Friday, December 25, 2009

கீழவெண்மணி படுகொலைகளும், படிப்பினைகளும்!

டிசம்பர் 25ம் நாள். ஏசுகிறிஸ்து இந்த உலகில் பிறந்த நாள் என்பதாக கடைபிடிக்கப்படும் நாள். யூத மன்னர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட யூத மக்களுக்காக, ஏசு நாதர் பாடுபட்டார் என்பதாக படிக்கின்றோம். அடிமைகளை விடுதலை செய்து, நல்வாழ்வை அவர்கள் எய்துவதற்காக பாடுபட்ட காரணத்தினால், ஏசு நாதர் சிலுவையில் அறையப்பட்டார். சிலுவையை சுமந்து செல்லும் ஏசு நாதரை, இருபுறமும் கூடி நின்ற அடிமை மக்கள், ஆர்ப்பரித்து ஆதரவு தந்தனர். சாதி ஒடுக்கு முறையில் தவிக்கின்ற இந்தியாவிலும், ஒடுக்கப்படும் மக்கள் விடுதலை பெறுவதற்கு வழி தெரியாமல் தவிக்கின்றனர். சாதிய ரீதியான ஒடுக்கு முறைகளில், கூடுதலான சுமையை சுமப்பவர்கள், தீண்டத்தகாத மக்களாக ஆதிக்க சாதிகளால் அவமானப்படுத்தப்படும் தாழ்த்தப்பட்ட மக்கள்தான். அத்தகைய தலித் மக்கள் நாடெங்கிலும் விவசாயக் கூலிகளாக, நிலமற்ற, ஏழை உழவர்களாக தங்களது வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டிக் கொண்டு வருகின்றனர். அப்படிப்பட்ட உழவர் பெருங்குடி மக்களை, பண்ணை நுகத்தடியால் அடக்கி வைத்திருக்கும் பண்ணையார்கள், சாதீய ஒடுக்கலையும், ஒரு ஒடுக்குமுறை கருவியாக பயன்படுத்தி வருகின்றனர். அதனால் தான் சாதி அடக்கு முறையிலிருந்து விடுதலை பெறத் துடிக்கின்ற, கூலி ஏழை தலித் மக்களை, மதம் மாறினால் சுதந்திரம் கிடைக்கும் என்ற வார்த்தைகள் ஈர்த்தன. அப்படி ஈர்க்கப்பட்டு மதம் மாறிய, தலித் மக்களையும் சாதித் தீண்டாமை, தீண்டாமல் விடவில்லை. மதம் மாறினாலும் இந்த நாட்டில் சாதி மாறுவதில்லை என்பதை சாதித்து வருவது நிலப்பிரபுத்துவத்தின் குணமாகயிருக்கிறது. அப்படித்தான் இதே நாளில் அந்த வெண்மணி நிகழ்ச்சி நடந்தது. இன்றைய நாகப்பட்டினம் மாவட்டம், நேற்றைய கிழக்கு தஞ்சையாக இருந்தது. அதில் நாகப்பட்டினம் ஒரு வட்டாட்சியாக நிர்வகிக்கப்பட்டது. அதற்கு உட்பட்ட கிராமம் தான், கீழவெண்மணி கிராமம். கீழத்தஞ்சை முழுவதுமே, பெருவாரியான மக்களாக இருக்கும் தலித் மக்கள், கூலி, ஏழை விவசாயிகளாக இருந்து வருகிறார்கள். அவர்கள் மத்தியில், பொதுவுடைமைக் கட்சி ஆண்டு பலவாக, சங்கம் அமைத்து போராடி வருகிறது. ஆரம்பத்தில் அவர்கள் உழுபவனுக்கே நிலம் என்ற முழக்கத்தை முன்வைத்து போராடி வந்தார்கள். அப்போதும் ஆதிக்கசாதி பண்ணையார்கள், தலித் கூலி மக்களை சாணிப்பால் கொண்டும், சவுக்கடி கொண்டும் அடித்து வந்தார்கள். அதை எதிர்த்துத் தான் கம்யூனிஸ்ட் தலைவர் சீனிவாசராவ் தலைமையில், கூலி விவசாயிகளை சங்கங்கள் அமைத்து, அவர்கள் திரட்டி வந்தார்கள். சாணிப்பாலும், சவுக்கடியும், கம்யூனிஸ்ட் கட்சியால் கடுமையான போராட்டங்களின் மூலம் எதிர்க்கப்பட்டது. அப்படி வெற்றிகரமான போராட்டங்களை, பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி நடத்தி வந்த, சீனிவாசராவ் நினைவாக இப்போது அரசாங்கம் மண்டபம் கட்டியுள்ளது. வரலாற்றில் இந்த படிக்கட்டுகள் மறக்கப்பட முடியாது என்பதற்கு இதுவே உதாரணம். அப்படிப்பட்ட வட்டாரத்தில் தான், கீழவெண்மணி கிராமத்தில் இதே நாளில், அந்த சோகச் செய்தி அரங்கேறியது. கூலி உயர்வு போராட்டத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் கம்யூனிஸ்ட் கட்சி, அந்த தலித் கூலி மக்களை திரட்டி போராடி வந்தது. கீழதஞ்சையில், குறிப்பாக நாகப்பட்டினம் வட்டாரத்தில், நெல் உற்பத்தியாளர் சங்கம் என்ற பெயரில், ஆதிக்கசாதிப் பண்ணையார்கள் உருவாக்கிய அமைப்பிற்கு, கோபால கிருஷ்ணநாயுடு தலைவராக இருந்தார். அவர் தான் அந்த வட்டாரத்தின் கூலிப் போராட்டத்தை ஒடுக்குவதில் பெயர் பெற்றவர். அரைப்படி நெல்லை உயர்த்திக் கேட்டதற்காக, கூலி விவசாயிகள் அங்கே ஒடுக்கப்பட்டார்கள். அறுவடை கூலியாக காசுக்கு பதில், நெல் கொடுப்பது தான் அங்கேயிருந்து வந்த பழக்கம். உச்சக்கட்டத்திற்கு போராட்டம் சென்ற போது, பண்ணையார் கோபால கிருஷ்ணன், காவல் துறையுடன் சேர்ந்து கொண்டு, கீழவெண்மணி கிராமத்து போராடும் மக்களை ஒடுக்குவதற்காக உள்ளே நுழைகிறார். தேவேந்திரகுல வேளாளர்கள் என்று அழைக்கப்படும் தலித் மக்கள், அந்த கிராமத்தின் ஒரு பகுதியில் வசித்து வருகின்றனர். கூலி உயர்வு போராட்டத்தில்