத்குமார், விஜயகாந்த், பாக்கியராஜ், சந்திரசேகர், லஷ்மி முதல் அம்பிகா, சிம்ரன் வரை தொடர்ந்து ஈடுபட்டு வருவது புதிய செய்தி அல்ல. ஆந்திராவில் எடுத்துக்கொண்டால் என்.டி.ராமாராவ் தொடங்கி கிருஷ்ணா மற்றும் இன்று சிரஞ்சீவி வரை அரசியல் அரங்கை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதை காணமுடிகிறது. வடக்கே சத்ருகன் சின்கா முதல் ராஜ் பப்பர் வரை அவ்வாறு இழுக்கப்பட்டவர்கள் தான். தெலுங்கானா தனிமாநில போராட்டம் என வந்தாலும், நடிகை விஜயசாந்தி வருகை தான் எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயபாதுரி, ஜெயபிரதா என்று உத்திரபிரதேச அரசியலிலும் நடிகைகள் ஈர்க்கப்படாமலில்லை. இத்தகைய சூழலில் தான் அமிதாப் பச்சனுக்கு, பிரபலமே சிக்கலாக வந்து சேர்ந்திருக்கிறது.
அமிதாப் பச்சன் இந்தியாவின் பரந்த சந்தையைக் கொண்ட இந்திப் படவுலகின் இமாலயம் என்று கூறலாம். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் நண்பராக மட்டும் தான், அவரது அன்றைய அரசியல் பங்கு இருந்தது. அவரது மனைவி ஜெயபாதுரி உத்திரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட போதும், அமிதாப் அரசியலில் இறங்கவில்லை. திரைத்துறையிலிருந்து ஓய்வு பெறுவதற்கான சூழ்நிலையை அமிதாப் எட்டியிருக்கும் போது, அரசாங்கங்கள் அவரது பிரபலத்தை பயன்படுத்த முயன்றன.
மதவாதியாக படம் பிடித்துக் காட்டப்படும் குஜராத் மாநிலத்தின் முதல்வர் நரேந்திர மோடி, அவரது மாநில அரசாங்கத்தின் தூதராக பிரபல அமிதாப்பை நியமித்தார். அதன் பிறகு மும்பையிலிருக்கும் ஒரு பாலத்தின் திறப்பு விழாவிற்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருகை தந்தார். அப்போது மாநில அரசின் அமைச்சர்கள் அழைத்ததின் பேரில், அமிதாப்பும் விழாவில் கலந்து கொண்டார். இதுவே விழாவை நடத்திய மஹாராஷ்டிர அரசாங்கத்திற்கு தலைவலியாகப் போய்விட்டது.
அன்னை சோனியா கோபித்துக் கொண்டார் என்பதால், மஹாராஷ்டிர காங்கிரஸ் தலைமை, அமிதாப்பின் வருகை பற்றி குழப்பமான எதிர்ப்பைத் தெரிவித்தது. அதற்கு பதில் கொடுக்க பிரபல அமிதாப்பிற்கு நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இணையதளத்தில் இருக்கும் தனது வலைத்தளத்தில் அழைப்பில் தனது பெயரைப் போட்டு, தன்னை மாநில அமைச்சர் அழைத்ததினால் தான் கலந்து கொண்டேன் என்று சுய விளக்கம் கூறியிருந்தார். பா.ஜ.க.வின் குஜராத் ஆட்சிக்கு தூதராக நியமிக்கப்பட்டதால் தான், அன்னை சோனியா கோபம் கொண்டார் என்பதாக ஊடகங்கள் எழுதித் தீர்த்தன. ஆனால் ராஜிவ் காந்தி காலத்திய குடும்ப நண்பர், ராஜிவ் மறைவிற்குப் பின் பிரிந்து நிற்கும் சூழலில் அவர்களுக்குள் என்ன முரண்பாடு என்று ஆய்வு செய்ய ஊடகங்கள் முயலவில்லை.
அடுத்து கேரள மாநிலத்தை ஆளுகின்ற இடதுசாரி அரசாங்கம், பிரபல திரைப்படக் கலைஞர் அமிதாப் பச்சனை தங்கள் அரசாங்கத்தின் தூதராக தேர்வு செய்தனர். ஆனால் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைமையில் அமர்ந்திருக்கின்ற சீத்தாராம் யெச்சுரி, அந்த முடிவுக்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார். அதன் விளைவாக மாநில அரசாங்கம் சுயமாக தங்களுடைய அரசாங்க பிரபலத்திற்கும், சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கும் ஒரு பிரபலத்தை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமைக்கு குஜராத் மாநில பா.ஜ.க. அரசாங்கத்தின் தூதர் என்ற அளவுகோல் மட்டுமே உதவியது. அதேநேரம் கேரள சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்காக, பல்வேறு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக ஒரு பிரபல இந்தி திரைப்பட பிரமுகரான அமிதாப் பச்சனை பயன்படுத்த அந்த மாநில அரசாங்கத்தால் முடியாமல் போனது.
அதேபோல டெல்லியிலும் ஒரு நிகழ்ச்சி நடந்தது. டெல்லி மாநில அரசாங்கம் காங்கிரஸ் கட்சியின் கையில் உள்ளது. உலகம் முழுவதும் பூமி நாளை, உலக வனத்தள நிதியம் கடைபிடிக்கும் போது, டெல்லியில் மாநில அரசாங்கம் மூலம் அது ஏற்பாடு செய்யப்பட்டது. செய்யப்பட்ட ஏற்பாட்டில் அமிதாப் பச்சனின் மகனான பிரபல அபிஷேக் பச்சன் பேசிய ஒலி நாடா வெளியிடப்படுவதற்காக தயாரானது. அங்கங்கே அபிஷேக் பச்சனின் படங்களும் விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் பூமி நாளன்று அனைத்து விளம்பர பலகைகளும் நீக்கப்பட்டது. அபிஷேக் பச்சனின் பேச்சு கொண்ட ஒலி நாடாவும் நீக்கப்பட்டது. இவையெல்லாமே டெல்லி மாநில முதல்வர் ஷீலா தீட்சித் செய்த ஏற்பாடு என்பதாக தெரிந்தது. கடைசி நேரத்தில் ஷீலா தீட்சித் அன்னை சோனியாவின் கோபத்திற்கு ஆளாகாமல் தப்பிக்க அதை செய்து விட்டார் என்று கூறப்பட்டது. இதையும் கூட அமிதாப் தனது வலைத்தளத்தில் எழுதினார்.
காங்கிரஸ் கட்சியும், இடதுசாரி கட்சியும் இப்படி ஒரு முடிவை எடுக்குமானால், அதே போன்ற முடிவை குஜராத்தை ஆளும் பா.ஜ.க. கட்சியும் எடுத்து விட்டது. குஜராத் அரசாங்கத்தின் தூதுவராக நியமிக்கப்பட்டதை காங்கிரசும், இடதுசாரிகளும் குற்றமாகப் பார்த்தால், கடைசியாக குஜராத்தின் நரேந்திர மோடி அரசாங்கமே, அமிதாப்பை தூதர் நிலையிலிருந்து துரத்தி விட்டது.
இந்திய அரசியல்வாதிகளின் பல்வேறு பிரிவுகளாலும் துரத்தப்பட்ட நிலையில், இலங்கை அரசின் அதிபரிடமிருந்து அமிதாப்பிற்கு அழைப்பு வந்தது. இது தொல்லையல்ல என்று எண்ணி அமிதாப்பும் அதை ஏற்றுக் கொண்டார். இந்தியாவின் பிரபலங்களை பயன்படுத்துவதில் கூர்மையாக உள்ள இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே அமிதாப்பை, அனைத்து நாட்டு திரைப்பட விழாவிற்கு முக்கியத் தூதராக அறிவித்தார். உடன் நின்று படமெடுத்துக் கொண்டார்.
ஆனால் இது தமிழர்களின் தன்மானத்திற்கு விடப்பட்டுள்ள சவால் என்பது அமிதாப்பிற்கு முதலில் தெரிந்திருக்கவில்லை. தமிழ் இளைஞர்கள் மற்றும் தமிழ் திரைத்துறையினர் மற்றும் தமிழ் சின்னத்திரைக் கலைஞர்கள் இத்தகைய இலங்கையின் முயற்சிக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்த பிறகு முடிவுகள் திக்குமுக்காடுகின்றன. அமிதாப் பச்சனின் மும்பை இல்லம் தொடர்ந்து தமிழர்களால் முற்றுகையிடப்படுகிறது. இப்போது அத்தகைய அவல விளையாட்டிற்கு செல்லாமல் நிறுத்திக்கொள்வார் என்று அமிதாப் பற்றி செய்திகள் வெளிவருகின்றன. பிரபலங்களை விட பிரபலங்களை பயன்படுத்த விரும்பும் அரசியல் தலைவர்கள் தான் ஆபத்தானவர்கள் என்பது நமக்கு விளங்குகிறது.
ஒரு லட்சம் தமிழர்களை புதைத்த சுடுகாட்டு மண்ணில், திரைப்பட விழாவா என்ற கேள்வி தமிழ் தேசிய இனத்தின் விடுதலை உணர்வுகளிலிருந்து எழுகிறது. அதற்கு மதிப்பளித்தால் மட்டும் தான், பிரபலங்கள் உண்மையான பிரபலங்களாக இருக்க முடியும்.

Tuesday, May 11, 2010

ஜெய்ராம் ரமேஷ் கூறியதில் என்ன தவறு?

இரண்டு நாட்களாக ஊடகங்கள் இந்திய சுற்றுச் சூழல் மற்றும் வன இலாகாவின் அமைச்சரான ஜெய்ராம் ரமேஷ், தனது சீன பயணத்தின் போது பேசிய பேச்சுகளால் எழும்பியுள்ள பிரச்சனைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. சீனாவிற்கு பயணம் செய்த இந்த மத்திய அமைச்சர் நிறைய செய்திகளைப் பேசியுள்ளார். அவற்றில் சீன நாட்டின் மூலதனங்களை, இந்தியாவில் கொண்டு வருவதற்கு தேவையற்ற எச்சரிக்கைகளையும், மிகைப்படுத்தப்பட்ட பாதுகாப்புகளையும் பேசி வருகின்ற உள்துறை அமைச்சகத்தை ஒரு கடி கடித்துள்ளார். இதை ஊடகங்கள் பிரபலமாக வெளியிட்ட பிற்பாடு அவற்றிற்கு பதில் சொல்லும் முகத்தோடு, தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் குறுக்கிட்டுள்ளார். இன்னொரு நாட்டு மண்ணில் இருந்து கொண்டு இந்திய நாட்டின் இன்னொரு அமைச்சகமான உள்துறை அமைச்சகம் பற்றி மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பேசியது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார். இதுவே எதிர்க்கட்சிகளுக்கும் சாதகமாகப் போய்விட்டது. பா.ஜ.க. உடனடியாக ஜெய்ராம் ரமேஷ் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்துவிட்டது.
உள்ளபடியே இந்தியசீன நட்புறவை மேலும் பேணுவதற்கும், வலுப்படுத்துவதற்கும் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், சீன நாட்டிற்குச் சென்றார். அப்போது ஆக்கப்பூர்வமான உறவுகளை சீனாவிடம் வைத்துக்கொள்ள இந்திய அரசு விரும்புவதாக கூறியிருந்தார். அதுமட்டுமின்றி நடந்து முடிந்த கோபன் ஹெகனின் பருவநிலை மாற்ற மாநாட்டில், ஒரு முடிவான தீர்மானம் எழாதபோது, அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தாங்கள் சொல்கின்ற நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என்று சீனாவை வற்புறுத்திய போது, இந்தியா சீனாவிற்கு ஆதரவாக நிலையெடுத்து சீனாவிற்கு உதவியது என்றும் ஜெய்ராம் ரமேஷ் திருவாய் மலர்ந்துள்ளார். உள்ளபடியே அந்த உலக மாநாட்டில் இந்த வேலையை செய்தவரும் ஜெய்ராம் ரமேஷ் தான்.
இந்தியாவின் தலைமை அமைச்சர் வழமையாக இந்த பருவநிலை மாற்றம் பற்றிய அனைத்து சந்திப்புகளிலும், இந்திய நாட்டின் நிலைப்பாட்டை கறாராக பின்பற்றி, கியோடா பிரகடனம் என்ற ஜி8 நாடுகள் உருவாக்கிய ஒப்பந்தத்தை அமுலாக்குவதற்காக குரல் கொடுப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மாறாக அந்த நேரத்தில் கடைசியாக அமெரிக்க அரசு எடுக்கின்ற நிலைப்பாட்டை நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரித்து விடுகின்ற நிலைப்பாடுகளையே எடுத்திருக்கிறார். ஒரு முறை ஜி8 நாடுகளின் உச்சி மாநாட்டுக்கு பார்வையாளராக சென்ற இந்திய தலைமை அமைச்சர், கியோடா பிரகடனத்தை அமுலாக்க முதல் குரல் கொடுத்தார். ஆனால் விவாதத்தில் இறுதி வரை அதே குரலில் நிற்காமல் நழுவி விட்டார். கியோடா பிரகடனம் என்பது உலகில் குளோரோ புளோரோ கார்பன் என்ற வாயுவை உருவாக்கிக் கொடுக்கின்ற பன்னாட்டு மூலதன கம்பெனிகளின் உற்பத்தியை கட்டுப்படுத்தும் நிபந்தனையைக் கொண்டது. கரியமில வாயுவை அதிகமான அளவு காற்றிலே கலக்கவிட்டு, அதன் மூலம் பிராணவாயு மண்டலத்தில் ஓட்டை விழுவதற்கான ஏற்பாட்டை செய்வது தான் இந்த குளோரோ புளோரோ கார்பன்.
இத்தகைய உற்பத்தியை அதிகமாக செய்கின்ற வேதியல் பொருட்களை பயன்பாட்டிற்கு இறக்கி விடுகின்ற நிறுவனங்கள் அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனங்கள். அவற்றில் உற்பத்தியை குறைக்கச் சொல்வதற்கு, அமெரிக்க அரசாங்கம் தயாராகயில்லை. அதனால் அமெரிக்க சார்பு சிந்தனைகளை தன்னுடைய இறுதி முடிவாக வழக்கமாக எடுத்து வரும் இந்திய தலைமை அமைச்சரும் அத்தகைய நிபந்தனைகளை அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனங்களின் மீது போடுவதை வலியுறுத்த தயாராகயில்லை. இதுதான் ஒவ்வொரு வேறுபாடுகளிலும், முரண்பாடுகளிலும் இந்திய மத்திய அமைச்சரவைக்குள் வெடித்து வெளியே வருகிறது.
அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனங்களுக்கு இந்தியாவில் மூலதனமிட எந்தவொரு தடங்கலோ, எச்சரிக்கையோ இல்லாத நிலையில், சீன நாட்டிற்கு மாத்திரம் அத்தகைய நிலைகள் கடைப்பிடிக்கப்படுகிறதே என்ற ஒப்பீடுதான் ஜெய்ராம் ரமேஷை இவ்வாறு பேசவைத்துள்ளது. உதாரணமாக அமெரிக்க பன்னாட்டு மூலதன கம்பெனியான யூனியன் கார்பைடு, எவரெடி செல்களை அதாவது பேட்டரிகளை உருவாக்குகிறது. அதேசமயம் மத்தியபிரதேச மாநிலத்தில் போபால் நகரில் 1984ம் ஆண்டு டிசம்பர் 3ம் நாள் நள்ளிரவில் இந்த யூனியன் கார்பைடு கம்பெனி நடத்தி வந்த, பூச்சிக்கொல்லி மருந்து உற்பத்தி ஆலையிலிருந்து, நச்சுவாயு கசிந்தது. அதனால் ஏற்பட்ட விபத்தில் இதுவரை 20ஆயிரம் பேர் மரணமடைந்ததும், ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டதும் அனைவருக்கும் தெரியும். ஆனால் இதுவரை போபால் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு, பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட வாரண் ஆண்டர்சன் என்ற யூனியன் கார்பைடு முதலாளியை, கைது செய்ய இந்திய உள்துறை அமைச்சகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அமெரிக்க குடிமகனாக இருக்கின்ற வாரண் ஆண்டர்சன், அமெரிக்காவில் பாதுகாப்பாக இருக்க முடிகிறது. அதேபோல யூனியன் கார்பைடு கம்பெனியிடமிருந்து, அந்த போபால் நச்சு ஆலையை விலைக்கு வாங்கியுள்ள இன்னொரு அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனமான டௌ கெமிக்கல்ஸ், இதுவரை நச்சுவாயு பாதிப்பிற்கு எந்த பொறுப்பையும் ஏற்க மறுக்கிறது. ஆனால் அந்த டௌ கம்பெனிக்கு இந்திய அரசு, சிவப்புக்கம்பளம் விரிக்கிறது. அமெரிக்க அதிபராக ஜார்ஜ் புஷ் இருக்கும் போது, அவரது இந்திய வருகை நேரத்தில், விருந்து கொடுத்த தலைமை அமைச்சர் மன்மோகன் அந்த விருந்தில், இந்த டௌ கெமிக்கல்சையும் அழைத்து விருந்தாளியாக ஆக்கினார். அமெரிக்க கம்பெனிகள் இந்திய மக்களின் பாதுகாப்பிற்கு, ஆபத்தை விளைவித்தாலும் அவர்களுக்கு இந்திய அரசு சிவப்புக்கம்பளம் விரிக்கிறது என்ற உண்மை இதன் மூலம் வெளிப்படுகிறது. அதேசமயம் அண்டை நாடான சீனாவிலிருந்து வருகின்ற கம்பெனிகளுக்கு, உள்துறை அமைச்சகம் முன்கூட்டியே எச்சரிக்கை என்ற பெயரில் தடங்கல்கள் விதிக்கிறது. இந்த உண்மையைத் தான் ஜெய்ராம் ரமேஷ் போட்டு உடைத்துவிட்டார்.
இந்திய அரசு தனது உள்நாட்டு பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதனால் தான், சீன நாட்டின் கம்பெனிகளுக்கு அப்படிப்பட்ட எச்சரிக்கை மணியை ஒலிக்கிறது என்றே நம்புவோம். அப்படியானால் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தான், இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரியதொரு ஆபத்தாக இருக்கிறது. அதில் சிக்கியுள்ள அஜ்மல் கசாபிற்கு தூக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்து, மகிழ்ச்சியடைந்த உள்துறை அமைச்சகம், அந்த தாக்குதலின் மூளையாக செயல்பட்ட அமெரிக்க குடிமக்களான ஹெட்லியையும், ராணாவையும் இந்தியாவிற்கு அழைத்து வந்து, விசாரிக்க எத்தகைய முன்முயற்சி எடுத்தது?
ஹெட்லியை அமெரிக்கா சென்று விசாரிப்பதற்கே இதுவரை இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி கொடுக்காத அமெரிக்காவை, நமது உள்துறை எச்சரிக்கை அணுகுமுறையில் வைக்கவில்லை. அதேபோல ராணா பற்றி எந்த கேள்வியையும் எழுப்புவதற்கு, இந்திய உள்துறை அமைச்சகம் இதுவரை வாயைத் திறக்கவில்லை. ஆகவே இந்தியாவின் பாதுகாப்பிற்காகத் தான், ப.சிதம்பரம் தலைமையிலான உள்துறை அமைச்சகம் சீன நாட்டின் முதலீடுகளை எச்சரிக்கையோடு தணிக்கைச் செய்கிறது என்ற வாதம் எடுபடப்போவதில்லை.
அமெரிக்காவிற்கு ஒரு அணுகுமுறை, அதேசமயம் சீனாவிற்கு வேறொரு அணுகுமுறை என்பது தான் இந்திய அரசிடம் இருக்கிறது என்பது இதிலிருந்து விளங்குகிறது. அமெரிக்க மூலதனம் மற்றும் ஐரோப்பிய மூலதனத்திற்கு போட்டியாக சீனாவிலிருந்து மூலதனம் இறக்குமதி செய்யப்படல் கூடாது என்று இந்திய உள்துறை அமைச்சகம் எண்ணுகிறதா என்று கேள்வி கேட்கத் தோன்றுகிறது. அதனால் தான் ஜெய்ராம் ரமேஷ் எழுப்பிய கேள்வியில் என்ன தவறு இருக்கிறது என்று நாமும் கேட்கலாம்.