Sunday, January 31, 2010

பயங்கரவாதிகள், அரசியல்வாதிகளாக ஆகிறார்களா?

இன்றைக்கு புதிய ஒரு விவாதம் தொடங்கியுள்ளது. இதுவரை இந்த உலகம் பயங்கரவாதிகள் என்று யார், யாரை பட்டியலிட்டு பிரபலப்படுத்தி வந்ததோ, அவர்கள் பயங்கரவாதிகளா அல்லது அவர்களை முத்திரை குத்தியவர்கள் பயங்கரவாதிகளா என்பது தான் இந்தப் புதிய விவாதம். திடீரென ஒலிபரப்பப்பட்ட ஒசாமா பின்லேடனின் ஒலி நாடாவிலிருந்து, இத்தகைய விவாதம் மறுபதிவு செய்யப்படுகிறது. அமெரிக்க அரசு நிர்வாகமும், மேற்கத்திய நாடுகளின் அரசுகளும், தங்கள் நாடுகளின் பெரும் பணக்கார ஆலை அதிபர்களை பாதுகாப்பதற்காக, பயங்கரவாதத்தில் ஈடுபடுகிறார்கள் என்ற கருத்தை, அமெரிக்க அறிவாளி பேராசிரியராக பெயர் பெற்ற நோம் சாம்ஸ்கி கூறிவந்தார். உலகிலிருக்கின்ற மொழிகள் அனைத்திற்கும், அடிப்படை கட்டமைப்பை விவரிக்கக் கூடிய மொழியியலுக்கு பெரும் கருத்தாளராக மதிக்கப்படுபவர் நோம் சாம்ஸ்கி. அவர் ஒரு மார்க்சியவாதியும் கூட. அந்த மாபெரும் நிபுணரின் கருத்துக்கள், எப்போதுமே உலக ஊடகங்களாலும், கருத்தாளர்களாலும் மறுக்கப்பட முடியாத ஒன்றாக இருக்கும்.
அப்படிப்பட்ட நோ சாம்ஸ்கியின் கருத்துக்களை இப்போது உலக பயங்கரவாதி என்று பிரபலமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, ஒசாமா பின்லேடன் எதிரொலித்துள்ளதால் தான், இத்தகைய விவாதம் எழுந்துள்ளது. அமெரிக்க அரச நிர்வாகம், ஒரு மாஃபியா கும்பல் போல செயல்படுகிறது என்பது சாம்ஸ்கியின் கருத்துரை. சாவு வியாபாரிகள் என்று அழைக்கப்படும், உலக ஆயுத வியாபாரிகள், அமெரிக்காவில் மிகுந்து காணப்படுகின்றனர். உலகம் முழுவதிலும் எங்கே போர் மூண்டாலும், போரில் ஈடுபடும் 2 நாடுகளுக்கு மத்தியில், பொதுவான ஆயுத வியாபாரத்தை, இத்தகைய சாவு வியாபாரிகள் நடத்துகிறார்கள்.
அதாவது அமெரிக்க நாட்டில் இருக்கின்ற ஆயுத உற்பத்தி செய்கின்ற பெரும் ஆலைகளின் அதிபர்கள் தான், உலகமெங்கிலும் இத்தகைய ஆயுத விற்பனையை நடத்துகின்ற சாவு வியாபாரிகள். இவர்களது நலன்களை காப்பாற்றுவது என்பது அமெரிக்க அரசை ஆள வருகின்ற அரசியல்வாதிகளுக்கு வழக்கமாக எழுகின்ற தலைவலி. இத்தகைய சாவு வியாபாரிகளின் நலன்களை உயர்த்திப் பிடிப்பதற்காகவே, அந்த நாட்டின் வெளிநாட்டுக் கொள்கைகள் உருவாக்கப்படும். இந்த இழிநிலை அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் மற்ற மேற்கத்திய நாடுகளிலும், தவிர்க்க முடியாமல் உருவாகி விடுகிறது. மேற்கண்ட நாடுகளில் முதலாளித்துவம் அதன் உச்சகட்டத்திற்குச் சென்று, சுதந்திரமான சந்தைப் பொருளாதாரம் அந்த நாட்டின் செல்வாக்கு மிக்க பொருளாதாரமாக மாறிப் போனதால் ஏற்படுகிறது. அதாவது உற்பத்திக்கான வழிகாட்டலோ, கட்டுப்பாடோ, திட்டமிடுதலோ, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படாமல், ஒவ்வொரு தனியார் முதலாளிகளாலும் தீர்மானிக்கப்படுகிறது. இவ்வாறு கட்டுப்பாடற்ற, கண்மூடித்தனமான சந்தையை உருவாக்குகின்ற உற்பத்திகள், அதற்கே உரித்தான எதிர்விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன.
மேற்கண்ட நிகழ்ச்சிகளை, அமெரிக்காவின் வியட்நாம் போரின் போது, நேரடியாகக் காண முடிந்தது. அமெரிக்க ஆயுத வியாபாரிகள், தங்களது பொருளை விற்பனை செய்வதில், கண்ணும், கருத்துமாக இருந்ததால், அதையொட்டி வியட்நாம் போர் நீண்டது. போரில் சிக்கிக் கொண்ட அமெரிக்க அரசும், ஆயுத உற்பத்தி செய்கின்ற ஆலை முதலாளிகளுக்கு அதிகமாக சலுகைகளை கொடுக்கும்படி நிர்பந்திக்கப்பட்டது. இதுவே உணவு உற்பத்தி செய்கின்ற அமெரிக்க முதலாளிகளுக்கும், நுகர்பொருள்களை உற்பத்திச் செய்கின்ற அமெரிக்க முதலாளிகளுக்கும், பிரச்சனைகளை உருவாக்கியது. அத்தகைய முதலாளிகள், அமெரிக்க ஆயுத உற்பத்தி முதலாளிகளுக்கு எதிராக சிந்திக்கத் தொடங்கினர். அதன் விளைவாக அவர்கள் ஊடகங்கள் மூலமும், இயக்கங்கள் மூலமும், வியட்நாம் போர் எதிர்ப்பு பரப்புரையை ஊக்கப்படுத்தினார்கள். அதுவே அமெரிக்க மக்களின் பொது அபிப்ராயமாக உருவானது.
சமீபத்தில் ஈராக் மீது அமெரிக்கா ஆக்கிரமிப்புப் போரை நடத்தியது. அதில் இங்கிலாந்து உட்பட போராதரவு நாடுகள் ஈடுபட்டன. ஈராக்கில் சதாம் உசேனால், பேரழிவு ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, காரணம் கூறி அந்த போர் நடத்தப்பட்டது. இப்போது நேற்றை அறிவிப்பில் இங்கிலாந்து முன்னாள் அதிபர் டோனி பிளேர் ஒரு உண்மையைக் கூறியுள்ளார். அதில் சதாம் உசேனை ஆட்சியிலிருந்து கீழே இறக்குவதற்காக, தாங்கள் தான் பேரழிவு ஆயுதம் ஈராக்கில் இருப்பதாக ஒரு பொய்யைக் கூறி, ஈராக் மீது போரை நடத்தினோம் என்று கூறியுள்ளார். அதற்கு எதிர்ப்பு வரும்போது, லட்சக்கணக்கான மக்கள் மரணமடைவதற்கு காரணமாகயிருந்த சதாம் உசேனை கீழே இறக்குவது எங்களுக்கு தேவைப்பட்டது என்றும் நியாயப்படுத்தியுள்ளார். தானே போருக்கு பொறுப்பு ஏற்பதாகவும் கூறியுள்ளார். ஈராக் மீது போர் தொடுக்க, பேரழிவு ஆயுதங்களை சதாம் உசேன் பதுக்கி வைத்திருப்பதாக கூறிய செய்தியை, அன்றைக்கு கண்டுபிடித்தவர்கள் என்று இங்கிலாந்து அரசின் உளவுத்துறையை கூறி வந்தார்கள். அதை அடிப்படையாகக் கொண்டே, தாம் போர் நடத்தியதாக அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷûம் கூறி வந்தார். இப்போது அந்த உளவுத்துறையின் கண்டுபிடிப்பு, பகிரங்கமாக வெளிவந்து விட்டது. இதைத்தான் கடைசியாக பையை விட்டு, பூனை வெளியே வந்து விட்டது என்று கூறுவார்கள். அமெரிக்க அரசும், இங்கிலாந்து அரசும் சேர்ந்து திட்டமிட்டு, ஒரு பொய்யைக் கூறி, ஒரு பெரும் போரை இன்னொரு நாட்டின் மீது நடத்த முடியும் என்பதற்கு இதை விட ஒரு சரியான உதாரணம் இருக்க முடியாது. இதில் ஒரு உண்மை வெளிப்பட்டுள்ளது. அதாவது சதாம் உசேனை பயங்கரவாதி என்று முத்திரைக் குத்திய, அமெரிக்காவும், இங்கிலாந்தும் ஒரு பொய்யை உருவாக்கி போர் தொடுத்தவர்கள் என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது. அதாவது உண்மையான பயங்கரவாதிகள் யார் என்பதை இதன் மூலம் உலகம் புரிந்துக் கொள்ள வேண்டும்.
அதேபோலத் தான் இப்போது வெளியாகியிருக்கும் ஒசாமா பின்லேடனின் அறிக்கையும் சுட்டிக்காட்டுகிறது. அமெரிக்காவிலுள்ள ஆயுத உற்பத்திச் செய்யும் முதலாளிகளுக்கு, எப்படி பாதுகாப்பும், சலுகையும் அளிக்கப்படுகிறதோ, அதுபோல பருவநிலை மாற்றத்திற்கு காரணமான கரியமில வாயு வெளியேற்றத்தை உற்பத்திச் செய்யும், அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனங்களுக்கு, இப்போது உள்ள அமெரிக்க அரசு பாதுகாப்பும், சலுகையும் அளித்து வருகிறது என்பது தான் பின்லேடனின் குற்றச்சாட்டு. மறுக்கப்பட முடியாத, உலகம் அறிந்த இந்த உண்மையை இப்போது பின்லேடன் சொல்லக் கேட்கிறோம்.
அதாவது அமெரிக்காவால் பயங்கரவாதி என்று முத்திரை குத்தப்பட்ட, பின்லேடன் இப்போது அரசியல்வாதியாக அவதாரம் எடுத்து, அமெரிக்க அரசை அம்பலப்படுத்துகிறார். இதேபோலத் தான் இலங்கைத் தீவில் சிங்கள பேரினவாத அரசாட்சியை நடத்தும் ராஜபக்சே, தமிழீழ விடுதலையை முன்னெடுத்த பிரபாகரனை, பயங்கரவாதி என்று முத்திரைக் குத்தி, போரை நடத்தினார். அதன் விளைவாக இன்றைக்கு உலகம் தழுவிய தமிழ் மக்கள், நாடு கடந்த தமிழீழ அரசை நிறுவும் அரசியல் போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டவர்கள் அரசியல்வாதிகளாக மாறுகிறார்கள். முத்திரை குத்தியவர்கள் உண்மையான பயங்கரவாதிகள் என்று அம்பலமாகிறார்கள். இதுதான் 2010ம் ஆண்டின் தொடக்கம் நமக்குக் கூறும் கருத்துரை.

Saturday, January 30, 2010

இந்திய வெளிவிவகாரக் கொள்கை, சிக்கிக் கொண்டது

லண்டன் சென்ற இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இப்போது புதிய சவால்களை எதிர்கொண்டுள்ளார். இங்கிலாந்து அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட, ஆப்கான் பற்றிய ஒரு அனைத்து நாட்டு மாநாடு இத்தகைய சவாலை நேரடியாக ஏற்படுத்தியுள்ளது. தாலிபன் பற்றிய நிலைப்பாட்டில், இந்திய அரசின் கொள்கைகளை அல்லது நிலைப்பாட்டை, உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் அந்தச் சவால். ஆப்கானிஸ்தான் பிரச்சனையில், சமீபகாலமாக இந்திய அரசின் தலையீடுகள் விபரீதமாக இருந்து வருகின்றன.
ஆப்கானிஸ்தான் பல ஆண்டுகளாக, உலக வல்லரசுகள் மத்தியில் கவனத்தை ஈர்த்த மற்றும் தலையீட்டை சம்பாதித்த ஒரு நாடாக இருந்து வருகிறது. ஆப்கானிஸ்தான் எண்ணைய் வளம் கொண்ட ஒரு நாடு. அதன் மீது வல்லரசு நாடுகளுக்கு எப்போதுமே ஒரு கண் இருக்கத்தான் செய்யும். ஆப்கானிஸ்தான் எல்லையோரம் இருக்கின்ற, ரஷ்ய நாட்டின் ஆக்கிரமிப்பும், ஊடுருவலும் ஒரு காலத்தில் பிரச்சனையைக் கிளப்பியது. தங்களது பொம்மையாட்சியை ரஷ்யா அப்போது ஆப்கானிஸ்தானில் நிறுவியது. அதற்கு எதிராக கிளம்பிய தாலிபன் படையை, அமெரிக்கா அப்போது ஊக்குவித்தது. பழங்குடி மக்கள் மத்தியில் ஆழமான அடித்தளத்தைக் கொண்ட, தாலிபான் படையை அமெரிக்காவின் ஆயுதங்களும், தளவாடங்களும் வலுப்படுத்தின. பின்லேடனை இதற்காகவே அமெரிக்கா அந்நேரம் ஊக்குவித்தது. ஆப்கானிஸ்தானின் எண்ணைய் வயல்கள் மீது அமெரிக்காவிற்கு அப்படிப்பட்ட அக்கறை இருந்தது. தங்களால் உருவாக்கப்பட்ட ஒரு பின்லேடன் தங்களுக்கே சவாலாக இன்று எழுந்துள்ளதை, அமெரிக்கா காண்கிறது. தங்கள் காரியத்தை முடிக்க உற்சாகப்படுத்தப்பட்ட ஒரு தாலிபன் இயக்கத்தை, தாங்களே அழிக்க வேண்டிய நிலைமை அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் பெரும் காடுகளையும், பெரிய, பெரிய மலைகளையும் கொண்ட ஒரு பரந்த நாடு. அங்கே மலைகளிலும், காடுகளிலும் வாழும் மனிதர்கள் பழங்குடி மக்கள். அந்த பழங்குடி மக்கள் மத்தியில், இந்த வல்லரசுகளின் போட்டியின் காரணமாக, ஏராளமான ஆயுதங்களும், ஆயுதப்பயிற்சிகளும் போய்ச் சேர்ந்துள்ளன. ஆப்கானிஸ்தானத்தில் மலைப்பகுதிகள் சில பாகிஸ்தானின் எல்லையோரத்தில் வருகின்றன. அங்கும் கூட வசித்து வருவது பழங்குடி மக்கள் தான். அதனால் தாலிபன் போராளிகள், தண்ணீரில் மீன் போல அந்த பழங்குடி மக்கள் மத்தியில் புழங்கி வருகின்றனர். 9/11 தாக்குதல், அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரிலும், பெண்டகன் ராணுவ தளத்திலும் நடத்தப்பட்ட பிற்பாடு, அமெரிக்க போர் விமானங்கள், ஆப்கானிஸ்தானின் மலைகளின் மீது குண்டு மழையைப் பொழியத் தொடங்கின. கார்பட் பாம்பிங் என்று அழைக்கப்பட்ட குண்டு மழைப் பொழிதல் அமெரிக்காவால் நடத்தப்பட்டது. அமெரிக்காவும், இங்கிலாந்தும் இணைந்து நேட்டோ நாடுகளின் படைகளையும், தங்களது ஆப்கான் தாக்குதலில் ஈடுபடுத்தினார்கள்.
அமெரிக்க அதிபராக ஒபாமா வந்தபிறகு, தாலிபன் மீதான அழித்தொழிப்பை துரிதப்படுத்த உத்தரவிட்டார். விரைந்து அழித்து விட்டு, தங்களது நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கூட, ஒபாமா அறிவித்தார். இந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக, இந்திய தலைமையமைச்சர் இந்தப் பிரச்சனையில் தலையிட்டார். நேட்டோ நாட்டு படைகள் அவசரப்பட்டு, ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறக் கூடாது என்றும், அதிகமான படைகளை ஆப்கானிஸ்தானுக்கு நேட்டோ நாடுகள் அனுப்ப வேண்டுமென்றும், மன்மோகன் சிங் அறிவித்தார். இது அமெரிக்காவின் மற்றும் இங்கிலாந்தின் வெளிவிவகாரக் கொள்கைகளுக்கு, இந்திய அரசு கொடுக்கின்ற ஆலோசனைப் போல இருந்தது. ஆயுதங்களுக்காகவும், ஆக்கிரமிப்புக்காவும் அதிகமான நிதியை செவழிக்கும் சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல், தங்கள் நாட்டு பொருளாதார வீழ்ச்சியைச் சரிக்கட்டும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ள, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு, இந்திய அரசின் ஆலோசனை சிக்கலை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
இந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருக்கின்ற நேட்டோ படைகளை மூன்று லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்ற கருத்தை அந்த இரு வல்லரசு நாடுகளும் எடுத்துள்ளன. சமீபத்தில் நடந்த தேர்தலில் கூட ஆப்கானிஸ்தானில் வெற்றி பெற்ற கார்சாய் என்ற அமெரிக்க சார்பு அதிபர், நியாயமற்ற முறையில் தேர்தலை சந்தித்தார் என்பது தான் பொதுவான கருத்து. இப்போது இங்கிலாந்தில் கூடிய 70க்கும் மேற்பட்ட நாடுகள், தாலிபன் பற்றி விரிவாக விவாதித்தன. ஆப்கானிஸ்தானின் மறுசீரமைப்பு பற்றிய விவாதம் ஆழமாக நடத்தப்பட்டது. சீனாவும் கூட அதற்கான ஆலோசனைகளை முன்வைத்தது. சீனாவின் ஈடுபாடு ஆப்கானிஸ்தான் விவகாரத்தில், முன்னை விட அதிகமாக ஆகத் தொடங்கியுள்ளது. பிராந்தித்தில் உள்ள நாடுகளின் ஒத்துழைப்பும், அனைத்து நாட்டு அளவிலான பங்களிப்பும், இந்த மாநாட்டின் நிறைவில் தொகுக்கப்பட்டது.
இதில் இந்திய அரசின் சார்பாக வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வைத்த முன் வைப்புகள், அனைத்து நாட்டு அரசுகளின் சார்பாக வைக்கப்பட்ட கருத்துக்களினால் மறுக்கப்பட்டது. தாலிபன்களின் தீவிரத் தன்மையுள்ளவர்கள் என்றும், மிதமான தன்மையுள்ளவர்கள் என்றும் பிரித்துப்பார்ப்பது இயலாது என்பது தான் இந்திய அரசின் வெளிவிவகார கொள்கையாக முன்வைக்கப்பட்டது. ஆனால் அமெரிக்க அதிபர் ஒபாமா ஏற்கனவே தனது நாட்டின் மக்கள் பிரதிநித்துவ சபைகளில் முன்வைத்திருந்த திட்டங்கள் வேறுபட்டு நின்றன. அதில் பெருவாரியான தாலிபன் போராளிகள், தங்கள் கொள்கைகளுக்காக போராடவில்லை என்றும், பணத்திற்காகத் தான் போராட இறங்கியுள்ளார்கள் என்றும் ஒரு மதிப்பீடு முன்வைக்கப்பட்டது. அதனால் அப்படிப்பட்ட தாலிபன் போராளிகளை, தங்கள் வசம் இழுப்பதற்கு போதுமான அளவில் நிதி ஒதுக்க வேண்டும் என்பதுதான் அந்த மதிப்பீடு. அதன்படி அமெரிக்க அரசும் நிதியை ஒதுக்கி, அதன் ஒரு பகுதியை பாகிஸ்தான் அரசின் மூலம் செலவழித்து வருகிறது. இத்தகைய செயல்பாடு கூட, இந்திய அரசால் செரிக்கப்படவில்லை.
இப்போது அனைத்து நாட்டு மாநாட்டில் இதே பிரச்சனை எழுப்பப்பட்டுள்ளது. அதை அங்கேயே இந்தியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மறுத்து பேசியிருக்கிறார். ஆனால் இந்தியாவின் கருத்து உலக நாடுகளால் ஏற்கப்படவில்லை. பூகோள ரீதியாக ஆப்கானிஸ்தான், ஒரு புறத்தில் இந்தியாவிற்கும், இன்னொரு புறத்தில் பாகிஸ்தானிற்கும், அதேபோல சீனாவிற்கும், ரஷ்யாவிற்கும், நேபாளத்திற்கும் சம்மந்தப்பட்ட அண்டை நாடாக அமைந்துள்ளது. அதனால் அந்த நாட்டில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளில், உலக வல்லரசுகள் ஈடுபடும் போது, கொள்கை அளவில் இந்திய அரசின் நிலைப்பாடு தனிமைப்படுத்தப்படுவது ஒரு சவாலான செய்தி தான்.
இப்படியாக இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை, ஆப்கானிஸ்தான் விஷயத்தில் பகிரங்கமான சவாலை, மேற்கூறிய மாநாட்டில் எழுப்பியுள்ளது. இந்திய அரசு தனது வெளிவிவகாரக் கொள்கைளை, நடுநிலையான நிலைப்பாட்டில் நின்று கொண்டு எடுத்த காலங்கள் உண்டு. அமெரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கும் மத்தியில் சம தூரத்தில் நின்று கொண்டு தனது நிலையை, ஒப்பீட்டளவில் சுதந்திரமாக வைத்திருந்த இந்திய அரசையும் நாம் கண்டிருக்கிறோம். நேருவின் காலத்திலும், இந்திரா காந்தியின் காலத்திலும் இப்படிப்பட்ட அரசியல் நிலைப்பாட்டை இந்தியா எடுத்ததுண்டு.
ஆனால் இப்போது இந்தியாவை ஆளுகின்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம், மன்மோகன் சிங் தலைமையில் எடுக்கின்ற நிலைப்பாடுகள், இந்த நாட்டின் மரியாதையைக் கேள்விக்குறியாக்கி வருகிறது. அதன் ஒரு பகிரங்கமான வெளிப்பாடு தான், இந்த அனைத்து நாட்டு மாநாட்டில், இந்திய அரசு தனிமைப்பட்டுள்ள நிலைப்பாடு. ஆட்சியாளர்கள் இதை உணர்கிறார்களோ இல்லையோ, பொதுமக்கள் உணர வேண்டிய தேவை இருக்கிறது.

Friday, January 29, 2010

தியாகி முத்துக்குமாரின் உயிராயுதம் பலன் தந்ததா?

ஓராண்டு ஆகிறது. ஒரு இளைஞர் சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள, மத்திய அரசின் அலுவலகமான சாஸ்திரிபவன் வளாகத்திற்குள், திடீரென தன் உடலுக்கு தானே தீவைத்துக் கொண்டார். சில முழக்கங்களை எழுப்பிக் கொண்டு, ஒரு ஆவணத்தையும் கூட, அந்த இளைஞர் பொதுமக்களுக்குக் கொடுத்தார். பற்றி எரிந்து கறுத்துப்போன அந்த இளைஞர் உடனடியாக மற்றவர்களை, மருத்துவமனை நோக்கி தூக்கிச்செல்லப்பட்டார். கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் எரிந்து போன அவரது உடல், அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அந்த இளைஞரின் பெயர் முத்துக்குமார். அப்போது இலங்கைத் தீவில், வன்னிப்பகுதியில் உச்சக்கட்டமான போர் நடந்து கொண்டிருந்தது. முல்லைத் தீவில் சிக்கியிருந்த மூன்றரை லட்சம் தமிழ் மக்கள் மீது, சிங்கள பேரினவாத ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தது. அங்கே போர் நிறுத்தம் உடனடியாக செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்கள் குறிப்பாகவும், மனித உரிமை ஆர்வலர்கள் பொதுவாகவும் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் இந்தியா, சீனா, பாகிஸ்தான் உட்பட 7 நாடுகளின் அரசப்படை தளபதிகள், மற்றும் உளவுத்துறையினரின் உதவியுடன், சிங்கள பேரினவாத அரசு தனது தமிழ் இன அழிப்புப் போரை நடத்திக் கொண்டிருந்தது. உலகமெங்கும் வாழும் தமிழர்களில், ஈழத்தை தாண்டி இந்தியாவில் தமிழ்நாட்டில் வாழ்கின்ற தமிழர்களைத் தான் எதிர்பார்த்து உலகமேயிருந்தது. ஆனால் இங்கோ தேர்தல் அரசியல் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. தேர்தல் அரசியலை ஒட்டி, இலங்கைத் தமிழர் நலனுக்கான அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அவையும் கூட, தேர்தல் அரசியலுக்கு சார்பானவை என்பதாக பொதுவாக விமர்சிக்கப்பட்டது. ஈழத்தமிழர் ஆதரவு மேடைகள், தேர்தல் கட்சிகளின் உள்ளூர் அரசியலையும் இணைத்தே பேசி வந்தன.
இத்தகைய சூழல் தமிழ்நாட்டில் இருக்கின்ற இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தின. தமிழ் இன உணர்வு இளைஞர்கள் மத்தியில் கொப்பளித்துக் கொண்டிருந்தது. அதற்கு வடிகால் என்ன என்ற கேள்வி எழும்பியது. சரியான வழியில் இளைஞர்களை இட்டுச் செல்ல, தமிழ் இன விடுதலை உணர்வுடன் ஒரு திசை வழி தேவைப்பட்டது. எங்கிருந்தாவது ஒரு ஒளிக்கீற்று வருமா என்ற எதிர்பார்ப்பு, இளைஞர்களிடம் இருந்தது. அந்த நேரத்தில் தான் தன்னை நெருப்பிட்டுக் கொண்டு, இளைஞர் முத்துக்குமார் தமிழர்களுக்காக ஒரு ஆவணத்தை அளித்து விட்டுச் சென்றார். அந்த ஆவணம் வானத்திலிருந்து வந்து விழுந்த நட்சத்திரம் போல மின்னியது.
விதியே, விதியே என் செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை என்பதாக தனது கடிதத்தை முத்துக்குமார் தொடங்கியிருந்தார். அதுவே ஒரு வரலாற்று ஆவணமாக மாறியது. முத்துக்குமாரின் தியாகத்தை அடுத்து, அதேபோல 19 தமிழர்கள் வரிசையாக நெருப்புக்கு தங்களை இரையாக்கிக் கொண்டார்கள். அனைவரும் வன்னிப்போரில் அழிக்கப்படும் தமிழ் இனத்தை காப்பதற்காகவே தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டவர்கள்.
உழைக்கும் தமிழ்மக்களே என்பதாக முத்துக்குமார் தனது கடிதத்தை தொடங்கியிருந்தார். சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது; அதை தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மவுனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம் என்று அந்த இளைஞர் எழுதியிருந்தார். அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள்; உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள்; உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? இப்படியாக அவர் எழுதியுள்ள கேள்விகள் ஒவ்வொன்றும், மரணத்தின் விளிம்பிலிருந்து எழுதப்பட்டதனால், உயிர் பெற்று எழுந்தன.
தேர்தல் அரசியலில் ஈடுபட்டுள்ள கட்சித் தலைவர்கள் நடத்திய போராட்டங்களைப் பற்றி அவர் எழுதியுள்ளார். தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலாயிருப்பான் என்ற முத்துக்குமாரின் வாக்கியம் பலரையும் குத்தியிருக்க வேண்டும். பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவர்களை வாழ்த்துகிறார். வழக்கறிஞர்களை பாராட்டுகிறார். ஈழத்தமிழர் பிரச்சினை என்றில்லை; காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டம் என்றாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் இந்த இரண்டு தரப்பும் தான் என்று எழுதுகிறார். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகர போரட்டங்களில் முன் கையெடுப்பவர்கள் மாணவர்கள் தான் என்றெழுதுகிறார்.
அடுத்து மருத்துவக்கல்லூரி மாணவர்களை, அவர்களது போராட்டத்தைப் பாராட்டுகிறார். எங்கள் தமிழருக்கு இன்னல் விளைத்தால் எரிமலையாகி வெடிப்போம் என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள் என்று எழுதுகிறார். தனது உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயல்வார்கள். அதற்கு விட்டு விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து, போராட்டத்தை கூர்மைப்படுத்துங்கள் என்று மாணவர்களுக்கு கேட்டுக் கொள்கிறார்.
முத்துக்குமாரின் அந்த வாசகங்கள் அப்படியே அன்று அமுலானது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல், அனைத்துக் கல்லூரி மாணவர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டது. அரசியல் தலைவர்களைக் கூட, அந்த மாணவர்கள் அப்போது ஏற்றுக் கொள்ளவில்லை. உடல் முத்துக்குமார் வாழ்ந்து வந்த கொளத்தூர் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கட்சிச் சார்பற்ற வணிகர் சங்க உதவியுடன் அது பார்வைக்கு வைக்கப்பட்டது. முதல் நாளிலேயே உடலை அடக்கம் செய்ய எடுத்துச் செல்ல வேண்டும் என்று சிலர் எண்ணினார்கள். அரசும், காவல்துறையும் அத்தகைய எண்ணத்தை பாராட்டினார்கள். ஆனால் இளைஞர்களும், மாணவர்களும், தாங்கள் தான் தீர்மானிப்பவர்கள் என்று குரலை எழுப்பினார்கள். அரசியல் தலைவர்கள் கூடிப் பேசி முடிவு செய்தாலும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களது குரல் தான் கொளத்தூரில் தீர்மானமாக ஆக்கப்பட்டது. அதையொட்டி 2 நாட்களும், முத்துக்குமாரின் விருப்பப்படியே அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இளைஞர்களின் ஆவேசக் குரல்கள் அங்கே எதிரொலித்துக் கொண்டிருந்தன. முத்துக்குமாரின் உணர்வுகள் தமிழகமெங்கும் இளைஞர்கள் மத்தியில் தமிழ் இன உணர்வை ஊட்டிவிடுவது மட்டுமின்றி, கட்சி அரசியலைத் தாண்டி சிந்திக்க வைத்தது. இதே உணர்வை முத்துக்குமாரின் உயிராயுதம், உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.
ஈழத்தில் எழுந்த தமிழ் தேசிய எழுச்சி அறவழிப்போராட்டமாக இருந்த காலத்தில், இனக்கலவரங்கள் பேரினவாத சக்திகளால் ஏற்படுத்தப்பட்டன. அதில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள், தவித்துப் போன தமிழர்கள் என்ற எண்ணிக்கை அவநம்பிக்கையை விதைத்தது. அதன் பிறகு எழுந்த தமிழின விடுதலைக்கான ஆயுதப்போராட்டம், இளைஞர்களுக்கு மட்டுமின்றி, தமிழர்கள் அனைவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. உச்சகட்டமாக பேரினவாத சக்திகளுக்கு ஆதரவாக, உலகெங்கிலுமுள்ள தமிழின விரோத சக்திகள் ஒன்று சேர்ந்ததால் ஒரு சரிவு ஏற்பட்டது. அதேபோல முத்துக்குமாரின் உயிர்த்தியாகம், அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒன்றல்ல என்றாலும், அது ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை உயிர்ப்போடு இருக்கிறது. அதனால் தான் இன்றைய நாள் இளைஞர்கள், இன உணர்வுக் கூர்வாளை தீட்டுவதற்காக, நினைவு நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இது முத்துக்குமாரின் சாதனையாகத் தான் கணக்கிடப்பட வேண்டும்.

Thursday, January 28, 2010

தமிழர் ஒற்றுமை சாத்தியமானது

இலங்கைத் தீவின் அதிபர் தேர்தல் முடிவடைந்துள்ளது. நடந்து முடிந்த இந்த தேர்தலே கூட, அவசர கெதியில் நடந்த குறைப்பிரசவம் தான். அதாவது இலங்கையில் நடந்து வந்த நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி முறையை, அரசத்தலைவர் ஆட்சி முறையாக அதாவது நிறைவேற்றும் அதிகாரமுள்ள குடியரசுத் தலைவர் என்ற ஆட்சி முறையாக மாற்றியமைத்தார்கள். அத்தகைய பொறுப்புக்கு மகிந்த ராஜபக்சே வந்திருந்தார். 6 ஆண்டுகளுக்குப் பிறகு தான், மீண்டும் இத்தகைய அதிபர் பதவிக்கான தேர்தலை நடத்த வேண்டும். நாளுக்கு நாள் சீர்கெட்டு வரும் இலங்கையின் பொருளதார சூழ்நிலையைக் கண்டு, மகிந்தா பீதியடைந்தார். அதிகாரம் முழுமையையும் தன் கையிலேயும், தன் குடும்பத்தினர் கையிலேயும் வைத்துக் கொண்டு, தமிழர்களுக்கெதிரான இனவாதப் போரை நடத்தி வந்தார். சிங்கள பேரினவாத சிந்தனைகளை செரித்துக் கொண்ட, ராஜபக்சே இலங்கைத் தீவின் சிறுபான்மை தமிழர்கள் கண்டு நிலைக்குலைந்தார். தமிழர்களின் வீரதீரமான போர்முறைகள், ராஜபக்சேயை தொடர்ந்து மிரட்டி வந்தன.
நாடாளுமன்றத்திற்கு இந்த ஆண்டு தேர்தல் வருகிறது. அந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, ராஜபக்சே சில வியூகங்களை வகுத்து வருகிறார். ஏற்கனவே எல்லா மாகாணங்களிலும், பிராந்திய கவுன்சில் தேர்தல்களை நடத்தி முடித்து விட்டார். அதில் பல்வேறு விதமான, தவறான செயல்களை கையாண்டு, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, பணத்தை இறைத்து விட்டு, ராஜபக்சே வெற்றி பெற்றார். அத்தகைய வெற்றித் திமிரில், நாடாளுமன்ற தேர்தல் வரும்போது, தங்கள் சொந்த உறவுகளை 50 இடங்களில் வெற்றி பெற வைக்க ஏற்பாடும் செய்து விட்டார்.
இந்த நேரத்தில் அதிபர் தேர்தல் நடத்தினால் தான், தான் வெற்றி பெறமுடியும் என்று ராஜபக்சே நம்பினார். அவரது நம்பிக்கைக்கு பதிலடி கொடுப்பது போல, பெரிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும், ராஜபக்சேயின் சென்ற முறை கூட்டாளியான ஜனதா விமுக்தி பெரமுனாவும், இந்த முறை மகிந்தாவிற்கு எதிரான ஒரு பொதுவேட்பாளராக, சரத்பொன்சேகாவை நிறுத்தினார்கள். சரத்பொன்சேகா ஏற்கனவே ராஜபக்சேயின் இன அழிப்புப் போருக்கு, தலைமை தளபதியாக செயல்பட்டவர். ஆகவே மகிந்தாவை எதிர்ப்பதற்கு இவர் தான் சரியான வேட்பாளர் என்பதாக எதிர்கட்சிகள் தேர்வு செய்தன. அதிபர் தேர்தலில் பொன்சேகா வெற்றி பெற்று விட்டால், நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டே பெரும்பான்மையாக வெற்றி பெற்று சாதித்து விடலாம் என்று ராஜபக்சே எண்ணினார். ஆனாலும் அதிபராக பொன்சேகா வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தையே கலைத்து விடுவாரோ என்று அஞ்சினார்.
ஆனால் பொன்சேகாவோ, அதிபர் ஆட்சிமுறையை ஒழித்து விட்டு, நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சிமுறையை கொண்டு வரப்போவதாக, தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்தார். அதனால் அதிகாரத்தை அதிகமாக தங்கள் கைகளில் குவித்து வைத்துக்கொண்டு மட்டுமே ஆள முடியும் என்ற நம்பிக்கையுள்ள ஒரு கும்பலுக்கும், பரவலாக்கப்பட்ட ஜனநாயக முறைப்படி அதிகாரத்தை செயல்படுத்தி ஆள முடியும் என்ற நம்பிக்கையுள்ள ஒரு கூட்டத்திற்கும் இடையே நடந்த தேர்தல் அது. அதிகாரக் குவிதலை கையில் வைத்திருக்கும் கூட்டம், பல்வேறு வழிகளில் மீண்டும் அதிகாரத்தை கையிலெடுத்துள்ளது.
ஜனநாயக நடைமுறைகளிலோ, கருத்துச் சுதந்தரத்திலோ, வெளிப்படைத் தன்மையிலோ நம்பிக்கையில்லாத ஒரு கூட்டம், ஒரு தேர்தலை நடத்தி அதன் மூலம் வெற்றி பெற்றிருக்கிறது என்று சொன்னால், அது எப்படிப்பட்ட வெற்றியாகயிருக்கும் என்பது கண்கூடு. அதனால் தான் படுதோல்வியடைந்த எதிர்வேட்பாளர் சரத்பொன்சேகாவையும், அவரது குடும்பத்தினரையும், அவர்களுடன் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களையும், அவர்கள் தங்கியிருக்கும் விடுதியிலேயே சிறை வைத்து, வெளிவரவிடாமல் தடுக்கக்கூடிய கொடுஞ்செயலுக்குப் பெயர் தான், தேர்தலின் மாபெரும் வெற்றி என்பதாக கொண்டாடப்படுகிறது. அவர்களை விடுதியில் சிறை வைத்திருக்கின்ற கஜபா படையணி என்ற ராணுவப் பிரிவு, கொடூரமான கொலைகளை செய்வதில் பெயர் பெற்றவர்கள். இந்தச் செய்தியை வெளியிடுவதற்கு துணியக்கூடிய, தனியார் தொலைக்காட்சி நிறுவனமான சிரசா தொலைக்காட்சியும், ராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பிரபல சிங்கள ஊடகவியலாளரான லசந்தாவை கொலை செய்வதற்கு முன்பு, இதே தனியார் தொலைக்காட்சியான சிரசா என்ற மகாராஜா குழுவைச் சேர்ந்த நிறுவனம், ராஜபக்சே ஆதரவாளர்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இத்தகைய வன்கொடுமையை, தேர்தல் வெற்றிக்குப் பிறகு செய்யக்கூடிய ஒரு ராஜபக்சேயை இந்த உலகம் புரிந்து கொள்ளுமா?
பல ஆண்டுகளுக்கு முன்னால் பர்மா என்ற மியான்மர் நாட்டில், சூ கியூ என்ற பெண் தலைவர் மக்களால் பெருவாரியான வாக்குகள் பெற்று, வெற்றி பெற்ற பின் அந்த நாட்டின் ராணுவ ஆட்சியாளர்கள், அவரை வீட்டுச்சிறையில் தள்ளினார்கள். அதை அண்டை நாடான இந்திய அரசு பார்த்துக் கொண்டு சும்மா இருந்து வருகிறது. அதேபோல இப்போது, ராஜபக்சே என்ற இலங்கை அதிபர், தான் ஒரு மகத்தான வெற்றியை அதிபர் தேர்தலில் பெற்ற பிற்பாடு, எதிர்த்துப் போட்டியிட்ட சரத்பொன்சேகாவை அவரது குடும்பத்துடன் வீட்டுக் காவல் என்பதாக வைத்திருப்பதை, அண்டை நாட்டு அரசு கேட்கப்போகிறதா? அதேநேரம் ஊடக சுதந்திரத்தை தடுக்கும் பொருட்டு, சிரசா என்ற தொலைக்காட்சியையும் சுற்றி வளைத்து நிற்கின்ற ராணுவத்தின் செயல்பாடுகளைப் பற்றி, இந்திய அரசு வாய்திறக்கப் போகிறதா?
தென்னிலங்கையில் உள்ள சிங்களர்களது பெரும்பான்மை வாக்குகளை, ராஜபக்சே குடும்பத்தினர் பெற்றிருக்கிறார்கள். ஆனால் தமிழர் வாக்குகளை பெறுவதில் வெற்றி பெறவில்லை. தமிழர்கள் இலங்கைத் தீவில், ஈழத்தமிழர்கள் என்றும், தமிழ் பேசும் முஸ்லிம்கள் என்றும், மலையகத் தமிழர்கள் என்றும் பிரிந்து கிடக்கிறார்கள். வெவ்வேறு விதமான வாழ்க்கை முறைகளில் அவர்கள், வேறுபட்ட பகுதிகளில் வாழ்கிறார்கள். நீண்ட காலமாக தங்களுக்குள் ஒன்றுப்பட்ட ஒரு கருத்துக்கு வராதவர்களாக இருந்து வருகிறார்கள். அப்படிப்பட்ட தமிழர்கள் அனைவருமே இந்த முறை, ராஜபக்சேயை நிராகரித்து வாக்களித்திருக்கிறார்கள். இது ஒரு வரலாற்றுப் பதிவு.
வடக்கிலும், கிழக்கிலும் வாழ்கின்ற ஈழத்தமிழர்கள் மற்றும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் மத்தியில் ஒரு நீண்ட கால பிளவை ஏற்படுத்துவதிலும், பரஸ்பர நம்பிக்கையற்ற தன்மையை ஏற்படுத்துவதிலும் இதுவரை சிங்களப் பேரினவாதம் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல மலையகத் தமிழர்களாக இருக்கின்ற இந்திய வம்சாவழியான தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், காப்பித் தோட்டத் தொழிலாளர்கள், ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் ஆகிய தமிழ் தோட்டத் தொழிலாளர்கள், தங்களை ஈழத்தமிழர்களுடனோ, தமிழ் பேசும் முஸ்லிம்களுடனோ அடையாளம் காட்டிக் கொண்டதில்லை.
இந்த முறை ராஜபக்சே குடும்பத்தின் தொடர் அடக்குமுறைகளால், ஜனநாயக மறுப்பு முறைகளால், இந்த 3 பிரிவு தமிழர்களும் அத்தகைய கொடுங்கோலனை நிராகரிப்பது எனவும், அதற்காகவே பொன்சேகாவிற்கு வாக்களிப்பது எனவும் தீர்மானித்து வாக்குகளை பதிவு செய்திருக்கிறார்கள். இதுதான் ஒரு அரசியல் திருப்பு முனையாக, தமிழர்கள் மத்தியில் நடந்தேறியிருக்கிறது. சிறுபான்மை இனமான தமிழினம், தனது எதிர்ப்பை ராஜபக்சேக்கு தெரிவித்து விட்டது.
அதுவே ராஜபக்சே கும்பலால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வு என்பது தங்களுக்கான சரியான அரசியல் தீர்வல்ல என்பதை தமிழ் மக்கள் நிரூபித்திருப்பதற்கு சான்று.

Wednesday, January 27, 2010

குடியரசு தலைவர் கூறும் பசுமைப்புரட்சி யாருக்காக?

இந்திய அரசு தனது 61வது குடியரசு தினத்திற்குள் நுழைந்துள்ளது. அதை விமர்சையாக கொண்டாடினார்கள். இந்திய தலைநகர் டெல்லியில், ஒரு மாபெரும் அணிவகுப்பு வழக்கம் போல் நடத்தப்பட்டது. ஒவ்வொரு மாநிலத் தலைநகர்களிலும் அதேபோல அணிவகுப்புகள் நடந்தன. அணிவகுப்பில் அலங்கரிக்கப்பட்ட ஊர்திகளை, அரசாங்க ஏற்பாட்டில் வரிசைப்படுத்தி, பொதுமக்களை பரவசமூட்டினர். முக்கியமாக டெல்லியில் நடந்த இந்த குடியரசு தினம், இந்திய அரசின் ராணுவ பலத்தை எடுத்துக் காட்டுவதாக இருந்தது என்பதுதான் பொதுவான மதிப்பீடு. குடியரசு என்பது எந்த வகையிலும், குடிமக்கள் அமைதியாகவும், நலமாகவும், வளமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்காக ஏற்படுத்தப்படுவது. அது ராணுவ தினம் அல்ல. ஆனாலும் கூட நமது நாட்டில் குடியரசின் பெயரிலேயே, ராணுவ பலம் முதன்மைப்படுத்தி காட்டப்படுகிறது. அதை ஆட்சியாளர்கள் நாட்டின் வல்லரசு தன்மையை காட்டுவதாகப் பெருமைப்படுகிறார்கள். பொதுமக்களும் கூட, அதேபோன்ற மனோபாவத்தில் பெரிதும் இருக்கிறார்கள்.
அநேகமாக சமீபத்திய ஆண்டுகளில், குடியரசு தினங்களை அரசின் கரங்களிலுள்ள ராணுவ பலத்தை காட்டும் தினமாக நடத்திக் காட்டுகிறார்கள். அதில் முப்படைகளில் புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கும் நவீன ரக ஏவுகணைகளையும், துப்பாக்கிகளையும், பீரங்கிகளையும், நீர்மூழ்கிக் கப்பல்களையும், குண்டுவீசும் விமானங்களையும், போர்க்கப்பல்களையும் காட்டி, இந்திய அரசின் படைபலத்தை முதன்மைப்படுத்துகிறார்கள். இது குடியரசு என்றால் என்ன என்பதற்கான பொருளையே மாற்றிப் புரியும்படி கொண்டுபோய் நிறுத்துகிறது.
போருக்கெதிராக, ஆயுத வியாபாரத்திற்கு எதிராக, நாடுகளை ஆக்கிரமிப்பதற்கு எதிராக, நாடுகளை காலணிகளாக மாற்றுவதற்கு எதிராக, தாங்கள் உருவாக்கிய சரக்குகளுக்கு சந்தைகளை தேடுவதற்கு எதிராக, மக்களது பங்களிப்புடன் கூடிய, மக்கள் நல்வாழ்வு அரசுதான் குடியரசு என்ற பொருளை, மாணவர்களுக்கு நாம் சொல்லிக் கொடுக்கின்றோம். அதேநேரத்தில் அதற்கான நாள் வரும்போது, நமது கொண்டாட்டமெல்லாம், போர்ப்படைக் கருவிகளை அலங்கரித்துக் காட்டி, அவற்றிற்கு ஆயுத பூசை போடுவது போல இருக்கிறது.
பாலஸ்தீனத்தை இஸ்ரேல், யூதவெறியுடன் ஆக்கிரமிப்புச் செலுத்திய போது, அத்தகைய போர்வெறியை எதிர்த்து பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவு கொடுத்தது தான் இந்திய அரசு. வியட்நாம் மீது அமெரிக்க படை தாக்குதல் தொடுத்த போது, அதைக் கண்டித்து வியட்நாம் விடுதலையை ஆதரித்தது இந்திய அரசு. ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்த போது, படையணியுடன் இணைந்து செல்வதற்கு ஆர்வப்பட்டு, எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஈராக் ஆக்கிரமிப்பிற்கு ஆதரவு கொடுக்காமல் இருந்தது இந்திய அரசு. அதே அரசு தனது ராணுவ பலத்தை பூட்டிக் கொண்டுள்ளதை, காட்டிப் பெருமைக் கொள்கிறது என்றால், இந்த மாற்றம் ஏன் வந்தது? எதற்காக வந்தது? எங்கிருந்து வந்தது?
இன்றைக்கு இலங்கையில் சிங்கள அரசு நடத்திய தமிழின அழிப்புப் போரை, முழுமையாக ஆதரித்து, அனுகூலம் செய்தது இந்திய அரசு தான் என்பது பகிரங்கமான உண்மை. இப்படிப்பட்ட அடக்குமுறை ஆட்சிக்கு ஆதரவாக செயல்பட, இந்திய அரசுக்கு ஏற்பட்ட மாற்றத்தின் காரணம் என்ன? குடியரசு என்பது ஒரு பாரம்பரிய இனத்தின் அழிப்புக்கு காரணமாக மாறினால், அது கொடிய அரசு என்பதாக அழைக்கப்படும் சூழ்நிலை வராதா? இத்தகைய ராணுவ மயமான கொள்கைகளால் இந்திய அரசு இப்போது தயார் செய்யப்படுகிறதா என்ற கேள்வி, மேற்கண்ட விவரிப்புகளிலிருந்து எழுகிறது. அப்படியானால் இந்திய குடிமக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை, நல்வாழ்வுத் திட்டங்களை செயல்படுத்தாமல், ராணுவ மயமாக்கல் என்ற கொள்கைக்குள் சிக்கிக் கொண்டு, இந்திய அரசு தவிக்கிறதா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நாட்டை ஆண்டுவந்த நிலை மாறி, ஏகபோக முதலாளிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆளுகின்ற ஒரு நிலைமைக்கு இந்திய அரசு தள்ளப்பட்டு விட்டதா? அத்தகைய ஏகபோகங்கள், பன்னாட்டு மூலதன நிறுவனங்களாக மாறி, சிறிய மற்றும் பின்தங்கிய நாடுகளில் தங்களது மூலதன விதைகளைப் போடுவதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கும் தரகர் வேலையை செய்யும் நிலைக்கு இந்த அரசு போய்விட்டதா? அதற்காக அருகாமை நாடுகளில் உள்ளே நுழைந்து, மூலதனம் இடுவதற்கு உதவிகரமாக இன அழிப்பு, ஜனநாயக மறுப்பு ஆகிய கொள்கைகளை பின்பற்றும் அரசாங்கங்களுக்கு ஆதரவு கரம் நீட்ட தொடங்கி விட்டதா? அதற்காக தனது ராணுவ பலத்தை அதிகரித்து, அண்டை நாடுகளை மிரட்டிப் பணிய வைக்க செய்கின்ற மனோபாவத்திற்கு சென்று விட்டதா? மேற்கண்ட கேள்விகளை எழுப்பி, பதில்களை தேட முனைந்தால், குடியரசிற்கு உண்மையான பொருளை தேட முடியும்.
காஷ்மீர் மாநிலம் இந்தியாவில் ஒரு பகுதி என்பது தான் நமக்கு அரசு தொடர்ந்து கொடுத்து வரும் செய்தி. ஆனால் நேற்றைய குடியரசு தினத்தை, தங்கள் மாநிலத்திற்கும், மக்களுக்கும் எதிரான ஒன்றாக கருதி, அதை புறக்கணிக்க வேண்டும் என ஒரு அறைகூவல் எழுந்தது. அறைகூவல் விடுத்தவர்கள் ஹுரியத் மாநாடு அமைப்பினர். இவர்கள் காஷ்மீரின் சுயாட்சியை வலியுறுத்தி வருபவர்கள். இவர்கள் காஷ்மீர் விடுதலைப் போராளிகளின் அரசியல் பிரதிநிதிகள் என்று இந்திய அரசு அவ்வப்போது குற்றம் சாட்டியுள்ளது. இந்த அமைப்பினர் கொடுத்த அறைகூவலை ஏற்று, காஷ்மீர் மாநிலத்தில் பரவலாக நேற்று கடைகள் அடைக்கப்பட்டன. போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டன. சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. இவையெல்லாம் இந்திய அரசின் தவறான கொள்கை அணுகுமுறைகளால் ஏற்படும் எதிர்ப்புகள்.
குடியரசு தினம் குடிமக்களின் தினம் என்ற பொருளில், நாட்டின் விவசாயப் பொருளாதாரம் பற்றி, நேற்றைய குடியரசு தலைவர் உரை குறிப்பிட்டிருந்தது. அதில் இரண்டாவது பசுமைப் புரட்சி விரைவில் மேற்கொள்ளப்படும் என்பதாக குறிப்பிட்டிருந்தது. இந்தியா ஒரு விவசாய நாடு. இந்திய மக்கள் பெரும்பாலும் விவசாய பொருளாதாரத்தை சார்ந்து நிற்பவர்கள். விவசாய பொருளாதாரத்தில் முக்கியமாக முன்னேற்றம் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது. அதில் ஈடுபடும் பெரும்பான்மையான இந்திய மக்கள், நிலமற்ற ஏழை விவசாயிகளாக இருக்கிறார்கள். இந்த முறை எப்போதும் போல் இல்லாமல், பெரிய அளவில் மழை பொய்த்து விட்டது. அதனால் வட இந்தியாவில் பல பகுதிகளில் வறட்சி தாண்டவமாடுகிறது. இதை உணர்ந்த இந்திய அரசு அத்தகைய விவசாயிகளுக்கு, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம், யானைப் பசிக்கு, சோளப் பொரி போடலாம் என்று திட்டமிட்டு, அதையே பெருமையாக அறிவித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நேரத்தில் தான் உணவு உற்பத்தியை பெருக்க வேண்டிய தேவையை அரசு உணர்ந்துள்ளது. அதற்கு ஏற்கனவே நமது அரசக்கு தெரிந்த குறுக்கு வழி மட்டும் தான் புரிந்திருக்கிறதா என்பது நமக்கு விளங்கவில்லை. ஏனென்றால் நேற்றைய குடியரசு தின விழாவில், குடியரசு தலைவரது உரையில், இரண்டாம் பசுமைப்புரட்சியை விரைவில் கொண்டு வருவோம் என அறிவித்துள்ளார். முதலாம் பசுமைப்புரட்சி எப்படி நடந்தது எனபது பிரதிபா பாட்டீலுக்கு தெரியுமா? அமெரிக்க வழிகாட்டலில் செயற்கை வீரிய விதைகள் கண்டுபிடிக்கப்பட்டு, செயற்கை ரசாயன உரங்கள் திணிக்கப்பட்டு, அந்நிய நாட்டு உழுபடைக் கருவிகள் இறக்குமதியாகி, இந்திய விவசாயிகளை திவாலா ஆக்கிய செய்தி அவருக்கு புரியுமா? விளை நிலங்களை இவற்றின் மூலம், நச்சாக்கியது அவருக்கு விளங்குமா? மரபணு மாற்று விதைகளை இறக்குமதி செய்வதற்காக, இரண்டாம் பசுமைப் புரட்சியா? மேற்கண்ட கேள்விகளை காய்ந்த வயிறுகளுக்கு சொந்தக்காரர்களான, இந்திய விவசாயிகள் கேட்கிறார்கள்.

Tuesday, January 26, 2010

இந்தி மொழியின் எந்தப் பிரிவு தேசிய மொழி?

இந்தியத் திருநாட்டிற்கு ஒரு தேசிய மொழி வேண்டும் என்பது சிலரது விருப்பம். நிர்வாக மொழியாக, ஒரே மொழி இருக்க வேண்டும் என்பது கூட, நிர்வாகிகளின் கருத்து. மொழியின் ஆதிக்கம், பண்பாட்டு ஆதிக்கத்தை அடையாளம் காட்டக்கூடியது. அப்படி இருக்கையில், இந்திய நாட்டிற்கு ஒரே மொழி நாடு தழுவிய அளவில் அதிகாரத்தில் இருக்கின்ற மொழியாக ஆக முடியுமா என்ற கேள்வி எழுகிறது. மொழி என்பது மக்களால் பேசப்படுவது. இந்திய நாடு பல்வேறு மொழிவாரி மாநிலங்களை கொண்டதாக இருக்கிறது. அப்படியானால் பல்வேறு மொழிகள் இங்கே புழக்கத்தில் இருக்கின்றன. அப்படி இருக்கும் பொழுது, அவற்றிற்கு மத்தியில் ஒரு மொழியை மட்டும் தேர்வு செய்து, அதுதான் நாடு முழுமைக்கும் அதிகாரத்தில் இருக்க வேண்டிய மொழி என்று சொன்னால், அது பொருத்தமாக இருக்குமா? பல்வேறு மொழிகள், பல்வேறு பண்பாடுகளுடன் இணைந்த அதிகாரத்தைக் கொண்டுள்ளன.
வாஜ்பாய் தலைமை அமைச்சராக இருக்கும் பொழுது, ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக உரையாற்றிய தி.மு.க. மத்திய அமைச்சர் முரசொலி மாறன், இந்தியா வேறுபட்ட பல்வேறு விதமான பண்பாடுகளையும், மொழிகளையும் கொண்ட நாடு என்பதை தனது உரையில் அழுத்தமாக முன்வைத்தார். அத்தகைய உரை பெரும் வரவேற்பைப் பெற்றது. வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க.தான் இந்தி மொழியை, தேசிய மொழியாக அறிவிக்கும் மனோபாவம் உள்ளவர்கள். அவர்களே கூட ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள, எதார்த்தங்களை அங்கீகரிக்கத் தொடங்கினார்கள்.
நேற்று குஜராத் உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில் இந்தியை தேசிய மொழியாக அங்கீகாரம் அளித்து, அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்தியை தேசிய மொழியாக்க ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அந்த நீதிமன்றம் எடுத்துரைத்துள்ளது. குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முகோபாத்யாயா தலைமையிலான பெஞ்ச் இத்தகைய கருத்தை கூறியுள்ளது. அந்த தலைமை நீதியரசர், இந்தி பேசும் பகுதியில் முன்னேறிய பிரிவிலிருந்து வந்திருப்பவர். ஆனாலும் கூட உண்மையை எடுத்து வைத்துள்ளார்.
1991ம் ஆண்டு அரசாங்க கணக்குப்படி இந்தியாவில் முக்கியமாக 4 மொழிக் குடும்பங்கள் அடையாளம்
காணப்பட்டுள்ளன. இன்டோஆரியன் மொழிக்குடும்பத்தில் 19 மொழிகள் இருக்கின்றன. அதை 7 கோடியே ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 596 பேர் பேசுகிறார்கள். திராவிட மொழிக்குடும்பத்தை சேர்ந்த 16 மொழிகளை, 18 கோடியே 86 லட்சம் பேர் பேசுகிறார்கள். ஆஸ்டிரோ ஏசியாடிக் குடும்பத்தை சேர்ந்த 14 மொழிகளை 94 லட்சத்து 62 ஆயிரம் பேர் பேசுகிறார்கள். திபெத்தோ பர்மன் குடும்பத்தைச் சேர்ந்த 63 மொழிகளை 71 லட்சத்து, 95ஆயிரம் பேர் பேசுகிறார்கள்.
இந்தி மொழியின் செல்வாக்கின் கீழ் 1981லும், 1991லும் பலியாகிவிட்டதாக பட்டியலிடப்பட்ட மொழிகள், 1961ம் ஆண்டின் புள்ளிவிவரப்படி இருந்த நிலைமை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1கோடியே 68 லட்சத்து 6 ஆயிரத்து 800 பேர் பீகார் மாநிலத்தவர்கள் பீகாரி மொழியில் பேசி வந்தனர். அதே மாநிலத்தில் போஜ்பூரி மொழியை 79 லட்சத்து 64ஆயிரத்து 750 பேர் பேசி வந்தனர். அஸ்ஸாமிலும், மத்திய பிரதேசத்திலும் வாழ்ந்து வரும், பீகாரி மொழி பேசிய 19,000 பேர் இந்த பலியிடப்பட்ட பட்டியலில் இருக்கிறார்கள்.
1கோடியே 49லட்சத்து33ஆயிரம் பேர் ராஜஸ்தானி மொழி பேசிவந்தவர்கள், இந்தி மொழி ஆதிக்கத்திற்கு கீழே கொண்டு வரப்பட்டுள்ளனர். ஹரௌத்தி மொழி பேசி வந்த 5லட்சத்து 61ஆயிரம் பேர், ராஜஸ்தான் மாநிலத்திலேயே, இந்தியின் செல்வாக்கின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். மால்வி மொழி பேசிய
11 லட்சத்து 42 ஆயிரம் பேர் மத்திய பிரதேச மாநிலத்தில், இந்திக்காரர்களாக மாற்றப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் 62 லட்சத்து 42 ஆயிரம் பேர் மார்வாரி மொழி பேசி வந்தனர். இப்போது இந்தி பேசுபவர்களாக கணக்கிடப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜஸ்தானி மொழி பேசி வந்த 8 லட்சம் பேர், மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10 லட்சம் பேர் குமௌனி மொழி பேசி வந்தனர். அவர்களும் கூட இந்திக்காரர்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் கார்வாலி மொழியை, உத்தரபிரதேச மாநிலத்தில் பேசி வந்த 8 லட்சம் பேர், இந்திக்காரர்களாக கணக்கிடப்பட்டுள்ளனர். மேற்கண்ட பட்டியலில் இருக்கின்ற பல மொழி பேசுபவர்களும், தங்கள் தாய்மொழியின் கல்வியும், புழக்கமும் நசுக்கப்பட்ட நிலையில், இந்தி திணிப்பால் பாதிக்கப்பட்டு இந்திக்காரர்களாக அடையாளம் காணும் அளவுக்கு, இந்தி பேசித் திரிகின்றனர்.
1991 கணக்குப்படி இந்தியாவில் 3,372 மொழிகள் உள்ளன. அதில் 1576 பட்டியலிடப் பட்டதாகவும், 1796 பட்டியிலிடப் படாததாகவும் இருக்கிறது. 8வது பட்டியல் என்று அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்படும், மொழிகள் 22 இருக்கின்றன. மேற்கண்ட மொழிகளில் பல மொழிகள், பல்வேறு மாநிலங்களில் மாநில ஆட்சிமொழியாக இருக்கின்றன. 1956ம் ஆண்டு மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிற்பாடு, மாநில மொழிகள் ஒவ்வொரு மாநிலத்திலும், மாநில நிர்வாக மொழிகளாக ஆக்கப்பட்டுள்ளன.
அப்படி இருக்கும் போது, 500 ஆண்டுகள் மட்டுமே வயது கொண்ட இந்தி மொழி, இந்திய நாட்டின் பாரம்பரிய மொழிகளை ஆதிக்கம் செலுத்தமுடியுமா? மேலே குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு வட்டார மொழிகள், தாங்கள் ஒரு புறம் வழக்கழிந்து போவதற்கும், அந்த இடத்தை இந்தி மொழி ஆக்கிரமித்து கொண்டதற்கும் என்ன காரணம் என்று புரியாமல், தங்கள் மொழி அடையாளத்தை இழந்தவர்களாக இருக்கிறார்கள்.
உதாரணமாக திராவிட மொழிக் குடும்பத்திலுள்ள, பாரம்பரிய மொழியான தமிழ் மொழியைத் தவிர, புதிதாக தங்களை அறுதியிட்டுக்கொண்ட, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் இந்த ஆதிக்கத்திற்கு கீழ்படிந்து விட்டன. அதாவது அந்த மொழிகளை பேசுகின்ற தென்னிந்திய மாநிலங்களில், கிராமப்புற மக்கள் வரை இந்தி மொழி ஊடுருவிச் சென்றுள்ளது. அந்த மாநிலங்களில் உள்ள நகரங்களில், சாதாரணமாக மக்கள் இந்தி மொழி தெரிந்தவர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். திராவிட மொழிக்குடும்பத்தில், தமிழ் மொழி பேசுகின்ற மாநிலத்தில் மட்டும்தான், இந்தியின் சாயல்கூட எட்டவில்லை. மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளின் வளர்ச்சி, சமஸ்கிருதத்தை தழுவியதாக மாறியுள்ளது. அத்தகைய விபரீதம் தமிழ் மொழிக்குள் மட்டும் ஈடேறவில்லை. ஆகவே தென்னிந்தியாவில் தமிழ்மொழி பேசும் மாநிலம் மட்டும், இந்தி மொழியின் செல்வாக்கிலிருந்து விடுபட்ட ஒரு தீவாக நிற்கிறது.
குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்பில் கூறியபடி, இந்தி மொழியை அரசாங்க மொழியாக மத்திய அரசு அனுமதித்தாலும், அது ஒரு தேசிய மொழி அல்ல என்ற கூற்று, சரியான நேரத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஒரு சரியான தீர்ப்பு.
அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் ஒரு சிலர், அவ்வாறு இந்தி மொழியை அரசாங்க மொழியாக அறிவிக்கும் போதும், தேவநாகிரி எழுத்துரு கொண்ட இந்திதான் அப்படிப்பட்ட அரசாங்க மொழி என்பதாக அறிவித்துள்ளார்கள். அதாவது இந்தி பேசுகின்ற மாநிலங்களில் கூட, மேற்குறிப்பிட்டுள்ள தேவநாகிரி எழுத்துரு கொண்ட இந்தி என்பது, நுண்ணிய சிறுபான்மை கொண்ட மக்களால் மட்டுமே புழங்கப்படும் ஒரு மொழி. ஆகவே அரசாங்க மொழியாக, பொருத்தமற்று அறிவிக்கப்பட்டுள்ள தேவநாகிரி எழுத்துரு கொண்ட இந்தியை எதிர்த்து, ஒரு பரந்துபட்ட ஐக்கிய முன்னணியைக் கட்டுவது இன்றைய தேவை. நேற்றைய மொழிப்போர் தியாகிகளின் நினைவு நாளை நாம் கடக்கும் போதே, தியாகிகளின் வழித்தடத்தில் இப்படி ஒரு சூளுரையை ஏற்பதே சிறந்தது

Monday, January 25, 2010

மொழி ஏகாதிபத்தியம், உலகம் தழுவியதா?

இன்று ஜனவரி 25ம் நாள். மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள். இதை வீரவணக்க நாளாகவும், தமிழர் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கடைபிடிக்கிறார்கள். மொழிப்போர் என்று அவர்கள் கூறுவது, இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தைத்தான். இத்தகைய மொழிப்பாதுகாப்பு போராட்டம், தமிழ்நாட்டில் மட்டும்தான் நிகழ்ந்துள்ளதா? ஆதிக்க மொழி எதிர்ப்பு என்பது இந்தியாவிற்கு மட்டும் சொந்தமானதா? உலகம் தழுவிய அளவில் பல்வேறு நாடுகளில், வரலாற்றின் பல்வேறு கட்டங்களில், இதுபோன்ற அந்நிய மொழியின் திணிப்பை அல்லது ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட்டங்கள் நடந்துள்ளன. அவை அந்த வட்டாரத்தின் அல்லது நாட்டின் அல்லது இனத்தின் மொழியை பாதுகாப்பதற்காக நடத்தப்பட்டன. இதை மொழி ஏகாதிபத்தியம் என்று அழைக்கிறார்கள். மொழியியல் ஏகாதிபத்தியம் என்று கூறுவோரும் உண்டு.
அடிப்படையில் மரபு ரீதியாக இருந்த அதிகாரம் கைமாறும்போது, அது ராணுவ அதிகாரமாகவோ அல்லது இன்றைய காலத்தில் பொருளாதார அதிகாரமாகவோ இருக்கும் போது, ஆதிக்கம் செலுத்தும் பண்பாடு தன்னுடைய மொழியுடன் இணைந்து தனது புதிய அதிகாரத்தை செலுத்துகிறது. 1990ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, மொழியியல் வல்லுநர்கள் மத்தியில், மொழியியல் ஏகாதிபத்தியம் என்ற சொற்றொடர் பிரபலமாகிவந்தது. குறிப்பாக ராபர்ட் பிலிப்சன் எழுதிய மொழியியல் ஏகாதிபத்தியம் என்ற புத்தகம் 1992ல் வெளியானது. அதில் நாஜிகளால் பிரிட்டிஷ் கவுன்சிலை எதிர்த்த விமர்சனங்களும், உலக முதலாளித்துவம் மற்றும் உலக ஆதிக்கத்திற்காக, ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டது என்ற சோவியத்தின் ஆய்வும் குறிப்பிடப்பட்டுள்ளது. மொழியியல் ஏகாதிபத்தியம் என்பது, பொதுவாக பண்பாட்டு ஏகாதிபத்தியம் என்ற அம்சத்தில் பார்க்கப்படுகிறது. பிலிப்சன் தனது புத்தகத்தில், ஆங்கில மொழியியல் ஏகாதிபத்தியம் என்பதை, நிர்வாகத்தை தக்க வைத்துக்கொள்ள மற்றும் ஆங்கிலத்திற்கும் பிற மொழிகளுக்கும் மத்தியில் இருக்கும் கட்டமைப்பு ரீதியான, பண்பாட்டு சமன் இன்மை என்பதை மறுகட்டமைப்பு செய்வதற்காகவும் பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிடுகிறார். ஆங்கில ஆதிக்கம் என்பது, காலனி ஆதிக்க காலத்தில், இந்தியா, பாகிஸ்தான், உகாண்டா, ஜிம்பாபாவே ஆகிய நாடுகளின் மீது செலுத்தப்பட்டது என்பதாக தெரிகிறது. அதே சமயம் ஐரோப்பா கண்டத்தின் மீதும், ஆங்கில ஆதிக்கம் செல்வாக்கு செலுத்தியது. அதைக்கூட நவீன காலனிய தன்மைத்தது என்று கூறுவார்கள். ஆங்கிலம் ஒற்றைமொழி ஆதிக்கமாக இருந்தது என்பதுதான் அத்தகைய ஆய்வின் கண்டுபிடிப்பு.
தூர கிழக்கு நாடுகளில், ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில், தேசிய மொழிகள் ஆங்கிலத்தால் மாற்றப்பட்டன அல்லது ஆதிக்க பண்பாட்டு மொழியால் விளிம்பிற்கு தள்ளப்பட்டன. பிரான்ஸ் நாட்டில், பிரஞ்சு மொழியின் ஆர்வலர்கள், ஆங்கில திணிப்பை எதிர்த்து போராடினார்கள். நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு, பிரஞ்சு மொழியோ அல்லது ஆங்கிலோ நார்மன் என்ற மொழியோ நிர்வாக மொழியாக இருந்தது. லத்தீன் மொழி திருச்சபைகளின் மொழியாக இருந்தது. பல மத்திய ஐரோப்பிய நாடுகளில், ஆங்கிலத்திற்கு பதிலாக ஜெர்மன் மொழியையே பயன்படுத்த விரும்புகிறார்கள். ஜெர்மன் மொழியே வணிகத்திற்கும், நிர்வாகத்திற்கும் பயன்படுகிறது. பிரான்ஸ் நாட்டில் பிரீடன், பாஸ்க், கோர்சிகன் ஆகிய மொழிகள் தனிமைப்படுத்தப்பட்டு, பிரெஞ்சு மொழியே ஆதிக்கம் செலுத்தியது. அதுபோலத்தான் இந்தியாவிலும் இந்தி மொழித்திணிப்பு என்பது, திராவிட மொழிக் குடும்பங்களால் எதிர்க்கப்பட்டது. அதாவது கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், துளு ஆகிய மொழிகளால் எதிர்க்கப்பட்டது. மேற்கு வங்கத்திலும் கூட, வங்காள மொழி பேசுவோர் இந்தி ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது 1937ம் ஆண்டையொட்டி தொடங்கியது. இந்தியே இந்தியாவின் ஒரே அதிகாரபூர்வ மொழி என்றும், இந்தி மொழி பேசாத மாநிலங்களின் பாடத்திட்டத்தில் கட்டாயப் படமாக்கும் மத்திய அரசின் முயற்சியும் தமிழ்நாட்டில் எதிர்க்கப்பட்டது. 1937ம் ஆண்டு சென்னை மாகாணம் என்பது தற்போதைய தமிழ்நாட்டையும், தெற்கு ஆந்திரா பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருந்தது. அப்போது முதலமைச்சராக இருந்த ராஜாஜி, பள்ளிகளில் இந்தி கட்டாயச் சட்டத்தை இயற்றினார். இதை எதிர்த்து மறைமலையடிகள், பாவேந்தர் பாரதிதாசன், கி.ஆ.பெ.விஸ்வநாதன் ஆகியோர் திருச்சியில், முதலாம் இந்தி எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார்கள். சென்னையில் நீதிகட்சியை சேர்ந்த பன்னீர் செல்வம், ஈ.வெ.ரா. பெரியார் ஆகியோர் தலைமையில் போராட்டங்களும், பேரணிகளும் நடத்தப்பட்டன. மாணவர்களின் கல்வி சாலை புறக்கணிப்பு வழக்கறிஞர்களின் நீதிமன்ற புறக்கணிப்பு என்று போராட்டம் பரவியது. 1939ம் ஆண்டு பேரணியில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்ட, நடராசனும் தாழமுத்துவும் காவலில் மரணமடைந்தார்கள்.
இந்திக்குத் தமிழ்நாட்டில் ஆதிக்கமாம் நீங்கள் எல்லோரும் வாருங்கள் நாட்டினரே!! செந்தமிழக்குத் தீமை வந்த பின்னும் இந்த தேகம் இருந்தொரு இலாபமுண்டோ? மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை என்ற இந்த வீரவரிப்பாட்டு திக்கெட்டும் பட்டு மோதி முற்றுகையைத் தொடங்கி வைத்தது. இப்பாட்டு மண்ணையும் விண்ணையும் தொட்டுத் தொட்டு போர்களக்கூடத்துக்குக் கட்டியம் கூறியது. சாவதிலும் தமிழ் படித்து சாகவேண்டும் எந்தன் சாம்பலது தமிழ் மணந்து வீசவேண்டும் என்று இளைஞர்கள் கிளர்ந்ததெழுந்தனர்.
ராஜாஜி வீட்டு முன் உண்ணா நோன்பு மறியல் தொடங்கப்பட்டது. ஈ.வெ.ரா. அறிஞர் அண்ணா, ஈழத்து அடிகள் பாலசுப்ரமணியம், டி.வி. நாதன், சி.டி.நாயகம் போன்ற தலைவர்களும், சிறை சென்றனர். பெரியார் வெளியிலிருந்து தலைமையேற்று தனது அடுத்த கட்ட தலைவர்களையும், சிறைக்கு அனுப்பினார்.
எதிர்ப்பை கண்டு அஞ்சிய அரசு, இந்தி திணிப்பு சட்டத்தை கைவிட்டது.
20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மத்திய அரசால் இந்தி திணிப்பு கொண்டு வரப்பட்டது. 1957ல் தி.மு.க. இந்தி எதிர்ப்பு மாநாடு ஒன்றை நடத்தியது. அதில் இந்தி திணிப்பை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது. 1957ம் ஆண்டு அக்டோபர் 15ம் நாள், இந்தி எதிர்ப்பு நாளாக பெரும் திரளான மக்களை திரட்டி, போராடியது. அந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கிய, தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான மு.கருணாநிதி, மொழி போராட்டம் எங்களது பண்பாட்டை பாதுகாப்பதற்காக நடத்தப்படுகிறது என்றார். இது எங்கள் மக்களின் தன்மானம் என்று கூறினார்.
இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் எடுப்பு சாப்பாடு என்றும், ஆங்கிலம் என்பது சமைக்கப்பட்ட உணவு என்றும், தமிழ் என்பது தாய் தருகின்ற உணவு என்றும் அப்போது மு.கருணாநிதி கூறினார். 1963ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடந்தது. மாநாட்டில் தீர்மானித்தப்படி, சட்டஎரிப்பு போராட்டம் நடத்தப்பட்டது. நவம்பர் 16ம் நாள் அண்ணாவும், 19ம் நாள் கருணாநிதியும் கைதானார்கள். நவம்பர் 25ல் உயர்நீதிமன்ற ஆணையால் விடுதலையானார்கள்.
சின்னச்சாமி, அரங்கநாதன் என்று தொடங்கி, இந்தி எதிர்ப்புக்காக தாய்மொழி தமிழை பாதுகாப்பதற்காக, தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்ட வீரத்தமிழர்கள் நமது நெஞ்சமெல்லாம் நிறைந்து நிற்கிறார்கள். அவர்களது நினைவில் தாய்மொழி காக்க சூளுரை ஏற்பதுதான், இந்த நாளின் சிறப்பு. ஆங்கிலேய அரசுக்கு எதிரான இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில், பங்கேற்ற தமிழர்களைக் காட்டிலும், இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற தமிழர்களின் எண்ணிக்கை அதிகம். ஆகவே இந்தி எதிர்ப்பு, ஒரு மக்கள் இயக்கம் என்பது கண்கூடு. இந்திய துணைக்கண்டத்தில், இந்தி மொழி நுழையாத தீவாக, தமிழ்நாடு மட்டுமே இன்னமும் இருக்கிறது. அகில இந்திய அளவில், வட இந்தியாவில் நடத்தப்படுகின்ற ஒவ்வொரு கூட்டத்திலும், இன்று வரை இந்தி பேசும் பகுதிகளிலிருந்து வருகின்ற பிரதிநிதிகள், இந்தி மட்டுமே இந்திய மொழி என்பதாக சண்டையிடுகிறார்கள். இதை எதிர்த்து போராடும் முதல் குரல், தமிழர்கள் மத்தியிலிருந்துதான் இன்று வரை எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து தாய்மொழி காக்க, பிற மொழி திணிப்பை எதிர்ப்போம். ஒரு நாள் வெல்வோம்.

Sunday, January 24, 2010

ஈழத்தமிழர் நிலை நேற்றும் இன்றும்

இலங்கைத்தீவு ஒரு பெரும் தேர்தலை சந்தித்து நிற்கிறது. அரசத்தலைவர் பதவிக்கான தேர்தல் இது. தமிழர்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறார்களோ, அவர்களே வெற்றி பெறுவார்கள் எனவும் கூறப்படுகிறது. தமிழர் வாக்குகளை ஒட்டுமொத்தமாகப் பெற முயற்சிப்பவர் சிலர். தமிழர் வாக்குகளைப் பிளவுபடுத்தி, பெற முயற்சிப்பவர்கள் பலர். தமிழர் வாக்குகள் இவ்வாறாக முக்கியத்துவம் பெற்றுவருகிறது. தமிழர்கள் சிறுபான்மையானவர்கள் என்று அறிவிக்கப்படுகிறது. தமிழர்கள் இலங்கைத் தீவில், எப்போதுமே சிறுபான்மையானவர்கள் தானா? தமிழர்களின் வரலாறு என்ன? மக்கள் தொகையில் தமிழர்கள் குறைக்கப்பட்டுள்ளனரா? இதுபோன்ற கேள்விகள் இந்த நேரத்தில் எழுகின்றன.
6000 ஆண்டுகளாக தமிழர்கள் இந்தப் பிராந்தியத்தில் வாழ்ந்து வருகிறார்கள். ஆரியர்களின் ஆக்கிரமிப்புக் காலத்திற்கு, காலம் பற்றிய இந்த வாதம் இட்டுச்செல்கிறது. தமிழர்கள், திராவிட இனக் குடும்பத்தில் வருகிறார்கள். ஆரியர்கள் ஆக்கிரமிப்பு வந்தபோது திராவிடர்கள் தென்புலத்திற்கு தள்ளப்பட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. இன்றைய இந்தியாவில் உள்ள தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகியவை, இத்தகைய திராவிடப் பண்பாட்டைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். மன்னராட்சிக் காலத்தில், சேர, சோழ, பாண்டியர் ஆட்சிகளாக தமிழர்களின் ஆட்சிமுறை இருந்தது. அப்போது இலங்கைத் தீவிலும் இவர்களது ஆட்சி, தொடர்பு, வணிகம், இவர்களுக்குள் நடந்த போர் ஆகியவை எதிரொலித்தன.
தமிழர்கள் கடல் வாணிபம் செய்பவர்களாக இருந்திருக்கிறார்கள். நாவாய் என்ற கப்பலைப் பயன்படுத்தி, கடல் வணிகம் செய்ததாக வரலாற்றில் எழுதுகிறார்கள். கடாரங்கொண்டான் போன்ற சொற்றொடர்கள் மூலம், இங்கிருந்து சேர, சோழ, பாண்டிய மன்னர்களின், கடல்பயணம், மற்ற நாடுகளுக்கு வணிகம் செய்யப்போவதும் அதையொட்டி நாடுகள் மீது செல்வாக்கும் அதிகாரமும் செலுத்துவதும், வழக்கமாக இருந்தது. அகஸ்தஸ் காலத்தில் ரோமுடனேயே, வணிகம் செய்துள்ளனர். இந்திய பெருங்கடலின் கரைகளில் உள்ள பல நிலங்களுக்கும், கப்பல்களை தமிழர்கள் அனுப்பியுள்ளனர். அந்தக் கப்பல்கள் மூலம் வணிகர்களும், அறிஞர்களும், வாழ்க்கை முறைகளும், அந்தப் பூமிகளுக்கு பயணம் செய்தன. பண்பாடு பரவியது. இன்றைய இலங்கைத் தீவை அன்று தமிழர்கள் ஈழம் என்றே அழைத்தார்கள். அதனால்தான் இன்றும் தமிழர் வாழும் பகுதியைத் தமிழீழம் என்று அழைக்கிறார்கள். தமிழ் சங்பகாலம் என்பது, கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு முதல் நூற்றாண்டிலிருந்து, கிறிஸ்து பிறந்த பின் இரண்டாவது நூற்றாண்டு வரை என கணிக்கப்படுகிறது. அப்போதுதான் சேர, சோழ, பாண்டியர் ஆட்சிகள் நடைபெற்றதாக அறிகிறோம். நான்காவது நூற்றாண்டின் கடைசிப்பாதியில், பல்லவர்கள் ஆண்டதாக அறியமுடிகிறது. அவர்கள் பெரிய கோயில்களைக் கட்டியுள்ளனர். அதுவே அடுத்த 400 ஆண்டுகளிலும் செல்வாக்கு செலுத்துகின்றன. காஞ்சியைத் தலைநகராக கொண்டு அவர்கள் தமிழ்நாட்டில் பெரும்பகுதியில் ஆட்சி நடத்தியிருக்கிறார்கள். அவர்களது ஆட்சி ஈழத்து நிலத்திலும் நீண்டுள்ளது மகேந்திர வர்மன், நரசிம்ம வர்மன் போன்ற மன்னர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் அபராஜிதா கடைசி பல்லவ மன்னர் எனத் தெரிகிறது. 9வது நூற்றாண்டில் அவரை ஆதித்ய சோழன் தோற்கடித்ததாகவும் சரித்திரம் கூறுகிறது. 9வது நூற்றாண்டில், சோழ சாம்ராஜ்யம் தென்னிந்தியாவில் மாபெரும் சக்தியாக விளங்கியது. மத்திய இந்தியப் பகுதிகளான ஒரிசா, மேற்கு வங்கத்தின் சில பகுதிகள் வரை சோழ சாம்ராஜ்யம் விரிவடைந்தது. முதலாம் ராஜ ராஜ சோழர், கிழக்கு சாளுக்கிய அரசை வென்றார். பாண்டிய அரசைத் தோற்கடித்து, ஈழத்தின் பெரும்பகுதியைக் கைப்பற்றினார். அதையும் தாண்டி அந்தமான், நிகோபார், லட்சத்தீவு, சுமத்திரா, ஜாவா, மலேயா, பெகு தீவு, ஆகியவற்றை தங்களது கப்பல்படை இம்மூலம் போராடி, வென்றார். ஆட்சி புரிந்தார். பீகார் மற்றும் வங்காளத்தில் மன்னராக இருந்த மகிபாலாவையும் வென்றார். அத்தகைய வெற்றிகளைக் கொண்டாட, அவர் கட்டியது தான் கங்கை கொண்ட சோழபுரம். ஆனால், 13ம் நூற்றாண்டில், சோழர்கள் வென்றதையெல்லாம் இழக்கத் தொடங்கினர். அப்போது 14ம் நூற்றாண்டில், பாண்டியர்கள் மீண்டும் எழுந்தனர்.பிறகு அவர்கள் முஸ்லிம் அரசர்களால் தோற்கடிக்கப்ட்டனர். 1316ம் ஆண்டில் கில்ஜி படையெடுத்து, சோழ, பாண்டிய அரசாட்சிகளைப் பிடித்தார். 14வது நூற்றாண்டில் இந்து மன்னர்கள் விஜயநகரம் சாம்ராஜ்யத்தை நிறுவினர். நாயக்கர்கள் ஆட்சி மதுரையிலும், தஞ்சையிலும் பிரபலமாக நிறுவப்பட்டது. தமிழர்கள் பூமி, தெலுங்கு நாயக்கர்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. 1609ல் புலிக்காட் பகுதி டச்சுக்காரர்கள் கைக்கு வந்தது. பிறகு, ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய கம்பெனி மூலம் உள்ளே வந்தார்கள். வந்தவாசியில் 1760ல், பிரஞ்சுகாரர்களை போராடி ஆங்கிலேயர் வென்றனர். தரங்கம்பாடியில், டச்சுக்காரர்களை போராடி விரட்டினர். பிரஞ்சுக்காரர்கள், பாண்டிச்சேரிக்குள் முடக்கப்பட்டனர். மைசூர் மன்னருடன் 4 போர்களை ஆங்கிலேயர் நடத்தினர். ஹைதர் அலி, அவரது மகன் திப்பு சுல்தான் ஆகியோரை வென்று, தென்னிந்தியா முழுமையையும் ஆங்கிலேயர் கையிலெடுத்தனர்.
ஈழத்தில் அதாவது இலங்கையில் 1881ல் தமிழர்கள் 61.35%ம், சிங்களர்கள் 4.5%ம், முஸ்லிம்கள் 30.65%ம் இருந்தனர்.
1891ல் தமிழர்கள் 61.55%ம், முஸ்லிம்கள் 30.75%ம் சிங்களர்கள் 4.75%ம் இருந்தனர். 1901ல் தமிழர்கள் 57.5%ம் முஸ்லீம்கள் 33.15%ம் சிங்களர்கள் 4.7%ம் இருந்தனர். 1911ல் தமிழர்கள் 56.2%ம்,முஸ்லிம்கள் 36.0%ம் சிங்களர்கள் 3.75%ம் இருந்தனர். 1921ல் தமிழர்கள் 53.5%ம், முஸ்லிம்கள் 39.4%ம், சிங்களர்கள் 4.5%ம் இருந்தனர். 1946 முதல் சிங்களர்களின் மக்கள் தொகை கூடியது. தமிழர்களின் மற்றும் முஸ்லிம்களின் மக்கள் தொகை குறைந்தது. 1946ஆம் ஆண்டு சிங்களர்கள் 4%ம், 1953ல் 13%ம், 1963ல் 20.1%ம், 1971ல் 20%ம், 1981ல் 24.9% என கூடினார்கள். ஆனால் தமிழர்கள் முறையே 52.3%; 47.3%; 45.1%; 43.9%; 41.9% என குறைந்தனர். அதே போல, முஸ்லிம்கள் எண்ணிக்கையும் 1946 முதல் குறைந்தது. முறையே 39.1%; 38.1.%; 34.0%; 34.6% கடைசியாக 1981ல் 32.2% ஆக குறைந்தனர்.
11வது நூற்றாண்டில், சோழ சாம்ராஜ்யத்தில் இலங்கையில் தமிழர்கள் ராணுவத்திலும், நிர்வாகத்திலும் வலுவாக இருந்தனர். கிறிஸ்து பிறந்த பின் 1215ல் தமிழர்கள் அதிகமாக குடியேறினர். வடக்கு மாகாணமான யாழ்ப்பாணத்தை தலைநகராகக் கொண்டு, தமிழ் மன்னர்கள் ஆண்டு வந்தனர். சங்கிலி என்ற தமிழ் மன்னனின் ஆட்சி பிரபலமாக இருந்தது. அதைத்தான் “ஆண்ட பரம்பரை, மீண்டுமொருமுறை ஆள நினைப்பதில் என்ன குறை’ என்ற பாடலாக கவிஞர் காசி அனந்தன் பாடினார். இப்படி ஆண்ட ஒரு தமிழினம் அங்கே வீழ்ந்து கிடப்பதன் வரலாற்றைக் காணவேண்டும்.

1981க்குப்பின் தொடர்ந்து தமிழர்களுடடைய எண்ணிக்கை குறைந்து வருவதும், சிங்களர்களுடைய எண்ணிக்கை கூடிவருவதும், இலங்கைத்தீவின் வரலாறாக இருக்கிறது. மலையக தமிழர்களாக தோட்டங்களில் வேலை செய்வதற்காக, ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், தமிழ்நாட்டில் இருந்து 10 லட்சம் தமிழர்கள் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். அவர்கள் அனைவருக்கும், இந்திய வம்சாவழியினர் என்ற காரணத்திற்காக, இலங்கை குடியுரிமை மறுக்கப்பட்டது. மறுக்கப்பட்ட நிலையில், வாக்குரிமையும் இல்லாமல் இருந்தது. அன்றைய சூழ்நிலையில் வடக்கில் இருந்து வந்த, ஈழத்தமிழர் தலைவர்கள், சிங்களர்களால் இணக்கமாக்கப்பட்டு, மலையக தமிழர்களுக்கு குடியுரிமை மறுப்பதில், ஒத்த கருத்திற்கு கொண்டுவரப்பட்டார்கள். இந்த பிரச்சனை பெரிய அளவில், இந்தியத் துணைக்கண்டத்தில் விவாதத்திற்கு வந்த பிறகு, இலங்கைத் தீவில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கையை, குறைக்கும் நோக்கத்தில் கணிசமான தோட்டத்தொழிலாளர்கள், இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டார்கள். அதற்காக ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதற்கு சாஸ்திரிசிறிமாவோ பண்டாரநாயகா ஒப்பந்தம் என்று பெயர். அதன் மூலமாக தாயகம் திரும்பிய, லட்சக்கணக்கான தமிழர்கள், தமிழ்நாட்டில் அங்கங்கே குடியேற்றப்பட்டனர். இன்று வரை நிலையான வாழ்க்கையை அவர்களால் எட்டமுடியவில்லை. இலங்கைத்தீவில் தென்னிலங்கையில் வாழ்ந்து வரும் அந்த மலையக தமிழர்கள், எண்ணிக்கை குறைந்த நிலையில் இன்று தங்களது மெலிந்த அளவிலான பிரதிநிதிகளை, இலங்கை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வருகிறார்கள்.

வடக்கிலும், கிழக்கிலும் வாழுகின்ற தமிழர்களும், இந்துக்கள், கிறித்துவர்கள், முஸ்லீம்கள் என்ற வேறுபட்ட மத நம்பிக்கைகளுடன் வாழ்ந்து வருகிறார்கள். அதில் குறிப்பாக தமிழ் பேசும் முஸ்லிம்களை, பிரித்து நிறுத்துவதில் சிங்கள பேரினவாத சக்திகள் வெற்றி பெற்றிருக்கறிர்கள். நடைபெற இருக்கின்ற, அரசுத் தலைவர் தேர்தலிலும் தமிழர்கள் மத்தியிலான இந்தப் பிளவுகள், சிங்கள ஆட்சியாளர்களுக்கு பயன்படுமா? அல்லது ஈழத்தமிழர்களும், தமிழ் பேசும் முஸ்லீம்களும், மலையக தமிழர்களும் இணைந்து ஒரே நோக்கோடு வாக்களிப்பார்களா? மேற்படி கேள்வி பதில் கிடைக்காமல் நிற்கிறது.

பழங்காலத்திலும் சரி, அறவழிப்போராட்ட காலத்திலும் சரி, ஆயுதப்போராட்ட காலத்திலும் சரி, இப்போது போருக்குப் பிறகு தேர்தல் களத்திலும் சரி, தமிழர்களின் ஒற்றுமை எட்டப்படாதா? என்ற ஏக்கம் உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

Saturday, January 23, 2010

நேதாஜி வழிச்செல்லும் தமிழர் படை.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என்ற பெயர் இந்திய சுதந்திர வரலாற்றில் போர்க்குணமிக்க மரியாதையைப் பெற்றிருக்கிறது. 1897ம் ஆண்டு ஜனவரி 23ம் நாள் சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார். 1945ம் ஆண்டு ஆகஸ்டு 18ம் நாள் அவரது மறைவு நாளாக கருதப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக நடத்தப்பட்ட இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம், பல்வேறு அமைப்புகளால் பல்வேறு தலைவர்களின் தலைமையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்து வந்தது. அதில் அகிம்சா வழியில் காந்தியார் தலைமையில் இருந்த இயக்கம் பிரபலமானது போலவே, சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவம் என்ற இயக்கமும் பிரபலமான ஒன்று. ஆயுதந்தாங்கிய ஆங்கிலேயருடைய ராணுவத்திற்கு எதிராக, போராட ஆயுதந்தாங்கிய இந்திய ராணுவம் ஒன்றை போஸ் உருவாக்கினார். அதற்குப் பெயர் தான் இந்திய தேசிய ராணுவம்.
அதில் இந்தியாவின் போர் கைதிகளையும், சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலுள்ள தோட்டத் தொழிலாளர்களையும் சேர்த்தார். அவருடைய இளமைக் காலத்தில், பள்ளிப் படிப்பை இன்றைக்கு ஒரிசாவிலிருக்கின்ற கட்டாக் நகரிலும், கொல்கத்தாவின் மாநில கல்லூரியிலும், ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியிலும் கழித்தார். உயர்கல்வியை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தார். போஸ் இந்திய சிவில் சர்வீஸ் பணியிலிருந்து ராஜினாமா செய்து விட்டு, சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் ஈடுபட்டார். இந்திய தேசிய காங்கிரசில் ஒரு கட்டத்தில் தலைவராக இருந்தார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான ஒரு பிரபல தேர்தல் நடந்த போது, மகாத்மா காந்தி தன்னுடைய ஆதரவாளராக பட்டாபி சீத்தாரமையாவை போட்டியிட வைத்தார். அவருக்கு எதிராக அந்த தலைமைப் பதவிக்கு சுபாஸ் சந்திரபோஸ் போட்டியிட்டார். அந்தப் போட்டியில் போஸ் வென்றார். பட்டாபி சீத்தாராமையாவின் தோல்வி தன்னுடைய தோல்வி என்று மகாத்மா காந்தி அறிவித்தது, காங்கிரஸ் கட்சியை உலுக்கியது. காந்தியாரின் ஆதரவு கிடைக்காத நிலையில், போஸ் தான் வெற்றிப் பெற்ற கட்சித் தலைவர் பதவியை பணிக்குழுவும் வற்புறுத்த ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறிய சுபாஷ் சந்திரபோஸ், ஆகில இந்திய பார்வர்டு பிளாக் என்ற புதிய கட்சியை உருவாக்கினார்.
2ம் உலகப்போரின் காலத்தில், ஆங்கிலேய நாட்டுடன், அமெரிக்காவும் சேர்ந்து கொண்டது. அவர்களுக்கு எதிராக ஜெர்மன் நாடும், ஜப்பான் நாடும் இணைந்து கொண்டு போரில் ஈடுபட்டது. உலகப்போர் என்பது பல்வேறு பின்தங்கிய, வளராத நாடுகளை தங்களது காலணிகளாக ஆக்கிக் கொள்வதற்காக, ஏகாதிபத்திய நாடுகள் தங்களுக்குள் அடித்துக் கொள்ளும் போட்டி. அதாவது நிதி மூலதனத்தை குவித்து வைத்திருக்கின்ற, முதலாளித்துவ நாடுகள் அவற்றின் உச்சகட்டமாக, ஏகாதிபத்தியங்களாக மாறி காலனிகளை கையில் வைத்துக்கொள்ள நடத்துகின்ற போட்டி தான் உலகப்போராக வெடிக்கிறது.
அந்த முறையில் உலகின் பல்வேறு மூலை முடுக்குகளையெல்லாம் ஆண்டு கொண்டிருந்த ஆங்கிலேய ஏகாதிபத்தியம், தனது பிடிக்குள் இருக்கின்ற காலனி நாடுகளின் விடுதலைப் போராட்டத்தால், பலவீனமாகி வருகின்ற ஒரு சூழல் இருந்தது. இத்தகைய சூழலில் இங்கிலாந்து நாடு, வளர்ந்து வரும் முதலாளித்துவ நாடான அமெரிக்காவுடன் இணைந்து கொண்டு, உலகைப் பங்கு போடுகின்ற, பங்கு போட்ட நாடுகளை தக்க வைக்கின்ற ஒரு முயற்சியில் ஈடுபட்டது. அவர்களுக்கெதிராக அதே காலனி நாடுகளை கைப்பற்றுகின்ற ஒரு முயற்சியில், ஜெர்மனியும், ஜப்பானும் ஈடுபட்டன. அதன் விளைவே இந்த இரண்டு முகாம்களுக்குள் நேரடியான போர் மூண்டது.
ஆங்கிலேய ஆதிக்கத்தால் அடிமை நுகத்தடியை தாங்கிக் கொண்டிருக்கும் இந்திய மக்கள், அதை எதிர்த்துப் போராட பல்வேறு வழிகளை திட்டமிடுகிறார்கள். அவற்றில் முக்கியமானது காங்கிரஸ் கட்சியை உருவாக்கியது. பல்வேறு சாதிகள், மதங்கள், மொழிகள் ஆகியவற்றின் ஒட்டுமொத்த ஐக்கிய முன்னணியாக காங்கிரஸ் கட்சி எழுந்தது. அதில் முன்னணி தலைவராக வந்த சுபாஷ் போஸை, காந்தி நாட்டுப் பற்றாளர்களுக்குள் ஒரு நாட்டுப்பற்றாளர் என்பதாக பாராட்டியிருக்கிறார். போஸும் காந்தியை தேசத்தந்தை என்பதாக பாராட்டியிருக்கிறார். ஆனால் ஆங்கிலேயனுடைய ராணுவத்தை எதிர்த்து போராடி விரட்டியடிக்க வேண்டும் என்று போஸ் எண்ணினார். அன்றைய 2ம் உலகப்போரில் ஆங்கிலேய ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த ஹிட்லர் தலைமையிலான ஜெர்மன் நாட்டின் உதவியை நாடுவது தவறல்ல என்று போஸ் கருதினார்.
அதையொட்டியே போஸுடைய அரசியல் பாதை முன்சென்றது. 2ம் உலகப்போர் தொடக்கக் காலத்திலேயே போஸ் ஜெர்மன் சென்றார். ஜெர்மானியர்கள் தொடங்கிய ஆசாத் ஹிந்த் வானொலி என்ற நிலையத்தில், இந்தியாவிற்கான சிறப்புப் பிரிவில் போஸ் இணைந்தார். பெர்னிலில் சுதந்திர இந்திய மையத்தை அப்போது உருவாக்கினார். போரில் வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்த ஆங்கிலேய படைக்காக போராட வந்த, இந்திய வீரர்கள், ஜெர்மானியரிடம் போர் கைதிகளாக பிடிபட்டிருந்தார்கள். அப்படிப்பட்ட 4,500 இந்திய ராணுவ வீரர்களை சேர்த்து, இந்திய படைப்பிரிவு ஒன்றை போஸ் நிறுவினார். ஹிட்லர் மற்றும் போஸ் தலைமையிலான வாபன் எஸ்.எஸ். உடன் ஆசாத் ஹிந்த் படை இணைக்கப்பட்டது. இந்த படை இந்திய சுதந்திரத்திற்காக போராட உருவாக்கப்பட்டது.
ஜெர்மனுடன் சேர்ந்து செயல்பட்டாலும், சுபாஷ் போஸ் யூதர்களை ஹிட்லர் கையாள்வதை விமர்சித்திருக்கிறார். அதேபோல ஜெர்மன் நாட்டில் ஜனநாயக நிறுவனங்களை ஒடுக்குவதையும், சோவியத் யூனியன் மீது ஹிட்லர் ஆக்ரமிப்பு போர் நடத்தியதையும் போஸ் விமர்சித்திருக்கிறார். இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு போதுமான ஆதரவு ஹிட்லரிடம் கிடைக்காத நிலையில், சுபாஷ் போஸ் ஜப்பானுக்கு பயணமானார்.
ஜப்பானில் 85,000 வீரர்களைக் கொண்ட ஒரு சீரானப் படையை, இந்திய தேசிய ராணுவமாக உருவாக்கினார். ராணி லட்சுமிபாய் பெயர் கொண்ட தனியான பெண்கள் ராணுவத்தை, போஸ் உருவாக்கினார். ஆசியாவிலேயே முதன் முறையாக இப்படிப்பட்ட ஒரு பெண்கள் படை உருவாக்கப்பட்டது. ராணி லட்சுமிபாய் 1857ம் ஆண்டு இந்திய முதல் சுதந்திரப் போரில் வீரச்சாவை முத்தமிட்டவர். சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கம் என்பதாக ஒரு புரட்சிகர அமைப்பை உருவாக்கி, அதில் தனியான ஆணையம், நீதிமன்றம், சட்டம் ஆகியவற்றை ஏற்படுத்தி, இந்திய தேசிய ராணுவத்தின் படை பலத்துடன், போஸ் இயங்கினார். அந்த அரசாங்கம் அன்று ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி, கனடா, தேசிய சீனா, சீயாம், பர்மா, மஞ்சுகுவோ, பிலிப்பைன்ஸ் ஆகிய 9 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டது. சிங்கப்பூரில் உருவாக்கப்பட்ட அதன் பிரகடனம், ஐரிஷ் அரசால் பாராட்டப்பட்டது. ஜப்பான் ராணுவத்துடன், போஸ் ராணுவமும், பர்மீய தேசிய ராணுவமும் இணைந்து சில வெற்றிகளை போரில் எட்டினர். அந்தமான் நிகோபார் தீவுகளில், போஸ் அரசாங்கமும், இந்திய தேசிய ராணுவமும் உருவாக்கப்பட்டது. ஹிரோசிமா, நாகசாகி அணுகுண்டு தாக்குதல்கள், அவர்களை பின்வாங்க வைத்தது.
எதிரியின் எதிரி தான் நண்பன் என்ற பொருளில் சுபாஷ் போஸின் படைப் பயணம் தொடர்ந்தது. அந்தத் தருணத்தில் நேதாஜி என்ற பட்டப்பெயர் அவருக்கு பிரபலமானது. மேற்கு வங்கத்தின் சுபாஷ் போஸுக்குப் பின்னால் அணிதிரண்ட மக்கள் போல, அடுத்து தமிழ்நாட்டில், முத்துராமலிங்க தேவர் தலைமையில், நேதாஜியின் கட்சியும், ஐ.என்.ஏ. படையும் உருவானது. மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் அது தமிழர்கள் மத்தியில் எதிரொலித்தது. தைவானுக்கு மேல் விமானத்தில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 முதல் 20க்குள் நேதாஜி மரணமடைந்ததாக நம்பப்படுகிறது. அதுவும் கூட பிற்காலத்தில் மறுக்கப்பட்டு, விவாதம் இன்னமும் தொடர்கிறது.
ஈழத்தமிழர் விடுதலைப் போரில், முப்படைகளை ஏற்படுத்தி, தமிழீழ விடுதலைப் பகுதியை உருவாக்கி, தமிழீழ அரசாங்கத்தை பல்வேறு துறைகளுடன் நடத்திக் காட்டிய, தமிழீழ தேசிய தலைவர் வே.பிரபாகரன், சிறுவயதிலிருந்தே, நேதாஜி சுபாஷ் போஸின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டார் என்பது முக்கியச் செய்தி. நேதாஜியின் தாக்கம் இன்று வரை ஈழத்தில், தமிழர்கள் வாழும் பூமிகளில் நிறைந்திருக்கிறது என்பது பெருமைக்குரிய ஒரு செய்தி.

Friday, January 22, 2010

அண்ணா பல்கலையை சுற்றும் போபால் நச்சு ஆவி.

1984ம் ஆண்டு டிசம்பர் 3ம் நாள் நள்ளிரவில், மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள போபால் நகரில், அமெரிக்க பன்னாட்டு மூலதன கம்பெனியான, யூனியன் கார்பைடு என்ற பூச்சிக்கொல்லி மருந்து உற்பத்தி ஆலையில், நச்சு வாயு வெளிப்பட்டது. ஒரே நேரத்தில் நகரத்திலிருந்த 8,000 பேர் மரணமடைந்தனர். 25 ஆண்டுகளில் 20,000 பேர் அதன் பாதிப்பால் உயிர்பலி ஆனார்கள். இன்று வரை 1,00,000த்திற்கும் மேற்பட்டோர் குற்றுயிரும், குலையுயிருமாக தவித்து வருகிறார்கள். அது உலகத்திலேயே பெரியதொரு தொழிற்சாலை விபத்து என்பதாக வருணிக்கப்படுகிறது.
மேற்கண்ட விபத்தை காரணம் காட்டி, சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள், உலகம் முழுவதிலும் ஆபத்தான தொழிற்சாலைகள் பற்றியும், ரசயான ஆலைகளின் சுற்றுச்சூழல் தாக்கங்களைப் பற்றியும், காற்றை மாசுபடுத்தல், நீரை கெடுத்தல், நிலத்தை பழுதாக்கல் போன்ற மாசுபடுத்தல்களை பட்டியலிட்டு, பரப்புரை செய்து வருகிறார்கள். இவ்வாறாக போபால் நச்சு வாயு விபத்து என்பது ஒரு பாதகமான முன்னுதாரணமாக, மானுடத்திற்கே திகழ்ந்து வருகிறது. அதை போபால் நீதிக்கான அனைத்து நாட்டு பிரச்சாரக் குழு, எல்லா இடங்களிலும் எடுத்துச் சொல்லி வருகிறது.
அப்படி எடுத்துச் செல்லும்போது, போபாலுக்கான மாணவர்கள் என்ற பெயரில் அமெரிக்காவிலிருந்தும், ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் இத்தகைய சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஒரு பெரும் இயக்கமாக, கல்விச் சாலைகளிலிருந்தே நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள், அரசாங்கங்கள் தங்களையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உணர்வு கொண்டவர்களாக, மாற்றியமைத்துக் கொண்டு வருகின்ற ஒரு சூழ்நிலையில், நாம் அதிகமான விழிப்புணர்வை பெறுகிறோம். ஐ.நா. சபையிலிருந்து சுற்றுச்சூழல் மாசுபடுத்தல் சம்மந்தமாக, ஒரு அக்கறையான பார்வை பரப்பப்பட்டு, அதையொட்டி ஒரு கோபன் ஹெகன் மாநாடே நடத்தப்பட்டிருக்கும் போது, நாம் மேலும் அதிகமான கவனத்திற்குள்ளாகிறோம். அத்தகைய சூழலில் நமது தமிழ்நாட்டில் உள்ள அரசாங்கத்தின் நேரடியான வழிகாட்டலுக்குள் அமைந்துள்ள, அண்ணா பல்கலைகழகத்தில் இதுபோன்ற அக்கறை இல்லாமலிருப்பது அதிர்ச்சியை தருகிறது.
போபாலில் பேரழிவை ஏற்படுத்திய யூனியன் கார்பைடு என்ற பன்னாட்டு நிறுவனத்தின் முதலாளியான, குற்றஞ்சாட்டப்பட்ட வாரன் ஆண்டர்சன், இன்று வரை இந்திய நீதிமன்றத்தின் பிடிவாரண்டை மதித்து, இந்தியா வந்து ஆஜராகவில்லை. அப்படிப்பட்ட இந்திய எதிர்ப்பு செயல்பாட்டை கடைபிடிக்கும் ஒரு அமெரிக்க பெரு முதலாளியின் நிறுவனம், தனது போபால் நச்சு கம்பெனியை, இன்னொரு அமெரிக்க பெரு முதலாளி நிறுவனமான டௌ கம்பெனி வசம் ஒப்படைத்து விட்டது. அதை வாங்கிய டௌ கம்பெனி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த விதமான நட்ட ஈடும் கொடுக்க தயாராயில்லை. போபால் நச்சு கம்பெனி வளாகத்தை சுத்தம் செய்யவும் தயாராகயில்லை. இப்படிப்பட்ட டௌ கெமிக்கல்ஸ் என்ற அமெரிக்க பன்னாட்டு மூலதன கம்பெனியை, இந்தியாவில் கருப்பு பட்டியலில் சேருங்கள் என்ற கோரிக்கையை, நச்சு வாயு பாதிப்புக்குள்ளான போபால் மக்கள் எழுப்பி வருகிறார்கள்.
இந்தியாவின் மத்திய அரசோ அதுபற்றி செவி மடுக்க தயாராயில்லை என்பதாக தெரிகிறது. அதேசமயம் போராடும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் நிர்பந்தத்திற்காகவும், ஊடகங்கள் கிளப்பி வரும் விழிப்புணர்வுக்காகவும் அச்சப்பட்டு, தேர்தல் அரசியல் நடத்தும் நோக்கத்தில், சுற்றுச்சூழல் அமைச்சர் மூலமும், சில நேரங்களில் பிரதமரும் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதிகளை அள்ளி வீசிவருகிறார்கள்.
அரசியல் வாதிகளுடைய அணுகு முறை இதுபோன்று இருப்பது ஆச்சரியமான செய்தியல்ல. ஆனால் கல்வியாளர்களின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தான் இப்போது எழுப்பப்பட்டிருக்கும் கேள்வி. கல்விச் சாலைகளில் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு என்பது ஒரு முக்கியமான கல்வியாக உணரப்படுகிறது. நாடுதழுவிய அளவில், மக்கள் இயக்கங்களும் கூட சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றிய கோரிக்கைகளை தங்கள் இயக்கங்கள் சார்பாக முன்வைத்து வரும் காலம் இது. அப்படியிருக்கையில் சுற்றுச்சூழல் பிரிவை பொதுவாகவே கல்விச் சாலைகளும், குறிப்பாக உயர்கல்வி நிறுவனங்களும் ஒரு முக்கியப் பாடமாக எடுத்துக் கொண்டுள்ளனர்.
அதிலும் குறிப்பாக தொழில்நுட்ப கல்வியை கற்றுக் கொடுக்கின்ற, கல்லூரிகளிலும், பல்கலைகழகங்களிலும், சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு முக்கியத் தேவையாக இருக்கிறது. தொழிற்சாலை விபத்துக்கள் பற்றி படித்துக் கொள்ளாமல், தொழிற்சாலை உற்பத்திக்கான கல்வியை எப்படி கற்க முடியும் என்பது சாதாரண கேள்வி. உலகிலேயே பெரியதொரு தொழிற்சாலை விபத்தை பற்றி அறிந்திருக்க வேண்டியதும், அப்படிப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு முக்கியமான தேவை. அதுவும் இந்தியாவில் அப்படியொரு விபத்து போபாலில் நடந்திருக்கிறது என்றால், அதுபற்றி ஆழமான புரிதல், பொறியியல் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டும். அந்த புரிதலே பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அத்தகைய புரிதலையும், கவலையையும், தடுப்பு நடவடிக்கைகளையும் தங்களது பாடத்திட்டத்தில் இணைத்து மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். இத்தகைய விவரங்கள், நமது அண்ணா பல்கலைக்கழகத்தில் செயல்பட்டிலிருக்கிறதா என்ற வினா எழுந்துள்ளது.
மாணவர்களுக்கு மேற்கண்ட போதனைகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் கொடுக்கப்படுவதில்லை. பாடத்திட்டத்திலும் அத்தகைய பேரழிவு விபத்து பற்றி விளக்கப்படவில்லை. அதுபற்றிய கேள்விகளை சம்மந்தப்பட்ட துணை வேந்தரிடம் கேட்டால் அக்கறையற்ற பதில்தான் வெளிப் படுகிறது. தொழிற் சாலைகளை உருவாக்கவும், உற்பத்தியை செய்யவும், கற்றுக் கொடுக்கப்படும் பொறியியல் கல்வியில், விபத்துகள் பற்றியும், தடுப்புகள் பற்றியும் அக்கறையற்ற போக்கு இருக்கலாமா?
அண்ணா பல்கலைக்கழகத்தில் 2 நாட்களாக குருசேத்ரா தொழில்நுட்ப விழா 2010 என்பதாக நிகழ்ச்சி நடந்து வருகிறது. இது பல்கலைக்கழக நிர்வாகத்தால் நடத்தப்படுகிறது. அதில் தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை சம்மந்தமான நிகழ்வுகள், விழா போல நடத்தப்படுகின்றன. வாகனங்களை விரைவாக ஓட்டுதல் போன்ற 4சக்கர, 2சக்கர வாகனங்கள் சம்மந்தப்பட்ட போட்டிகளும் உண்டு. இவையெல்லாம் மாணவர்களை உற்சாகப்படுத்தவும் செய்யும். ஆனால் இவற்றை நடத்துவதற்கான நிதியை, பல்கலைக்கழக நிர்வாகம் சில பெரு முதலாளி நிறுவனங்களிடம் வாங்குகிறது. அதில் கருப்புப் பட்டியலில் உள்ள டௌ கெமிக்கல்ஸ் நிறுவனத்திடம் ரூ.5,00,000 வாங்கியிருக்கிறது. அந்த கம்பெனிக்கு இந்த பல்கலைக்கழகத்தில் ஆளெடுத்துக் கொள்ளுங்கள் என்பதாக அறிவிப்பு வேறு.
மேற்கண்ட செயல்பாடுகளை சுற்றுச்சூழல் ஆர்வலர்களாகயிருக்கும், பல்வேறு கல்லூரி மாணவர்கள் எதிர்க்கிறார்கள். டௌ கெமிக்கல்ஸை, அண்ணா பல்கலைக்கழகத்தை விட்டு துரத்தச்சொல்லி கேட்கிறார்கள். அதற்காக பரப்புரை செய்கிறார்கள். ரூ.5,00,000 த்தை தங்கள் பக்கத்திலிருந்து திரட்டித் தருகிறோம். அப்போதாவது டௌ கெமிக்கல்ஸை வெளியேற்றுங்கள் என்று கூறுகிறார்கள். அதற்காக பாதிக்கப்பட்ட போபால் மக்களிடமும், அண்ணா பல்கலைக்கலையின் முன்னாள் மாணவர்களிடமும் நிதி திரட்டுகிறார்கள். அந்த நிதியை டௌ கம்பெனிக்கு திருப்பி கொடுத்தாவது, பல்கலையை விட்டு டௌவை விரட்டுங்கள் என்று கூறுகிறார்கள்.
இதற்காக அவர்கள் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் பேசினார்கள். துணைவேந்தர் இதுபோன்ற கவலைகளை ஏற்பவராக தெரியவில்லை. போபால் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை என்று அறிவு ஜீவித்தனமாக பேசியிருக்கிறார். இதுபோன்ற அக்கறையற்ற மனிதர்களின் கைகளில், அரசு சார்பான பல்கலைக் கழங்களை கொடுத்துவிட்டு வேடிக்கை பார்க்கப் போகிறோமா? இதுதான் தமிழ்நாட்டில் மக்களைப் பார்த்து நாம் கேட்கவிரும்புகிறோம்.

Thursday, January 21, 2010

ஜோதிபாசு மே.வங்க எம்.ஜி.ஆர்.

1914ம் ஆண்டு ஜுலை 8ம் நாள் பிறந்த ஜோதிபாசு, இந்த ஆண்டு ஜனவரி 17ம் நாள் மறைவை எய்தினார். இவர் மே.வங்க மாநிலத்தின் முதலமைச்சராக 1977ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை பொறுப்பிலிருந்தார். அதன்மூலம் இந்தியாவிலேயே நீண்டகாலம் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தவர் என்று பெயர் பெற்றார். இந்தியாவில் நாடாளுமன்ற இடதுசாரிகள், இருபெரும் கட்சிகளாக இருக்கின்றனர். அவர்களில் சி.பி.ஐ.(எம்) என்று அழைக்கப்படும் மார்க்சிஸ்ட் கட்சியினர் பெரிய கட்சியாக மதிக்கப்படுகின்றனர். அப்படிப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சி, ஆளுகைக்கு வருகின்ற இடங்களாக கேரளாவும், மே.வங்கமும், திரிபுராவும் அடையாளம் காட்டப்படுகின்றன. இது தவிர மார்க்சிஸ்ட் கட்சி அதிக செல்வாக்கை பெற்ற மாநிலமாக ஆந்திரா இருந்தது. 3 மாநிலங்களில் மட்டும் அதிகமான அளவில் நாடாளுமன்ற உறுப்பினர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் வைத்திருக்கின்ற ஒரு கட்சியை எப்படி, தேசிய கட்சி என்று அங்கீகாரம் செய்வது என்பதான கேள்வி, தேர்தல் ஆணையத்திற்கு எழுந்தது. அப்படிப்பட்ட நிலையில், மார்க்சிஸ்ட் கட்சி இருந்தாலும், மே.வங்கத்தில் தொடர்ந்து 23 ஆண்டுகளாக முதலமைச்சராக, அந்த கட்சி சார்பாக ஒருவர் பொறுப்பில் இருக்க முடிந்தது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. அந்தளவுக்கு ஜோதிபாசுவிற்கு மக்கள் செல்வாக்கு இருந்தது. மீண்டும், மீண்டும் ஆட்சிக் கட்டிலிலே அமருவதற்கான அந்த செல்வாக்கு தான் அவரை மே.வங்க மாநிலத்தின் எம்.ஜி.ஆர். என்று எளிமையாக அழைக்கும் நிலைக்கு கொண்டுசென்றது.
1977ம் ஆண்டு முதலமைச்சராக வருவதற்கு முன்னால், 1967ம் ஆண்டே ஜோதிபாசு, மே.வங்கத்தின் துணைமுதல்வராக பொறுப்பெடுத்தார். அப்போது பங்களா காங்கிரஸ் என்று அழைக்கப்பட்ட மாநில கட்சியின் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி தேர்தலை சந்தித்தது. அந்த தேர்தலில் அவர்களது கூட்டணி வெற்றி பெற்றதையொட்டி, அஜாய்குமார் கோஷ் என்ற பங்களா காங்கிரஸ் தலைவர் முதல்வராகவும், மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் ஜோதிபாசு துணை முதல்வராகவும், ஆட்சியில் அமர்ந்தார்கள்.
1967ம் ஆண்டு இவர்களது நாடாளுமன்ற இடதுசாரி கூட்டணி ஆட்சியை பிடித்ததையொட்டி, மார்க்சிய புரட்சியாளர்கள் ஆயுதப்போராட்டத்தை தொடங்கினார்கள். மே.வங்க மாநிலத்தின், டார்ஜிலிங் மாவட்டத்தில், நக்சல் பாரி கிராமத்தில் அப்படிப்பட்ட ஆயுத எழுச்சி, விவசாயிகளை அடிப்படையாகக் கொண்டு தொடங்கியது. மார்க்சிஸ்ட் கட்சியின் டார்ஜிலிங் மாவட்ட பொறுப்பாளராக இருந்த சாருமஜும்தார் அந்த புரட்சியை வழிகாட்டி நடத்தினார். இது கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இருந்த இருவழிப் போராட்டத்தின் விளைவாக ஏற்பட்டது.
அதாவது 1921ம் ஆண்டு தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 1940க்கு பிறகு ஆயுதப்போராட்டத்தில் பல்வேறு முயற்சிகளை எடுத்தது. 1950ம் ஆண்டையொட்டி அந்த கட்சி தடைசெய்யப்பட்டது. 1952ம் ஆண்டிற்கு பிறகு, தேர்தலில் நிற்கத் தொடங்கியது. அதை எதிர்த்து ஆயுதப்போராட்டத்தை நடத்த வேண்டும் என்று சொல்லக்கூடிய புரட்சியாளர்கள், கட்சிக்குள்ளேயிருந்து கருத்துப் போராட்டம் நடத்தி வந்தனர். 1962ம் ஆண்டு இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே எல்லை மோதல் நடந்தது. அது சீன ஆக்ரமிப்பு என்பதாக இந்திய அரசால் பெயர் கொடுக்கப்பட்டது. அதேசமயம் பின்னாளில் நீவில் மாக்ஸ்வெல் என்ற வெளிநாட்டு எழுத்தாளர், இந்தியாவின் சீன யுத்தம் என்ற பெயரில் ஒரு புத்தகமாக வெளியிட்டார். இப்படியாக முரண்பாடுகளின் மூலம் வெளிப்பட்ட அந்த யுத்தம், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திலும் பிளவை ஏற்படுத்தியது. டாங்கே தலைமையிலான ஒரு சாரார், காங்கிரஸ் அரசுக்கு சாதகமானவர்களாக ஆனார்கள். அதேசமயம் நம்பூத்ரிபாடு, பி.டி.ரணதிவே, சுந்தரய்யா, ஏ.கே.கோபாலன், பி.ராமமூர்த்தி போன்ற தலைவர்கள், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டை ஆதரித்தார்கள். அதனால் இந்திய அரசால் கைது செய்யப்பட்டார்கள். ஜோதிபாசு அந்த 2வது வகையினரை ஆதரித்தார். இவ்வாறு சிறைக்குச் சென்று திரும்பிய அணியினர், 1964ம் ஆண்டு கட்சியை விட்டுப் பிரிந்து வெளியே வந்தார்கள். தங்களை மார்சிய புரட்சியாளர்களாக கூறிக்கொண்டு, மார்க்சிஸ்ட் கட்சி என்று பெயர்வைத்துக் கொண்டார்கள். 1965ம் ஆண்டு பர்துவான் பிளீனம் என்ற சிறிய மாநாட்டை நடத்தினார்கள். அதில் இந்திய சமுதாயத்தைப் பற்றியும், இந்திய அரசைப் பற்றியும் மறுமதிப்பீடு செய்வதும், புரட்சிக்கான பாதையை தேர்வு செய்வதும் என்ற திட்டத்தை விவாதித்தார்கள். அப்போது இந்த பெரும்தலைவர்களின் முன்வைப்புகளை எதிர்த்து, டார்ஜிலிங் மாவட்ட சாருமஜும்தார் மாற்று முன்வைப்புகளை வைத்தார்.
அதில் இந்திய அரசு சுதந்திரமானது அல்ல என்றார். தரகு முதலாளிகள் நாட்டை ஆள்கிறார்கள் என்றார். விவசாய புரட்சியே வழிமுறை என்றார். சாருமஜும்தாரின் அத்தகைய முன்வைப்புகளுக்கு எதிராக, ஜோதிபாசு உள்ளிட்ட அணி தேர்தல் பாதையை தேர்வு செய்தது. ஐக்கிய முன்னணி தந்திரம் மூலம் தேர்தலில் வெற்றி பெறுவதை முன்வைத்தது. அதை எதிர்த்து ரகசியமாக தங்கள் செயல்பாட்டை, மஜும்தார் மேற்கொள்ளத் தொடங்கினார். அதுதான் ஜோதிபாசு அணியினர், கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தியவுடன், மஜும்தார் தலைமையிலான நக்சல் பாரி புரட்சியாக வெடித்தது.
வெடித்த புரட்சி நக்சல் பாரி கிராமம் உட்பட்ட பகுதிகளை, பண்ணையார்களை விரட்டி விட்டு கைப்பற்றியது. விவசாயிகளை ஆயுதபாணியாக்கியது. அதை விடுதலைப் பகுதி என்று சீன வானொலி அறிவித்தது. வசந்தத்தின் இடிமுழக்கம் என்ற பெயரில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஏடு கட்டுரை எழுதியது. மே.வங்க மாநில உள்துறையை கையில் வைத்திருந்த ஜோதிபாசு, நக்சல் பாரி புரட்சியாளர்களை ஒடுக்குவதற்காக, வடகிழக்கு எல்லை துப்பாக்கிப் படையினர் என்ற துணைராணுவத்தை வரவழைத்தார். நக்சல்பாரி கிராமத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், முதல் பலியாக பாபுலால் பிஸ்வகர்மா என்ற புரட்சியாளர் கொல்லப்பட்டார். ஆயிரக்கணக்கான புரட்சியாளர்கள் சாருமஜும்தார், கனுசன்யால் உட்பட ஜோதிபாசு அரசால் கைதுசெய்யப்பட்டனர். இப்படியாக ஒரு துணை முதல்வர் பாத்திரத்தையும், பாசு வகித்துள்ளார்.
1977ல் முதல்வரான ஜோதிபாசு, நிலச்சீர்திருத்தங்களை கொண்டு வந்தார் என்பதுதான் முக்கியமாக பேசப்படுகிறது. அவரது அந்த முயற்சி மார்க்சிஸ்ட் கட்சிக்கு தொடர்ந்து கிராமங்களில் வாக்கு வங்கியை ஏற்படுத்தித் தந்தது. காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான மத்திய ஆட்சியை, ராஜிவ் காந்திக்குப் பிறகு வலுப்படுத்துவதில், சர்ச்சைகள் எழுந்த காலம். அப்போது ஜோதிபாசுவை காங்கிரஸ் கட்சித் தலைமை, இந்தியாவின் தலைமையøøச்சராக பொறுப்பெடுக்க அழைத்தது. ஆனால் அத்தகைய பொறுப்பை ஏற்கக்கூடாது என மார்க்சிஸ்ட் தலைமை முடிவு செய்துவிட்டது. உள்ளபடியே பிரதமர் பொறுப்பை ஜோதிபாசு ஏற்பதற்கு, அன்றைய கட்சியின் பொதுச்செயலாளர் ஹரிகிருஷ்ணசிங் சுர்ஜித் உட்பட, ஜோதிபாசுவிற்கும் உடன்பாடு இருந்தது. அரசியல் தலைமைக் குழுவில் பெரும்பான்மையராகயிருந்த பிரகாஷ் காரத், சீதாராம் யெச்சுரி, வி.எஸ்.அச்சுதானந்தன் உள்ளிட்டோர் அதை எதிர்த்து வாதிட்டு, ஜோதிபாசு பிரதமர் ஆகும் வாய்ப்பை தடுத்து விட்டனர். அதைபற்றி பிறகு கருத்துச் சொல்லும்போது, அது ஒரு வரலாற்றுப் பிழை என்று ஜோதிபாசு கூறியுள்ளார். ஆனால் முடிவெடுத்த நேரத்தில், கட்சிக்கு கட்டுப்பட்டு இருந்து விட்டார்.
இப்போது அவரது மறைவுக்குப் பிறகு, சோம்நாத் சாட்டர்ஜி இதே போன்ற ஒரு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். தான் சபாநாயகர் பதவியில் இருந்து விலக வேண்டியதில்லை என்று ஆலோசனை கூறியதே ஜோதிபாசு தான் என்றும், அதனால் தான் கட்சி கட்டுப்பாடு தன்னை நீக்கியது என்றும் கூறியுள்ளார். தனி மனித கருத்துக்களை முன்வைத்து போராடினாலும், கட்சிக்குக் கட்டுப்பட்ட ஜோதிபாசுவின் செயல், வரலாற்றில் நிற்கிறது. அதேபோல லட்சக்கணக்கான மக்கள் அணிதிரள, இறுதி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்ட அவரது உடல், எஸ்.எஸ்.கே.எம் மருத்துவக் கல்லூரிக்கு, மாணவர்கள் படிப்புக்காக தானமாக வழங்கப்பட்டது. 2003ம் ஆண்டு ஏப்ரல் 4ம் நாள், ஜோதிபாசு தனது கண்களையும், உடலையும், ஒரு விழாவில் வைத்து தானமாக அறிவித்திருந்தார். 7 ஆண்டுகள் கழித்து, அந்த மாமனிதனின் உடல், அவரது மறைவுக்குப் பிறகும் வருங்கால தலைமுறைக்கு பயன்படுகிறது. இதுவும் அவரது இன்னொரு சாதனை.

Wednesday, January 20, 2010

அரசியல் போரும், உளவியல் போரும்!

இலங்கைத்தீவில் அரசத்தலைவர் பதவிக்கான தேர்தல் வருவதற்கு இன்னும் சில நாட்கள்தான் இருக்கின்றன. அதாவது ஜனவரி 26ம் நாள் அதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் முக்கியமாக ஆளும் கட்சி கூட்டணியின் மகிந்த ராஜபக்சே நிற்கிறார். அவரை எதிர்த்து எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக சரத்பொன்சேகா நிற்கிறார். தேர்தல் பரப்புரை சூடுபிடித்து வருகிறது. இருபுறமும் நடக்கும் பரப்புரையில் நடந்து முடிந்த இனவாத போர்பற்றி பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
வன்னிப்போரில் நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் அம்பலமாகியுள்ளன. வேட்பாளர் மகிந்தாவின் சகோதரர் ஆணைப்படி களத்தில் நின்ற ராணுவ தளபதி, செய்த கொடுமைகள் தெரியவந்துள்ளன. சரண் அடைந்த விடுதலைப்புலியின் சில தலைவர்கள் உட்பட ஆயிரம் போராளிகளை கண்டபடி சுட்டுக் கொன்ற நிகழ்வு விவாதிக்கப்படுகிறது. கோத்தபாய ராஜபக்சேயின் கட்டளைக்கு பணிந்து, படுகொலை செய்த ராணுவ தளபதியைப் பற்றி எழுதக்கூடாது என ஊடகங்களுக்கு தடை வந்துள்ளது. ஆளுங்கட்சியை ஆதரிக்கும் நிபந்தனையை ஏற்றுக்கொண்டதால், கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்றும் வெளிப்படையாக தெரிகிறது.
சமரசத்தை ஏற்காததால் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை, அகதிகள் முகாமிலேயே அடைந்திருந்து மரணம் அடைந்த நிகழ்வும் கூட நடந்துள்ளது. வன்னிப்போரில் ஈடுபடுத்தப்பட்ட சிங்கள வீரர்கள், இளம்வயதிலேயே பலியாக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி தெரியவந்துள்ளது. 30,000 சிங்கள வீரர்கள் வன்னிப்போரில் பலியாகியுள்ளனர். 36,000 சிங்கள ராணுவ வீரர்கள், கை, கால்களை இழந்து பாதிக்கப்பட்டனர். இந்த செய்திகளை வேட்பாளர் பொன்சேகா இப்போது கூறுகிறார். இதுவும் கூட சிங்களப் பெரும்பான்மை மக்களிடையே சிக்கலை உருவாக்கும். சர்ச்சையை எழுப்பிவிடும்.
தமிழர் பகுதிகளான வடக்கிலும், கிழக்கிலும் இரண்டு வேட்பாளர்களும் தங்கள் ஆதரவாளர்களை இறக்கி விட்டுள்ளனர். வேட்பாளர் மகிந்தா, அமைச்சராக இருக்கின்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தத்தைச் சார்ந்து, வடக்கு மாகாணத்தின் தமிழர் வாக்குகளை அடைய துடிக்கிறார். கிழக்கு மாகாணத்தில், மாகாண சபை முதல்வர் பிள்ளையானைச் சார்ந்து, தனது தேர்தல் வியூகத்தை வகுத்துக் கொள்கிறார்.
வேட்பாளர் பொன்சேகாவோ, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூலமாக தனது வாக்கு சேகரித்தலை முக்கியத்துவப்படுத்துகிறார். தமிழர்களின் உடனடித் தேவைகளாக இருக்கின்ற மீள்குடியேற்றம், முள்வேலி முகாம்களிலிருந்து விடுதலை, சுயநிர்ணய உரிமை, பாதுகாப்பு வளையங்களை நீக்கி சிங்கள ராணுவத்தை பின்வாங்க செய்தல், போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணைகள், மனித உரிமை மீறல்கள் செய்தவர்கள் மீதான நடவடிக்கைகள், கைது செய்யப்பட்டுள்ள முன்னால் போராளிகளை விடுதலை செய்தல், அதிபர் ஆட்சி முறையை மாற்றி நாடாளுமன்ற ஆட்சி முறையை கொண்டு வருதல், வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பது பற்றி விவாதித்தல், கடத்தப்பட்ட தமிழர்களை விடுவித்தல், அதில் கொல்லப்பட்டவர் குடும்பத்திற்கு உதவி அளித்தல் போன்ற அடிப்படையான கோரிக்கைகளை வலியுறுத்தி தங்களது தேர்தல் பரப்புரையை செய்து வருகிறார்கள்.
கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற கணிசமான தமிழ் பேசும் முஸ்லிம்களின் வாக்குகளை வென்றெடுக்க முஸ்லிம் கட்சி, பொன்சேகாவிற்கு ஆதரவாக இறங்கியுள்ளது. மட்டக்களப்பு மேயராக இருக்கும் தமிழ் பெண் கூட, ஆளும் கட்சி கூட்டணியில் இருந்தாலும் பொன்சேகாவிற்கு ஆதரவாக பரப்புரையில் இறங்கியுள்ளார். இது போல கொழும்பு நகரில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற, ஜனநாயக மக்கள் கட்சி தலைவர் மனோகணேசன் மூலமாக, தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லிம்கள் மத்தியில் பொன்சேகாவிற்கு ஆதரவான பரப்புரை வாக்குகளை ஈர்த்துக் கொண்டிருக்கிறது.
இதே போல மலையக தமிழ் மக்கள் மத்தியிலும், இருபக்கமும் உள்ள போட்டி வேகமடைந்துள்ளது. மகிந்தாவிற்கு ஆதரவாக ஆறுமுக தொண்டைமான் தலைமையிலான சிலோன் தொழிலாளர் காங்கிரசும், மறைந்த சந்திரசேகரனின் கட்சியான மலையக மக்களின் முன்னணியும் இறங்கி பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு எதிராக பொன்சேகாவிற்கு ஆதரவாக, மனோகணேசனின் கட்சியினர் இறங்கி பணியாற்றி வருகின்றனர்.
தென்னிலங்கையில் உள்ள சிங்கள மக்கள் மத்தியில், கிராமப்புறங்களில் பயங்கரவாதத்தை ஒழித்த வீரராக மகிந்தா தன்னை காட்டிக் கொண்டு, வாக்குகளை சேகரிக்கிறார். அதில் அவருக்கு ஆதரவாக நிலைமை இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அப்படி விழக்கூடிய வாக்குகளையும் கூட, சமீபத்திய பொன்சேகாவின் அறிவிப்புகள் நிலைகுலைய செய்து விட்டன. அதாவது வன்னிப்போரில் தேவையில்லாமல் சிங்கள இளைஞர்கள் பல பத்தாயிரம் பேர் கொல்லப்பட்டதை பொன்சேகா கூறிவிட்டார். அதற்கும் மேலாக கை, கால்களை இழந்த இளம் சிங்கள வீரர்கள் பற்றியும் எடுத்துரைத்து விட்டார். இதுவே சிங்கள கிராமங்களை புதிதாக பாதிக்கத் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு சிங்கள கிராமத்திலும், போருக்கு அனுப்பப்பட்ட வீரர்கள் இறந்து விட்டால், அவர்களது வீட்டை சுற்றி பௌத்த மத சடங்குகள் படி, வெள்ளைத் துணியைக் கட்டுவார்கள். அப்படி வெள்ளைத்துணி கட்டப்பட்ட வீடுகள் ஒவ்வொரு கிராமத்திலும், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தன. ஆகவே போரின் பாதிப்பை உணர்ந்திருந்த சிங்கள கிராமப்புற விவசாய குடிமக்கள், தங்கள் வாக்குகளை யாருக்கு அளிப்பார்கள் என்பதே கேள்விக்குறியாகும்.
மேற்கண்ட இரண்டு பெரும் வேட்பாளர் களுக்கிடையில், போர்க்குற்றங் களுக்கு காரணமான இந்த இரண்டு பேரும் வேண்டாம் என்று கூறிக்கொண்டு, சிங்கள இடது முன்னணி தலைவர் டாக்டர் விக்கிரமபாகு கருணா ரத்னேயும், சிவாஜி லிங்கம் எம்.பி.யும் வாக்குக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தென்னிலங்கையில், வட இலங்கையில் செய்தது போல, இரண்டு பேரும் சேர்ந்து வாக்கு சேகரிக்கிறார்கள். இப்படிப்பட்ட அரசியல் போராட்டம், ஆதிக்க வாதிகளுக்குள் நடந்து வரும் போது, அந்நிய சக்திகளும் இதில் புதிய வகையில் பங்களிப்பு செலுத்துகின்றன.
இலங்கை அரசியலில் தொடர்ந்து தலையீடு செய்வதன் மூலம், தங்கள் நலன்களை விரிவுபடுத்திக்கொள்ளும், அல்லது வலுப்படுத்திக் கொள்ளும் அந்நிய சக்திகள், இந்த இரு பெரும் வேட்பாளர்களில் யாருக்கு ஆதரவு தரலாம் என அலைந்து திரிகிறார்கள். இவர்கள் தங்களது ஆதரவை நேரடியாக செலுத்துவதில்லை. மாறாக உளவியல் ரீதியாக பரப்புரை செய்து, உலக அரங்கில் தமிழர் மத்தியில் கருத்துப் போக்கை உருவாக்கி, தங்களது விருப்பத்தை சாதித்துக் கொள்பவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். ஊடகங்கள் மூலம் தங்களது கருத்தை இந்த அந்நிய சக்திகள் பரப்பி வருகிறார்கள். உதாரணமாக திரிகோணமலை என்ற கிழக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டத்தைப்பற்றி ஒரு செய்தியை அச்சு ஊடகங்களில் பரப்பி இருக்கிறார்கள். அதாவது தமிழ்மக்கள் இருபெரும் வேட்பாளர்கள் மீதும் நம்பிக்கை இழந்து, தேர்தலை புறக்கணிப்பார்கள் என்று திரிகோணமலை மாவட்ட மக்கள் பற்றி ஒரு தவறான அல்லது பொய்யான கருத்தை பரப்பி வருகிறார்கள். இதன் மூலம் தமிழ் மக்களது வாக்குகளை சிதறடித்தால், மகிந்தாவை வெற்றிபெற வைக்கலாம் என்ற மனப்பாலை சிலர் குடிக்கிறார்கள். ஆனால் திரிகோணமலை மக்கள் எப்போதுமே ரனில்விக்கிரமசிங்கே மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள். விலைவாசி உயர்வை அவரது கூட்டணி கட்டுப்படுத்தும் என்று எண்ணுபவர்கள். கூடுதலாக தமிழர் தேசிய கூட்டமைப்பு பரப்புரையை ஏற்பவர்கள். இதனால் அவர்களது வாக்குகளும், சிந்தாமல், சிதறாமல், மாற்றத்தை கொண்டு வருவதற்காகவே இருக்கிறது என்பது தெளிவு.
அரசியல் போரை இலங்கை தீவுக்குள் கட்சிகள் நடத்தினால், அனைத்துலக சமூகத்தில் உளவியல் போரை நடத்தி திசைதிருப்பும் வேலையையும், தமிழர் வாக்குகளை பிளவு படுத்தும் வேலையையும் செய்கின்ற அந்நிய சக்திகளை, உலகத் தமிழர்கள் அடையாளம் கண்டு கொள்வார்களா? என்ற கேள்வி நமக்கு எழுகிறது.

Tuesday, January 19, 2010

விசாரணைக் கைதிகளை சிறையிலடைக்க சட்டம் சொல்கிறதா?

இந்தியாவின் மத்திய சட்டஅமைச்சர் நேற்று ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாடு தழுவிய 1500 சிறைகளில் இருக்கின்ற, விசாரணைக் கைதிகளான 1 லட்சத்து 70 ஆயிரம் பேரை விரைவில் விடுதலை செய்வோம் என்பதுதான் அந்த அறிவிப்பு. குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், நீதிமன்றத்தில் விசாரணைக்குப்பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டு, தண்டனை பெற்றார் எனும் போது, தண்டணைக் காலத்தை கழிக்க சிறையில் அடைக்கப்படுவார் என்பதுதான் நீதித்துறை யைப்பற்றியும், சிறைச்சாலையைப்பற்றியும் இருக்கின்ற அடிப்படை புரிதல். இந்த புரிதல் சரிதான். இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், நீதிமன்ற விசாரணைக்கு முன்னமேயே சிறையில் அடைக்கப்பட்டால் என்ன அர்த்தம்? இதற்கு பதில் சொல்ல எந்த ஒரு சட்டப் புத்தகமும் இடம் கொடுக்கவில்லை. இதற்கான பதிலை எந்த நீதியரசரும் விளக்கவில்லை. இதை நியாயப்படுத்த எந்த வழக்கறிஞரும் தயாராயில்லை. ஆனால் இதை காவல் துறை அதிகாரிகள் அமுலாக்கி வருகிறார்கள். அதற்கு ஒத்துழைப்புக் கொடுத்து, மாஜிஸ்திரேட்டுகள் என்ற நீதித்துறையின் குற்றியியல் நீதியரசர்கள் சம்பந்தப்பட்டவர் களை சிறைக்கு அனுப்பி வருகிறார்கள். மேற்கண்ட நடைமுறை எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் செயல்படுத்தப்படுகிறது. ஒருவர் மீது குற்றம் பதிவு செய்யப்பட்டவுடன், அவரை கைது செய்வதும், மாஜிஸ்திரேட் முன்கொண்டு நிறுத்தி சிறைக்கு அனுப்புவதும் தங்களுடைய வேலை என்பதாக காவல்துறை அதிகாரிகள் நம்புகிறார்கள். காவல்துறை அதிகாரிகள் ஒருவரை கைது செய்து தன்முன்னே கொண்டு நிறுத்தினால், உடனடியாக அவரை சிறைக்கு அனுப்ப வேண்டியது தனது கடமை என்று மாஜிதிரேட்டுகள் நம்புகிறார்கள்.
மேற்கண்ட இவர்களது நம்பிக்கை எல்லாம் சரியானது என்றால், இப்போது 2 லட்சம் வரை இருக்கின்ற விசாரணைக் கைதிகளை விடுதலை செய்வோம் என்று சட்ட அமைச்சர் கூறக்கூடாது. சட்ட அமைச்சர் இப்படி கூறுவது மட்டும்தான் சட்டத்தைப்பற்றிய சரியான விளக்கம் என்றால், இன்று வரை விசாரணைக் கைதிகளை சிறையில் அடைத்து வைத்திருந்தது தவறு என்பதாக ஆகிறது.
மேற்கண்ட 2 செயல்களில் ஒன்றுதான் சரியாக இருக்கும். மற்றது தவறாக இருக்கும். 16ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவின் உச்சநீதிமன்றத்தை ஒரு வழக்கு உலுக்கியது. வழக்கம் போன்ற வழக்காக அது வந்தாலும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதியரசராக அமர்ந்திருந்த வெங்கடச்செல்லையா இந்த வழக்கில் மற்ற 2 நீதியரசர்களுடன் சேர்ந்து ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார். அந்த வழக்கு ஜோகிந்தர்குமார் என்பவருக்கும் உத்தரப்பிரதேச மாநில அரசாங்கத்திற்கும் மத்தியிலானது என்பதான ஒன்று. 1994ம் ஆண்டு இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுகிறது. இது அரசியல் சட்டத்தின் 32வது பிரிவின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்கு.
விசாரணைக்காக 28 வயது கொண்ட ஜோகிந்தர்குமார் என்ற சட்டம் படித்து, வழக்கறிஞராக பதிவு செய்யப்பட்ட ஒருவர் ஜனவரி 7ம் நாள் காசியாபாத் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முன்னால் விசாரணைக்கு அழைக்கப்படுகிறார். அதை அவரது சகோதரர் முதலமைச்சருக்கு தந்தியாக அனுப்புகிறார். பிறகு அந்த இளைஞர் சட்ட விரோத காவலில் வைக்கப்படுகின்றார். அவரது விடுதலைக்காக மனு போடப்படுகிறது. ஜனவரி 11ம் நாள் உத்தரபிரதேசத்திலுள்ள காசியாபாத் காவல்நிலையத்திற்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்புகிறது. 14ம் நாள் நேரில் சம்பந்தப்பட்டவரை ஆஜர்படுத்த கோருகிறது. சட்ட விரோத காவலில் வைக்கவில்லை என்றும், விசாரணைக்காக பல இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் காவல்துறை கூறுகிறது. எதற்காக 5 நாட்கள் அப்படி வைத்திருக்க வேண்டும் என்று விசாரித்து விளக்கமளிக்குமாறு மாவட்ட நீதிமன்றத்திற்கு, உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
இந்த பிரச்சனையையொட்டி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மனித உரிமைகள் பிரச்சனை இருப்பதாக குறிப்பிட்டது. தனிமனித உரிமைகளுக்கும், கடமைகளுக்கும் மத்தியில் சீரான பார்வை தேவை என அதில் கூறப்பட்டுள்ளது. ஒருபுறம் குற்றங்கள் ஒடுக்கப்படவேண்டும் என்பது சமூக தேவையாக இருக்கிறது. இன்னொரு புறம் சட்டம் அதிகாரத்தால் பறக்கவிடப்படக்கூடாது என்பதும் சமூக தேவையாக இருக்கிறது. இதில் ஏதாவது ஒன்றை மட்டும் தேர்வு செய்வது ஆபத்தாக முடியும். சுதந்திரமான ஒரு சமூகத்தின் நலன் என்பது அதிகாரிகள், காவல்துறை ஆகியோர் நடத்தும் இழிவு படுத்தல், ஒடுக்குமுறை களிலிருந்து தனிநபரை பாதுகாப்பதில் அடங்கியிருக்கிறது என்று அந்த தீர்ப்பு கூறியிருந்தது.
ஒரு நாட்டின் நாகரீகம் என்பது, குற்றயியல் சட்டங்களை அமுல்படுத்து வதற்கு பெருவாரியாக எத்தகைய முறைகள் கையாளப்படுகின்றன என்பதை பொருத்தே அமைந்துள்ளது என்று அந்த தீர்ப்பு கூறுகிறது. நந்தினி சத்பதிக்கும், பி.எல்.டானிக்குமான வழக்கின் தீர்ப்பை மேற்கோள் காட்டிய அந்த பெஞ்ச் கீழ்கண்டவாறு கூறியது. சட்ட அமுலாக்கத்தின் தேவையை ஒரு புறமும், அமுலாக்க அமைப்பின் கைகளில் அநீதியாகவும், ஒடுக்கப்படும் நிலையிலும் இருக்கும் குடிமக்களை பாதுகாப்பது இன்னொரு புறமுமாக, சமன்படுத்தி பார்க்க வேண்டும். இதற்கான தராசு ஒரு புறமே இதுவரை சாய்ந்து இருக்கிறது. ஒரு புறம் குற்றங்களை கண்டுபிடிப்பதற்கான சமூக நலனும், மறுபுறம் குற்றம் சாட்டப்பட்ட தனிநபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட உரிமைகளும் என்பதாக உள்ள மோதலை காணவேண்டும்.
தேசிய காவல் ஆணையம் தனது 3வது அறிக்கையை காவல்துறையில் ஊழல் நடப்பதற்கான தலையாய காரணமே, கைது செய்வதற்காக அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம்தான் என்று கூறுகிறது. இதையும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டுகிறது. 60% கைதுகள் தேவையற்றவை அல்லது நியாயமற்றவை என்பதும் அந்த அறிக்கையிலிருந்து காட்டப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நியாயமற்ற காவல்துறையின் நடவடிக்கை களால், சிறைச்சாலையின் செலவு 43.2% அதிகமாகியுள்ளது. பெருவாரியான கைதுகள் சிறிய வழக்குகளுக்காக செய்யப்படுகின்றன. தொடர்ந்து ஒருவரை சிறையில் வைத்திருப் பது பாரமரிப்பு செலவுகளை விரைய மாக்குகிறது. கடைசியாக கைதே தேவையில்லை என்று முடிவாகக் கூடிய வழக்குகள் இதில் அதிகமாக உள்ளன.
மேற்கண்ட உச்சநீதிமன்ற சுட்டிக்காட்டல்கள் 16 ஆண்டுகளுக்குப்பிறகு இப்போதுதான் புரியப்படுகிறதா? ஆங்கிலே யன் ஆட்சியில் அடிமட்டம் வரை வெளி நாட்டு அதிகாரிகள் இருந்த போது, அவர் களுக்கு அடையாளம் தெரியாத இந்தியர் களை விசாரணைக்காக கூட, சிறையில் வைத்து வழக்கு நடத்தவேண்டிய பழக்கம் இருந்தது. இந்திய சுதந்திரத்திற்கு பிறகும், ஒவ்வொரு குடிமகனுக்கும் முகவரியும், அடையாள அட்டையும் இருக்கும் போது, எதற்காக அவர்களை விசாரணைக் காலத்திலும் சிறையில் வைத்திருக்க வேண்டும்? இது பச்சையான காலனி ஆதிக்க நடைமுறையின்றி, வேறென்ன?
நீதியரசர்கள் வெங்கடாசெல்லையா, மோகன், ஏ.எஸ்.ஆனந்த் ஆகியோருடைய அந்த பெஞ்ச், மேற்கண்ட வழக்கின் தீர்ப்பில் சில வழிகாட்டல்கள் கொடுத்துள்ளனர்.
காவலில் ஒருவரை தொடர்ந்து வைத்திருக்க சில காரணங்கள் இருக்க வேண்டும். அவர் தன்னை அடையாளம் காட்ட மறுத்தாலோ, குறிப்பிட்ட குற்றத்தை மீண்டும் செய்வதிலிருந்து தடுக்க வேண்டும் என்றோ, கைதானவரை பாதுகாப்பதற்கோ, விசாரணையில் அவரிடம் சாட்சியம் எடுப்பதற்கோ, நீதிமன்றத்திற்கு அவர் ஆஜராகாமல் இருந்தாலோ, சமன் வழங்கப் படலாம் என்ற ஆங்கிலேய நீதிமன்றத்தின் பரிந்துரையை அதில் சுட்டிக் காட்டியிருக் கிறார்கள்.
காவல்துறை அதிகாரி நீதிமன்றத்திற்கு வரக்கோரி சம்பந்தப்பட்டவருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பலாம். மேற்கண்ட அறிவுரைகளை ஏற்றிருந்தால், மத்திய அரசு சிறைசாலையில் கும்பல், கும்பலாக விசாரணைக் கைதிகள் குவிந்து கிடக்கும் நிலைமையை தவிர்த்திருக்கலாம். இத்தகை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதாவது மத்திய அரசுக்கு, மனித உரிமை பார்வை வந்ததே என்று நாம் மகிழ்ச்சியடையலாம். வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்படவேண்டிய அவசியமோ, காவலில் வைக்கப்பட வேண்டிய தேவையோ இல்லை என்பதை இனிமேலாவது அதிகாரிகள் மட்டத்தில் உணர்ந்து கொள்வார்களா என்று உரத்த குரலில் நாம் கேட்க விரும்புகிறோம்.

Monday, January 18, 2010

மம்தா கெடு பலன் தருமா?

மாவோயிஸ்டுகளுக்கு மம்தா பேனர்ஜி ஒருவாரம் கெடுவிதித்தார். அதே நேரத்தில் காவல்துறையினர் அவரது கெடுவிற்கு கேடு விளைவிக்கின்றனர்.மேற்கு வங்கத்தில் ஜர்க்ராம் பகுதிக்கு சென்ற மத்திய அமைச்சர் மம்தா பேனர்ஜி, கூப்பிய கரங்களுடன், வன்முறையை கைவிடுங்கள் என்று மாவோயிஸ்டுகளிடம் அறைகூவல் விடுத்தாராம். மேற்கு மிதினாப்பூர் மாவட்டத்தில் லால்கர், பேல்பகாரி, பின்பூர், சல்போனி மற்றும் பகுதிகளில் நடந்து வரும் வன்முறைகளை நிறுத்தி அமைதி கொண்டு வரவேண்டும் என மம்தா கேட்டுக் கொண்டார். ஒரு பேரணியில் இத்தகைய அறைகூவலை விடுத்திருக்கிறார். லால்கரிலிருந்து 40 கி.மீ. தூரத்திலுள்ள ஜார்க்ரம் நகராட்சி மைதானத்தில் 50 நிமிடம் உரையாற்றிய மம்தா இப்படி பேசியிருக்கிறார். கண்ணி வெடிகள் வைக்காமல், முக்கிய நீரோட்டத்திற்கு வாருங்கள் என அழைத்திருக்கிறார். தேவைப்பட்டால், மத்திய அரசிடம் தான் எடுத்துச் சொல்லி, அந்த வட்டார மக்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வைப்பேன் என்று கூறியிருக்கிறார். லால்கர் பகுதியிலிருந்து கூட்டுப் படைகளைக் கூட திரும்ப பெறவைப்பேன் என்பது அவரது வாக்கு.
மாவோயிஸ்டுகள் விரும்பினால், பேச்சுவார்த்தைக்கு தான் பாலமாக இருப்பேன் என்கிறார் மம்தா. தன்னை தீண்டத்தகாதவராக பார்த்தார்களானால் வேறு ஒரு சமரசப் பேச்சாளரை தேர்வு செய்யுங்கள் என்றும் இறங்கி பேசியிருக்கிறார். பேச்சு வார்த்தை என்பதுதான் முக்கியம் என்பதாக விளக்குகிறார். தான் காவல்துறை அராஜ கத்தை எதிர்க்கும் மக்கள் கமிட்டியை தொடங்கும் நேரத்தில் அதனுடன் ஒத்துழைத்ததாக மம்தா ஒப்புக் கொண்டார். ஆனால் அவர்கள் வன்முறையில் ஈடுபடும் பொழுது, அவர்களிடமிருந்து பின்வாங்கிவிட்டதாகவும் எடுத்துச் சொன்னார். அந்த கமிட்டியை இப்போது தலைமை தாங்கும் அசிட்மகதோ கூறும்போது, கூட்டுப்படைகள் திரும்பப் பெறப்பட்டால் பேச்சு வார்த்தை தொடங்கலாம் என்றும், தங்கள் தலைவர் சத்ரதார் மகதோவை இழிவுபடுத்திய மம்தாவை தாங்கள் நம்பத்தயாராயில்லை என்றும் கூறினார்.
மேற்கண்ட கூற்றுக்களில் உண்மை என்ன இருக்கிறது என்பதை அறிய வேண்டுமானால், மேற்கு வங்கத்துடன் நிற்காமல், அருகாமையிலுள்ள ஒரிசாவையும் நாம் உற்று நோக்கவேண்டும். ஒரிசாவின் கிழக்கு பகுதியில், கோராபட் மாவட்டத்தில் நாராயணபட்னா என்ற இடத்தில் 2 ஆதிவாசிகளை காவல்துறையினர் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். பலர் காயமடைந் தார்கள். நூற்றுக்குமேற்பட்ட ஆதிவாசிகள் கண்டபடி கைது செய்யப்பட்டார்கள். அதில் 12 குழந்தைகளும் சிறைக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் மீது சதி, கலவரம், ராஜதுரோகம், அரசுக்கு எதிராக போர் தொடுத்தல் ஆகிய வழக்குகளை காவல்துறையும், துணை ராணுவமும் பதிவு செய்திருக்கின்றன. சாசிமுலியா ஆதிவாசி சங்கம் என்ற ஆதிவாசிகளுடைய உரிமைகளுக்காக போராடக்கூடிய மக்கள் திறள் அமைப்பின் செயல்பாட்டாளர்களை விரட்டி, விரட்டி தேடுவது என்றும், கைது செய்வது என்றும் அடக்குமுறையை காவல்துறை கட்டவிழ்த்துள்ளது.
இத்தகைய அடக்குமுறைகளின் விளைவாக ஜனநாயக உரிமைகளுக்காக போராடக்கூடிய மக்கள் திரள் அமைப்புகளில் உள்ள ஆதிவாசிகள், சுற்றிவரை இருக்கும் காடுகளில் அடைக்கலம் தேடி ஓடுகிறார்கள். அந்த காடுகள் ஏற்கனவே மாவோயிஸ்டுகளின் தங்குமிடங்களாக இருந்து வருகின்றன. இவ்வாறு கோரப்பட் மாவட்டத்தின் உயர் அதிகாரிகளே கருதுகிறார்கள். காவல்துறை தங்களது நடவடிக்கைகளின் மூலம், சாதாரண ஆதிவாசிகளை மாவோயிஸ்டுகளாக மாற்றிக்கொண்டிருக்கிறது என்பதுதான் இதில் புரியப்படும் நீதியாகும்.
மேற்கண்ட நிகழ்வுகள் நாராயண பாட்னாவில் மட்டுமல்லாமல் ஒரிசா மாநிலத்தில் இருக்கும் ஆதிவாசிகள் பகுதிகளில் அடங்கிய கிராமங்களிலும், நகரங்களிலும் நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி சத்திஸ்கர், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் இதுவேதான் நடந்து வருகிறது. ஆதிவாசிகளுக்கு எதிரான காவல்துறையின் அட்டூழியங்கள், மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவு தரும் எரிபொருளாக பயன்படுகிறது. இந்திய சமுதாயத்தில் ஆதிவாசிகள் தான் மிகவும் விளிம்பு நிலையில் இருக்கின்ற மக்கள். ஆதிவாசிகளில் 49.5%, அரசாங்க மதிப்பீட்டின் படி வறுமையின் எல்லைக் கோட்டுக் கீழே இருக்கிறார்கள். 76.2% எழுத்தறிவில்லா நிலையில் இருக்கிறார்கள். 30% மருத்துவர்கள் அல்லது மருத்துவ மனைகள் தொடர்பின்றியே வாழ்ந்து வருகிறார்கள். தங்களுடைய நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், தங்கள் நிலத்தை ஆக்கிரமித்துள்ள தொழிற்சாலைகளில் கூட, வேலைக்கு சேர்க்கப்படாத நிலமையில், அந்த ஆதிவாசிகள் தங்கள் பாரம்பரிய நிலங்களை மட்டுமே நம்பி வாழ்வதால், அவற்றை தக்கவைத்துக் கொள்ளப் போராடுகிறார்கள்.
அமைதியான கிளர்ச்சிகள் மற்றும் ஜனநாயக முறையீடுகள் ஆகியவை தங்களுடைய பிரச்சனைகளை வெளிப்படுத்த இயலாமல் தோற்றுவிட்டன என்று உணர்கிறார்கள். அதன் விளைவாக இந்திய ஜனநாயகத்தில் ஆதிவாசிகள் அந்நியப்படுத்தப்பட்டு கிடக்கிறார்கள். இத்தகைய கோபத்திலும், அந்நியமாதலிலும் உள்ள ஆதிவாசிகள், மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாளர்களாகவும், புதிய வரவுகளாகவும் ஆகிவிடுகிறார்கள்.
இந்திய மாவோயிஸ்டுகள் ஆயுதப் போராட்டத்தின் மூலமாக அரசை தூக்கி ஏறிந்து, சமூக பொருளாதார மாற்றத்தை கொண்டு வரமுடியும் என்று நம்புகிறார்கள். வன்முறையில் நம்பிக்கையில்லாத ஆதிவாசிகள் கூட வேறுவழியில்லாமல் காவல்துறையின் நிர்ப்பந்தத்தினால் மாவோயிஸ்டுகளுடன் சென்று நிற்கிறார்கள். ஆனாலும் பெரும்பாலும் ஆதிவாசிகள், வெகுமக்கள் அரசியலில் ஈடுபடுவதையே விரும்புகிறார்கள். ஒருபுறம் காவல்துறையின் தள்ளிவிடுதலும், மறுபுறம் மாவோயிஸ்டுகளின் அரவணைப்பும், ஆதிவாசிகளை திக்குமுக்காட செய்கிறது. ஆதிவாசிகளை கடுமையாக சுரண்டிவரும் மற்றும் சித்ரவதை செய்து வரும் பண்ணையார்கள், காவலர்கள் , கந்துவெட்டிக்காரர்கள் ஆகியோரைத்தான் மாவோயிஸ்டுகள் இலக்காக்கி தாக்கி வருகிறார்கள். ஆதிவாசிகளின் இதுபோன்ற சமூக பொருளாதார பாதிப்புகளுக்கு, அரசு உரிய முறையில் நடவடிக்கை எடுக்க தவறிய நேரத்தில், மாவோயிஸ்டுகளின் இந்த செயல்பாடு செல்வாக்கை ஏற்படுத்துகிறது.
ராணுவ ரீதியாக மாவோயிஸ்டுகளை அழித்துவிட்டால் பிரச்சனை தீர்ந்து விடும் என்று அரசு நம்புகிறது. அதற்காக 80,000 ராணுவத்தை ஏற்கனவே இறக்கிவிட்டுள்ளது. மகாராஷ்டிரா, சத்திஸ்கர், ஒரிசா மாநிலங்களின் காடுகளில் மேலும் 20,000 ராணுவத்தை இப்போது இறக்கப்போகிறது. இந்த வட்டாரத்தில் 20 லட்சம் மக்கள் வாழுகிறார்கள். அவர்களில் பாதிபேர் ஆதிவாசிகள். வெளியே இருக்கும் அதிகாரிகள் ராணுவ வெற்றியை எதிர்பார்த்தாலும், களத்திலிருக்கும் அதிகாரிகள் எந்த நம்பிக்கையும் கொண்டு இருக்கவில்லை. அரசிடம் இருந்து ஆதிவாசிகள் அந்நியமாகி நிற்பது ஏற்கெனவே ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டது. சாசிமுலியா ஆதிவாசி சங்கம் நாராயணபாட்னா பகுதியை கைப்பற்றி விடும் என்று கூறிவருகிறார்கள்.
நாராயணபாட்னா பகுதியல் ஆதிவாசி சங்கத்தினர் 800 ஹெக்டேர் நிலத்தை மீட்டெடுப்பதில், வெற்றி பெற்றிருக்கிறார்கள். தனியார் சுரங்க கம்பெனிகள், சாராய முதலாளிகள், நிலத்திருடர்கள், ஒப்பந்தக்காரர்கள் ஆகியோர் இணைந்து ஆதிவாசி சங்கங்களை எதிர்த்து கொரப்பட், மல்கங்கிரி மாவட்டங்களில் தங்கள் ஆதரவு குழுக்களை உருவாக்குகிறார்கள். ஒரிசா மாநிலத்தில் இந்தியாவில் கிடைக்கும் பாக்ஸைட் தாதுப்பொருள் 70% கிடைக்கிறது. உலகிலேயே இந்தியாதான் 6 வது பெரிய பாக்ஸைட் கையிருப்பு கொண்ட நாடு. இந்தியாவில் கிடைக்கும் குரோம் தாதுவும், நிக்கலும் 90%, நிலக்கரியில் 24%ம் இங்கே கிடைக்கிறது. பன்னாட்டு மூலதன கம்பெனிகள் அவற்றை கொள்ளையடிக்க இறங்கிக் கொண்டிருக்கின்றன. அமைதிக்குழு என்ற பெயரில் ஆதிவாசிகளிடமிருந்து நிலங்களை கொள்ளையடிக்க மேற்கண்ட சக்திகள் முயற்சிக்கின்றன.
ஆதிவாசிகளையும், மாவோயிஸ்டுகளையும் சமமாகவே பாவிக்கக்கூடிய காவல்துறை மற்றும் துணை ராணுவத்தின் இத்தகைய அணுகுமுறைகள் ஆபத்தில் கொண்டு போய் முடிக்கப்போகிறது. அதாவது இந்தியாவின் ஆதிவாசிகள் வாழும் இதயப்பகுதியில் ஒரு பெரும் ரத்த வெள்ளத்தை பார்க்கும் நிலை உருவாகும். மேற்கண்டவாறு ஒரிசா சென்று ஆய்வு செய்த ஊடகவியலாளர் சுதா கூறியிருக்கிறார். ஒரு புறம் மம்தாவின் கெடுவும், மறுபுறம் காவல்துறையின் சுடுதலும் எங்கே அவர்களை நிறுத்தப்போகிறது என்பதுதான் இப்போது கேள்வி.

Sunday, January 17, 2010

நீதியரசர் தினகரன் மீது பாய்வது நீதியா?

நீதியரசர் பி.டி. தினகரன் கர்நாடகா மாநிலத்தின் தலைமை நீதியசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் மீது நிலம் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கு என்பதாக ஒரு பிரச்சனையை சென்னை உயர்நீதிமன்றத்தின் சில வழக்கறிஞர்கள் கிளப்பினார்கள். சம்பந்தப்பட்ட நிலம் என்பது திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கின்ற தலித் மக்கள் வாழுகின்ற குடியிருப்பின் அருகே இருக்கும் நிலம். இந்த நிலம் குற்றம் சாட்டப்பட்டவர் சொத்தாக இருக்கிறது என்ற செய்தியை, பிரச்சனை எழும்பியவுடன், குறிப்பிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் உறுதி செய்தார். அதன்பிறகு இந்த பிரச்சனையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்கம் மூலமாக தீவிரமாக கையிலெடுத்தார்கள். அவர்கள் அதற்கான போராட்டத்திலும் இறங்கினார்கள். மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் இதற்கான போராட்டங்களை முன்னெடுத்தார்கள். தலித் மக்களுக்கு நீதியரசர் பொறுப்பிலிருக்கும் நிலங்களை பறித்து விநியோகம் செய்ய வேண்டும் என்பதாக கோரிக்கை வைத்தார்கள்.
சம்பந்தப்பட்ட நீதியரசர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதனால், அதே சமூகத்தைச் சேர்ந்த பல தலைவர்களிடமிருந்து, நீதியரசருக்கு ஆதரவாக குரல்கள் எழுந்தன. இந்த நேரத்தில் தமிழக அரசின் அணுகு முறை மார்க்சிஸ்ட் கட்சி எடுத்திருக்கும் கணிப்புக்கு எதிராக வெளிப்பட்டது. அதனால் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் ஆட்சித்தலைவரும் தனது கருத்தை அல்லது மதிப்பீட்டை மாற்றிக் கொண்டது போல் செய்தி வெளியானது.
குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய நிலம் என்பது தான் நீதியசராக பொறுப்பெடுப்பதற்கு, முன்னமேயே வாங்கிய சொத்து என்பதாக நீதியரசரிடமிருந்து பதில் வந்தது. தமிழக அரசும் அதே அணுகுமுறையை மேற் கொண்டது. ஆனாலும் பிரச்சனையை கையில் எடுத்தவர்கள், அதை விடுவதாக இல்லை.
இந்த பிரச்சனை எழுப்பப்பட்ட நேரம் இப்போது முக்கிய விவாதத்திற்கு வந்திருக்கிறது. நீதியரசர் தினகரனை உச்சநீதிமன்றத்திற்கு ஒரு நீதியரசராக எடுப்பதற்கான ஆலோசனைப் பட்டியல் வெளியிடப்பட்ட நேரத்தில் இந்தப் பிரச்சனை எழுப்பப்பட்டுள்ளது. நீதியரசர் தினகரன் மீது 12 குற்றங்கள் செய்ததாக, எதிர்தரப்பு சுட்டிக்காட்டுகிறது. அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, மாநிலங்களவையை சேர்ந்த 75 உறுப்பினர்களின் கையெழுத்துக்களைப் பெற்று, அதன் மூலம் மாநிலங்களவை தலைவர் அன்சாரியிடம், நீதியரசர் தினகரன் மீது உரிமைப்பிரச்சனை எழுப்பவேண்டும் என்பதாக புகார் கொடுத்திருந்தார்கள். அதற்கு எதிராக 100 தலித் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்கள் கையெழுத்திட்டு, தினகரன் மீதான குற்றச்சாட்டு என்பது சாதி ஆதிக்க உணர்வுடன் எழுப்பப்பட்டுள்ளதாக கூறினார்கள்.
அவர் மீது தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில், தெரிந்த வருமான எல்லைகளைத்தாண்டி, சொத்து சேர்த்ததாக ஒரு குற்றச்சாட்டு. தனது மனைவி மற்றும் மகள்கள் பெயரில் வீட்டு வசதி வாரியத்தில் 5 வீடுகளை சட்ட விரோதமாக பெற்றதாக இன்னொரு குற்றச்சாட்டு. பினாமி பெயர்களில் சொத்துக்களை மாற்றிக் கொண்டதாக ஒரு குற்றச்சாட்டு. விவசாய நிலங்களை சட்டப்பூர்வமான உச்ச வரம்பு எல்லையை மீறி வைத்திருப்பதாக இன்னொரு குற்றச்சாட்டு. தலித் மற்றும் ஏழை மக்களது வாழ்வாதாரத்திற்கு ஒதுக்கப்பட்ட பொதுச் சொத்தையும், அரசாங்க சொத்தையும் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து வைத்திருப்பதாக மற்றொரு குற்றச்சாட்டு. தலித் மற்றும் ஏழைகளின் மனித உரிமைகளை மீறியதாக இன்னொரு குற்றச்சாட்டு. அதிகாரபூர்வமான விசாரணை நடந்து வரும் போது, சாட்சியங்களை உடைத்ததாக ஒரு குற்றச்சாட்டு. தனது நீதி பரிபாலன அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, நேர்மையற்ற உத்தரவுகளை தனக்கு வேண்டிய மற்றும் நேரடியான நலன்களில் அறிவித்ததாக ஒரு குற்றச்சாட்டு இப்படியாக பட்டியல் போடப்பட்ட குற்றச்சாட்டுகள் 55 பக்கம் கொண்ட நோட்டீசாக, தற்போது உச்சநீதிமன்றத்தில் நிற்கிறது.
மாநிலங்களவைத் தலைவர் அன்சாரியிடம் குற்றச்சாட்டுக்களை கையெழுத்திட்டு கொடுத்தவர்களில் பல்வேறு எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில் வேடிக்கையான செய்தி என்னவென்றால், இடதுசாரிகளும், மற்றும் பா.ஜ.க.வினரும் அந்த கையெழுத்திட்ட உறுப்பினர் பட்டியலில், தினகரன் மீது பாய்ந்துள்ளார்கள். இந்த 75 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை வாங்கிய அன்சாரி, இப்போது அதை உச்சநீதிமன்றத்தில் வைத்திருக்கிறார்.
இந்த நாட்டின் அரசியல் சட்டத்தின்படி, உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தின் நீதியரசர்கள், நாடாளுமன்றத்தில் உரிமைப் பிரச்சனை கொண்டு வரப்பட்டு, அதன் மூலம் மட்டுமே பொறுப்பிலிருந்து நீக்கப்படமுடியும். இந்த பிரச்சனையில் அவைத்தலைவர் அன்சாரி உச்சநீதிமன்றத்தால் நடத்தப்படவேண்டிய நேரடி விசாரணையின் மூலம் தான், உண்மைகளை கொண்டு வரமுடியும் என்ற நோக்கத்தில், மேற்படி பிரச்சனையை உச்சநீதிமன்றம் கொண்டு சென்றுள்ளார்.
உச்சநீதிமன்றம் இப்போது நீதியரசர் பி.எஸ்.சிற்புகார் தலைமையில் 3 நீதியரசர்களைக் கொண்ட ஒரு பெஞ்சிடம் இந்த வழக்கை கொடுத்துள்ளது. அந்தப்பட்டியலில் நீதியரசர் ஏ.ஆர்.தவே, ஆந்திர மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதியரசரும் பிரபல சட்ட வல்லுநருமான பி.பி.ராவ் ஆகிய மூவர் கொண்ட கமிட்டியை மாநிலங்களவை தலைவர் ஹமீது அன்சாரி அறிவித்து அதன் கையில் நேற்று இந்த வழக்கை கொடுத்துள்ளார். இது இப்போது நீதியரசர்களுக்கு மத்தியிலும் புதியதொரு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசரான கே.ஜி.பாலகிருஷ்ணன், பி.டி.தினகரனை நியாயப்படுத்தி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்திற்கு நீதியரசராக உயரும் நேரத்தில் மட்டும், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படுவது ஏன் என்பதுதான் அவரது ஆழமான கேள்வி.
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதியரசராக தினகரன் எடுக்கப்பட்டபோது, ஒரு சிறிய குற்றச்சாட்டு கூட, அவருக்கு எதிராக எழவில்லை. அதே போல 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கர்நாடகா மாநிலத்தில் உயர்நீதிமன்றத்திற்கான, தலைமை நீதியரசராக அவர் அறிவிக்கப்படும் போது, எந்த ஒரு குற்றச்சாட்டும் அவர் மீது எழுப்பப்படவில்லை. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர்கள் குழுவால், உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக எடுக்கப்பட முன்வைக்கப்படும் நீதியரசர்கள் பட்டியலில் அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்ட பிறகுதான், தினகரன் மீதான குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞர் சங்கத்தில் எந்த ஒரு எதிர்ப்பும் கிளம்பவில்லை. மேற்கண்ட கருத்துக்களை கே.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். இது உள்ளபடியே கவனிக்கவேண்டிய ஒரு செய்தியாக இருக்கிறது.
உயர்நீதிமன்றத்தின் நீதியரசர்கள், ஏதாவதொரு மாநிலத்தின் உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதியரசராக உயர்த்தப்படவேண்டுமானால், அந்த நேரத்தில் ஏற்கனவே அதே மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தலைமை நீதியரசராக எங்காவது இருந்தால், பின்னவருக்கு வாய்ப்பில்லை என்ற பழக்கம் இருக்கிறது. அதனால் தினகரன் உச்சநீதிமன்றத்திற்கு நீதியரசராக உயர்த்தப்படும் பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்படும் போது, அதிலேயே சென்னை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதியரசர் இப்ராஹிம் கலிபுல்லா, ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதியரசராக உயர்த்தப்பட பரிந்துரைக்கப்பட்டிருந்தார். இப்போது தினகரன் உச்சநீதிமன்றம் செல்லும் பரிந்துரை தடுக்கப்பட்ட நிலையில், அவர் கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதியரசராக தக்கவைக்கப்படுகிறார். அதனால் இப்ராஹிம் கலிபுல்லாவின் உயர்வுக்கான பரிந்துரையும் கூட, அப்படியே நிறுத்தப்படுகிறது. இதன் மூலம் தலித் சமூகம் மட்டுமல்ல, சிறுபான்மை இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த நீதியரசரும், தனது நியாயமான உயர்வு கிடைக்காமல் தடுக்கப்படுகிறார். இத்தகைய செயல்களுக்குப் பின்னால், இந்தியாவின் புற்றுநோயான சாதி ஆதிக்க சதிகள் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் கே.ஜி.பாலகிருஷ்ணன் எழுப்பியிருக்கும் கேள்விக்கு விடைகாணவேண்டியது அனைவரின் கடமையாகும். ஏன் ஒருவர் உச்சநீதிமன்றத்திற்கு உயர்த்தப்படும் நேரத்தில் மட்டும் குற்றம் சாட்டப்படுகிறார் என்பதே அந்தக் கேள்வி. நிலவும் சாதி, சனாதன சமூதாய அமைப்பில், சம்பந்தப்பட்டவர் எந்த சமூகத்திலிருந்து வருகிறார் என்பதும், அவருக்கு எதிராக கிளப்பப்படும் குற்றச்சாட்டுகள் எந்த சமூகத்தவரிடமிருந்து வருகிறது என்பதும் ஒரு முக்கியமான சமுதாயக் கேள்வி. இத்தகைய கேள்வியை கேட்காமலும், விடை காணாமலும் நாம் சரித்திரத்தின் இந்தப்பகுதியிலிருந்து தப்பித்துச் செல்லமுடியாது.

Saturday, January 16, 2010

கிரகணங்கள் எனும் அற்புதங்களும் அறியாமைகளும்

சூரிய, சந்திர கிரகணங்கள் எனும் வானியல் அரிய நிகழ்வுகள் ஆயிரம் ஆண்டுகளாக மனித குலத்திற்கு வியப்பையும் வினாக்களையும் ஏற்படுத்தி வருவனவாகும். பூமி உட்பட அனைத்துக் கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. இவ்வாறு சூரியன் என்றும் நட்சத்திரத்தைச் சுற்றி வருகின்ற பூமி எனும் கோளினை சுற்றி வருவது சந்திரன் என்னும் துணைக்கோள். இவ்வாறு பூமியை சுற்றி வரும் சந்திரன், ஒரு கட்டத்தில் சூரியன் இருக்கும் பக்கத்திலும் இன்னொரு கட்டத்தில் சூர்யனுக்கு நேர் எதிர்பக்கத்திலும் வருகிறது. இந்த இயக்கப்போக்கில், சந்திரன், பூமியிலிருந்து பார்க்கையில் சூரியன் இருக்கும் பக்கத்தில் வரும்போது, அதாவது சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் வரும்போது அமாவாசை என்கிறோம். சந்திரன், சூரியனுக்கு எதிர்ப்பக்கத்தில் வரும்போது அதாவது பூமி, சூர்யனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் இருப்பதாக அமையும் போது பௌர்ணமி என்கிறோம்.
சூரிய கிரகணம் எப்போதும் அமாவாசையில் தான் வரும். அதாவது பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் சந்திரன் வரும் போது சூரியனை நோக்கியுள்ள சந்திரனின் ஒரு பகுதியில் சூரிய ஒளிபடுகிறது. அந்தப் பகுதிக்கு எதிர்ப்பக்கமுள்ள பகுதி தான் பூமியை நோக்கி இருக்கிறது. அது சூரிய ஒளியின்றி இருட்டாக இருப்பதால், பூமியிலிருந்து பார்ப்பவர்களுக்கு சந்திரன் தெரிவதில்லை. இதுதான் அமாவாசை. இத்தகைய அமாவாசைகளுள் சிலவற்றில், பூமியிலிருந்து பார்க்கையில், சூரியனும் சந்திரனும் ஒரே பக்கத்தில் வருவதோடு சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் இதே வரிசையில் ஒரே நேர்கோட்டிலும் குறிப்பிட்ட காலத்திற்கு வருகின்றன. இவ்வாறு நேர்கோட்டில் வருவதால் சூரியனின் தோற்றம் சந்திரனால் முழுக்கவும் மறைக்கப்படுகிறது. இது தான் சூரிய கிரகணம். இவ்வாறு நேர்கோட்டில் வருவது எந்த அளவிற்கு துல்லியமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு கிரகணம் முழுமையானதாக இருக்கும். துல்லியத்தன்மை குறைவால் கிரகணம் பகுதியளவு கிரகணமாக அமைந்து விடுகிறது.
சந்திர கிரகணம் எப்போதும் பௌர்ணமியில் தான் வரும். அதாவது பூமியைச் சுற்றிவரும் சந்திரன், சூரியன் இருக்கும் பக்கத்திற்கு நேர் எதிர்பக்கத்திற்கு வரும் போது முழு சந்திரனும் பூமியிலிருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியும். இதுதான் பௌர்ணமி. இத்தகைய பௌர்ணமிகளுள் சிலவற்றில் பூமிக்கு ஒரு பக்கம் சூரியனும் அதற்கு நேர் எதிர்பக்கத்தில் சந்திரனும், வருவதோடு, சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை இதே வரிசையில் ஒரே நேர்கோட்டிலும் குறிப்பிட்ட காலத்திற்கு வருகின்றன. இது தான் சந்திர கிரகணம். இதிலும் நேர்கோட்டில் வருவதன் துல்லியத்தன்மையைப் பொருத்தே கிரகணம் முழுமையானதாகவோ, பகுதியளவானதாகவோ அமைகிறது. பகுதியளவான சந்திர கிரகணம் ஆண்டுக்கு 2 நிகழும்.
பார்த்து ரசிப்பதற்கு அழகானது என்றால் ஒவ்வொரு சூரியோதயமும், சூரிய அஸ்தமனமும், சந்திரோதயமும் சந்திர அஸ்தமனமும் அழகானவை தான், ரசிக்கத்தக்கவை தான். ஆனால் அவை தினமும் நிகழ்வதால், பழகப் பழக பாலும் புளிக்கும் எனும் சொல்லடை சுட்டுவது போல் சாதாரண நிகழ்வுகள் ஆகிவிடுகின்றன. ஆனால் துல்லியமான கிரகணங்களின் நிகழ்வுகள் அரியவை என்பதாலும், அதாவது பகுதியளவான கிரகணங்களைப் போல ஆண்டுக்கு 2 முறை நிகழ்ந்திடாமல், பல ஆண்டுகளுக்கு ஒரு முறையோ அல்லது நூற்றாண்டுக்கு ஒரு முறையோ அல்லது நூற்றாண்டுகளுக்கு ஒருமுறையோ ஏற்படுகின்றன என்பதாலும் அவற்றின் துல்லியத்தன்மை அவற்றுக்கு அளிக்கும் அழகினாலும் கிரகணங்களைப் பார்ப்பதற்கான மனிதர்களின் ஆர்வம் பெரிதாக இருக்கிறது.
இதே காரணங்கள் தான், அதாவது அரிய தன்மையும் அழகும் தான், சிலர் அல்லது பலரின் அச்சத்திற்கும் காரணமாக அமைந்திருக்கிறது. பூமிப்பந்தில் செயல்படுகின்ற அனைத்து ஆற்றல்களுக்கும் மூலம் சூரியன் தான் என்பதைப் புரிந்து கொண்டிருக்கவில்லை என்றாலும் அபாயத்தை விளைக்கின்ற, அச்சமூட்டும் இரவின் இருட்டைப் போக்கி ஒளி கொடுத்து பகலை உருவாக்கி மனிதர்களின் அனைத்து இயக்கங்களுக்கும் செயல்பாடுகளுக்கும் உதவுவதால் சூரியன் மீது ஒருவித நன்றியுணர்வு ஆதிகாலத்து மனிதர்களிடமே தோன்றி விட்டது. இந்த நன்றியுணர்வு தான், வழக்கத்திற்கு மாறான முறையில் திடீரென சூரியன் மறைக்கப்படும் நிகழ்வானது சூரியனுக்கு நேரிடும் ஏதோ கெடுதல் என்றும் இதனால் மனிதர்களுக்கும் ஏதாவது கெடுதல் நேரிடும் என்றும் தோன்றிய அச்ச உணர்வுக்கு அடிப்படையாய் அமைந்தள்ளது. எப்பொழுதுமே, தர்க்கபூர்வமான அல்லது தர்க்கபூர்வமற்ற அச்சங்கள் மீதே தங்கள் கோட்டையை கட்டி வரும் மதங்கள் இந்த அச்சத்தையும் பயன்படுத்தி கட்டுக்கதைகள் இட்டுக்கட்டி சடங்குகளையெல்லாம் உருவாக்கி விட்டனர். உண்மையில் கிரகணங்களால் மனிதர்களுக்கு தனித்தன்மை கொண்ட நன்மையுமில்லை, தீமையுமில்லை. அமாவாசை, பௌர்ணமியால் எவ்வளவு நன்மை தீமையோ அதைப்போன்ற, நன்மை தீமைகள் தான் கிரகணங்களினாலும் ஏற்படக்கூடும்.
கிரகணங்களின் போது பூமியைப் பொருத்து சூரியன், சந்திரன் ஆகியவற்றின் இருப்பிட நிலைகளால், பூமியின் மீது இவற்றினால் ஏற்படும் ஈர்ப்பு விசையின் அளவு சிறு அளவுக்கு மாறுபாடு அடையலாம். இந்த மாறுபாடு காற்று மண்டலத்தின் இயக்கத்திலும் கடல் அலைகளின் இயக்கத்திலும் ஏதாவது விளைவுகளை ஏற்படுத்துகின்றனவா என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மக்கள் திரளுக்கு வியப்பையளிக்கும் கிரகணங்கள், விஞ்ஞானிகளுக்கு விடைகளைத் தேடி நிற்கும் வினாக்களைக் கொண்டதாக இருக்கின்றன.
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் பௌர்ணமி, அமாவாசை, கிரகணங்கள் வரும் காலத்தை கணிசமான அளவு துல்லியமாக கணிக்கும் திறன் உடையோர் இருந்திருக்கின்றனர். இது நாம் அனைவரும் பெருமிதம் கொள்ளவேண்டிய கணித, விஞ்ஞான வளர்ச்சி. ஆனால் அதே நேரத்தில் கிரகணம் என்பது சூரியனையும், சந்திரனையும் பாம்பு விழுங்கும் நிகழ்ச்சி என்று கூறிய வேடிக்கையும் இங்கே நிகழ்ந்தது என்பது மிக அரிய முரண்நகையே. இப்போது 10 வயது குழந்தைகள் கூட இந்த பாம்புக்கதையை நம்ப மாட்டார்கள். இப்போதும் பாம்புக் கதையை நம்பவில்லையென்றாலும் அதை ஒட்டி இருக்கும் வேறு தவறான நம்பிக்கைகளை கொண்டிருப்போரும் சிலர் இருக்கின்றனர்.
இந்தியாவில் பலர், கிரகணத்தையொட்டி சமைத்தல், சாப்பிடுதல், திறந்தவெளியில் திரிதல் ஆகியவற்றைத் தவிர்த்து விடுகின்றனர். இவற்றுக்கு இவர்கள் சொல்லும் காரணங்கள் விஞ்ஞானரீதியாக ஏற்றுக் கொள்ளப் படவில்லை. திறந்தவெளியைத் தவிர்த்து அறைக்குள் அடைந்து கிடப்பது எவ்விதத்திலும் பயனற்றது. ஏனெனில், பலவீனமானது என்று சொல்லப்பட்டாலும் ஈர்ப்புவிசை அனைத்தும் தழுவியது, நீக்கமற நிறைந்திருப்பது. பாதிப்பை ஏற்படுத்துமெனில் பாதாளத்திற்குள் பதுங்கியிருப்பினும் பாய்ந்து பாதிப்பை ஏற்படுத்தியே தீரும். ஆக, வீட்டிற்குள் முடங்கிவிடுவது என்பது பூனை கண்ணை மூடிக்கொள்ளும் செயலைப் போன்றதேயாகும். இப்போதைய காலம் விஞ்ஞான காலம். தொழில்நுட்பக் காலம் என்றெல்லாம் சொல்லுகிறோம். 21ம் நூற்றாண்டு என்று சொல்லுகிறோம். இப்பொழுதும் இத்தகைய விஞ்ஞானத்திற்கு முரணான கருத்துக்கள் சமூகத்தைப் பீடித்திருப்பது அனுமதிக்கக்கூடியதா? மதக்கருத்துகள் பலவும் கடந்த நூற்றாண்டில் மக்கள் மனங்களிலிருந்து வெளியேறிவிட்டதைப் பார்த்தோம். அப்படி மதக்கருத்துக்களை வெளியேற்றியது விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் தான். மிச்சமிருக்கிற தவறான புரிதல்களையும் கருத்துக்களையும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான உணர்ச்சிகளையும் விட்டு விடுதலையாகும் போது மானுடத்தின் வளர்ச்சி வேகம் மேலும் அதிகமாகுமல்லவா? விஞ்ஞானத்திற்கு முரணான இந்த கருத்துகளை எதிர்த்து பகுத்தறிவாளர்கள் சிலர் விஞ்ஞான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் உண்ணும் விரதம், நடத்தியுள்ளனர். அப்படிப்பட்ட நிலை ஏற்படச் செய்வதற்காக, விஞ்ஞானக் கருத்துகளை சக மனிதர்களிடம் கொண்டு செல்லும் பணியை விரைவுபடுத்துவோம். அப்படியாயின், இந்த சூரிய கிரகணம் மானுடத்திற்கு நன்மை செய்திருக்கிறது என்று ஆகிவிடும்.